Sunday, November 27, 2011

வேரென நீயிருந்தாய்...(45)

“Sorry நதிஷா! I'm extremely sorry. என்னால என்னைக் control பண்ண முடியேல. அதுதான் உங்கட தோளில சாஞ்சிற்றன். என்னை மன்னிச்சுக் கொள்ளுங்க. இது நான் வேணுமெண்டு செய்யேல்ல. என்னை அறியாம நடந்திற்றுது.”

“It's OK. அதுக்கேன் கவலைப்படுறீங்க?”

“இல்லை உங்களுக்கு ஏற்கனவே wedding fix பண்ணியாச்சு. இந்த நேரத்தில நான் வந்து உங்களோட இப்பிடிச் செய்தது. தப்பு”

“அப்ப எனக்கு wedding fix பண்யேல்லையெண்டா இப்பிடிப் பழகியிருப்பீங்களா?”

“ம்... அதுக்கெல்லாம் நான் குடுத்து வைக்கேல்ல”

“நீங்க என்ன சொல்லுறீங்க?”

“சரி அதையெல்லாம் விடுங்க. முடிஞசு போனதுகளைப் பற்றிக் கதைச்சு இனி என்ன பிரயோசனம்?”

“ஜேந்தன் என்ரை கண்ணைப் பார்த்துக் கதையுங்க. உண்மையைச் சொல்லுங்க நீங்க எதையோ என்னட்டை இருந்து மறைக்கிறீங்க.”

“வேண்டாம். அதெல்லாம் காலம் கடந்து போய்ச்சு. நான் பேயன் இப்ப வந்து அதுகளைக் கிளறிக்கொண்டு”

“இப்ப எந்த இடத்தில நிக்கிறம் எண்டு தெரியும் தானே. please இப்பவாவது உண்மையைச் சொல்லுங்க ஜேந்தன்.”

“நா...நான் உங்... உங்க....உங்களை ல..ல.. லவ் பண்ணுறன்”

“ஓ! அதென்ன ல..ல..லவ்? அப்பிடியெண்டா என்ன?” புன்னகைத்தாள்

“இதுக்குத்தான் நான் வேண்டாமெண்டு சொன்னான். இப்ப ஒண்டுமே விளங்காதமாதிரி நடிக்கிறீங்க. சரி விடுங்க. அதெல்லாம் இனிச் சரி வராது.”

“ஏன் ஜேந்தன் அப்பிடிச் சொல்லுறீங்க?”

“இல்லை உங்களுக்குத்தான் ஏற்கனவே wedding fix ஆகிற்றுதே”

“ஓம்! அதுக்கென்ன?”

“அதுக்கென்னவா? இந்த நேரத்தில வந்து என்ரை லவ்வை உங்களிட்டைச் சொல்லுறனே. எவ்வளவு Cheap-ஆ உங்களோட நடந்து கொள்ளுறன்”

“ஓ! நீங்க என்ன லவ் பண்ணுறீங்களா? எப்ப தொடக்கம்?”

“farewell party யிலயிருந்து”

“அப்பையேன் என்னட்டைச் சொல்லேல்ல”

“எப்பிடிச் சொல்லுறது? அக்காவைப் பற்றி நான் உங்களிட்டை ஒண்டுமே சொல்லயில்லை. பிறகு அக்காவைப்பற்றித் தெரிய வரேக்கை எங்களுக்குள்ள பிரச்சனை வந்து பெரிசாகி பிறகு அதால பிரியிறதிலும் விட முதலிலயே பிரியிறது நல்லதுதானே.”

“அப்ப இப்ப மட்டும் பிரச்சினையில்லையோ?”

“இல்லை இப்பத்தான் அக்காவைப்பற்றி உங்களுக்கு எல்லாம் தெரியுமே! இதைவிட உங்களுக்கு நான் எதையுமே மறைக்கேல்லை. பிறகு எதுக்கு நான் பயப்பிட வேணும்?”

“ஆனா எனக்குத்தான் wedding fix ஆகிற்றுதே. அப்ப அது உங்களுக்குப் பிரச்சினையாத் தெரியேல்லையா? இல்லாட்டி நான் சிங்களம் நீங்க தமிழ் எண்டது உங்களுக்குப் பிரச்சினையாத் தெரியேல்லையா?”

“Please நதிஷா! என்னை torture பண்ணாதீங்க. ஏதோ நீங்க கேட்ட வேகத்தில நான் உண்மையைச் சொல்லிப் போட்டன். எல்லாத்தையும் மறந்திற்று வாங்க. நாங்க போவம். நீங்க இனியும் என்னோட இருக்கிறது நல்லதில்ல.”

“ஓ! என்னை வேறையேதும் செய்யிற ஐடியாவும் ஐயாக்கு இருக்குது போல?”

என்ன இவள். இப்பிடிக் கதைக்கிறாள்?

“நதிஷா please. என்னிலதான் எல்லாப் பிழையும். இனி நீங்க வேறை ஒருத்தருக்கு wife-ஆகப் போறனீங்க. please வாங்க போவம்”.

”ஓ! அப்ப நான் வேறையாருக்கோ wife-ஆகப் போறன் எண்டதுதான் இப்ப உங்கட பிரச்சினையா?”

தலையசைத்தேன்.

“அப்ப அந்த வேறையாரோவா நீங்க ஏன் இருக்கக்கூடாது?”

“என்ன கதை கதைக்கிறீங்க நீங்க? உங்களுக்குத்தான் ஏற்கனவே வேறைஒராளோட wedding fix ஆகீற்றுதே”

“ஓம்!. அதுதான். நீங்க ஏன் அந்த வேறை ஆரோவோ இருக்கக்கூடாது?”

“சும்மா விசர்க்கதை கதைக்காதீங்க. அவரின்ரை அம்மாக்கெல்லாம் உங்களில சரியான விருப்பம். ஒவ்வொரு நாளும் உங்களோட phone-இலயெல்லாம் கதைக்கிறவா எண்டுவீங்க? எப்பிடி அவாவுக்கெல்லாம் துரோகம் செய்யேலும். சும்மா மனசை அலைய விடாம வாங்க போவம்.”

“அந்த அம்மாவுக்கு நான் ஏன் துரோகம் செய்யப் போறன்?”

“என்ன நீங்க? எல்லாம் விளங்கித்தான் கதைக்கிறீங்களா?”

“நான் எல்லாம் விளங்கித்தான் கதைக்கிறன். நீங்கதான் எதுவுமே விளங்காமக் கதைக்கிறீங்க.” சிரித்தாள்.

“சும்மா குழப்பாம வாங்க போவம்”

“அப்ப சரி இந்தாங்க இந்தப் parcel-ஐப் பிரிச்சுப் பாருங்க எல்லாம் விளங்கும்”



பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44

வேரென நீயிருந்தாய்...(44)

வவுனியாவ வவுனியாவ வவுனியாவ....

தூக்கம் கலைந்து எழுந்தேன். சிற்றூர்தி நடத்துநர் பயணிகளை அழைத்துக் கொண்டிருந்தார். ஜன்னலுக்குள்ளால் வெளியே தெரிந்த கடைகளின் பெயர்ப்பலகைகளைப் பார்த்தேன். அட அதற்குள் மதவாச்சி வந்துவிட்டிருந்தது. bus ticket எடுக்காதது ஞாபகத்திற்கு வரவே purse-இனை எடுத்தேன்.

“ஜேந்தன்! ரிக்கற் நான் எடுத்திற்றன்”

அட! நதிஷாவும் சிற்றூர்திக்குள் இருப்பது ஞாபகத்திற்கு வந்து திரும்பினேன். முறுவலித்தாள்.

“நீங்க எங்க வாறீங்க? ஏன் நீங்க எடுத்தனீங்க?”

“Conductor ரிக்கற் எடுக்கச் சொல்லேக்குள்ள பார்த்தன். நீங்க நல்ல நித்திரை. அதுதான் நான் எடுத்தனான். பிடிக்காட்டி ரிக்கற் காசைத் தாங்கோ. ஆனா இப்ப எடுக்கிற படியால double price. OK- யா?”

சிரி்த்தாள்.

“OK OK. அப்ப நீங்க இண்டைக்கு faculty-க்குப் போகேல்லையா? நீங்க எங்க பயணம்?”

“நான் இப்ப faculty-க்குத்தான் போய்க்கொண்டிருக்கிறன். bus பெராவுக்குத்தானே போய்க்கொண்டிருக்கு. கேக்கிற கேள்வியைப் பாரன். ரிக்கற்றும் எடுக்காம நாலுமணித்தியாலமா நல்லா நித்திரை அடிச்சிற்றுக் கேக்கிறார் கேள்வி”.

சிற்றூர்தி புறப்பட்டது.

“நீங்க தனியா திரும்பி வவுனியாவிலயிருந்து கண்டிக்குப் போவீங்களா?”

“இல்லை எனக்குப் பயம். நீங்க திரும்பிக் கொண்டுபோய் விடுறீங்களா?”

“ஏன் என்னால உங்களுக்கு தேவையில்லாத கஷ்ரம்?”

“அப்ப என்னையும் உங்களோட ஊருக்குக் கூட்டிக் கொண்டு போங்கோ. நானும் இதுசரைக்கும் யாழ்ப்பாணத்தைப் பார்த்ததில்லை. இந்தச் சாட்டோட பார்த்திற்று வருவம்”.

அவள் என்னைக் கிண்டலடிக்கிறாள் என்பது புரிந்தது.

“நீங்க வருவீங்க எண்டா நான் கூட்டிக்கொண்டு போறன்.”

“உங்களால ஏலாது ஜேந்தன். எதுக்குச் சும்மா எல்லாம் கதைக்கிறீங்க?”

“நீங்க வருவீங்க எண்டால் என்னால ஏலும்”

“சலன்ஞ்?”

“சலன்ஞ்!”

சிற்றூர்தி வவுனியாவை அடைந்தது. கீழே இறங்கினோம்.

“Thanks நதஸஷா. இவ்வளவு தூரம் என்னோட வந்ததுக்கு. I'm extremely sorry, நான் நிததிரை கொண்ட படியாலதானே நீங்க வவுனியாவுக்கு வரவேண்டி வந்தது. 11.30 க்கு கண்டி bus இருக்கு. நான் நிண்டு உங்களை ஏத்தி விட்டிட்டு யாழ்ப்பாணத்திற்கு வெளிக்கிடுகிறன்.

“என்ன விளையாடுறீங்களா? அப்ப வரேக்குள்ள பண்ணின சலன்ஞ்?”

“அது சும்மா பகிடிக்கெண்டு உங்களுக்கும் தெரியும். வாங்க போய்ச் சாப்பிட்டிட்டு வருவம். நீங்க கண்டி bus ஏறினாப்பிறகு நான் ஓமந்தை bus எடுக்கிறன்.”

“வாங்க முதலில போய்ச் சாப்பிடுவம்.”

ஓமந்தை ஓமந்தை.. அண்ணே வாங்கோ ஓட்டோவில போவம்..”

முச்சக்கரவண்டிக்காரர்களை விலத்திக்கொண்டு அருகிலிருந்த prince உணவகத்திற்குள் நுழைந்தோம்.

“சரி நதிஷா. அப்ப இனி நீங்க வெளிக்கிடுங்க.”

“அவள் என்னை விலத்தி விடு்டு ஓமந்தை செல்லும் பேருந்திற்குள் ஏறி அமர்ந்து கொண்டாள்.

“நதிஷா விளையாடுறீங்களா? இறங்குங்க.”

“ஏன் இறங்க வேணும்?”

“நீங்க எங்கை வாறீங்க? இறங்கிக கண்டிக்குப் போங்க.”

“நான் எங்க போகவேணுமெண்டுறதைச் சொல்லுறதுக்கு நீங்க ஆரு? என்னைத் தொட்டுத் தாலி கட்டின்னீங்களா?”

