Tuesday, November 23, 2010

வேரென நீயிருந்தாய்...(18)

இரத்மலானை விமானப்படைத் தளத்திற்குள் நுழைந்திருந்தோம். முதன்முதலாக வான்வழிப் பயணம். துள்ளிக்குதித்த மனதுக்கு நடைபெற்ற பாதுகாப்புக் கெடுபிடிகளும் சோதனைகளும் பெரிதாகத் தெரியவில்லை. பேரூந்தில் சென்று விமானத்தை அடைந்தோம். வாழ்வில் முதல் தடவையாக ஒரு விமானத்தினை அருகே நின்று கண்களால் பார்க்கின்றேன். Lion Air என்கின்ற பெயருடன் அந்த இயந்திரப்பறவை தன் சிறகை விரித்தவாறே நீட்டி நிமர்த்தி நின்றிருந்தது. வானத்தில் பறந்து செல்கின்ற விமானங்களை அண்ணாந்து பார்க்கின்ற ஒவ்வொரு தடவையும் அவை கீழே விழுந்து நொறுங்காதா என்று ஏக்கங்களே இதுவரை என்னுள் எழுந்திருக்கின்றன. இதுவரைகால எனது வாழ்வில் விமானங்கள், அத்தனையும் போர் விமானங்களே, தந்தவிட்டிருந்த எனது அனுபவங்களே அந்த ஆதங்கத்தை என்னுள் உண்டு பண்ணி விட்டிருந்தன. இப்போது நானே இந்த விமானத்தில் பயணிக்கப் போகின்றேன். இப்போது இந்த விமானம் விழவேண்டும் என்கின்ற ஆதங்கம் உண்டாகுமா? எண்ணிப் பார்க்க சிரிப்பாய் வந்தது. தனக்குத் தனக்கெண்டால் சுளகு படக்குப்படக்கெண்டுமாம் என்று சும்மாவா சொன்னார்கள்? உள்ளே ஏறுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஏணிப்படிகள் வழியே ஏறி இருக்கையில் அமர்ந்து முன்னே வைக்கப்பட்டிருந்த தகவல் குறிப்பின் பிரகாரம் ஆசனப்பட்டியை அணிந்து கொண்டேன். விமானம் தரையில் ஓடி, வேகத்தை அதிகரித்து பின் வேகத்தைக் குறைத்து 180 பாகையில் திரும்பித் தரித்து நின்று உறுமியது. பின் மீண்டும் ஓடவாரம்பித்து வேகத்தைக்கூட்டிக் கூட்டி, சாளரங்களின் வழியே கீழே பார்க்கையில் தரை வழுவிக் கொண்டிருக்க சட்டென அடிவயிற்றில் மேல்நோக்கிய விசையொன்றினை உணர்கையில் விமானம் தன் நாசியினை மேலே உயர்த்தியிருந்தது.

முகில்களைத் துளைத்துச் சென்று கொண்டிருந்தது விமானம். தரையில் மட்டுமல்ல வானிலும் மலைகளும் பள்ளத்தாக்குகளும் உண்டு. ஆயினும் அவை கணப் பொழுதுகளில் மாறிக் கொண்டிருப்பவை. இப்போது என்னால் முகில்களின் இன்னோர் பரிமாணத்தையும் பார்க்கக் கூடியதாகவிருந்தது. பயணங்கள் எங்கள் மனப்பரப்பை விரிக்கின்றன. கீழிருந்து பார்க்கையில் புரியாத அல்லது தெரிந்திராத காட்சிகளையெல்லாம் இப்போது காணக்கூடியதாகவிருந்தது. கண்ணால் காண்பவையெல்லாம் எபப்போதுமே உண்மையல்ல என்பது புரிந்தது. இலங்கையின் மேற்குக்கரை வழியே பயணிக்கும் விமானத்தினூடாக இலங்கைத்தீவின் கரையோர நெழிவு சுழிவுகளைப் பார்ப்பது ரம்மியமாயிருந்தது. புத்தளம் தாண்டி மன்னாரை அண்மிக்கையில் இராமர் அணை எனச் சொல்லப்படும் மணல் திட்டுக்கள் இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான பாக்கு நீரிணையில் மிகத் தெளிவாகத் தெரிந்தன. ஏறத்தாழ ஒருவருடத்தின் பின் தாயக மண்ணில் கால் பதிக்கப் போவதான உணர்வே நெஞ்சுக்குள் பரவசத்தை ஏற்படுத்தியது. விமானம் தாழப்பதிந்து கடலின் மேல் அரைவட்டமடித்துப் பின் பலாலி விமான தளத்திற்குள் இறங்கத் தொடங்கியது.

