Thursday, June 9, 2011

வேரென நீயிருந்தாய்...(32)

அன்புள்ள ஜேன்குட்டிக்கு!

நீ இதை வாசிக்கும் இந்தக் கணத்தில் நான் உங்களை விட்டு, எங்கள் நாட்டை விட்டு, எங்கள் நாட்டின் விடியலுக்காக இவ்வுலகை விட்டே பிரிந்திருக்கக்கூடும். கவலைப் படாதேடா. எப்படியும் அடுத்த பிறப்பிலும் உன்னுடனேயே இருப்பேன். விளங்கும் என நினைக்கிறேன். மானுட ஆன்மா மரணம் எய்தாது என்றான் கண்ணன். நாங்கள் எல்லோருமே ஏதோவொரு வகையில் அருச்சுனர்களே. இந்த வாழ்க்கையும் ஒரு குருஷேத்திரம் தான். எல்லாம் எப்பவோ தீர்மானிக்கப்பட்டாயிற்று. அதை நிறைவேற்றும் நாங்கள் வெறும் கருவிகளே. ஒருவகையில் நானும் இப்போது கீதாவுபதேசம் பெற்ற விஜயன்தான். வரித்துக்கொண்ட கடமையைச் செய்வதில், அதையும் நிறைவாகச் செய்யவேண்டும் என்பதில் அதிக அக்கறை இருக்கின்றது. உன்னை நேரில் சந்தித்தால் என்மனவுறுதி ஆட்டம் கண்டுவிடலாம் என்கின்ற அச்சமும் நிரம்பவே உண்டு. ஆதலால்தான் உன்னோடான சந்திப்புகளைத் தவிர்த்துக் கொண்டிருக்கின்றேன். இன்றுடன் நான் இடம் மாறுகின்றேன். இப்பிறப்பில் இனிமேல் உன்னைச் சந்திக்க முடியும் என்கின்ற நம்பிக்கை எனக்கில்லை. ஆனால் நிச்சயம் அடுத்த பிறப்பிலும் உன்னோடுதானிருப்பேன். உன்னை நினைத்து எனக்குப் பெருமையாக இருக்கிறது. அப்பாவின் கனவை நிறைவேற்றியதற்கு மிக்க நன்றி. அம்மா இனி உனது பொறுப்பு. அவா கஷ்ரப்பட்டது காணும். இனி அவாவை நீதான் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேணும். என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அம்மாவையும் கவலைப் பட விடாதே. இழப்புகள் எங்களுக்குப் புதியவையல்ல. இந்தக் கடிதத்தை நீயாக உடைத்து வாசிக்காமல் தீபனே உன்னிடம் தந்து வாசிக்கச் சொல்லியிருந்தால் நான் உங்களை விட்டுப் பிரிந்து விட்டேனென்று அர்த்தம்....................

மண்டை விறைக்க கையினிலிருந்த கடிதம் நழுவிக் கீழே விழுந்தது. கண்கள் இருண்டு கொண்டு செல்வது புரிகையில் தீபன் என்னை உலுக்க ஆரம்பிப்பது புரிந்தது.

“ஏன்ரா அக்காவைக் கண்டத என்னட்டச் சொல்லாம மறைச்சனி?”

“இல்லையடா! அவாதான் உன்னட்டச் சொல்லக்கூடாதெண்டு promise பண்ணச் சொல்லிக் கேட்டவா. அதாலதான் நான் ஒண்டுமே சொல்லேல்லை.”

“அடச்சீ! எவ்வளவு காலமடா அக்காவைப் பார்த்து? இனி எங்கையடா பார்க்கேலும்?”

அடிவயிற்றிலிருந்து ஏதோவொன்று வெடித்துக் கிளம்புவதாய் உணர்ந்தேன். அப்பா காணாமல் போனபோதுகூட இவ்வளவு தூரத்திற்கு அந்தக் கவலை என்னை வாட்டியிருக்கவில்லை. அக்காவிற்கு நித்திய கண்டம் பூரண ஆயுசு என்றே எண்ணியிருந்தேன். அந்த நினைப்பு இப்போது சிதைந்து சின்னாபின்னமாகிப் போயிருந்தது. வாழ்ககையில் எதுவுமே நிரந்தரமில்லை என்பது அறிவுக்குத் தெரிந்திருந்தாலும் அதை ஏற்க முடியாமல் மனது கிடந்து தவியாய்த் தவித்தது. உலகமே வெறுமையாய் சூனியமாகிப் போனதான உணர்வு நெஞ்சினை ஆக்கிரமிக்கத் தொடங்க தனியனாக உணரத் தொடங்கினேன். கண்களில் நீரருவிகள் ஏற்கனவே ஊற்றுப் பெருக்கத் தொடங்கியிருந்தன.

