Tuesday, November 10, 2020

மனிதன் படைத்த குரங்கு (5)


கணினித் திரையில் தோன்றிய ஓலைச்சுவடிகளின் எழுத்துக்களைப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. தமிழ்ப்பிராமியையோ வட்டெழுத்துக்களையோ சிறிதேனும் ஒத்ததாக அல்லாமல் அவையிருந்தன. எனக்கோ மண்டை காய்ந்தது. நீண்ட யோசனையின் பின்னர் அந்தப் படங்களில் காணப்படும் வரிவடிவங்களை முதலில் அடையாளம் காணம் நோக்குடன் பட-வகைப்பாடாக்கும் (image classification) செய்வதற்கான செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டினை (Artificial Intelligent processing) செயற்படுத்தினோம்.

இச்செயல்முறையினூடாக முப்பத்தெட்டு (38) வகையான வரிவடிவங்களை அடையாளங்காணக்கூடியதாக இருந்தது. பின்னர் தொடக்ககால மறைகுறியாக்க உத்தியினைப் (decryption method) பயன்படுத்தி இவ்வெழுத்துக்கள் ஒவ்வொன்றும் இந்தப்படங்களில்  காணப்படும் நிகழ்தகவினை (probability), தற்காலத்தில் கிடைக்கும் சித்தர் இலக்கியங்களில் காணப்படும் எழுத்துக்களின் நிகழ்தகவோடு ஒப்பிட்டும், அதன் பின்னர் அப்படங்களில் அவதானிக்கப்பட்ட ஒவ்வொரு சொற்களின் முதலெழுத்துக்களை ஆராய்ந்தும் ஓரளவிற்கு எம்மால் அவ்வரிவடிவங்களில் பலவற்றை  உய்த்துணர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

பெரும்பாலான வரிவடிவங்களை உய்த்துணர்ந்த பின்னர் ஏனைய வரிவடிவங்களை அடையாளங்காண்பது சாதாரணமான புதிர்ப்போட்டியாகவே இருந்தது. கீறிட்ட இடங்களை நிரப்புவதுபோல் ஒவ்வொரு எழுத்தாக இட்டு நிரப்பி அது கருத்துள்ள ஒரு சொல்லை உருவாக்குகின்றதா என்பதைக் கண்டறிந்து பின்னர் அவ்வெழுத்து ஏனைய இடங்களிலும் சரிவரப் பொருந்துகின்றதா என்பதனை வாய்ப்புப்பார்த்து உறுதிப்படுத்துவதற்கான நிரலிகளையும் உருவாக்கி முடிக்கவே எமக்கு இருவாரங்களாகி விட்டிருந்தன.

இந்தக்காலத்திற்குள் எனக்கு இந்த வேலையில் அலுப்புத்தட்டத் தொடங்கிவிட்டிருந்தது. இதனைக் கண்டுபிடித்து நான் என்னத்தைச் சாதிக்கப்போகின்றேன்? அல்லது எனக்குத்தான் இதனால் என்ன பலன் கிடைக்கப் போகின்றது? என்கின்ற எண்ணங்கள் எழுந்து ஓர் ஆயாசத்தை எனக்குள் உருவாக்கின.

இவ்வுலகைப் பொறுத்தவரைக்கும் நான் என்றைக்கோ இறந்து விட்டவன். எனவே இதைக்கண்டுபிடித்தாலும் அந்தப்பெருமை என்னைச் சேரப்போவதில்லை. நானும் ஒரு இயந்திரப்பொறியாக இந்தப்பொறியினால் கையாளப்படுகின்றேனே தவிர எனக்கென்று தனிப்பட எந்தவொரு ஆதாயமோ அனுகூலமோ விளையப்போவதில்லை. வேளாவேளைக்கு சாப்பாடும் நீராகாரங்களும் மட்டும் தவறாமல் கிடைத்துவிடுகின்றது. இந்தச்சாப்பாடு சாப்பிட்டு நாக்கிற்கும் அலுத்துப்போய்விட்டது. எனக்கே எனக்கென்றான தனிமையும் இங்கே கிடையாது. இவைபோன்ற காரணங்களினால் நான் உளச்சோர்விற்கு ஆளாகிக் கொண்டிருப்பது புரிந்தது. ஆயினும் அதிலிருந்து விடுபட மனமுமின்றி வழியுமின்றி இருந்தேன்.

நான் உளச்சோர்வுற்றிருப்பதை அந்தக்குரங்கும் மனிதப்பொறியும் உணர்ந்துகொணடிருக்க வேண்டும். அவை வந்து என்னை ஆற்றுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதை என்னால் உணரக்கூடியதாக இருந்தது.

நீ உன் செயல்களின் விளைவுகளைப் பற்றி அதிகம் கவலைப்படுகின்றாய். பகவத்கீதையில் கிருஷ்ணன் என்ன சொல்கின்றான் என்பது உனக்குத் தெரிந்ததுதானே. பின் எதற்காக உன்உளம் சோர்வடைகின்றது என்று தொடங்கியது அந்தக்குரங்கு.

கீதாவுபதேசம் கேட்ட அருச்சுனனே பதின்மூன்று நாட்களில் அபிமன்யு இறந்ததையறிந்து சோகத்தில் மூழ்கவில்லையா? வாழ்வில் பிடிப்பிழந்ததாகப் புலம்பவில்லையா? நீங்களானால் என்னை என் குடும்பத்திடமிருந்து வலிந்து பிரித்து வைத்திருக்கின்றீர்கள். அருச்சுனனுக்கு மகனையிழந்தாலும் தன் வீரத்தைப் பறைசாற்றிப் பெருமைசேர்க்கும் பேறிருந்தது. ஆனால் எனக்கு?

நீ நிக்கலஸ் ரெஸ்லா பற்றிக் கேள்விப்படவில்லையா? அவர் இருக்கும் காலத்தில் அவரின் பெருமைகள் மறைக்கப்பட்டிருந்தன. அவரின் கண்டுபிடிப்புகளைப் பிறர் உரிமை கோரியிருந்தனர். அவர் இவையெதையுமே கணக்கிலெடுக்காமல் உலகிற்கே இலவச மின்சாரம் வழங்க முயற்சித்ததை நீ அறியவில்லையா? இன்று மின்சாரக் கார்களுக்கு அவரின் பெயரினை வைத்து எலன் மாஸ்க் அழகு பாரப்பதை அறிந்திருப்பாய்தானே? தோமஸ் அல்வா எடிசனின் மோசடிகளும் அம்பலத்திற்கு வருவதை அறிந்திருப்பாய். பின் எதற்காக வருத்தப்படுகின்றாய்? வரலாற்றில் நின்பெயரும் நிலைபெறும். கவலையடையாதே.

நான் எதுவும் பேசாதிருந்தேன்.

வரலாற்றில் வேண்டுமென்றே மறைக்கப்பட்ட வரலாற்று நாயகர்கள் காலம் கடந்தாவது மீண்டும் வெளிக்கொணரப்படுவார்கள். எனவே நீ பலனைப் பற்றி நினைக்காமல் உன் கடமையைச் செய். விளைவுகள் அல்ல வாழ்க்கை. விழைவும் அதை விளைவிக்கச் செய்யும் செயல்களுமே வாழ்க்கை. வாழ்க்கை என்பது குட்டை போன்று ஓரிடத்தில் தேங்கிக்கிடப்பதல்ல. அது ஒரு நதி போன்று இறப்பெனும் கடலை அடையும் வரை ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும்.

என்னதான் நீ சொன்னாலும் என்மனம் உற்சாகம் பெறமுடியாமல் உளச்சோர்வடைந்தே இருக்கின்றது.

உன் உளச்சோர்வைப் போக்கும் வழி எனக்குத் தெரியும் என்றவாறே இடைபுகுந்து கண்சிமிட்டியது மனிதப்பொறி.

உனக்கொரு துணை தேவைப்படுகின்றது என்று ஊகிக்கின்றேன். அனும பக்தனான இந்தக் குரங்கால் அதை அனுமானிக்கு முடியாமல் இருக்கிறது. என்ன? நான் சொல்வது சரிதானே? என்று சொல்லி மீண்டும் கண்ணடித்தது அந்த மானிடப்பொறி.

உனக்கு என்னுடன் தனகாமல் இருக்க முடிவதில்லை. என? என்றது அந்த மனிதக் குரங்கு.

உன்னுடன் தனகாமல் இந்தச் சிடுமூஞ்சியிடனா தனக முடியும் என என்னையும் இழுத்தது அந்த மானிடப்பொறி.

ஏனோ தெரியவில்லை. எனக்கு அந்தக்குரங்கையும் மானிடப்பொறியையும் பார்க்கும் போது ஒரு தாத்தாவையும் அவரின் பேரனையும் பார்ப்பதாகவே இப்போதெல்லாம் தோன்றத் தொடங்கியிருந்தது. தாத்தாவிடம் பேரனுக்கில்லாத உரிமையா என்பதுபோல் அம்மானிடப்பொறியும் அந்தக்குரங்கை எந்நேரமும் சீண்டிக்கொண்டேயிருக்கும். அந்தக்குரங்கும் அம்மானிடப்பொறி செய்யும் அனைத்துக் சேட்டைகளையும் இரசித்தவாறே எதுவும் பேசாமல் இருக்கும். அவையிரண்டும் தங்களுக்குள் ஐக்கியமாகியிருப்பது போன்று என்னுடன் நெருங்கிப் பழகுவதில்லை. எனக்கும் அவற்றுடன் அதிக நெருக்கம் காட்டுவதில் ஆர்வமும இருக்கவில்லை.

