Monday, September 19, 2011

வேரென நீயிருந்தாய்...(35)

“உங்களுக்கு love பண்ணுறதுக்கு எத்தினை வருஷம் தேவையெண்டு எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு? சொன்னா நம்புவீங்களா? முதன்முதல் உங்கள postal course class-இல கண்ட அண்டையில இருந்தே எனக்குத் தெரிஞ்சிற்றுது நீங்கதான் என்ரை வாழ்க்கை எண்டு.”

உடம்பு ஒருமுறை ஆடியது. இவள் என்ன சொல்கிறாள்? இவளை நான் முதன்முதல் பார்த்த அன்றைய அதே தினத்தில் நானும் குழம்பிப் போயிருந்தேன். இவளுடன் நன்கு பழகியிருப்பதாக உள்மனம் சொல்லிக்கொண்டேயிருந்தாலும் அதற்கான எந்தவொரு சாத்தியக்கூறுமே இருந்திருக்கவில்லையாதலால் பின்வந்த நாட்களில் அந்த உள்ளுணர்வு மறைந்து போயிருந்தது. ஆனால் இப்போது இவள் சொல்வதைப் பார்க்கையில்...

“உங்களுக்குத் தெரியுமா? உங்களைப் பார்த்த அண்டைக்கு நானாகத்தானே உங்களோட வந்து கதைச்சன். நீங்க தமிழெண்டு சொன்னதும் என்னால நம்பேலாம இருந்துது. உங்களோட கனகாலம் பழகினது போல எனக்கு இருந்திச்சு. எனக்கே ஏன் அப்பிடியெல்லாம் இருந்தது எண்டு இப்ப வரைக்கும் தெரியாது. ஆனா இதையே யோசிச்சு எத்தினை நாள் நித்திரை கொள்ளாம இருந்தனான் தெரியுமா? இது போன ஜென்மத் தொடர்புதான். இதெல்லாம் உங்களுக்கு விளங்காது.”

அவள் சொல்லச் சொல்ல எனக்கு மண்டை விறைக்கத் தொடங்கியது. நான் அனுபவித்த அதே உணர்வுகளை அவளும் அனுபவித்திருக்கிறாள். ஆனால் அவையெவற்றையுமே இத்தனை காலமாய் வெளிக்காட்டாமல் இருந்திருக்கிறாள். ஒருவேளை இது ஜென்மாந்திரத் தொடர்புதானோ? நம்ப மறுத்தது மனது. சரி. இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இன்றைய சூழ்நிலையில் இது சரிவருமா? அதுவும் இவளது தந்தையின் மரணத்திற்கு எனது அக்காதான் காரணமென்பது தெரியவந்தால் இவளது உணர்வுகள் எப்படியிருக்கும். மனைவியென்றானபின் இவளிடமிருந்து இவையெல்லாவற்றையும் மறைக்க முடியுமா? இதுவரைகாலமும் எனக்கு வேறு உடன்பிறப்புகளே இல்லை என்று நான் சொன்னதெல்லாம் பொய் என்கின்ன உண்மை தெரியவருகையில் என்மேல் அவள் வைத்திருக்கின்ற நம்பிக்கைகள் உடைந்து சிதறாதா? அதன்பின் எங்கள் வாழ்க்கை நரகமாகிப் போய்விடாதா? இல்லை அம்மாதான் இதற்கு மனப்பூர்வமாகச் சம்மதிப்பாளா? அல்லது ஏற்கனவே அவள் தனது மருமகளாய் யாரையேனும் வரித்துக் கொண்டிருப்பாளோ? வாக்குக்கூடக் கொடுத்திருப்பாளோ. அப்பாவைப் பறிகொடுத்து அக்காவை இழந்து இப்போது எனக்காய் மட்டும் ஜீவிக்கும் அவள் வாழ்க்கையில் என்ன சந்தோஷத்தை அனுபவித்திருப்பாள். அவளுக்கு மகனாய் நான் கொடுக்கக்கூடிய சந்தோஷம் அவளையே தனது மருமகளைத் தீர்மானிக்க விடுவதுதான். தாயும் மனைவியும் உத்துப் போனால்தான் ஒரு ஆணால் தன் குடும்பத்தை சந்தோஷமாகக் கொண்டு செல்லமுடியும். காதலில் தோற்றவர்கள் எல்லாம் வாழ்க்கையில் தோற்றா போய்விட்டார்கள்? காதலில் வெற்றிபெற்ற எத்தனையோபேர் மணவாழ்க்கையில் தோற்றுப்போயிருக்கிறார்களே. காதலிக்கையில் கண்ணுக்கு மறைந்துகிடக்கின்ற எத்தனையோ விடயங்கள் மணமானதும் விசாலமாகி வாழ்ககையையே நரகமாக்கி விடுகிறதே. இப்போது நான் இவள் காதலை ஏற்றுக் கொண்டாலும் இவளை என்னால் சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியுமா? என்னுடன் வாழ்வதால் தான் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதால்தானே என்னைக் காதலிக்கின்றாள். அவளது காதலை ஏற்றுக்கொண்டுவிட்டு பின் அவளை சந்தோஷமாக வைத்திருக்க முடியாவிட்டால் என்னை வெறுத்து ஒதுக்க மாட்டாளா? இவளை மணமுடிப்பதால் என் இனத்திலிருந்து நானும் அவள் இனத்திலிருந்து அவளும் ஒதுக்கப்பட்டவர்களாக மாட்டோமா? இரு இனங்களினாலும் நாங்கள் சந்தேகிக்கப்பட மாட்டோமா?