“ஜேயந்தன் டேய்! control yourself-டா. விசிறிகள் ஆருக்கும் விசயம் தெரிஞ்சுதெண்டால் பிறகு பிரச்சனையாகீரும்.”

“உனக்கு எப்பிடித் தெரியும் அக்கா வீரச்சவெண்டு?”

“இந்தா பேப்பரில கிடக்குது பாரன்.”

வீரகேசரியினைப் பிரட்டினேன்.

..... அண்மையில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத்தாக்குலை மேற்கொண்டவர் ஒரு பெண் தற்கொலைக்குண்டுதாரியெனத் தெரிய வந்திருக்கின்றது. அத்துடன் அங்கே கண்டெடுக்கப்பட்ட தேசிய அடையாள அட்டையின் பிரகாரம் அவரது பெயர் சுந்தரலிங்கம் ஜெயந்தினி என்றும், வவுனியாவை முகவரியாகக் கொண்டிருந்தாலும் அவரது சொந்த இடம் வேலணை என்பதும் இரகசியப் பொலிசாரின் விசாரணைகளில் தெரிய வந்திருக்கின்றது...

“மச்சான் எனக்குத் தலை வெடிக்குதடா... என்னடா நடக்குது? அப்ப, அக்காவின்ரை குண்டுவெடிப்பிலதான் நதீஷாவின்ரை அப்பாவும் செத்திருக்கிறேர். ரெண்டு பேருமே ஒண்டாச் செத்திருக்கினம் பாரன். அவற்றை செத்த வீட்டுக்கு நாங்களும் போய்ற்று வந்திருக்கிறம். ஆனா அக்காவின்ரை?”

உங்களுக்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும்.
ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும்.
பொங்கும் மகிழ்வோடு நீங்கள் போய்விடுவீர்கள்.
போனபின்னே நாமழுவோம் யாரறிவீர்கள்?

“ஜெயந்தன்! நீ இதைப்பற்றி ஒருத்தருக்கும் ஒண்டும் கதைக்காதை. பேசாம அவாவுக்குச் செய்ய வேண்டிய கிரியைகளை மட்டும் செய்வம் என?. அம்மாவுக்கும் இப்போதைக்கு இதைப்பற்றி ஒண்டும் சொல்ல வேண்டாம் சரியா?



Wednesday, June 8, 2011

வேரென நீயிருந்தாய்...(31)

அன்றைய தினம் மதிய உணவிற்காக றொலெக்ஸ்ஸில் சென்று இருக்கையில் அமர்கையில்,

”ஜெயந்தன் டேய்! நீ இண்டைக்கு இந்தப் பக்கமா வந்து இரு. அப்பத்தான் அவளைப் பார்க்கலாம்.”

அமர்ந்தேன். உணவருந்திய பின்னும் நீண்ட நேரமாகியும் யாரும் வரக் காணோம்.

“அம்மாண உனக்கு விசரடா!”

“சத்தியமாடா. அவள் உனக்கு எறியத்தான் வாறவள். ஆனா என்னெண்டு தெரியேல்லை. ஆளா இண்டைக்குக் காணேல்லை. ஒருவேளை இண்டைக்கு நீ றோட்டுப்பக்கம் பார்த்துக் கொண்டிருக்கிறதைக் கண்டிட்டு ஒளிச்சிற்றாளோ தெரியேல்ல. வா! நாங்க மயூரிப் பக்கமா நிண்டு பாப்பம்.”

”போடாங்! நீ நிண்ட பார். நான் றூமுக்குப் போறன்”

”நீ போ மச்சான்! இண்டைக்கு நான் இதுக்கொரு முடிவு கண்டிட்டுத்தான் வருவன். அப்பிடியில்லையெண்டால் என்ரை பேரை மாத்து.”