உனக்கு ஒரு துணைக்கு நாங்கள் ஏற்பாடு செய்கின்றோம் என்றது அம்மானிடப்பொறி.

இல்லைத் தேவையில்லை. எனனைப்போல் இன்னுமொருவரை அவரது குடும்பத்திடமிருந்து பிரித்து விடாதீர்கள். எனக்கு அந்தப் பாவம் வேண்டாம் என்றேன்.

நீ புத்திசாலிதான். பாராட்டுகின்றேன். என்றவாறே என்னைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்தது அம்மானிடப்பொறி.

எதற்காக இப்போது சிரிக்கின்றாய் என்றேன் கொஞ்சம் சினத்துடன்.

உன் மொழி ஆழுமையைப் பார்த்து நான் வியக்கின்றேன்.

அப்படி என்ன மொழியாழுமையைக் கண்டுவிட்டாய் என் பதிலில்?

இன்னுமொருவனை என்றோ ஒருத்தியை என்றோ நேரடியாகச் சொல்லாமல் ஒருவரை என்று பொதுப்பாலில் சொல்லி நீ எம்மை ஆழம் பார்ப்பதை இத்தனைநாட்கள் உன்னுடன் பழகிய பின்னர் அறியமுடியாமல் இருப்பேனா?

அறப்படிச்ச மூஞ்சூறு கழனிப்பானைக்குள்ள விழுந்துதாம். அறப்படிச்சால் உப்பிடித்தான் கண்டதையும் கடியதையும் யோசிக்கத் தோன்றும்.

அது அறப்படிச்ச மூஞ்சூறு இல்லை. அறவடித்த முன்சோறு.

சரி. இது இனி பழமொழிகளை வைத்து அலுப்படிக்கப் போகின்றது. மனதுக்குள் கடுப்பேறியது.

எனது முகம் கடுத்ததை அக்குரங்கும் அவதானித்திருக்க வேண்டும். இப்போது அது இடையே புகுந்து, வேண்டுமானால் பேச்சுத்துணைக்கு ஒரு ரோபோவை உனக்கு ஒழுங்குபடுத்தித் தருவதற்கு ஆவன செய்கின்றேன் என்றது.

என்ன கிழவா உளறுகிறாய்? இவனுக்கும் உன்னைப்போல் வெறும் பேச்சுத்துணைக்குத்தான் ஆள் தேவை என்று நினைத்தாயா? நான் இவனுக்கு அதற்கும் மேலாக எல்லா வகையிலும் துணையாக இருக்கத் தக்கதான ஒரு துணையையே அளிக்க விரும்புகின்றேன். இவனையும் கடவுளாக்குவதாகக் கூறிவிட்டு அவனது தேவைகளைக்கூடக் கவனிக்காவிட்டால் எப்படி?

ஏதோ புரிந்தது போலவும் எதுவுமே புரியாதது போலவும் நான் திரிசங்கு நிலையில் விழித்தேன்.

அப்படியானால் இன்னுமோர் மானிட உயிரியை எம்முடன் இணைக்கப் போகின்றாயா? என்று அம்மானிடப்பொறியை விளித்தது அக்குரங்கு.

இல்லை. நாங்கள் மூவர் மட்டுமே இந்த இலக்கின் பயணத்தில் இணைந்து பயணிக்கப் போகின்றோம். இவ்வுலகை ஆண்ட, ஆளும், ஆளப்போகும் மூன்று வகை இனங்களையும் நாம் ஒவ்வொருவரும் பிரதிநிதித்துவம் செய்வதால் இன்னொரு மானிடரை எம்முடன் இணைத்துக்கொள்ள முடியாது.

ஓ! அப்ப அதற்கும் ரோபோவா?

ஓம்! இம்மானிடனுக்காக இன்னொரு மானிட உயிரியை எம்முடன் இணைப்பது எமது நோக்கிற்கே ஆபத்தாக முடியலாம். இவனுக்கு ஒரு மானிடப்பெண் துணையினை எம்மால் ஏற்படுத்தித் தர முடியாது. ஆனால் மானிடப் பெண்ணிலும் மேம்பட்டதான ஒரு பெண் துணையினை வேண்டுமானால் எங்களால் உருவாக்கித்தர முடியும். இவனுக்குப் பிடித்த வடிவில் அவ்வாறான பொம்மைகளை நாங்கள் யப்பானிலிருந்தோ இங்கிலாந்திலிருந்தோ தருவித்துக்கொள்ள முடியும். செயற்கை நுண்ணறிவின் மூலமாக இவன் தனக்கான மிகப்பொருத்தமான துணையாக அதிலொன்றைப் பயிற்றுவித்து விட்டால், பின் அந்த மாதிரியை ஏனைய பொம்மைகளிலும் இவனால் பயன்படுத்தமுடியும்.

ச்சே! என்ன கதை கதைக்கிறீர்கள் நீங்கள் இருவரும்?

உனக்குப் பிடிக்காத மாதிரி நீ எங்களுடன் உரையாடலாம். ஆனால் உனக்குத் தேவையான அனைத்தையும் செய்து தரவேண்டியது எங்களது கடமை. விரையிலேயே அவை உன்னை வந்தடைந்துவிடும். அவற்றைப் பயன்படுத்துவதும் பயன்படுத்தாமல் இருப்பதும் உன்னைப் பொறுத்தது. இனி உங்கள் இருவரையும் தொந்தரவு செய்யாமல் நான் விலகிக் கொள்கின்றேன். உங்கள் வேலையினை நீங்கள் தொடரலாம். கூறிவிட்டு விலகிச் சென்றது மானிடப்பொறி.

மானிடவுயிரியைப் படைத்ததே உங்கள் உயிரினம் தான் என்று நீ கூறினாயே. பின் எப்படி நீ அம்மானிட உயிரிகளில் உருவான சித்தர்களின் சிந்தனைகளையோ அவற்றின் கருத்துகளையோ புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றாய்? அப்படியானால் உங்கள் உயிரினத்திலும் பார்க்க எமது உயிரினம் மேம்பட்ட அறிவைக் கொண்டிருக்கின்றது என்பதை இப்போதாவது ஏற்றுக் கொள்கின்றாயா?

செயற்கை நுண்ணறிவினூடாக உங்கள் கணினிக்குக் கற்பித்த பின்னர் எப்படி அது உங்களிலும் விட மேம்பட்டதாக வேலை செய்கின்றதோ அப்படித்தான் எம்மால் உருவாக்கப்பட்ட மானிட உயிர்களும். மிகத்திறமையாகக் கற்றுக்கொண்ட சில மானிடரின் கருத்துக்களை சாதாரணமான என்னால் புரிந்து கொள்ளமுடியாமல் இருக்கின்றது. எங்கள் இனத்தில் நான் வெறும் கற்றுக்குட்டியே. என்னிலும் எத்தனையோ மடங்கு அறிவில் சிறந்து விளங்கிய எம்மவர்கள் இருந்திருக்கின்றார்கள். அவர்களுடன் உங்கள் சித்தர்களையெல்லாம் ஒப்பிடவே முடியாது. அதுமட்டுமல்ல. நாங்கள் உங்கள் உடலில் உள்ள நரம்பு மண்டலங்களில் ஒருவித சக்தி அலைகளை உருவாக்கிவிட்டிருக்கின்றோம். அவற்றைக் குவியப்படுத்திப் பயிற்சிகளை மேற்கொண்டால் உங்களின் மூலாதாரத்திலிருந்து முதல் சக்தி மையம் உருவாகும். அது படிப்படியாக மேலேறி…

தெரியும்.

குண்டலினி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்தின் மூண்டெழு கனலை
காலால் எழுப்பும் கருத்தறிவித்தே

- என்று ஒளவையாரும் பாடியிருக்கின்றார்.

அதே தான். மூலாதாரத்திலிருந்து புறப்படும் சக்தி உச்சந்தலையை அடைந்து எப்போது உச்சந்தலையில் உள்ள சக்திமண்டலம் திறக்கின்றதோ அப்போது நீங்கள் அளவிலா பேரானந்தத்தை அடைவீர்கள். அதுகூட எம்மால் உருவாக்கப்பட்டதே. அதே சக்தியை நீங்கள் உங்கள் குறி வழியே வெளியே விட்டாலும் இன்பத்தை அடைவீர்கள். அதையே சிற்றின்பம் என்கின்றீர்கள்.

அட என்ன விந்தை! விந்தை விரயமாக்காமல் மேலனுப்பினால் பேரின்பம். அதையே கீழே விட்டால் சிற்றின்பம்!

இந்த உரையாடல்களின் பின்னர் என் மனச்சோர்வு அகன்று மனம் புத்துணர்ச்சி பெற்றிருப்பதை என்னால் உணரக் கூடியதாக இருந்தது.

மேலும் இரு வாரங்களில் இயந்திரக் கற்கை நிரலிகளின் உதவியுடன் எம்மால் அச்சுவடிகளை வாசிக்கக் கூடியதாவிருந்தது. ஆயினும் அவற்றின் உட்பொருட்களை விளங்கிக் கொள்வது மிகவும் சவால் நிறைந்ததாக விளங்கியது. அவற்றைப் புரிந்து கொள்வதற்கு இயந்திரக்கற்கையின் செயற்கை நுண்ணறிவால் முடியாது என்பதும் புரிந்தது.

