Thursday, November 24, 2011

வேரென நீயிருந்தாய்...(40)

அடுத்தநாள் சனிக்கிழமை மதியச்சாப்பாடு முடிந்ததும் அம்மா ஆரம்பித்தார்.

“தம்பி பின்னேரம் போல ஒருக்கா கண்டி ரவுணுக்குப் போய்ற்று வருவமா?”

ஆச்சரியமாயிருந்தது. இதுநாள் வரையும் கேட்காதவர் இன்றைக்குக் கேட்பது அதிசயமாய்ப் பட்டது.

“OK அம்மா. உங்களுக்கு என்ன வேண்டவேணும்”

“நீ வாவன். நான் அங்கை எனக்குத் தேவையானதிருந்தா பாத்திற்றுச் சொல்லுறன்”.

718 இல் ஏறி கண்டி நகரினை அடைகையில் மாலை ஐந்து மணியாகி விட்டிருந்தது. கடைகளைப் பார்த்தபடியே வந்தவர் திடீரென ஒரு நகைக்கடைக்குள் நுழைந்ததும் அதிசயித்துப் போனேன். என்னாயிற்று அம்மாவுக்கு.. எனக்குத் தெரிந்து முதல்தடவையாக நகைக்கடைக்குள் நுழைகிறாள். நீண்ட தேடுதலின் பின் சங்கிலி ஒன்றைத் தேர்ந்தெடுத்தவள் அதை வாங்கித்தரும்படி என்னிடம் கேட்டதும் நம்மமுடியாமல் திகைத்தேன். அம்மாவும் ஒரு பெண்தானே. நகைகளை வீரும்ஷபாத பெண்களும் இருக்க முடியுமா என்ன? இத்தனை காலமாய் கவலையில் இருந்தவர் இப்போதுதான் சந்தோசத்தை அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறார். அவரின் சந்தோஷத்திற்காகவே கல்யாணம் கட்டிக் கொள்ளலாம். ஒரு மகனாய் நான் அவருக்குத் தரக்கூடிய சந்தோஷம் அதுவாகத்தானிருக்க முடியும்.

மறுநாளும் அம்மாவின் கழுத்து வழமை மாதிரியிருக்கவே ஆச்சரியத்துடன்,

”ஏனம்மா வேண்டின சங்கிலியை இன்னும் போடேல்லை?”

“அட பேய்க்கந்தா! அது நான்போட வேண்டினதில்லையடா?”

“அப்ப?”

“நீ என்ன லூசா? இந்த வயதில இந்தக் கிழவிக்கு சங்கிலி இல்லாதது ஒண்டுதான் குறையெண்டு நினைச்சியா?”

“அப்ப ஆருக்கு வேண்டின்னீங்கள்?”

“அது எனக்கு வரப்போற மருமகளுக்கு.” சொல்லிவிட்டுக் கிண்டலுடன் என்னைப் பார்த்தார். ம்.... தலையிடித்துக் கொண்டேன்.

“என்ன ஒண்டுமே சொல்லாம இருக்கிறாய்?” அம்மா என்னைச் சீண்டத் தொடங்கினார்.

“நீங்களாச்சு உங்கட மருமகளாச்சு. என்னையேன் இதுக்குள்ள இழுக்கிறியள்?”

“உன்னையிழுக்காம இதுக்குள்ள எனக்கு எப்பிடி மருமகள் வருவா?”

விட்டால் இன்றைக்கு முழுவதுமே அம்மா சீண்டிக் கொண்டிருப்பாள் என்றே பட்டது.

“எண்டாலும் அம்பம்மாக்கு வாய்ச்ச மருமகள் மாதிரி உங்களுக்கு வாய்க்குமோ தெரியாது?”

“இருந்துபார். என்ரை மருமகள் உன்ரை கொப்பம்மாவின்ரை மருமகளிலும் விடத் திறமோ இல்லையோ எண்டு” விஷமமாய்ச் சிரித்தாள்.

கடவுளே! அம்மா இவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறதைப் பார்க்க அக்கா இல்லையே. அவள் பார்த்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாள்.

“சரியம்மா. அதையதை அப்பப்ப பார்க்கலாம். இப்ப என்னை விடுங்கோ”.

* * * * *

அடுத்தநாள் காலை வளாகத்திற்குள் நுழைந்தேன்.

“Good morning ஜேந்தன்” ஆச்சரியமாயிருந்தது நதீஷாவின் செயல்.

இத்தனை நாளும் நான் நெருங்கிப்போக நினைக்கையில் விலகிச் சென்றவள் இப்போது தானாய் வலிய வருவது வியப்பையே தந்தது.