“சரிசரி! றூமுக்குப் போய் நான் உனக்கு வேற பேர் யோசிக்கிறன்”.
தீபனை விட்டுவிட்டு கிளம்பி அறைக்கு வந்த சிலமணி நேரங்களில் தீபன் வந்தான். அவன் முகத்தில் பதட்டம் தெரிந்தது. அவன் சட்டைப் பையினுள் கடிதம் ஒன்று இருப்பதும் தெரிந்தது.

“என்ன மச்சான்? அப்ப இனிப்புதுப் பேரால கூப்பிடலாமா?”

”பேய்ப்..! நான் அவவைக் கண்டு கதைச்சிற்றுத்தான் வாறன்!”

“ஓ! அப்ப அவள் இப்ப உனக்கு அவாவாகிற்றாவோ? அவள் மச்சான் உனக்காகத்தான் வந்திருக்கிறாள். இண்டைக்கு நானும் றோட்டுப்பக்கம் பாத“துக் கொண்டிருக்கிறதைப் பார்த்திற்று ஒளிஞ்சு நிண்டிருக்கிறாள். அது உனக்கும் தெரிஞ்சு என்னைக் காய்வெட்டி விட்டிட்டு நீ நிண்டு கதைச்சுப் போட்டு வந்திருக்கிறாய் என! அதுக்குள்ள லவ் லெட்டர் கூட கிடைச்சிற்றுது போல. அப்ப எப்ப மச்சான் கிச் பார்ட்டி?”

“காடு பத்தியெரியுதெண்டு கரடி காவெடியெடுத்து ஆடிச்சாம். விஷயம் தெரியாம சும்மா அலம்பிக் கொண்டிருக்கிற. இந்தக் கடிதம் உனக்குத்தான்!”

“விட்டா நல்லா தீத்துவேடா! சரி எனக்கு வந்த கடிதம் தானே கொண்டா! உடைச்சு வாசிப்பம்”
-எட்டித் தீபனின் சட்டைப்பையிலிருந்த கடிதத்தை எடுத்தேன்.

“அம்மாண கடிதத்தை இப்ப உடைச்சுப் பார்க்காத!”

“இது எனக்கு வந்த கடிதம் தானே! அப்ப நான் உடைச்சுப் பார்க்கலாம் தானே!”
-அவசரமாக கடிதத்தை உடைக்க வெளிக்கிட, தீபன் அதைப் பறிக்க எத்தனித்தான். முடியாமல் போகவே,

“உன்ர அக்கா மேல சத்தியமா, அதை உடைக்காத!”

”பேய்ப்..! என்ன பேய்க்காட்டுறியா? நீங்க லவ் பண்ணுறது. கண்ட சரக்குகளுக்கும் லவ் லெற்றர்ஸ் குடுக்கிறது வாங்கிறது. ஆனா கேட்டா ஏதோ நாங்கதான் சரக்குப் பார்த்துக்கொண்டு திரியிறமெண்டு கதைகட்டிறது. நீயும் உன்ர கடிதமும். இந்தா பிடி”

தீபன் மௌனமாயிருந்தான்.

***************

“ஏன் ஜேந்தன் சும்மா பொய் சொல்லுறீங்க?”

“நான் எப்ப பொய் சொன்னனான்?” -தலை தானாகவே கவிழ்ந்து கொண்டது.

“அது உங்களுக்கே தெரியும்தானே!.”

“என்ன நீங்க?”

“அப்ப என்ர கண்ணைப் பார்த்துச் சொல்லுங்க பார்ப்பம்?”

“என்ன சொல்ல வேணும்?”

“இப்ப நீங்க சொன்ன பொய்யை என்ர கண்ணைப்பார்த்துச் சொல்லுங்க பார்ப்பம்!”

“நான் என்ன பொய் சொன்னனான்?”

”ஏன்? நீங்க என்ன பொய் சொன்னீங்க எண்டு உங்களுக்கு மறந்து போய்ற்றுதா?”

**************

ஜனக மகாரஜாவின் அரசவை! வேதம் கற்றுணர்ந்த ஞானிகளும் பண்டிதர்களும் விவாதங்களில் களைத்துப்போக மைத்ரேயியும் யாக்ஞ வல்கியரும் தங்கள் விவாதத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தனர்.

பார்வையாளர்கள் விஷயஞானமின்றி அவர்கள் இருவரினதும் விவாதங்களை வேடிக்கை பார்க்கலாயினர். ஒரு கட்டத்தில் மைத்ரேயியின் வினாவிற்கு விடையளிக்க முடியாமல் திண்டாடினான் யாக்ஞ வல்கியன். ஒரு பெண்ணிடம் தோற்பதா? ஆண் என்கின்ற ஆணவம் கண்ணை மறைக்க விவாதம் மறந்தது, விவாதம் நடக்கும் சபை மறந்தது. தன் நிலை மறந்தது.