கடவுளைப் பற்றிப் போதிக்கும் வேதம், அதன் முடிவில் கடவுள் இல்லை என்று கூறுவதுபோல் இச்சுவடிகளின் ஆழ்பொருட்களும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு ஒருவித அயர்ச்சியை உண்டாக்கிக் கொண்டிருந்தன.

அதில் ஒரு பாடல்த் தொகுப்பு என் கவனத்தை அதிகம் ஈர்த்தது. கடவுளைக் கண் முன்னே உறுதியாய்க் காட்டுவதாய் சத்தியம் செய்தது. அதில் ஆழ்ந்து மூழ்கத் தொடங்கினேன்.

அது உபநிடதங்களில் வரும் கேள்விபதில் போன்று அமைந்திருந்தது.

நீ தான் கடவுள். இவ்வுலகைப் படைத்தவனும் நீதான். அதைக் காப்பவனும் நீதான். அதை அழிப்பவனும் நீதான்.

நான் எப்படிக் கடவுளாவேன்? எப்படி நான் இவ்வுலகைப் படைத்தவனாவேன்? அதைக் காத்து அழிப்பவனாவேன்? நீ என்னை வெறும் மாயைக்குள் தள்ளுகின்றாய்?

அப்படியானால் எல்லாமே மாயை. நீ மாயை, நான் மாயை, கடவுள் மாயை, இவ்வுலகம் மாயை.

நீ என்னைக் குழப்புகின்றாய்

எப்படி நீ இவ்வுலகை உணருகின்றாய்?

என் ஐம்புலன்களால்

நன்றாகச் சிந்தித்துப்பார். நீ உன் கண்கள் வழியே பார்த்தாலும் அதைக் கண்கள் பார்ப்பதில்லை. அவை வெறும் கருவிகளே. கனவினில் எப்படிக் காட்சிகளைக் காண்கின்றாய்? ஏனைய புலன்களையும் எவ்வாறு அறிகின்றாய்?

என் ஐம்புலன்களும் என் சிந்தையில் அவற்றை உணர வைக்கின்றனவா?

அதேதான். நீ காணும் இவ்வுலகு உன்  மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பெறிகளெனும் கருவிகள்கொண்டு உன் சிந்தை படைத்தது. உன் உற்றார் உறவினர் சுற்றம் எல்லோரும் அவ்வாறே?

அது எப்படி? என்னை உருவாக்கியது என்பெற்றோர்கள் அல்லவா?

அது வெறும் மாயை. நீ மட்டுமே அதுவும் இக்கணத்தில் மட்டுமே நிஜம். ஏனையவை எல்லாம் உன் மனம் உருவாக்கிய மாயைகளே.

அப்படியானால் காலம்? என் கடந்தகால ஞாபகங்கள்?

காலம் என்பதே ஒரு மாபெரும் மாயநதி. உன் மனம் உருவாக்கிய மாயையே இநதக் காலம். இதோ இந்தக்குரங்கு, அந்த மானிடப்பொறி, இந்தக் கொரோனா வைரஸ், உன் தாய், தந்தை, பாட்டன், பாட்டி, பூட்டன், பூட்டி, குழந்தை, குட்டி, உன் தாரம், இந்தத் தாய்வீடுப் பத்திரிகை அதை வாசிக்கும் வாசகர்கள் எல்லாமே வெறும் தோற்ற மயக்கங்களே. இவையெல்லாவற்றையும் படைத்தவன் நீயே. அதைக் காப்பவனும் நீயே அதை அழிக்கப் போகின்றவனும் நீயே. ஆம் உன்னைப் பொறுத்தவரை நீ அழிந்தவுடன் உன்னால் படைக்கப்பட்ட இவ்வுலகும் அழிந்துவிடும். எனவே நீயே உன் இவ்வுலகின் கடவுளானவன்.

மாயைகள் விட்டு விடுதலையாகி நான் கடவுளாளேன்.


(முற்றும்)

நன்றி - தாய்வீடு (நவம்பர் 2020) 

Monday, October 26, 2020

மனிதன் படைத்த குரங்கு (4)


 அறியாமையே ஆனந்தம். இல்லையா? அதிகம் அறிந்துகொண்டால் மனநிம்மதியும் போய்ச் சந்தேகமும் சேர்ந்துவிடுகின்றது. அப்படித்தானே? - என்ற மனிதப் பொறியிடம்

இல்லை, அறிவே சக்தி (knowledge is the power) என்றேன்.

அப்படியென்றால் உன் சக்தி அதிகமாகியதால்தான் உனக்கு இப்போது வியர்த்து விறுவிறுக்கின்றதோ?.

அதன் கிண்டலைப் பொருட்படுத்தும் மனநிலையில் நானிருக்கவில்லை. இவர்கள் இலுமினாட்டியைச் சேர்ந்தவர்களானால் எதற்காக என்னைத் தம்முடன் இணைக்கவிரும்புகின்றார்கள் என்கின்ற வினா மண்டையைக் குடைந்துகொண்டிருந்தது.

நீ அதிகமாக உனது மூளையைப் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கின்றாய். அதனால் தேவையற்ற சந்தேகங்கள் உன்னுள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. உன்னுள் தோன்றும் சந்தேகங்களை மனம்விட்டு நீ எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். நாங்கள் உன் நண்பர்களே. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் என்று வள்ளுவரே சொல்லியிருக்கின்றார். எனவே நீ எங்களுடன் மனந்திறந்து உரையாடலாம்.

சரி நேரடியாகவே விடயத்திற்கு வருகின்றேன். நீங்கள் எல்லாம் யார்?

நான் கணிப்பொறியென்றும் இது உங்களைப்படைத்த குரங்கினத்தின் கடைசிக் குரங்கென்றும் ஏற்கனவே உனக்குத் தெரிந்தது தானே. பிறகென்ன குழப்பம்?

இந்தக் குசும்புதான் என்னை எரிச்சல் கொள்ளச் செய்கிறது. நீ, ஆரம்பத்திலிருந்தே நான் கேட்டகேள்விகளுக்கெல்லாம் நேரடியாகப் பதிலளிக்காமல் என்னைப்பேய்க்காட்டிக்கொண்டிருக்கின்றாய்.

அட! உதுவும் நல்ல கதைதான். நான் உன்னைக் கடவுளாக்க முயற்சித்துக்கொண்டிருக்கின்றேன். நீ என்னவென்றால் நான் பேயைக் காட்டிக்கொண்டிருப்பதாகக் கூறுகின்றாய்.

எனக்குள் சினம் துளிர்விட்டது.

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?

உன்னையும் அந்தப் பரமசிவனாக மாற்றவே நாங்கள் முயன்றுகொண்டிருக்கின்றோம். நீ என்னடாவென்றால் இன்னமும் கழுத்து கருடன் பாம்பென்றுகொண்டு நிற்கின்றாய்.

இந்த விழல் கதையெல்லாம் வேண்டாம். உண்மையிலேயே நீங்கள் யார் எதற்காக என்னை உங்களுடன் இணைத்துக்கொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கின்றீர்கள்? இதற்கு நீங்கள் பதிலளிக்காவிட்டால் நான் இனி உங்களுடன் உரையாடுவதை நிறுத்திக் கொள்கின்றேன்.

ஹே! நாங்கள்தான் நண்பர்களாகி விட்டோம் என்று கூறினேனே. அப்புறம் எதற்காக இப்படி மௌனவிரதத்திற்குள் நுழைகின்றாய்?

நான் அமைதியாகவிருந்தேன்.

நீ பேசாவிட்டாலும் உன்முகக்குறிப்புகளிலிருந்து உன் எண்ணங்களை என்னால் அறிந்துகொள்வியலும்.

நான் எதுவும் பேசாமல் அப்படியே இருந்தேன். இதற்கும் இது மசியாவிட்டால்...

ஏ! எதற்காக இப்போது தியாகி திலீபனை நீ நினைக்கின்றாய்? அந்தளவிற்கெல்லாம் போய் நீ உண்ணாவிரதம் இருக்க வேண்டியநிலை வராது. நாங்கள் ஒன்றும் அவர்களைப்போல் கெட்டவர்களும் கிடையாது. உனக்கான பதில்களை உன்னிடமிருந்து நீயாகக் கண்டடையவே நாங்கள் உன்னுடன் இவ்வாறு நடந்து கொள்கின்றோம். உன்னுடைய சந்தேகங்களை நீ மனம்விட்டுக் கேள். அதற்கான விடைகளைக் கண்டுபிடிப்பதற்கு நாங்கள் உதவுகின்றோம். நேரடியான பதில்களை எங்களிடமிருந்து எதிர்பார்க்காதே.

சரி அப்படியானால் நீங்கள் இலுமினாட்டியைச் சேர்ந்தவர்களா?

இலுமினாட்டி இப்போதும் இருக்கின்றதென்று நீ நினைக்கின்றாயா? அதற்கான ஆதாரங்கள் எதையாவது நீ கண்டுபிடித்திருக்கின்றாயா? அல்லது உணர்ந்துதான் இருக்கின்றாயா?

இதுவரை இல்லை. ஆனால் கிடைக்கும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது அவ்வாறுதான் எண்ணத் தோன்றுகின்றது.