“Good morning. நதீஷா. எப்பிடியிருக்கிறீங்க?”

“நான் நல்ல சந்தோஷமா இருக்கிறன். நீங்க எப்பிடி இருக்கிறீங்க?”

“அது உங்கட குரலிலயே தெரியுது. நானும் நல்லாத்தான் இருக்கிறன்.”

“எனக்கு உங்கட help ஒண்டு தேவையாயிருக்கு. செய்வீங்களா?”

“சொல்லுங்க. என்ன செய்ய வேணும்?”

“இல்லை. என்ரை அவருக்கு குடுக்கிறது ஏதாவது things வாங்க வேணும். ஆனா என்ன வேண்டுறது எண்டுதான் தெரியேல்லை. அதுதான் boys-இற்கு என்ன பிடிக்கும் எண்டு உங்களிட்டக் கேக்கிறன்.”

நெஞ்சில நெருஞ்சியால தேய்ச்சது மாதிரி இருந்தது. ம்...விதி. அது எப்பிடியெல்லாம் விளையாடுகிறது? மனசு நொந்தது. அவளைப் பார்த்தேன். அதே விஷமச்சிரிப்பு. ச்சே! என்ன பெண்ணிவள்? இதே இவள்தான் சில மாதங்களுக்கு முன்பு நான்தான் தன்னுடைய வாழ்க்கை என்று வாய்கிழியப் பேசினவள். இண்டைக்குத் தன்ரை புருஷனுக்கு என்ன வாங்கிக் குடுக்கிறது எண்டு என்னட்டையே வந்து கேட்கிறாள்? ஒருவேளை வேண்டுமென்றே என்னைப் பழி வாங்குவதற்காய் வெறுப்பேற்றுகிறாளோ?. மனதுக்குள் பல்வேறு எண்ணங்களும் ஓடலாயிற்று.

நான் மட்டும் திறமா என்ன? இதோ இவளை மனதிற்குள் வைத்து மருகிக் கொண்டு அம்மாவின் சந்தோஷத்திற்காக இன்னொருத்தியை மணம்முடிப்பதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லையா? அல்லது நான்தான் இவளுடன் நேர்மையாகப் பழகியிருக்கின்றேனா? இத்தனை காலமாகியும் இன்னமும் அக்காவைப்பற்றி உருவார்த்தைகூட இவளிடம் சொன்னதில்லையே. கடைசியில் farewell partyயில தண்ணியடிச்சதுக்குத் தான்தான் காரணமெண்டு நினைச்சுத்தானே என்னை விட்டு விலகினவள். பிறகு எப்படி அவளைப்பற்றி இழிவாக நினைக்க முடியும். நான் இப்போது படுகின்ற இதே அவஸ்தைகளைத்தானே இவளும் அப்போது அனுபவித்திருப்பாள். வினை விதைத்தவன் அதை அறுவடை செய்கின்ற காலமிது. அனுபவித்தேயாக வேண்டும். இப்போதுகூட அவள் மனதிற்குள் என்னென்ன அவஸ்தைகளோ? அதை மறைத்துதான் சந்தோஷமாய் இருப்பதாய்க் காட்டிக் கொள்ளத்தான் இப்படியெல்லாம் கேட்கின்றாளோ?. நெஞ்சு கனத்துப் போனது.

* * * * *

நாட்கள் சில கழிந்தன. இப்போதெல்லாம் அம்மா ஆஸ்மாவைப்பற்றிக் கவலைப்படாமல் ஓடியாடித் திரிந்தார். அடிக்கடி என்னைச் சீண்டிக்கொண்டிருப்பதும் இல்லையெனில் யாருடனோ தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருப்பதுமாய் ஒரே சந்தோஷமாக இருந்தார். அவர் தன் உடல்நிலையைப் பற்றிக் கவலைப்படுவதாய்த் தெரியவில்லை. எனக்கென்றால் அவர் பலவீனமாகிக் கொண்டு போவதாய்ப்பட்டது.

அதுவொரு வியாழன் மாலை நேரத்துடன் வீட்டிற்கு வந்திருந்தேன், வீடெல்லாம் தூசி தட்டிப் போட்டு வந்த அம்மாவுக்கு திடீரென வீசிங் தொடங்கியது. இழுப்பு அதிகமாகியது. என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தேன். ஆட்டோவொன்றினைப் பிடித்து அம்மாவை ஏற்றிக்கொண்டு கண்டி பெரியாஸ்பத்திரிக்கு விரைந்தேன். அம்மா Emergency ward- இல் அனுமதிக்கப்பட்டார். என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்துப்போய் நிற்கையில் தொலைபேசி சிணுங்கியது.



No comments:

Post a Comment