“இதற்கு மேலும் நீ கேள்வி கேட்பாயானால் நின் சிரசு சுக்குநுாறாய் வெடித்துச் சிதறட்டும்.”

************

“நீங்க உங்கட லிமிற்றைத் தாண்டி ஓவராப் போறீங்க நதீஷா!. இதுக்கு மேல உங்களோட கதைக்க எனக்கு விருப்பமில்லை.”

இருவருக்குமிடையில் மௌனம் வந்து அமர்ந்து கொண்டது.

************

அன்று ஞாயிற்றுக்கிழமை. சனிக்கிழமை கொன் (அரட்டை) அடித்துவிட்டுப் படுக்கப் பிந்தியிருந்ததால் வழமை போன்று அன்றும் பிந்தியே எழும்பியிருந்தேன். என்றுமில்லாதவாறு அன்றைய வீரகேசரி

வாரமலர் எனது கட்டிலில் வைக்கப்பட்டிருந்தது. நான் எழுந்ததைக் கண்டதும். அறைக்கதவை இறுகத் தாழிட்டுவிட்டு அருகில் வந்தமர்ந்தான் தீபன். வியப்பாயிருந்தது.

“என்னடா?“

“இவ்வளவு நாளும் உனக்கு சொல்லாம மறைச்ச ஒரு உண்மையை இப்ப சொல்ல வேணும்.”

“என்ன மச்சான் என்னெண்டு சொல்லன்”

“வெள்ளைவத்தை றொலெக்ஸ்ஸில ஒரு பெம்பிளைப்பிள்ளையைக் காணுறனான். அவா உனக்கு ஒரு கடிதம் தந்தவா என்று சொன்னன். ஞாபகமிருக்கா?”

“இப்ப ஏன் அதைத் திரும்பவும் தொடங்கிற?”

“இந்தா அந்தக் கடிதம். இப்ப அதை நீ வாசிக்கலாம்.”



Thursday, June 2, 2011

வேரென நீயிருந்தாய்...(30)


“Next weekend நீங்க free-ஆ இருப்பீங்களா?”

“ஏன் கேக்கிறீங்க?”

“சொல்லுங்களன் please...”

”free-ஆத் தான் இருப்பன் எண்டு நினைக்கிறன்”

“அப்ப! எங்கட வீட்டுக்கு வாறீங்களா?”

“என்னத்துக்கு?”

“ச்சும்மா தான்”

“ஏனெண்டு சொல்லுங்கவன்.”

“ஆ! பொம்பிளை பார்க்கிறதுக்குத்தான்... வரச்சொல்லிக் கேட்டா வாறதை விட்டிட்டு ஆயிரம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறீங்க?”

“அய்! ஒயாட்ட மொனவத பிசுத?” (ஏன்? உங்களுக்கு என்ன விசரா?)
-கடுப்பானேன்.

“ஹலோ ஹலோ! ஏன் இப்ப ரென்ஷனாகிறீங்க? எங்கட அப்பாட்ட உங்களைப் பற்றிச் சொன்னனான். அவர் உங்களோட கதைக்க வேணுமெண்டு சொன்னவர். அப்பாக்கு இப்ப 'நிவாடு' (விடுமுறை).அதுதான் வரச்சொல்லிக் கேட்டனான். பரவாயில்லை. நான் அவரை உங்கள அக்பரில வந்து கதைக்கச் சொல்லுறன்.”


அவளது தந்தை சிறிலங்கா காவல்துறையில் உயரதிகாரியாகப் பணியாற்றுவது ஞாபகத்திற்கு வந்தது. மனதிற்குள் பல்வேறு வகையான சிந்தனைகளும் ஒரே நேரத்தில் வந்து போயின. கூடவே பயமும் வந்து சேர்ந்து கொண்டது. என்ன இளவடா? வம்பை விலை கொடுத்து வாங்கீற்றேனோ என்கின்ற பச்சாதாபம் மேலிட்டது.


“என்னத்தைப் பற்றிக் கதைக்க வேணுமாம்?”
குரலில் ஏற்பட்ட நடுக்கத்தை மறைப்பது கடினமாகப்பட்டது.