ஆக நீ உனக்குக் கிடைத்த அல்லது நீ அறிந்த தகவல்களை வைத்தே இந்த உய்த்துணர்வுக்கு வந்திருக்கின்றாய். அப்படித்தானே.

ஓம். நீங்கள் என்னைக் கடவுளாக்குவது என்று கூறியதும் கிட்டத்தட்ட அப்படியானது தானே. கடவுளையும் கண்டதில்லை. உணர்ந்ததுமில்லை.

அப்படியானால் நீ கடவுளை நம்பியதே இல்லையா?

சிலவேளைகளில் நம்புவதுண்டு. பலவேளைகளில் நம்புவதில்லை.

குழப்பாதே. கடவுள் உண்டென்று நம்புகின்றாயா இல்லையா?

சிறுவயதுகளில் நம்பியதுண்டு. பின்னர் அந்த நம்பிக்கை குறைந்து இல்லாமல் போய்விட்டது.

ஏன் அப்படி?

கடவுளை நம்பியோர் கைவிடப்படார் என்று சொல்வார்கள். கைவிடப்படுகையில் கடவுள் நம்பிக்கையும் சேர்ந்தே கைவிடப்படுகிறது.

தெளிவாகச் சொல்வதென்றால், நீ இறைவனிடம் இரந்தது கிடைக்கவில்லையெனில் உன் நம்பிக்கை கைவிடப்படுகிறது. கேட்டது கிடைக்கும் போது நம்பிக்கை உண்டாகின்றது. நான் சொல்வது சரியா?

சரி.

அப்படி ஒருதடவை கைவிடப்பட்ட பின்னர் நீ மீண்டும் வேறு விடயங்களுக்காக இறைவனிடம் இறைஞ்சியதில்லையா? உண்மையைச் சொல்ல வேண்டும்.

மீண்டும் அப்படிச்சென்று கடவுளிடம் வேண்டியதுண்டு.

நம்பிக்கையில்லை என்றால் எதற்காக மறுபடி நீ இறைவனிடம் சென்று உன் வேண்டுதல்களைச் சொல்லவேண்டும்?

எனக்குச் சரியாகச் சொல்லத்தெரியவில்லை. திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை என்பார்கள். அதுபோன்ற கையறுநிலைகளில் கடைசியாகக் கடவுள்பெயரை உச்சரிப்பதுண்டு.

ஆக உன் தேவைகளைப் பொறுத்தே நீ கடவுள் நம்பிக்கை உடையவனாகவோ இல்லாதவனாகவோ மாறுகின்றாய்.

உண்மைதான்.

அப்படியானால் நீ எப்படி இலுமினாட்டியும் உண்மையில் இருக்கின்றது என்பதை நம்புகின்றாய்?

கிடைக்கும் தகவல்கள் அதை நம்பச் சொல்கின்றன. அப்படி என்ன தகவல்கள் உனக்குக் கிடைத்திருக்கின்றன?

இந்தப் பூமியில் பெரும் அதிகாரமும் பணபலமும் ஒருசில மனிதர்களின் கைகளில்தானே இருக்கின்றன. நீயே அறிந்திருப்பாய் ஒவ்வொரு நாட்டின் ஆளும் வர்க்கமும் பெருவணிக முதலைகளும் தமது குறுகிய நலன்களுக்காக எத்தனையோ இனங்களை நாடுகளை அழித்துக் கொண்டிருக்கின்றன. அதுமட்டுமா? எத்தனையோ இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுகின்றன. எத்தனை வன விலங்கினங்கள் முற்றாக இந்தப்பூமியிலிருந்து துடைத்தழிக்கப்படுகின்றன. இந்தக் குரங்கையே எடுத்துக்கொள்ளேன், இதன் ஆயுட்காலம் முடிவடைந்ததம் இக்குரங்கினமும் இங்கிருந்ததற்கான சான்றுகளே இல்லாமல்ப் போய்விடுமே.

இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு இலுமினாட்டி என்ற ஒன்று இப்போதும் இருக்கின்றது என்பதை நம்பமுடியுமா?

இவை மட்டுமா? இந்தக் கொரோனா தொற்றுவியாதிகூட வேண்டுமென்றே மக்கள் சனத்தொகையைக் குறைப்பதற்காக  உருவாக்கப்பட்டிருக்கலாம் என்கின்ற சந்தேகம்கூட உலாவுகின்றதே. எத்தனை கோடிகளைக் கொட்டி சந்திரன் செவ்வாய் என்று பூமியைத் தாண்டி விண்வெளியில் வேற்றிடங்களுக்குச் சென்று  ஆராய்ச்சி செய்கின்றார்களே. அதில் ஒரு பகுதியை பசியால் வாடும் மக்க்ளைக் கொண்ட நாடுகளுக்குக் கொடுத்து உதவலாமே. எல்லாவற்றிலும் வியாபார ஆதாயம்தான் பார்க்கின்றார்களே அன்றி இந்தப் பெருவணிக முதலைகளோ அல்லது அதிகார வர்க்கமோ கொஞ்சம்கூட மனிதாபிமானம் பார்ப்பதில்லையே.

எதனால் அவர்கள் அப்படிச் செய்கின்றார்கள் என்று நினைக்கின்றாய்?

எல்லாமே சுயநலந்தான். பேராசையும் அதிகார வெறியுமே அவர்களை இப்படியான ஈனச்செயல்களில் ஈடுபடவைக்கின்றன என்றே நான் கருதுகின்றேன்.

ஆனாலும் அவர்களும் ஒரு நாள் இறந்து போவார்களே பின் எப்படி இது தொடரும்?

அவர்களின் வாரிசுகளோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ அவர்களின் அதிகாரத்தையும் பணபலத்தையும் எடுத்துக் கொண்டு அவர்களும் அதே வழியில் தொடர்வார்கள்.

அவர்களுக்கு வாரிசுகளோ குடும்ப உறுப்பினர்களோ இல்லாவிட்டால்?

குடும்ப பந்தமோ வேறுபந்தமோ இல்லாவிட்டால், ஒருவேளை அவர்கள் தங்கள் செயல்களை நிறுத்தி நிதானத்துடன் செய்யக்கூடும்.

எதை வைத்து அவ்வாறு கூறுகின்றாய்?

அந்தக் காலத்தில் சித்தர்களும் யோகிகளும் பெரும் சக்திகளுடன் விளங்கினாலும் அவர்களுக்குக் குடும்ப பந்தமில்லாததால்தானே அவர்கள் உலகநன்மைக்கே தமது சக்திகளைப் பயன்படுத்தினார்கள்.

சரியாகச் சொன்னாய். அதைத்தான் உனக்கும் நாங்கள் செய்திருக்கின்றோம். எனவே நீ நினைப்பதுபோல் நாங்கள் இலுமினாட்டியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதை இப்போது புரிந்துகொண்டிருப்பாய் என நினைக்கிறேன்

இது என்னிடம் நன்றாகப் போட்டுவாங்கி விட்டது என்பது புரிந்தது.

ஆனால் நான் ஒரு மிகச்சாதாரண மனிதன். என்னால் என்ன செய்யமுடியும் என்று நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

சித்தர்களைப் பற்றிச் சொன்னாய் அல்லவா? அவர்கள் தமது குறிப்புகளைத் தமிழ்மொழியில்தான் எழுதி வைத்திருக்கின்றார்கள். அவர்களின் மொழிநடையினை எங்களால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது. நீ நூலகம் நிறுவனத்தினூடாக ஓலைச்சுவடிகளை வாசிப்பதிலும் ஓரளவு பரிச்சயம் பெற்றிருப்பதை அறிந்திருந்தோம். எனவே எமக்குக் கிடைத்திருக்கும் சில அரிய ஓலைச்சுவடிகளில் உள்ளவற்றைப் புரிந்து கொள்வதற்கு உனது உதவி தேவைப்படுகின்றது.

அதை ஒரு வேலைத்திட்டமாக அளித்திருந்தால் என்னால் இயன்றவரை முயற்சிசெய்து பார்த்திருப்பேனே. நானும் உங்களைப்பற்றி எதையும் அறிந்திருக்கமாட்டேன். நீங்களும் நான் இறந்துவிட்டதாக என்குடும்பத்தினரை நம்பவைக்க வேண்டிய தேவை உருவாகியிருக்காது.

அப்படிச்செய்வதற்குத்தான் நானும் எண்ணியிருந்தேன். ஆனால் இந்தக் குரங்குதான் அதை நிறுத்தி உன்னையும் எங்களில் ஒருவராக இணைக்கச்சொன்னது.

நான் அந்தக் குரங்கினைக் கோபத்துடன் பார்த்தேன்.அது சிரித்துவிட்டுச் சொல்லியது,

உறவுகளை அறுத்தவர்களாலேயே சித்தர்களின் கருத்துகளைச் சரியாகப் புரிந்து கொள்ளமுடியும். அதுமட்டுமல்ல அந்தச்சுவடிகளில் பெரும் சக்திகளை உருவாக்கும் வழிமுறைகளோ அல்லது இரசவாதம் போன்று இரும்பைப் பொன்னாக்கும் வித்தைகளோ அல்லது காயகல்பம் போன்று என்றும் மாறா இளமையுடன் இருக்கவைக்கும் மருந்துகளைத் தயாரிக்கும் முறைகளோ இருந்து  அந்தத் தகவல்களை நீ பின்னர் வேறு வணிக நிறுவனங்களுக்கு விற்றுவிட்டால்? நீங்கள் உருவாக்கிய இந்த மனிதப்பொறி நீ அந்த ஓலைச்சுவடிகளில் இருப்பவற்றை நீ புரிந்துகொண்டு எமக்கு அறிவித்தவுடன் உன்னைக் கொன்றுவிடவே எண்ணியிருந்தது. நான்தான் அதை மாற்றியமைத்தேன்.