அவளிடமிருந்து இதைநான் எதிர்பார்க்கவில்லை. சும்மா என்னுடன் விளையாடுகிறாள் என்நே நான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது அவளது முகத்தைப் பார்க்கையில் அவள் இதில் தீவிரமாயிருப்பது புரிந்தது. ஐயோ கடவுளே! தலையிலடித்துக் கொண்டேன். இவளை என்ன செய்வது? இவள் என்னுடன் வரவேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் என் மனம் ஏங்கியிருந்தது. ஆனால் இப்போது அவள் என்னுடன் வரப் போகின்றாள் என்று தெரிந்ததும், அதன் பின்னான விளைவுகளை நினைத்துப் பயம் வருகின்றது. இந்த மனித மனமே இப்படித்தானே. அதற்கு வேறுவேலை கிடையாது. சும்மா இருக்காமல் கண்டதையும் நினைத்து கற்பனையில் தவிக்கிறது. ஆனால் நிஜவாழ்க்கையில் அதை எதிர்கொள்ள அஞ்சிப் பின்வாங்குகின்றது. சரிவராது என்று தெரிந்தும், அது கிடைக்காது என்று தெரிந்தும் அதற்கா அவாஞ்சைப்படும் மனது அது கிடைக்கும் என்றவுடன் எதிர்மறையான சிந்தனையில் இறங்கிவிடுகிறது. பெரும்பாலான காதல்கள் கல்யாணத்தின் பின் கசந்துபோவதும் அதனால் தானே. காதலிக்கும் வரைக்கும் இருக்கும் சந்டதோஷம் கல்யாணம் நடந்தவுடன் வரும் பொறுப்பினால் (responcible) கசந்து விடுகிறது. எங்களில் பெரும்பாலோரும் சந்தோஷத்தைத்தான் எதிர்பார்க்கின்றோமேயன்றி responcible-இனை ஏற்றுக் கொள்வதில் தயங்கித்தானே நிற்கின்றோம் அதனால்தானே நான் அக்காவின் பாதையை விட்டுவிட்டு படிக்க வந்தேன்.

பலரும் எங்களை வித்தியாசமாய்ப் பார்ப்பதைக் கவனித்து விட்டு அமைதியானேன்.

“கோபமா ஜேந்தன்? நானும் யாழ்ப்பாணம் தான் வாறன். உங்களுக்கு எந்த disturbance-ம் என்னால வராது. நான் அங்க தங்கிறதுக்கு என்ரை uncle ஒழுங்கு செய்வேர். அவர் யாழ்ப்பாணத்திலதான் இப்ப duty-ல இருக்கிறேர்.”

“அப்பையேன் இதை முதலிலயே சொல்லேல்ல?”

“சும்மா உங்களுக்கு ஒரு surprise ஆ இருக்கட்டும் எண்டுதான்.”

“OK. OK”

“உங்களுக்கு இன்னும் என்னில கோபம் போகையில்லப் போல. உண்மையைச் சொல்லுங்க”

“இல்லை நான் ஏன் உங்களில கோபப்படப்போறன். உங்களில கோபப்பட எனக்கு என்ன உரிமையிருக்கு?”

அவளுக்கு நான் கோபப்படுவது புரிந்தது.

“ஜேந்தன் எனக்காக ஒரேயொரு help மட்டும் செய்வீங்களா. please. அதுக்குப்பிறகு நான் உங்களை எந்தவிதத்திலும் disturb பண்ண மாட்டன். promise.ஆ. உங்களை விட்டா எனக்கு இஞ்ச வேறைஒருத்தரையும் தெரயாது.”

“சரி என்னெண்டு சொல்லுங்க.”

“நான் ஒருக்கா கிளிநொசச்சிக்கும் போகவேணும். என்னோட நீங்களும் வரவேணும்.”

மனதிற்குள் உதறல் எடுத்தது. இவள் எதற்காகவோ என்னைப் பயன்படுத்தப் போகிறாள். அவள் எதறகாகக் கிளிநொச்சிக்குச் செல்லவேண்டும்? இவள் அண்ணியின் அண்ணாவும் கிளிநொச்சியில் தானே கொல்லப்பட்டார். ஒருவேளை அது சம்பந்தமாக கிளிநொச்சியில் ஏதாவது பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடப் போகின்றாளா? அல்லது அவர் கொல்லப்பட்ட இடத்திற்குச் சென்று பார்க்க விரும்புகின்றாளா? அல்லது ஒருவேளை இவளிடம் கிளிநொச்சி பற்றிய ஏதேனும் இரகசியங்கள் இருக்கக் கூடுமோ? அப்படியானால், என்னைப் பகடைக்காயாக்கத்தான் என்னுடன் நெருங்கிப்பழகி இப்போது இங்கே ஓமந்தைவரை வந்திருக்கிறாள்.

என் முகமாறுதல்களை அவதானித்தவள்,

“Please ஜேந்தன். என்னில உங்களுக்கு நம்பிக்கையில்லையா. நீங்க ஒண்டும் செய்ய வேண்டாம். என்னோட துணைக்கு மட்டும் வாங்க. please எனக்காக இதைமட்டும் செய்யுங்க. அதுக்குப்பிறகு நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறன்”.

அரைமனதாய்த் தலையாட்டினேன்.

ஓமந்தை சிறிலங்கா இராணுவச் சோதனைச் சாவடியில் பிரிந்து பின் மீண்டும் சேர்ந்து இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்தோம். அங்கே பயணிப்பதற்கான விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக் கொண்டு மீண்டும் வேறொரு பேரூந்தில் ஏறி புளியங்குளத்தை அடைந்தோம். எனக்கான சோதனைகள் யாவும் முடிவடைந்து வெளியே வந்து அவளுக்காகக் காத்திருக்கத் தொடங்கினேன். நீண்ட நேரமாகியும் வரக் காணோம். அவளுக்கு ஏதும் பிரச்சனையோ? அல்லது அவள் பிரச்சனைக்குரியவள் என்று அவர்கள் கண்டறிந்திருப்பார்களோ? நெஞ்சு பதைபதைக்கத் தொடங்கியது.

மேலும் பதினைந்து நிமிடம் கழித்து அவளுடன் இரண்டு பெண் இயக்க உறுப்பினர்களும் என்னை நோக்கி வந்தார்கள். நெஞ்சுக்குள் திக்திக் என்றது. நெருங்கி வந்தவர்கள் என்னைப்பார்த்துப் புன்னகைத்தார்கள்.

“வாங்க எங்களோட” அழைத்தார்கள்.

எதுவும் புரியாமல் அவர்களைப் பின் தொடர்ந்தேன். சற்றுத்தூரம் நடந்து சென்று van ஒன்றில் ஏறினார்கள். என்னையும் ஏறச் சொன்னார்கள். எங்களுக்கிடையில் கனத்த மௌனம். யாரும் எதுவும் பேசவில்லை. சிலமணி நேரங்களின் பின் van கிளிநொச்சியை அடைந்து விட்டிருப்பது தெரிந்தது. சற்றுநேரம் கழித்து van A9 நெடுஞசாலையினின்றும் விலத்தி ஓடத் தொடங்கியது. எங்கே சென்று கொண்டிருக்கின்றோம். எதுவும் புரிபடவில்லை. கற்று நேரத்தின் பின் van-இன் வேகம் குறைவதை உயர்ந்தேன்.

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்

இவள் எதற்காக இங்கே வந்தாள்? ஆச்சரியமாயிருந்தது. என்னை van இல் இருக்கச்சொல்லிவிட்டு அவளும் ஒரு இயக்க உறுப்பினரும் உள்ளே நுழைந்தார்கள். சற்று நேரத்தின் பின் என்னையும் உள்ளே அழைத்தார்கள். வியப்புடன் உள்ளே சென்றோம். எங்களை அழைத்துக் கொண்டே துயிலமில்லத்தினூடாக நடக்கத்தொடங்கினார்கள். ஒரு இடம் வந்ததும். நதிஷாவிடம் ஏதோ சொல்லிவிட்டு அவர்கள் வெளியேற நதிஷா என்னருகே வந்தாள்.

“Please என்னோட வாங்க ஜேந்தன்”

எதுவுமே புரியாமல் அவள் அருகில் சென்றேன்.

“என் இடது கையினைத் தன் வலது கரத்தினால் பிடித்துக் கொண்டவள்,

“Please கண்ணை மூடிக்கொண்டு என்னோட வாங்க. நான் சொல்லும் மட்டும் கண்ணைத் திறக்காதீங்க please...."

அந்த சூழ்நிலை மனதினுள் ஏற்படுத்திய தாக்கம் அவள் வேண்டுகோள்களையெல்லாம் மறுப்பின்றி ஏற்கச் செய்தது.

“அப்பிடியே கீழ இருங்க. நான் சொலு்லும் மட்டும் கண்ணைத் திறக்காதீங்க. please"

அப்படியே கண்மூடியிருந்தேன். சிறிது நேரத்தின் பின்,

“சரி இப்ப கண்ணைத் திறவுங்க”

திறந்தேன். அதிர்ந்தேன்.

அது போர்க்கள உடையில் அர்த்தநாரீஸ்வர். தாயக விடுதலைக்காய்த் தங்களையே ஆகுதியாக்கிய தியாகங்களுக்காய், அவர்களிலும் முகம்காட்ட முடியா வீரமறவர்கள் நினைவாக எழுப்பப்பட்டிருந்த கல்லறை. நெஞ்சுக்குள் ஏதோ செய்தது. கீழே மலர்க்கொத்துக்கள் வைக்கப்பட்டிருக்க நதிஷா அஞசலி செலுத்திக்கொண்டிருந்தாள்.

அப்படியானால்....... இவளுக்கு அக்காவைப் பற்றித் தெரியுமா?

அதிர்ந்தேன். இத்தனை நாட்களாய் அதை ஏன் காட்டிக் கொள்ளாமல் இருந்தாள். தன் அஞ்சலியைச் செலுத்தி முடித்தவள்,

“ஜேந்தன்! நீங்க உங்கட அக்காவிற்கு எதுவும் செய்யேலாம இருந்திருப்பீங்க. இதிலயிருந்து ஒருபிடி மண் எடுத்துக்கொண்டு வாங்க. அம்மாவின்ரை அந்திரெட்டியோட சேர்த்து அக்காவுக்கும் கிரியைகளைச் செய்வம்”

அடிவயிற்றிலிருந்து உருண்டையொன்று பேரலயைாய் எழுந்து வந்து தொண்டைக்குழியை அடைத்தது.

“அக்க்கா....................”

விம்மியழத் தொடங்கினேன்.

“காணும் ஜேந்தன் இனி அழாதீங்க!”

இன்னவென்று சொல்லமுடியாத உணர்வுகள் அலையலையாய் உள்ளத்திற்குள் எழுந்தன. கண்கள் வெடித்துச் சிதறுமாற்போல் கண்ணீர் பொங்கியெழுந்து வழிந்தது. நதிஷா என் கைகயுடன் தன் கரங்களைக் கோர்த்து இறுகப்பற்றினாள். என்னிலை இழந்து தேம்பியழத் தொடங்கினேன். நதீஷா என்னை இழுத்து தன் மார்புடன் அணைத்துக் கொண்டாள்.

“அம்மா...................”

அவள் தோளில் தலைபுதைத்துக் கொண்டேன். இப்போது அவள் எனக்கு தேவதையாய், தேவியாய், நண்பியாய் அக்காவாய், அம்மாவாய் எல்லாமாய், யாதுமாகி நின்றாள்.




பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43

Saturday, November 26, 2011

வேரென நீயிருந்தாய்...(43)

மறுநாள் மதிய உணவுக்காகக் கிளம்புகையில்,

“ஜேந்தன்! உங்களுக்கும் ஒரு lunch parcel கொண்டு வந்தனான். இந்தங்க இதைச் சாப்பிடுங்க. please”

'please நதிஷா! என்னை விடுங்க. நான் கடையிலயே சாப்பிடுறன்”

“ஏன்? என்னில நம்பிக்கையில்லையா? நஞ்சு கலந்து தந்திருவன் எண்டு பயப்பிடுறீங்களா?”

