Thursday, December 23, 2010

வேரென நீயிருந்தாய்...(22)

அன்றைய விளக்கத்தின் பின்னர் நதீஷா பெரிதும் மாறிப் போயிருந்தாள். இயன்றவரையிலும் ஆங்கிலத்தில் உரையாடுவதைத் தவிர்த்து தமிழிலேயே என்னிடம் உரையாடலைத் தொடர்ந்து கொண்டிருந்தாலும் எனக்குள் அவள் மீதான அச்சம் முற்றுமுழுதாக விலகியிருக்கவில்லை. எதற்காக இவள் தமிழில் இவ்வளவு ஆர்வமாக இருக்கின்றாள் என்கின்ற சந்தேகம் மனதைக் குடைந்து கொண்டிருந்தது.

“உங்கள் நண்பரின் நண்பன் உளவாளியாக இருக்கலாம்.” என்கின்ற வாசகங்களை 95 இற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் பரவலாகக் காணக்கூடியதாக இருந்திருந்தது. அக்காலப்பகுதியில் உளவாளிகள் அதிக அளவில் ஊடுருவியிருப்பதாக தெரிய வந்திருந்தது. 1991 இல் ஆனையிறவுப் படைத்தளத்தின் மீதான ஆகாய கடல் வெளித் தாக்குதல் தோல்வியில் முடிவடைந்திருக்கையில் யாழ்குடா நாட்டிற்கும் வன்னிப்பெருநிலப்பரப்பிற்குமான போக்குவரத்துத் தொடர்பு ஆட்டம் கண்டிருந்தாலும், பின்னர் கட்டைக்காடு வெற்றிலைக்கேணி தொடக்கம் ஆனையிறவு வரை நீண்டு அமைக்கப்பட்டிருந்த சிறிலங்கா இராணுவ வேலிகளை பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு அது அகற்றி விட்டிருந்தது. ஆயினும் ஆனையிறவுத்தளம் மீதான முற்றுகையை உடைப்பதற்காய் தரையிறக்கப்பட்டிருந்த படையினர் கட்டைக்காடு வெற்றிலைக்கேணிப் பிரதேசங்களில் நிரந்தரப் படைத்தளங்களை அமைத்துக் கொண்டு விட்டிருந்ததால் இப்போது ஊரியான் கொம்படியூடான சேற்று நிலப் பகுதியே வன்னியையும் யாழ்குடாவையும் இணைக்கும் போக்குவரத்துப் பாதையாக மாறிவிட்டிருந்தது. பொதுமக்கள் பயணம் செல்லும் அந்தப் பாதையில் ஒரு வெடிகுண்டுத்தாக்குதலைத் தன்னுடைய உளவாளிகைளைக் கொண்டு நடாத்தி அதன்மூலம் மக்களைப் பேரச்சத்துக்குள் தள்ள முயன்ற சிறிலங்காப் படைகளின் முயற்சி பிசுபிசுத்துப் போயிருந்ததை அடுத்து, மக்களிடையே உளவாளிகள் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகவே அவ்வாறான வாசகங்கள் யாழ்குடாவெங்கும் பரவலாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. “எல்லாவற்றையும் சந்தேகி” என்கின்ற மனநிலையை அந்தச் சூழ்நிலை உண்டாக்கி விட்டிருந்தது. ஆதலினால் இப்போது நதீஷா மீதும் இலேசான சந்தேகம் துளிர்விட ஆரம்பித்திருந்தது.

சிலநாட்களி்ன் பின்னர் வந்துபோன மாவீரர்தின இறுதிநாள் நிகழ்ச்சிக்கு வான்புலிகள் உலங்குவானூர்தியிலிருந்து முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தின் மீது பூக்களைத் தூவியதை அடுத்து வான்புலிகளின் உதயம் பற்றி முதன்முறையாக விடுதலைப்புலிகளால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்குச் சிலகாலங்களுக்கு முன்னரும் ஒரு உலங்குவானூர்தி வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்களின் மீது நீண்ட நேரமாகத் தாழப்பறந்து கொண்டிருந்ததை அவதானித்த மக்கள் அது விடுதலைப்புலிகளின் வானூர்தியென்றே எண்ணியிருந்தனராயினும், அன்றைய சம்பவத்தினை ரத்வத்தையும் பிரபாகரனும் தங்கள் வாழ்வில் மறக்கவே மாட்டார்களென்று பின்னர் தினமுரசில் அதன் ஆசிரியர் அற்புதன் அவர்கள் விபரித்திருந்தார். அந்த உலங்குவானூர்தியில் சிறிலங்காவின் பாதுகாப்பு இணையமைச்சர் ஜெனரல் அநுருத்த ரத்வத்தை அவர்கள் உட்பட சிறிலங்காப்படைகளின் முக்கிய படையதிகாரிகளும் பயணித்திருந்தனர். உலங்குவானூர்தியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்றடைய வேண்டிய இடத்தினைக் கண்டடைவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அது தாழ்ந்து பறந்துகொண்டே முடிவிடத்தினைத் தேடிக்கொண்டிருக்க, கீழே அதை வேடிக்கை பார்த்தவர்கள் அதை வான்புலிகளின் உலங்குவானூர்தியென்றே எண்ணியிருந்தனர். பின் அந்த உலங்குவானூர்தி சூனியப் பிரதேசத்திற்குள் தரையிறங்கி அதிலிருந்தவர்கள் எல்லாம் பாதுகாப்பாக தங்கள் இடங்களை அடைந்து விட்டிருந்தனர். அப்படியானவொரு சம்பவத்தினைக் கனவிலும் எண்ணிப்பார்த்திருக்க முடியாத விடுதலைப்போராளிகளும் அந்த உலங்குவானூர்தி தங்களதே என்கின்ற எண்ணத்தில் அந்த அரிய சந்தர்ப்பத்தினைக் கோட்டைவிட்டிருந்தனர்.