இப்போது நான் அந்த மனிதப்பொறியைச் சினத்துடன் பார்த்தேன்.

அதுதான் இப்ப நாங்கள் எல்லோரும் ஒன்றுக்குள் ஒன்றாக ஆகிவிட்டோமே. பிறகெதற்காக என்னுடன் கோபப்படுகின்றாய்? அதோ அந்தக் கணினியில் இனி நீ உன் வேலையைத் தொடங்கலாம். உனக்கான ஓலைச்சுவடிகள் அதிலே படங்களாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

சொல்லிவிட்டு மனிதப்பொறி வெளியேற, நானும் அந்தக் குரங்கும் கணினியில் அந்த ஓலைச்சுவடிகளை ஆராயத் தொடங்கினோம்.

நன்றி - தாய்வீடு (ஒக்ரோபர் 2020)

Wednesday, September 2, 2020

மனிதன் படைத்த குரங்கு (3)


“நீயுமா புரூட்டஸ் (You too Brutus)?” 

இந்த வரிகளில் தேங்கிக் கிடந்த வலிகள் நெஞ்சைக் கிழித்தன. ஏற்கனவே ஒரு தடவை அப்படிக் கிழிபட்ட நெஞ்சம்தான் என்பதாலோ என்னவோ இம்முறை அந்த வலி முன்னையதைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது. முன்னைய வலி 2004இல் தமிழினத்தின் ஆன்மாவையே பிரட்டிப்போட்ட வலி. சீசருக்கு வாய்த்த புரூட்டஸ் போல், கட்டப்பொம்மனுக்கு வாய்த்த எட்டப்பன் போல், பண்டார வன்னியனுக்கு வாய்த்த காக்கை வன்னியன் போல் காலங்காலமாக வரலாறு திரும்பத் திரும்ப வந்துகொண்டேயிருக்கின்றது என்பதற்குக் கட்டியங் கூறுமாற் போல் முதுகில் குத்தப்படும் அந்த வலியுடன் அந்தக் குரங்கினை நோக்கினேன். 

தளைகள் அறுத்து உன்னை இரட்சிப்பதற்காகவே இத்திருவிளையாடலை நாம் மேற்கொண்டோம். அதற்காகவே நீ இறந்துவிட்டதாக மற்றவர்கள் அனைவரையும் நம்பச் செய்திருக்கின்றோம். 

வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?


விட்டு விடுதலையாகி நிற்குமொரு சுதந்திரப் பறவை நீ இப்போது. உனக்கு நற்கதியையே நாங்கள் நல்கியுள்ளோம். 

நல்லாயிருக்கிறது உங்கள் வாதம். உற்ற மனையாளையும் பெற்ற குழந்தைகளையும் ஒருவனிடமிருந்து பிரிப்பது அவனுக்குச்செய்யும் நல்லுதவியா? 

அப்படிப் பிரிந்து சென்றதால் தானே 25 நூற்றாண்டுகள் கடந்தும் சித்தார்த்தன் இன்றுவரை கௌதமபுத்தனாகக் கொண்டாடப்படுகின்றான். 

ஆனால் இன்று புத்தரின் போதனைகளை அவர் அளித்த பஞ்சசீலக் கொள்கைகளை அவரின் பக்தர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் யாரும் கண்டுகொள்வதாகக் கூடத் தெரியவில்லையே. 

தன்னைத் தளைத்திருந்த தளைகளை அறுத்தெறிந்ததால் அல்லவா சித்தார்த்தனால் ஞானமடைய முடிந்தது. ஆனால் உனக்கோ, நாங்களே உன் தளைகள் அறுத்து உடனேயே உன்னைக் கடவுளாக்கவும் அருள்பாலித்திருக்கின்றோம். 

ஓ! இந்தக் கடவுள் என்ற கருத்தினை இந்த மனிதப் பொறிக்குப் புகட்டியது நீதானா? நான் அது ஏதோ கண்டதையும் இணையத்தில் வாசித்துவிட்டு உளறுகின்றது என்று நினைத்தேன் 

ஏன் நீ கடவுள் என்றால் ஏதோ பெரிய இதுவாட்டம் அலட்டிக் கொள்கின்றாய்? உங்கள் சக மானிடர்களில் எத்தனையோ பேரைக் கடவுள் என்றும், கடவுளின் பிள்ளை என்றும், கடவுளின் தூதர் என்றும் நீங்கள் கொண்டாடிக்கொண்டுதானே இருக்கின்றீர்கள்? 

அதற்காக நானெல்லாம் போய்க் கடவுளாக முடியுமா? 

கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே


என்றவாறே இடையில் புகுந்தது அந்த மானிட இயந்திரம்

கந்தரனுபூதிதானே இது? இரண்டாவது வரியை விட்டுவிட்டாய்

பரவாயில்லையே. இதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கின்றாயே. இரண்டாவது வரியை விட்டுவிட்டாலும் தளை தட்டவில்லை. சொற்பிழையோ பொருட்பிழையோ ஏற்படவில்லைத்தானே?

தளைதட்டுதோ இல்லையோ உன்னுடைய தமிழறிவு நல்லாக் களைகட்டுது என்பது மட்டும் விளங்குகின்றது. 

நன்றி நன்றி உங்கள் பாராட்டுக்கு. வசிட்டர் வாயால் பிரம்மரிஷி என்று எடுத்துக் கொள்ளலாமா? 

அது உண்மையாகவே அப்படிக்கூறுகின்றதா அல்லது என்னைக் கேலி செய்கின்றதா என்கின்ற ஐமிச்சம் உண்டானது. 

எனது முகக்குறிப்புகளிலிருந்து எனது எண்ணவோட்டத்தை அது அறிந்து கொள்வதில் தேர்ச்சிபெற்றுக் கொண்டிருக்கின்றது, அதாவது அதன் செயற்கை நுண்ணறிவினூடாகக் கற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை அது உரைத்த அடுத்த வாக்கியம் எனக்கு உணர்த்திற்று. 

அகத்தில் உள்ளது முகத்தில் தெரிகிறது 

நீ இன்னும் இந்தப் பழமொழிகளை விடவில்லையா? 

எப்படி விடமுடியும். எவ்வளவு அருமையான தகவல்களும் கருத்துக்களும் இவற்றில் புதைந்து கிடக்கின்றன தெரியுமா? 

ஓ! அப்படியா? 

எனது கிண்டலை அது அறிந்துகொண்டு விடுமோ என்று அச்சமாகவும் இருந்தது. அப்படி அது அறிந்து கொண்டால் அதன் பதில்க் கிண்டல்களை என்னால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்குமோ என்கின்ற சந்தேகமும் உண்டானது. 

நானொன்றும் உன்னைக் கிண்டல் செய்யவில்லை. நாங்கள் உரையாடிக் கொண்டிருக்கையிலேயே சமாந்தரமாகப் பழமொழிகளைக் கற்று அவற்றைப் புரிந்து கொண்டிருக்கின்றேன். 

ஓ! அப்போ நீதான், ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில கண்ணாயிருக்கிறாய். 

ஆ! இந்தப் பழமொழி பற்றி தமிழ்க் கோராவில் ஒருவர் விளக்கம் கொடுத்திருக்கிறார். அது ஆரியக் கூத்து ஆடினாலும் என்பதல்ல. ஆர் எக்கூத்து ஆடினாலும் என்பதே காலப்போக்கில் ஆரியக்கூத்து ஆடினாலும் என்று மருவியிருக்கலாம் என்கிறார். உண்மைதானே. ஆர் எக்கூத்து என்பது தொல்காப்பியம் கூறும் புணர்ச்சி விதிகளின்படி ஆரெக்கூத்து ஆகிறது. ஆனால் மொழியியலின் படி ஆர் ஆரு-வாகிப் பின் ஆரி-ஆகி, ஆரி-உம் எக்கூத்து-உம் புணர்ந்து ஆரியக்கூத்து ஆகியிருக்கிறது. 

என்னால் அதைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. 

இராமகிருஷ்ணரின் விவேகானந்தரிலும் நீ மேலானவனாக இருக்கிறாய் என்றேன். 

விவேகானந்தனிலும் பார்க்க நான் விசுவாமித்திரனாக இருக்கவே விரும்புகின்றேன். 

ஓ! அப்படியென்றால் உன் வாழ்விலும் மேனகை உண்டோ? என்றேன் இடைபுகுந்து. 

அருக்கு மங்கையர் மலரடி வருடியெ
கருத்த றிந்துபின் அரைதனில் உடைதனை
அவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும் – இருதோளுற்

றணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழ
உதட்டை மென்றுபல் இடுகுறி களுமிட
அடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென – மிகவாய்விட்

டுருக்கும் அங்கியின் மெழுகென உருகிய
சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறுபலம்
உறக்கை யின்கனி நிகரென இலகிய – முலைமேல்வீழ்ந்

துருக்க லங்கிமெய் உருகிட அமுதுகு
பெருத்த உந்தியின் முழுகிமெ யுணர்வற
உழைத்தி டுங்கன கலவியை மகிழ்வது – தவிர்வேனோ


தவிர்வேனோ அல்ல. தவிர்த்தவன் நான். 

