Friday, October 30, 2009

வேரென நீயிருந்தாய்... (7)

அன்று சனிக்கிழமை, விடுமுறை நாள். அறையில் இருந்த நண்பர்களில் சிலர் தங்களின் வீடுகளிற்குச்சென்றுவிட்டிருந்தார்கள். இப்போதெல்லாம் குருந்துவத்தைச்சந்தியால் இறங்குவதைத்தவிர்த்து அங்குணாவலையூடாக எமது பாதையினை மாற்றி விட்டிருந்ததில் சிரேஷ்ட மாணவர்களின் பார்வையில்படுவதை பெருமளவில் தவிர்த்துக்கொண்டிருந்தோம். அன்றைய காலைஉணவிற்காக அங்குணாவலைச்சந்தியை அடைய, ச்சே! வெறுத்துப் போனது மனது. சிரேஷட மாணவர்கள்! ஏற்கனவே பல தடவைகள் சந்தித்து தாராளமாய்த்தோப்புக்கரணமும் ரிப்சும் (தண்டால்) அவர்களின் பெயரால் வாரி வழங்கியிருந்தோம்.

“டேய்! இஞ்சை ஏன்ரா வந்தனீங்கள்?”

”சாப்பிட”

”உங்களையெல்லாம் குருந்துவத்தையிலதானே சாப்பிடச்சொன்னது. சீனியர்ஸிற்குச் சுத்திக்கொண்டு இஞ்சால ஒளிச்சுத்திரியிறியள் என. வாங்கடா! இண்டைக்கு அக்பரில வந்து சாப்பிடுங்கோ.”

வெறுத்துப்போன மனதுடன், சிரேஷ்ட மாணவர்களுடன் பேருந்துத் தரிப்பிடத்தினை அடைய பேருந்தும் வந்துசேர்ந்தது.

சிங்கத்தின் குகைக்குள் செல்வது போன்றிருந்தது. வரிசையில் நின்று சாப்பாட்டிற்கு காசு கொடுத்தபோது திகைப்பாயிருந்தது. விலைகள் எல்லாம் அவ்வளவிற்கு குறைவாயிருந்தன.

“இனித் திரும்பிப்போறது உங்கட கெட்டித்தனம்.” என்று சொல்லிவிட்டு அவர்கள் சென்றுவிட, வேறு சிலர் எம்மைச்சூழ்ந்துகொண்டனர். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு திக்காய்ப்பிரித்து அழைத்துச்சென்றனர். மாடிப்படிகள் நிலத்துக்கு கீழே செல்வது ஆச்சரியமாயிருந்தது.

நாமும் நடக்க தானும் நடக்கின்ற ஏகாந்தப்பெருங்ககனம் என்பது போல் இருண்ட ஹொரிடோரின் வழியாக நடந்து கொண்டேயிருந்தோம். அறையிலக்கங்கள் 2024 முடிந்து 3122ம் முடிந்து 4103 இற்கு வருகையில்,

”மச்சான் கம்பூச்சி வந்து நிக்கிறேராமடாப்பா. இவன வச்சிருந்தால் பிரச்சனை. ஆளை அனுப்பு” - என வேகமாக வந்து சொன்ன இன்னொரு சிரேஷ்ட மாணவனின் சொற்கேட்டு.

“உனக்கு இண்டைக்கு நல்ல காலம். ஓடித்தப்பு”

என்று என்னை விரட்டினார்கள். திரும்பி தனியே வர பாதை பிடிபடவில்லை. மாறி குளியலறைத்தொகுதிக்குள் நுழைய....

“you can go this way.” ஒரு சிங்கள சிரேஷ்ட மாணவன் சரியான பாதைகாட்ட அறை இலக்கம் 2001 தாண்டி வர வெளியே வாசல் தெரிந்தது. வரும்போது கீழே இறங்கி வந்தது நினைவிற்குவந்து குழப்பியது. பின்புதான் அக்பர் விடுதியைப்பற்றி மற்றைய மாணவர்கள் கூறியது நினைவிற்கு வந்தது. அது பள்ளம் மேடு சார்ந்தவொரு நிலப்பரப்பில் அமைந்திருந்ததால் ஒரு கட்டடத் தொகுதி மற்றைய கட்டடத்தொகுதியினின்றும் ஒரு தளம் உயர்ந்திருப்பது புரிந்தது. அதன் வழியே வெளியேறி எங்கே செல்வது என்று குழம்புகையில்.

“அணணே! இதுக்குள்ள என்ன தடவுறாய்?”
-ம்ம்ம்...! சரி! இண்டைக்கு ஆப்புத்தான் என்றது மனது.

