Tuesday, April 26, 2011

வேரென நீயிருந்தாய்...(28)

அது 2000ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டு. மூன்றாம் வருட நிறைவின் பின்னான தொழில்சார் பயிற்சிநெறி (Industrial Training) எங்களுக்கு ஆரம்பித்து விட்டிருந்தது. நானும் தீபனும் கொழும்பில் அரச பொறியியற் கூட்டுத்தாபனத்தில் எங்களுக்கான தொழில்சார் பயிற்சியினை மேற்கொண்டிருந்தோம். இப்போதும் இருவரும் ஒன்றாகவே ஒரே அறையில் தெஹிவளையில் தங்கியிருந்தோம். வார விடுமுறை நாட்களில் மதிய உணவிற்காக றொலெக்ஸ் அல்லது மயூரி-க்குச் செல்வது எங்களது வாடிக்கையாகிப் போனது.

“ஜேன் டேய்! அப்பிடியே சும்மா திரும்பிற மாதிரி பின்னால திரும்படா. உடனே திரும்பாத. மெதுவா”

வாயில் வைக்கக் கொண்டுபோன சிக்கன் லெக்பீஸை வைத்துவிட்டுத் திரும்ப,

“விடு மச்சான். miss-ஆகிற்றுது”

என்னடா நீ? திரும்பச் சொல்லுற. பிறகு miss-ஆகிற்றுது எண்டுற. என்ன நடக்குது?

“இல்லையடா! ஒரு சரக்கொண்டு உனக்கு எறிஞ்சு கொண்டிருந்தது. அதுதான் உனக்குத் தெரிஞ்ச ஆளா எண்டு பார்க்கத்தான். ப்ச்! அதுக்குள்ள அவள் நழுவீற்றாள்”

“நீ என்ன லூசாடா? எப்பப் பார் சரக்குகளின்ர கதைதான்”

“இல்ல மச்சான்! உண்மையிலயே நீ மச்சக்காரன் தான்ரா. அங்க 'பெரா'வில அவள் விடுறாளில்ல. இஞ்ச கொழும்புக்கு வந்து ரெண்டு மாசம்கூட ஆகேல்ல. அதுக்குள்ள இன்னொண்டு. குடுத்து வச்சனியடா”

“அம்மாண! பேய்ப்.. உனக்கு வேறைவேலையில்ல. சும்மா கதை கட்டிக்கொண்டு திரி.”

“இஞ்ச வா! நான் என்ன சும்மாவா கதை கட்டுறன். உள்ளதைத் தானே சொல்லுறன். சத்தியமாடா. நான் நாலைஞ்சு தரம் நோட் பண்ணீற்றன். நாங்க சாப்பிட வாற நேரத்தில இவளும் வந்து உனக்கு எறிஞ்சு கொண்டிருக்கிறாள். நம்பாட்டி நாளைக்கு நீ வந்து இந்தப் பக்கமா இருந்து சாப்பிடு. அப்ப தெரியும் அவள் ஆரப் பார்க்க வாறாள் எண்டு.”

“வேறை வேலையில்ல. ஆரு கண்டது? அவள் உன்னைப் பார்க்கத்தான் வாறாளோ?”

“பேய்ப்... சொன்னா நம்படாப்பா. இப்பிடித்தான் அவள் நதீஷாவையும் சொல்லேக்க நீ நம்பேல்லத்தானே.”

“இஞ்ச வா! இப்ப என்ன கதைக்கிறாய் நீ?”

“முதல் நான் சொல்லேக்க நீ அவள் சும்மா friendly-யாத் தானே பழகிறாள் எண்டு சொன்னீ.”

“ஓ! இப்பையும் அவள் friendly-யாத்தானே பழகிறாள். அவள் என்ன, என்னை லவ் பண்ணுறன் எண்டா சொன்னவள்?”

“அப்ப ஏன் நீ அவளை காய்வெட்ட ஐடியா கேட்டனீ?”

“எனக்கு அவள் கூட close ஆப் பழகிறது uncomfortable-ஆ இருந்துது. அதாலதான் கேட்டன்.”