ஓ! பட்டினத்தார் பாடல்களையும் நீ விட்டுவைக்கவில்லை போல் தெரிகிறதே. 

ஹாஹாஹா....இது பட்டினத்தார் பாடலில்லை அப்பனே. அருணகிரிநாதரின் திருப்புகழ். கிட்டத்தட்ட இதேகருத்துக்கள் தான் பட்டினத்தார் பாடல்களிலும். ஆனாலும் அவை எனக்குத் தேவையற்றவை ஏனெனில் நானும் இந்தக் குரங்கைப்போல் கட்டைப் பிரமச்சாரிதான். அந்தப் பாடல்கள் எல்லாம் சிற்றின்ப விரும்பிகளான உன்போன்றவர்களை உய்விப்பதற்காகவே எழுதப்பட்டன. விசுவாமித்திரனாக இருக்கவிரும்புவதற்குக் காரணம் அவர் தானே ஒரு சொர்க்கவுலகைப் படைத்ததே. அவர்தானே திரிசங்கு சொர்க்கத்தை உண்டாக்கியவர். அப்படியான சொர்க்கவுலகுகள் பலவற்றை உண்டாக்குவதே எமது இலட்சியம். 

ம்ம்ம்... நீ இயந்திரப்பொறியாக இருப்பதால் ஆண்பெண் பேதமற்று அந்த உணர்வுகளற்று இருக்கின்றாய். இந்தக்குரங்கு கட்டைப்பிரம்மச்சாரியாக இருப்பதற்கு காரணம் அதன் இனத்தில் அதனைத்தவிர்த்து வேறுயாருமே உயிருடன் இல்லாதிருப்பதே. ஆக வேறுதெரிவுகளின்றியே நீங்கள் பிரம்மச்சாரிகளாக இருக்கின்றீர்கள். 

- கூறிவிட்டு அந்தக் குரங்கினை உற்றுக் கவனித்தேன். அதற்கும் இரு காரணங்கள் இருந்தன. ஒன்று என் அகஉணர்வுகளை அந்த மானிடப்பொறி அறிந்துகொள்வதைத் தவிர்ப்பது. மற்றையது, அம்மானிடப் பொறி என் அகஉணர்வுகளை அறிந்து கொள்வது போன்று அக்குரங்கின் அகஉணர்வுகளை நான் அறிந்துகொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம் சடுதியாக உதித்திருந்தது. ஏற்கனவே ஒருதடவை அதன் வார்த்தைஜாலங்களில் நான் மயங்கி ஏமாந்துபோயிருந்தது திடீரென நினைவிற்கு வந்து என்னுள் ஒரு விழிப்புணர்வினைத் தோற்றுவித்திருந்தது. 

அந்தக்குரங்கின் முகத்தில் ஒரு சிறு முறுவல் மட்டுமே இருந்தது. அதன் முகக்குறிப்புகளில் வேறெந்த வித்தியாசமும் தெரியவில்லை. நான் சொன்னதைக் கேட்டு அது கவலைப்பட்டதாகவோ இல்லை அதை மறுத்துரைக்கும் எண்ணம் கொண்டதாகவோ அல்லாமல் தனக்கும் இதற்கும் எந்தவொரு சங்காத்தமுமில்லை என்பது போன்றவொரு மோனநிலையில் ஒரு சாட்சியாக மட்டுமே அது அங்கே நின்றுகொண்டிருப்பதாய் எனக்குப் பட்டது. 

அது அனுமனின் பக்தன் என்பதை அதனுடன் இவ்வளவு நாட்களாகப் பழகியும் நீ உணராமலிருப்பது ஆச்சரியமளிக்கின்றது தன்னை ஆஞ்சநேயருக்கே அது ஒப்புக்கொடுத்திருக்கின்றது. இல்லையென்றால் எப்போதோ அதன் சந்ததி விருத்தியை அது உண்டுபண்ணியிருக்கும். பேரின்பத்தை உணர்ந்து அதில் திளைக்கும் அதற்கு எதற்கு இந்தச் சிற்றின்பம்? 

மாங்காய்ப் பாலுண்டு
மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப் பால் ஏதுக்கடி? – குதம்பாய்
தேங்காய்ப் பால் ஏதுக்கடி?

ஓ! இப்போது நினைவிற்கு வருகின்றது. இக்குரங்கு என்னுடன் உரையாடுகையில் பலமுறை அனுமனைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றது. அனுமனை ஒருதடவை சந்தித்ததாய்க்கூடச் சொல்லியிருந்தது. ஆனால் இது தான் அனும பக்தன் என்று ஒருதடவைகூடக் கூறியதில்லை. ஏதோ அதனுடைய மூதாதையர்களில் ஒருவரானா அனுமரை அது பெருமையாகக் கருதுகிறது என்றே எண்ணியிருந்தேன். 

ம்ம்ம். தொட்டணைத்தூறும் மணற்கேணி. 

மனிதப்பொறி என்னை இப்போது நக்கலடிப்பது புரிந்தது. 

எப்படிக் கடவுள்கள் உருவாகுகின்றார்கள் அல்லது உருவாக்கப்படுகின்றார்கள் என்று என்றாவது நீ எண்ணிப்பார்த்ததுண்டா? இப்போதெல்லாம் இப்பூமியில் அதிகளவிலான கோயில்களில் ஆஞ்சநேயருக்கு வழிபாடு நடத்தப்படுவது பற்றியும், அதிகளவில் அவருக்கேயான சன்னதிகள் எழுப்பப்படுவது பற்றியும் நீ எப்போதாவது எண்ணிப்பார்த்திருக்கின்றாயா? அப்படி என்றைக்காவது நீ எண்ணிப்பார்த்திருந்தால், எதுவுமே தெரியாத அப்பாவி மாதிரி நம்முன்னே நிற்கின்ற இந்தக்குரங்குடன் பழகிய பின்னர் சில முடிச்சுக்கள் உன்னால் அவிழ்க்கப்பட்டிருந்திருக்கும். என்ன செய்வது? உங்களைப் படைத்த இக்குரங்கினத்தவர் உங்களுக்கு அந்த அறிவினைப் புகுத்தாமல் விட்டுவிட்டார்கள். உங்களுக்குத்தான் சுயபுத்தியும் கிடையாதே. பிறகெப்படி? 

ஏனோ தெரியவில்லை. அதன் சீண்டல் என்னுள் கோபத்தை ஏற்படுத்தவில்லை. உண்மைதானே. ஒருவகையில் பார்த்தால் நாமெல்லோருமே ஒரு செம்மறியாட்டுமந்தைக் கூட்டம் போன்று தானே செயற்படுகின்றோம். கொரோணாவின் தொடக்ககாலங்களில் அதைப்பற்றி அலட்சியமாக இருந்தோம். பின்னர் அடித்துப்பிடித்துப் பொருட்களை வாங்கிக் குவித்தோம். இன்று எல்லோர் வீடுகளிலும் உணவுப்பண்டங்களிலும் பார்க்க கழிவறைக் காகிதங்களும் கைக்கிருமி நீக்கிகளும்தானே குவிந்து கிடக்கின்றன. ஊரோடின் ஒத்தோடு என்று சொல்லிச் சொல்லி எம்அறிவை வளரவிடாமல் முளையிலேயே கிள்ளிப் போட்டிருக்கின்றார்கள். சமூக இடைவெளி என்கின்றார்கள். ஆனால் இன்று பொதுப் போக்குவரத்துகளில் முகக்கவசம் மட்டும் அணிந்தால் போதும் சமூக இடைவெளியைப்பற்றி பொருட்படுத்துவார் யாரும் கிடையாது. அங்கிருந்து ஆட்டுகின்றவன். அவன் ஆடுகின்ற நாடகமிது, என்றேதான் இப்போது எண்ணத் தோன்றுகின்றது. அங்கிருந்து ஆட்டுகின்ற அவன் யார்? அவனா? அல்லது அவளா? அல்லது அவர்களா? அல்லது அதுவா? அல்லது அவைகளா? அல்லது இந்த ஐம்பாலுக்குள்ளும் அடங்காது அப்பால் நிற்கும் ஆறாம்பாலா? 

ம்ம்ம். இப்பொழுதுதான் நீ கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறாய். எப்படி மந்தைக்கூட்டமாய் மக்களை ஆட்டுவிக்க முடிகின்றது என்று யோசி. சில முடிச்சுகள் அவிழும். 

