Tuesday, November 22, 2011

வேரென நீயிருந்தாய்...(38)

27 டிசம்பர் 2001 வியாழக்கிழமை, அம்மாவையும் வற்புறுத்தி அழைத்துக் கொண்டு னொழும்பு நோக்கிய விமானப் பயணத்தை ஆரம்பித்திருந்தேன். கடும்மழை கொட்டிக் கொண்டிருந்ததால் விமானம் இரத்மலானையில் தரையிறங்க முடியாமல் 15 நிமிடங்கள் வரை வானில் வட்டமிட்டுப் பின் கட்டுநாயக்கா சர்வதேச விமனநிலைய ஓடுபாதையில் தன் சக்கரங்களைப் பதித்தது. இரத்மலானையில் காத்திருந்த தீபனை புறக்கோட்டைக்கு வரச் சொல்லி அங்கே பேரூந்து நிலையத்தில் சந்தித்துப் பேராதனைக்குப் பயணமானோம். குருந்துவத்தையைில் ஏற்கனவே ஒழுங்குபடுத்தியிருந்த வீட்டினை அடைகையில் மணி இரவு ஒன்பதைத் தாண்டி விட்டிருந்தது.

மறுநாள் மீண்டும் வளாகத்துக்குள் நுழைந்தேன் மாணவனாக அல்லாமல். தற்காலிக போதனாசிரியராக எனது கடமையை ஏற்றுக் கொண்டு ஆய்வுகூடத்திற்குள் நுழைகையில் நதீஷா ஏற்கனவே வந்து விட்டிருப்பது தெரிந்தது. எனக்காக ஒரு புன்னகையை விரயம் செய்துவிட்டு தன்வேலைகளில் மூழ்கிப் போனாள் அவள். அவளை என்னால் புரிந்து கொள்ளமுடியாமல் இருந்தது. நான் நெருங்கிச் செல்கையில் அவள் விலகிப் போவது மனதுக்குக் கஷ்ரமாய் இருந்தது. நானும் விலகிச் செல்வதென முடிவெடுத்தேன். அவள் வீட்டில் சாப்பிட்ட கடனையும் அடைத்துவிடுவது நல்லதெனப்பட்டது. ஒரு சனிக்கிழமை தீபனையும் அவளையும் வேறு சிலரையும் வீட்டுக்கு உணவருந்த அழைத்தேன். வந்து கலகலத்துவிட்டுப் போனார்கள். அம்மாவும் சந்தோஷமாய் இருந்தாள்.

மாதங்கள் சில உருண்டோடின. புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. கிளிநொச்சி உலகின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது. கண்டியில் மழைக்காலம் முடிந்து பனிக்காலம் ஆரம்பிக்க அம்மாவிற்கு ஆஸ்மா அலுப்புக் கொடுக்கத் தொடங்கியது. அவர் படும் கஷ்டங்களைப் பார்த்து அவரை மீண்டும் ஊருக்கே அனுப்பிவிடுவதெனத் தீர்மானித்து அவரிடம் சொன்னேன்.

“உன்ரை கலியாணத்தோடதான் இனி ஊருக்குப் போறது.”

“என்னம்மா திடீரெண்டு கலியாணத்தைப் பற்றிக் கதைக்கிறியள். இப்ப அதுக்கு என்ன அவசரம்?”

“நான் இன்னும் எவ்வளவு காலம் உயிரோட இருப்பனோ தெரியாது. அதுக்குள்ள உனக்கொரு நல்ல விசயம் நடந்திற்றுதெண்டால் நானும் சந்தோஷமாப் போய்ச் சேர்ந்திருவன்.”

“உங்களுக்கென்ன விசரா? ஏன் இப்பிடியெல்லாம் கதைக்கிறீங்க?”

“ஏன்? இப்ப உனக்கு என்ன வயசு? உன்ரை வயசுக் காரர் எத்தினை பேர் பிள்ளைகூட்டிகளோட இருக்குதுகள். அதுவுமில்லாம என்னைவிட்டா இனி உனக்கெண்டு ஆரு இருக்கினம். கொப்பரைப் பற்றியும் ஒணு்டும் தெரியாது. கொக்காவும் போய்ச் சேர்ந்திற்றாள். நானும் போய்ச் சேர்ந்திற்றனெண்டால்?”

அதிர்ந்தேன். அக்காவின் வீரச்சாவினைப் பற்றி முதல்தடவை என்னுடன் பேசுகிறாள். ஆனால் அதை எவ்வளவு சாதாரணமாகச் சொல்லுகிறாள்?

