Friday, May 25, 2018

கனடாவில் அடுத்த தலைமுறைத் தமிழரும் தமிழும்



வந்தாரை வாழவைத்தல் தமிழரின் மரபாகும். அந்தத் தமிழரே ஏதிலிகளாக, அகதிகளாக அலைந்து திரிந்த போதினில், அவர்களைத் தன்மண்ணில் குடியேற அனுமதித்து வாழவைத்துக் கொண்டிருக்கும் கனடாவில், எமது அடுத்த சந்ததியினரிடம் தமிழ்மொழி நிலைக்குமா என்பது மிகவும் சந்தேகத்திற்குரிய ஒன்றாக இருக்கின்றது. பல்கலாச்சாரங்கள் கொண்டவர்களைத் தன்னகத்தே கொண்டுள்ள கனடாவானது, இங்கே வாழ்பவர்களை அவர்களது கலாச்சாரங்களுடன் ஏற்றுக் கொண்டிருப்பதையும், பல்கலாச்சாரங்களைப் பேணி ஊக்குவிப்பதையும் பார்க்கையில், அதிலும் தை மாதத்தினை தமிழர் மரபுடைமைத் திங்களாக அங்கீகரித்திருப்பதையும் நோக்குகையில், தமிழ்மொழியினைக் கனடாவில் வாழும்மொழியாக நிலைபெறச்செய்வதற்காக, எமது அடுத்த சந்ததியினரிடம் உரிய முறையில் தமிழ்மொழியைக் கையளிப்பது இன்றைய சந்ததியினரின் கைகளில்தான் உள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியெனத் தெளிவாகத் தெரிகிறது. ஆயினும் அதற்கான போதிய தயார்ப்படுத்தல்கள் எம்மிடம் இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. இனிமேலும் அவ்வாறான தயார்ப்படுத்தல்களை நாம் செய்யாது விடுவோமேயானால் எமது அடுத்த தலைமுறையைத்தாண்டித் தமிழ்மொழி வாழாது போகலாம்.

'ஒரு மனிதன் உண்மையில் இறந்துபோவது அவன் பற்றிய நினைவுகளை மக்கள் முற்றாக மறந்து போகையில் தான்'

இக்கூற்று மனிதனுக்கு மட்டுமல்ல, அவன் பேசும் மொழிக்கும் பொருத்தமாகவே அமைந்திருக்கிறது. எனவே தமிழ்மொழி கனடாவில் மறக்கப்படாமல் தொடர்ந்தும் உயிர்ப்புடன் வாழ்வதற்கு தமிழ்மொழியின் தொன்மையையும், அதன் சிறப்பையும், அதைக் கற்பதனால் உண்டாகும் நன்மைகளையும், தமிழின் முக்கியத்துவத்தையும் எம் இளந்தலைமுறையினர் ஏற்றுக்கொள்ளும் வகையில் எடுத்துரைத்தல் வேண்டும்.

தமிழ்மொழி உலகின் மிகப்பழமையான மொழிகளில் ஒன்று. உலகின் அங்கீகரிக்கப்பட்ட செம்மொழிகளில், வாழும்மொழிகளில் ஒன்றாக விளங்குவது அதன் சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றது. இதனையிட்டுத் தமிழராகப் பிறந்ததில் எம் அடுத்த சந்ததி பெருமைப்படவேண்டும் என்பதை அவர்களுக்கு உணர்த்துதல் வேண்டும்.

ஒரு இனத்தின் தொன்மையை, அதன் வரலாற்றை நாம் அறிந்துகொள்வதற்கு மூலாதாரமாக விளங்குபவை அம்மொழியில் உருவாக்கப்பட்டிருக்கும் இலக்கியங்களாகும். 'இலக்கியம் காலத்தைக்காட்டும் கண்ணாடி' என்பார்கள். அந்த வகையில் தமிழின் தொன்மைக்கு சான்றாக இன்று எம்மிடம் இருப்பவை தொல்காப்பியம் என்னும் இலக்கணநூலும், சங்க இலக்கியங்களாகிய தொகை நூல்கள் எட்டும், பத்துத் தனிப்பெரும் பாடல்களான பத்துப்பாட்டும் ஆகும். இவை தவிரவும் தொன்மைக் கதைகளாகவும், குறிப்புக்களாகவும், கர்ணபரப்புரைக் கதைகளாகவும், தொல்காப்பியத்திலும் காலப்பழமை வாய்ந்ததான அகத்தியம் என்னும் இலக்கணநூல்பற்றியும் மற்றும் முதற்சங்க, இடைச்சங்க காலங்களில் பற்பல நூல்கள் இருந்தன என்பதுபற்றியும் அறியக் கிடைத்தாலும் அவை இப்போது எம்மிடையே இல்லாததால் அவற்றைத் தமிழின் தொன்மைக்கு விஞ்ஞானரீதியிலான ஆதாரமாகக் கொள்ள முடியாது.

