Wednesday, April 28, 2010

அப்பா என்றால் என்ன அம்மா?



அப்பா எண்டால் என்ன அம்மா?

பாடசாலையால் வந்திருந்த பள்ளிச் சிறுமி செல்வி. சுதந்திரி சிந்தனா விண்மினி தன் தாய்களில் ஒருத்தியான சிந்தனாவிடம் கேள்வியெழுப்பினாள்.

எதற்காக கேட்கிறாய் விண்?

விண்மினியை விண் என்று சுருக்கிக் கூப்பிடுவது சிந்தனாவின் வழக்கம். சுதந்திரிக்கோ விண்மினி எப்போதுமே மினி தான். இந்த விடயத்தில் ஏனோ சுதந்திரியும் சிந்தனாவும் முரண்பட்டுக் கொண்டாலும், கடந்த எட்டுவருட இல்வாழ்க்கையில் அவர்களுக்கிடையே வேறு பெரிதாக எந்தவொரு கருத்து முரண்பாடுகளும் ஏற்பட்டிருந்ததில்லை. ஆயினும் சிந்தனாவிற்கு இப்போது சுதந்திரியின் போக்கில் சாடையான சந்தேகம் ஒன்று துளிர்விட ஆரம்பித்திருந்தது. ஒருவேளை விண்மினியின் இந்தக் கேள்விக்கு சுதந்திரி தான் காரணமாக இருப்பாளோ? சந்தேகம் என்பதும் கணினிக்கான ஒரு வைரஸ் போன்றதே. அது மூளையின் நினைவடுக்குகளினுள் நுழைந்து விட்டால் போதும். வெறும் சாதாரண விடயங்களுக்கெல்லாம் சந்தேகப்படும் விடயத்துடன் முடிச்சுப் போட்டு முழு மனதையுமே முடிந்து விட்டு விடும். அது சுயபுத்தியினை வேலை செய்ய விடாது.

சுதந்திரி அம்மா ஏதும் சொன்னாளா?

விண்மினியிடம் வினவினாள் சிந்தனா.

இல்லையம்மா!

அப்ப எதுக்கு அப்பாவைப் பற்றிக் கேட்கிறாய்?

இண்டைக்கு பள்ளிக்கூடத்திற்கு புதுசா வந்த பிள்ளை ஒண்டு தனக்கு அப்பா இருக்கு எண்டு சொன்னது. எனக்கு அப்பா எண்டால் என்னெண்டு விளங்கேல்ல என்ர பிறண்ட்ஸ்சிலையும் ஒருத்தருக்கும் அப்பா எண்டால் என்னெண்டு தெரியாதாம். அதுதான் கேட்டனான். அப்பா எண்டால் என்னம்மா?

ச்சே! அநியாயமாய் சுதந்திரியைச் சந்தேகித்து விட்டேன். தன்னையே நொந்து கொண்டாள் சிந்தனா.

தொடர்புபட்ட செய்தி: (நன்றி http://www.globaltamilnews.net/)


இருநூறு ஆண்டு காலமாக நீடித்து நிலைத்து நின்ற மரபை அடியோடு புரட்டிப் போட்டிருக்கிறது அண்மையில் இங்கிலாந்தில் நடந்தவொரு சம்பவம்.

குழந்தை பிறந்தால் அதன் பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் தாயினுடையதும் தந்தையுடையதும் பெயரைப் பதிவு செய்யும் மரபு 170 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது.

ஆனால் பிரிட்டனில் அண்மையில் கொண்டு வரப்பட்ட ஒரு (Human Fertilisation and Embryology Act 2008) சட்டம் ஒரு பால் உறவுப் பெற்றோரை பெற்றாரின் இடத்தில் பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் குறிப்பிட வகை செய்கிறது.

இதன்படி கடந்த வருடம் ஏப்ரல் 1இற்குப் பின்னர் கருக் கொண்ட குழந்தைகளுடைய ஒருபால் உறவுப் பெற்றோர் பிறக்கும் குழந்தையின் பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் தாய் மற்றும் தந்தை என்பதற்குப் பதிலாக தாய் மற்றும் பெற்றோர் என்று தனது ஒரு பால் உறவு இணையைக் குறிப்பிட இந்தச் சட்டம் வகை செய்கிறது.

இச்சட்டத்தின் கீழ் பிரிட்டனில் பிறந்து முதல் குழந்தை லில்லி மே. லில்லி மே கடந்த மார்ச் 31ஆம் திகதி பிறந்தாள். அவளுடைய தாய்மார்கள் நடாலி வூட்ஸ்(38) மற்றும் பெற்றி நொவெல்ஸ்(47) ஆவார்.


நடாலி வூட்ஸ்உம் பெற்றி நொவெல்ஸ்உம் 16 வருடங்களாக ஒரு பாலுறவுக்காரர்களாக இருந்து வருகிறார்கள். நடாலி வூட்ஸ் ஆண் ஒரு பாலுறவு மற்றும் பெண் ஒருபாலுறவு குறித்த மருத்துவ ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறார். பெற்றி நொவல்ஸ் விநியோகச் சாரதியாகப் பணியாற்றுகிறார்.

16 வருடங்களாக இருவரும் இணைந்து வாழ்ந்தாலும் எட்டு வருடங்களுக்கு முன்னர் தான் அவர்களுக்கு ஒரு குழந்தை தேவை என்று உணர்ந்தார்கள்.

நாங்கள் இருவருமே தாயாராக விரும்பினோம். நடாலி வூட்ஸ் தான் தாயாராவது என்பதில் மிகத் தெளிவாக இருந்தார். இதனால் இலகுவாக எமக்கு முடிவெடுக்க முடிந்தது. அதேநேரத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட சட்டம் நாம் இருவருமே சட்டப்படி பெற்றாராக இருக்க அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. அது பெற்றாராக வர விரும்பியிருந்த எம் இருவருக்குமே ஒரு வரப்பிரசாதமாக இருந்தது.

என்கிறார் பெற்றி நொவெல்ஸ்.