“அக்கா வீரச்சாவெண்டு உங்களுக்கு எப்பிடித் தெரியும்?”

“பேப்பரில படிச்சுத்தான்”

“அப்பையேன் இதைப்பற்றி நீங்கள் முந்தி என்னோடை கதைக்கேல்லை?”

“நீயேன் கதைக்கேல்லை?”

“ஏன் உங்களைக் கவலைப்படுத்துவான் எண்டுதான்.”

“அப்பிடித்தான் நானும். சரி அதைவிடு. முடிஞ்சதுகளைக் கதைச்சு பிரியோசனமில்லை. இப்ப விசயத்துக்கு வா. அங்க புரோக்கரிட்டை உன்ரை குறிப்பைக் குடுக்கட்டே? ரெண்டு மூண்டு பேர் உன்ரை குறிப்புக் கேட்டு வந்தவை. நான்தான் குடுக்கேல்லை. நீ இஞ்சனேக்கை ஆரையும் பார்தது வைச்சிருந்தாலும் எண்டிட்டுத்தான் குடுக்கேல்லை. அப்பிடி ஆரையும் விரும்பியிருந்தாச் சொல்லு. எனக்கும் பிரச்சினையில்லை.”

“கொஞ்சம் சும்மா இருக்கிறீங்களா? இப்பத்தான் படிப்பே முடிஞ்சிருக்கு. அதுக்குள் கல்யாணமெண்டுகொண்டு...”

“அப்பன் அதையதை அந்தந்தக் காலத்தில செய்து போடவேணும். நீ ஒருத்தரையும் விரும்பியிருக்காட்டிச் சொல்லு. நான் புரோக்கருக்கு உன்ரை குறிப்பை அனுப்பிறன்.”

“நீங்க குறிப்பும் அனுப்ப வேண்டாம். கல்யாணமும் பேச வேண்டாம். கொஞ்சக்காலம் சும்மா இருங்கோ.” குரலை உயர்த்தினேன்.

“உன்னோடை கதைச்சுப் பிரயோசனமில்லை. எனக்குத் தெரியும் என்ன செய்ய வேணுமெண்டு.”

“சரி! அப்ப இந்தக்கதையை இதோட நிப்பாட்டுவமா?”

மறுநாள் வளாகத்தில் இருக்கையில் தீபன் அழைப்பெடுத்தான்.

“ஏன்ரா ஜேந்தன் கல்யாணம் கட்ட மாட்டனெண்டு சொல்லுறியாம்? அம்மா சொல்லிக் கவலைப் படுறாடா?”

“அதுக்குள்ளை உனக்கெடுத்திற்றாவா?”

“ஏன் கல்யாணம் கட்டமாட்டனெண்டுற? அப்ப உண்மையிலயே நதீஷாவை லவ் பண்ணுறியா?”

“பேய்ப்... அம்மாண நல்லா வருகுது வாயில. அவளோடை இப்ப கதைக்கிறதே இல்லை.”

“அப்பையேன் கல்யாணம் கட்டமாட்டனெண்டுற?”

“எனக்கு இப்ப கலியாணத்தில விருப்பமில்ல. நாலைஞ்சு வருஷம் போனதுக்குப்பிறகு யோசிக்கலாம்”

“ம்ம்ம்.. அவனவன் எப்பையடா கல்யாணம் கட்டலாம் எண்டு தவியாய்தவிக்கிறானுகள். உனக்குக் கொழுப்படா.”

“சரி, நீ இந்த weekend இற்கு வீட்ட வாறியா?”

“நல்லாக் கதையை மாத்திற. வேலையில சரியான busyயடா வரேல்லாது”

சில வாரங்கள் ஓடிமறைந்தன. அம்மாவிற்கு ஏலாமல் வந்துவிட்டிருந்தது. ஊருக்குப் போகச் சொன்னால்ஈ கலியாணத்திற்குத்தான் போவேன் என்று அடம் பிடிக்கத் தொடங்கியிருந்தார். மனதுக்குக் கஷ்டமாயிருந்தது.

“சரியம்மா. உங்களுக்குப் பிடிச்ச பெம்பிளையாப் பாருங்கோ. உங்களுக்கு OK யெண்டால் எனக்கும் OK. நீங்க இப்ப ஊருக்குப் போங்கோ. பெம்பிளையைப் பார்தது கல்யாணத்தை முற்றாக்கிப் போட்டு எனக்கு அறிவியுங்கோ. போட்டோ ஒண்டும் அனுப்பத் தேவையில்லை. சரியே?”

No comments:

Post a Comment