“நான் சொல்ல மாட்டன். அது surprise!”

“அப்ப நானும் உங்கட அப்பாவை சந்திக்க மாட்டன்.”

“Please ஜேந்தன்! சத்தியமா உங்களுககு விருப்பமில்லாத ஒண்டும் அப்பா கதைக்க மாடடேர். என்னில உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? please இந்த saturday evening வீட்டுக்கு வாங்க. நீங்க மட்டும் தான் வரவேணும். வேறை ஒருத்தரையும் கூட்டிக்கொண்டு வராதீங்க.. please....."

என்ன செய்வதென்று புரியாமல் மனது தவித்தாலும், நதீஷா எந்தவிதமான தீங்கும் யாருக்கும் செய்யமாட்டாள் என்கின்ற ஆழ்மன நம்பிக்கையில் வருவதாய் ஒப்புக் கொண்டேன்.

***********

“எங்க மச்சான் வெளிக்கிடுற?”

தீபனிடம் என்னவென்று சொல்வது. தடுமாறினேன்.

“போய்ற்று வந்து சொல்லுறன்ரா. இப்ப என்னெட்ட ஒண்டும் கேக்காத.”

நதீஷாவின் வீட்டினை அடைகையில், என் வரவிற்காக அவளும் தந்தையும் காத்திருப்பது தெரிந்தது.

“எண்ட புத்தா அத்துலட்ட எண்டக்கோ” (வாங்க மகன் உள்ளுக்குள்ள வாங்கோ)

கண்களால் என்னை அளவெடுப்பது புரிந்தது. அவருக்கும் தமிழ் ஓரளவிற்கு தெரிந்திருந்தது. அவர் 83 இற்கு முன்னர் ஊர்காவற்றுறையிலும் அதற்கும் முன்னர் காங்கேசன்துறையிலும் பணியாற்றியிருந்ததாய்க் குறிப்பிட்டார்.

“உம்மட father-ஐப் பற்றி மகள் சொன்னது. அவற்றை details-களைத் தாரும். நான் என்னால முடிஞ்ச அளவுக்கு தேடிப்பார்க்கிறன்.”

அடிவயிற்றிலிருந்து ஏதோவொன்று உருண்டு வந்து நெஞ்சை அடைப்பதாய் உணர்ந்தேன். கண்கள் கலங்கியது. நதீஷாவைப் பார்த்தேன். புன்னகைத்தாள். அப்பளுக்கில்லாத வதனம். வரம் நல்கிவிட்டு நகும் தேவதையாய்த் தெரிந்தாள். எப்படி அவளுக்கு நன்றி சொல்வதென்று தெரியாமல் திணறினேன்.

“ஜேந்தன்! ஒயாட்ட மொணவத தே-த? நத்தங் கோபி-த? (உங்களுக்கு என்ன tea-ஆ அல்லது கோப்பியா?)

“மொணவத ஹரி கெனண்ட” (என்னெண்டாலும் கொண்டுவாங்கோ)

அவள் உள்ளே சென்றதும் அப்பாவின் details-ஐ தனது நாட்குறிப்பில் குறித்துக்கொண்டார் எங்களுக்கிடையிலான மன இறுக்கம் இப்போது தளரடவடைந்திருந்தது. பல்வேறு விடயங்களைப் பற்றியும் உரையாடினோம். தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுவது குறித்தான ஏற்றுக்கொள்ளல்கள் அவரிடம் காணப்பட்டன. அவர் பெளத்த கொள்கைகளை பெரிதும் பின்பற்றுபவராகவே தெரிந்தார். புத்தரின் மறுபிறப்புக் கொள்கைகளைப் பெரிதும் நம்புபவராகக் காணப்பட்டார். சிறிலங்காப் படையில் இருந்துகொண்டு இப்பிடியொருவரா என வியப்பு மேலிட்டது. உரையாடல்களைத் தொடரமுடியாமல் அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பினை அடுத்து அவர் வெளியே செல்லவேண்டியிருந்ததால் அங்கிருந்து கிளம்பினேன்.

