Monday, September 27, 2010

உணர்ச்சிகள் அற்ற கவிதை


உணர்ச்சிகள் அற்றவனின்
புணர்ச்சியின் எச்சமாய்
வெற்றுத்தாளில் ஒரு
வறண்ட கவி(/)தை!

வார்த்தை ஜாலங்களோ
மாய் மாலங்களோ
அற்றவொரு வெறும்
வெற்றுக் கவி(/)தை!

தையல் பற்றியோ - கொண்ட
மையல் வற்றியோ, அன்றி
பற்றுக்கள் தொலைத்தவனின்
பரிதாபக் கவி(/)தை!

பொய்களைத் தாண்டி
மெய்களைத் தீண்டி
உவமைகள் வேண்டி
உவப்பற்ற கவி(/)தை!

கருவே காணதவொரு
கர்ப்பப்பை போன்று
உருவே கொள்ளாமலொரு
மலட்டுக் கவி(/)தை!

நாற்றுநடா வயல்போன்று
எழுதுகோல் விடும்
கீற்றுக்கள் தீண்டாத
அரூபக் கவி(/)தை!

Sunday, September 26, 2010

நினைவுகளில் நீ!


பசித் தீயையெரித்த
பட்டினித் தீ நீ!
பன்னிரு நாட்கள்
பசியுனக்குத் தீனி!

விடுதலை வேள்வியில்
எழுந்த யாகத்தீ!
அந்த யாகத்தில்
சொரிந்தவாகுதி நீ!

தீயதே தீண்டாத
தியாகம் நீ!
தீயுமே தீண்டிடாதவுன்
திருமேனி!

அகிம்சை வாதி
மகாத்மா காந்தி
அவரையும் விஞ்சி
நீ காலத்தீ!

நாட்டுக்காய் உருகிய
மெழுகு வர்த்தி!
ஞாலம் வணங்கிடும்
திலீபம் நீ!

Friday, September 17, 2010

சொல்ல விரும்பும் கதை, அதைச் சொல்லத் தயங்கும் நிலை

நேற்றைய மாலை கடந்து நேரம் எட்டு மணியை எட்டிக் கொண்டிருக்கையில் Little India-இற்குள் தொடரூந்து நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். Buffalo வீதியினை அடைகையில் கோமளா விலாஸ் கண்ணில் பட்டது. உள்ளே நுழையச் சொல்லி உடலை உந்தியது உள்ளிருந்தவொரு மனம். உமிழ் நீர்ச்சுரப்பிகள் வஞ்சகமின்றித் தங்கள் வேலைகளில் ஈடுபடவாரம்பித்தன. உள்ளே போகலாமா வேண்டாமா என மனம் தடுமாறத் தொடங்கியது. கடந்த எட்டு நாட்களாக கடைப்பிடித்து வரும் இரவுணவுப் பழக்கத்திற்கு களங்கம் வரப்போவதாய் ஆழ்மனது எச்சரித்தது. குறைந்தது ஒரு மண்டலமாவது அந்த இரவுணவுப் பழக்கத்தினைக் கைக்கொள்ள வேண்டுமென எண்ணியிருந்ததால் இன்னோர் மனது பின்னடித்தது. மனதின் எங்கோ ஒரு மூலைக்குள் ஒளிந்திருந்த துரோக மனமொன்று தன்வேலையைக் காட்ட ஆரம்பித்தது. நான் இரண்டாகப் பிளவுபட்டேன்.

விரோதியை வெல்லலாம் கூடவே ஒழிந்திருக்கும் துரோகியை வெல்ல முடியுமா? Trojan குதிரைக் காலத்திலிருந்து இற்றைவரை துரோகத்தனங்கள்தான் வெல்லமுடியாதவர்களாய் இருந்தவர்களையெல்லாம் வெற்றிகொள்ள உதவி செய்திருக்கிறது. இப்போது என் அனுமதியின்றியே அனிச்சையாக கால்கள் உள்ளே நுழைந்து விட்டிருந்தன. ஆயினும் மனத்திற்குள் போராட்டம் முடிந்தபாடாயில்லை. இல்லாத உணவுப் பதார்த்தத்தைக் கேட்டுவிட்டு வெளியேறச் சொல்லியது உள்மனது. உணவு பாரிமாறுபவர் வந்து என்ன வேண்டும் என்று கேட்டதும் “கொத்து பரோட்டா” என்றது அந்த மனது. அனேகமாக அந்நேரத்திற்கு அங்கே கொத்துபரோட்டா முடிந்துவிட்டிருக்கும் என்கின்ற முன்னைய அனுபவத்தில். தூரதிர்ஷ்டவசமாக கொத்து பரோட்டா கிடைக்கவே, வேறுவழியேயில்லை என்கின்ற ஏற்றுக்கொள்ளலில் மனங்களெல்லாம் ஒன்றுபட உணவினை இரசித்துச் சுவைக்கத் தொடங்கினேன்.

