Tuesday, July 28, 2009

நன்றி நவிலலும், பிரியாவிடையும்

யார் சொன்னது காலம்
தொடர்ச்சியானதென்று?
ஒவ்வொரு கணப்பொழுதுகளும்
ஒன்றுடனொன்று சம்பந்தமேயில்லாமல்...

ஒவ்வொரு கணப் பொழுதினையும்
தனித்தனியாகவே வெட்டியகற்றியவாறே...
வேதாளம் வீழ்த்தும் விக்கிரமாதித்தனாய்
என்பொழுதுகள் கழிந்துகொண்டிருக்கின்றன.

என்றைக்கேனும் எனக்கானவொருநாளில்
நானுமந்த “முறைதெரியாக் கதை”யிற்கான
பதிலினை அளிக்கவேண்டியதாயிருக்கலாம்.
அன்றைக்கெந்தன் சுயமழிந்து போயிருக்கும்.

நாள்தோறும் மாறிவரும் சுயம்
நாளைகூட மறைந்து போகலாம்
அதுகூடிவரும் நன்நாளினில்
நான்கூட மறைந்து போகலாம்.

அதற்குள் என் சுயம்கரைத்தல் வேண்டும்.
நானேயகிலமாகி, அந்தவகிலமும் நானாகி
நானும் நானாகி, எல்லாமும் நானாகி
நான்கரைந்து எங்குமாதல் வேண்டும்.

அப்போது நீங்கள் நானாகியிருக்கலாம்.
நான் உங்களிலும் நிறைந்திருக்கலாம்.
யாரறிவர்? அப்போது நான் மறந்திருக்கலாம்
இல்லை நீங்களேயென்னை துறந்திருக்கலாம்.

ஆதலினாலென் அன்புக்குரியோரே!
இதுவரைகாலும் நினைவுப் பாளம்பாளமாய்
கணங்களை வெட்டிக் கட்டிவைத்திருக்கும்
காலக் குவியலுக்குளிருந்து கூறுகிறேன்.

நன்றி! நன்றி!! நன்றி!!!
என்னுற்ற உறவுகளே! நயமான நட்புகளே!
எதிரியாயென்னை எண்ணிக்கொண்டோரே!
பட்டும்படாமலும் பழகிக்கொண்டோரே!

உங்களிடமெந்த வேறுபாடுகளோ - அன்றி,
கருத்துமுரண்பாடுகளோ இப்போதெனக்கில்லை.
ஏற்றுக்கொள்ளுங்கள் என்பிரியாவிடையினை
ஏனெனில் நாளைநான் கரை(லை/ல)ந்துபோயிருக்கலாம்

Sunday, July 26, 2009

கட்டுடைத்தல்



அடை வைக்கப்பட்டிருந்தவென்
நினைவுப் பட்சியின்று தன்
கோதுடைத்து புறப்பட்டது.



கோழிக்குஞ்சின் கதகதப்புடன்,
படபடத்தவதன் சிறகுகளுடன்
உள்ளங்கைக்குள் உள்வாங்கினேன்.


இறகுகளை வருடிக்கொடுக்க,
பீமனுக்கான அநுமனின்
விஸ்வரூபமாயது வெளிப்பட்டது.


முடியாது. இனி முடியாது.
இதுவென்றுமினி மடியாது
என்றவாறேயது புறப்பட்டது.


அடைகாத்தல் முடிந்து, இனி
அடைத்துவைத்தல் முடியாது
ஆதலினால் விட்டுவிட்டேன்.



நினைவுப் பறவையினித்தன்
கட்டுடைத்து சிறகுவளர்க்கும்
இமயத்தின் சிகரம் செல்லும்.



சூரியவொளிதாண்டி சூனியவெளிதாண்டி
விரிவடையும் பிரபஞ்சங்கடந்துமது
சிறகினை விரிக்கும்.



நான்வளர்த்த குஞ்சினைத்
தனித்தனுப்ப தடுமாறும்
தாய்மை மனமெனக்கு.


ஆதலினால், அப்பட்சியின்
உறவுகளை உங்கள்
நெஞ்சங்களில் அடைத்திருப்போரே


திறந்திடுங்கள் உங்கள்
உள்ளக் கூண்டுகளை. என்
எண்ணப்பறவை புறப்படட்டும்.



தன் இருத்தலின் எந்தவொரு
அடையாளத்தையும் அதற்கு
விட்டுவைக்கும் விருப்பவி்ல்லை.


இறகுகள் ஒவ்வொன்றாய்
உதிரட்டும். அதன் உதிரத்தின்
கடைசிச் சொட்டும் தீரட்டும்.


ஈற்றணுவும் இற்றுப்போகும்வரை
அது பறக்கட்டும். பறந்து அந்த
பிரபஞ்சம் அளக்கட்டும்.

Thursday, July 23, 2009

ஆங் சான் சூகீ அம்மையாரும் அமைதிக்கான மகாத்மா காந்தி விருதும்.

நேற்றைய வானொலிச் செய்தியின் போது, மியன்மார் நாட்டின் எதிர்க்கட்சித் (National League for Democracy) தலைவியான திருமதி ஆங் சான் சூகீ (Aung San Suu Kyi) அம்மையாருக்கு அமைதிக்கான மகாத்மா காந்தி விருதினை வழங்கிக் கௌரவித்திருக்கும் செய்தியினை கேட்கையில் நெஞ்சுக்குள் ஒருவித பரவசம் வந்தாலும் செய்திமுடிவின் போதே அதைக்கேட்டதால் அதை வழங்கியது யார் அல்லது எது என்பதை அறியமுடியவில்லை. இதுவும் யாரும் ஒரு பதிவரின் வேலையோ என்ற ஐயமும் எழாமலில்லை :-).