அம்மாவிடம் இதைப்பற்றிச் சொல்லலாமா? மனதிற்குள் பல்வேறு சிந்தனைகளும் உண்டாயிற்று. வேண்டாம்! ஒருவேளை இவராலும் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டால், அல்லது அப்பா உயிருடன் இல்லை என்பது உறுதியாகிவிட்டால்? வேண்டாம். அம்மாவின் நம்பிக்கைகளைக் குலைக்க வேண்டாம். அவரின் பதிலைப் பெற்றதன் பின்னர் இதைப்பற்றி யோசிக்கலாம்.

*************

சிலவாரங்கள் கழிந்து விட்டிருந்தது. அதுவொரு புதன்கிழமை பெப்ரவரி 14, 2001. அதற்கும் சில வருடங்களுக்கு முன்னர்தான் சிறிலங்காவிலும் காதலர்தினம் அறிமுகமாகியிருந்தது. அன்றைய ஆய்வுகூடச் செயன்முறைகளைச் சீக்கிரமே இருவரும் முடித்துவிட்டிருந்தோம்.

“ஜேந்தன்! இண்டைக்கு என்ன விஷேசம் எண்டு தெரியுமா?”

“ம்ம்ம்.. valentines day”

“அப்ப celebrate பண்ணேல்லையா?”

“ம்.....அது லவ்வேர்ஸ்தான் celebrate பண்ணுறது”

“அவைக்கு எப்பிடித் தெரியும் தாங்க லவ்வேர்ஸ் தான் எண்டு? எல்லா லவ்வேர்ஸ்சும் என்ன I love you சொல்லீற்றா லவ் பண்ணுகினம்?” - சிரித்தாள்.

நெஞ்சு திக்கென்றது.

“அதை அவையிட்டத்தான் கேக்கவேணும்.”

“சரி அப்ப இப்ப சொல்லுங்கோ”

“what? what do you mean?"

கடைசியில் தீபன் சொன்னதுதான் சரியாக இருக்கப் போகின்றது போல. அவளை உற்றுப் பார்த்தேன். அவள் முகத்தில் இருந்த சந்தோஷம் திடீரெனக் காணாமல் போனதாய்ப் பட்டது.

“இல்ல....... what do you think about love?"

இனியும் கதையை வளர்த்து வீணான கற்பனைகளுக்கு இடங்கொடுப்பது தவறெனப் பட்டது.

“எனக்கு ஏற்கனவே ஒரு லவ்வர் கொழும்பில இருக்கிறா. எங்கட Training period-இல றொலெக்ஸ்ஸில சாப்பிட வந்து பழக்கமாகி பிறகு அப்பிடியே அது லவ் ஆகீற்றுது”.





Wednesday, June 1, 2011

வேரென நீயிருந்தாய்... (29)

எங்களது இறுதியாண்டு ஆரம்பாகி சில மாதங்கள் சென்று விட்டிருந்த நிலையில், அது நடந்து விட்டிருந்தது. இலக்கை முற்றாக நெருங்கமுடியாமல் தடுக்கப்பட்டவொரு தற்கொடைத் தாக்குதலில் நதீஷாவின் தந்தையும் கொல்லப்பட்டிருந்தார். அக்பரில் சக சிங்கள மாணவர்களின் முகங்களில் விரோதம் கொப்பளிப்பது தெரிந்தது.

“ஜெயந்தன் டேய்! செத்தவீட்டுக்குப் போகப்போறியா?” -வினவினான் தீபன்.

“அதான் யோசிக்கிறன். ஆனா, என்ன செய்யிறதெண்டுதான் தெரியேல்லை.”

“நாலு வருஷமா உன்ரை குறூப்மேற்றா இருக்கிறாளடா. சரியில்லை நீ போகத்தான் வேணும்.”

“என்னெண்டெடா அங்க போறது? அங்க நிக்கிற சிங்கள ஆக்கள் நான் தமிழெண்டிட்டு ஏதும் அலுப்பெடுக்கிறாங்களோ?”

“நீயேன் body எடுக்கும் மட்டும் நிக்கிற? body எடுத்தாப்பிறகுதான் ஏதும் பிரச்சனை தொடங்கிறதெண்டால் தொடங்குவாங்கள். அதுக்கு முதல் போய்ற்று வா”

“என்னெடா?”
செத்த வீட்டிற்குப் போனால் என்ன நடக்குமோ என்கின்ற பயமாயிருந்தாலும் என்னையுமறியாமல் அடிமனதில் அங்கு சென்றேதான் ஆகவேண்டும் என்கின்ற எண்ணம் வியாபித்துக் கொண்டிருந்தது.

