Wednesday, June 1, 2011

வேரென நீயிருந்தாய்... (29)

எங்களது இறுதியாண்டு ஆரம்பாகி சில மாதங்கள் சென்று விட்டிருந்த நிலையில், அது நடந்து விட்டிருந்தது. இலக்கை முற்றாக நெருங்கமுடியாமல் தடுக்கப்பட்டவொரு தற்கொடைத் தாக்குதலில் நதீஷாவின் தந்தையும் கொல்லப்பட்டிருந்தார். அக்பரில் சக சிங்கள மாணவர்களின் முகங்களில் விரோதம் கொப்பளிப்பது தெரிந்தது.

“ஜெயந்தன் டேய்! செத்தவீட்டுக்குப் போகப்போறியா?” -வினவினான் தீபன்.

“அதான் யோசிக்கிறன். ஆனா, என்ன செய்யிறதெண்டுதான் தெரியேல்லை.”

“நாலு வருஷமா உன்ரை குறூப்மேற்றா இருக்கிறாளடா. சரியில்லை நீ போகத்தான் வேணும்.”

“என்னெண்டெடா அங்க போறது? அங்க நிக்கிற சிங்கள ஆக்கள் நான் தமிழெண்டிட்டு ஏதும் அலுப்பெடுக்கிறாங்களோ?”

“நீயேன் body எடுக்கும் மட்டும் நிக்கிற? body எடுத்தாப்பிறகுதான் ஏதும் பிரச்சனை தொடங்கிறதெண்டால் தொடங்குவாங்கள். அதுக்கு முதல் போய்ற்று வா”

“என்னெடா?”
செத்த வீட்டிற்குப் போனால் என்ன நடக்குமோ என்கின்ற பயமாயிருந்தாலும் என்னையுமறியாமல் அடிமனதில் அங்கு சென்றேதான் ஆகவேண்டும் என்கின்ற எண்ணம் வியாபித்துக் கொண்டிருந்தது.

“டேய்! நீ போய் அவளின்ர வீட்டில சாப்பிட்டிருக்கிறியடா. சரியில்ல நீ போகத்தான் வேணும்.”

“ஏன் நீயும் தானே சாப்பிட்டனி. அப்ப நீயும் வா.”

“அட பேயா! நான் ஒருக்காத்தான், அதுவும் first year-ல தான். அதெல்லாம் இப்ப அவள் மறந்து போயிருப்பாள்.”

“நான் மட்டும் என்ன கனதரமே போய்ச் சாப்பிட்டனான்?

“நீ கிட்டடியில அவளின்ரை கொப்பரைப் போய்ச் சந்திச்சுக் கதைச்சனிதானே! அப்ப சாப்பிடேல்லையோ?”

“அம்மாண! நல்லா வாயில வருகுது. ஆனா அதுக்குப் பிறகு தான் அவளோட பிசகியாச்சே”

“செத்தவீட்டுக்கு இதெல்லாம் பாக்கக்கூடாது. இப்ப நீ போகப் போறியோ இல்லையோ?”

“அப்ப நீயும் வா! ரெண்டுபேருமாப் போவம்.”

கட்டுகஸ்தோட்டையை அடைந்து அவளது வீட்டை அண்மிக்கையில், வீதியெங்கும் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன.

வீட்டினுள் நுழைந்தோம்!

எங்களைக் கண்டதும்,

“அணே! மகே தாத்தா....”

வீச்செடுத்துக் கதறத் தொடங்கியவள், சில வினாடிகளில் தன்னை சுதாரித்துக் கொண்டு அடங்கினாலும், இடையிடையே விம்மல்கள் வெடித்துக் கொண்டேயிருந்தன. தேற்றுவாரின்றித் தேம்பும் அவளைப் பார்க்க மனதிற்குள் ஏதோ இளகியது. தோளில் சாய்த்து ஆறுதல் சொல்ல வேண்டும் போலிருந்தது. கூடாது! இப்போதுதான் அவள் என்னை விட்டு விலகத் தொடங்கியிருக்கிறாள். அதுதான் இருவருக்கும் நல்லது. அதைக் குளப்பக்கூடாது. அவளிடம் ஆறுதலாக ஏதாவது சொல்லலாம் எனவெழுந்த எண்ணத்தையும் அடக்கிக் கொண்டேன்.

என்னையும், தன் தந்தையின் உடலையும் மாறிமாறிப் பார்த்து ஏதேதோ சொல்லத் துடிப்பதாய்ப் பட்டது. அவள் உணர்வுகள் எனக்குப் புரிந்து விட்டிருந்தது. அவள் என்ன சொல்லத் துடிக்கின்றாள் என்பதும் தெரிந்துவிட்டிருந்தது. அவள் அதைச் சொல்லிவிடக் கூடாது என்று மனத்திற்குள் பிரார்த்திக்கத் தொடங்கினேன்.

******

எங்களின் தொழில்சார் பயிற்சி முடிவடைந்து இறுதியாண்டு வகுப்புக்கள் ஆரம்பித்த முதலாவது கிழமை (வாரம்). ஆய்வுகூடத்தில் இணைந்திருந்தோம்.

“ஜேந்தன்! (அவள் இப்போதெல்லாம் ஜெயந்தனை ஜேந்தன் என்றே சற்றுச் சுருக்கி அழைக்கத் தொடங்கியிருந்தாள்) எப்பிடி training? மூண்டு மாசம்தான்! ஆனா எனக்கெண்டா கனகாலம் போல இருந்திச்சு.”

“ம்... நல்லாப் போச்சுது. உங்களுக்கு எப்பிடி?”

“சரியான boring....ஆ! உங்களிட்ட ஒண்டு சொல்ல வேணும்மெண்டு கனநாளா நினைச்சுக் கொண்டிருந்தனான். அது என்னெண்டு சொல்லுங்க பாப்பம்?”

“என்ன விளையாடுறீங்களா? நீங்க என்ன நினைச்சீங்கெண்டு எனக்கெப்பிடித் தெரியும்?”

“ம் good question, but it is related to you. just guess..."

'அடிச்சுச் சொல்லுறன் கம்பஸ் முடியிறதுக்குள்ள அவள் உன்னட்ட வந்து propose பண்ணுவாள்.' - மனதிற்குள் தீபன் வந்து போனான்



No comments:

Post a Comment