முதல்கவளம் உள்ளே சென்றதும் அப்படி ஒரு பரவசம். நீண்ட நாட்களின் பின்னர் கிடைத்த அந்த மென்மையான கொத்துபரோட்டா சிறிது நேரத்திலேயே காலியாகத் தொடங்கியது. முதல் கவளத்தில் கிடைக்கும் அந்த சுவையும் மகிழ்ச்சியும் கடைசிக் கவளம் வரை தொடர்வதில்லை. சில கவளங்கள் உட்கொண்டவுடனேயே மனது வேறு நினைவுகளுக்குத் தாவிவிடுவதே வழமையானது. அதன் பின்னர் பழக்கதோஷத்தில் கைகள் வாயிந்கு உணவினை எடுத்துச் செல்ல, வாய் அதைவாங்கி வயிற்றுக்கு அனுப்புவதைக் கடமையாகச் செய்துவிடுகின்றதேயன்றி ஆரம்பிக்கும் போதிருந்த அந்த ஆனந்தம் தொடர்வதில்லை. உணவு மட்டுமல்ல, உறவுகள் உட்பட அனைத்து விடயங்களும் அப்படியானவையே. அதனால்தானோ என்னவோ பழகப்பழகப் பாலும் புளிக்கும் என்று அந்தக்காலத்திலேயே அனுபவித்துச் சொல்லியிருக்கிறார்கள். அதை இந்த உணவகத்தினரும் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர் என்றே எண்ணத் தோன்றியது. ஏனெனில் இங்கே சாதாரண அளவிலும் குறைவாகவே பரிமாறுகின்றார்கள். அப்போதுதான் அந்த சுவை அலுத்துப்போகாதிருக்கும், வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் வந்து கொண்டேயிருப்பார்கள்.

இப்போது பக்கத்து மேசையிலிருந்தவருக்கு பூரி செல்வதைப் பார்த்ததும் நாக்கில் மீண்டும் எச்சில் ஊறியது. இந்த நாக்கு எப்போதுமே இப்படித்தான் இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படுகிறது. உணவு பரிமாறுபவர் அருகே வந்து வேறு ஏதாவது வேண்டுமா எனக் கேட்டதும் முந்தியடித்துக்கொண்டு நாக்கு பூரி கொண்டுவரச் சொன்னது. சற்று நேரம் யோசிக்க விட்டால் உள்மனது அதைத்தடுத்திருக்கும் என்று அந்த துரோக மனது நாக்கிடம் சொல்லியிருக்க வேண்டும். விழித்துக் கொள்வதற்குள் உணவுபரிமாறுபவர் சமையலிடத்தினை நோக்கி நகர்ந்து விட்டார். இம்முறை பூரியினை அனுபவத்துச் சுவைத்துச் சாப்பிடமுடியவில்லை. நான் மீண்டும் இரண்டுபட்டுவிட்டேன். இப்போது என்னைப் பார்க்க எனக்கே கேவலமாகவிருந்தது.. உள்மனதின் உறுத்தலைத் தாங்க முடியவில்லை. அதுவும் செப்டம்பர் பதினைந்தாம் திகதிக்கு அடுத்த நாளே இப்படியானவொரு நிலைக்கு நீ இறங்கிவிடுவாயென தான் நினைக்கவேயில்லையென அந்த உள்மனம் திட்டத் தொடங்கியது. செப்டம்பர் பதினைந்து நிவைிற்கு வந்ததும் குற்றவுணர்ச்சி குறுகுறுக்கவாரம்பித்தது. ஆரம்பத்திலேயே இது தெரிந்திருந்தால் கால்களின் தன்னிச்சையான செயற்பாடு முதலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டிருந்திருக்கும். அந்த நம்பிக்கை நீண்டகாலமாகவே இருந்து வந்தது. ஆயினும் அந்த நம்பிக்கையைத் தவிடு பொடியாக்கிவிட்டது இன்றைய நிகழ்ச்சி. இப்போது நாக்கினையும் அதற்கு ஆதரவாக நின்ற மனங்களையும் நோக்கினேன். தலையைக் குனிந்துகொண்டவாறே ஓரமாய் ஒதுங்கிக் கொண்டன.