குழந்தை பெறுவதாக முடிவு செய்ததுமே நடாலி வூட்ஸ் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். குழந்தை பெறுவதற்காக விந்து தானம் செய்யும் விந்து வங்கியூடாக விந்தைப் பெற்று கருத்தரித்தார்.

விளைவாக கடந்த மார்ச் 31இல் அழகான பெண்குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். முன்னைய சட்டங்களின்படி பெற்றாராக நடாலி வூட்ஸின் பெயர் மட்டுமே பிறப்புச்சாட்சிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்திருக்கும். ஆனால் பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டத்தின்படி ஒரு பால் உறவினைக் கொண்ட இருவருமே சமமாக குழந்தையின் பெற்றாராக கணிக்கப்படுவர் என்பதால் இருவரது பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

நாங்கள் இருவருமே பெற்றாராக பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் கையொப்பமிட்டது மகிழ்ச்சியளிக்கிறது. நான் மட்டுமே சட்டரீதியான பெற்றார் என்ற கவலையிலிருந்து இது என்னை விடுவித்திருக்கிறது. என்கிறார் நடாலி வூட்ஸ்.

ஒரே பாலினத்தைச் சேர்ந்த எங்கள் இருவரது பெயர்களுமே பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதானது எங்களைப் போன்ற ஒருபாலுறவுக் குடும்பங்களுக்கு மேலும் அங்கீகாரம் வழங்குவதாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ஒரு வரலாற்று முன்னுதாரணத்தை நாங்கள்; உருவாக்க விரும்பினோம் என்றும் வூட்ஸ். வலியுறுத்துகிறார்.


பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் 170 வருடங்களுக்கு மேலாக இருந்து வந்த தாய் தந்தையரின் பெயரைக் குறிப்பிடும் வழக்கத்தை இது மாற்றி இருக்கிறது. தற்போதைய பிறப்புச் சாட்சிப்பத்திரமோ தந்தையுடைய பெயரை அதிலிருந்து விடுவித்து இருக்கிறது.

பிரிட்டனின் பிறிஜ்ரன் என்ற இடத்தைச் சேர்ந்த பிறப்புச் சாட்சிப் பத்திரப் பதிவு அலுவலகமோ புதிய சட்டத்தின் கீழான முதலாவது பதிவு இதுவெனச் சொல்கிறது.

ஆம், அந்த ஒருபாலுறவுத் தம்பதியின்ர் ஒரு வரலாற்று முன்னுதாரணத்தைத் தான் நிகழ்த்தியிருக்கிறார்கள்.

குழந்தை லில்லி வளர்ந்ததும் நடாலி வூட்ஸை அம்மா என்று அழைப்பாள். பெற்றி நொவெல்ஸை அம்மா பி என்று அழைப்பாள். ஆனால், அப்பா என்று அவள் யாரையும் அழைக்கப் போவதில்லை.

லில்லிக்கு அப்பா என்றொருவர் இல்லாதது பற்றி நாங்கள் உரையாடினோம். ஆனால் ஒரு அப்பா ஒரு அம்மா என்பதை விட இதில் பல விடயங்கள் இருக்கின்றன. ஒரு குழந்தைக்கு அவசியமானது எந்த நிபந்தனைகளுமில்லாத அளவற்ற அன்பு. பெற்றியாலும் என்னாலும் அந்த அளவற்ற அன்பை லில்லிக்குக் கொடுக்க முடியும் என்கிறார் நடாலி வூட்ஸ்.

குழந்தைக்குத் தேவையானது பரிபூரணமான அன்பு. அதனை எங்கள் இருவராலும் கொடுக்க முடியும். ஆனால் துயரார்ந்த வகையில் சிலருக்கு இதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் தேவையற்ற பல அபிப்பிராயங்களை இங்கொன்றும் அங்கொன்றுமாக அவர்கள் உதிர்த்து விட்டிருக்கிறார்கள். எனது பெற்றார் எனது பாலியல் தேர்வு காரணமாக என்னுடன் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். அவர்கள் ஒரு அற்புதமான அழகான குழந்தையின்பத்தை இழக்கிறார்கள் என்றும் சொல்கிறார் நடாலி வூட்ஸ்.

இந்த நிலைமையால் குழந்தைக்கு பாட்டா பாட்டிமாருடைய உறவும் கிடைக்கப் போவதில்லை. துரதிர்ஷ்டவசமாக பெற்றி நொவெல்ஸ்இன் பெற்றோரும் ஏற்கெனவே இறந்து விட்டார்கள்.

சமூகம் மாறி வருகிறது. குடும்பங்கள் மாறிவருகின்றன. பெற்றாராக ஆகலாமா என நம்பிக்கையற்றிருந்த மக்கள் இப்போது ஆகி வருகிறார்கள். ஒரு வகையில் இப்போது நாங்கள் விளையாட்டு மைதானத்தைச் சமப்படுத்தி வருகிறோம் என்று இச்சட்டத்தை வரவேற்கிறார் பேராசிரியையான லிஸா ஜர்டின். தற்போது எல்லாப் பெற்றோரும் தங்களுடைய பாலினம் குறித்தோ அந்தஸ்து குறித்தோ கவலைப்படாமல் பெற்றோராக தமது குழந்தையின் பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் பெயரிட முடிகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இவர்கள் இச்சட்டத்தை வரவேற்றாலும், இவற்றை விமர்சிப்பவர்களும் இல்லாமல் இல்லை.

பிறப்புச் சாட்சிப்பத்திரம் குழந்தை எப்படி உருவாகியது என்பதை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறானால் உண்மையான தாயுடையதும் தந்தையுடையதும் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்கிறார் இனப்பெருக்க ஒழுக்கவியல் தொடர்பாகப் பணிபுரியும் ஜோசப்பின் குவான்ரவெளி.