இவை எல்லாவற்யும் மீறி, மகாத்மா காந்தியின் பெயரில் வருவதால் ஒருவேளை இது இந்திய அரசின் விருதாக இருக்குமோ என்று எழுந்த சந்தேகம். “உனக்கு எதிலதான் பகிடிவிடுகிறது என்கின்ற விவஸ்தையே இல்லையா?” என்று உள்ளிருந்து கேட்ட குரல் ஒன்றினால் அடுத்தகணமே அடங்கிப்போயிற்று. பின்னர்தான் அது தென்னாபிரிக்காவினைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள மகாத்மா காந்தி அறக்கட்டளை நிறுவனத்தினால் அவ்விருது ஆடிமாத்ம் 20ம் திகதியன்று (அன்று தான் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன.) அவரின் சார்பில் மியன்மாரின் முன்னாள் பிரதமர் தியென் வின் அவர்களிடம் வழங்கப்பட்டதாகவும் தெரியவந்தது. கடந்த வருடம் அவ்விருது தென்னாபிரிக்காவின் முன்னாள் தலைவரான திரு நெல்சன் மண்டேலா அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இவ்விருவருமே இவ்விருதிற்கு முன்னரேயே சமாதானத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விருதுகள் பற்றிக் கதைப்பதென்றால் (பேசுவதென்றால்) கதைத்துக்கொண்டே போகலாம். சிலருக்கு ஏதாவது விருது வழங்கப் பட்டே ஆகவேண்டும் என்பதற்காகவே சில விருதுகள் உருவாக்கப்படுகின்றன. சில விருதுகள் எதற்காக வழங்கப்படுகின்றன என்கின்ற தெளிவே இல்லாமலும் சிலருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இப்படியே எழுதிக்கொண்டு போனால், கடிதங்கள் எழுதிஎழுதியே களைத்துப்போகாமல் இருந்ததற்காக சகிப்புத்தன்மைக்கு யுனெஸ்கோவிடம் விருது பெற்றவர்களைப் போல சிலவேளைகளில் எனக்கும் ஏதேனும் விருதுகள் கிடைக்கக்கூடும் என்கின்ற நப்பாசையும் இருக்கத்தான் செய்கிறது. என்ன? கடிதம் எழுதுவதென்றால் முத்திரைக்குச் செலவு செய்யவேணும். அத்துடன் ஒரு கடிதத் தலைப்பும் (letter pad) வேணும். பதிவு எழுதுவதில் உள்ள சௌகரியம் இவை எவையுமே தேவையில்லை. யுனெஸ்கோ காரர்கள் பதிவுகளையும், பதிவர்களையும் கொஞ்சம் கவனிப்பார்களாக!

1945 ஆனி 19 இல் பிறந்த ஆங்சான் சூயி அவர்களுக்கு இரண்டு வயது இருக்கையில் 1947 ஆடி 19 இல் அவரது தந்தை ஜெனரல் ஆங் சான் (Aung San) அவர்கள் படுகொலை செய்யப்பட்டார். பின் 1948 தை 04ம் திகதி பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து பர்மா (அப்போது மியன்மார், பர்மா என்றே அழைக்கப்பட்டது) விடுதலையாகிறது. தனது கல்வியை இந்தியாவைத் தொடர்ந்து பிரித்தானியாவிலும் பின் அமெரிக்காவிலும் நிறைவு செய்த ஆங்சான் சூயி அவர்கள் 1972 தை 01இல் பிரித்தானியரான மைக்கேல் என்பவருடன் திருமண பந்தத்தில் இணைந்தார். 1988இல் தாயாரின் உடல்நிலை பாதிப்படைந்ததைத் தொடர்ந்து மியன்மாருக்குத் திரும்பிய அவர், 1988 புரட்டாதி 24இல் உருவாக்கப்பட்ட NDL (National League for Democracy) இன் பொதுச்செயலாளராக பதவியேற்றார். 1988 மார்கழி 27 இல் தாயார் மரணமடைய, 1989 தை 02 இல் நடைபெற்ற தாயாரின் இறுதிக்கிரியைகளை அடுத்து மியன்மார் அரசியல் களத்தில் ஆங்சான் சூகி அவர்கள் தீவிரமாகக் களமிறங்கி இராணுவ அடக்குமுறைக்கெதிராகப் போராடினார். அதைத் தொடர்ந்து 1989 ஆடி 20இல் அவர் இராணுவ அரசால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 1990 வைகாசி 27 இல் நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி 82% பெரும்பான்மையைப் பெற்றிருந்த போதிலும் இராணுவ ஆட்சியாளர்கள் அவரது கட்சியினை ஆட்சி பீடத்தில் ஏறவிடாது தடுத்ததுடன், ஆங்றான் சூகி அவர்கள் வெளிநாட்டுக்காரரை (பிரித்தானியர்) மணம் செய்து கொண்டதால் அவருக்கு அரசியலில் ஈடுபட அருகதை இல்லை என்றும் அறிவித்து விட்டனர். 1991 இல் சமாதானத்திற்கான நோபல் பரிசினையும் அவர் ஆங்சான் சூகி அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இப்போது, இந்தியாவின் தேசபிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் பெயரில் அமைதிக்கான ஓர் விருது ஆங்சான் சூகி அம்மையாருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதே இந்தியாவை இப்போது தன் கையசைப்பில் வைத்திருப்பவர் ஒரு வேற்றுநாட்டுப் பெண்மணியென்பதும் குறிப்பிடத்தக்கது.



எனது தமிழக நண்பர்களில் பெரும்பாலனவர்களிடம் உரையாடியதில் இருந்து நான் தெரிந்து கொண்டது, அவர்கள் இப்போதும் சோனியா காந்தியும் (ரஜீவ் காந்தியும்) மகாத்மா காந்திக்கு உறவு என்றே எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். பலர் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததே மகாத்மா காந்தியால்தான் என்றே நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலரே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றியும் அவரது இந்திய தேசிய இராணுவத்தை (INA) பற்றியும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஒரு சிலரோ INA-ஐயும் சிப்பாய்க்கலகத்தையும் சேர்த்துக் குழம்புகின்றனர். பெரும்பாலோனோருக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பற்றியோ அல்லது V.V.S.ஐயர் என்று அழைக்கப்படுகின்ற வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் அவர்களைப் பற்றியோ இந்திய சுதந்திரத்திற்கான அவர்களின் பங்களிப்புகள் பற்றியோ தெரியவில்லை. இவ்வளவும் ஏன், கேரளாவுடனான முல்லைப் பெரியாறு பிரச்சனை பற்றியோ அல்லது கர்நாடகாவுடனான காவிரி நதிநீர்ப்பங்கீட்டுப் பிரச்சனை பற்றியோ, உச்சநீதிமன்றின் தீர்ப்பின் பின்னும் அவை இன்னமும் அமல்படுத்தப்படாதிருப்பதற்கான காரணங்கள் பற்றிய அறிவுமில்லால், அறியும் ஆர்வமுமில்லாதவர்களாகவே அவர்கள் காணப்படுகிறார்கள். காஷ்மீர்ப் பிரச்சனையில் சீனாவிடம் இந்தியா அடைந்த படுதோல்வியின் பின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அறிஞர் அண்ணா அவர்கள் “போராட்டத்திற்கான காரணிகள் இன்னமும் அப்படியேதான் இருக்கின்றன. எனினும் இப்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு எமது போராட்டத்தினைக் கைவிடுகிறோம்” என்ற அறிவிப்பின் பின் போராட்டத்திற்கான காரணிகளையே அவர்கள் மறந்து விட்டார்கள்.

