Monday, February 15, 2010

வேரென நீயிருந்தாய்... (8)

அன்று வெள்ளிக்கிழமை மாலை. தாமதமாகவே இருப்பிடத்தினை வந்தடைந்திருந்தேன். இப்போதெல்லாம் ஆங்கில வகுப்புகள் முடிவடைந்ததும், பனிதெனியாவிற்குள்ளால் இறங்கி கண்டிக்குச்செல்லும் பேருந்தில்ஏறி கலகாச்சந்தியில் இறங்கியோ அல்லது கண்டிநகருக்கோ சென்று நாவலப்பிட்டிப்பேருந்தினை பிடித்து ஹெலிஓயாவிலோ அல்லது கம்பளையிலோ இறங்கிப்பின் மீண்டும் அங்குணாவலையிற்கு வருவதினூடாக பேருந்துகளுக்குள் சிரேஷ்ட மாணவர்களின் பார்வையில் படுவதினை பெருமளவிற்கு தவிர்க்கத்தொடங்கியிருந்தோம். அறைக்குள் சென்றதும் பக்கத்து அறை நண்பன் வந்து சொன்ன சேதி வயிற்றில் புளியைக் கரைத்தது.

சிலவாரங்களுக்கு முன்னர் ஒரு சிரேஷ்ட மாணவனால் எனக்கென வழங்கப்பட்ட course work, dead line முடிவடைந்தும் இன்னமும் என்னால் சமர்ப்பிக்கப்படாதிருந்தது. நாளை காலைக்கிடையில் அதனைச் சமர்ப்பிக்காவிட்டால் விளைவுகள் விபரீதமாகலாம் என்கின்ற அச்சத்தினால் உடனடியாக அந்த சிரேஷ்ட மாணவனைச்சந்திப்பதே எனக்கும் அவனுக்கும் நல்லதாகப் பட்டது. ஏற்கனவே வேறும்சில மாணவர்களிடம் அதே course work இற்கான தகவல்களைப்பெற்றிருந்ததால் அவற்றைப்பார்த்து எழுமாற்றாகச் சில தகவல்களை மாற்றிப்பிரதி பண்ணிக்கொண்டு உடனேயே புறப்பட்டேன்.

“வாடா மாப்பிள”
வரவேற்பு பலமாக இருக்கவே நெஞ்சு திக்கென்றது.

“உன்ன எப்ப submit பண்ணச் சொன்னான்? பெரிய விஐபி ஆகிட்டீங்களோ நீங்கள்?”

“இல்லையண்ண. வேறை சீனியர்ஸ் பிடிச்சுக்கொண்டு போனதால வரேல்லாமப் போய்ற்றுதண்ண.“

“டேய்! ஆருக்குச் சுத்துற? நாங்களும் யூனியர்ஸ்ஸா இருந்துதான் வந்தனாங்கள். உன்னப்போல எத்தினபேர பாத்திருப்பம்? பாவமெண்டு கொஞ்சம் விட்டால் தலைக்குமேல ஏறிருவியள் என?”

“அப்பிடியில்லயண்ண....”

“சரிசரி. இப்ப course work நீயாச் செய்தனியோ அல்லது வேறையாற்ரையையும் copy பண்ணிக் கொண்டந்தனியோ?”

“இல்லையண்ண. நானாத்தான் செய்தனான்.”

“சரி. அப்ப மொத்தமா எத்தின பேர்?”

“பதினைஞ்சு பேர்.”

“அப்ப மெலிசா?”

“.....”

“எல்லாம் 'தானா'-க்களா?”

“இல்லை. ஒராள் முஸ்லீம்”

“சரி அப்ப எல்லாருக்கும் marks போட்டிட்ட?”

“ம்...” -தலையசைத்தேன்.

“சரி! ஆருக்கு highest marks?”

அவசரமாகக் கொண்டு சென்றிருந்த தாளினைப் பிரித்தேன்.
“கஸ்தூரி“

“ம்... எவ்வளவு?”