பிறப்புச்சாட்சிப் பத்திரங்கள் இவ்வாறே வருமெனில் நாங்கள் கலாசாரத்தின் அனைத்து அம்சங்களையும் மறந்தவர்களாகி விடுவோம். அது மட்டுமல்லாமல் கலைச் சொற்களுடன் நாம் விளையாடுபவராகி விடுவோம். ஒரு நாள் குழந்தை தனது தகப்பன் யார் என வினவும் போதும், குழந்தை எவ்வாறு பிறந்தது என்றும் உயிரியல் விளக்கும். அதற்கான வாய்ப்பு இங்கு இல்லாமற் போய்விடுகிறது என்றும் சுட்டிக்காட்டுகிறார் அவர்.

ஓவ்வொரு குழந்தைக்கும் தனது தந்தையை அறிந்து கொள்ள உரிமை இருக்கிறது. இந்தச் சட்டம் முதல் தடவையாக குழந்தைகள் தந்தை இல்லாமல் பிறக்க வகையேற்படுத்துகிறது. ஒரு தந்தை குழந்தையின் வாழ்வில் முக்கிய பாத்திரத்தை ஆற்றுகிறார். அதேபோல் குடும்பத்திலும் தந்தை ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றுகிறார் என்பதைக் குறிப்பிட்டேயாக வேண்டும். அது மட்டுமல்லாமல் சிறுவர்களுக்கு தமது உயிரியல் ரீதியான தந்தை யாரென அறிந்து கொள்ளும் உரிமையும் இருக்கிறது எனவும் அவர் வலியுறுத்துகிறார்.

தந்தையின் பெயரைக் குறிப்பிடாமலே ஒரே பாலினத்தைச் கொண்ட இருவர் பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் ஒப்பமிடுவதை சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவர் பரோனிஸ் டெச் வெளிப்படையாகவே கண்டிக்கிறார், குழந்தை தனது அடையாளத்தை அறிந்து கொள்ளும் உரிமையை இது பறிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இது உண்மைத் தகவல்களை மறைக்கிறது. உயிரியல் சார்ந்த பெற்றோர் யார் என்று இனம் காண முடியாமல் குழப்பமடைய வைக்கிறது. அதுமட்டுமல்லாமல் சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தவறான தகவல்களை இது வழங்குகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால் இந்தச் சட்டங்களும் ஒழுங்கு முறைகளும் வெறுமனே இரண்டு நூற்றாண்டு காலத்துக்குட்பட்டவை தானே என்று வாதிடுகிறார் விக்ரம். சமூக வரலாறென்பது தாய் வழித்துடையானதாகவே மிக நீண்டகாலம் இருந்து வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

கடந்த நூற்றாண்டின் இறுதியிலும்கூட தமிழகத்தின் சில பகுதிகளில் தாய் வழி மரபு இருந்து வந்திருக்கிறது என்றும் அவர் சொல்கிறார். தவிரவும் மரபணு சோதனை அறிமுகமாவதற்கு முன்னர் தாய் அந்தக் குழந்தைக்கு யார் தந்தை எனச் சொல்கிறாளோ அதனை நம்புவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார் அவர்.

எவ்வாறாயினும் இந்தச் சம்பவம் குழந்தையின் பிறப்புச்சாட்சிப் பத்திரத்தில் அவர்களுடைய பிறப்புக்கு உயிரியல் ரீதியாகக் காரணமான இருவரது பெயர்களும் மிகச்சரியாகக் குறிப்பிடப்பட வேண்டும் எனக் குரலெழுப்பும் அழுத்தக் குழுக்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனால் ஆண், பெண். ஒருபாலுறவு மற்றும் இருபாலுறவு தொடர்பான அமையத்தைச் சேர்ந்த ஸ்ரோன்வால் சட்டத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்தினை வரவேற்றிருக்கிறார். ஒரு பாலுறவுக்காரர்களுக்கு மிகவும் அவசியமாக இருந்த ஒரு சட்டமும் இது தான் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

லண்டன் பல்கலைக்கழகம் மற்றும் கிளார்க் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஒரு பகுதியான பேர்க் பெக் கல்லூரி நடாத்திய ஆய்வில் ஆண் பெண் பெற்றாரை விட ஒரே பாலினத்தைச் சேர்ந்த தம்பதிகள் சிறந்த பெற்றாராகத் திகழ்வது தெரிய வந்துள்ளது. இதற்கு அடிப்படையான காரணம் என்னவென்றால் அவர்கள் தற்செயலாக குழந்தையைப் பெற்றெடுப்பதில்லை. குழந்தை ஒன்றைப் பெற்றெடுக்க விரும்பினால் அது தொடர்பாக தெளிவான திட்டவட்டமான முடிவை அவர்கள் எடுக்க வேண்டியிருக்கிறது. அதன் பின் அதற்காக விந்து வழங்குனர் ஒருவரையும் கண்டடைய வேண்டியிருக்கிறது என்று குறிப்பிடுகிறது.

இது தவிர மூன்றிலொரு பங்கு பிரிட்டிஷ் மக்கள் ஆண் பெண் தம்பதிகளை விட ஒரேபாலினத்தைச் சேர்ந்த பெற்றோர் சிறப்பானவர்கள் என்று நம்புவதாக பிரிட்டிஸ் சமூக நடத்தைகள் தொடர்பான வருடாந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இவையெல்லாம் நடாலி வூட்ஸ்க்கும் பெற்றி நொவெல்ஸ்க்கும் ஆறுதல் தரக் கூடியவை.

குழந்தை தான் எவ்வாறு உருவாகினேன் என அறிய விரும்புவது அதனுடைய அடிப்படை உரிமை. இப்புதிய சட்டம் அதனை மறுக்கிறது என்ற குற்றச்சாட்டை நிராகரிக்கும் இச்சட்டத்திற்கு ஆதரவானவர்கள் லில்லிக்கு 18 வயதானதும் அவள் விரும்பினால் அவள் உருவாகக் காரணமான விந்தை யார் தானம் செய்தார்கள் என்று அறியும் உரிமை அவளுக்கு இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால், அவர் அவர் விந்தை தானம் செய்த ஒருவர் என்பதற்கப்பால் நாங்கள் அவரைத் தந்தையாக நினைக்கவில்லை. அவர் அப்பா அல்ல. விந்து தானம் செய்த ஒருவர் அவ்வளவு மட்டுமே என்றும் அழுத்துகிறார் வூட்ஸ்.