“நதீஷா please! சொன்னா விளங்கிக் கொள்ளுங்க. இதெல்லாம் பிறகு உங்கட life-ஐத்தான் affect பண்ணும். நான் இப்ப OK."

“நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்க. உங்களுக்கு என்னில நம்பிக்கையில்லையா? நான் உங்களுக்குக் கூடாதது செய்வன் எண்டா நினைக்கிறீங்க?”

“என்ன நீங்க கதைக்கிறீங்க? நான் எப்பையாவது அப்பிடிச் சொல்லியிருக்கிறனா? நீங்க எனக்கு எவ்வளவு help செய்திருக்கிறீங்க. நீங்க இல்லாட்டி அம்மாவின்ரை செத்தவீட்டில சரியாக் கஷ்ரப்பட்டிருப்பம். நீங்க நல்லனீங்க. கல்யாணம் கட்டப் போறனீங்க. இந்த நேரத்தில நீங்க என்னோட இப்பிடிப் பழகிறது நல்லதில்லை.”

சிரித்தாள். “அப்பிடியெண்டு ஆரு சொன்னது?”

“நான் தான் சொல்லுறன்.”

“ஏன் உங்களுக்கு என்னோட இப்பிடிப் பழகிறதுக்குப் பயமாயிருக்கா?”

“ஏன்? நான் என்னத்துக்குப் பயப்பிடவேணும்”

“இல்லை. என்னில லவ் வந்திரும் எண்டு பயப்பிடுறீங்களோ எண்டு நினைச்சன்.”

அதிர்ந்தேன்.

“என்ன நீங்க? என்ன கதைக்கிறீங்க? உங்களுக்கெல்லா wedding fix பண்ணியிருக்கு. பிறகு என்னைப் போய் இப்பிடிச் cheap-ஆ நினைக்கிறீங்களே”

“ம்ம்ம்.. sorry sorry. சும்மா joke-இற்குத்தான் அப்பிடிச் சொன்னன். அப்பிடியாவது நீங்க சிரிக்கிறீங்களா எண்டு பாப்பம் எண்டுதான். உங்களுக்கு lunch கொண்டுவாறதால எனக்கொண்டும் பிரச்சினையில்லை. நீங்க அதை வடிவா நம்பலாம். உங்களுக்கு என்னிலையும் உங்களிலையும் நம்பிக்கையிருக்கெண்டால் இப்ப சாப்பிட வாங்க இல்லாட்டிப் போய் எங்கையெண்டாலும் கடையில சாப்பிடுங்க. போங்க"

அவள் விலகிச் சிற்றுண்டிச்சாலையை நோக்கிநகர நானும் பின் தொடர்ந்தேன்.

நாட்கள் நகர்ந்தன. இப்போதெல்லாம் யாழ்ப்பாணத்திற்கான யாழ்-கண்டி A9 நெடுஞ்சாலை திறக்கப்பட்டு பகல் வேளைகளில் போக்குவரத்து சீரா நடைபெற்றுக் கொண்டிருந்ததால், அம்மாவின் அஸ்தியை வேலணை சாட்டிக் கடற்கரையில் கரைப்பதற்குத் தீர்மானித்தேன். தீபனால் வர இயலாமல் இருப்பதால். நான் மட்டுமே தனித்துப் பயணாமாவதெனத் தீர்மானித்திருந்தேன். பயணிப்பதற்கு இரு தினங்களே இருக்கையில்,

“ஜேந்தன்! அம்மாவின்ரை முப்பத்தொண்டு நீங்க உங்கட ஊரிலயா செய்யப் போறீங்க?”

வியப்பாயிருந்தது. இவளுக்கு எப்படி இத்தனை விபரங்களும் தெரிந்திருக்கும்.

“ஓம்! அப்பிடித்தான் யோசிச்சிருக்கிறன்.”

“நல்லது ஜேந்தன். உங்கட அம்மாவுக்கும் அதுதான் விருப்பம்”

“என்ன சொல்லுறீங்க”?

”இல்லை. எல்லாருக்கும் தாங்க தாங்க பிறந்த இடத்தில சாகத்தானே விருப்பமாயிருக்கும். உங்கட அம்மாவுக்கும் வேலணையில இருந்து சாகத்தான் விருப்பமாயிருந்திருக்கும். அதுக்குத்தான் கிடைக்கேல்லை. At least அவாவின்ரை அஸ்திகளையாவது அங்கை கொண்டுபோய்ச் செய்தா சந்தோஷப்படுவா தானே.”

ஆச்சரியமாயிருந்தது.

“இதெல்லாம் உங்களுக்கு எப்பிடித் தெரியும்?”

“உங்கட அம்மாதான் சொன்னவா.”

“உங்களுக்கு எப்பிடி அம்மாவோட பழக்கம்? நீங்க எப்ப அம்மாவோட இதெல்லாம் கதைச்சனீங்க?”

வியப்புடன் கேட்டேன். நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

“இல்லை, ஒருநாள் உங்கட வீட்ட சாப்பிட வந்திருந்தனான் தானே. அப்ப தான் சொன்னவா”

“ஓ!”

“தீபனும் உங்களோட ஊருக்கு வாறேரா?”

“இல்லை. அவனுக்கு வேலையில லீவு எடுக்கேலாதாம். நான் மட்டும் தான்.போறன்”

“எண்டைக்குப் போறீங்க?”

“நாளண்டைக்கு”

“வாற வியாழக்கிழமையா?”

“ஓம்”

“என்னத்தில போறீங்க?”

“வியாழக்கிழமை விடிய நேரத்தோட intercity bus எடுத்தா ஒன்பதரை போல வவுனியாவுக்குப் போயிரலாம். பிறகு அங்கையிருந்து ஓமந்தைக்குப் போய் அப்பிடியே யாழ்ப்பாணம் போய்ற்று பிறகு அடுத்தநாள் வேலணைக்குப் போறதுதான்.”

“அப்ப அங்க யாழ்ப்பாணத்தில எங்க தங்குவீங்க? சொந்தக்காரர் வீட்டிலயா?”

“சொந்தக்காரர் இருக்கினம் தான். ஆனா ஏன் அவைக்குக் கரைச்சல் குடுப்பான். என்ரை friend ஒருத்தன்தான் அங்கை எல்லா ஒழுங்குகளும் செய்யிறான். அவன் தன்ரை வீட்டில நிக்கச்சொல்லிச் சொன்னவன். ஆனா எனக்கு விருப்பமில்லை. அதால அங்க முண்டு நாளைக்கு வீடொண்டு எடுக்கச் சொல்லியிருக்கிறன்.”

“ஏன் நீங்க அவற்றை வீட்டில நிக்கேல்லை. மூண்டு நாளைக்கு ஆரும் வாடகைக்கு வீடு குடுப்பினமா?”

“இல்லை. எனக்கு இப்ப அம்மா செத்த தொடக்கு. அவன்ரை வீட்டுக்காரர் சரியா ஆச்சாரம் எல்லாம் பாக்கிறவை. அதுதான் அங்கை தங்கி வீயா ஏன் அவன்ரை வீட்டுக்காரருக்குப் பிரச்சனையைக் குடுப்பான்?. அதோட இப்ப யாழ்ப்பாணம் பார்க்கிறதுக்கு நிறைய சிங்கள ஆக்கள் போகத் தொடங்கியிருக்கினம். அதால இப்ப யாழ்ப்பாணத்தில கன வீடுகள் நாள் வாடகைக்கு விடப்படுகுது. அதிலதான் ஒண்டை book பண்ணச் சொன்னான்.”

“சரி அப்ப கவனமாப் போயிற்று வாங்க. இஞ்சை ஏதும் தேவையெண்டா எனக்கு கோல் பண்ணுங்க.”

* * * * *

அலைபேசியின் அலாரத்திற்கு உறக்கம் துறந்து படுக்கைய விட்டு எழுந்தேன். வியாழன் அதிகாலை 3.45. விரைவாக எழுந்து குளித்துவிடடுப் பயணப் பொதிகளுடன் குருந்துவத்தைச் சந்தியை அடைய அலைபேசி சிணுங்கியது. பார்த்தேன். நதிஷா தான். இவள் எதற்கு இந்த நேரத்தில்?

“ஜேந்தன். இண்டைக்கு நீங்க பயணமெல்லா. வெளிக்கிட்டிட்டீங்களா?”

“ஓம். .இப்ப கண்டி bus க்காக குருந்துவத்தைச் சந்தியில நிக்கிறன். அஞசே காலுக்குத்தான் வவுனியா இன்ரசிற்றி வெளிக்கிடும்.”

“சரி!. அதைக் கேக்கத்தான் எடுத்தனான். ஒருவேளை நீங்க மறந்துபோய் நித்திரை கொள்ளுறீங்களோ தெரியாதெண்டிட்டுத்தான் எடுத்தனான். அப்ப வைக்கிறன்”

அவளும் என்னுடன் கூடவே வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஒரு மனசு ஏங்கியது. நீ சரியான சுயநலவாதியடா. இன்னொரு மனசு கண்டித்தது. அவளுக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி அவளும் சந்தோஷமாக இருக்கிறாள். இப்போது போய் உன் சுயநலத்திற்காக அவளை இழுக்கின்றாயே. இதற்கு முதல் எத்தனைதடவைகள் அவள் உன்னை நெருங்கி வந்திருப்பாள். அப்போதெல்லாம் வேண்டாமென்றுவிட்டு இப்போதுதான் அவள் தேவைப்படுிறாளோ. அதுவும் அவளுக்கு இன்னும் கூட அக்காவைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. இந்த வள்ளலில... நீ கெட்டவனடா. மனசுக்குள் நடந்த போராட்டத்தை நாவலப்பிட்டியிலிருந்து வந்த bus தடைசெய்ய .bus இற்குள் ஏறினேன். கண்டியை அடைய ஐந்து மணியைத் தாண்டிவிட்டிருந்தது வவுனியா bus இற்குள் ஏறிக் கண்களால் இருக்கைகளை நோட்டமிட்டேன். ஒற்றை இருக்கை வரிசையில் மூன்றாவது இருக்கையில் பயணப்பொதியொன்று வைக்கபட்டிருந்தது. அதைத் தவிர்த்து அனேகமாக ஏனைய இருக்கைகள் பயணிகளால் நிரம்பியிருந்தது.

அப்ப இன்றைக்கு baby seat தான். வவுனியா வரை உறங்கிக்கொண்டே செல்லலாம் என்று எண்ணிவந்திருந்த மனது சலித்துக் கொண்டது மனது. சிற்றுார்தியின் உள்ளே அதன் பி்ன்புறம் நோக்கிச் செல்ல, அந்தப் பொதியைப் பின்னாலிருந்த கையொன்று தூக்கியது. அது........

அது....

அது நதிஷாவேதான். அவள் எங்கே இங்கே இந்த bus இற்குள்? ஒருவேளை என்னைப் பயணமனுப்ப வந்திருப்பாளோ?. எனக்காக இந்த அதிகாலையில் வந்து seat பிடித்திருக்கிறாள். இப்படி ஒருத்தி நண்பியாகக் கிடைக்க நான் என்ன தவம் செய்திருக்க வேண்டும்.

“good morning ஜேந்தன்”

“morning நதிஷா. Thanks."

Bus புறப்பட ஆயத்தமாகியது.

”நீங்க இறங்கேல்லயைா bus வெளிக்கிடுது?”

“இல்லை”

சொல்லிவிட்டு அவள் கண்களை மூடிக் கொண்டாள். என்ன இவள்? ஒருவேளை வழியில் இறங்கிக் கொள்ளப்போகிறாளோ? அல்லது என்னுடன் வவுனியா வரை வருவாளா? வந்தால் நன்றாகத் தானிருக்கும்.மனதுக்குள் சந்தோஷம் குடிவந்தது. திரும்பி அவளைப் பார்த்தேன். உண்மையிலேயே அவள் நித்திரையாகி விட்டிருந்தாள். அவள் முகம் எந்தவிதக் களங்கமுமற்று பிரகாசித்துக் கொண்டிருந்தது.


