Tuesday, March 31, 2009

காதலும் கத்தரிக்காயும்

நண்பனொருவன் தான் காதலிப்பதாகவும் அதைத் தன் காதலியிடம் கவிதை வடிவில் தெரிவிக்க விரும்புவதாகவும் எப்படி கவிதை எழுதுவதென்றும் கேட்டு நடுநிசியை அண்டும் நேரத்தில் தொ(ல்)லைபேசினான்.

அப்போது நான் இருந்த மனநிலையில், “ஆடான ஆடெல்லாம் தவிடுபுண்ணாக்கெண்டு அலையுதாம். வாத்தியார் வீட்டு நொண்டி ஆடு மட்டும்... இப்ப உனக்கெதுக்கு இந்த காதலும் கத்தரிக்காயும்?” என்றேன்.

நண்பனுக்கு விளங்கிவிட்டது நான் வெறியில் (அட நிஜமாலுமே நித்திரை வெறிங்க) இருப்பது. எனக்கு மின்மடலில் விளக்கமாய் அனுப்பவதாய்க்கூறி அழைப்பினைத் துண்டித்தான்.

பொதுவாகவே காதல் என்றவுடன் இந்தக் கத்தரிக்காயும் அதனுடன் சேர்ந்து விடுகிறதே. அப்படியானால் காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன சம்பந்தம்?

இது என்ன முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போடுவது போன்றதா அல்லது அமவாசைக்கும் அப்தல்காதருக்கமான உறவு போன்றதா?

எனக்குத் தெரிந்த வரையில் பெண்கள் பருவமடைந்ததும் பச்சரிசிச் சோறும், வெள்ளைக் கத்தரிக்காய்ப் பாற்கறியும், நல்லெண்ணெய்யும், உழுத்தங்களியும் அவர்களுக்கான பிரதான உணவாக மாறி விடுகின்றது. அதைவிடுத்து கத்தரிக்காய்க்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?

கத்தரிக்காய் பிராணசக்தியைக் குறைக்கும் என்று சில யோகாவில் சொல்லப்படுகிறது. பாக்கியராஜ்-இன் படத்தில் சொல்லப்படும் சம்பந்தம் அறிவுபூர்வமாக தவறென்று மருத்துவ நண்பன் ஒருவன் கூறினான்.

அப்படியானால் எதற்காக காதலுடன் இந்தக் கத்தரிக்காயைச் சம்பந்தப் படுத்துகிறோம். தெரிந்தவர்கள் கூறலாமே.

Saturday, March 21, 2009

நன்றி கூறினால் பதிலுக்கு என்ன சொல்வது?

ஆங்கில மொழியினில் “Thank you” என்று ஒருவர் நாம் செய்த உதவிக்கு தனது நன்றியை கூறினால், அதை ஏற்றுக் கொள்ளும் முகமாக பதிலுக்கு நாம் “you are welcome” என்று சொல்கிறோம். ஆனால் தமிழில் “நன்றி” என்று கூறினால் பதிலுக்கு என்ன கூறுவது?
“நீங்கள் வரவேற்கப் படுகிறீர்கள்” என்று சொல்வது சரியாகுமா?

கடந்த வாரம் கனடாவில் வசிக்கும் உறவினர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினேன். அந்த அழைப்பிற்கு பதிலளித்தவர் ஒரு இளைஞர். அவர் கொழும்பில் பிறந்து வளர்ந்ததுடன் சர்வதேசபாடசாலை (international school) ஒன்றினில் தனது கல்வியை மேற்கொண்டு பின் பட்டப்படிப்பிற்காக வெளிநாடு சென்றவர். தனது விடுமுறையினைக் கழிப்பதற்காக கனடா சென்றிருந்தார். அவருக்கு பெரிதாய் தமிழ் தெரிந்திருக்காது என்கின்ற எண்ணத்தில் ஆங்கிலம் அதிகமாகக் கலந்து உரையாடினேன்.

என்ன ஆச்சரியம்! அவர் தூய தமிழில் என்னுடன் உரையாடினார். ஒரு ஆங்கில வார்த்தையைக் கூட அவர் பிரயோகிக்கவில்லை. சாதாரணமாக எங்கள் பேச்சு வழக்கில் கலந்த விட்ட “sure”, “thanks” போன்ற வார்த்தைகட்குகூட அவர் “நிச்சயம்”,“நன்றி” போன்ற வார்த்தைகளையே பிரயோகித்து எனக்கு அதிர்ச்சியளித்தார்.
இத்தனைக்கும் அதுதான் அவருடனான எனது முதல் உரையாடல்.

இந்த உரையாடலுக்கு முதல்நாள் மாலை நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்த போது ஒரு நண்பர் கூறினார், நாளையிலிருந்து தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு (பங்குனி 14 முதல் பங்குனி 18 வரை), செண்பக விநாயகர் ஆலயத்தில் கம்பன் கழகத்தைச் சேர்ந்த கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களின் கம்பராமாயண சொற்பொழிவு நடைபெற இருப்பதாக. (“நாடு கெட்ட கேட்டுக்கு நரிக்கு உழுந்து வடை கேட்டிச்சாம்.”).

தொடர்ந்த உரையாடலில், ஜெயராஜ் அவர்களால் “வாராதே வரவல்லாய்” என்கின்ற புலம்பெயர்ந்த தமிழர்களைக் கேவலப் படுத்தி, அவர்களை மீண்டும் தாயகத்திற்கு வரவேண்டாம் என்று வலியுறுத்தி சமாதான காலத்தில் எழுதப்பட்ட கட்டுரையும், அதற்குப் பதிலளிக்கும் முகமாக பிரான்ஸில் இருந்து கி.பி.அரவிந்தன் அவர்களால் எழுதப்பட்ட “ஒரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்” என்கின்ற கட்டுரையும் அலசப்பட்டன.

ஜெயராஜ் அவர்களினால் முன்வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று புலம் பெயர்ந்த தமிழர்களால் தமிழ்மொழி புறக்கணி்க்கப்படுகின்றது என்பதாகும். எனக்குத் தெரிந்த வரையில் இதுவரையில் யாரும் என்னுடன் நான் மேலே குறிப்பிட்ட நபரைப் போன்று தூய தமிழில் உரையாடியதில்லை. அப்படி வேறுயாரும் உரையாடியும் நான் பார்த்ததில்லை. எனவே கம்பராமாயணத்துடன் சேர்த்து ஜெயராஜ் அவர்களின் இந்த் கருத்துடனும் என்னால் உடன்பட முடியவில்லை.

கம்பன் அபரபிரம்மன் என்பதிலோ அல்லது கம்பனின் தமிழ்ப் புலமையிலோ எனக்கு மாற்றுக்கருத்துக் கிடையாது. ஆனால் வான்மீகியின் இராமாயணத்தையே தான் தமிழில் மொழிபெயர்ப்பதாகக் கூறி கம்பன் செய்த வம்(ப்)புகளை, கம்பனின் பக்கச் சார்பான தன்மைகளைப் பற்றி (கம்பராமாயணத்தை உண்மையென்று எண்ணி அதையே வரலாறாக நினைப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது) எழுதுவதென்றால் அது இன்னுமொரு இதிகாசத் தொடராக மாறிவிடக் கூடும். அது இந்தப் பதிவின் நோக்கமும் அல்ல.

சரி, “நன்றி” என்று ஒருவர் கூறினால் அதை ஏற்றுக்கொள்ளும் முகமாக பதிலுக்கு தமிழில் என்ன கூறுவது?
அந்த நபருடனான உரையாடலில் நான் “நன்றி” கூறியபோது பதிலுக்கு அவர் “நல்லது” என்று கூறினார்.

இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாமே.....

Saturday, March 14, 2009

வாழ நினைத்தால் வாழலாம்

“எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது? ” என்று சாதாரண விடயங்களுக்கெல்லாம் அலுத்துக் கொள்ளுபவர்களா நீங்கள்?

வாழ்வே மாயம், எல்லாமே துன்பமயம் என்று சலித்துக் கொள்ளுகிறீர்களா?

எதிர்காலத்தை எண்ணி பயங்கொள்கிறீர்களா?

உங்களின் இந்த மனப்பாங்கிற்கு 100% நீங்களே காரணம். உங்கள் சமூகம் உங்கள் மீது திணித்துள்ள தேவையற்ற வரட்டுக் கருத்துக்களை அடையாளம் கண்டுணராமல் அவற்றிற்கு நீங்கள் அடிமையாகிப் போனதே நீங்கள் செய்த, செய்கிற தவறாகும். தவறுகள் திருத்தப்பட வேண்டியவையே.

இந்த அசைபடத்தினை நீங்கள் அனைவரும் கட்டாயம் ஒருதடவையேனும் பார்வையிட வேண்டும் என உங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்

அதன்பின் சிந்தியுங்கள், உங்கள் பயங்கள், சலிப்புகள், வெறுப்புகள் எல்லாமே நியாயமானதா என்று.

அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ?

Twinkle twinkle little star

Wednesday, March 11, 2009

அமிழ்தான தமிழ்

தமிழ் தாய்க்கு தலை சாய்த்து.....

அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே...