Friday, November 25, 2011

வேரென நீயிருந்தாய்...(41)

“ஜெயந்தன் டேய்! இரவைக்கு நான் வீட்ட வருவன். எனக்கு நாளைக்கு faculty-ல course completion letter எடுக்க வேணும். அம்மாட்ட எனக்கும் சேர்த்துச் சமைக்கச் சொல்லு. என”

“தீபன் டேய்! அம்மாவை emergency ward - இல admit பண்ணியிருக்கடா. திடீரெண்டு வீசிங் கூடி சுவாசிக்கச் சரியாக் கஷ்ரப் படுகிறா. கொண்டு வந்த உடனே ஒருக்காப் புகைப்பிடிச்சவங்கள். இன்னும் சரி வரேல்லைடா. பயமாயிருக்கு”.

“பயப்படாத மச்சான் ஒண்டும் நடக்காது. எப்பிடியும் இரவுக்கு நான் அங்க வந்திருவன். தைரியமாயிரு. எந்த ஆஸ்பத்திரி? உதவிக்கு ஆரும் இருக்கினமோ?"

“கண்டி பெரியாஸ்பத்திரியிலதான் admit பண்ணியிருக்கு. நான் தனியத்தான்ரா நிக்கிறன். கொஞ்சம் சரிவந்தா ward-இற்கு மாத்திறது எண்டு கதைச்சவை. பெம்பிளைகளின்ரை ward-க்கு விட்டால் பிறகு நிக்கேலாது. உதவிக்கும் ஒருத்தரும் இல்லை. என்ன செய்யிறதெண்டும் தெரியேல்லையடா”

“கவலைப்படாத மச்சான். எல்லாம் ஒழுங்கு செய்யலாம். எனக்குத் தெரிஞ்ச டொக்ரர் ஒருத்தரும் கண்டி பெரியாஸ்பத்திரியிலதான் house officer-ஆ இருக்கிறேர். நான் அவரோடு கதைச்சு ஒழுங்கு படுத்திறன். அப்பிடியில்லையெண்டாலும் ஆரும் எங்கட faculty பெட்டைகளிட்டக் கேட்டுப் பார்க்கலாம். அந்த அலுவல் எல்லாம் நான் பார்க்கிறன். நீ பயப்பிடாம இரு. நான் இன்னும் அஞ்சு மணித்தியாலத்தில அங்க வந்திருவன்”

அழைப்பைத் துண்டித்தான் தீபன். நெஞ்சுக்குக் கொஞ்சம் நிம்மதியாயிருந்தது. Emergency ward-இன் வெளியே வைக்கப்பட்டிருந்த bench-இல் அமர்ந்தேன். என்னைப் போலவே வேறும் சிலரும் தங்கள் உறவுகளை emergency ward-இனுள் அனுமதித்துவிட்டு வெளியே தவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரை மருத்துவத்தாதி வந்து அழைத்து ஏதோ சொல்ல அவரும் சந்தோஷமாக உள்ளே சென்றார். சிறிது நேரத்தில் அவரது நோயாளி உறவினரை ward-இற்கு மாற்றினர். நான் எனக்கான அழைப்பிற்காகக் காத்திருக்கத் தொடங்கினேன். இன்னும் சிறிது நேரத்தில் வேறொருவரை உள்ளே அழைத்தனர். உள்ளே சென்றவர் கத்திக்குழறியவாறே வெளியே வருகையிலேயே புரிந்து விட்டது.

ச்சே! என்ன வாழ்க்கை இது? நேற்றிருந்தார் இன்றில்லையெனும் பெருமையல்ல. சற்றுமுன் இருந்தவர்கூட இப்போதில்லையெனும் பெருமைக்குச் சொந்தமானதுதான் இந்தப் பூமி. ஆழ்ந்து சிந்திக்க, வாழ்வின் நிரந்தரமின்மை புரிந்தது. வாழ்க்கையைப் புரிந்து கொள்ள விரும்புபவர்கள் வைத்தியசாலைகளின் Emergency ward மற்றும் intencive care unit களின் முன்னால் சிலநாட்கள் அமர்ந்து கவனித்தாலே போதுமானது. போர்க்களத்தைத் தவிர்த்து வாழ்க்கையின் நிலையாமையை உணர வைத்தியசாலையைத்தவிர வேறு சிறந்த இடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

“Mrs. சுந்தரலிங்கம்-கே கட்டி கவுத?" (Mrs. சுந்தரலிங்கத்தின்ரை ஆள் ஆரு?)

'அய்? மமத் தமாய்” (ஏன்? நான்தான்)

“எயாவ ward-எக்க மாறுகரகண்டஓன. அத்துலங் எண்ட.” (அவர ward-க்கு மாத்த வேணும். உள்ளுக்க வாங்க)

அம்மாவை normal ward -இற்கு மாற்றுகையில் மணி ஆறரையைத் தாண்டி விட்டிருந்தது. அதன் பின்னர் பெண்கள் ward-இற்குள் நிற்க ஆண்களுக்கு அனுமதியில்லையாதலால் நான் வெளியே வரவேண்டியதாயிற்று. அம்மாவின் அலைபேசியை அவரிடம் கொடுத்தேன். அம்மா இப்போது கொஞ்சம் Normal-ஆய் இருந்தார்.

