Tuesday, April 19, 2011

வேரென நீயிருந்தாய்...(27)

எங்களுக்கு பொறியியற் கற்கை நெறியின் மூன்றாம் கல்வியாண்டு தொடங்கிவிட்டிருந்தது. மூன்றாம் வருடத்திலும் எல்லா ஆய்வுகூடங்களிலும் அவள் எனது group mate ஆக வந்துவிடுவாளோ என்று முன்னர் பயந்திருந்ததற்கு மாறாக surveying இல் மட்டுமே அவள் எனது group mate ஆக வந்திருப்பது மனதுக்கு நிம்மதியைத் தந்திருந்தது.

அது 1999ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் இரண்டாம் நாள். அன்று மதியளவில் அந்தத் துக்கச் சேதியைக் கேள்விப்பட்டபோது நம்பமுடியவில்லை. தினமுரசு வாரப் பத்திரிகையின் ஆசிரியர் அற்புதன் காலை 10.30 மணியளவில் கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார். அப்போதைய காலகட்டத்தில் தினமுரசு பத்திரிகை ஒன்றே எந்தத்தரப்பினருக்கும் பயப்படாமல் உண்மைச் செய்திகளை வெளியிட்டு வந்து கொண்டிருந்தது. அப்போதெல்லாம் தினமுரசு பத்திரிகைக்கு பெரும் கிராக்கி. கடைகளுக்கு வந்த ஒருசில மணித்துளிகளிலேயே அனைத்துப் பத்திரிகைகளும் விற்றுத்தீர்ந்து விடும். சிலவேளைகளில் விரிவுரைகளுக்குச் செல்லாமல்கூட தினமுரசு பத்திரிகை வாங்குவதற்குச் செல்வதுண்டு. அடிபாடு நடக்கும் காலப்பகுதிகளில் பேராதனைச் சந்தியில் தினமுரசு வாங்குவது கடினம் என்று கெலிஓயா-விற்குச் சென்று அந்தப் பத்திரிகையை வாங்குவதுண்டு. அத்தனைதூரத்திற்கு வாசகர்களைத் தன்பக்கம் கவர்ந்து வைத்திருந்த தினமுரசின் ஆணிவேரான அதன் ஆசிரியர் அற்புதன் அவர்களின் இழப்பு எங்கள் எல்லோருக்குமே பெரும் கவலையைத் தந்தது. அந்த மரணத்திற்குச் சரியாக இருமாதங்களுக்கு முன்னர் 02 செப்ரெம்பர் 1999 அன்று, புளொட்டின் இராணுவப் பொறுப்பாளராகவிருந்த மாணிக்கதாசன் அவர்கள் வவுனியாவில் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டிருந்தார். அப்போது வவுனியா புளொட்டின் கோட்டையாகவிருந்தது. அந்தக்குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குச் சில நாட்களுக்கு முன்பே அவர் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியொன்றில் புலிகள் அழிந்து விட்டார்கள். அடுத்த கட்டப் போராட்டத்தைத் தாங்களே தலைமையேற்று நடாத்தப்போவதாகத் தெரிவித்திருந்த நிலையிலேயே அவர் கொல்லப்பட்டிருந்தார். அதற்கும் நான்கு மாதங்களுக்கு முன்னர் 1999 மே 29ஆந் திகதி அன்று ராசிக்குழுவின் தலைவர் அவர்கள் மட்டக்களப்பில் வைத்துக் கொல்லப்பட்டிருந்தார். இந்த இருவரினதும் கொல்லப்பட்ட சேதிகளைத் தொகுத்துத் தந்திருந்த ஈ.பி.டி.பி. யைச் சேர்ந்த அற்புதன் அவர்கள் இப்போது கொல்லப்பட்டிருக்கிறார். அவரின் மரணத்தையடுத்து வந்த தினமுரசு, அற்புதன் உள்வீட்டுச்சதிக்குப் பலியாகியிருக்கலாம் என்கின்ற சந்தேகத்தை எழுப்பிவிட்டிருந்தது. அதன்பின் தினமுரசு வாரமலரும் பொலிவிழந்து கவனிப்பார் யாருமற்றுப் போனது.

எப்போதுமில்லாதவாறு இப்போதுதான் அற்புதனின் தாக்கம் அதிமாக உணரப்பட்டது. அவரின் மரணத்திற்கு முதல்நாளான 01 நவம்பர் 199 அன்று ஓயாத அலைகள் - 3 ஆரம்பமாகி விட்டிருந்தது. அக்காவைப்பற்றி எந்தவொரு சேதியும் அறியக் கிடைக்கவில்லை. அதனால் அந்த வருடத்திற்கான வருடாந்தச் சுற்றுலாவில் கலந்து கொள்வதை நான் தவிர்த்திருந்தேன். சுற்றுலா முடிந்து வந்த முதலாவது Surveying இல்,

“ஏன் நீங்க batch trip இற்கு வந்து இல்ல?” -வினவினாள் நதீஷா.