“அடிச்சுச் சொல்லுறன். இருந்துபார்! கம்பஸ் முடியிறதுக்குள்ள உன்னட்ட வந்து அவள் propose பண்ணுவாள்.”

“எங்க பார்ப்பம். நான் சொல்லுறன் அப்பிடியெல்லாம் ஒண்டும் நடக்காது.”

“எனக்கு மட்டும் என்ன, அப்பிடி நடக்க வேணுமெண்டா விருப்பம்? ஆனா உன்ர குடும்ப நிலை தெரியும்தானே. அதால எதுக்கும் நீ alert-ஆ இருக்கிறது நல்லது.”

றொலெக்ஸை விட்டுக் கிளம்பி அறைக்கு வந்து சேர்ந்த பின்னும் தீபனின் வார்த்தைகள் மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.

*** *** ***

“நான் serious-ஆத் தான் கேட்கிற. உங்கட life style-ஐப் பற்றிச் சொல்லுங்க”

“அது ஏன் உங்களுக்கு?”

“சும்மா ஒரு GK-க்குத்தான். இப்பொல்லாம் சிங்கள ஆக்களுக்குள்ள arranged marriage நடக்கிறது நல்லாக் குறைஞ்சு போச்சு.”

“தமிழ் ஆக்கள் அப்பிடியில்ல. அனேகமா எல்லாமே arranged marriage தான்”

“அப்ப நீங்களும் arranged marriage தானா?”

“ஏன் கேட்கிறீங்க?”

“கேட்ட கேள்விக்கு answer பண்ணுங்களன் please"

"கல்யாணத்தைப் பற்றியெல்லாம் நான் ஒண்டும் யோசிக்கேல்லை. அப்பிடி நடந்தாலும் அது arranged marriage -ஆத்தான் இருக்கும்.”

“ம்ம்ம்....ஒயாத் typical தெமிழ கட்டி தமாய்” (நீங்களும் typical தமிழ் ஆள் தான்).

”ஏன் அப்பிடிச் சொல்லுறீங்க?”

“தமிழ் girls சொல்லுறவை, dowry வாங்கிறதுக்காகத்தான் தமிழ் ஆக்கள் love marriage பண்ணாம arranged marriage பண்ணுறவை எண்டு. நான் நினைச்சன் நீங்க different-ஆ இருப்பீங்க எண்டு. ஆனா இப்ப விளங்குது நீங்களும் dowry வாங்கிறதுக்காகத்தானே லவ் பண்ணாம இருக்கிறீங்க?”

“ஹலோ மேடம்! arranged marriage-இலயும் சீதனம் வாங்காமக் கட்டலாம்.”

“அப்ப நீங்க சீதனம் வாங்க மாட்டீங்களா?”

கடவுளே! இவளை என்ன செய்யுறது? சுத்திச்சுத்தி அங்கதான் வரப்போறாளோ? மனது வெறுத்தது.

“ஏன் கேட்கிறீங்க,? எனக்கு என்னத்துக்கு சீதனம் தேவை?”

“வாங்குவீங்களா? மாட்டீங்களா?”

“அதையேன் உங்களுக்கு?”

“இல்லை. சீதனம் வாங்குவீங்களெண்டால் உங்களுக்கு நானே ஒரு கல்யாணத்தை arrange பண்ணி broker காசு வாங்கலாம் எண்டுதான்”

“உங்களுக்கென்ன நட்டுக் கழண்டிட்டுதா?” எழுந்த கடுப்பை அடக்கமுடியவில்லை.”

சிரித்தாள்.

“சும்மா joke-க்குத்தான். ஏன் serious-ஆ எடுக்கிறீங்க?”

“உங்களுக்கு வேணுமெண்டா எல்லாம் joke-ஆ இருக்கலாம்.”

“ஏன் திரும்பவும் ரென்சனாகிறீங்க? நீங்க சிரிச்சா எவ்வளவு வடிவா இருக்கிறீங்க தெரியுமா?”