“ஜெயந்தன் நீ வீட்டை போ. வீட்டில எல்லாம் போட்டது போட்டபடியே அப்பிடியே கிடக்கு. எனக்கு ஒண்டுமில்லை. என்னை நாளைக்கே வீட்டைபோகச் சொல்லி விட்டிருவினம். ஏதும் தேவையெண்டால் நான் உனக்கு போன் பண்ணுறன்”

“சாப்பாடு வேண்டிக் கொண்டுவாறன்.”

“இனி நீ உள்ள வரேலாது. அதெல்லாம் நான் பார்த்துக் கொள்ளுவன். சாப்பாடு கொண்டுவந்துதர எல்லாம் எனக்கு ஆக்கள் இருக்கினம். நீ கவனமா வீட்டை போய்ச் சேர். ஒழுங்காச் சாப்பிடு. என?”

“விசிற்றர்ஸ் ஒக்கம எலியன்ட யண்ட. வெலாவ இவறாய்” (visitors எல்லாம் வெளியால போங்க. நேரம் முடிஞ்சுது).

மருத்துவத்தாதி விரட்ட வெளியேறி வீட்டினை அடைந்தேன். அம்மா இல்லாத வீடு வெறுமையாய் இருந்தது. தனிமை சூழ்ந்து கொண்டது..

“ஜெயந்தன்”

தீபனின் குரல் கேட்டதும் நெஞ்சுக்குக் கொஞ்சம் நிம்மதி வந்தது. கதவைத் திறந்தேன்.

“அம்மாக்கு இப்ப என்ன மாதிரி?”

“ward-இற்கு மாத்தியாச்சு. இனி நாளைக்குக் காலமை தான் போய்ப் பார்க்கலாம்”.

“சரி நீ சாப்பிட்டியா? நீ எங்க சாப்பிட்டிருக்கப்போற? வா போய் குருந்துவத்தைச் சந்தியில சாப்பிட்டு வரலாம்”..

தீபனின் வற்புறத்தலின் பேரில் போய் சாப்பி்ட்டு வந்து படுத்துக் கொண்டோம். உறக்கம் வர மறுத்தது. பிரண்டு பிரண்டு படுத்துக்கொண்டேயிருந்தேன். திடீரென தீபனின் போன் அலறியது.

“ஹலோ? ஆரு? என்ன?...ஓ அப்பிடியா? என்னெண்டு எப்ப நடந்தது? சரிசரி நாங்க வாறம்”

“தீபன் டேய் என்னடா? ஆரு இந்த நேரத்தில? என்ன நேரம் இப்ப?”

நேரத்தைப் பார்த்தேன். அதிகாலை ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. தீபன் எழுந்து அருகில் வந்தான். கையை இறுகப்பிடித்துக் கொண்டான்.

“ஜெயந்தன் நீ இனித் தைரியமாயிருக்கவேணும்”

“என்ரை அம்மோய்ய்ய்.............................”

நரம்பெல்லாம் ஓடிச்சிலிர்த்தது. உள்மனதிற்கு புரிந்துவிட்டது. எது நடக்கக்கூடாது என்று விரும்பியிருந்தேனோ அது நடந்தே விட்டது. தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. தீபன் என்னைத் தாங்குவது மங்கலாகத் தெரிந்தது.

தாயெனும் கோவிலைக் காக்க மறந்திட்ட பாவியடி கிளியே...............

“ஜேன்! எழும்படாப்பு! கவலைப்படாதையப்பன்”

“அக்க்க்கா” கேவினேன்.

தலையினை அக்கா வாஞ்சையுடன் தடவிவிட்டாள்.

“ஆம்பிளைப்பிள்ளை அழக்கூடாதடா. நீ அழுதா அம்மாக்கு மனசு தாங்காது. நீ என்ன சின்னப்பிள்ளையா? இப்ப நீ ஒரு இஞ்சினியர். அழாமத் தைரியமாயிருக்க வேணும். எழும்பி இனி நடக்க வேண்டியதுகளைக் கவனி”

“நீயும்தானே என்னை விட்டிட்டுப் போய்ற்ற..”

“உன்னைவிட்டிட்டு நான் ஒரு இடமும் போகமாட்டன். நான் இனியும் உன்னோடதான் இருப்பன். நீ தைரியமாயிரு. என்னடா பெம்பிளைப்பிள்ளைகள் மாதிரி சும்மா அழுது கொண்டு. எழும்பு. எழும்பி அம்மாவின் அலுவல்களைக் கவனி”

அழுவதனால் துயரங்கள் கழுவப்படுகின்றன. மனம் இலேசாகின்றது. ஆனால் இந்த சமூகம் ஆண்களை அழுவதற்கு அனுமதிப்பதில்லை. அழும் ஆண்களை பலவீனமானவர்களாகப் பார்க்கிறது. அந்த வரட்டுக் கௌரவத்திற்காகவே அத்தனை ஆண்களும் தங்கள் கண்ணீரை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. மீன்களின் கண்ணீரை கடல் மட்டுமே அறிவதைப்போல் ஆண்களின் கண்ணீரைத் தலையணை மட்டுமே அறியும்.