இந்தியா மிகப்பெரியவொரு ஜனநாயக நாடென்றும், அது மகாத்மா காந்தியின் வழியில் அகிம்சையையே ஆதரிக்கின்றது என்றுமே அதிகளவினர் இப்போதும் எண்ணுகிறார்கள். அப்படி நினைப்பவர்கள் ஆசாத் காஷ்மீரில் இந்தியக் கூலிப்படைகள் செய்யும் அநியாயங்களை அறியாதவர்கள். இதைப் பற்றி ஊடகங்கள்கூட அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை என்பது கவலைக்குரிய விடயம். ஆனாலும் இந்தியக்கூலிப்படைகள், அவை எதுவாயிருந்தாலும் எப்படிப்பட்டவை என்கின்ற பட்டறிவு எங்களுக்கு நிறையவே உண்டு. மகாத்மா காந்தியின் அகிம்சாவாதக் கொள்கைகளை இன்னமும் இந்தியா மதிக்கிறது என்று இப்போதும் நம்புகின்றவர்கள் அதன் சீத்துவத்தை அறிய உங்கள் நாட்காட்டிகளில் 1987 புரட்டாதி 26ம் திகதியை சற்றே திருப்பிப் பாருங்கள். வெட்கமாயில்லை?

Monday, July 20, 2009

மனிதகுலத்தின் மாபெரும் பாய்ச்சல் - வரலாற்றில் இன்று

இது எனக்கு ஒரு அடிதான், ஆனால் மனிதகுலத்திற்கு இதுவொரு பாய்ச்சல்.
-நீல் ஆம்ஸ்ரோங்

20-07-1969 மனிதகுலம் ஒரு மாபெரும் பாய்ச்சலை நீல் ஆம்ஸ்ரோங்கினூடாக நடத்தியிருந்தது. பூமியிலிருந்து முதன்முறையாக மனிதகுலப் பிரதிநிதிகள் தமது உபகோளிற்கான விஜயத்தினை வெற்றிகரமாக நிகழ்த்தியிருந்தனர்.விண்வெளிஆதிக்கப் போட்டியில் முதற்தடவையாக சோவியத் யூனியன், யூரிகாகரினின் எதிர்பாராத விபத்து
மரணத்தினால் தவிர்க்கமுடியாமல் ஐக்கிய அமெரிக்காவிடம் தோல்வியைத் தழுவியிருந்தது. இன்றுடன் அமெரிக்காவின் அந்தச் சாதனையின் நாற்பது ஆண்டுகள் நிறைவு பெறுகையில், இந்தப் பூமிப் பந்தில் எத்தனையோ மாற்றங்கள். அன்றைய நாளில் விரைவிலேயே செவ்வாய்க்கிரகத்திற்கும் மனிதன் சென்றுவிடுவான் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதை அநேகமாக சோவியத் யூனியனே செய்துகாட்டும் என்ற நம்பிக்கையும் நிலவியது. ஆனால் இன்று?

அந்த ராட்சத நாடே சிதறுண்டு சின்னாபின்னமாகி... “மனிதன் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்” என்கின்ற பழமொழிக்கு ஆதாரமாய்... அல்லது விதி வலிது என்பதை மெய்ப்பிப்பதாய்... அப்படி நினைப்பவர்கள் கொஞ்சம் மாற்றி யோசித்தீர்களானால் அல்லது கழுகுக் கண்கொண்டு பார்ப்பீர்களானால் எது அந்த விதி அல்லது எந்தத் தெய்வம் சோவியத் யூனியன் சிதறுண்டு போக நினைத்தது என்பதைப் புரிந்து கொள்வது அப்படியொன்றும் சிதம்பர சக்கரமல்ல.

மனிதகுலப் பிதிநிதிகள் நிலாவில் கால்தடம் பதித்து பல்லாண்டுகள் கழிந்த பின்னரும் கூட பாலர் வகுப்பில் எங்களுக்கு வழங்கப்பட்ட சைவநெறி நூலில் “கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்பொறி அரவும் வைத்தார் திங்களைத் திகழ வைத்தார் ....” என்று சொல்லி சந்திரனின் வரலாற்றுப் புராணக்கதைகளைத் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். பிள்ளையார் ஒருமுறை நடனமாடினாராம், அவரது ஆட்டத்தைப் பார்த்த சந்திரனுக்குச் சிரிப்பு வந்து சிரித்து விட்டானாம். உடனே சந்திரனைத் தேய்ந்து போகுமாறு பிள்ளையார் சாபமிட்டாராம் (பிள்ளையாரை அடையாளப்படுத்தும் உருவம் நடனமாடினால், அதைப்பார்த்து சிரிப்பு வராமல் என்ன செய்யும்?). தேயத்தொடங்கிய சந்திரன் பயந்து போய் சிவனிடம் சரணடைந்தானாம். சிவன், சந்திரனுக்கு அபயமளித்து தன் தலையில் வைத்துக் கொண்டாராம். இப்போதும் இதையே சொல்லிக் கொடுக்கிறார்களா என்று தெரியவில்லை.
இந்தக் கதையை நம்பத்தொடங்கும் பிஞ்சு உள்ளம், பின்னாளில் சிவனின் தலைமீது தன் கால்தடம் பதித்ததற்காக நீல் ஆம்ஸ்ட்ரோங் மீது ஆத்திரமடையாதா? சைவமதத்தையோ அன்றி இந்துமதத்தையோ போதிக்கக்கூடாது என்கின்ற எண்ணத்தினால் இதைச்சொல்லில்லை. மாறாக பிஞ்சு நெஞ்சங்களில் பொயக்கதைகளைச் சொல்லிப் பேய்க்காட்டி முட்டாளாக்குகிறார்களே என்கின்ற ஆதங்கம்தான் மேலோங்கி நிற்கின்றது. இதை விடுத்து இந்துமதம் (அல்லது வேறு எந்த மதமானாலும்) கூறும் வாழ்க்கை நெறிகளைப்பற்றி, அதில் காணப்படும் உண்மையான தத்துவங்களை விளக்கும் சின்னச்சின்னக் கதைகளாய் பிள்ளைகளுக்குக் கற்றுத்தரலாமே.

Saturday, July 18, 2009

சிங்கப்பூர் பதிவர் மாநாடும்.....


18-07-2009 இல் நடைபெற்ற சிங்கப்பூர் பதிவர் மாநாட்டிற்கு வருமாறு பதிவர் அறிவிலி அழைப்பு விடு்த்திருந்தார் (ஆள முன்னப் பின்னப் பார்த்ததில்லை பேசினதில்ல. பாத்திருந்தா மட்டும் என்ன பண்ணுவ என்று கேட்கக்கூடாது). கடந்த வெள்ளிக்கிழமையன்று (சிங்கப்பூர் வந்த பின்னர் அறிமுகமாகியிருந்த) பதிவர் கதியால் (கிடுகுவேலி, இவரின் முட்கம்பி முகாமுக்குள் வாழும் நண்பா..! இனை வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்) அழைப்பினை ஏற்படுத்தி பதிவர் மாநாட்டிற்குச் செல்வோமா என்று கேட்டிருந்தார். பின்னர் சில காரணங்களால் எங்கள் இருவராலுமே பங்கேற்க முடியவில்லை (தப்பிட்டீங்கப்பா மாநாட்டுக்காரர்களே!). எனவே அறிவிலி அவர்களால் தன்னைத் தொடர்பு கொள்ளுமாறு தரப்பட்டிருந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்த முயன்றேன். அவர் ரொம்ப busy போல. தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களால்தான் அழைப்பு துண்டிக்கப்பட்டது. பின் சில நிமிடங்களிலேயே அவரின் இலக்கத்திலிருந்து அழைப்புவர, வேறொரு நண்பனுடன் தொடர்பில் இருந்ததால், அவரது அழைப்பை நான் துண்டிக்க வேண்டியதாயிற்று. பின் மீண்டும் அவருக்கு அழைப்பினை ஏற்படுத்தினேன். முதன்முறையாய், அறிமுகமே இல்லாதவருடன், என்ன பேசுவதென்ற தடுமாற்றம் (இது வள்ளுவர் வார்த்தையில், எண்ணித் துணியாமல், துணிந்தபின் எண்ணிய இழுக்கு)

நான் : ஹலோ!

