Wednesday, November 23, 2011

வேரென நீயிருந்தாய்...(39)

அதுவொரு வெள்ளிக்கிழமை. மதிய உணவிற்காக வீட்டிற்குச் சென்றிருந்தேன். வழக்கத்திற்கு மாறாக வீடு பளிச்சென்றிருந்தது ஆச்சரியமாயிருந்தது. அம்மாமேல் ஆத்திரமாய் வந்தது. மனிசியால ஏலாது. ஏற்கனவே ஆஸ்மா வேற இழுத்துக் கொண்டிருக்குது. இந்த வள்ளலில தூசுதட்டியிருக்கிறா. இனி உழைச்சுப்போட்டுக் கிடக்கப் போறா.

“அம்மோய்......என்ன செய்யுறீங்க?”

“கொஞ்சம் பொறு வாறன்.” -குசினிக்குள்ளிருந்து குரல் வந்தது.

சிறிது நேரத்தின் பின் சிரித்தபடியே வெளியே வருகையில், கையில் மதிய உணவையும் தட்டுடன் எடுத்து வந்திருந்தாள்.

”ஏனம்மா சமைச்சனீங்க?. இதில குருந்துவத்தைச் சந்தி ராஜா கடையில எடுத்திருக்கலாமெல்லா? வருத்தத்தோட ஏன் கஷ்ரப்படுறீங்க?”

“நீ சாப்பிட்டிட்டுச் சொல்லு. மிச்சத்தைப் பிறகு கதைப்பம்”

நான்கு மரக்கறிகளுடன், வடையும், அப்பளமும் அமிர்தமாய் இருந்தன. அம்மாவின் சமையல் இன்றைக்கு வித்தியாசமாய் இருந்தது. ருசித்துச் சாப்பிட்டேன்.

“எப்பிடிச் சாப்பாடு? ருசியா இருந்துதா? பிடிச்சிருக்கா?”

“நல்லா ரேஸ்ற்றா இருக்கம்மா? என்னெண்டு சமைச்சனீங்க? வழமையிலும் விட இண்டைக்கு வித்தியாசமாயும் நல்லாயும் இருந்துது.”

“அப்பாடா! இப்ப நல்ல நிம்மதியா இருக்கு. எங்கை உனக்குப் பிடிக்காமப் போயிருமோ எண்டு பயந்து கொண்டிருந்தன்”

“நீங்க சமைச்சு எப்ப ருசியில்லாம இருந்தது? கொஞ்ச நாளா கடைச் சாப்பாடு சாப்பிட்டதாலயோ என்னவோ இண்டைக்கு இன்னும் நல்லா இருந்துது.”

என்னைப் பார்த்து அம்மா சிரித்தாள். அவளின் சிரிப்பு வித்தியாசமாய்ப் பட்டது.

“ஏனம்மா சிரிக்கிறீங்க?”

“சும்மாதான்” மழுப்பினாள்

“ஆ! உனக்குச் சொல்ல மறந்து போனன். காலமை புறோக்கர் அங்கையிருந்து போன் பண்ணினவர். ரெண்டு பெட்டையளின்ரை குறிப்பு உன்ரையோட பொருந்தியிருக்காம். நான் இன்னும் ரெண்டு கிழமையில அங்க வந்து நேரில பார்த்திற்று முடிவு சொல்லுறன் எண்டு சொன்னனான். நீயும் வாவன்.”

நெஞ்சுக்குள் எதுவோ வந்து அடைத்துக் கொண்டது. என்னுடைய முகத்தில் ஏற்படுகின்ற மாறுதல்களை அம்மா அவதானிப்பதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காய் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

“என்ன கேட்டகேள்விக்குப் பதில் சொல்லாமல் திரும்புறாய்?”

“உங்களுக்கு என்ன சொன்னனான்?”

“நீ ஓமெண்டு சொன்னபடியாலதானே புறோக்கரிட்டைக் குறிப்பைக் குடுத்தனான்.”

“அப்பப் பிறகென்ன? உங்களைத்தானே முடிவெடுக்கச் சொன்னான். நான் இதொண்டிலையுமு் தலையிடயில்லை. எனக்கு லீவும் எடுக்கேலாது”

“ஆனா உன்ரை குரல் ஒரு மாதிரியிருக்கே.”

“அதெல்லாம் ஒண்டுமில்லை. நீங்க சந்தோஷமாயிருந்தாச் சரி.”