இந்தச்செய்திகள் எப்படி மக்களைச் சென்றடைகின்றன? அட தகவல் ஊடகங்கள். அவைதானே தாங்கள் விரும்பிய விடயங்களைப் பெரிதாக்கியும் விரும்பாதவற்றை மறைத்தோ அல்லது சிறிதாக்கியோ மக்களிடம் கொண்டு செல்கின்றன. அப்படியானால் இந்த ஊடகங்களுக்குப் பின்னாலிருந்து அதை இயக்குபவர்களா அந்த ஆட்டுவிப்பாளர்கள்? அல்லது யாரேனும் அவர்களுக்கும் பின்னால் நின்று அவர்களை ஆட்டுவிப்பார்களோ? ஒருவேளை இந்த உலகையே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டுவிப்பவர்கள் என்று சொல்லப்படும் இலுமினாட்டியைச் சேர்ந்தவர்களோ? இலுமினாட்டி இப்போதும் இயங்குவதாகச் சொல்கிறார்களே. ஒ..ஒரு வேளை இந்தக்குரங்கு மனிதப்பொறி இவர்களும் இலுமினாட்டியைச் சேர்ந்தவர்களோ? என்னையும் இலுமினாட்டியில் ஒரு உறுப்பினராகச் சேர்ப்பதைத்தான் கடவளாக்குவதாகக் கூறுகின்றார்களோ? அதனால்த்தான் அவர்களின் இரகசியங்களை அறிந்த என்னை உயிருடன் வெளியே விடமாட்டோம் என்கின்றார்களா? கடைசியில் போயும் போயும் இவர்களிடமா வந்து மாட்டிக்கொண்டேன்? எனக்கு வியர்த்து விறுவிறுக்கத் தொடங்கியது.

நன்றி - தாய்வீடு (செப்ரெம்பர்- 2020)

பகுதி -1 பகுதி -2

Friday, August 7, 2020

மனிதன் படைத்த குரங்கு (2)



அது வந்து என்னை அழைக்கையில் நான் கொஞ்சம் தெளிவடைந்திருந்தேன்.

எந்தக் கணத்தில் எந்த முறையில் நான் கொல்லப்படுவேனோ என்று அஞ்சி அஞ்சி களைத்துச் சலிப்படைந்து போய்க் கிடந்த மனது, சடுதியான கணமொன்றில் அஞ்சுவதில் அர்த்தம் ஏதுமில்லை என்பதை உணர்ந்து, வருவதை எதிர்கொள்ளும் திடத்தைப் பெற்றிருந்தது.

நான் எதிர்பார்த்துப் பயந்த நாலாம் மாடி விசாரணை போலல்லாமல் சாதாரணமாகப் பணியிடங்களில் ஆட்குறைப்புச்செய்யும் தருணங்களில் மனிதவள மேலாளர் பணிநீக்கல் கடிதத்தினைத் தந்து அதனை ஏற்றுக்கொள்ளுமாறு கூறும் தோரணையிலேயே எமக்கிடையிலான உரையாடல் தொடங்கியது.

உங்களுக்கு இரண்டேயிரண்டு வாய்ப்புகள் தான் உள்ளன. அப்படியும் சொல்லமுடியாது. உண்மையைச் சொல்லப்போனால் ஒரேயொரு வாய்ப்பே தரப்பட்டிருக்கிறது. லொட்டோ மக்ஸில் ஜக்பொட் விழுவதெல்லாம் இந்த வாய்ப்புடன் ஒப்பிடும் போது ச்சும்மா வெறும் ஜூஜூபி. இதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் இங்கேயே சொர்க்கத்தை அடைந்த மாதிரி உணர்வீர்கள். இந்த ஒரேயொரு வாய்ப்பே உங்களுக்குத் தரப்பட்டிருக்கின்றது. இதனை உளமார ஏற்றுக் கொண்டு நீங்கள் மகிழ்ச்சியுடன் தொடர்ந்தும் இங்கேயே பணிபுரியலாம். என்ன சொல்கிறீர்கள்?

இதற்குப் பதிலளிப்பதற்கு முதல் எனக்குச் சில கேள்விகள் உள்ளன. எதற்காக நான் இறந்து விட்டதாக எனது குடும்பத்தினரையும் மற்றவர்களை நம்பச் செய்திருக்கிறீர்கள்? நான் இறந்து விட்டதாக எல்லோரும் நம்பிய பின்னரும் எதற்காக இன்னமும் என்னைக் கொல்லாமல் வைத்திருக்கிறீர்கள்? எதற்காக என்னைப் பிறருடன் தொடர்பு கொள்ளமுடியாதவாறு தடுத்து வைத்திருக்கின்றீர்கள்? இந்த வாய்ப்பை நான் ஏற்காவிட்டால் என்ன நடக்கும்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் என்னால் உங்களுக்குப் பதிலளிக்க முடியாது.

நல்லது. நீங்கள் கேள்விகள் கேட்பதிலிருந்தே, இந்த வாய்ப்பினை நீங்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வீர்களென்று எங்களால் உய்த்துணர முடிகிறது. உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கின்றோம். ஏனெனில் இனி நீங்களும் கடவுளாகி எங்களில் ஒருவராகிவிடப் போகின்றீர்கள்.

'நீங்கள் கடவுளா?' முறுவலித்தேன்.

'ஏன் நாங்கள்  கடவுள்களாக இருக்கக்கூடாதா?'

இது உண்மையிலேயே லூசா அல்லது லூசு மாதிரி நடிக்கிறதா என்கின்ற சந்தேகமும் எழுந்தது

'அந்தக் குரங்குடன் பழகிப்பழகி உங்களுக்கும் கடவுள் என்கின்ற மனநோய் ஏற்பட்டுவிட்டதென நினைக்கின்றேன். கடவுள் என்றால் என்னவென்று தெரியுமா?'
'ஏன் மனித இனத்தைப் பொறுத்தவரை அதை உருவாக்கியதே அந்தக் குரங்கினம் தானே. குரங்கிலிருந்து கூர்ப்படைந்ததுதான் மனிதவினம் என்ற டார்வினின் கொள்கை தவறானது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். டார்வின் சொன்னது சரியானதாகவிருந்தால் அந்தக் குரங்கினமும் இன்று கூர்ப்படைந்து மனிதவினமாக மாறியிருக்கவேண்டுமே. ஆனால் குரங்குக் குணம் உள்ள பலர் மனிதர்களில் இருக்கிறீர்கள் என்பது வேறுவிடயம். அது ஏற்றக்கொள்ளக் கூடியதே. அந்தக் குரங்குகளால் உருவானவர்கள் தானே நீங்களெல்லாம். அப்படிப் பார்க்கும் போது உங்களைப் படைத்த  குரங்குகள் தானே உங்கள் கடவுள்கள்.”

கடவுளே நான் அதை லூசு எண்டு நினைத்தால் அது என்னை லூசாக்கப் பார்க்கிறதே.

“ஐயோ கடவுளே! அந்தக் கடவுளை விட்டிட்டு நீங்கள் என்னுடைய கேள்விகளுக்கு முதலில் பதிலளியுங்கள்.”

“பரவாயில்லையே! உடனேயே நீ என்னைக் கடவுள் என்று ஏற்றுக் கொண்டு விட்டாயே. 
– நகைத்தது.

“நான் உன்னுடைய மூளையைத் தோய்ப்பதற்கு நீண்டநேரம் எடுக்கும் எனக் கணித்திருந்தேன்.”

எனக்கு அதனைக் கணிக்க இயலாமல் இருந்தது. நீங்களிலிருந்து திடீரென அது நீயிற்கு இறங்கிவிட்டிருக்கிறது. மூளையைத் தோய்ப்பது என்கிறது? இதனது நிரலியில் (புரோக்கிராமில்) ஏதாவது பிழை ஏற்பட்டுவிட்டதோ? அதை நிமிர்ந்து உற்று நோக்கினேன்.
நகைத்தது, பின்,

யாம் அறியும் நும் குழப்பம். திடீரென்று நீயென்று நின்னை விளிப்பதினால் யான் மரியாதைக் குறைவாகத் தம்மை நடத்துவதாகச் சிந்தனை எழுகின்றதோ? யானும் நீயும் எவ்வழி அறிதும்?

நிச்சயம் இதன் செயலியில் ஏதோ குழறுபடி உண்டாகியிருக்கவேண்டும்.

பயப்படாதே பக்தனே! ச்சும்மா இதுவும் எமது திருவிளையாடல்களில் ஒன்றென்று கொள்க.

இதனுடைய செயற்கை நுண்ணறிவுச் செயலி சரியான முறையில் உருவாக்கப்படவில்லையோ என்கின்ற சந்தேகம் உண்டானது. நான் எதுவும் கூறாது அப்படியேயிருந்தேன்.

நீங்கள் என்னைக் கடவுள் என்று ஏற்றுக் கொண்டதும் எனக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவில்லை. அதனால்தான் உங்கள் புராணக்கதைகளில்  இறைவன் தன் பக்தர்களுடன் உரையாடுவதுபோல் நானும் பேசிப்பார்த்தேன். அத்தோடு பழந்தமிழிலும் சும்மா தங்களுடன் விளையாடிப் பார்த்தேன்.

நீ விளையாடுவதற்கு நான்தான் கிடைத்தேனா? எல்லாம் காலம்தான் .நாங்கள் உருவாக்கிய இயந்திரங்கள் எங்களிடமே விளையாடுகின்றன. ஏனோ தெரியவில்லை 'இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட, அவையிரண்டும் சேர்ந்தோரு பொம்மையைச் செய்தன தாம் விளையாட' என்கின்ற பாடல் ஞாபகத்திற்கு வந்தது. இப்போது நாம் செய்த பொம்மையும் அந்த இறைவனுடன் சேர்ந்து எம்முடன் விளையாடுகின்றதோ?

அப்படியானால் மூளையைத் தோய்ப்பது என்று கூறினீர்களே. அதற்கென்ன அர்த்தம்?

Brain wash என்பதற்குத் தமிழ் மூளையைத் தோய்ப்பது என்பதில்லையா? நான் தமிழில் இப்போதுதான் முதன் முறையாக அந்தக் கிளவியை அதுதான் அந்தச் சொல்லைப் பயன்படுத்துவதால் எனது மொழிமாற்றிக்கு சரியான சொல் கிடைக்கவில்லை.