அறிவிலி : ஹலோ!

நான் : ஹலோ நான்... கதைக்கிறன்.

அறிவிலி: #@!##@!#

(எனது தமிழ் அவருக்கு விளங்கவில்லை sorry புரியவில்லை என்பது எனக்குப் புரிந்தது.

அறிவிலி: I received a missed call from this number. That's why I called you back.

நான் : ok ok. அறிவிலியோட பேச முடியுமா? என்னையும் பதிவர் மாநாட்டிற்கு வரச்சொல்லியிருந்தீங்க. என்னால வரமுடியல. அதுதான் உங்களுக்குக் கோல் பண்ணுறன்.

அறிவிலி : ஆ! நான் ரா..ஷ் தான் பேசறேன் நீங்க வலசு-வேலணை தானே. பரவால்லீங்க அடுத்த meeting-இற்கு வந்திடுங்க.

நான் : சரிங்க! அப்புறம் meeting எல்லாம் எப்பிடிப் போய்க்கிட்டிருக்கு?

ரா..ஷ் : ம்ம்ம். ஆரம்பிச்சிட்டோங்க. 15 பேர்வரைல இதுவரைக்கும் வந்திருக்காங்க. உங்களுக்கு அப்புறமா update பண்றேங்க.

நான் : சரிங்க. அப்ப அடுத்தவாட்டி சந்திப்பமுங்க. meeting-க enjoy பண்ணுங்க.

இணைப்பினைத் துண்டித்தோம்.

பதிவர் மாநாட்டில் என்னதான் நடந்திருக்கும் என்ற ஆவலுடன் அறிவிலியின் வலைத்தளத்திற்கு சற்று முன்னர் சென்றேன் (இப்போதெல்லாம் இணையத்தில் உலாவ என்னால் அதிக நேரம் ஒதுக்க முடிவதில்லை). இறுதியாக ஆடி 17 அன்றே பதிவிட்டிருக்கிறார். பதிவின் தலைப்பு சுவாரஸ்யமான அதிர்ச்சி. என்னவென்று பார்த்தால் அட! எனக்கும் அது சுவாரஸ்யமான அதிர்ச்சி. அவர் பட்டியலிட்டிருக்கும் 6 சுவாரஸ்யமான வலைப்பதிவுகளில் 'சும்மா' வும் சும்மா இடம்பிடித்திருக்கிறது. நன்றி அறிவிலி.

இப்ப இது என்னோட முறை. இந்த விளையாட்டின் நிபந்தனைகளின்படி நானும் 6 பதிவுகளைப் பட்டியலிடவேண்டும்.பட்டியலிட என்னிடம் ஒரு நீண்டபட்டியலே இருக்கிறது. ஆனாலும் விதி ஆறுடன் மட்டுப்படுத்தச் சொல்கிறது. மேலும் சிலர் ஏற்கனவே இந்த விளையாடடில் விளையாடிவிட்டனர். எனவே நான் பட்டியலிடும் அந்த 6 வலைப்பதிவுகளும்

1) ஷண்முகப்ரியனின் 'படித்துறை'

2) கோவி.கண்ணன்-இன் 'காலம்'

3) ஆ.ஞானசேகரன்-இன் 'அம்மா அப்பா'

4) மயாதி-இன் 'கொஞ்சு(ச)ம் க(வி)தைகள்'

5) சுபானு-இன் 'ஊஞ்சல்'

6) தேவன் மாயம்-இன்'தமிழ்த்துளி'

என்னிடமே எனக்குப்பிடிக்காத ஒரு பழக்கம் எதையும் உடனே தொடங்கிவிடுவது, ஆனால் உரிய நேரத்திற்குள் அதைச் செய்து முடிப்பதில்லை. சிலவேளைகளில் தொடங்கியதை பின்னாட்களில் மறந்துவிடுவதும் உண்டு. அதுதான் அறிவிலி என்கின்ற பெயரில் உலாவரும் ரா..ஷ் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் “வேரென நீயிருந்தாய்...” தொடருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ச்சியாய் எழுத நினைத்திருந்த போதிலும் அப்போதிருந்த மனநிலையில் அதைத்தொடர முடியவில்லை. பின்னர் வழமைபோன்று அதை மறந்தும் விட்டிருந்தேன். ஆனால் மீண்டும் தொடங்கும் மிடுக்கு.

Thursday, July 16, 2009

பேய்களும், பேயர்களும், பேய்க்காட்டல்களும் - II

பேய்களும் பேயர்களும் பேய்க்காட்டல்களும் -இனை வாசித்த பல நண்பர்கள் facebook மூலமாகவும், மின்மடல்கள் மூலமாகவும் சில கேள்விகளையும் தங்களின் கருத்துக்களையும் எழுப்பியிருந்தனர். நேரமின்மை காரணமாக அவர்களுக்கான எனது பதில்களை உடனடியாகத்தர முடியவில்லை. சற்றுமுன்னர் அழைப்பினை ஏற்படுத்தியிருந்த நண்பன் ஒருவனின் நினைவூட்டலால் மீண்டும் பேய்க்காட்ட(?) வேண்டிய நிலை.

சிவபுராணத்தில் “கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்...” என்று வருவதாகவும் அந்தக்காலத்திலேயே பேய்கள் பற்றிய பிரச்சனை இருந்திருக்கவேண்டும் என்றும், மேலும் சமயபுராணங்கள் தவறான வழியில் மனிதர்களை நடத்துவதாகத் தான் கேள்விப்படவில்லையெனவும் கூறி இதற்கான எனது பதில் என்னவென ஒரு நண்பன் கேட்டிருந்தான். மேலும் பேய்களின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துபவர்களைப் பற்றியும், சிலருக்கு ஏற்படும் உளவியல் நெருக்கீடுகளின் விளைவுகளை பேய்கள் பீடித்ததாய்ச் சொல்வது பற்றிய தகவல்களையும் அவன் குறிப்பிட்டிருந்தான். இன்னொருவன் பேய்கள் இருப்பது உண்மையெனவும் அதற்கான ஆதாரங்கள் எனச் சில தகவல்களையும் தந்திருந்தான். தகவல்கள் எல்லாம் எப்போதுமே உண்மையாயிருப்பதில்லை. மேலும் அவையெல்லாவற்றையும் இங்கே குறிப்பிடுவதென்றால் அதுவே ஒரு பதிவாகிவிடும்.