யாழ்நகரினை பேரூந்தில் வந்தடைந்து பின் முச்சக்கர வண்டியில் வீட்டினை அடைகையில் அம்மா வாசலில் நின்றிருந்தார். அவர் மிகவும் இளைத்திருந்ததாய்த் தெரிந்தது. ஓட்டோவிலிருந்து இறங்கியதும் கட்டிணயைத்து முத்தமிட்டவர்,
“என்னடா நல்லா வயக்கெட்டுப் போனாய். சாப்பாடு ஒத்து வரேல்லையா?”

சிரிப்பாய் வந்தது. இங்கிருந்து போகையில் 28 ஆயிருந்த இடுப்பளவு இப்போது 30 ஆகியிருந்தது. எல்லா அம்மாமாருக்குமே தங்கள் பிள்ளைகள் தங்களை விட்டு விலகியிருக்கையில் உணவிற்கு என்ன செய்கின்றார்களோ? எப்படிச் சமாளிக்கின்றார்களோ என்கின்ற ஏக்கங்கள் இருக்கத்தானே செய்கின்றன. தாயோடு அறுசுவை போம் என்று சும்மாவா சொன்னார்கள்?

நாட்கள் வேகமாக ஓடின. 1998 செப்டம்பர் 26. தியாகி திலீபனின் பதினோராவது நினைவு தினத்தையொட்டி யாழ்நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அன்றைய தினம் சனிக்கிழமையாதலால் வெளியே செல்லவேண்டிய தேவையேதும் இருக்கவில்லை. அன்றைய தினமும் அமைதியாகவே கழிந்திருந்தது. மறுநாள் மதியமளவில் அந்தச் சேதி பரவத் தொடங்கியிருந்தது. அதை உர்ஜிதம் செய்யுமாற்போல் அம்புலன்ஸ் வண்டிகள் அபாய சமிக்ஞைகளை அலற விட்டவாறே கண்டி ஏ9 வீதிவழியே வந்து பலாலியை நோக்கி விரைந்து கொண்டிருந்தன. கிளிநொச்சியில் கடும் சண்டை நடைபெறத்தொடங்கியிருந்தது. வெற்றிநிச்சயம் என்று சொல்லி வவுனியாவிலிருந்து புறப்பட்ட சிங்களப்படை புளியங்குளத்தில் முக்கி முனகி மாங்குளத்திற்கு அண்மையில் திணறித் தத்தளித்துக் கொண்டிருந்தாலும் மாங்குளத்தை ஏலவே கைப்பற்றி விட்டதாக இராணுவம் அறிவித்து விட்டிருந்தது. விரைவில் கிளிநொச்சியிலிருந்து கண்டிக்கு தரைவழிப் பாதையைத் திறந்துவிடப்போவதாக ஜெனரல் அனுருத்த ரத்வத்த அவர்கள் சூழுரைத்திருந்தார்கள். ஆகையினால் மாங்குளத்தில் போக்குக் காட்டிவிட்டு இப்போது கிளிநொச்சியிலிருந்து முன்னேறத் தொடங்கியிருக்கின்றது சிறிலங்காப்படைகள் என்றே ஆரம்பத்தில் எல்லோரும் பேசிக் கொண்டனர். ஆயினும் அன்றைய இரவிற்குள்ளேயே இயக்கம்தான் கிளிநொச்சியைப்பிடிப்பதற்கான சண்டையைத் தொடங்கியிருப்பதாக வானொலியூடாக அறியக் கிடைத்திருந்தது. அம்மா அந்தரிக்கத் தொடங்கியிருந்தார். ஆண்டவனிடம் அக்காவையும் அவளைச் சேர்ந்தவர்களையும் காப்பாற்றுமாறு பிரார்த்தித்தபடியே இருந்தார். Welcome party-யில் நடந்த சம்பவத்தின் பின்னர் மானசீகமாய் அக்கா என்னிடம் வருவது நின்று போயிருந்தது.