“சும்மா தான்.”

“இல்ல நீங்க பொய் சொல்லுறது.”

சிரித்தேன்.

“என்னால தானே நீங்க வந்தது இல்ல?”

“ஏன்? நீங்க என்ன செய்தனீங்க?”

“அப்ப ஏன் நீங்க வந்து இல்ல?. நீங்க இப்ப என்னோட சரியா கதைக்கிறது இல்லத்தானே?”

“ஏன் அப்பிடிச் சொல்லுறீங்க? எனக்கு trip-க்கு வரவேணும் போல இருக்கேல்ல அதால தான் வரேல்ல.”

“அப்ப ஏன் நீங்க வந்து என்னோட இப்ப நிறையக் கதைக்கிறேல்ல? முந்தி நீங்க கதைக்கிறது தானே?”

“என்ன நீங்க? முந்தி எல்லா lab-இலயும் நாங்க ரெண்டுபேரும் group mates ஆ இருந்ததால கதைச்சம். இப்ப surveying lab இல மட்டும்தானே ரெண்டுபேரும் group mate. அப்ப முந்திமாதிரிக் கதைக்கேலாது தானே”

அவள் முகம் விகசித்தது.

“அப்ப உங்களுக்கு நானில கோபமில்லத் தானே? என்னோட இனி கதைப்பீங்க தானே?” - புன்னகையுடன் கேட்டாள்.

கள்ளங்கபடமற்ற குழந்தைத்தனமான முகத்துடன் கேட்கையில் எப்படி மறுக்க முடியும்? சிரித்தேன்.

பின்வந்த நாட்களில் அடிக்கடி என்னுடன் வந்து கதைக்கத் தொடங்கினாள். அவளது கதைகள் நட்பைத் தாண்டியும் செல்வதாய்ப் பட்டது. தனது குடும்பக் கதைகளைத் தானாகவே பகிர்ந்து கொண்டாள். தனது தந்தையினதும் தாயினதும் காதலைப்பற்றி, அண்ணனினதும் அண்ணியினதும் காதலைப்பற்றி, தாயின் மரணத்தைப்பற்றி, தான் சந்தித்த சந்தோஷ தருணங்கள், சோகச் சம்பவங்கள் எல்லாவற்றையுமே விருப்புடன் பகிர்ந்து கொண்டாள். அவள் சொல்வதைக்காட்டிலும் அந்தத் தருணங்களில் அவள் வெளிப்படுத்தும் முகபாவங்களும், கண்ணசைவுகளும் ஒரு குழந்தைப்பிள்ளையின் குதூகலிப்பை நினைவூட்டின. திடீரென ஒருநாள்,

“நீங்க ஏன் உங்களைப்பற்றி ஒண்டும் சொல்லுற இல்ல?”

“என்னைப் பற்றிச் சொல்லுறதுக்கு விஷேசமா ஒண்டும் இல்ல.”

“ம்ம்ம்ம்........... உங்கட அப்பாவும் அம்மாவும் லவ் பண்ணியா marry பண்ணினவங்க?”

நெஞ்சு திக்கென்றது. இவள் எங்கு வருகிறாள்? உள்ளம் உஷாரானது.

“இல்லை. அவையின்ர arranged marriage தான்”

“அப்ப உங்கட சொந்தக்காரர் ஒருத்தரும் love பண்ணி marry பண்ண இல்லையா?”

“இல்லை. என்ர சொந்தக்காரர் எல்லாருக்கும் arranged marriage தான்” சற்று கறாராகவே கூறினேன்.

“லவ் marriage ஐப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?“

சுத்திச்சுத்தி அங்கதான் வரப்போறாளோ? சந்தேகம் அதிகமாகியது.
“இதெல்லாம் இப்ப எதுக்குக் கேக்கிறீங்க?”

“சும்மாதான்”

“எனக்கு இந்த topic கதைக்கிறதில interest இல்ல”

“ஏன்?”

“ஏனெண்டெல்லாம் தெரியாது. எனக்குப் பிடிக்காது. அவ்வளவுதான்.” குரலில் கடுமைகாட்டினேன்

“ஏன் நீங்க கோபப்படுறீங்க? நீங்க ஆரையும் லவ் பண்ணினீங்களா?”

பேய்ப்.... இதுவே வேறையாரும் பெடியளாயிருந்திருந்தால் வாயில வந்திருக்கும்.

“உங்களைப் போல இல்ல எங்கட வாழ்க்கை. உங்களுக்கு எங்கட வாழ்க்கை எப்பிடியெண்டும் தெரியாது. அதாலதான் லவ்கிவ்-வெண்டு கதைக்கிறியள்”


“சரி அப்ப உங்கட life-style பற்றிச் சொல்லுங்களன்”

“என்ன விளையாடுறீங்களா?” கோபம் கொப்பளித்துக்கொண்டு வந்தது


No comments:

Post a Comment