“டேய்! நீ போய் அவளின்ர வீட்டில சாப்பிட்டிருக்கிறியடா. சரியில்ல நீ போகத்தான் வேணும்.”

“ஏன் நீயும் தானே சாப்பிட்டனி. அப்ப நீயும் வா.”

“அட பேயா! நான் ஒருக்காத்தான், அதுவும் first year-ல தான். அதெல்லாம் இப்ப அவள் மறந்து போயிருப்பாள்.”

“நான் மட்டும் என்ன கனதரமே போய்ச் சாப்பிட்டனான்?

“நீ கிட்டடியில அவளின்ரை கொப்பரைப் போய்ச் சந்திச்சுக் கதைச்சனிதானே! அப்ப சாப்பிடேல்லையோ?”

“அம்மாண! நல்லா வாயில வருகுது. ஆனா அதுக்குப் பிறகு தான் அவளோட பிசகியாச்சே”

“செத்தவீட்டுக்கு இதெல்லாம் பாக்கக்கூடாது. இப்ப நீ போகப் போறியோ இல்லையோ?”

“அப்ப நீயும் வா! ரெண்டுபேருமாப் போவம்.”

கட்டுகஸ்தோட்டையை அடைந்து அவளது வீட்டை அண்மிக்கையில், வீதியெங்கும் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன.

வீட்டினுள் நுழைந்தோம்!

எங்களைக் கண்டதும்,

“அணே! மகே தாத்தா....”

வீச்செடுத்துக் கதறத் தொடங்கியவள், சில வினாடிகளில் தன்னை சுதாரித்துக் கொண்டு அடங்கினாலும், இடையிடையே விம்மல்கள் வெடித்துக் கொண்டேயிருந்தன. தேற்றுவாரின்றித் தேம்பும் அவளைப் பார்க்க மனதிற்குள் ஏதோ இளகியது. தோளில் சாய்த்து ஆறுதல் சொல்ல வேண்டும் போலிருந்தது. கூடாது! இப்போதுதான் அவள் என்னை விட்டு விலகத் தொடங்கியிருக்கிறாள். அதுதான் இருவருக்கும் நல்லது. அதைக் குளப்பக்கூடாது. அவளிடம் ஆறுதலாக ஏதாவது சொல்லலாம் எனவெழுந்த எண்ணத்தையும் அடக்கிக் கொண்டேன்.

என்னையும், தன் தந்தையின் உடலையும் மாறிமாறிப் பார்த்து ஏதேதோ சொல்லத் துடிப்பதாய்ப் பட்டது. அவள் உணர்வுகள் எனக்குப் புரிந்து விட்டிருந்தது. அவள் என்ன சொல்லத் துடிக்கின்றாள் என்பதும் தெரிந்துவிட்டிருந்தது. அவள் அதைச் சொல்லிவிடக் கூடாது என்று மனத்திற்குள் பிரார்த்திக்கத் தொடங்கினேன்.

******

எங்களின் தொழில்சார் பயிற்சி முடிவடைந்து இறுதியாண்டு வகுப்புக்கள் ஆரம்பித்த முதலாவது கிழமை (வாரம்). ஆய்வுகூடத்தில் இணைந்திருந்தோம்.

“ஜேந்தன்! (அவள் இப்போதெல்லாம் ஜெயந்தனை ஜேந்தன் என்றே சற்றுச் சுருக்கி அழைக்கத் தொடங்கியிருந்தாள்) எப்பிடி training? மூண்டு மாசம்தான்! ஆனா எனக்கெண்டா கனகாலம் போல இருந்திச்சு.”

“ம்... நல்லாப் போச்சுது. உங்களுக்கு எப்பிடி?”

“சரியான boring....ஆ! உங்களிட்ட ஒண்டு சொல்ல வேணும்மெண்டு கனநாளா நினைச்சுக் கொண்டிருந்தனான். அது என்னெண்டு சொல்லுங்க பாப்பம்?”

“என்ன விளையாடுறீங்களா? நீங்க என்ன நினைச்சீங்கெண்டு எனக்கெப்பிடித் தெரியும்?”

“ம் good question, but it is related to you. just guess..."

'அடிச்சுச் சொல்லுறன் கம்பஸ் முடியிறதுக்குள்ள அவள் உன்னட்ட வந்து propose பண்ணுவாள்.' - மனதிற்குள் தீபன் வந்து போனான்