Friday, April 23, 2010

ஆண்கள் அனைவருமே முட்டாள்கள் - பிரபஞ்சன்

சிங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்மொழி மாத நிகழ்வுகளை ஒட்டி தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான திரு. பிரபஞ்சன் அவர்களும், இசை விமர்சகர் திரு. ஷாஜி அவர்களும் கலந்து சிறப்பிக்க சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் நிகழ்த்திய 'ஒரு கோப்பைத் தேநீர்' கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று மாலை 6.30 தொடக்கம் இரவு 9.00 வரை சிங்கப்பூர் தேசிய நூலக அரங்கில் நடைபெற்றது.

வேலைத்தளத்திலிருந்து புறப்படவே மாலை 6.30 இனைத்தாண்டி விட்டிருந்தது. மழையும் சேர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாகவே அரங்கினைச் சென்றடைகையில் இரவு 8.00 மணியாகி விட்டிருந்தது. திரு. பிரபஞ்சன் அவர்கள் தமதுரையினை ஆற்றிக்கொண்டிருந்தார். படைமுகத்திலும் அறிமுகம் பெரிதென்பர். அரங்கத்தினுள் நுழைகையிலேயே உணவினையும் எடுத்துக்கொண்டு இருக்கையில் சென்று அமருமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளினையும்(?) ஏற்றுக்கொண்டு என்னுடன் வந்திருந்த பணியிடத்து நண்பரும் நானும் இருக்கைகளில் அமர்ந்தோம்.

மிதமான குரலில் திரு. பிரபஞ்சன் அவர்கள் நல்ல பல கருத்துக்களை அளித்துக் கொண்டிருந்தார். தமிழ் மொழி செம்மொழியாகத் தகுதி உள்ளது தானா? தமிழ்மொழி தன்னை மேலும் வளர்த்துக் கொள்வதற்கு எவையெவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என்கின்ற தன்னுடைய கருத்துக்களையும் ஆதங்கங்களையும் அவர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கையிலேயே, அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிவடைவதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவிக்கவே, தமிழ்மொழியின் செம்மொழித் தகுதிக்கு ஆதாரமாக ஒரு சிறிய கதையுடன் தனதுரையை நிறைவு செய்வதாக கூறிய திரு. பிரபஞ்சன் அவர்கள் “ஆண்கள் அனைவருமே முட்டாள்கள்” என்றார்.

நட்பு முதிர்ந்து காதலாக மாறிக்கொண்டிருக்கும் ஒரு இளம் ஜோடி, நடந்து சென்று கொண்டிருந்தார்கள். பெண்ணின் வீடு அண்மிப்பதை உணர்ந்தவர்கள் அருகில் எங்கேனும் உட்கார்ந்து உரையாடலாம் என்கின்ற எண்ணத்தில் அவன் அவளை ஒரு புன்னை மரத்தினைக் காட்டி அதன்கீழ் அமர்ந்து பேச வருமாறு அழைக்கின்றான். அதற்கு அவள் மறுத்து, அந்தப் புன்னை மரத்தினைத் தாண்டி நிற்கும் வேறொரு மரத்திற்கு செல்லலாம் என்கின்றாள். உடனே அவன் ஏன் என்கின்றான். இங்கே தான் ஆண்கள் அனைவருமே முட்டாள்கள். ஆமாம் இப்படியான சந்தர்ப்பங்களில் பெண்களின் முன்னால் ஆண்கள் எல்லோருமே முட்டாள்கள் தான். உடனேயே அவள் அதற்கான காரணத்தைக் கூறுகின்றாள்.

குழந்தைப்பருவத்தில் தான் விளையாடிய புன்னைமர விதையே பின்னாளில் முளைத்து மரமாக வளர்ந்ததாகவும், தன் பால்ய வயதினில் உணவுண்ண மறுத்து அடம்பிடிக்கும் வேளைகளில்லாம், தன் தாய் அந்தப் புன்னை மரத்தைக் காட்டி, “பார்! உனக்குப் பின் பிறந்த அந்தப் புன்னைமரக் கன்று எவ்வளவு சமத்தாக ஊற்றுகின்ற நீரையும் நிலத்துப் பசளையினும் எடுத்துக் கொண்டு வளருகின்றது. நீயும் இருக்கின்றாயே” என்று ஏசியே தன்னை உணவு உட்கொள்ள வைப்பார்களென்றும், அதைக் கேட்டுக்கேட்டு வளர்ந்த தான் அந்தப் புன்னை மரத்தினைத் தன் தங்கையாவே வரித்துக்கொண்டு விட்டதாகவும், தங்கைக்கு முன்னால் நின்று கொண்டு உங்களுடன் உரையாடுவதற்குத் தனக்கு வெட்கமாக உள்ளதாகவும் கூறினாள்.

இந்தக் கதையின் மூலம் தமிழர்களின் பண்பாடு சிறப்பாக வெளிக்கொணரப்படுகின்றது. தமிழர்களின் சிறப்பு, அவர்தம் மொழியான தமிழ்மொழிக்கும் உண்டு என்று கூறி தனதுரையினை நிறைவு செய்தார். பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் கேள்வி பதில் நிகழ்ச்சியினுாடாக, திரு. பிரபஞ்சன் அவர்களிடமிருந்து ஒரு எழுத்தாளனின் சமூகப்பொறுப்புக்கள் பற்றிய பல தகவல்களையும் அறிந்து கொள்ள முடிந்தது. ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு, பல விடயங்கள் பற்றிய விழிப்புணர்வுகளினை மக்களிடையே ஏற்படுத்துவதில் எழுத்தாளனும் ஒரு போராளியே. பல மனிதர்களின் வாழ்வியல் எண்ண மேம்பாட்டிற்கு திரு. பிரபஞ்சன் அவர்களின் ஆக்கங்கள் எத்துணை உதவி புரிந்திருக்கின்றன என்பதை அப்படியானவர்கள் அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டதைக் கேட்கையில் மகிழ்ச்சியாக இருந்தது.