“78“

“எது எதுக்கு எவ்வளவு போட்டிருக்கிற?”

ஙே! விழித்தேன்.

“என்னடா முழிக்கிற? நீதானே marks போட்டனி?”

“ஓம்!”

“என்னண்டு marks போட்டனி?”

“ஆளப்பாத்து”

“சரி அப்ப கண்ணுக்கு எவ்வளவு? காதுக்கு எவ்வளவு எண்டு ஒவ்வொண்டாச் சொல்லு.”

“இல்லையண்ண. அப்பிடிப் போடேல்ல“

“பேய்ப்... அப்ப என்னெண்டு marks போட்டனி?”

“சும்மா ஆளப் பாத்து...”

“சரி. அப்ப ஆர reference-ஆ வச்சு marks போட்டனி?”

“ல்ல... ஒருத்தரையும் இல்ல...”

“அப்ப அவளிலும் விட வடிவான பெட்டைக்கு எண்டால் நூறுக்கும் மேல marks போடுவியோடா?”

“ல்ல......”

“அம்மாண வாற ஆத்திரத்துக்கு... பேய்ப்... Engineering படிக்கவெண்டு வெளிக்கிட்டு வந்திட்டியள். இன்னும் reference எண்டா என்னெண்டு ஒரு கோதாரியும் தெரியாது. என்னெண்டுதான் lab-இல தாற course work எல்லாம் செய்யப் போறியளோ...”

“....”

“மவனே சுத்தாம உண்மையச் சொல்லு! நீ கஸ்தூரிய பாத்திருக்கிறியா? இஞ்ச என்னட்ட மற்றப் பெடியள் போட்டுத்தந்த marks list-உம் கிடக்கு. இப்ப compare பண்ணிப்பாத்து நீ சுத்துறாயெண்டு பிடிச்சால் பிறகு உனக்கு physical தான்.”

விடயம் விபரீதமாக மாறுவதற்கு முன் உண்மையை ஒப்புக்கொள்வது நல்லதென மனதுக்குப்பட்டது.

“ஓமண்ணே, நான் உண்மையைச் சொல்லுறன். ஆள நான் பார்க்கேல்ல. வேற பெடியள் எழுதி வைச்சிருந்ததை வேண்டி marks-ஐக் கொஞ்சம் மாத்திப்போட்டுக் கொண்டு வந்தனான்”

“நீயொரு லெப்பையடா. போயும் போயும் அவளுக்கு போய் 78 marks போட்டுக் கொண்டு வந்திருக்கிறியே. மற்ற எல்லாரும் அவளுக்குத் தான்ரா குறையப் போட்டிருக்கிறாங்கள். கொஞ்சமாவது யோசிக்க வேண்டாம்.”

“....”

“எடேய்! இப்ப ராகிங்கப்பாத்துப் பயப்பிடுறியள். பிறகு கன விசயங்கள miss பண்ணீற்றமே எண்ட கவலைப்படுவியளடா. ஊரில A/L படிக்கேக்க ஆரும் பெட்டையளோட கதைச்சுப்பழகியிருப்பியளோ? இஞ்சையும் ராகிங் முடிஞ்சுதெண்டால் பிறகு உங்கட batch பெட்டைகள் உங்களோட கதைக்கவே level காட்டுங்களுடா. சும்மா கதைக்கப்போனாலும் வாளி வைக்கிறதுக்கு வழியிறான் எண்டுங்கள். அதுக்காகத்தான் இப்பவே உங்கள ராக்கிங்கச் சாட்டிக்கதைக்கப் பழக்கிறது. அத விட்டிட்டு, சும்மா எங்களுக்குச் சுத்திக்கொண்டிருக்கிறியள். போடா! இனிமே இந்தப்பக்கமே நீ வரக்கூடாது.”

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று எண்ணியவாறே இருப்பிடத்தை அடைந்தாலும் பகிடிவதைக்கு இன்னொரு பக்கமும் இருப்பதை உணரத் தொடங்கினேன்.


பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7

No comments:

Post a Comment