Thursday, May 6, 2010

வேரென நீயிருந்தாய்... (11)


அது முதலாண்டிற்கான கற்கை நெறிகள் ஆரம்பமாகி இரு தினங்கள் கழிந்து வந்த முதலாவது புதன் கிழமை. செவ்வாய்க்கிழமை முழுதும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட விரிவுரைகளை விளங்கிக்கொள்ள முடியாமலிருந்ததால் தூக்கக்கலக்கத்தில் நாள் கழிந்திருந்தது. புதன் காலை Elect lab-இல் practical வகுப்பிற்குள் நுழைந்தேன். A2-6 குழுவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த மேசையை அடைந்துவிட்டிருக்கையில் வேறு யாரும் வந்து விட்டிருக்கவில்லை. மற்றைய குழுக்களில் அனேகமாக எல்லோருமே வந்து விட்டிருந்தனர். மூவர் கொண்ட குழுவில் நான் மட்டுமே தனித்திருந்தேன். என்னுடைய குழுவிற்கு வரவேண்டிய மற்றைய இருவரும் யாரெனவும் தெரியவில்லை. ஜெயக்கொடியும் என்னுடைய குழுவில்தான் இருப்பதாகத்தெரிந்திருந்தாலும் அவளை Surveying-இலோ அல்லது Drawing-இலோ காணக்கிடைக்கவில்லை. ஆய்வுகூடங்களில் என்னுடைய குழுவில் வருகின்ற உறுப்பினர்களைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணியிருந்தாலும் அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்த்திருக்கவில்லை.

சிறிது நேரம் கழித்து எனது மேசையை நாடி நதீஷா அரக்கப்பரக்க ஓடி வருவது தெரிந்தது. அட! Elect lab-இலும் இவள் எனது group mate தானா? அவள் வரவும் போதனாசிரியர் எமது மேசைக்கு வரவும் நேரம் சரியாயிருந்தது.

“Only 2 ppl? where is the other one?”

போதனாசிரியரின் வினாவிற்கு மௌனமாயிருந்தோம்.

“Do you know who is your other group mate?”

என்னை நோக்கிக் கேள்வியை வீசினார். தெரியாது என்பதற்கு அடையாளமாய் தலையசைத்தேன்.

“You?”
அவளும் பதிலுக்கு உதட்டைப் பிதுக்கினாள்.

“OK. Let me check the name list”

பெயர் நிரலைப் பார்த்து விட்டு “Are you Jeyarajan?” என்றவருக்கு


“No, I'm Jeyanthan” என்றேன்.

“Oh! OK, then he is the one abscent”

என்று சொன்னதைக் கேட்டதும் திகைப்பாயிருந்தது.

அப்படியானால் ஜெயக்கொடி? நான் அன்றைக்குப் பார்த்தபோது எனது பெயருக்கு முன்னால் ஜெயக்கொடி என்று இருந்ததே. தப்பாய்ப் பார்த்து விட்டேனா? இல்லை அப்படிக்கனவேதும் கண்டேனா? குழப்பமாயிருந்தது. ச்சே! இப்படி ஒருபோதும் குழம்பியதில்லை. எல்லாம் பகிடிவதை செய்கின்ற வேலைதான். அறை நண்பன் கடிக்கப்போகின்றான். அவனுக்கு எந்தவொரு குழுவிலும் பெண்கள் இல்லையென்பதை வைத்து அவனை வேறு, நன்றாக வெறுப்பேற்றியிருந்தேன்.

“OK, Show me your practical book's cover page.”

இருவரும் போதனாசிரியரிடம் எங்களது கொப்பிகளைக் கொடுத்தோம். வாங்கி அவற்றைச் சரிபார்த்தவர் மீண்டும் எங்களிடமே திருப்பித் தந்தார். என்னிடம் தந்ததை வாங்கி மேசையில் வைக்கையில் எதேச்சையாய் பார்த்தேன்.

Name: Miss. N. Jeyakkody
Group: A2-6
.....