“நீங்க உண்மையைச் சொல்லுங்க. எதுக்காகப் பயப்படுறீங்க?”

“ஏன் நான் என்னத்துக்குப் பயப்பிட வேணும்?”

“அப்பப்பிறகேன் உண்மையை ஒத்துக்கொள்ளத் தயங்கிறீங்க?”

“சரி உண்மையெண்டே வைச்சுக் கொண்டாலும் எங்கடை வாழ்க்கை சந்தோஷமா இருக்காது. யோசிச்சுப் பாருங்க. உங்கட இடத்தில நான் இருந்தா ஏதும் பிரச்சினை வரேக்குள்ளை உடனே பக்கத்தில இருக்கிற சனமெல்லாம் நான் இயக்கம் சொல்லி பொலிசிட்டையோ ஆமியிட்டையோ பிடிச்சுக் குடுத்துப் போடுவினம். அதேபோல நீங்க எங்கட ஊருக்கு வந்தாலும் உங்கள ஒரு உளவாளியாத் தான் அங்கை இருக்கிறவை பாப்பினம். இதெல்லாம் இப்ப உங்களுக்கு விளங்காது. பிறகு அனுபவிக்கேக்குள்ள ஏன்ரா இவனைப் போய் லவ் பண்ணினன் எண்டு யோசிப்பீங்க. இதெல்லாம் தேவையா? நாங்க friends-ஆவே இருப்பம்.”

“ஏன் உங்கடை காவல்துறைப் பொறுப்பாளர் நடேசன்ரை wife-உம் ஒரு சிங்கள பெம்பிளை தானே. ஆமிக்காரரில எத்தினை பெரியாக்கள் தமிழ்ப் பெம்பிளைகளை marry பண்ணியிருக்கினம் எண்டு உங்களுக்குத் தெரியுமா?”

“அதெல்லாம் பிரச்சினை பெரிசா வரமுதல் நடந்தது. ஆனா இப்ப சரிவராது”

“சரி அப்ப நாங்க இப்ப புதுசாத் தொடங்கி வைப்பம். இப்பிடியாவது இந்த நாட்டில பிரச்சனை இல்லாமப் போகுதா எண்டு பார்ப்பம்”

“நதீஷா! நீங்களும் இந்தப் போரால பாதிக்கப்பட்டிருக்கிறீங்கதான். நான் மறுக்கேல்லை. ஆனா எப்பையுமே உங்கட இனம் அதிகாரம் செலுத்திற ஆக்களாககும் ஆக்கிரமிக்கிற ஆக்களாகவும் இருக்கிறதாலதான் அந்தப் பாதிப்புகள் உங்களுக்கு வருகுது. ஆனா எங்களுக்கு சண்டை நடக்கேக்ககையும் பாதிப்புத்தான் அதுக்கு முதலும் பாதிப்புத்தான். அதாலதான் சண்டையே வந்தது. இப்பிடி கலப்பினக் கல்யாணம் செய்யிறதால தமிழனம்தான் அழிஞ்சு போகுமேயொழிய சமாதானம் வராது. எண்டைக்கு அதிகாரம் எல்லாஇன மக்களுக்கும் சமமாக கிடைக்குதோ, அதுக்குப் பிறகு வேணுமெண்டா நீங்க சொல்லுறது சரியா இருக்கலாம். இப்பத்தைய நிலையில தமிழரிட்டை அடிவாங்கின வலிதான் அதிகமாயிருக்கு. அதுக்குப் பரிகாரம் செய்யாம வேற என்னதான் செய்தாலும், அந்தவலி திரும்பித்திரும்பி வந்துகொண்டேயிருக்கும்.”