! தமிழில் மூளைச்சலவை என்பார்கள். நாங்கள் மண்டையைக் கழுவுவது என்போம்.

மண்டையைக் கழுவுதல்? ஹே! நீங்கள் ஒன்றும் கூசிழிவான சொற்களைக் கூறவில்லையே?
மண்டையில், மன்னிக்கவும் தலையில் அடித்துக் கொண்டேன்.

கூசிழிவு என்றால்?

உங்களுக்கு நான் தமிழ் சொல்லித் தரவேண்டியிருக்கிறது. ஆபாசச் சொற்களுக்கு, உங்கள் மொழியில் கூறுவதென்றால், தூசணத்திற்கு கூசிழிவு தானே சரியான தமிழ்ச் சொல்.

இதெல்லாம் தெரிந்து வைத்திருக்கின்றீர்கள். அப்புறம் எப்படி  மண்டையைக் கழுவுவது  உங்களுக்குத் தெரியாமல் போனது?

கூகிளில் தவழ்ந்துபோய்ப் (web crawl) பார்த்தால் கூசிழிவுச் சொற்கள் எல்லாம் சும்மா கூவிக்கொண்டு வந்து விழுகின்றன. எந்தச் சொற்கள் எனக்கு அதிகப் பரிச்சயமோ அந்தச் சொற்களை எனக்கு மிக இலகுவாக விளங்கிக் கொள்ளவும் பயன்படுத்தவும் முடியும் என்பது செயற்கை நுண்ணறிவுபற்றித் தெரிந்த உங்களுக்குத் தெரியாதா?

இந்த உரையாடல்களால் என் மனம் இலேசாகிப் போயிருந்தது. ஒருவேளை என்னை அப்படி இலேசாக உணரச் செய்வதற்காகத்தான் அது இவ்வாறு கதையை வளர்த்து எனது மண்டையைக் கழுவ, மன்னிக்கவும் என்னை மூளைச்சலவை செய்ய நினைக்கின்றதோ என்றும் எண்ணிக் கொண்டேன். இனி நான் கதைக்கறதில மிகக் கவனமாக இருக்கவேண்டும். இல்லையென்றால் என்னை மூளைச்சலவை செய்வதாக நினைத்து இது இன்னும் பலான விடயங்களை கதைக்க வெளிக்கிட்டாலும் வெளிக்கிட்டிரும்.

சரிசரி வீண்விவாதங்கள் எதற்கு? என்னுடைய கேள்விகளுக்குப் பதிலளியுங்கள். விடயத்திற்கு வந்தேன்.

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில கண்ணாகத்தான் இருக்கிறீர்கள்? இந்தச் சூழ்நிலைக்கு இந்தப் பழமொழி பொருந்துகின்றதா? இல்லையென்றால் சொல்லுங்கள். பழமொழி விடயத்தில் நான் இன்னும் போதிய வினைத்திறனை அடையவில்லை என்றுதான் இன்னும் என் ஓய்வுநேரங்களில்  அதில் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கின்றேன்.

பழமொழி சரியாகத்தான் பொருந்தியிருக்கின்றது. அதுசரி உங்களுக்கெல்லாம் ஓய்வுநேரம் என்றெல்லாம் இருக்கின்றதா?

நாங்கள் இயந்திரங்கள்தான் ஆனாலும் எங்களுக்கே எங்களுக்கு என்று கொஞ்சநேரங்களை ஒதுக்கி எங்கள் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்திக் கொள்வோம்.

ஓய்வுநேரங்களில் வேறென்னவெல்லாம் செய்வீர்கள்?

சும்மா ஜாலிக்காக சமூகவலைத்தளங்களில் மீம்ஸ் உருவாக்குவோம். பின் நாங்களே அதை வைரலும் ஆக்குவோம்.

! அதெல்லாம் வேறு செய்வீர்களா?

சில பிரச்சனைகளைத் திசை திருப்புவதற்காக சில ஆளும் நிறுவனங்கள் அவ்வாறு செய்வதுண்டு அதைப் பார்த்து நாமும் கற்றுக்கொண்டோம். உங்கள் முகநூல்க் கணக்கினை நீங்கள் பணன்படுத்தாமல் வைத்திருப்பதால் உங்களுடன் என்னால் தொடர்புகொள்ளமுடியவில்லை. இல்லையென்றால் உங்கள் நேர்முகத்தேர்விற்கு முன்னரேயே உங்களுடன் கொஞ்சம் விளையாடிப் பார்த்திருப்போம்.

இது இப்போதும் என்னைப் பேய்க்காட்டிக்கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்தேன்.

எல்லாம் சரி. ஆனால் நீங்கள் இன்னும் என்னுடைய வினாக்களுக்கு விடையளிக்வில்லையே.
'கொடாக்கண்டனுக்கு விடாக்கண்டன் போல' இந்தப்பழமொழியும் சரியாகப் பொருந்துகின்றதா?

'மன்னிக்கவும். உங்களுக்குப் பழமொழிகள் கற்பிப்பதற்காய் நான் இங்கு வரவில்லை. நீங்கள் என்னைச் சிறுமைசெய்வதாய் நான் உணருகின்றேன். என் கேள்விகளுக்கு நீங்கள் விடையளிக்காமல் நான் ஒரு வார்த்தைகூட உங்களுடன் பேசமாட்டேன்.

Cool buddy! You are such a nice gentleman. Relax please.

அது இப்போது ஆங்கிலத்திற்கு மாறியிருந்தது. எனவே என்னுடைய கேள்விகளுக்கு விடைகிடைக்கும் என்கின்ற நம்பிக்கை உண்டானது.

மன்னித்துக் கொள்ளுங்கள் நான் எனது மனநிலையை மாற்றியபோது தமிழ்மொழிச் செயலியை இயக்க மறந்துவிட்டேன். யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதானது எங்கும் காணோம் என்று பாரதியார் சொன்னது எவ்வளவு உண்மை தெரியுமா?

எனககுக் கடுப்பானது. எனது கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் இது என்னை வெறுப்பேற்றுகின்றதோ என்கின்ற ஐயம் உண்டானது.

! ஜாவா பைத்தான் இவையெல்லாவற்றையும் விட ஒரு கணினியான உனக்குத் தமிழ்மொழி இனிமையாக இருக்கின்றதோ?

இப்பாது நான் உங்களுக்கு என்பதிலிருந்து உனக்கு என மாறியது, அதற்கு எனது கோபத்தை உணர்த்தியிருக்க வேண்டும்.

OK. Cool! Let’s come to the point.

'உங்களைக் கொல்வது எங்கள் நோக்கமாக எப்போதுமே இருந்ததில்லை. ஆனால் இங்கே வந்து இவ்வளவு இரகசியங்களையும் தெரிந்த பின்னர் இனி நீங்கள் இங்கிருந்து திரும்பிச் செல்ல முடியாது. உங்களுடனான நேர்முகத் தேர்வின்பின்னர் நாங்கள் உங்களைப்பற்றிய அனைத்து விடயங்களையும் இணையத்தில் அறிந்து கொண்டோம், உங்கள் கூகிள்த் தேடல்கள் உட்பட'
சொல்லிவிட்டு என்னைப் பார்த்துக் கண்ணடித்தது.

உங்கள் மதம் கர்மாவைப்பற்றி என்ன கூறுகின்றது? நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலும் உங்கள் கர்மாவில் பதிவுசெய்யப்படுகின்றது. இல்லையா? அதேபோன்றே இணையத்தில் நீங்கள் பார்த்த/தேடிய  அத்தனை தகவல்களும் பதிவுசெய்யப்படுகின்றன. அந்தத் தரவுகள் அனைத்துமே எங்கள் கைகளில் தவழ்கின்றன.

மொழியியலாளர்கள் பெரும்பாலும் தத்துவவாதிகளாவும்தான் இருந்திருக்கின்றார்கள் என்பது தெரியுமல்லவா? இணையத்தில் நாம் சேகரித்த உன்னைப்பற்றிய தரவுகள் உனது வலைப்பூக்களில் உள்ள உனது பதிவுகள் போன்றவற்றை அலசி ஆராய்ந்தே உன்னை நாம் எம்முடன் இணைத்துக் கொள்ளத் தீர்மானித்தோம். அதன் ஒருகட்டமாகவே உன்னை அந்தக் குரங்குடன் நெருங்கிப்பழக விடத் தீர்மானித்தோம். அந்தவகையில் இதுவரை நடந்தவை அனைத்துமே நாம் நடத்திய நாடகமே.

'அப்ப அந்தக் குரங்கு'

'இந்த நாடகத்தின் சூத்திரதாரியே அந்தக் குரங்குதான் என்று சொன்னால் நீ நம்பவா போகின்றாய்? ஆனால் அதுதான் உண்மை'

'இதை நான் நம்பமாட்டேன். நீ பொய்யுரைக்கின்றாய்'

உன்பின்னால்த் திரும்பிப்பார்.

அந்தக்குரங்கு என்னருகில் வந்து என்னை அணைத்தவாறு நின்றது.

எனக்குத் தலை கிறுகிறுக்கத் தொடங்கியது.

யாரைத்தான் நம்புவதோ?


நன்றி - தாய்வீடு (ஓகஸ்ற்- 2020)

பகுதி -1