திரு. பிரபஞ்சன் அவர்களால் எழுதப்பட்டு ஆனந்தவிகடனில் பிரசுரமான கட்டுரை காதல்வயப்பட்ட ஜோடிகளுக்காக.


**************************

காதல் வயப்பட்ட ஜோடிகளுக்கு . . .

அன்பார்ந்த விவேக், வைணவி உங்கள் இருவரின் கடிதமும் கிடைத்தது. நீங்கள் காதலிப்பதாகவும், கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் எழுதி இருக்கிறீர்கள். மகிழ்ச்சி. ரொம்ப மகிழ்ச்சி.

இல்லற வாழ்க்கைக்குள் பிரவேசிக்கப் போகிற 'எங்களுக்கு ஏதேனும் சொல்லுங்கள்' என்று கேட்டிருக்கிறீர்கள். உலகத்திலேயே ரொம்ப சுலபமானது, பிறருக்கு அறிவுரை சொல்வதுதான். மீறப்படுவதற்கென்றே போடப்படும் சட்டங்களைப் போல, புறக்கணிக்கப்படுவதற்கென்றே சொல்லப்படுகிற வார்த்தைகளே அறிவுரைகள் அல்லது போதனைகள்.

ஆகவே, நான் உங்களுக்கு அறிவுரை சொல்லப் போவது இல்லை. வயதில் மூத்தவன் என்கிற தகுதியை (இது தகுதிதானா?) முன்வைத்தும், நிறைய காதல் வயப்பட்டவன் என்கிற அனுபவங்களை முன்வைத்தும், உங்களுக்கு உபயோகப்படலாம் என்று நான் நம்புகிற சிலதைச் சொல்லலாம் என்று நினைக்கின்றேன்.

உங்கள் காதல் புனிதமானது என்கிறீர்கள். உலகத்தில் புனிதமானது என்று எதுவும் இல்லை. அதேபோல் உலகத்தில் அசிங்கமானது என்று எதுவும் இல்லை. காதல் இயல்பானது என்பதே உண்மை. அது, இரண்டு உயிர்கள் சங்கமம் ஆகிற தவிர்க்க முடியாத நியதி. ஆரோக்கியமான உயிரும் உடம்பும் அவாவுகிற தீனி. உயிர் வாழக்கை, பிராண வாயுவை உட்கொள்வதால் மட்டுமே சாத்தியம் என்பது போல, மானுட வாழ்க்கை காதலினாலேயே சாத்தியமாகின்றது.

என் அன்பார்ந்த விவேக், வைணவி . . .
உங்கள் நேசம், அல்லது காதல் எப்படித் தோன்றி எப்படி வளர்ந்தது என்கிற தகவல் உங்கள் கடிதத்தில் இல்லை. என்றாலும் என்ன? பொது உலக அனுபவங்களை முன்வைத்தே காதலின் ஜனன விசித்திரத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எத்தனையோ பேரை தெருவில், வேலை செய்யும் இடத்தில், படிக்கும் இடத்தில் பார்க்க நேர்கிறது. சில முகங்கள்தான் பச்சை கொடி காட்டும் ரயில் ஊழியர் போல நமக்கு அனுமதி கொடுக்கின்றன. சில முகங்கள்தான் பேசத் தகுந்த முகங்கள், பழகத் தகுந்த முகங்கள் என்று நம் உள்மனம் நமக்கு உத்தரவிடுகிறது. நாம் அவரில் பழக்கம் ஆகிறது. பழக்கம், அந்நியோன்னியத்தில் கொண்டு சேர்க்கிறது. தினம், தினம் அடிக்கடி அவர் குரலைக் கேட்க வேணும், பார்க்க வேணும் என்கிற அவஸ்தை உருவாகிறது.

மதுரை மணியின் அருமையான ஒரு கல்பனையைக் கேட்கையில், மாலியின் ஒரு சுழற்றலில், ரகுமானின் ஒரு சுழிப்பில், பர்வீன் சுல்தானாவை, அல்லது உங்கள் ரசனைக்கேற்றபடி ஒருவரைக் கேட்கையில், 'அடடா, இப்போது அவன/அவள் என் அருகில் இல்லையே' என்று ஏங்க வைக்கிற மனசு உங்களுக்குச் சிந்தித்துவிட்டதா? துணிக்கடைப் பொம்மைகள் போட்டிருக்கும் ஆடைகளை, உங்கள் துணைக்கு அணிவித்து அழகு பார்க்கிறதா, உங்கள் மனசு? நீங்கள் காதல் வசப்பட்டு விட்டீர்கள் என்று அர்த்தம். இது தொடக்கம்தான். காதல் எழுதுவது வேறு - இசைவு படுவது வேறு. காதலின் ஜீவன், அவனும் அவளும் இசைவுபடுவதிலேயே இருக்கிறது. இசைவுபடுதல் என்பது என்ன? சுவையும் நோக்கமும் ஒன்றுபடுதல். அந்த இரண்டு பேரில் ஒருவருக்கு, ஒவியம் ஓர் உன்னதம். ஒருவருக்கு 'இது என்ன வர்ணமெழுகல்' என்கிற புத்தி. ஒருவருக்குச் சங்கீதம் உன்னதம். ஒருவருக்கு, 'இது என்ன விலை' என்கிற வியப்பு. ஒருவருக்குப் புத்தகம் உயிர். ஒருவருக்கு 'இது என்ன காசைக் கரியாக்கிக் கொண்டு' என்கிற பணப் பிரக்ஞை. காதலின் பிள்ளையார் சுழியே இதுதான். ஓருத்தரின் சுவை அந்த இன்னொருத்தரின் சுவையும் குறைந்தபட்சம் முரணாகக் கூடாது. அவனும் அவளும் ஒரு துறையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அவன் ஒரு அறையில் கதை எழுதினால், இவள் ஒரு அறையில் கட்டுரை எழுத வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இதெல்லாம் சாத்தியமும் இல்லை. 'என்ன பெரிய கதையும் கிதையும்? அந்த நேரத்தில், இந்த முருங்கைக் கீரையை ஆஞ்சி கொடுத்தாலாவது பிரயோஜனமாக இருக்கும்' என்று அவளோ, 'நீ பெரிய இவள் . . . கட்டுரை எழுதுகிறாயாக்கும் . . . இந்தச் சட்டையைத் துவைச்சுப் போட்டால் என்ன?' என்று இவனோ கேட்பது கேட்பது அசுவை அல்லது அவமரியாதை.

என் அன்புக்குரிய விவேக், வைணவி,
ஒரு காதல் கதை சொல்லட்டுமா? தஞ்சாவூரில் எனக்கு ஒரு சிநேகிதி இருந்தாள். பன்னிரண்டு வயசில் இவள் பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்ந்தது. தஞ்சாவூர் தாண்டி, சென்னை மியூஸிக் அகாடாமி வாசல் வரை இவள் புகழ் நீண்டு பரவியது. அந்தச் சமயத்தில்தான், அந்த சிநேகிதி - ராதா - ஒரு வலையில் விழுந்தாள். வேறு என்ன . . . அதுதான்! அவஸ்தை! யாரோ ஒரு மிராசுதரர் பையன். அவனும் குட்டி மிராசுதான். காதலித்துக் கொண்டார்கள். அல்லது அப்படி நம்பினார்கள். மூன்று நாள் கல்யாணம். ஊரடைத்துப் பந்தல். ஆயிரக்கணக்கில் இலை விழுந்தது. எல்லாம், எப்போதும் இன்பமயமாக ஆவதில்லையே . . . 'வீட்டு மருமகள் ஆடுவதாவது' என்றார்கள் மிராசு வீட்டில். பையனின், அதுவரையிலும் ஒளித்து வைக்கப்பட்ட நிஜமுகம், தெரியத் தொடங்கியது. காமத்தை வெறிச்சிட்ட கண்கள். கோரைப் பல் நீண்ட வாய். விரலின் நீளத்துக்கு நீண்ட நகங்கள். ராதா, ஆட்டத்தை தன் ஜீவிக்கும் நியாயமாகக் கருதியவள். என்றாலும், அவள் நூற்றாண்டுப் 'பத்தினி' அல்லவா? புராண காலத்துப் பதிவிரதைகள் பட்டியலில் சேர வேண்டும் அல்லவா? இவள் 'பெய்' என்றால், மழை பெய்து காவிரி 'ரொம்ப' வேண்டும் அல்லவா? ஆகவே, கணவனைக் கைவிடாத அவள், கலையைக் கைவிட்டாள். கவனிக்கப்பட வேண்டியது, என்னவெனில், 'ஏண்டா நாயே . . . என்னைக் கல்யாணம் பண்ணும் முன்பும் நான் ஆடிக் கொண்டுதானே இருந்தேன் . . . அப்போ, இதைப் பற்றிப் பேசவில்லையே . . .? எனக்கு, என் கலையையும் விரும்புகிற புருஷன் கிடைப்பான். கிடைக்காமல் போனாலும் அக்கறை இல்லை. என் கலை எனக்கு உசத்தி . . . ' என்று சொல்லி இருக்க வேண்டும். ஏன் சொல்லவில்லை . . . நான் அவளிடம் கேட்டேன். தரையைப் பார்த்தாள். கொஞ்சம் கண்ணீர் சிந்தினாள். அப்புறம், 'என்ன இருந்தாலும் புருஷன் அல்லவா?' என்றாள். இந்தத் தேசத்தில்தான் தாலி கட்டிவிட்ட ஒரே தகுதியில், கழுதை குதிரை, மாடு, வெளவால், சிலந்தி, எலி எல்லாம் புருஷர்களாகி விடுகின்றன. கழுத்தை நீட்டிவிட்ட பாவத்துக்காகப் பெண்கள், 'பதுமை'களாகவே இருக்கிறார்கள். ராதா அறிவற்றவள் இல்லை . . . ஒரு அர்த்தத்தில். இன்னொரு அர்த்தத்தில் அவள் மூடம்தான். காதலின் முடிச்சு, மனசுக்குள் விழும்போதே, பரஸ்பரம் புரிதலில் அவள் ஆர்வம் காட்டி இருக்க வேண்டும். ராதா என்கிற ஸ்த்ரீ, காரசாரமாக வற்றல் குழம்பு வைக்கிறவள் மட்டுமல்ல . . . குழந்தைத் தொழிற்சாலை மட்டுமல்ல . . . எல்லாவற்றுக்கும் மேலாக, கலைஞர் சிருஷ்டிகரம் கொண்டவள். தன் சிருஷ்டிகரத்துக்கு, தன் ஆளுமைக்கு, தன் இயற்கைக்கு ஹானி ஏற்படாமல் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டியவள் அவள். அதை மையப்படுத்தியே அவள் தன் காதல் மாளிகையைக் கட்டி எழுப்பி இருக்க வேண்டும். அம்பாரியாகக் களத்து நெல் குவிந்து கிடைக்கையில், ராதா வீதி நெல்லை வேகவைத்துத் தின்றதுதான், அவள் பிரச்சினை. புரிதல் . . . பரஸ்பரம் புரிதலும், புரிந்து கொள்ளுதலுமே காதல். மிராசு, தண்ணீரிலும் தரையிலும் தாவுகிற தவளை. ராதா, மேலே பறக்க இறக்கைகள் கொண்ட வானம்பாடி. தவளையும் வானம்பாடியும், ஒரு மஞ்சள் கயிற்றிலான இணைய முடியும்?

என் அன்பான இளம் சிநேகிதர்களே,
பெரும்பாலான காதல், இருட்டைத் தேடுகிறது. தனிமையில், கடற்கரைத் தோணி மறைவில் வளர்கிறது. அல்லது சினிமாக் கொட்டகை இருட்டில் கைகோக்கிறது. உடல் ஸ்பரிசம் சந்தோஷம்தான் என்றாலும், காதல் மேல் படரும் நூலாம்படையை அது சுத்தம் செய்துவிடுமா, என்ன? காதலர்கள் தாங்கள் ஏற்படுத்திக் கொண்ட தனிமையில் நிறைய பேச வேண்டும். இதயம் வெளியே வந்து விழும் வரைக்கும் பேசவேண்டும். மேலை நாடுகளில், காதலர்கள் பேசவும் பழகவும் வாய்ப்பு அதிகம். அந்தத் தொடக்கத்தை அந்தச் சமூகம் அங்கீகரிக்கிறது. உண்மையில், இந்தியாவில் காதலிக்க, காதலருக்கு இடமில்லை. இது ஒரு பிரச்சினை. வீட்டுக்குள் அவர்கள் சந்தித்து உறவாடக்கூடாது. வீடுகளில் பூகம்பம் உருவாக இது போதும். ஆகவே, கள்ளம் தோன்ற காதலர்கள் மறைவிடத்தை நாடுகிறார்கள். தெருக்களில் உறவுக்கார ஜனம் பார்க்கும். கடற்கரையில் பொலீஸ்காரன் தொந்தரவு. கள்ளத்தால் விளையும் பழக்கம், வாழ்க்கைக்கு வெளிச்சம் தருவது இல்லை. காதலர்கள் பாவனை செய்வார்கள்தான். தன் இனிய பகுதியை மட்டுமே அடுத்தவருக்குக் காட்டுவார்கள். அழகிய வரவேற்பறை மட்டுமே வீடு ஆகாதே . . . குளியல் அறை, சமையல் அறை பின்கட்டு இந்த லட்சணங்களை மற்றவர் பார்க்க நாம் அனுமதிப்போமா, சட்டென்று? இந்த ஜாக்கிரதை உணர்வு காதலர்க்கு ஜாஸ்தியாகவே இருக்கும். தலை கலையாத முகம். இஸ்திரி கலையாத சட்டை. துடைத்துப் பவுடர் போட்டுப் பதப்படுத்திய முகம். அவர்கள் சொந்த முகத்தை முதுகில் வைத்திருப்பார்கள். தொடர்ந்து பேச்சு, தொடர்ந்த பழக்கம். அசல் முகத்தை வெளிக் கொண்டு வந்து விடும். கல்யாணம் ஆகாத ஆணையும் பெண்ணையும் பழக விடுவதாவது? ஏதாவது தப்புத் தண்டா நடந்து விட்டால்? எங்களைப் போன்ற மூத்த தலைமுறையின் தலையில் உள்ள கசடுகள் இவை. அழுக்கு மனம்தான், தன் பிள்ளைகளைப் பற்றி அழுக்காக நினைக்கும்.

சரி . . . எல்லாம் மீறி ஏதாவது நடந்துவிட்டால்? நடந்துவிட்டால் . . . இமயமலை இடம் மாறிவிடாது. இந்து மகாசமுத்திரம் வற்றிப் போகாது. பெண்கள், சம்பாதிக்க வெளியே போவதாவது என்று சொன்னவர்கள் போன இடம் எங்கே? பெண்கள் வேலைக்குப் போகிறார்கள்? என்ன கெட்டுப் போயிற்று? காதலை மனத்தளத்தில் வளர்க்க முடியாமைக்கு, முதல் குற்றவாளி சமூகம்தான். உலகம் எங்கும் குழந்தைகள், குழந்தைகளாகவே பிறக்கிறார்கள். இந்தியாவில் மட்டும்தான் குழந்தைகள், ஆண் குழந்தைகள் என்றும் பெண் குழந்தைகள் என்றும் தனித் தனியாகப் பிறக்கிறார்கள். வகுப்புகளில், பஸ்ஸில், கோயில்களில், ஆண்கள் இடம் வேறு . . . பெண்கள் இடம் வேறு. பத்து பன்னிரண்டு வயசுக்கு மேல் ஆண் பெண் குழந்தைகள் சேர்ந்து விளையாடக் கூடாது. பெண்ணையும் ஆணையும் பிரித்தே வளர்க்கிறோம். பெண் வயதுக்கு வந்ததுமே, நம் தாய்மார்கள், வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொள்கிறார்கள். அவள் மேல் அந்நிய ஆடவரின் மூச்சுக் காற்றும் பட்டுவிடாமல் பாதுகாக்கிறார்கள். பையன்களுக்குப் பெண்கள் கனவுகள். பெண்களுக்குப் பையன்கள் விபரீதங்கள். இயன்றவரை பையன்களும் பெண்களும் பிரிக்கப்பட்டே வளர்க்கப்படுவதால், ஒரு தீராத கவர்ச்சி இருபாலார்க்கும் கெட்டி தட்டிப் போகிறது. ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் இங்கு அரிதாக, சுலபத்தில் விழாத 'லாட்டரி டிக்கெட்டு'களாக இருக்கிறார்கள். அதனாலேயே, பரஸ்பரம் அவர்கள் ஆச்சரியங்களின் பொட்டலமாக இருக்கிறார்கள். பொட்டலத்தைப் பிரித்து பார்க்க யாருக்குத்தான் ஆசை இருக்காது? இந்தப் பிரித்துப் பார்த்தலே, இங்கு பெரும்பாலும் காதலாகிறது. திருமணத்துக்கு முன்பாகவே, இந்த நிகழ்ச்சி நடக்கும் சூழ்நிலை இங்கு நிலவுமாகில், பெரும்பாலான காதலர்கள், கல்யாணம் செய்து கொள்வதைத் தவிர்த்துவிடுவார்கள் என்பது கசப்பான ஓர் உண்மை. எனக்குத் தெரிந்த ஒரு பையன், பெண் கதையை நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். சிறுவன் பாலு, பெண் காயத்ரி. ஒன்பது, பத்து வகுப்பிலேயே அவர்கள் காதலிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். ப்ளஸ் ஒன் வகுப்புக்கு வருகிற போது காதல் உச்சம். எப்படி இவர்கள் காதல் ஜனித்தது? அவள் இவனைப் பார்த்து, 'கெமிஸ்ட்ரி நோட்ஸ் இருக்கா' என்றாளாம். இவன் கிளுகிளுத்துப் போனான். அவள் அவளைப் பார்த்து 'டைம் என்ன' என்றானாம். அவள் ஆடிப்போனாள். கெமிஸ்ட்ரி நோட்ஸையும் டைமையும் காதல் தூது என்று புரிந்து கொண்டார்கள் இருவரும். எதிர்ப்பாலோடு பேச மாட்டாமோ என்று அடக்கி வைக்கப்பட்ட, மறித்து வைக்கப்பட்ட ஆசை . . . அணையைப் பெயர்த்துக் கொண்டது. தெருமுனையில், கடைகளின் வாசல் நிழல்களில், வகுப்பறையின் உள்ளேயும் வெளியேயும் அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். கண் திருஷ்டியில் கர்ப்பம் தரிக்குமாம் ஒரு பறவை. காதல், கண்ணாலா கெட்டிப் படும்? இவர்கள் அப்படித்தான் நினைத்தார்கள். இதயம் வரைந்து, அதன் குறுக்காக அம்பு பாய்ச்சி, காதல் கடிதம் எழுதிக் கொண்டார்கள். ஒரு நாள், இந்த வீட்டுச் சிறையில் இருந்து தப்பிக் எண்ணி, வெளியேறினார்கள். வானத்தில் பறப்பதாக எண்ணி, ஒரு மூன்றாந்தர லாட்ஜில் அடைக்கலம் தேடினார்கள். போலீஸ், 'ரெய்டில்' அவர்களை வளைத்தது. அதிகம் சொல்வானேன் . . . அந்தப் பெண் குழந்தை கடித்துக் குதறப்பட்டது பலரால். கடைசியில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மும்பை சிவப்புவிளக்குப் பகுதியில் இருந்து அந்தப் பெண் மீட்டெடுக்கப்பட்டாள். அந்தப் பெண்ணின், பையனின் தவறு என்ன? இது சமூகம் செய்த தவறு. நம் மகனையோ, மகளையோ தேடி வரும் நண்பர்களை வரவேற்பு அறையில் அமர்த்தி பேசச் சொல்வோம். அவர்களுக்கு 'டீ' தந்து உபசரிப்போம். பெரும்பாலான தப்புகள் தவிர்க்கப்படும்தானே? இளைஞர்களும் யுவதிகளும் சந்தித்துப் பேசப் பேசத்தான் அவர்கள் மனிதர்கள் ஆகிறார்கள் என்பதை நாம் மறந்து விடுகிறோம். சரிதானே? பேசப் பேச மனசுக்குள் நட்பு வளரும், கவர்ச்சி போகும், மரியாதை கூடும். அப்புறமும் அவர்கள் ஓடுவார்களா என்ன? அப்புறமும் ஒடுபவர்களை எவர்தான் தடுத்து நிறுத்த முடியும்? சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்?

அன்பான விவேக், வைணவி,
மனம் நிறைய மண்டிய அழுக்கு கொண்ட ஒரு சமுதாயம், அழுக்கற்ற மனிதர்களை எங்கனம் உற்பத்தி செய்ய முடியும்? வளர்ந்தவர்கள் அழுக்காக இருக்கிற சமுதாயத்தில், வளர்கிறவர்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்க முடியும்? விடலைத் தனத்தை, பால் கவர்ச்சியைக் காதல் என்று நம்புகிற அசட்டுத்தனம், தனியாக நேர்ந்துள்ள துரதிருஷ்டம் அல்ல! ஓட்டுமொத்த சமுதாயக் குறைகளில் ஒன்றாகத்தான் இதையும் நாம் காணவேண்டும். நமது தமிழ் சினிமாவில் பத்தாம் வகுப்பு படிக்கிற குழந்தைகள் காதலிப்பதாகக் காட்டுவது எதை உணர்த்துகிறது? விபசாரம் செய்ய நேர்ந்து பிடிபட்ட பெண்களை நம் பத்திரிகைகள் 'அழகி' என்று சொல்வதன் தத்துவார்த்தம் என்ன? கழிப்பறையில் கரிக்கட்டி கொண்டு எழுதப்படும் 'வக்கிர' வடிவங்களைத் தூண்டும் அரக்கன் யார்? கல்லூரி அல்லது அலுவலகப் பெண்களை கேலி செய்கிற அசிங்கம் எங்கே பிறந்தது? இப்படி எத்தனையோ கேடுகளில் ஒன்றாகத்தான் காதலைக் காதல் என்று புரிந்து கொள்ளும் போக்கும். பெண்-ஆண் உறவை ஆரோக்கியமாகப் பார்க்காத சமூகத்தில், காதல் மட்டும் கறைபடியாது எங்கனம் இருக்கும்? ஆகவே, கணவன் மனைவியாக ஆன பிறகும்கூட நீங்கள் காதலர்களாகவே இருக்க வேண்டும் என்பதே என் அவா. ஏனெனில், இங்கே தாலியோடு காதல் வைதவ்யம் பெற்று விடுகிறது என்பது சோகம். நிறைய பேசிப் பேசி, அப்புறம் மௌனமாகவும் நீங்கள் உரையாடிக் கொள்ள வேண்டும். பெண்ணை மரியாதை செய்க. ஆணையும் மரியாதை செய்க. வாழ்ந்து காதலை வாழவையுங்கள். காதல் வாழ்ந்தால் மட்டுமே இல்லறம் சிறக்கும்.

வாழ்த்துக்கள்.
பிரபஞ்சன்.

நன்றி:
ஆனந்தவிகடன் 01-08-99