யாருடையதேனும் நம்பிக்கைகளைக் கேலி செய்வதிலோ அல்லது மதங்களைக் கிண்டலடிப்பதிலோ எனக்கென்றும் ஆர்வமில்லை. ஆயினும் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு எனக்கு இருப்பதாக நான் கருதுவதால் இந்தப்பதிவு.

சைவசமயத்தின் முழுமுதற்கடவுளான சிவனின் வசிப்பிடமாக புராணங்களில் கைலாயமலை குறிப்பிடப்படுகிறது. இப்போது சாதாரண பயணிகளே கைலைக்குச் சென்றுவரக் கூடியதாக இருக்கையில் சிவனும் அவர்தம் பரிவாரங்களும் எங்கே இடம்பெயர்ந்து விட்டார்கள்? அண்மையில் பனிலிங்கம் கூட சில 'பெரிய' மனிதர்களின் கைவரிசையே என்பதை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. மேலும் ஐயப்பனுக்கு மாலைபோட்டு கடும் விரதம் இருந்து சென்று தரிசிக்கும் மகரஜோதி கூட பேய்க்காட்டலே என ஆதாரத்துடன் ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன. ஊழிக்காலத்தில் அசுரன் ஒருவன் பூமியைப் பாய்ப்போல்ச் சுருட்டிக்கொண்டுபோய் கடலுக்கு அடியில் ஒளிந்து கொண்டான் என்றும் பின், மச்ச அவதாரமெடுத்து திருமால் மீண்டும் பூமியை மீட்டார் என்றும் இந்துமத புராணங்கள் கூறுகின்றன. பூமியை எப்படி பாய்போல் சுருட்டுவது? பின் எப்படி அதைக் கடலுக்குள் கொண்டுசென்று ஒளிப்பது? இந்துமத புராணங்களில் காணப்படும் பேய்க்காட்டல்களைப் பற்றி அறிவதற்கு பெரியாரின் நூல்களை வாசிப்பது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

கிறிஸ்துவ மதத்தை எடுத்துக்கொண்டால், அந்த மதத்தின் புனிதநூலான பைபிளிலேயே இரண்டு ஏற்பாடுகள். பழைய ஏற்பாட்டில், சூரியனே புவியைச்சுற்றி வருகிறது எனக்குறிப்பிடப்பட்டிருக்கிறது. பூமிதான் சூரியனைச்சுற்றி வருகின்றது என்று அறிந்து கூறிய மனிதனுக்கு கிறிஸ்துவ மதம் வழங்கிய தண்டனையையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். முஸ்லீம் மதத்தில் சமயத்தின் வளர்ச்சிக்காக மரணிப்பவன் சொர்க்கமடைவான் எனச் சொல்வதாகவும், அந்த நம்பிக்கையினாலேயே பல முஸ்லீம் இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் (எல்லோரும் அல்ல, தீவிரவாதிகளாக மாறுபவர்களில் பலர் தங்கள் இனம், மதம் சார்ந்த உரிமைகளுக்காகவே மாறுகிறார்கள் என்பதும், ஆனாலும் அடக்குமுறையாளர்களால் அனைவருமே பயங்கரவாதிகளாக காட்டப்படுவதுமே யதார்த்தம்) என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆக மதங்கள் எப்போதுமே மனிதர்களைச் சரியான வழியிலேயே வழிநடத்துகின்றன என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?

சிவபுராணத்தில், புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி கல்லாமனிதராய்ப் பேயாயக் கணங்களாய் வல்லசுரராகி முனிவராயத் தேவராய்...எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் என்கிறார் வாதவூரர். இதைப்பாடிய மாணிக்கவாசகர், தேவரோ முனிவரோ அல்ல. அவரும் ஒரு மனிதராய் இருந்தே இதைப் பாடியிருக்கிறார். அவர் ஒன்றும் தேவராக மாறிய பின்னர் இதைப்பாடவில்லை. மேலும் பலர், மனிதனின் முந்திய பிறப்பு கல் (கல்லாய் மனிதராய்) என்று தவறாக அர்த்தம் செய்துகொண்டு விடுகிறார்கள். உண்மையிலேயே அது கல்லாய், மனிதராய் என்று அல்லாமல் கல்லாமனிதராய் (அறிவில்லாத மனிதராய்) என்றே வருகிறது. ஆகவே கல்லாமனிதர், அதாவது உண்மையை அறியாத மனிதர்கள் தான், பேயாய், கணங்களாய், இப்படிப் பலவாய்த் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். முனிவராய்த் தேவராய் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்த வாதவூரர் இறுதியில் தன்னை உணர்ந்து கொண்டேன் என்கிறார். உண்மையை அறிந்து கொண்டுவிட்ட மனிதன் என்கிறார். இங்கே பாடலில் அவர் மனித மனதின் பரிணாம வளர்ச்சி பற்றியே குறிப்பிடுகிறார் என்றே நான் கருதுகிறேன். அதைப்பற்றி எழுதினால் பதிவு நீண்டுவிடும். முடிந்தால் அது இன்னொரு பதிவில்.

அறியாமை தான் ஆனந்தம் எனச்சில பெரியவர்கள் சொல்கிறார்கள். சிறுகுழந்தைகளைப் பார்த்தால் சின்னச்சின்னப் பொருட்களினால் அவர்கள் பெறும் அதே ஆனந்தத்தினை, பின்னாளில் அவர்கள் பெறுவதில்லை. உதாரணமாக ஒரு குழந்தையிடம் 1000 ரூபாய் பணத்தாளினையும், 5 ரூபாய் பெறுமதியான ஒரு அழகிய படத்தினையும் கொடுத்து, இரண்டில் எது வேண்டும் என்றால் அது படத்தினையே தேர்வு செய்யும். இப்படித்தானே திருடர்கள் கொடுக்கும் மிட்டாய்களுக்குப் பதிலாக சின்னக் குழந்தைகள் தங்களின் தங்கச்சங்கிலிகளையே இழந்துவிடுகிறார்கள். நட்பு, துணை அல்லது உறவுகள் எம்மை ஏமாற்றுவதை அறியாதவரை அவர்களுடனான உறவில் மகிழ்ச்சியடையும் நாம், ஏமாற்றலை அல்லது துரோகத்தை அறிநதவுடன், அதுவரை இருந்துவந்த சந்தோஷம் பறந்துவிடுகிறது.