“OK. தெரிஞ்சோ தெரியாமலோ தமிழாக்களின்ரை வலிகளுக்கு என்ரை குடும்பமும் காரணமாயிருந்திருக்கு. அதுக்குப் பரிகாரம் செய்யிறதுக்கு நான் ரெடி. என்ன செய்யவேணுமெண்டு சொல்லுங்கோ. நான் செய்யிறன்.”

“அதெல்லாம் சரிவராது”

”காதலன் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து... தெரியும்தானே. எல்லாம் சரிவரும்”

”போற பாதையே தெரியாதாம். சும்மா பிடிவாதம் பிடிக்காம உங்கடை அலுவல்களைப் பாருங்கோ”

“புது வெள்ளம் சேரும்போது வழியென்ன பாதையென்ன? காத்தாகி வீசும்போது திசையென்ன தேசம் என்ன?”
சிரித்தாள்.

ஆச்சரியாமாயிருந்தது. எப்படி இவளுக்கு இந்தப்பாடல்களெல்லாம் தெரிய வந்திருக்கும்?

“மனசத் தாழ்போட்டு மயிலே நீ போ.. வேணாம் விளையாட்டு”

“பரவாயில்லை. கடைசில சரியா நடந்தாச் சரி”

“சும்மா வீணான கற்பனைகளை வளர்க்காதீங்க. இதுக்குமேல உங்களோட நான் இதைப்பற்றிக் கதைக்க மாட்டன். இது சத்தியம்.”

அவள் வதனம் சுருங்கிப் போனது.

“OK. நானும் இனி இதைப்பற்றி உங்களோடை கதைக்க மாட்டன்”

இருவருக்குமிடையில் மௌனம் வந்து குந்திக்கொண்டது.



Friday, September 16, 2011

வேரென நீயிருந்தாய்...(34)

“ஒயாட்டத் தண்ணுவத, ஒயாத்தமாய் மகே ஜீவிதய?”

காலடியில் நிலம் வழுவுவதாய் உணர்ந்தேன். கடைசியில் தீபனின் கணிப்பு சரியாகி விட்டது. எதிர்பார்த்திராத நேரத்தில் அவள் வெளிப்படுத்திய வார்த்தைகள் திகைபை்பையே உண்டு பண்ணியது. வாயடைத்துப்போய் நின்றேன். எதையும் முளையிலேயே கிள்ளிவிட வேண்டும் என்பது எவ்வளவு உண்மையானது! தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்து நிற்பதாய்ப் பட்டது. ஆயினும் அடிமனதிற்குள் அவள் வார்த்தைகள் ஒருவித சந்தோஷத்தைப் பிரசவிப்பதையும் என்னால் உணரமுடிந்தது. இது ஒருபோதுமே சரிப்பட்டு வராது. என்ன செய்யலாம்? எப்படி இவள் மனதைக் காயப்படுத்தாமல் இதிலிருந்து வெளிவரலாம்? சிந்தனைகள் ஓடத் தொடங்கின.

“ஏன் திடீரெண்டு silent ஆகிற்றீங்க?”

நதீஷாவின் வினா சிந்தனைகளை அறுத்தது. இப்போதுகூட எதுவும் ஆகிவிடவில்லை. இவளுக்குப் புரியும்படி எடுத்துக் கூறினாள் புரிந்துகொண்டு விலகிவிடுவாள் என்கின்ற நம்பிக்கை துளிர்விட்டது.

“என்ன நீங்க? என்னெல்லாமோ சொல்லுறீங்க. உங்களுக்கு என்ன நடந்தது?”

“ஏன் நான் சொன்னது உங்களுக்கு விளங்கேல்லையா? You are my life ஜேந்தன்”

“Please நதீஷா. இதெல்லாம் சரிப்பட்டு வராது. ஏன் வீணா உங்கடை மனதை அலைய விடுறீங்க?”

“ஏன் அப்படிச் சொல்லுறீங்க. love பண்ணுறது பிழையா?”

“love பண்ணுறது பிழையில்லத்தான். ஆனா அந்த love-ஆல பல பிரச்சினைகள் வருமெண்டால், அதைத் தவிர்க்கிறது நல்லதுதானே”

“ஏன்? பிரச்சினைகளை face பண்ண உங்களுக்குப் பயமா?”

