Thursday, June 2, 2011

வேரென நீயிருந்தாய்...(30)


“Next weekend நீங்க free-ஆ இருப்பீங்களா?”

“ஏன் கேக்கிறீங்க?”

“சொல்லுங்களன் please...”

”free-ஆத் தான் இருப்பன் எண்டு நினைக்கிறன்”

“அப்ப! எங்கட வீட்டுக்கு வாறீங்களா?”

“என்னத்துக்கு?”

“ச்சும்மா தான்”

“ஏனெண்டு சொல்லுங்கவன்.”

“ஆ! பொம்பிளை பார்க்கிறதுக்குத்தான்... வரச்சொல்லிக் கேட்டா வாறதை விட்டிட்டு ஆயிரம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறீங்க?”

“அய்! ஒயாட்ட மொனவத பிசுத?” (ஏன்? உங்களுக்கு என்ன விசரா?)
-கடுப்பானேன்.

“ஹலோ ஹலோ! ஏன் இப்ப ரென்ஷனாகிறீங்க? எங்கட அப்பாட்ட உங்களைப் பற்றிச் சொன்னனான். அவர் உங்களோட கதைக்க வேணுமெண்டு சொன்னவர். அப்பாக்கு இப்ப 'நிவாடு' (விடுமுறை).அதுதான் வரச்சொல்லிக் கேட்டனான். பரவாயில்லை. நான் அவரை உங்கள அக்பரில வந்து கதைக்கச் சொல்லுறன்.”


அவளது தந்தை சிறிலங்கா காவல்துறையில் உயரதிகாரியாகப் பணியாற்றுவது ஞாபகத்திற்கு வந்தது. மனதிற்குள் பல்வேறு வகையான சிந்தனைகளும் ஒரே நேரத்தில் வந்து போயின. கூடவே பயமும் வந்து சேர்ந்து கொண்டது. என்ன இளவடா? வம்பை விலை கொடுத்து வாங்கீற்றேனோ என்கின்ற பச்சாதாபம் மேலிட்டது.


“என்னத்தைப் பற்றிக் கதைக்க வேணுமாம்?”
குரலில் ஏற்பட்ட நடுக்கத்தை மறைப்பது கடினமாகப்பட்டது.

“நான் சொல்ல மாட்டன். அது surprise!”

“அப்ப நானும் உங்கட அப்பாவை சந்திக்க மாட்டன்.”

“Please ஜேந்தன்! சத்தியமா உங்களுககு விருப்பமில்லாத ஒண்டும் அப்பா கதைக்க மாடடேர். என்னில உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? please இந்த saturday evening வீட்டுக்கு வாங்க. நீங்க மட்டும் தான் வரவேணும். வேறை ஒருத்தரையும் கூட்டிக்கொண்டு வராதீங்க.. please....."

என்ன செய்வதென்று புரியாமல் மனது தவித்தாலும், நதீஷா எந்தவிதமான தீங்கும் யாருக்கும் செய்யமாட்டாள் என்கின்ற ஆழ்மன நம்பிக்கையில் வருவதாய் ஒப்புக் கொண்டேன்.

***********

“எங்க மச்சான் வெளிக்கிடுற?”

தீபனிடம் என்னவென்று சொல்வது. தடுமாறினேன்.

“போய்ற்று வந்து சொல்லுறன்ரா. இப்ப என்னெட்ட ஒண்டும் கேக்காத.”

நதீஷாவின் வீட்டினை அடைகையில், என் வரவிற்காக அவளும் தந்தையும் காத்திருப்பது தெரிந்தது.

“எண்ட புத்தா அத்துலட்ட எண்டக்கோ” (வாங்க மகன் உள்ளுக்குள்ள வாங்கோ)

கண்களால் என்னை அளவெடுப்பது புரிந்தது. அவருக்கும் தமிழ் ஓரளவிற்கு தெரிந்திருந்தது. அவர் 83 இற்கு முன்னர் ஊர்காவற்றுறையிலும் அதற்கும் முன்னர் காங்கேசன்துறையிலும் பணியாற்றியிருந்ததாய்க் குறிப்பிட்டார்.

“உம்மட father-ஐப் பற்றி மகள் சொன்னது. அவற்றை details-களைத் தாரும். நான் என்னால முடிஞ்ச அளவுக்கு தேடிப்பார்க்கிறன்.”