வேரென நீயிருந்தாய்...(42)

சிதையில் அம்மாவின் உடல் கிடத்தப்பட்டிருக்க, இறுதியாய் வாய்க்கரிசி போடப்பட்டுக் கொண்டிருந்தது. கடைசியாய் என்னையும் வாய்க்கரிசி போட அழைத்தார்கள்.

அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசை இட்டுப் பார்த்து மகிழாமல் - உருசி உள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மகனே என அழைத்த வாய்க்கு.

பெட்டி மூடப்பட்டு விறகுககள் அடுக்கப்பட்டன. கொள்ளிக்குடம் இடது தோளில் வைக்கப்பட்டு கையில் கொள்ளியும் தரப்பட்டு இடஞ்சுழியாக மும்முறை வலம்வரப் பணிக்கப்பட்டேன்.

முந்தித் தவம்கிடந்து முந்நூறு நாள் சுமந்தே
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்.

ஒவ்வொரு தடவையும் கொள்ளிக்குடம் கொத்துப்பட பின்னாலேயே தண்ணீரைச் சிதைக்குத் தெளித்தபடி தீபனும் வந்தான்..

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்து என்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்.

மூன்றாம் சுற்று முடிந்ததும் சிதையைவிட்டுத் திரும்பி நின்றவாறே கொள்ளிக்குடத்தை பின்புறமாய் நழுவவிட்டு கொள்ளியினைச் சிதையினுள் செருகினேன்.

முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே.

திரும்பிப் பாராமல் அப்படியே என்னெ வெளியேறச் சொன்னார்கள். என்னை அணைத்தபடியே திரும்பவிடாமல் கூடவே தீபனும் வந்தான். மனசு குமுறியது.

வேகுதே தீ அதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ - மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை.

வீடுநோக்கி பயணம் தொடங்கியது. அனி அம்மாவும் இல்லை என்கின்ற உண்மை நெஞ்சைக் கசக்கிப் பிழிந்தது.

ஐயிரண்டு திங்களாய் அங்கம் எல்லாம் நொந்துபெற்றுப்
பையல் என்ற போதே பரிந்து எடுத்துச் - செய்ய இரு
கைப்புறத்தல் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி.

வீட்டினை அடைய கையில் வாசலின் குறுக்கே உலக்கை போடப்பட்டுக் கிடந்தது. வாசலில் கரைத்து வைத்திருந்த மஞ்சள் தண்ணீரில் முகத்தைம் கைகால்களையும் அலம்பிவிட்டு நிமிர வேப்பிலையைத் தந்தார்கள். அதையும் கடித்துத் துப்பிவிட்டுப் பின்புறமாய்ச் சென்று குளித்துவிட்டு உள்ளே வந்தேன். பெரும்பாலனாவர்கள் ஏற்கனவே வெளியேறிவிட்டிருந்தனர். சில மாணவர்களும் தீபனும் மாத்திரமே வெளியில் இருந்தனர். உள்ளே குசினிக்குள் சில பெண்களின் நடமாட்டம் தெரிந்தது.

“எல்லாரும் சாப்பிடலாம். உள்ளுக்க வாங்க”

நிமிர்ந்தேன். நதிஷா!

இவள் எப்படி இங்கே? ஆச்சரியமாயிருந்தது. எப்போது வந்திருப்பாள்? faculty-யில் கேள்விப்பட்டு வந்திருக்கலாம். தொடர்ந்து சிந்திக்கத் திராணியற்றுக் களைத்துப் போயிருந்தேன்.

மாலை மங்குகையில் எல்லலோரும் வெளியேற,

“தீபன்! dinner ready பண்ணி வைச்சிருக்கு. ரெண்டுபேரும் சாப்பிடுங்க. நான் நாளைக்கு காலமை வாறன். சரி ஜேந்தன். கவலைப்படாம இருங்க”

நதிஷாவும் விடைபெற நானும் தீபனும் தனித்து விடப்பட்டோம். அம்மா இல்லாத முதலாவது இரவு அது. ஆனாலும் நேற்றைய தூக்கமும் இன்றைய களைப்பும் தந்த அசதியில் படுத்த சிறிது நேரத்திலேயே நித்திரை தூக்கியடித்தது.

காலைவிடிந்தது. காடாத்துச் செய்வதற்குரிய ஆட்கள் வர நானும் தீபனும் அவர்களுடன் புறப்பட ஆயத்தமாகுகையில் நதிஷா வந்துவிட்டிருந்தாள்.

மயானத்தை நெருங்குகையில் அடிவயிற்றுக்குள் ஏதோ செய்யத் தொடங்கியது.

வெந்தாளோ சோணகிசி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம்கிடந்து
என்தன்னையே ஈன்று எடுத்த தாய்.

கண்கள் ஊற்றெடுத்துப் பெருகத் தொடங்கி கன்னத்தில் கோடிழுத்துக் கொண்டிருந்தன.

“ஜெயந்தன் டேய். என்னடா நீ! அழாதேடா.” தீபன் தோளில் தட்டினான்.

கிரியைகளை முடித்துக்கொண்டு மீண்டும் வீடு திரும்பினோம்.

வீற்றிருந் தாள் அன்னைவீதி தனில் இருந்தாள்
நேற்று இருந்தாள் இன்று வெந்து நீறானாள்...

காலம்யாருக்காகவும் எதற்காகவும் காத்திருப்பதில்லை. அது தன்பாட்டில் ஓடிக் கொண்டிருந்தது. மறுநாள் மாலை,

“ஜெயந்தன் டேய்! நாளைக்கு site-இல concrete போடுறதெடா. நான் போக வேணும். அடுத்த weekend-இற்கு வாறன்.”

தலையசைத்தேன்.

“அப்ப நான் வெளிக்கிடுறன்”

““இரடா அம்மாட்டச் சொல்லீற்றுப் போ. அவா சிலவேளை உனக்கும் சேர்ததுப் புட்டவிக்கிறாவோ?..ஸ்ஸ்ஸ்... sorry-யடா.”
நாக்கைக் கடித்துக் கொண்டேன். அம்மாவின் இல்லாமையை இன்னும் நான் பூரணமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது புரிந்தது.

“சரியடா. நீ வெளிக்கிடு. நீயும் இல்லாட்டி நான் என்ன செய்திருப்பனெண்டு எனக்கே தெரியாது. thank you very much-டா”

“சரிமச்சான், நீ கவனமா இரு. அம்மா இல்லையெண்டிட்டு ஒழுங்காச் சாப்பிடாம விட்டிராதை. ஒவ்வொரு நாளும் அம்மாக்குக் காலமையில விளக்கு வைச்சுப் படைக்க வேணும். மறந்திராத, சரியா?”

தீபனும் கிளம்ப. எல்லாமே வெறிச்சோடிப் போனதாய்ப்பட்டது. எனக்கென்று இனி யார் இருக்கின்றார்கள்? உறவுகள் இல்லாத அனாதையாய் உணர்ந்தேன். இதுவரை அனுபவித்திராத உணர்வுகள் என்னைச் சூழ்ந்து கொள்ள மனதுக்குத் தாங்க முடியாமல் இருந்தது. அழுதால் கொஞ்சம் நிம்மதியாயிருக்கும் என்று தோன்றியது. ஆனால் ஏனோ தெரியவில்லை இப்போது அழுகையுமு் வர மறுத்தது.உலகத்திலேயே மிகவும் தூரதிர்ஷ்டமானது தனிமைப்படுத்தப்பட்ட உணர்வுதான். அந்தத் தனிமை உணர்வைப் போக்கின்றவை குடும்ப உறவுகளும் நட்புகளுமே. ஒருமனிதனுக்கு குடும்ப உறவா நட்பா பெரிது எனப் பல பட்டிமன்றங்கள் நடாத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் நான் இப்போது எந்த உறவுகளும் அற்று நட்புகளும் விலகித் தனியனாக உணர்ந்தேன். இப்போது என்னைப் பொறுத்தவரை குடும்பஉறவென்பது உள்ளாடை போன்றும். நட்பென்பது வெளியாடை போன்றும் தோன்றியது. உள்ளாடையா வெளியாடையா முக்கியம்? குடும்பஉறவுகள் எப்போதும் சேர்ந்திருக்கும். ஆனால் நட்புகள் தேவையானபோது சேர்ந்து பின் விலகி பின் சேர்ந்து...அது ஆதி தொடங்கி அந்தம் வரை எல்லாவற்றிலும் கூடவராது.

மறுநாள் திங்கட்கிழமை. வீட்டிலிருந்தால் யோசனைகள் அதிகமாகும் என்பதால் மீண்டும் வேலைக்குச் செல்லத் தொடங்கினேன்.

“ஜேந்தன்! இனி உங்களுக்கு lunch நான் கொண்டு வாறன்.”

“வேண்டாம் நதீஷா! நான் கடையிலயே சாப்பிட்டிருவன்“

“இல்லைப் பரவாயில்லை. நான் கொண்டு வாறன். நீங்க OKயானப் பிறகு நீங்க கடையில சாப்பிடுங்க. இப்ப நீங்க கவலையில சாப்பிடாம விட்டிருவீங்க. Atleast lunch ஆவது ஒழுங்காச் சாப்பிடுறீங்க எண்டிற நிம்மதி எனக்கு இருக்கும்”

என்னால் அவளைப் பரிந்து கொள்ளமுடியாமலிருந்தது. இன்னொருவன் மனைவியாகப் போகின்றவள் எதற்காக என்மேல் இத்தனை அக்கறை செலுத்த வேண்டும். வேண்டாம். இவள் நல்லவள். மிகமிக நல்லவள். இவள் வாழ்க்கையை நான் பாதிக்கக்கூடாது. இவள் என்னுடன் இப்படிப்பழகுவது அவள் வருங்காலக் கணவனுக்கு பிடிக்காமலிருக்கக்கூடும். அத்தோடு உறவுகள் இழந்து தவிக்கும் என்மனதும் இவள்மேல் இன்னும் காதல்வயப்பட்டுவிடும். அது இவள் வாழ்க்கையையும் குழப்பிவிடக்கூடும். அப்படி ஏதும் நடந்து இவள் என்பக்கம் சாய்ந்தாலும், அக்காவைப் பற்றிய உண்மைகள் தெரியவரும் போது இருவர் வாழ்ககையுமே நரகமாகிவிடக்கூடும். இவள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும். நான் இவளைக் காதலிப்பது உண்மையானால், அவள் வாழ்க்கை சந்தோஷமானதாக அமைய வேண்டுமென நான் விரும்புவது உண்மையானால், நான் அவளை விடடு விலகுவது தான் நல்லது.

காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை
சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை
..........
என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம் உனை எண்ணி வாழ்வதே என்னின்பம்
இங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே எந்தன் காதல் வாழும்
நீ வாழ்க...நலமாக...நீ வாழ்க...நலமாக...


Friday, November 25, 2011

வேரென நீயிருந்தாய்...(41)

“ஜெயந்தன் டேய்! இரவைக்கு நான் வீட்ட வருவன். எனக்கு நாளைக்கு faculty-ல course completion letter எடுக்க வேணும். அம்மாட்ட எனக்கும் சேர்த்துச் சமைக்கச் சொல்லு. என”

“தீபன் டேய்! அம்மாவை emergency ward - இல admit பண்ணியிருக்கடா. திடீரெண்டு வீசிங் கூடி சுவாசிக்கச் சரியாக் கஷ்ரப் படுகிறா. கொண்டு வந்த உடனே ஒருக்காப் புகைப்பிடிச்சவங்கள். இன்னும் சரி வரேல்லைடா. பயமாயிருக்கு”.