பேய்கள் பற்றி ஆராய்ச்சி செய்த மனோவியல் டொக்ரர் ஒருவர் (டொக்ரர் கோவூர் என நினைக்கிறேன், சரியாக நினைவிலில்லை. 1990 இற்கு முன்னர், ஊரில் இருக்கையில் வாசித்த ஞாபகம்) தனது நூலில், எவ்வாறு பேய்களால் பீடிக்கப்பட்டவர்கள் எனக் கருதப்பட்டவர்களை தான் மனோவியல் மூலம் சிகிச்சையளித்துக் குணப்படுத்தியதாகவும். ஒருமுறை தாங்கள் இரவில் பயணம் செய்கையில் வீதியில் வழிமறித்து நின்ற ஒரு வாகனத்தை யானை என்றெண்ணிப் பயந்ததாகவும் (அந்தப் பாதையில் யானைகளின் நடமாட்டம் இருந்ததாம்) பின்னர் உண்மையை அறிந்து சிரித்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆக அறியாமைதான் பயத்திற்கும் காரணமாய் இருக்கிறது

சிலமாதங்களின் முன் இருநண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கையில், அவர்கள் இருவருக்குமே இரவில் தனியே செல்லப் பயம் எனவும், யாரேனும் ஒரு சிறுதவ்வல்கூட, கூடவந்தால் பயமில்லையெனவும் குறிப்பிட்டிருந்தனர் (எனக்கும் தானுங்க). அந்தச்சின்னக் குழந்தையால், எதிர்ப்படும் இன்னல்கள் அல்லது பயங்கரங்களில் இருந்து எம்மைக்காப்பாற்ற முடியாது என்பது சர்வ நிச்சயம் என்று எமக்குத் தெரிந்தாலும், எம்மையறியாமலேயே, இன்னொருவர்கூட வருகையில் மனதினில் ஒரு துணிச்சல் ஏற்பட்டுவிடுகிறது. திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை என்பார்கள். எனவே, கடவுள்கள், பேய்கள் பற்றிய எண்ணங்களும் அவ்வாறே வந்திருக்கும் என்றே நான் கருதுகிறேன்.

(கடவுளரை வணங்குபவர்களைப் போலவே பேய்களை வழிபடுபவர்களுமான பில்லிசூனியக்காரர்களும் இருக்கிறார்கள். அவர்கள் மிகமிகச் சிறிய அளவினர் என்பதால், பேய்கள் எல்லோருக்குமே கெடுதல் செய்யுமென்ற நம்பிக்கையும் பரவிவிட்டது).

Wednesday, July 8, 2009

பேய்களும், பேயர்களும், பேய்க்காட்டுதல்களும்

நேற்றைய தினம் இணையத்தளங்களில் மேய்ந்துகொண்டிருந்த வேளையில் மைக்கல் ஜாக்சனின் ஆவியானது அவரது NEVERLAND PLACE இல் தென்பட்டதெனக் கூறப்படும் செய்தியினையும் அது தொடர்பானவொரு காணொலியினையும் பரவலாக அவதானிக்கக் கூடியதாக இருந்தது. பின் ஆவிகள் அல்லது பேய்கள் எனக் கூறப்படுபவை தொடர்பாக google-இல் தேடியே நேற்றைய பொழுதில் நான் தொலைந்தே போனேன்.

உண்மையிலேயே பேய்கள் இருக்கின்றனவா? அல்லது பேய் என்பதே ஒரு பேய்க்காட்டல் தானா? எத்தனைபேர் பேயைக் கண்டிருக்கிறார்கள்? உண்மையிலேயே அவர்கள் கண்டது பேய்தான் என்பதை எப்படி நம்புவது அல்லது ஏற்றுக்கொள்வது? பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பிரபலமாக்கும் நோக்கத்துடனேயே பேய்கள் அல்லது ஆவிகள் பற்றிய கதைகள் கிளப்பிவிடப்படுகின்றன. ஆனாலும் உலகெங்கும் காணப்படும் அனைத்த சமூகப் பிரிவினரிடையேயும் இந்தப் பேய்கள் பற்றிய நம்பிக்கை அல்லது மூடநம்பிக்கை கடவுளைப் போலவே பரவிக் கிடக்கிறது என்பதே உண்மையாகவும் இருக்கிறது. கடவுள் என்று பரவலாகக் கருதப்படுகின்ற ஒன்று இருக்குமானால் பேய்களும் இருந்தே ஆகவேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

எது எப்படியிருந்தாலும் பலவகையான பேய்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் அறியக்கூடியதாய் இருக்கின்றது. சேற்றுநிலங்களில் காணப்படும் கொள்ளிவால்ப்பேய். இதைக் கண்டால் கட்டியிருக்கிற வேட்டியை (அந்தக்காலத்தில் அநேகமாக ஆண்கள்தான் சேற்றுநிலங்களுக்குச் செல்வார்கள். அத்துடன் வேட்டி தான் அவர்களுடைய ஆடையாகவும் இருந்து வந்தது) அவிழ்த்து தலையில சுத்திக்கொண்டு கால் தெறிக்க ஓடவேண்டும் என்று சொல்வார்கள். (விஞ்ஞான ரீதியில் இதற்கு காரணம் உயிர்வாயு என்பது வேறு விடயம்). புளியமரத்தில் வசிக்கும் முனி. இரவில் புளியமரத்திற்கு கீழே சென்றாலோ அல்லது அதன் கீழ் படுத்து உறங்கினாலோ முனி அடித்துவிடும் என்பார்கள். இரவில் மரங்களும் சுவாசத்தை மேற்கொண்டு கரியமிலவாயுவை வெளியிடுவதால் பிராணவாயுவிற்கான பற்றாக்குறை ஏற்பட்டு மயக்கநிலை உண்டாகக்கூடும். மோகினிப்பிசாசு. இது இரவுவேளைகளில் தனியே செல்லும் ஆண்களைக் குறிவைத்தே அலையுமாம். வெண்ணிற ஆடையுடன் தோற்றமளிக்கும் இதனிடமிருந்து மல்லிகை வாசம் வீசும் என்றும், இதனிடமிருந்து தப்பிக்க வேண்டுமெனில் “சுண்ணாம்பு வைத்திருக்கிறாயா?” என்றோ அல்லது “என்னுடன் வருகிறாயா?” என்றோ பேச்சுக் கொடுத்தால் ஓடிவிடுமாம் என்று சொல்லப் படுகிறது.

இவற்றை விடவும் பில்லி சூனியம் போன்றவை மூலம் ஏவிவிடப்படும் பேய்கள் (இவற்றிலும் பல வகைகள் உண்டு) மற்றும் அவலச்சாவின் மூலம் உயிரிழந்தவர்களின் ஆவிகள் எனப் பல வகையான பேய்கள். கந்த சஷ்டி கவசம் படித்தீர்கள் என்றால் எல்லா வகையான பேய்பிசாசுகளின் பெயர்களையும் அறிந்து கொள்ளலாம்.