“அஞ்சுவது அஞ்சாமை பேதமை. எண்டு வள்ளுவரே சொல்லியிருக்கிறேர். love பண்ணினா marry பண்ண வேணும். நாங்க ரெண்டுபேரும் marry பண்ணிறதெண்டா சும்மாவா? அதுவும் நாடு இப்ப இருக்கிற நிலையில நரிக்கு உழுந்து வடை கேட்ட மாதிரி. இதெல்லாம் சரிப்பட்டு வராது.”

“அதுதான் ஏனெண்டு கேக்கிறன்”

“நீங்க சிங்களம். நான் தமிழ். நாங்க சேர்ந்து வாழுறது சரிப்பட்டுவராது.”

“சும்மா சும்மா தமிழ் சிங்களம் எண்டுசொல்லி மழுப்பாதீங்க. உங்களுக்கு என்னைப் பிடிக்கேல்லையா?”

“ஏன் இப்பிடியெல்லாம் கதைக்கிறீங்க? ஒரு friend-ஆ உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா அதுக்கு மேல love எல்லாம் வேண்டாம்..”

“உங்கட நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்க உங்களுக்கு என்னில love இல்லையெண்டு?”

“எதை நீங்க love எண்டு சொல்லுறீங்க?”

“dictionary கொண்டுவந்து தரவா?”

“இஞ்ச வாங்க! உங்களுக்கு எப்ப இருந்து என்னைத் தெரியும்? கம்பசுக்கு வந்தாப் பிறகுதானே! அதுவும் நாங்க group mates-ஆ இருந்ததாலதானே பழகினம். சிலவேளை நாங்க ரெண்டுபோரும் group mates-ஆ வந்திருக்காட்டி சும்மாதானே இருந்திருப்பம். சிலவேளை எங்கட பெயர்கள்கூட ஒருத்தருக்கொருத்தர் தெரிஞ்சிருக்காது. அப்பப் பிறகென்ன? இதெல்லம் சும்மா உடம்பு செய்கிற வேலை”

“ஹலோ சேர்! கொஞ்சம் அமத்தி வாசிக்கிறீங்களா? விட்டா ஏதோ நான் அலையிற மாதிரிக் கதைச்சுக்கொண்டே போறீங்க?”

“sorry நான் அப்பிடி mean பண்ணேல்லை. ஆனா...”

“என்ன ஆனா ஆவென்னா எண்டுகொண்டு? உங்களுக்கும் என்னில love இருக்கு. ஆனா உங்கட Ego அதைச் சொல்ல விடாமத் தடுக்குது. அவ்வளவு தான்”

“நான் என்ன சொல்ல வாறனெண்டா, love எண்டு ஒண்டில்லை. இதெல்லாம் ஓமோன்களின்ரை அட்டகாசம். அவ்வளவுதான். அதை விளங்கிக்கொண்டால் சரி”

“சும்மா சும்மா விதண்டாவாதம் கதைக்காதீங்க. love வந்து மனசு சம்பந்தப்பட்டது. நான் love-ஐப்பற்றிக் கதைக்கிறன். நீங்க lust-ஐப்பற்றிக் கதைச்சுக் கொண்டிருக்கிறீங்க. வருகுது...”

“lust இல்லாம love இல்லை”

“உங்களுக்கு வேணுமெண்டால் அப்பிடியிருக்கலாம்”
அவள் முகம் சுழிக்கத் தொடங்கியது. மீண்டும் பிரச்சனை பெரிதாகி விடுமோ என்கின்ற பயம் எழுந்தது.

“சரி OK. இதைப்பற்றிக் கதைக்க வெளிக்கிட்டா எப்பையும் பிரச்சனைதான் வருகுது. அதால இந்த விஷயத்தைப் பற்றிக் கதைக்கிறதை இனி நிப்பாட்டுவமா?”

“நான் சொல்ல வேண்டியதை உங்களுக்குச் சொல்லிப் போட்டன். you are my life அதில மாற்றம் இல்லை.”

“என்ன நீங்க? சும்மா சும்மா அதையே சொல்லிக்கொண்டு. ஒரு நாலு வருஷமாத் தான் என்னோட பழகிறீங்க. அதுக்குள்ள உங்களுக்கு என்னைப் பற்றி என்ன தெரியுமெண்டு love பண்ணுறீங்க?”

“உங்களுக்கு love பண்ணுறதுக்கு எத்தினை வருஷம் தேவையெண்டு எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு? சொன்னா நம்புவீங்களா? முதன்முதல் உங்கள postal course class-இல கண்ட அண்டையில இருந்தே எனக்குத் தெரிஞ்சிற்றுது நீங்கதான் என்ரை வாழ்க்கை எண்டு.”