“பயப்படாத மச்சான் ஒண்டும் நடக்காது. எப்பிடியும் இரவுக்கு நான் அங்க வந்திருவன். தைரியமாயிரு. எந்த ஆஸ்பத்திரி? உதவிக்கு ஆரும் இருக்கினமோ?"

“கண்டி பெரியாஸ்பத்திரியிலதான் admit பண்ணியிருக்கு. நான் தனியத்தான்ரா நிக்கிறன். கொஞ்சம் சரிவந்தா ward-இற்கு மாத்திறது எண்டு கதைச்சவை. பெம்பிளைகளின்ரை ward-க்கு விட்டால் பிறகு நிக்கேலாது. உதவிக்கும் ஒருத்தரும் இல்லை. என்ன செய்யிறதெண்டும் தெரியேல்லையடா”

“கவலைப்படாத மச்சான். எல்லாம் ஒழுங்கு செய்யலாம். எனக்குத் தெரிஞ்ச டொக்ரர் ஒருத்தரும் கண்டி பெரியாஸ்பத்திரியிலதான் house officer-ஆ இருக்கிறேர். நான் அவரோடு கதைச்சு ஒழுங்கு படுத்திறன். அப்பிடியில்லையெண்டாலும் ஆரும் எங்கட faculty பெட்டைகளிட்டக் கேட்டுப் பார்க்கலாம். அந்த அலுவல் எல்லாம் நான் பார்க்கிறன். நீ பயப்பிடாம இரு. நான் இன்னும் அஞ்சு மணித்தியாலத்தில அங்க வந்திருவன்”

அழைப்பைத் துண்டித்தான் தீபன். நெஞ்சுக்குக் கொஞ்சம் நிம்மதியாயிருந்தது. Emergency ward-இன் வெளியே வைக்கப்பட்டிருந்த bench-இல் அமர்ந்தேன். என்னைப் போலவே வேறும் சிலரும் தங்கள் உறவுகளை emergency ward-இனுள் அனுமதித்துவிட்டு வெளியே தவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரை மருத்துவத்தாதி வந்து அழைத்து ஏதோ சொல்ல அவரும் சந்தோஷமாக உள்ளே சென்றார். சிறிது நேரத்தில் அவரது நோயாளி உறவினரை ward-இற்கு மாற்றினர். நான் எனக்கான அழைப்பிற்காகக் காத்திருக்கத் தொடங்கினேன். இன்னும் சிறிது நேரத்தில் வேறொருவரை உள்ளே அழைத்தனர். உள்ளே சென்றவர் கத்திக்குழறியவாறே வெளியே வருகையிலேயே புரிந்து விட்டது.

ச்சே! என்ன வாழ்க்கை இது? நேற்றிருந்தார் இன்றில்லையெனும் பெருமையல்ல. சற்றுமுன் இருந்தவர்கூட இப்போதில்லையெனும் பெருமைக்குச் சொந்தமானதுதான் இந்தப் பூமி. ஆழ்ந்து சிந்திக்க, வாழ்வின் நிரந்தரமின்மை புரிந்தது. வாழ்க்கையைப் புரிந்து கொள்ள விரும்புபவர்கள் வைத்தியசாலைகளின் Emergency ward மற்றும் intencive care unit களின் முன்னால் சிலநாட்கள் அமர்ந்து கவனித்தாலே போதுமானது. போர்க்களத்தைத் தவிர்த்து வாழ்க்கையின் நிலையாமையை உணர வைத்தியசாலையைத்தவிர வேறு சிறந்த இடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

“Mrs. சுந்தரலிங்கம்-கே கட்டி கவுத?" (Mrs. சுந்தரலிங்கத்தின்ரை ஆள் ஆரு?)

'அய்? மமத் தமாய்” (ஏன்? நான்தான்)

“எயாவ ward-எக்க மாறுகரகண்டஓன. அத்துலங் எண்ட.” (அவர ward-க்கு மாத்த வேணும். உள்ளுக்க வாங்க)

அம்மாவை normal ward -இற்கு மாற்றுகையில் மணி ஆறரையைத் தாண்டி விட்டிருந்தது. அதன் பின்னர் பெண்கள் ward-இற்குள் நிற்க ஆண்களுக்கு அனுமதியில்லையாதலால் நான் வெளியே வரவேண்டியதாயிற்று. அம்மாவின் அலைபேசியை அவரிடம் கொடுத்தேன். அம்மா இப்போது கொஞ்சம் Normal-ஆய் இருந்தார்.

“ஜெயந்தன் நீ வீட்டை போ. வீட்டில எல்லாம் போட்டது போட்டபடியே அப்பிடியே கிடக்கு. எனக்கு ஒண்டுமில்லை. என்னை நாளைக்கே வீட்டைபோகச் சொல்லி விட்டிருவினம். ஏதும் தேவையெண்டால் நான் உனக்கு போன் பண்ணுறன்”

“சாப்பாடு வேண்டிக் கொண்டுவாறன்.”

“இனி நீ உள்ள வரேலாது. அதெல்லாம் நான் பார்த்துக் கொள்ளுவன். சாப்பாடு கொண்டுவந்துதர எல்லாம் எனக்கு ஆக்கள் இருக்கினம். நீ கவனமா வீட்டை போய்ச் சேர். ஒழுங்காச் சாப்பிடு. என?”

“விசிற்றர்ஸ் ஒக்கம எலியன்ட யண்ட. வெலாவ இவறாய்” (visitors எல்லாம் வெளியால போங்க. நேரம் முடிஞ்சுது).

மருத்துவத்தாதி விரட்ட வெளியேறி வீட்டினை அடைந்தேன். அம்மா இல்லாத வீடு வெறுமையாய் இருந்தது. தனிமை சூழ்ந்து கொண்டது..

“ஜெயந்தன்”

தீபனின் குரல் கேட்டதும் நெஞ்சுக்குக் கொஞ்சம் நிம்மதி வந்தது. கதவைத் திறந்தேன்.

“அம்மாக்கு இப்ப என்ன மாதிரி?”

“ward-இற்கு மாத்தியாச்சு. இனி நாளைக்குக் காலமை தான் போய்ப் பார்க்கலாம்”.

“சரி நீ சாப்பிட்டியா? நீ எங்க சாப்பிட்டிருக்கப்போற? வா போய் குருந்துவத்தைச் சந்தியில சாப்பிட்டு வரலாம்”..

தீபனின் வற்புறத்தலின் பேரில் போய் சாப்பி்ட்டு வந்து படுத்துக் கொண்டோம். உறக்கம் வர மறுத்தது. பிரண்டு பிரண்டு படுத்துக்கொண்டேயிருந்தேன். திடீரென தீபனின் போன் அலறியது.

“ஹலோ? ஆரு? என்ன?...ஓ அப்பிடியா? என்னெண்டு எப்ப நடந்தது? சரிசரி நாங்க வாறம்”

“தீபன் டேய் என்னடா? ஆரு இந்த நேரத்தில? என்ன நேரம் இப்ப?”

நேரத்தைப் பார்த்தேன். அதிகாலை ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. தீபன் எழுந்து அருகில் வந்தான். கையை இறுகப்பிடித்துக் கொண்டான்.

“ஜெயந்தன் நீ இனித் தைரியமாயிருக்கவேணும்”

“என்ரை அம்மோய்ய்ய்.............................”

நரம்பெல்லாம் ஓடிச்சிலிர்த்தது. உள்மனதிற்கு புரிந்துவிட்டது. எது நடக்கக்கூடாது என்று விரும்பியிருந்தேனோ அது நடந்தே விட்டது. தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. தீபன் என்னைத் தாங்குவது மங்கலாகத் தெரிந்தது.

தாயெனும் கோவிலைக் காக்க மறந்திட்ட பாவியடி கிளியே...............

“ஜேன்! எழும்படாப்பு! கவலைப்படாதையப்பன்”

“அக்க்க்கா” கேவினேன்.

தலையினை அக்கா வாஞ்சையுடன் தடவிவிட்டாள்.

“ஆம்பிளைப்பிள்ளை அழக்கூடாதடா. நீ அழுதா அம்மாக்கு மனசு தாங்காது. நீ என்ன சின்னப்பிள்ளையா? இப்ப நீ ஒரு இஞ்சினியர். அழாமத் தைரியமாயிருக்க வேணும். எழும்பி இனி நடக்க வேண்டியதுகளைக் கவனி”

“நீயும்தானே என்னை விட்டிட்டுப் போய்ற்ற..”

“உன்னைவிட்டிட்டு நான் ஒரு இடமும் போகமாட்டன். நான் இனியும் உன்னோடதான் இருப்பன். நீ தைரியமாயிரு. என்னடா பெம்பிளைப்பிள்ளைகள் மாதிரி சும்மா அழுது கொண்டு. எழும்பு. எழும்பி அம்மாவின் அலுவல்களைக் கவனி”

அழுவதனால் துயரங்கள் கழுவப்படுகின்றன. மனம் இலேசாகின்றது. ஆனால் இந்த சமூகம் ஆண்களை அழுவதற்கு அனுமதிப்பதில்லை. அழும் ஆண்களை பலவீனமானவர்களாகப் பார்க்கிறது. அந்த வரட்டுக் கௌரவத்திற்காகவே அத்தனை ஆண்களும் தங்கள் கண்ணீரை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. மீன்களின் கண்ணீரை கடல் மட்டுமே அறிவதைப்போல் ஆண்களின் கண்ணீரைத் தலையணை மட்டுமே அறியும்.

“ஜெயந்தன் டேய்! என்னடா செய்யுது உனக்கு? நீ OK-யா?”.

யாரோ என்னை உலுக்குவது தெரிந்து விழிக்க தீபன் நின்றிருந்தான். அயலிலிருக்கின்ற சில மாணவர்களும் வந்திருந்தனர். என்னைச்சுற்றி என்ன நடக்கின்றது என்பதை உணர முடியா நிலையில் நானிருந்தேன். தீபன்தான் எல்லா ஒழுங்குகளையும் செய்து கொண்டிருந்தான். காலை ஒன்பது மணியளவில் அம்மாவின் உடல் வீட்டிற்கு எடுத்துவரப்பட்டது. குளித்து வேட்டி உடுத்திவர ஐயர் ஆயத்தமாயிருந்தார்.

முத்துநல் தாழம்பூ மாலை தூக்கி.....

திருப்பொற்சுண்ணம் ஆரம்பிக்க அடிவயிற்றுக்குள் ஓலம் கிளம்பியது. மாட்டேன். நான் அழமாட்டேன். நான் அழுவது அம்மாவுக்கு பிடிக்காது. அம்மா! உனக்குப்பிடிக்காததை நான் செய்யமாட்டேன். மேற்பற்களால் கீழுதட்டைக் கடித்துக் கொண்டேன்.

வாள்தடங்கண்மட மங்கைநல்லீர்
வரிவளை ஆர்ப்பவண் கொங்கைபொங்கத்
தோள்திரு முண்டந் துதைந்திலங்கச்
சோத்தெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி....

நெஞ்சுக்கூட்டுக்குள் எதுவோ உடைந்து நொருங்கியது. ஐயோ! அம்மா! என்னால தாங்கமுடியுதில்லையே...... அழமாட்டன். அழமா இருக்க என்னால ஏலும். ஆட்களைப் பார்ப்பதைத் தவிர்த்து அண்ணாந்து கொண்டேன். கண்களில் வழியவந்த கண்ணீரைக் கண்களுக்குள்ளேயே தேக்கிக்கொண்டேன்.

வையகம் எல்லாம் உரலதாக
மாமேரு என்னும் உலக்கை நாட்டி
மெய்யனும் மஞ்சள் நிறைய அட்டி
மேதரு தென்னன் பெருந்துறையான்
செய்ய திருவடி பாடிப்பாடிச்
செம்பொன் உலக்கை வலக்கைபற்றி
ஐயன் அணிதில்லை வாணனுக்கே
ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே.