என்ன பேய்க்கதை கதைக்கிறாய் என்கிறீர்களா? பேய்க்கும் பேய்க்கதைக்கும் என்ன சம்பந்தம்? பொதுவாக நம்பமுடியாத அல்லது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயங்களைச் சொல்லும் போது “சும்மா பேய்க் கதை கதைககாதே” என்று சொல்வதுண்டு. சிலவேளைகளில் ஏமாளிகளைக் குறிப்பதற்கும் பேய் (அது ஒரு பேய்ப்பெடியன் அல்லது பேய்பபெட்டை) என்ற சொல் பயன்படுத்தப் படுகிறது. அதேபோல் ஏமாற்றுவதையும் பேய்க்காட்டுதல் என்று சொல்வதுண்டு. அப்படியென்றால் இந்தப் பேய் என்பது என்ன?

சரி! உங்களில் யாராவது பேயைக் கண்டிருக்கிறீர்களா? நான் கண்டதில்லை. ஆனால் காட்டியிருக்கிறேன்.அதாங்க! பேயைச் சொல்லிப் பேய்க்காட்டியிருக்கிறேன். அது 95இல் இடம்பெற்ற யாழப்பாண இடப்பெயர்வுக்கு முந்திய காலம். மாலையில் கொழுத்தப்பட்டிருந்த குப்பை தானாகவே அணைந்து விட்டது போல் தோன்றியிருந்தது. பின் இரவு 9.00 மணியளவில் வீட்டிற்கு வந்திருந்த குழந்தை ஒன்றிடம் (அதற்குப் எட்டு வயதிருக்கும்) காற்று வீசும் போதெல்லாம் சாடையாய் ஒளிர்ந்துகொண்டிருந்த செந்தணலைக் காட்டி அதுதான் கொள்ளிவால்ப்பேய், கிட்டப்போனால் பிடித்துவிடும் எனக்கூறினேன். அது பயந்துகொண்டே தன் தந்தையிடம் சென்றது. அவர் எவ்வளவோ கூறியும் அது சமாதானமாகவில்லை. பின் அவர் ஒரு விளக்கினை ஏற்றிக்கொண்டு அந்தக்குழந்தையையும் அழைத்துக்கொண்டு குப்பையருகே சென்று அது வெறும் நெருப்புத்தான். காற்று வீசுகையில் மட்டுமே ஒளிர்கிறது என்றும் விளங்கப்படுத்தியவுடன், அது சிரிததுக்கொண்டே என்னிடம் வந்து “என்னைப் பேய்காட்டப் பார்க்கிறீங்களா?” என்றது.

ஆக அறியாமையைத்தான் பேய் என்கின்றோம். அல்லது அறியாததால் பேய் என்கின்றோம். ஆனாலும் சிலரது அனுபவங்களைக் கேட்டால் அதிர்ந்து விடுகிறோம். ஊரில் இருக்கையில், எமது ஊரைச் சேர்ந்த ஒரு வயதான பெண்ணிற்கு பேய் பிடித்து விட்டது என்று அவரின் நடவடிக்கைகள் மூலம் ஊகித்துக் கொண்ட உறவினர்கள் அவரை கோவில் ஐயரிடம் கொண்டுபோய்க் காட்டினார்கள். பல பேய்களினால் அவர் பீடிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய ஐயர், அவரை பேயோட்டுபவர் ஒருவரிடம் அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினார். அங்கே அந்தப் பேய்கள் ஒவ்வொன்றையும் அவற்றிற்கு விருப்பமானவற்றை (கோழி, சாராயம், மீன், நண்டு போன்றவை. இவை அனைத்தையும் உயிருடன் அந்த வயதான பெண்ணே தன் பொக்கைவாயால் கடித்தும் உடைத்தும் சாப்பிட்டாராம்) அளித்து அந்தப் பேய்களை பேயோட்டுபவர் விரட்டினாராம். அதன்பின் அவர் சாதாரண நிலைக்கு வந்தவிட்டார். நம்ப முடிகிறதா? ஆனால் இதுவும் கதையல்ல நிஜம் தான்.

எப்படி அப்படி? சிலவேளைகளில் அவர் ஒருவித மனநோய்க்கு உட்பட்டிருந்திருக்கலாம். ஆனாலும் இப்போதும் இப்படியான சந்தர்ப்பங்களில் மனோவியல் நிபுணர்களால்கூட ஏதும் செய்யமுடிவதில்லை. மாறாக பேயோட்டுபவர்களால் இவ்வாறானவர்களை இலகுவாகக் குணப்படுத்த முடிகிறது. அப்படியானால் உண்மையிலேயே பேய்கள் இருக்கின்றனவா என்ற கேள்வி எழலாம்.

உண்மைகள் வேறு நம்பிக்கைகள் வேறு என்றே நான் கருதுகிறேன். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகலாம். அல்லது அதை நம்பிக் கொண்டிருக்கலாம். அதையெல்லாம் உணமை என்று சொல்ல முடியாது. உண்மைகள் எப்பொழுதுமே எளிதானதாகவும் இயல்பானதாகவுமே இருக்கின்றன. நாம்தான் எமது விருப்புவெறுப்புகளுக்கேற்ப ஒன்றை நம்பத்தொடங்குகின்றோம், அல்லது நம்ப விரும்புகின்றோம். பின் அந்த நம்பிக்கையை உண்மையென்றும் நம்பத்தொடங்குகின்றோம். எனவே நம்பிக்கைகள் எல்லாம் எப்போதுமே உண்மையானவையாக இருப்பதில்லை. பேய்களும் கடவுள்களும் அவ்வாறே. அவை இருக்கின்றன என்று நம்புவதோ, இல்லை என்று நம்புவதோ எமது தனிப்பட்ட விருப்புவெறுப்பு மற்றும் அனுபவங்களால் உருவாகின்றது. ஆனால் அவை இருக்கின்றனவா, இல்லையா என்கின்ற உண்மையை உணர்ந்தவர்கள் அவை பற்றி அலட்டிக் கொள்வதில்லை என்றே நினைக்கின்றேன்.

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்

Saturday, July 4, 2009

மூன்றாவது பால் அல்லது மூன்றாம் பாலினம்

நேற்றைய பொழுதில் www.globaltamilnews.net இனில் மேய்ந்து கொண்டிருந்தபோது டி.அருள் எழிலன் அவர்களால் எழுதப்பட்டிருந்த “ரேவதி என்ற திருநங்கையின் கதை” யினை வாசிக்க நேர்ந்தது. (கீழே இணைக்கப்பட்டிருக்கிறது)

சில மாதங்களுக்கு முன்னர் மின்னல் FM இன் இரவு நிகழ்ச்சி ஒன்றில் (கண்ணாடித் துண்டுகள் என்கின்ற சமூகப் பிரச்சனைகளை அலசி ஆராயும் நிகழ்ச்சியென நினைக்கிறேன். சரியாக நினைவில்லை) திருநங்கைகள் பற்றியும், சமூகத்தில் அவர்கள் படும் இன்னல்கள் பற்றியும் அலசியிருந்தனர். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருநங்கை ஒருவர் தான் சந்தித்த இன்னல்களைப் பற்றிக் கூறியபோது மனம் கனத்துப் போனது.