கடவுள் இருக்கு இல்லை என்கின்ற விவாதம் எனக்கு இப்போதைய நிலையில் அர்த்தமற்றதாய்ப் பட்டது. எனக்கு என்னுடைய அக்கா வேண்டும். எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் கை தானாகவே கூப்பியது. திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை என்பார்கள். அதன் பொய்மெய்களுக்கப்பால் அதை நம்பிப் பிரார்த்திப்பதே இப்போதைக்கு நெஞ்சுக்கு நிம்மதி தரக்கூடிதொன்றாக இருந்தது. மறுநாள் கிளிநொச்சி வெற்றிகொள்ளப்பட்ட சேதி களிப்பினைத் தந்தாலும் அக்காவின் நிலைமை தெரியாமல் நானும் அம்மாவும் கலங்கிக் கொண்டிருந்தோம்.

அடுத்தநாள் 29 செப்ரம்பர் 1998 திங்கட்கிழமை. இப்படியே அம்மாவை விட்டுவிட்டு வெளியே செல்ல ஒருமாதிரி இருந்ததால் நானும் Training site -இற்குப் போகவில்லை மாலை நெருங்குகையில் தீபன் வந்தான்.
“மச்சான் மத்தியானம் வெளிக்கிட்ட lion-air plane -ஐக் காணேல்லையாமடாப்பா”

“என்னடா சொல்லுற?”

“ஓமடாப்பா! செக்கண்ட் பிளைற் சனம்தான் அதில போனதுகள். ஆரும் தெரிஞ்ச ஆக்களும் போச்சினமோ எண்டும் தெரியேல்லை”

அடுத்தநாள் தினசரிகள் 48 பயணிகள் உட்டபட 54 பேர் விமானத்துடன் காணமல்போன செய்திகளை உறுதிப்படுத்தியிருந்தன. அதன்பின்னர் யாழ்-கொழும்பு விமான சேவைகள் காலவரையறையின்றி

நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் யாழ் திருமலை கப்பல் பயணமும் இடைநிறுத்தப்பட மக்களுக்கான வெளியிடப் போக்குவரத்துத் தொடர்பாடல்கள் துண்டிக்கப்பட்டன.


பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17

3 comments:

  1. நம் வாழ்வில் நிகழ்ந்த யதார்த்தமான சம்பவங்களின் தொகுப்பு தொடராக! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. //Welcome party-யில் நடந்த சம்பவத்தின் பின்னர் மானசீகமாய் அக்கா என்னிடம் வருவது நின்று போயிருந்தது.//
    எப்படி இது?
    தண்ணி அடிக்கிறத்துக்காக, ”ஜேன்” தான் கூப்பிடாமல் விட்டிருக்கோணும்...


    //இங்கிருந்து போகையில் 28 ஆயிருந்த இடுப்பளவு இப்போது 30 ஆகியிருந்தது//

    இது நதீஷா வீட்டு “ பத்” செய்த வேலை.

    //சட்டென அடிவயிற்றில் மேல்நோக்கிய விசையொன்றினை உணர்கையில் விமானம் தன் நாசியினை மேலே உயர்த்தியிருந்தது//

    அழகான வசனம்.பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.

    keep it up.

    ReplyDelete
  3. “மச்சான் மத்தியானம் வெளிக்கிட்ட lion-air plane -ஐக் காணேல்லையாமடாப்பா”

    “என்னடா சொல்லுற?”

    “ஓமடாப்பா! செக்கண்ட் பிளைற் சனம்தான் அதில போனதுகள். ஆரும் தெரிஞ்ச ஆக்களும் போச்சினமோ எண்டும் தெரியேல்லை”

    " ஜயோ என்ர நதிஷா........?????? "

    ReplyDelete