“தம்பி. இது உன்ரை வாழ்க்கை. என்ரை காலம் இன்னும் கொஞ்சநாள் தான். அதுக்குப்பிறகு வாழப்போறது நீதான். அதால நீதான் முடிவெடுக்கவேணும்.”

“எனக்கு எது நல்லதெண்டு என்னிலும் விட உங்களுக்குத்தான் கூடத்தெரியும்.”

“ஆனா நடக்கிறதுகளைப் பார்த்தா அப்பிடித் தெரியேல்லையே”

“ஏன் இப்ப என்ன நடந்தது?”

“இல்லை. ஒண்டுமே நடக்க இல்லை. உனக்கேன் கோபம் வருகுது?”

“நான் எங்க கோவப்பட்டனான்?”

“ம்ம்ம்..... எல்லாம் காலம். சரியான கல்லுளி மங்கனடா நீ”

“இப்ப என்ன சொல்ல வாறீங்க?”

“ஒண்டுமே தெரியாதாம். நான்தான் அவருக்குச் சொல்ல வேணுமாம்”.

அம்மா என்னைச் சீண்டுவதாய்ப்பட்டது. இந்தச் சீண்டலை அவரிடம் பார்த்து எத்தனை நாளாயிற்று. அவள் நல்ல சந்தோஷமாய் இருக்கின்றார் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

“தெரியாமக் கதைச்சுப் போட்டன். என்னை விட்டிடுங்கம்மா. நான் திரும்பி faculty-க்குப் போகவேணும்.”

ஆய்வுகூடத்தினை அடைகையில் நதீஷா என்னைப் பார்த்துச் சிரித்தாள் இந்தச் சிரிப்பில் விஷமம் கலந்திருப்பதாயப் பட்டது. என்னிடம் தான் ஏதேனும் தவறோ? வீட்டில் அம்மாவோ எனககுப் பெண் பார்ப்பதற்காய் ஊருக்குப் போகின்ற சந்தோஷத்தில் என்னைப் போட்டு அறுத்திருந்தார். இங்கே இவளின் பார்வையோ விஷமமாய்ப் படுகிறது. நான்தான் குழம்பிப் போயிருக்கிறேன்.

“ஜேந்தன்! Morning நான் வரேல்லை எண்டு sir ஏதும் சொன்னவரா?”

“இல்லை. என்னோடை ஒண்டும் கதைக்கேல்லை. நீங்க காலமை வரேல்லையெண்டதே இப்பத்தான் எனக்குத் தெரியுது.”

“ஓ! ok. ok. Morning கொஞ்சம் வேலை இருந்தது. எனக்குப் wedding proposal ஒண்டு வந்தது. கிட்டத்தட்ட சரி வந்த மாதிரித்தான். அதுதான் வரேல்லாமப் போயிற்றுது.”

“ஓ! Congratulations!. அப்ப எப்ப wedding?"

'Thanks. wedding எப்ப வைக்கிறது எண்டதைப்பற்றி இன்னும் decide பண்ணேல்லை”.

நெஞ்சுக்கூடு வெறுமையாகிப் போனதானவொரு உணர்வு வந்து மனதினைச் சூழ்ந்து கொண்டது. எல்லாமே என்னை ஏகாந்தமாய் விட்டுவிட்டுத் தங்கள்தங்கள் பாட்டில் செல்வதாய் பட்டது. இன்னதென்று புரிந்து கொள்ள முடியாதவாறு எல்லவற்றின் மீதும் சினம் கிளம்பியது. வாழ்க்கையே சூனியமாகிப் போவதைப் போன்று உணர்ந்தேன்.


3 comments:

  1. கதை இன்னும் suspense ஆகவே போகுது. instructor வேலை முடியிறத்துக்குள்ள ஒரு முடிவு வரும் எண்டு நம்பிறன்

    ReplyDelete
  2. //...கல்லுளி மங்கனடா...// இப்படிப்பட்ட சொல்லாடல்களுக்காகவே எத்தனை தடவையும் வேரென இருந்தாய் தொடரை வாசிக்கலாம்...தொடரட்டும் வாழ்த்துகள்...!!!

    ReplyDelete
  3. ஹ்ம்ம்ம், கதை கந்தல் போல் உள்ளது. "கம்பஸ் காதலும், கண்டி மழையும்....". சரி விட்டுத் தள்ளுங்கோ.

    ReplyDelete