அது நிகழ்கையில் நான் இருபத்திநான்காம் வயதில் இருந்தேன். அதற்கு முந்தைய மூன்று வருடங்களிலும் ஆண்டுக்கு இருதடவைகள் 24 மணிநேரம் நீர் உட்பட எந்தவித உணவுப்பதார்த்தங்களையும் உட்கொள்வதைத் தவிர்த்து வந்திருந்தேன். இரவு 11.55 முன்னதாக வயிறு நிறைய உண்டு தண்ணீரும் பருகிவிட்டுப் படுத்துக் கொண்டால் 24 மணிநேரம் கழித்து அடுத்த நாள் நடுநிசி 12.00 மணி தாண்டிய பின்பே தண்ணீரும் உணவும் உட்கொள்வேன். இப்போது 23 வயது முடிந்து 24வது நடப்பதால் இம்முறை அதை 48 மணி நேரமாக்கும் எண்ணம் வந்தது. இரவு 12.00 மணிக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் உட்கொள்வதை நிறுத்திக் கொண்டேன். மறுநாள் எந்த உபாதைகளும் இன்றிக் கழிந்தது. அடுத்தநாள் காலையில் சோர்வாய் உணர்ந்தேன். மதியம் அண்மிக்கையில் தலையிடிக்கத் தொடங்கியது. மதியம் இரண்டுமணி கழிகையில் இலேசாகத் தலைச்சுற்றலை உணர்ந்தேன். நாக்கு மேல் அண்ணத்துடன் ஒட்டிக்கொள்வது புரிந்தது. படுத்துக் கொண்டேன். புருவஙங்களுக்கு மத்தியில் விண்விண்ணென வலிக்கத் தொடங்கியது. பின் அது நெற்றிவரை பரவி சிரசெங்கும் விரிவது புரிந்தது. பார்க்கும் பொருட்களெல்லாவற்றின் மேலும் பச்சைநிறம் படர்வது போன்றவொரு பிரமை. இதற்கு மேல் என்ன நடக்குமோ என்கின்ற பயம் வந்தது. நேரத்தைப் பார்த்தேன் மாலை 03.40 ஆகியிருந்தது. இதற்கு மேலும் தொடர்ந்தால் என்ன நடக்குமோ என்கின்ற பயத்தினில் அருகிலிருந்த தண்ணீரைப் பருகினேன். சற்று சிரமப் பட்டே தண்ணீர் தொண்டைக்குழியைத் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது. ஒரு 'பணிஸ்' (bun) இற்கு மேல் உண்ண முடியவில்லை. 48 மணி நேரம் என எண்ணியிருந்ததை வெறும் முப்பத்தொன்பதே முக்கால் மணி நேரத்துடன் முடித்துக் கொண்டேன். பட்டினியின் கொடிய வலியினை அனுபவபூர்வமாய் அறிந்து கொண்டேன். அதன் பின்னர் சில நாட்கள் பட்ட அவஸ்தையின் காரணமாக அந்தப் பயிற்சியினைப் பின்னர் நிறுத்தி விட்டேன்.


அது 23 வருடங்களுக்கு முன்னர். அவனுக்கும் அது 23 வயது முடிவடைந்து 24வது நடந்து கொண்டிருந்தது. அவன் ஒரு மருத்துவபீட மாணவனாயிருந்திருந்தவன், ஆயினும் அவன் வேறொரு வியாதிக்கும் மருத்துவனாயிருக்க ஆசைப்பட்டான். ஆசைப்பட்டது மட்டுமல்ல அதை அடைவதிலும் ஆர்வமாயிருந்தான். அதை அடையும் வழியினில் சென்று கொண்டிருந்தான். காகங்களிடமிருந்து கோழிக்குஞ்சுகளைக் காப்பாற்றுவதில் அவன் தீவிரமாயிருந்தான். காலவெள்ளத்தில் அமைதிப்புறாக்கள் வந்தன. கோழிகளுக்கோ மிக்க மகிழ்ச்சி. அவை ஏதுமறியாத அப்பாவிகள். ஆயினும் அவன் புரிந்து கொண்டான். அமைதிப்புறா வேடமணிந்து வந்தவை, வல்லரசு வேட்கையில் வேட்டையாடத் துடித்துக்கொண்டிருக்கும் வல்லூறுகளே என்பதை. இப்போது அவன் இம்சைவாதிகள் அணிந்து வந்திருக்கும் அகிம்சை முகமூடிகளைக் கிழித்தெறிவதற்கு ஒரு சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பிணியறுக்கும் மருத்துவனாயிருப்பதில் வல்லவனான அவனே இப்போது இங்கே மருந்தாகினான்.


கௌதம புத்தர், மகாத்மா காந்தி எல்லோருமே மிகச்சிறந்த அகிம்சாமூர்த்திகள்தான். ஆயினும் அவர்களின் பெயரால் ஆட்சி செய்பவர்கள்???