உலக்கை தூக்கி உரலை இடிக்க கட்டுப்படுத்த முடியாமல் இரு கண்ணீர்த்திவலைகள் உரலுக்குள் சிந்தின.

முத்தணி கொங்கைகள் ஆடஆட
மொய்குழல் வண்டினம் ஆடஆடச்
சித்தஞ் சிவனொடும் ஆடஆட...

”ஜேன் please அழாதேடா...."

“என்னால முடியுதில்லையே அக்கா....”

பித்தெம் பிரானொடும் ஆடஆடப்
பிறவி பிறரொடும் ஆடஆட..

டேய் ஜேன்! அம்மா சிம்மராசி மக நட்சத்திரிக்காரியடா. அவளுக்கு அடுத்த பிறப்பெண்டு இனி ஒண்டுமில்லை. பிறகேன் சும்மா அழுது அம்மாவின்ரை ஆத்மாக்கு கஷ்ரம் குடுக்கிற? அவாவுக்குச் செய்ய வேண்டிய கிரியைகளைக் கவனமாய்ச் செய்”

ஞானக் கரும்பின் தெளியைப் பாகை
நாடற் கரிய நலத்தை நந்தாத்
தேனைப் பழச்சுவை ஆயினானைச்
சித்தம் புகுந்துதித் திக்கவல்ல
கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட
கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப்...

கீழுதட்டில் வலியை உணர்ந்தேன். பற்கள் கடித்து உதிரம் இலேசாய் கசியத் தொடங்கியிருந்தது.

வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு
மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச்
சோதிய மாய் இருள் ஆயினார்க்குத்
துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்குப்
பாதியு மாய் முற்றும் ஆயினார்க்குப்
பந்தமு மாய் வீடும் ஆயினார்க்கு
ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு
ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே.

அம்மாவின் உடலை மூடி பிரேத ஊர்தியில் ஏற்றி மயானத்தை நோக்கி நகர்ந்தோம்.

வீடுவரை உறவு. வீதிவரை மனைவி. காடுவரை பிள்ளை. கடைசிவரை யாரோ????


Thursday, November 24, 2011

வேரென நீயிருந்தாய்...(40)

அடுத்தநாள் சனிக்கிழமை மதியச்சாப்பாடு முடிந்ததும் அம்மா ஆரம்பித்தார்.

“தம்பி பின்னேரம் போல ஒருக்கா கண்டி ரவுணுக்குப் போய்ற்று வருவமா?”

ஆச்சரியமாயிருந்தது. இதுநாள் வரையும் கேட்காதவர் இன்றைக்குக் கேட்பது அதிசயமாய்ப் பட்டது.

“OK அம்மா. உங்களுக்கு என்ன வேண்டவேணும்”

“நீ வாவன். நான் அங்கை எனக்குத் தேவையானதிருந்தா பாத்திற்றுச் சொல்லுறன்”.

718 இல் ஏறி கண்டி நகரினை அடைகையில் மாலை ஐந்து மணியாகி விட்டிருந்தது. கடைகளைப் பார்த்தபடியே வந்தவர் திடீரென ஒரு நகைக்கடைக்குள் நுழைந்ததும் அதிசயித்துப் போனேன். என்னாயிற்று அம்மாவுக்கு.. எனக்குத் தெரிந்து முதல்தடவையாக நகைக்கடைக்குள் நுழைகிறாள். நீண்ட தேடுதலின் பின் சங்கிலி ஒன்றைத் தேர்ந்தெடுத்தவள் அதை வாங்கித்தரும்படி என்னிடம் கேட்டதும் நம்மமுடியாமல் திகைத்தேன். அம்மாவும் ஒரு பெண்தானே. நகைகளை வீரும்ஷபாத பெண்களும் இருக்க முடியுமா என்ன? இத்தனை காலமாய் கவலையில் இருந்தவர் இப்போதுதான் சந்தோசத்தை அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறார். அவரின் சந்தோஷத்திற்காகவே கல்யாணம் கட்டிக் கொள்ளலாம். ஒரு மகனாய் நான் அவருக்குத் தரக்கூடிய சந்தோஷம் அதுவாகத்தானிருக்க முடியும்.

மறுநாளும் அம்மாவின் கழுத்து வழமை மாதிரியிருக்கவே ஆச்சரியத்துடன்,

”ஏனம்மா வேண்டின சங்கிலியை இன்னும் போடேல்லை?”

“அட பேய்க்கந்தா! அது நான்போட வேண்டினதில்லையடா?”

“அப்ப?”

“நீ என்ன லூசா? இந்த வயதில இந்தக் கிழவிக்கு சங்கிலி இல்லாதது ஒண்டுதான் குறையெண்டு நினைச்சியா?”

“அப்ப ஆருக்கு வேண்டின்னீங்கள்?”

“அது எனக்கு வரப்போற மருமகளுக்கு.” சொல்லிவிட்டுக் கிண்டலுடன் என்னைப் பார்த்தார். ம்.... தலையிடித்துக் கொண்டேன்.

“என்ன ஒண்டுமே சொல்லாம இருக்கிறாய்?” அம்மா என்னைச் சீண்டத் தொடங்கினார்.

“நீங்களாச்சு உங்கட மருமகளாச்சு. என்னையேன் இதுக்குள்ள இழுக்கிறியள்?”

“உன்னையிழுக்காம இதுக்குள்ள எனக்கு எப்பிடி மருமகள் வருவா?”

விட்டால் இன்றைக்கு முழுவதுமே அம்மா சீண்டிக் கொண்டிருப்பாள் என்றே பட்டது.

“எண்டாலும் அம்பம்மாக்கு வாய்ச்ச மருமகள் மாதிரி உங்களுக்கு வாய்க்குமோ தெரியாது?”

“இருந்துபார். என்ரை மருமகள் உன்ரை கொப்பம்மாவின்ரை மருமகளிலும் விடத் திறமோ இல்லையோ எண்டு” விஷமமாய்ச் சிரித்தாள்.

கடவுளே! அம்மா இவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறதைப் பார்க்க அக்கா இல்லையே. அவள் பார்த்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாள்.

“சரியம்மா. அதையதை அப்பப்ப பார்க்கலாம். இப்ப என்னை விடுங்கோ”.

* * * * *

அடுத்தநாள் காலை வளாகத்திற்குள் நுழைந்தேன்.

“Good morning ஜேந்தன்” ஆச்சரியமாயிருந்தது நதீஷாவின் செயல்.

இத்தனை நாளும் நான் நெருங்கிப்போக நினைக்கையில் விலகிச் சென்றவள் இப்போது தானாய் வலிய வருவது வியப்பையே தந்தது.

“Good morning. நதீஷா. எப்பிடியிருக்கிறீங்க?”

“நான் நல்ல சந்தோஷமா இருக்கிறன். நீங்க எப்பிடி இருக்கிறீங்க?”

“அது உங்கட குரலிலயே தெரியுது. நானும் நல்லாத்தான் இருக்கிறன்.”

“எனக்கு உங்கட help ஒண்டு தேவையாயிருக்கு. செய்வீங்களா?”

“சொல்லுங்க. என்ன செய்ய வேணும்?”

“இல்லை. என்ரை அவருக்கு குடுக்கிறது ஏதாவது things வாங்க வேணும். ஆனா என்ன வேண்டுறது எண்டுதான் தெரியேல்லை. அதுதான் boys-இற்கு என்ன பிடிக்கும் எண்டு உங்களிட்டக் கேக்கிறன்.”

நெஞ்சில நெருஞ்சியால தேய்ச்சது மாதிரி இருந்தது. ம்...விதி. அது எப்பிடியெல்லாம் விளையாடுகிறது? மனசு நொந்தது. அவளைப் பார்த்தேன். அதே விஷமச்சிரிப்பு. ச்சே! என்ன பெண்ணிவள்? இதே இவள்தான் சில மாதங்களுக்கு முன்பு நான்தான் தன்னுடைய வாழ்க்கை என்று வாய்கிழியப் பேசினவள். இண்டைக்குத் தன்ரை புருஷனுக்கு என்ன வாங்கிக் குடுக்கிறது எண்டு என்னட்டையே வந்து கேட்கிறாள்? ஒருவேளை வேண்டுமென்றே என்னைப் பழி வாங்குவதற்காய் வெறுப்பேற்றுகிறாளோ?. மனதுக்குள் பல்வேறு எண்ணங்களும் ஓடலாயிற்று.

நான் மட்டும் திறமா என்ன? இதோ இவளை மனதிற்குள் வைத்து மருகிக் கொண்டு அம்மாவின் சந்தோஷத்திற்காக இன்னொருத்தியை மணம்முடிப்பதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லையா? அல்லது நான்தான் இவளுடன் நேர்மையாகப் பழகியிருக்கின்றேனா? இத்தனை காலமாகியும் இன்னமும் அக்காவைப்பற்றி உருவார்த்தைகூட இவளிடம் சொன்னதில்லையே. கடைசியில் farewell partyயில தண்ணியடிச்சதுக்குத் தான்தான் காரணமெண்டு நினைச்சுத்தானே என்னை விட்டு விலகினவள். பிறகு எப்படி அவளைப்பற்றி இழிவாக நினைக்க முடியும். நான் இப்போது படுகின்ற இதே அவஸ்தைகளைத்தானே இவளும் அப்போது அனுபவித்திருப்பாள். வினை விதைத்தவன் அதை அறுவடை செய்கின்ற காலமிது. அனுபவித்தேயாக வேண்டும். இப்போதுகூட அவள் மனதிற்குள் என்னென்ன அவஸ்தைகளோ? அதை மறைத்துதான் சந்தோஷமாய் இருப்பதாய்க் காட்டிக் கொள்ளத்தான் இப்படியெல்லாம் கேட்கின்றாளோ?. நெஞ்சு கனத்துப் போனது.

* * * * *

நாட்கள் சில கழிந்தன. இப்போதெல்லாம் அம்மா ஆஸ்மாவைப்பற்றிக் கவலைப்படாமல் ஓடியாடித் திரிந்தார். அடிக்கடி என்னைச் சீண்டிக்கொண்டிருப்பதும் இல்லையெனில் யாருடனோ தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருப்பதுமாய் ஒரே சந்தோஷமாக இருந்தார். அவர் தன் உடல்நிலையைப் பற்றிக் கவலைப்படுவதாய்த் தெரியவில்லை. எனக்கென்றால் அவர் பலவீனமாகிக் கொண்டு போவதாய்ப்பட்டது.

அதுவொரு வியாழன் மாலை நேரத்துடன் வீட்டிற்கு வந்திருந்தேன், வீடெல்லாம் தூசி தட்டிப் போட்டு வந்த அம்மாவுக்கு திடீரென வீசிங் தொடங்கியது. இழுப்பு அதிகமாகியது. என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தேன். ஆட்டோவொன்றினைப் பிடித்து அம்மாவை ஏற்றிக்கொண்டு கண்டி பெரியாஸ்பத்திரிக்கு விரைந்தேன். அம்மா Emergency ward- இல் அனுமதிக்கப்பட்டார். என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்துப்போய் நிற்கையில் தொலைபேசி சிணுங்கியது.



Wednesday, November 23, 2011

வேரென நீயிருந்தாய்...(39)

அதுவொரு வெள்ளிக்கிழமை. மதிய உணவிற்காக வீட்டிற்குச் சென்றிருந்தேன். வழக்கத்திற்கு மாறாக வீடு பளிச்சென்றிருந்தது ஆச்சரியமாயிருந்தது. அம்மாமேல் ஆத்திரமாய் வந்தது. மனிசியால ஏலாது. ஏற்கனவே ஆஸ்மா வேற இழுத்துக் கொண்டிருக்குது. இந்த வள்ளலில தூசுதட்டியிருக்கிறா. இனி உழைச்சுப்போட்டுக் கிடக்கப் போறா.

“அம்மோய்......என்ன செய்யுறீங்க?”

“கொஞ்சம் பொறு வாறன்.” -குசினிக்குள்ளிருந்து குரல் வந்தது.

சிறிது நேரத்தின் பின் சிரித்தபடியே வெளியே வருகையில், கையில் மதிய உணவையும் தட்டுடன் எடுத்து வந்திருந்தாள்.

”ஏனம்மா சமைச்சனீங்க?. இதில குருந்துவத்தைச் சந்தி ராஜா கடையில எடுத்திருக்கலாமெல்லா? வருத்தத்தோட ஏன் கஷ்ரப்படுறீங்க?”

“நீ சாப்பிட்டிட்டுச் சொல்லு. மிச்சத்தைப் பிறகு கதைப்பம்”

நான்கு மரக்கறிகளுடன், வடையும், அப்பளமும் அமிர்தமாய் இருந்தன. அம்மாவின் சமையல் இன்றைக்கு வித்தியாசமாய் இருந்தது. ருசித்துச் சாப்பிட்டேன்.

“எப்பிடிச் சாப்பாடு? ருசியா இருந்துதா? பிடிச்சிருக்கா?”

“நல்லா ரேஸ்ற்றா இருக்கம்மா? என்னெண்டு சமைச்சனீங்க? வழமையிலும் விட இண்டைக்கு வித்தியாசமாயும் நல்லாயும் இருந்துது.”

“அப்பாடா! இப்ப நல்ல நிம்மதியா இருக்கு. எங்கை உனக்குப் பிடிக்காமப் போயிருமோ எண்டு பயந்து கொண்டிருந்தன்”

“நீங்க சமைச்சு எப்ப ருசியில்லாம இருந்தது? கொஞ்ச நாளா கடைச் சாப்பாடு சாப்பிட்டதாலயோ என்னவோ இண்டைக்கு இன்னும் நல்லா இருந்துது.”

என்னைப் பார்த்து அம்மா சிரித்தாள். அவளின் சிரிப்பு வித்தியாசமாய்ப் பட்டது.

“ஏனம்மா சிரிக்கிறீங்க?”

“சும்மாதான்” மழுப்பினாள்

“ஆ! உனக்குச் சொல்ல மறந்து போனன். காலமை புறோக்கர் அங்கையிருந்து போன் பண்ணினவர். ரெண்டு பெட்டையளின்ரை குறிப்பு உன்ரையோட பொருந்தியிருக்காம். நான் இன்னும் ரெண்டு கிழமையில அங்க வந்து நேரில பார்த்திற்று முடிவு சொல்லுறன் எண்டு சொன்னனான். நீயும் வாவன்.”

நெஞ்சுக்குள் எதுவோ வந்து அடைத்துக் கொண்டது. என்னுடைய முகத்தில் ஏற்படுகின்ற மாறுதல்களை அம்மா அவதானிப்பதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காய் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

“என்ன கேட்டகேள்விக்குப் பதில் சொல்லாமல் திரும்புறாய்?”

“உங்களுக்கு என்ன சொன்னனான்?”

“நீ ஓமெண்டு சொன்னபடியாலதானே புறோக்கரிட்டைக் குறிப்பைக் குடுத்தனான்.”

“அப்பப் பிறகென்ன? உங்களைத்தானே முடிவெடுக்கச் சொன்னான். நான் இதொண்டிலையுமு் தலையிடயில்லை. எனக்கு லீவும் எடுக்கேலாது”

“ஆனா உன்ரை குரல் ஒரு மாதிரியிருக்கே.”

“அதெல்லாம் ஒண்டுமில்லை. நீங்க சந்தோஷமாயிருந்தாச் சரி.”

“தம்பி. இது உன்ரை வாழ்க்கை. என்ரை காலம் இன்னும் கொஞ்சநாள் தான். அதுக்குப்பிறகு வாழப்போறது நீதான். அதால நீதான் முடிவெடுக்கவேணும்.”

“எனக்கு எது நல்லதெண்டு என்னிலும் விட உங்களுக்குத்தான் கூடத்தெரியும்.”

“ஆனா நடக்கிறதுகளைப் பார்த்தா அப்பிடித் தெரியேல்லையே”

“ஏன் இப்ப என்ன நடந்தது?”

“இல்லை. ஒண்டுமே நடக்க இல்லை. உனக்கேன் கோபம் வருகுது?”

“நான் எங்க கோவப்பட்டனான்?”

“ம்ம்ம்..... எல்லாம் காலம். சரியான கல்லுளி மங்கனடா நீ”

“இப்ப என்ன சொல்ல வாறீங்க?”

“ஒண்டுமே தெரியாதாம். நான்தான் அவருக்குச் சொல்ல வேணுமாம்”.

அம்மா என்னைச் சீண்டுவதாய்ப்பட்டது. இந்தச் சீண்டலை அவரிடம் பார்த்து எத்தனை நாளாயிற்று. அவள் நல்ல சந்தோஷமாய் இருக்கின்றார் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

“தெரியாமக் கதைச்சுப் போட்டன். என்னை விட்டிடுங்கம்மா. நான் திரும்பி faculty-க்குப் போகவேணும்.”

ஆய்வுகூடத்தினை அடைகையில் நதீஷா என்னைப் பார்த்துச் சிரித்தாள் இந்தச் சிரிப்பில் விஷமம் கலந்திருப்பதாயப் பட்டது. என்னிடம் தான் ஏதேனும் தவறோ? வீட்டில் அம்மாவோ எனககுப் பெண் பார்ப்பதற்காய் ஊருக்குப் போகின்ற சந்தோஷத்தில் என்னைப் போட்டு அறுத்திருந்தார். இங்கே இவளின் பார்வையோ விஷமமாய்ப் படுகிறது. நான்தான் குழம்பிப் போயிருக்கிறேன்.

“ஜேந்தன்! Morning நான் வரேல்லை எண்டு sir ஏதும் சொன்னவரா?”

“இல்லை. என்னோடை ஒண்டும் கதைக்கேல்லை. நீங்க காலமை வரேல்லையெண்டதே இப்பத்தான் எனக்குத் தெரியுது.”

“ஓ! ok. ok. Morning கொஞ்சம் வேலை இருந்தது. எனக்குப் wedding proposal ஒண்டு வந்தது. கிட்டத்தட்ட சரி வந்த மாதிரித்தான். அதுதான் வரேல்லாமப் போயிற்றுது.”

“ஓ! Congratulations!. அப்ப எப்ப wedding?"

'Thanks. wedding எப்ப வைக்கிறது எண்டதைப்பற்றி இன்னும் decide பண்ணேல்லை”.

நெஞ்சுக்கூடு வெறுமையாகிப் போனதானவொரு உணர்வு வந்து மனதினைச் சூழ்ந்து கொண்டது. எல்லாமே என்னை ஏகாந்தமாய் விட்டுவிட்டுத் தங்கள்தங்கள் பாட்டில் செல்வதாய் பட்டது. இன்னதென்று புரிந்து கொள்ள முடியாதவாறு எல்லவற்றின் மீதும் சினம் கிளம்பியது. வாழ்க்கையே சூனியமாகிப் போவதைப் போன்று உணர்ந்தேன்.


Tuesday, November 22, 2011

வேரென நீயிருந்தாய்...(38)

27 டிசம்பர் 2001 வியாழக்கிழமை, அம்மாவையும் வற்புறுத்தி அழைத்துக் கொண்டு னொழும்பு நோக்கிய விமானப் பயணத்தை ஆரம்பித்திருந்தேன். கடும்மழை கொட்டிக் கொண்டிருந்ததால் விமானம் இரத்மலானையில் தரையிறங்க முடியாமல் 15 நிமிடங்கள் வரை வானில் வட்டமிட்டுப் பின் கட்டுநாயக்கா சர்வதேச விமனநிலைய ஓடுபாதையில் தன் சக்கரங்களைப் பதித்தது. இரத்மலானையில் காத்திருந்த தீபனை புறக்கோட்டைக்கு வரச் சொல்லி அங்கே பேரூந்து நிலையத்தில் சந்தித்துப் பேராதனைக்குப் பயணமானோம். குருந்துவத்தையைில் ஏற்கனவே ஒழுங்குபடுத்தியிருந்த வீட்டினை அடைகையில் மணி இரவு ஒன்பதைத் தாண்டி விட்டிருந்தது.

மறுநாள் மீண்டும் வளாகத்துக்குள் நுழைந்தேன் மாணவனாக அல்லாமல். தற்காலிக போதனாசிரியராக எனது கடமையை ஏற்றுக் கொண்டு ஆய்வுகூடத்திற்குள் நுழைகையில் நதீஷா ஏற்கனவே வந்து விட்டிருப்பது தெரிந்தது. எனக்காக ஒரு புன்னகையை விரயம் செய்துவிட்டு தன்வேலைகளில் மூழ்கிப் போனாள் அவள். அவளை என்னால் புரிந்து கொள்ளமுடியாமல் இருந்தது. நான் நெருங்கிச் செல்கையில் அவள் விலகிப் போவது மனதுக்குக் கஷ்ரமாய் இருந்தது. நானும் விலகிச் செல்வதென முடிவெடுத்தேன். அவள் வீட்டில் சாப்பிட்ட கடனையும் அடைத்துவிடுவது நல்லதெனப்பட்டது. ஒரு சனிக்கிழமை தீபனையும் அவளையும் வேறு சிலரையும் வீட்டுக்கு உணவருந்த அழைத்தேன். வந்து கலகலத்துவிட்டுப் போனார்கள். அம்மாவும் சந்தோஷமாய் இருந்தாள்.

மாதங்கள் சில உருண்டோடின. புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. கிளிநொச்சி உலகின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது. கண்டியில் மழைக்காலம் முடிந்து பனிக்காலம் ஆரம்பிக்க அம்மாவிற்கு ஆஸ்மா அலுப்புக் கொடுக்கத் தொடங்கியது. அவர் படும் கஷ்டங்களைப் பார்த்து அவரை மீண்டும் ஊருக்கே அனுப்பிவிடுவதெனத் தீர்மானித்து அவரிடம் சொன்னேன்.

“உன்ரை கலியாணத்தோடதான் இனி ஊருக்குப் போறது.”

“என்னம்மா திடீரெண்டு கலியாணத்தைப் பற்றிக் கதைக்கிறியள். இப்ப அதுக்கு என்ன அவசரம்?”

“நான் இன்னும் எவ்வளவு காலம் உயிரோட இருப்பனோ தெரியாது. அதுக்குள்ள உனக்கொரு நல்ல விசயம் நடந்திற்றுதெண்டால் நானும் சந்தோஷமாப் போய்ச் சேர்ந்திருவன்.”

“உங்களுக்கென்ன விசரா? ஏன் இப்பிடியெல்லாம் கதைக்கிறீங்க?”

“ஏன்? இப்ப உனக்கு என்ன வயசு? உன்ரை வயசுக் காரர் எத்தினை பேர் பிள்ளைகூட்டிகளோட இருக்குதுகள். அதுவுமில்லாம என்னைவிட்டா இனி உனக்கெண்டு ஆரு இருக்கினம். கொப்பரைப் பற்றியும் ஒணு்டும் தெரியாது. கொக்காவும் போய்ச் சேர்ந்திற்றாள். நானும் போய்ச் சேர்ந்திற்றனெண்டால்?”

அதிர்ந்தேன். அக்காவின் வீரச்சாவினைப் பற்றி முதல்தடவை என்னுடன் பேசுகிறாள். ஆனால் அதை எவ்வளவு சாதாரணமாகச் சொல்லுகிறாள்?

“அக்கா வீரச்சாவெண்டு உங்களுக்கு எப்பிடித் தெரியும்?”

“பேப்பரில படிச்சுத்தான்”

“அப்பையேன் இதைப்பற்றி நீங்கள் முந்தி என்னோடை கதைக்கேல்லை?”

“நீயேன் கதைக்கேல்லை?”

“ஏன் உங்களைக் கவலைப்படுத்துவான் எண்டுதான்.”