“நாடு கெட்ட கேட்டுக்கு நரிக்கு உழுந்துவடை கேட்டிச்சாம்.”

“உங்களுக்கு உண்மையா என்ன பிரச்சனை? ஏன் எப்பவுமே உம்மெண்டு கொண்டு இருக்கிறீங்க? எப்பிடிச் சிரிக்கிதெண்டு உங்கட அம்மா சொல்லித்தரேல்லையா?”

“mind your words. இப்ப எதுக்குத் தேவையில்லாம இதுக்குள்ள என்ரை அம்மாவை இழுக்கிறீங்க?”

எழுந்த கோபத்தை அடக்க முடியாமல் வெளிக்காட்டினேன்

“Sorry sorry! நான் சும்மா joke-ஆத் தான் கேட்டனான். please cool down. I'm really sorry Jeyanthan. உங்களைச் சிரிக்க செய்யுறதுக்காகத்தான் நான் அப்பிடிக் கேட்டது. please Jeyanthan, please forgive me"

அவள் கெஞ்சுவதைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. அவள் முகத்தில் சோகம் கவிந்து கொண்டது அப்பட்டமாய்த் தெரிந்தது.

“உங்களுக்கு எங்கட அம்மாவைப் பற்றித் தெரியாது. அதாலதான் இப்பிடிக் கதைக்கிறீங்கள்”

அமைதியாயிருந்தாள்.

“எங்கட தமிழ்ப் பெம்பிளைகளுக்கு தாலி எவ்வளவு முக்கியமெண்டு உங்களுக்குத் தெரியுமா? புருஷன் செத்து தாலி இழந்த விதவைகளாயிருக்கிறவையின்ர நிலைமை தெரியுமா? அதைவிடக் கொடுமை தாலியை வைச்சுக்கொண்டு அதைப் போடுறதா விடுறதா எண்டு தவிக்கிறது. உங்கட ஆமிக்காரர் பிடிச்சுக்கொண்டு போன அப்பா உயிரோட இருக்கிறேரா இல்லையா எண்டு தெரியாம, தாலியைக் கழட்டுறதா போட்டுக் கொண்டிருக்கிறதா எண்டுற குழப்பம். குங்குமப் பொட்டு வைக்கிறதா விடுறதா எண்டுற சிக்கல். அதுக்குள்ள ஊர்ச்சனத்தின்ர நக்கல் ஒரு பக்கம். குங்குமம் வைச்சுக் கொண்டு போனா, அவர் உயிரோடை இருக்கிறேர் எண்டு ஆரும் சொன்னவையோ, ஆமிக்காரர் பிடிச்சுக்கொண்டு போன எல்லாரையும் சாக்காட்டிப் போட்டாங்கள். அந்த மனிசனுக்குச் செய்ய வேண்டிய கிரியைகளையாவது செய்யுங்களன் எண்டுறவையும். குங்குமம் வைக்காமப் போனா, ஆமிக்காரர் பிடிச்சுக் கொண்டு போன ஆக்களில கனபேரை இன்னும் கொழும்பில அறிவிக்காம வைச்சிருக்கிறாங்களாம். பிறகேன் நீங்க இப்பிடித் திரியுறீங்க எண்டுறவையும். இதெல்லாம் சொல்லி விளங்காது. ஆள் செத்திற்றுது எண்டு தெரிஞ்சா கொஞ்ச நாளைக்கு அழுது போட்டு மனசைத் தேற்றிக் கொள்ளலாம். ஆனா எங்கட நிலைமை? இப்பவும், காணாமப் போன அப்பாவை தேடித்தரச்சொல்லி அம்மா அலைஞ்சு கொண்டுதான் இருக்கிறா. அதெல்லாம் அனுபவிச்சாத்தான் அந்த வலி விளங்கும்.”

இதுவரைகாலமும் அடக்கிவைத்திருந்த ஆத்திரத்தில் மனம் குமுறி அடங்கியது.

நதீஷா வெலவெலத்துப் போயிருந்தாள்.


No comments:

Post a Comment