அடிவயிற்றிலிருந்து ஏதோவொன்று உருண்டு வந்து நெஞ்சை அடைப்பதாய் உணர்ந்தேன். கண்கள் கலங்கியது. நதீஷாவைப் பார்த்தேன். புன்னகைத்தாள். அப்பளுக்கில்லாத வதனம். வரம் நல்கிவிட்டு நகும் தேவதையாய்த் தெரிந்தாள். எப்படி அவளுக்கு நன்றி சொல்வதென்று தெரியாமல் திணறினேன்.

“ஜேந்தன்! ஒயாட்ட மொணவத தே-த? நத்தங் கோபி-த? (உங்களுக்கு என்ன tea-ஆ அல்லது கோப்பியா?)

“மொணவத ஹரி கெனண்ட” (என்னெண்டாலும் கொண்டுவாங்கோ)

அவள் உள்ளே சென்றதும் அப்பாவின் details-ஐ தனது நாட்குறிப்பில் குறித்துக்கொண்டார் எங்களுக்கிடையிலான மன இறுக்கம் இப்போது தளரடவடைந்திருந்தது. பல்வேறு விடயங்களைப் பற்றியும் உரையாடினோம். தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுவது குறித்தான ஏற்றுக்கொள்ளல்கள் அவரிடம் காணப்பட்டன. அவர் பெளத்த கொள்கைகளை பெரிதும் பின்பற்றுபவராகவே தெரிந்தார். புத்தரின் மறுபிறப்புக் கொள்கைகளைப் பெரிதும் நம்புபவராகக் காணப்பட்டார். சிறிலங்காப் படையில் இருந்துகொண்டு இப்பிடியொருவரா என வியப்பு மேலிட்டது. உரையாடல்களைத் தொடரமுடியாமல் அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பினை அடுத்து அவர் வெளியே செல்லவேண்டியிருந்ததால் அங்கிருந்து கிளம்பினேன்.

அம்மாவிடம் இதைப்பற்றிச் சொல்லலாமா? மனதிற்குள் பல்வேறு சிந்தனைகளும் உண்டாயிற்று. வேண்டாம்! ஒருவேளை இவராலும் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டால், அல்லது அப்பா உயிருடன் இல்லை என்பது உறுதியாகிவிட்டால்? வேண்டாம். அம்மாவின் நம்பிக்கைகளைக் குலைக்க வேண்டாம். அவரின் பதிலைப் பெற்றதன் பின்னர் இதைப்பற்றி யோசிக்கலாம்.

*************

சிலவாரங்கள் கழிந்து விட்டிருந்தது. அதுவொரு புதன்கிழமை பெப்ரவரி 14, 2001. அதற்கும் சில வருடங்களுக்கு முன்னர்தான் சிறிலங்காவிலும் காதலர்தினம் அறிமுகமாகியிருந்தது. அன்றைய ஆய்வுகூடச் செயன்முறைகளைச் சீக்கிரமே இருவரும் முடித்துவிட்டிருந்தோம்.

“ஜேந்தன்! இண்டைக்கு என்ன விஷேசம் எண்டு தெரியுமா?”

“ம்ம்ம்.. valentines day”

“அப்ப celebrate பண்ணேல்லையா?”

“ம்.....அது லவ்வேர்ஸ்தான் celebrate பண்ணுறது”

“அவைக்கு எப்பிடித் தெரியும் தாங்க லவ்வேர்ஸ் தான் எண்டு? எல்லா லவ்வேர்ஸ்சும் என்ன I love you சொல்லீற்றா லவ் பண்ணுகினம்?” - சிரித்தாள்.

நெஞ்சு திக்கென்றது.

“அதை அவையிட்டத்தான் கேக்கவேணும்.”

“சரி அப்ப இப்ப சொல்லுங்கோ”

“what? what do you mean?"

கடைசியில் தீபன் சொன்னதுதான் சரியாக இருக்கப் போகின்றது போல. அவளை உற்றுப் பார்த்தேன். அவள் முகத்தில் இருந்த சந்தோஷம் திடீரெனக் காணாமல் போனதாய்ப் பட்டது.

“இல்ல....... what do you think about love?"

இனியும் கதையை வளர்த்து வீணான கற்பனைகளுக்கு இடங்கொடுப்பது தவறெனப் பட்டது.

“எனக்கு ஏற்கனவே ஒரு லவ்வர் கொழும்பில இருக்கிறா. எங்கட Training period-இல றொலெக்ஸ்ஸில சாப்பிட வந்து பழக்கமாகி பிறகு அப்பிடியே அது லவ் ஆகீற்றுது”.





No comments:

Post a Comment