எங்களில் எத்தனை பேர் இந்த மூன்றாவது பாலினரைப் பற்றி, அவர்களுக்கான பிரச்சனைகள் பற்றி, அவர்களின் உணர்வுகள் பற்றி சிந்தித்துப் பார்த்திருக்கிறோம்? பொதுவாகவே திருநங்கைகள் என்றவுடன் அவர்கள் பாலியல் தொழிலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற எண்ணக்கருத்தினையே இதுவரை ஊடகஙகள் செய்து வந்திருக்கின்றன. அவர்களைப் பற்றி உரையாடுவதையே கேவலமாகப் பார்க்கும் நிலையே இப்போதும் நீடிக்கிறது.

வரும் சனிக்கிழமை (11-07-2009) இங்கே சிங்கப்பூர் பெற்றோர் மாநாடு - 2009 நடக்க இருப்பதாகவும், பதின்ம வயதுப் பிள்ளைகளின் பெற்றோர் எவ்வாறு தங்கள் பிள்ளைகளின் பாலியல் சம்பந்தமான பிரச்சினைகளைக் கையாள்வது என்பது பற்றிய கலந்துரையாடலாக அது இருக்கும் எனவும் 'ஒலி FM' அடிக்கொருதரம் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது. அவர்களாவது இந்த மூன்றாவது பாலினரைப் பற்றியும், அவர்களின் பிரச்சினைகள் பற்றியும் ஆரோக்கியமான முறையில் கருத்துக்களை முன்வைப்பார்களா?

வருங்காலத்தில் தனிப்பட்ட விபரங்களை நிரப்பும் படிவத்தில் (personal details form) ஆண்பால், பெண்பால் உடன் இந்த மூன்றாவது பாலினமும் இருக்குமெனவே நான் நம்புகிறேன். யார் கண்டது சிலவேளை அடுத்த நூற்றாண்டு காலப்பகுதியில் நான்கு பாலினமும் (ஆண், பெண், பெண்ணாக மாறிய ஆண், ஆணாக மாறிய பெண்), அதன் பின் மேலும் சில நூற்றாண்டுகள் கழித்து பாலினமே அழிந்துபோய் எல்லாமே தனியன்களாய் (குளோனிங் உபயத்தால்) அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

**************

இயங்குதளம் மாற்றி
நிறுவப்பட்ட கணனியாய்...
மென்பொருளில்
மறைந்திருக்கும் தவறாய்...
சொந்த உடற்கூட்டுக்குள்
எதிர்ப்பாலின் உள்ளப்பறவை.
மெல்லினத்தின் கட்டிற்குள்
இந்த வல்லினங்கள்.
மென்பொருளா வன்பொருளா
வலிமை மிகுந்தது?

அண்மையில் இந்தியாவில், புதுடில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பின் மூலம் திருநங்கைகள் என்று அழைக்கப்படும் இந்த முன்றாவது பாலினத்தாருக்கு ஓரளவு நீதி வழங்கப்பட்டிருப்பதாக தெரிய வந்தது மகிழ்ச்சியைத் தருகிறது.

ம்ம்ம்ம..... எங்களுக்கு எப்போதோ?

******************

http://www.globaltamilnews.net இல் இருந்து,

(ஒரினச் சேர்க்கையை இயர்க்கைக்கு எதிரானது என்று சொல்லி தண்டிக்கும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 377 வது பிரிவு செல்லாது என்று டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிருப்பதன் முலம் நீண்டகாலமாக ஓடுக்கப்படும் மூன்றாம் பாலினத்தோர் ஓரளவு உரிமை பெற வழி ஏற்பட்டிருக்கிறது. நான் திருநங்கை ரேவதியை இரண்டு வருடத்திற்கு முன் பெங்களூரில் வைத்து சந்தித்தேன். ரேவதி இச்சட்டப் பிரிவுக்கு எதிராக போராடினார். இப்போது சட்ட ரீதியானக வெற்றி பெற்றிருக்கும் சூழலில் இந்தக் கதை முக்கியத்துவம் உள்ளது என்பதால் விரிவாக மீண்டும் எழுதி இப்போது வெளியிடுகிறேன்.)



என்னை மாதிரி அரவாணிகளின் வேதனையைச் சொல்லும் இன்னொரு அரவாணி எழுதிய கவிதை இது. நீண்ட நாட்களாக இந்த வரிகளை நான் எப்போதும் என்னுடன் வைத்திருந்தேன். தூங்கி எழுந்தால் இந்த கவிதையின் முகத்தில் விழிக்கிற மாதிரிதான் இதை ஒட்டி வைத்திருப்பேன். இனி என் கதையைச் சொல்கிறேன் கேளுங்கள்,

தமிழ் நாட்டில்தான் பெயர் சொல்ல முடியாத ஒரு கிராமத்தில் நான் பிறந்தேன்.ஒரு அக்கா மூன்று அண்ணன்கள் நான் கடைக்குட்டி. அதனால் எனக்கு செல்லம் கொடுத்து வளர்த்தார்கள். அக்கா கோலம் போடும் போது நானும் அதிகாலையே எழுந்து போய் அக்காவுடன் கோலம் போடுவேன்.எப்படி புள்ளிவைப்பது? இட்ட புள்ளிகளை எல்லாம் இணைத்து அழகான கோலமாக எப்படி மாற்றுவது என்பதை எல்லாம் நான் அக்காவிடம் தான் கற்றுக் கொண்டேன். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்குமிடையில் பிரியும் மாவு புள்ளியாய் மாறும் பக்குவம் வந்த பிறகு அக்கா எழுவதற்கு முன்பே நான் எழுந்து கோலம் போடத்துவங்கினேன். போட்டு முடித்து விட்டு வடிவான கோலமாக அது வந்திருக்கிறதா என இடுப்பில் வைத்தபடி நின்று பார்ப்பேன். அதில் மனசு நிறைந்து பூத்துப் போகும். அமமா பாத்திரம் கழுவும் போது நானும் கூடப்போய் நின்று அவங்களுக்கு உதவுவேன். அம்மா செய்கிற வேலைகளை எல்லாம் நானும் செய்வேன். ஒரு பெண் இன்னின்ன வேலைகளை எல்லாம் செய்ய வேண்டும் என சமூகம் தீர்மானித்திருக்கிறதோ அந்த வேலைகளை எல்லாம் நான் செய்வேன்.

மனசுக்கு மிகவும் சந்தோசமான காலம் அது...ஏன் தெரியுமா? பிறப்பால் ஆண் பிள்ளையானாலும் மனதால் ஒரு பெண்ணாக நான் மாறிய காலமாக அது இருந்ததால் அதனால்தான் நானோ நீங்களோ விரும்பியோ விரும்பாமலோ திருநங்கைகள் உருவாவதில்லை.