1997 மே 13 இல் பெருமெடுப்புடன் ஆரம்பிக்கப்பட்டிருந்த வெற்றி நிச்சயம் படைநடவடிக்கை பதினெட்டு மாதங்களைக் கடந்த தொடர்ந்து கொண்டிருக்கையில் திடீரென 1998 டிசம்பர் 04ஆம் திகதியன்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அந்தச் செய்தியை வெளியிட்டிருந்தது. சூரிய சக்தி (ரிவிபல) நடவடிக்கை மூலம் அது ஒட்டுசுட்டான் பகுதியைக் கைப்பற்றியிருப்பதாக அறிவித்ததனூடாக வெற்றி நிச்சயம் (ஜெய சிக்குறு) நடிவடிக்கை அறிவிக்கப்பட்ட அதன் இலக்கை அடையாமலேயே முடிவுக்கு வந்ததனை மறைமுகமாக அறிவித்திருந்தது.

பின்வந்த சில நாட்களில் எங்களின் முதலாண்டுப் பரீட்சையின் விரிவான பெறுபேறுகள் வெளியாயிருந்தன. அதைத் தொடர்ந்து நாங்கள் தொடர விரும்பும் பொறியியில் கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. எனக்கும் நதீஷாவிற்கும் விரும்பிய கற்கைநெறியைத் தொடர்வதற்கு ஏற்புடையதான பெறுபேறுகளே வெளியாகியிருந்தது.

“நீங்க என்ன Engineering செய்யப் போறீங்க?”
நதீஷா தான் ஆரம்பித்தாள்.

“நீங்க என்ன decide பண்ணியிருக்கிறீங்க?”

“நான்தான் முதல் கேட்டது. அப்ப நீங்கதான் முதல் சொல்லவேணும். சரிதானே?” - சிரித்தாள்.

“நான் இன்னும் decide பண்ணேல்ல.”

“ஏன்?”

“இல்லை, இனித்தான் decide பண்ணவேணும்.”

“உங்களுக்கு elect செய்ய விருப்பமா?”

நான் ஏற்கனவே Civil Engineering செய்வதாகத் தீர்மானித்து அதற்கான விண்ணப்பத்தினையும் நிரப்பி அனுப்பி விட்டிருந்தேனாயினும், இவள் எதற்காக நான் செய்யவிருக்கும் துறையினைப்பற்றி அக்கறை காட்ட வேண்டும்? என்னை எதற்காகவேனும் ஒரு பகடைக்காயாக மாற்ற நினைக்கின்றாளா? அவளது நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்ததால்,

“ஏன் கேக்கிறீங்க?” - என்றேன்

“இல்ல, உங்களுக்கு elect செய்யிறதுக்கு result காணும் தானே. அதுதான் கேட்டன். நான் இன்னும் decide பண்ணேல்ல. அதுதான் உங்களுக்கு எது விருப்பமெண்டு கேட்டனான்.”

“உங்களுக்கு எது விருப்பமோ அதைச் செய்யுங்க.”
அவளிடமிருந்து விலகவேண்டும் போலிருந்தது.

“நீங்க என்ன செய்யப் போறீங்க எண்டு சொல்லுங்களன். please....”

“நான் என்ன செய்யப் போறன் எண்டதைப் பற்றி நீங்க ஏன் கவலைப்படுகிறீங்க? உங்களுக்கும் elect செய்யுறதுக்கு result காணும்தானே. அப்ப உங்களுக்கு எது விருப்பமோ அதுக்கு apply பண்ணுங்கோ.”
சற்று முறைப்பாகவே நான் சொன்னதைக் கேட்டதும் அவள் முகத்தில் சோகம் படர்வதைக் காணக்கூடியதாயிருந்தது. பார்க்கப் பாவமாயிருக்கவே,

“நான் civil தான் செய்யப் போறன். அதுக்கு apply-யும் பண்ணீற்றன்.”
கூறிவிட்டு அங்கிருக்கப் பிடிக்காமல் இருக்கவே அங்கிருந்து விலகி நடந்தேன்.