“வாடா வா அப்பிடியே எனக்குப்பின்னால சத்தம் போடாம வா” - பின்தொடர்ந்தேன்.

“போய்க் கதவைத் திற” - திறந்தேன்.

“சின்னனில ஒளிச்சுப்பிடிச்சு விளையாடியிருக்கிறியா? ”

”ஓம்”.

”அப்ப இந்த றூமுக்குள்ள எதுக்குள்ளையெண்டாலும் போய் ஒளி. நான் உன்னத் தேடுறன்.”

ஙே!

“என்னடா முழிக்கிற? ரெண்டு அலுமாரி கிடக்கு, கட்டிலுக்குக் கீழ எவ்வளவோ இடங்கிடக்கு. கெதியா ஒளி”.

கட்டிலுக்குக்கீழே குனிந்தேன். திகைத்தேன். அதற்குள் வேறொரு மாணவன் படுத்துக்கிடந்தான். மறுபுறம் திரும்பி மற்றக்கட்டிலின் அடியில் பார்க்க அட! அங்கேயும் வேறொரு மாணவன்.

“என்ன ஒளிஞ்சாச்சா?”

அவசரமாய் அலுமாரிகளைத் திறந்தேன். எல்லாமே ஏற்கனவே வேறு சக மாணவர்களால் நிரப்பப் பட்டிருந்தன.

”என்ன இன்னும் ஒளியேல்லையா?”

”இ.. இ..இடமில்லையண்ணே.”

”சரி அப்ப வந்து கதிரையில இரு.”

கண்களுக்கு எந்தக் கதரையுமே தட்டுப்படவில்லை.

“என்னடா? சொன்னது விளங்கேல்லையோ? கதிரையிலை இருடா எண்டால் வாய்பாத்துக் கொண்டு நிக்கிறாய்”

“ல்ல.. கதிரையொண்டையும் காணேல்ல”

“பேய்ப்... உங்கொப்பனா இஞ்ச கதிரைகொண்டந்து வச்சவன். டேய்! உள்ளுக்க இருக்கிறவங்கள் எல்லாம் வெளியால வாங்கடா” - வந்தார்கள்.

“ஆராரு (யார்யார்) நேற்று ராத்திரியே வந்தாக்கள்?”- இருவர் கையுயத்தினர்.

“ரெண்டு பேரும் ஓடுங்கோ. நீங்க மூண்டு பேரும் வரிசையா வந்து கதிரையில இருங்கோ”

மற்றைய இருவரும் கதிரையில் உட்காருவதைப் போலவே பாவனை செய்ய நானும் உட்கார்ந்தேன்.

”டேய் புதுசா வந்தனி! காலுக்கு மேல கால் போட்டுக்கொண்டு இரு. இருடா எண்டுறன். தூக்கடா ஒரு கால.” - தூக்க முயற்சித்தேன். அப்படியே தவறிக் கீழே விழுந்தேன்.

”ஏன்ரா கதிரையை உடைச்சனி? டேய் குட்டான்! நீ சிரிக்கிற என. போடா போய்ச் சிரிப்ப வெட்டி எறிஞ்சிற்று வா”
முதலாவதாயிருந்த அந்த சின்ன உருவம் தன் சொண்டினை (உதடுகள்) ஒருகையால் இழுத்துப்பிடித்தவாறே மற்றைய கையால் கத்தி கொண்டு அறுப்பது போன்றும் பின் அறுபட்டதை ஜன்னலால் எறிவது போன்றும் பாவனை செய்தான்.

“நீ நல்லா ராக்கிங் வாங்கித்தானிருக்கிற. சரி அப்பிடியே நிலத்தில இரு” - அவன் இருந்தான்.

“டேய் ரெண்டாவது நீ மக்ஸிமம் எத்தனை தோப்பு போட்டிருக்கிற?”

”முன்னூறு”

“நீ”

”நானூற்றிஎண்பது”

“ஆருக்குப் போட்டனி?”

“ஒணரபிள் சுப்பர் சுப்பர் சீனியர் ரமேஷ்”

“சரி எல்லாரும் கிட்ட வந்து நிலத்தில இருங்க” அருகே சென்று அமர்ந்தோம்.

“ஒவ்வொருத்தரா உங்கட detailsஅ சொல்லுங்கோ. இஞ்ச வைச்ச பெயரொண்டும் வேண்டாம்.”

“என்ர பேர் பாலசிங்கம் இந்திரன். சொந்த இடம் கோப்பாய்.....”

“நீ”

“என்ர பேர் சண்முகலிங்கம் கணேசன். சொந்த இடம் பருத்தித்துறை.....”

“நீ”

“என்ர பேர் சுந்தரலிங்கம் ஜெயந்தன். சொந்த இடம் வேலணை....”