அதிர்ச்சியாயிருந்தது. அப்படியானால் இவள்தான் ஜெயக்கொடியா? Surveying-இல் தன் பெயர் நதீஷா என்றாளே!. ஓ! நதீஷா ஜெயக்கொடி. அப்படியானால் ஜெயக்கொடி என்பது இவளின் முதற்பெயர். ச்சே! என்னவொரு மடத்தனம்! சிங்களத்தில் ஜெயக்கொடி என்பது ஆணின் பெயர் என்பது தெரிந்திருந்தும் இத்தனை நாளும் ஜெயக்கொடியை ஒரு தமிழ்ப்பெண்ணாக அல்லவா நினைத்துக் கொண்டிருந்திருக்கின்றேன். எனது குழுவில் ஒரு பெண்தான் என்பது தெரிந்திருந்தும், இவள் தனது பெயர் நதீஷா என்று சொல்கையில் 'J' வரிசையில் இருக்கும் பெயர்களுக்கிடையில் 'N' வரிசையைச் சேர்ந்த இவள் எப்படி வரமுடியும் என்பதை யோசித்துப்பார்க்கத் தவறியிருக்கிறேன். எப்படி என்னால் இந்த வட்டத்தை விட்டு வெளியே சிந்திக்க முடியாமல் போனது?

Miss. N.Jeyakkody என்கின்ற பெயரைப் பார்த்ததும், அந்தப் பெண்ணின் பெயர்தான் ஜெயக்கொடி என்று என் மனம் எதேச்சையாய் நம்பியிருக்கிறது. ஆகவே அவள் தமிழ்ப் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று அது முடிவு செய்து விட்டிருக்கிறது. அந்த முடிவினை என்மனமும் ரசித்திருக்கிறது. ஆகவே அந்த முடிவினை உண்மையென்று அது நம்பத் தொடங்கியிருக்கிறது.

ச்சே! என்ன ஒரு முட்டாள்தனமான மனம்! அது ஒன்றினை விரும்பி, அதை நம்பத் தொடங்கிவிட்டால், அதன் பின்னர் அதுதான் உண்மையென்று அடம்பிடிக்கத் தொடங்கி விடுகிறது. அது சரியா தவறா என்கின்ற ஆராய்ச்சியில் அது இறங்குவதில்லை. தனது நம்பிக்கைக்கு வெளியே வந்து சிந்தித்துப் பார்ப்பதில் அது ஆர்வம் காட்டுவதில்லை. அல்லது காட்டமுடியாதபடி மூளையை மழுங்கடித்துவிடுகின்றது.

'Think out of the box' என்பார்கள். ஒரு பெட்டிக்குள் அல்லது வட்டத்திற்குள் மாட்டுப்பட்டு நிற்பவர்களால் பலதையும் சிந்திக்க முடியாமல் போய்விடுகிறது. மனித உறவுகளுக்குள் ஏற்படுகின்ற பெரும்பாலான பிரச்சனைகளுக்கும் விரிசல்களுக்கும் இதுதானே மூலகாரணமாய் அமைகிறது. தங்களைச் சுற்றி ஒரு வேலியை வரித்துக்கொண்டு அதற்கு அப்பாலிருக்கின்றவை பற்றிய சிந்தனைகளின்றிப் போவதால் நான் சொல்வதுதான் சரி, நான் செய்வதுதான் சரி என்கின்ற பிரக்ஞையில் மற்றவர்கள் பக்கமிருக்கின்ற நியாயத்தன்மைகளை மறுக்கும் எண்ணம் மனதிற்குள் புரையோடிப்போய் விடுகிறது. இந்த மறுதலிப்பும் அதை வெளிக்காட்டும் பாங்கும் உறவுகளுக்குள் விரிசல்களை ஏற்படுத்தி விடுகிறது.

”என்ன அதுக்குள்ள டூயட்டா?”

-காதோரமாகக் கிசுகிசுத்த குரல் சிந்தனையைக் கலைத்தது. போதனாசிரியரின் நக்கல்ப் பார்வையைத் தவிர்ப்தற்காய் தலையைக் குனிந்து கொண்டேன்.

“அவளின்ர கொப்பியை அவளிட்டக் குடுத்திற்று உன்ரைய வாங்கு” என்றவர்

“OK. please go through the instruction and connect the circuit. Don't switch on the power. Once you connected it, first show it to me. OK?”

கூறிவிட்டு அடுத்த குழுவை நோக்கி நகர்ந்தார்.


பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10

2 comments: