Thursday, October 29, 2009

வேரென நீயிருந்தாய்...(6)

1997 ஓகஸ்ற் திங்கள் 11ஆம் நாள் காலை, எமக்கான தீவிர ஆங்கில வகுப்புகள் (Intensive course) ஆரம்பமாயின. எமது வசிப்பிடமாக, பேராதனை முதல்நாளே மாறிவிட்டிருந்தது. கண்டியின் கடுங்குளிரை விரட்டி காலைக்கடன்களை முடித்துவிட்டு குருந்துவத்தைச்சந்தியை நோக்கி இறங்கிக்கொண்டிருந்தோம். எதிர்பார்த்ததைப்போன்றே சிரேஷ்ட மாணவர்கள் வழிமறித்தாலும் வகுப்பிற்கு நேரமாகிவிட்டதால் எம்மை யார் கூப்பிட்டாலும் திரும்பிப் பார்க்காமல் ஓடச்சொல்லிப்பணி்த்தார்கள். சற்று நேரத்திலேயே, எம்மை நிற்கச்சொல்லி சில குரல்களும் ஓடச்சொல்லி சிலகுரல்களும் எம்செவிகளை வந்தடைந்தாலும் ஓடுவதே அவர்களிடமிருந்து தப்புவதற்கான வழி என்பதால் ஓடிக்கொண்டிருந்த எம்மை மிதிவண்டியில் துரத்திவந்த இருவர் வழிமறித்தனர்.

“நிக்கச்சொன்னது காதில கேக்கேல்லையோடா உங்களுக்கு?”

“டேய்! நீதான் கோடுபோட்ட சேட்டு, இஞ்சகிட்ட வாடா.”

பளாரென்ற ஓசைகேட்டுத்திடுக்கிட்டேன். சீலன் தன் கன்னத்தைத்தடவிக் கொண்டிருந்தான். அவனின் விழியோரங்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தன.

“உனக்கு எங்களப்பாத்தாச் சிரிப்பு வருகுதோ? பேய்ப்... என்னடா பேர் உனக்கு?”

“பார்சிலோனா”

“ஆரடா வச்சது?”

“ஒனரபிள் சுப்பர் சீனியர் செந்தூரன்”

“உங்கொப்பாம்மா வச்சபேர் என்னடா?”

“தில்லைநாதன் சாந்தசீலன்”

“மவனே இண்டைக்கு பின்னேரம் கிளாஸ் முடிய நேர பேய்வீட்டுக்கு வாற. வேறையாரும் கூட்டிக்கொண்டுபோய்ற்றாங்கள் எண்டு சொல்லி வராம விட்டியெண்டா நீ செத்தாய். எல்லாரும் ஓடுங்கடா”

பின்னங்கால் பிடரியில் பட ஓடத்தொடங்கினோம்.

வகுப்பின் இடைவேளையில்,

“என்னை ஐசே! உங்களோட இருக்கிற சீலனை பேய்வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறாங்களாம். அவன் போனா பிறகு அடுத்தடுத்து நீங்களும் போக வேண்டி வரும்.” -என்றான் எனது வகுப்பில் இருந்த நண்பன்.

“பேய்வீடு எங்கை ஐசே இருக்கு? அங்க போனா என்ன செய்வாங்கள்?”

“குருந்துவத்தையிலதான் இருக்கு. அங்க விஐபி-மாரத்தான் கொண்டு போறவங்கள். அங்க போனா முறிமுறியெண்டு முறிச்சுப்போடுவாங்கள். கறண்ட்ஷொட் எல்லாம் குடுப்பாங்கள். கீழ விழேக்குள்ள முழங்கைச் சில்லெல்லாம் வெடிக்கிறமாதிரியிருக்கும். போனவருஷம் எங்கட இம்மீடியற் சீனியர்ஸ்ஸில கறண்ட்ஷொட் வாங்கினவையின்ர இரத்தம் இப்பையும் சுவரில இருக்காம் ஐசே.”

மண்டை விறைத்தது. எப்படி இந்த பகிடிவதைக்குள்ளால் தப்பிப் பிழைக்கப்போகின்றோமோ என்கின்ற பயம் பிரமாண்டமாய் மனமெங்கும் வியாபித்தது. அதற்குள் இன்னொரு சக மாணவன் வந்து எல்லோரது விபரங்களையும் ஒரு தாளில் திரட்டிக்கொண்டிருந்தான். அது சிரேஷ்ட மாணவர் ஒருவரால் அவனுக்கு வழங்கப்பட்ட கோர்ஸ்வேர்க் (course work).

“ஐசே சீனியர்ஸ்ட்ட குடுக்கமுதல் போட்டோக்கொப்பியொண்டு எடுத்து வச்சிற்றுக்குடும்.” என்ற நண்பனிடம் எதற்கு என்றேன்.

”எங்களிட்டையும் இந்தக் கோர்ஸ்வேக்கத் தருவாங்கள். இப்பையே ஒரு கொப்பி எடுத்து வச்சிற்றால் பிறகு நாங்கள் அலையவேண்டியிருக்காது” என்றான்.

அவன் இரண்டாம் தடவையில் பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்ததால் தற்போது எமக்கு immediate seniors ஆக இருக்கும் அவனது பாடசாலைக்கால வகுப்புத்தோழர்களிடமிருந்து எல்லாத்தகவல்களையும் அவன் அறிந்து வைத்திருந்தான்.

மாலை வகுப்புக்கள் முடிந்ததும் அவனுடனேயே வேறு பாதையால் இறங்கி புகையிரதப்பாதை வழியே நடந்து பனிதெனியாவை அடைந்து பின் பேருந்தி்ல் ஏறி கலகாச் சந்தியில் இறங்கி மீண்டும் கம்பளைக்கான 718 இலக்க பேருந்தினைப்பிடித்து குருந்துவத்தைச் சந்தியில் இறங்க அதிர்ஷ்ட வசமாய் யாரும் இல்லாதிருக்கவே சந்திக்கடையி்ல் வெதுப்பியினை (bread) வாங்கிக் கொண்டே எனது அறையினை அடைய அறை நண்பர்களில் ஒருவன் ஏற்கனவே வந்துவிட்டிருந்தான்.

பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5

2 comments:

  1. it is very interesting,
    after thet?

    ReplyDelete
  2. அடுத்து என்னவே தெரியாது,ஆனால், இந்தக்கதை இப்படியே போய் வரப்பிரகாசில் முடிந்தது.

    ReplyDelete