“ஜெயந்தன் டேய்! என்னடா செய்யுது உனக்கு? நீ OK-யா?”.

யாரோ என்னை உலுக்குவது தெரிந்து விழிக்க தீபன் நின்றிருந்தான். அயலிலிருக்கின்ற சில மாணவர்களும் வந்திருந்தனர். என்னைச்சுற்றி என்ன நடக்கின்றது என்பதை உணர முடியா நிலையில் நானிருந்தேன். தீபன்தான் எல்லா ஒழுங்குகளையும் செய்து கொண்டிருந்தான். காலை ஒன்பது மணியளவில் அம்மாவின் உடல் வீட்டிற்கு எடுத்துவரப்பட்டது. குளித்து வேட்டி உடுத்திவர ஐயர் ஆயத்தமாயிருந்தார்.

முத்துநல் தாழம்பூ மாலை தூக்கி.....

திருப்பொற்சுண்ணம் ஆரம்பிக்க அடிவயிற்றுக்குள் ஓலம் கிளம்பியது. மாட்டேன். நான் அழமாட்டேன். நான் அழுவது அம்மாவுக்கு பிடிக்காது. அம்மா! உனக்குப்பிடிக்காததை நான் செய்யமாட்டேன். மேற்பற்களால் கீழுதட்டைக் கடித்துக் கொண்டேன்.

வாள்தடங்கண்மட மங்கைநல்லீர்
வரிவளை ஆர்ப்பவண் கொங்கைபொங்கத்
தோள்திரு முண்டந் துதைந்திலங்கச்
சோத்தெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி....

நெஞ்சுக்கூட்டுக்குள் எதுவோ உடைந்து நொருங்கியது. ஐயோ! அம்மா! என்னால தாங்கமுடியுதில்லையே...... அழமாட்டன். அழமா இருக்க என்னால ஏலும். ஆட்களைப் பார்ப்பதைத் தவிர்த்து அண்ணாந்து கொண்டேன். கண்களில் வழியவந்த கண்ணீரைக் கண்களுக்குள்ளேயே தேக்கிக்கொண்டேன்.

வையகம் எல்லாம் உரலதாக
மாமேரு என்னும் உலக்கை நாட்டி
மெய்யனும் மஞ்சள் நிறைய அட்டி
மேதரு தென்னன் பெருந்துறையான்
செய்ய திருவடி பாடிப்பாடிச்
செம்பொன் உலக்கை வலக்கைபற்றி
ஐயன் அணிதில்லை வாணனுக்கே
ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே.

உலக்கை தூக்கி உரலை இடிக்க கட்டுப்படுத்த முடியாமல் இரு கண்ணீர்த்திவலைகள் உரலுக்குள் சிந்தின.

முத்தணி கொங்கைகள் ஆடஆட
மொய்குழல் வண்டினம் ஆடஆடச்
சித்தஞ் சிவனொடும் ஆடஆட...

”ஜேன் please அழாதேடா...."

“என்னால முடியுதில்லையே அக்கா....”

பித்தெம் பிரானொடும் ஆடஆடப்
பிறவி பிறரொடும் ஆடஆட..

டேய் ஜேன்! அம்மா சிம்மராசி மக நட்சத்திரிக்காரியடா. அவளுக்கு அடுத்த பிறப்பெண்டு இனி ஒண்டுமில்லை. பிறகேன் சும்மா அழுது அம்மாவின்ரை ஆத்மாக்கு கஷ்ரம் குடுக்கிற? அவாவுக்குச் செய்ய வேண்டிய கிரியைகளைக் கவனமாய்ச் செய்”

ஞானக் கரும்பின் தெளியைப் பாகை
நாடற் கரிய நலத்தை நந்தாத்
தேனைப் பழச்சுவை ஆயினானைச்
சித்தம் புகுந்துதித் திக்கவல்ல
கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட
கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப்...

கீழுதட்டில் வலியை உணர்ந்தேன். பற்கள் கடித்து உதிரம் இலேசாய் கசியத் தொடங்கியிருந்தது.

வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு
மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச்
சோதிய மாய் இருள் ஆயினார்க்குத்
துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்குப்
பாதியு மாய் முற்றும் ஆயினார்க்குப்
பந்தமு மாய் வீடும் ஆயினார்க்கு
ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு
ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே.

அம்மாவின் உடலை மூடி பிரேத ஊர்தியில் ஏற்றி மயானத்தை நோக்கி நகர்ந்தோம்.

வீடுவரை உறவு. வீதிவரை மனைவி. காடுவரை பிள்ளை. கடைசிவரை யாரோ????


1 comment:

  1. normally chronic bronchial asthma patients not die with the asthma problem, except if the condition is very serious

    ReplyDelete