“அப்பிடித்தான் நானும். சரி அதைவிடு. முடிஞ்சதுகளைக் கதைச்சு பிரியோசனமில்லை. இப்ப விசயத்துக்கு வா. அங்க புரோக்கரிட்டை உன்ரை குறிப்பைக் குடுக்கட்டே? ரெண்டு மூண்டு பேர் உன்ரை குறிப்புக் கேட்டு வந்தவை. நான்தான் குடுக்கேல்லை. நீ இஞ்சனேக்கை ஆரையும் பார்தது வைச்சிருந்தாலும் எண்டிட்டுத்தான் குடுக்கேல்லை. அப்பிடி ஆரையும் விரும்பியிருந்தாச் சொல்லு. எனக்கும் பிரச்சினையில்லை.”

“கொஞ்சம் சும்மா இருக்கிறீங்களா? இப்பத்தான் படிப்பே முடிஞ்சிருக்கு. அதுக்குள் கல்யாணமெண்டுகொண்டு...”

“அப்பன் அதையதை அந்தந்தக் காலத்தில செய்து போடவேணும். நீ ஒருத்தரையும் விரும்பியிருக்காட்டிச் சொல்லு. நான் புரோக்கருக்கு உன்ரை குறிப்பை அனுப்பிறன்.”

“நீங்க குறிப்பும் அனுப்ப வேண்டாம். கல்யாணமும் பேச வேண்டாம். கொஞ்சக்காலம் சும்மா இருங்கோ.” குரலை உயர்த்தினேன்.

“உன்னோடை கதைச்சுப் பிரயோசனமில்லை. எனக்குத் தெரியும் என்ன செய்ய வேணுமெண்டு.”

“சரி! அப்ப இந்தக்கதையை இதோட நிப்பாட்டுவமா?”

மறுநாள் வளாகத்தில் இருக்கையில் தீபன் அழைப்பெடுத்தான்.

“ஏன்ரா ஜேந்தன் கல்யாணம் கட்ட மாட்டனெண்டு சொல்லுறியாம்? அம்மா சொல்லிக் கவலைப் படுறாடா?”

“அதுக்குள்ளை உனக்கெடுத்திற்றாவா?”

“ஏன் கல்யாணம் கட்டமாட்டனெண்டுற? அப்ப உண்மையிலயே நதீஷாவை லவ் பண்ணுறியா?”

“பேய்ப்... அம்மாண நல்லா வருகுது வாயில. அவளோடை இப்ப கதைக்கிறதே இல்லை.”

“அப்பையேன் கல்யாணம் கட்டமாட்டனெண்டுற?”

“எனக்கு இப்ப கலியாணத்தில விருப்பமில்ல. நாலைஞ்சு வருஷம் போனதுக்குப்பிறகு யோசிக்கலாம்”

“ம்ம்ம்.. அவனவன் எப்பையடா கல்யாணம் கட்டலாம் எண்டு தவியாய்தவிக்கிறானுகள். உனக்குக் கொழுப்படா.”

“சரி, நீ இந்த weekend இற்கு வீட்ட வாறியா?”

“நல்லாக் கதையை மாத்திற. வேலையில சரியான busyயடா வரேல்லாது”

சில வாரங்கள் ஓடிமறைந்தன. அம்மாவிற்கு ஏலாமல் வந்துவிட்டிருந்தது. ஊருக்குப் போகச் சொன்னால்ஈ கலியாணத்திற்குத்தான் போவேன் என்று அடம் பிடிக்கத் தொடங்கியிருந்தார். மனதுக்குக் கஷ்டமாயிருந்தது.

“சரியம்மா. உங்களுக்குப் பிடிச்ச பெம்பிளையாப் பாருங்கோ. உங்களுக்கு OK யெண்டால் எனக்கும் OK. நீங்க இப்ப ஊருக்குப் போங்கோ. பெம்பிளையைப் பார்தது கல்யாணத்தை முற்றாக்கிப் போட்டு எனக்கு அறிவியுங்கோ. போட்டோ ஒண்டும் அனுப்பத் தேவையில்லை. சரியே?”

Friday, November 4, 2011

வேரென நீயிருந்தாய்...(37)

26 நவம்பர் 2001. படைத்துறை மேலாண்மையினைப் பறைசாற்றிவிட்டிருந்த தமிழர் தேசத்தின் குரலை, அது சொல்லப் போகும் சேதியை உலகு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாள். எங்கள் பல்கலைக்கழக வாழ்க்கையிலும் முக்கியமான நாள். விடுகை வருடத்தின் இறுதிப்பரீட்சையும் முடிவுற்ற நாள். பல்கலைக்கழக மாணவ வாழ்க்கையின் இறுதி நாள். வரவுகளின்றி செலவுகள் செய்து மகிழ்ந்திருந்த வாழ்வின் இறுதி நாள். எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ? என்கின்ற பிரிதலின் வலியை உணர்த்திய நாள். பசுமை நிறைந்த
நினைவுகளைச் சுமந்து கொண்டு பிரிந்த நாள்.


பரீட்சைகள் முடிவுற்றதும் பெரும்பாலான மாணவர்கள் அக்பரினை விட்டு வெளியேறுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சிலர் குழுக்களாக இணைந்து புகைப்படங்கள் எடுப்பதிலும் ஆர்வம் காட்டினர். மாலை மயங்குகையில் குழுக்களாகச் சேர்ந்து பல்கலைக்கழக வாழ்வின் இறுதித் தினத்தினைக் கொண்டாடுவதில் முனைந்தனர்.


தீபனும் நானும் இன்னும் சிலரும் ஒன்றாக டெவன்-சிற்குள் நுழைந்தோம். தலதா மாளிகைக்கு அண்மையில் அமைந்திருக்கும் Devens மற்றும் கண்டி ஏரிக்கு முன்னால் அமைந்திருக்கும் Lake Front போன்ற பிரத்தியேக உணவகங்களில் சக மாணவர்களின் கூட்டம் அதிகமாய்க் காணப்பட்டது. அது சிரேஷ்ட மாணவர்களின் பட்டமளிப்பு விழாவின் போதான cap collection-இனை நினைவிற்கு கொண்டு வந்தது. cap collection dayள எங்களால் இலகுவில் மறக்க முடியாத ஒன்று. பட்டமளிப்பு முடிந்து வரும் ஒவ்வொரு மாணவர்களிடமும் குழுக்களாகச் சென்று கைகுலுக்கி அவர்களை வாழ்த்திவிட்டு தொப்பியை நீட்ட நூறு ரூபாயிலிருந்து ஐநூறு ரூபாய் வரை ஒவ்வொருவரும் தொப்பியினுள் இடுவார்கள். எங்கள் சேகரிப்பு முடிந்ததும், அன்றைய இரவே கண்டி நகருக்குள் இருக்கும் பிரத்தியேக உணவகங்களுக்குள் சென்று விடுவோம். தண்ணியடிப்பவர்கள் lake front -இற்கும் மற்றவர்கள் devens -இற்கும் செல்வது வழமை. சேர்த்த காசை அன்றைக்கே செலவு செய்துவிட வேண்டும். அதுவம் தின்பண்டங்களுக்கு மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டுமென்கின்ற எழுதப்படாத விதியிற்கேற்ப விரும்பிய அனைத்து வகை உணவுகளையும் ருசி பார்த்து விட்டு இனி எதுவும் முடியாது என்கின்ற நிலையிலும் கையில் காசு மிச்சமிருக்கும். பின் நொறுக்குத் தீனிகளையும் வாங்கிக்கொண்டு van-உம் பிடித்துக் கொண்டு விடுதிகளுக்குத் திரும்புகையில், எங்களுக்கு பணமளித்த பட்டமளிப்பு நடைபெற்ற மாணவர்களில் சிலர் பேரூந்திற்கு காத்திருப்பதையும் காணக்கூடியதாகவிருக்கும்.


Devens Special இனை முடித்துவிட்டு விடுதி திரும்புகையில் நெஞ்சு கனத்துப் போய்க் கிடந்தது. அடுத்து என்ன என்கின்ற கேள்வி எழுந்தது. “தம்பி என்ன செய்கிறீங்க?” என்கின்ற பெரிசுகளின் கேள்விகளுக்கு இதுநாள் வரையில் “இஞ்சினியருக்குப் படிச்சுக் கொண்டிருக்கிறன்” எண்டு பெருமையாச் சொன்னதை இனிச் சொல்லேலாது. உத்தியோகம் புருஷ லட்சணம் என்பார்கள். வேலையொண்டு எடுக்கும் வரைக்கும் இப்பிடியான கேள்விகளை எதிர்கொள்வதன் தர்மசங்கடத்தினை இனித்தான் உணரப் போகின்றோம். பெரும்பாலான ஆய்வுகூடங்களில் தற்காலிக போதானாசரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. பட்ட மேற்படிப்பை மேற்கொள்வதற்கு விரும்பியிருந்த மாணவர்களே அவற்றிற்கு விண்ணப்பிப்பதில் ஆர்வம் காட்டியிருந்தனர். ஏனையோர் வேலை தேடுவதில் ஈடுபட்டிருந்தனர். தீபனுக்கு கொழும்பில் Site Engineer வேலை ஏற்கனவே ஏற்பாடாகியிருந்தது. மேற்படிப்பில் ஈடுபடுவதா அல்லது வேலை தேடுவதா என்கின்ற குழப்பத்தில் என்னால் எந்த முடிவினையும் எடுக்க முடியாமலிருந்தது.


இனிமேலும் அம்மாவைத் தனியே விட முடியாது. அவள் பாவம். வயதான காலத்தில் தனியே விடுவதில் எனக்கும் இஷ்டமில்லை. Site Engineer-ஆகப் போய் கொழும்பில் வேலை செய்தால் கிடைக்கும் வருமானத்தில் அம்மாவையும் கொழும்பில் கொண்டு வந்து வைத்திருக்க முடியாது. நாட்டு நிலைமைகள் விரைவில் சீர்படும் அறிகுறிகள் தென்பட்டன. அப்படியொரு நிலை உருவாகின் civil Engineers இற்கு வடகிழக்கில் நல்ல demand ஏற்படும். நிறைய NGO-களில் வேலைவாய்ப்புகள் உண்டாகும் என்கின்ற பரவாலான அனுமானத்தால் அதுவரை காலமும் தற்காலிக போதனாசிரியராக வேலை செய்யலாம் என்கின்ற எண்ணத்தில் நானும் அதற்கு விண்ணப்பித்து விட்டிருந்தேன்.


இரு தினங்களின் பின்னர் Fluid Lab- இற்காக நடாத்தப்பட்ட நேர்முகத்தேர்வில் நதீஷாவையும் அங்கே காணக்கூடியதாக இருந்தது. farewell party-யின் பின்னர் அவள் என்னிடமிருந்து விலகியிருப்பதாகவே பட்டது. என்னுடனான சந்திப்புகளை அவள் தவிர்பபதை என்னால் அவதானிக்கமுடிந்தது. விலகியிருக்கையில் நெருங்கி வந்தவள், நெருங்கி வருகையில் விலகிச் செல்வது மனதிற்கு கஷ்டமாய் இருந்தது. வலியப் போய் அவளுடன் உரையாடுவதற்கு என்னுடைய ஈகோ இடம் கொடுக்கவில்லை. அத்துடன் அக்காவைப் பற்றிய உண்மையை அவளிடம் இனிமேலும் மறைப்பது சிரமமாயிருக்கும் என்பதால் முன்னர் இது பற்றித் தீபனிடம் கேட்டதற்கு அவன் என்னைத் திட்டித் தீர்த்திருந்தான்.


இதெல்லாம் சும்மா Infatuation. இன்னும் கொஞ்ச நாளில கம்பஸ் முடிஞ்சு நாங்களெல்லாம் பிரிஞ்சிருவம். அதுக்குப் பிறகு நீங்க ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் மறந்திருவீங்க. கண்டி மழையையும் கம்பஸ் காதலையும் நம்பேலாது எண்டு சொல்லுறது உனக்குத் தெரியாதா?