“சரி! உங்களில ஆருக்குப்பாட்டுப்பாடத் தெரியும்?”

மூவருமே தெரியாதெனத் தலையாட்டினோம்.

“டேய் பருத்தித்துறையான்! அப்ப நீயொரு கதைசொல்லு. பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம்.. எண்டில்லாம நல்லொரு கதையைச் சொல்லு.”

“அண்ணே எனக்குக் கதை தெரியாது.”

“ஆமை முயல் கதை தெரியுமா?”

“ஓம்”

“அப்ப அதைச் சொல்லு.”

“ஒரு ஊரில ஒரு ஆமை இருந்துதாம்.”

“என்னடா அம்புலிமாமாக் கதை போல ஒரு ஊரில ஒரு ஆமையெண்டு? ஊரின்ரை பெயரைச் சொலலிச் சொல்லு”

“பருத்தித்துறை என்கின்ற ஊரில ஒரு முயல் இருந்துதாம்.”

“அப்ப முயலுக்குப் பேரில்லையோ?”

“பருத்தித்துறை என்கின்ற ஊரில ராமன் என்கின்ற முயல் இருந்துதாம்.”

“எப்ப இருந்ததாம்?”

“1997 ஆம் ஆண்டு”

“கதை சொன்னா முழுசாச் சொல்ல வேணும். நீ பிழை விட்டால் திரும்பி முதலில இருந்து சொல்ல வேணும் சரியா? இப்ப சொல்லு”

“1997ஆம் ஆண்டு தை மாதம் 14ம் திகதி பருத்தித்துறை என்கின்ற ஊரில இருந்த ராமன் என்கின்ற முயல் ஒரு ஆமையிடம் சென்று...”

“நிப்பாட்டு. ஆமைக்குப் பெயரில்லையோ?”

“1997ம் ஆண்டு..... ராமன் என்கின்ற முயல் மணி என்கின்ற ஆமையிடம் சென்று ஓட்டப்போட்டிக்கு வருமாறு அழைத்தது. போட்டி தொடங்கியதும்...”

“இஞ்ச வா! போட்டி எங்க நடந்தது?”

“1997ம் .....அழைத்தது. போட்டி மணியாறன் வளவடியில் இருந்த ஒழுங்கையில் தொடங்கியது.”

“எத்தின மணிக்குத் தொடங்கினது?”

“1997.....போட்டி மாலை 4.00 மணிக்குத் தொடங்கியது. ராமன் என்கின்ற முயல் வேகமாக”

“நிப்பாட்டு. போட்டிக்கு ஆரு நடுவர்?”

“1997.... யோன் என்கின்ற நாயை நடுவராக வைத்து போட்டி தொடங்கியது.”

“ஆமை முயல் எல்லாம் ஓடேக்குள்ள என்ன உடுப்பு போட்டிருந்ததுகள்?”

“1997..... ராமன் என்கின்ற முயல் நீல நிறக்காற்சட்டையும் வெள்ளைநிற மேற்சட்டையும் அணிந்திருந்தது.”

“டேய்! ஓட்டபபோட்டி நடக்குது. முயல் ஜட்டி போடாமா ஓடுதாம். ஆருக்குக் கதை விடுறாய்?”

“1997...........”

“....”

“199.....”

“....”

“19......”

“....”

“1......”

“....”

“@#$%^&*......”

“மவனே றூமுக்குப் போய் ஒழுங்கா prepare பண்ணீற்று நாளைக்கு வந்து எனக்கு இந்தக்கதையை முழுக்கச் சொல்லோணும். இல்லையெண்டால்.” - சரியென்றவாறு கணேசன் தலையாட்டினான்.

”சரி எப்பிடி வெளியால போறதெண்டு தெரியுமா? இப்ப lunch time. அக்பர் வாசலால போனீங்களெண்டால் வேறையாரும் பிடிப்பாங்கள். இப்பிடியே அக்பருக்கும் facultyக்கும் இடையால போற றோட்டால போய் பனிக்குள்ள (பனிதெனியா) இறங்கி தப்பிப் போங்கடாப்பா. ”


பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6

4 comments:

  1. Nice memories. Me too from the same faculty must be 3 years junior to you. Good work!!

    ReplyDelete
  2. படித்தேன் ரசித்தேன்..........
    நல்ல அருமையான இடுகைகள்...........
    ஒரு கதை புத்தகமே வெளியிடலாமே.............

    ReplyDelete
  3. ePq;fs; ehty; VJk; vOj Vd; Kaw;rp nra;af;$lhJ. Kaw;rp nra;Aq;fs;. rkfhy epfo;Tfis vOJq;fNsd;.

    ReplyDelete