ஆயினும் தொல்காப்பியர், தொல்காப்பியத்தின் பல இடங்களிலும், 'என்ப', 'என்மனார் புலவர்', 'மொழிப' போன்ற பதங்களின் ஊடாக தனக்கு முற்பட்ட அறிஞர்களைப் பெயர் சுட்டாமற் குறிப்பிட்டிருப்பதால், தொல்காப்பியத்திற்கு முன்னரேயே பல இலக்கணநூல்கள் இருந்திருக்கின்றன என்பதனை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் வகுத்தலே முறை. எனவே தொல்காப்பியத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே தமிழிலக்கியங்கள் தோன்றியிருக்கவேண்டும் என்பதும் அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதே. அதுமட்டுமன்றி உலகப் பொதுமறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள திருக்குறளைத் தந்ததும் தமிழ்மொழியே. எனவே, எமது அடுத்த தலைமுறைக்கு தமிழின் தொன்மையையும் அதன் பெருமையையும் எடுத்துக்கூற வேண்டியது இன்றைய தலைமுறையினரான எமது தலையாய கடமையாகும். அதை எமது பிள்ளைகள் ஏற்றுக்கொள்ளத்தக்க முறையில் கூறவேண்டியது மிகமிக இன்றியமையாததாகும்.

பொதுவாக எல்லோருக்குமே இலக்கணத்தைக் கற்பதிலும் பார்க்க இலக்கியத்தைச் சுவைப்பதில் மிக்க ஆர்வம் இருப்பது இயல்பு. எனவே எம்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் இலக்கியச் செழுமையையும், கற்பனை வளங்களைம் நுகர்வதற்கு இளைய தலைமுறையினரை வழிப்படுத்துதல் வேண்டும். அதற்கு, தெரிந்தெடுக்கப்பட்ட இக்கால இலக்கியங்களில் தொடங்கிப் படிப்படியாக இலகுவான சங்ககால இலக்கியப் பாடல்கள் வரை அவர்களைச் சுவைக்க வைக்க வேண்டும். அப்படிச் செய்வோமேயானால் அதன்பின் அவர்களாகவே தமிழிலுள்ள எல்லா இலக்கியங்களைத் தேடி வாசிக்கத் தொடங்கிவிடுவார்கள். அப்படியான ஒருநிலையை அவர்கள் அடைந்தால் தமிழ் மொழியின் தொன்மையையும் அது கொண்டுள்ள இலக்கியச் செழுமைகளையும் அக்காலங்களில் வாழ்ந்த தமிழரின் பண்பாட்டு விழுமியங்களையும் நாகரிகச்சிறப்புகளையும், காதல், வீரம் கொடை போன்றவற்றில் எல்லாம் தமிழர்கள் பெற்றிருந்த சிறப்பினையும் உணர்ந்துவிடுவார்கள். அப்படி உணரும்பட்சத்தில், தாம் தமிழர் என்பதிலும், தமது தாய்மொழி தமிழ் என்பதில் நிச்சயம் பெருமிதம் கொள்வார்கள். எதனை நாங்கள் உயர்வாக பெருமையாக நினைக்கின்றோமோ அதனை இயல்பாகவே நாம் மதிக்கத் தொடங்கிவிடுவதுடன் எமது பிள்ளைகளுக்கும் அதனை வழங்க முயற்சிப்போம். அந்த வகையில், தாங்கள் தமிழராய்ப் பிறந்ததில் பெருமையையும் தமிழ்மொழியின் உயர்வினையும் உணர்ந்து கொண்ட இளையவர்கள் தாமாகவே தமிழ்மொழியை அவர்களுக்கு அடுத்துவரும் தலைமுறைக்கு கடத்தும் பணியினை செம்மையாகச் செய்வார்கள்.

'சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்'

என்று கூறிய வள்ளுவப் பெருந்தகையே,

'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்'

என்றும் சொல்லியிருக்கிறார். எனவே எம் இளம் சந்ததியினர் தமிழ்மொழியினை விரும்பிக் கற்பதற்கு, முதற்படியாக நாம் ஒவ்வொருவரும் எங்கள் எங்கள் வீடுகளிலிருந்தே அதனை ஆரம்பிக்க வேண்டும். வீடுகளில் எம் குழந்தைகளுடன் தமிழ்மொழியில் மட்டுமே உரையாடுதல் வேண்டும். இதற்கு தளராத மனவுறுதி மிகவும் இன்றியமையாததாகும்.

சிறுவயதுப் பிள்ளைகள் கைக்கணினிகளில் அதிக நேரத்தைச் செலவு செய்ய அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதிப்பது அவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். எங்களை எமது பிள்ளைகள் தொந்தரவு செய்யாமலிருப்பதற்காகவே நாங்கள் எம் பிள்ளைகளைக் கைக்கணினிகளில் அதிகநேரம் செலுவிடுவதை எமது வசதிக்காக அனுமதித்து விடுகிறோம். அது தவறு என்பதை நாம் உணர்ந்து கொண்டால், பிள்ளைகளுடன் எங்கள் நேரத்தை அதிகம் செலவிடுவோம். அப்போது எமது பிள்ளைகளுடன் தமிழறிவை வளர்க்கும் விளையாட்டுக்களை விளையாடலாம்.

எடுத்துக்காட்டாக விடுகதைகள் கேட்டல் (நொடி அவிழ்த்தல்), புதிர்க்கதைகள் கூறுதல் என்பவற்றைக் கூறலாம். அல்லது எங்கள் சிறுவயதுகளில் நாங்கள் விளையாடிய விளையாட்டுகளில் ஒன்றான, ஒரு எழுத்தைக் கூறி அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர், பொருள், இடம், படம் என்பவற்றை குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுதவேண்டும் என்று கூறலாம். இதன் மூலம் பிள்ளைகள் விரைவாகத் தமிழில் எழுதத் தேர்ச்சி பெறுவதுடன் அதிகளவிலான தமிழ்ச்சொற்களையும் அறிந்து கொள்வார்கள். அண்மையில் கனடாவில் உள்ள தமிழ் வானொலியொன்றிலும் இவ்வாறான நேயர் போட்டியொன்றைக் கேட்க நேர்ந்தது. ஆயினும் தொலைபேசியூடான அந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஒருவர்கூட இளைய தலைமுறையைச் சார்ந்தவர் இல்லை என்பது மனவருத்தத்தைத் தந்தது. சிறு பிள்ளைகளுக்கு ஆர்வமூட்டும் சில விளையாட்டான தமிழ்ப்பாடல்களைச் சொல்லிக் கொடுக்கலாம்.

'அக்கா வீட்ட போனேன். 
அரிசிப்பொதி தந்தா. 

வேண்டாமெண்டு வந்தேன். 
வழியெல்லாம் பாம்பு. 

பாம்படிக்கத் தடிக்குப் போனேன். 
தடியெல்லாம் தேன். 

தேன் எடுக்க சட்டிக்குப் போனேன். 
சட்டியெல்லாம் ஊத்தை. 

ஊத்தை கழுவத் தண்ணிக்குப் போனேன். 
தண்ணியெல்லாம் மீன். 

மீன் பிடிக்க வலைக்குப் போனேன். 
வலையெல்லாம் ஓட்டை. 

ஓட்டை தைக்க ஊசிக்குப் போனேன். 
ஊசியெல்லாம் வெள்ளி. 

வெள்ளியடி வெள்ளி. 
உன்ரை கையில கிள்ளி'

என்று சொல்லி இறுதியில் பிள்ளையின் கையில் மெதுவாகக் கிள்ளினால் அப்பிள்ளை ஆர்வமுடன் தானும் இதைத் தனது நண்பர்களுடன் விளையாட ஆரம்பிக்கும்.

'என்ன வேணும்?' 
'பழம் வேணும்.
'என்ன பழம்?' 
'வாழைப்பழம்.
'என்ன வாழை?' 
'கப்பல் வாழை.
'என்ன கப்பல்?' 
'பாய்க்கப்பல்.
'என்ன பாய்?' 
'ஓலைப்பாய்.
'என்ன ஓலை?' 
'பனையோலை.
'என்ன பனை?' 
'கட்டைப் பனை.
'என்ன கட்டை?' 
'மரக்கட்டை.
'என்ன மரம்?' 
'பூமரம்
'என்ன பூ?' 
'மல்லிகைப் பூ
'என்ன மல்லிகை?' '
கொடி மல்லிகை
'என்ன கொடி?'

என்றவாறு கேட்டுக்கொண்டே போகலாம். விரும்பினால் 'என்ன கொடி?' என்று கேட்கையில் பழக்கொடி என்று சொல்லி மீண்டும் 'என்ன பழம்?' என்று சுற்றிச்சுற்றி வரலாம். இல்லையேல் வேறேதாவது சொல்லி விளையாடலாம் என்று இந்த விளையாட்டுகளைச் சொல்லிக் கொடுத்தால் பிள்ளைகள் ஆர்வமுடன் விளையாடுவார்கள். கைக்கணினிகளில் நிமிடத்திற்கு நிமிடம் புதுப்புது விளையாட்டுகள் உலாவரும் இன்றைய வேகமான உலகில் பிள்ளைகள் ஒரே விளையாட்டைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு விளையாட மாட்டார்கள். எனவே அதற்கு ஏற்றவாறு புதுப்புது தமிழ்மொழிமூல விளையாட்டுக்களை நாம் தேடியறிந்து அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

பிறந்தநாள்விழாக்களை மிகுந்த செலவில் கொண்டாடும் நாங்கள், பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்களைக்கூடத் தமிழில் பாடுவதில்லை. வாழ்த்துகளைக்கூடத் தமிமிற் சொல்வதில்லை. அங்கே குழந்தைகளுக்கு வைக்கப்படும் எந்தவொரு போட்டியிலும் தமிழ்மொழி பாவிக்கப்படுவதுமில்லை. இத்தவறு முற்றுமுழுதாக பெற்றோரையே சாரும். அவர்கள் நினைத்தால் குறைந்தபட்சம் தமிழிலும் பிறந்தநாள் வாழ்த்தைக் கூறச் செய்யலாம். ஓரிரு போட்டிகளிலாவது தமிழ்மொழியை இடம்பெறச் செய்யலாம். இளையோரிடையே தமிழ்மொழியை ஊக்குவிக்க விரும்புவோர், தனித்தமிழில் இலகுவான கேள்வி-பதில் போட்டியை, சிறப்புப்போட்டியாக வைத்து வெற்றிபெறுபவர்களுக்கு அவ்விழாவில் கொடுக்கப்படும் பரிசுகள் அனைத்திலும் பெறுமதி மிக்கதான சிறந்த பரிசினைக் கொடுக்கலாம். இதன் மூலம் பிள்ளைகளிடையேயும் அவர்களின் பெற்றோர்களிடையேயும் தமிழ் மீதான ஆர்வத்தை நிச்சயமாக அதிகரிக்கச் செய்யலாம். இப்படியான போட்டிகள் ஒவ்வொரு பிறந்தநாள்க் கொண்டாட்டங்களிலும் வைக்கப்படுமெனின், பெற்றோரும் பிள்ளைகளும் மிகவும் விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் தங்களை அப்போட்டிக்குத் தயார்ப்படுத்திக்கொண்டு வருவார்கள்.

தாயகத்தில் மட்டுமன்றி சங்ககால வசிப்பிடங்களில் ஒன்றெனக் கருதப்படும் கீழடி அகழாய்வு மையம், மற்றும் ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் போன்றவற்றிலும், தமிழரின் வரலாறுகள் மறைக்கப்படுகின்றன, மாற்றப்படுகின்றன என்று புலம்பித் திரியாமல், எங்களுக்குத் தெரிந்த எங்கள் வரலாறுகளை, எம்மவரின் வரலாறுகளை எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லித்தரலாம். ஒவ்வொருவரும் அவரவர்களுடைய பிள்ளைகளுக்குத் தங்கள் தங்கள் வராலாறுகளை, தாங்கள் கடந்துவந்த பாதைகளைக் கூறலாம். தங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் மாமாக்களின், சித்திகளின், சித்தப்பாக்களின், பெரியப்பாக்களின் மற்றும் அத்தைகளின் கதைகளைக் கூறலாம். அதனூடாக சங்க இலக்கியங்களில் காணப்படும் புறநானூற்றுக்கதைகளை அறிவதற்கான ஆர்வத்தினைக்கூட அவர்களிடைய தூண்டலாம். அதன்மூலம், எதிர்காலத் தொழில்நுட்பங்களை அவர்கள் தங்கள் காலத்தில் பயன்படுத்தி வரலாறுகளை மீட்டெடுக்கக்கூடியதாக இருப்பதுடன் அவர்களுக்கும் தமிழினத்தின் உண்மை வரலாற்றை அறிவதில் ஆர்வத்தை ஏற்படுத்தலாம்.

இவற்றிற்கெல்லாம் பொறுமையும் நீண்டகால அர்ப்பணிப்பும் தேவை. வீட்டில் அதைச் செய்வதற்குத் தாயின் பங்கே மிகமிக அத்தியாவசியமானதாகும். தாய்மொழியென்றே நாம் அழைக்கின்றோம். தமிழரான எமக்குத் தமிழே தாய்மொழி. ஆரம்பத்திலிருந்து எம்மை மிக அணுக்கமாகப் பேணி வருபவர் அன்னையே. குழந்தையைத் தூங்க வைப்பதற்காகத் தமிழ்த் தாலாட்டுப் பாடல்களைப் பாடலாம் அல்லத தமிழ்த் தாலாட்டுப் பாடல்களை இசைக்கவிடலாம். குழந்தைகள் காரட்டூன் பார்க்க அடம் பிடிக்கையில் தமிழ்மொழி மூலமான கார்ட்டூன்களையும் பார்க்கச்சொல்லி ஊக்கப்படுத்தலாம். ஏராளமான தமிழ்மொழி மூலமான கார்ட்டூன்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கார்ட்டூன்களும் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன.

இவ்வளவு முயற்சிகள் நாம் மேற்கொண்டாலும், எமது இன்றைய சூழ்நிலையை நாம் கருதினால், கனடாவில் இங்கிருக்கின்ற எமது இளம் தலைமுறையினருக்கு அவர்களிடையேயான தொடர்பாடல் மொழியாக ஆங்கிலமே அமையப்போகின்றது. அதையும் நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். ஏனெனில் அவர்கள் பாடசாலைகளில் பல்வேறு மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டவர்களுடன் ஒன்றாகப் படிப்பதாலும், கற்பித்தல் மொழி ஆங்கிலமொழியாக இருப்பதாலும் பாடசாலைகளில் அவர்களின் தொடர்பாடல்கள் அனைத்துமே ஆங்கிலமொழியிலேயே அமைகின்றன. எனவே பழக்கதோசத்தில் இயல்பாகவே அவர்கள் ஏனைய தமிழ்ப்பிள்ளைகளுடனும் ஆங்கிலத்திலேயே தொடர்பாடலை மேற்கொள்வார்கள். அதுமட்டுமன்றி அவர்களுக்குத் தங்களை வளர்த்துக் கொள்வதற்கு ஆங்கில மொழியறிவு மிகவும் அத்தியாவசியமானதும் கூட. ஆங்கிலமொழியறிவு இல்லாமல் இங்கு வாழ்வது கடினம். எனவே அவர்களுக்கு அவர்களின் தாய்மொழியான தமிழ்மொழி இரண்டாம் மொழியாகத்தான் இருக்கப் போகின்றது. அந்த இரண்டாம் மொழியிலும் அவர்கள் தேர்ச்சியுடையவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் நாம் பாடுபடுகின்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும், எமது உறவுகள் உலகின் பலபாகங்களிலும் பரந்து வாழ்கின்றார்கள். அவர்களின் பிள்ளைகள் அந்தந்த நாட்டு மொழிகளையே தமது முதல்மொழியாகக் கொண்டிருக்கின்றனர். எனவே இவ்வாறு பரந்து வாழும் எங்கள் உறவுகளின் பிள்ளைகளுக்கான பொதுமொழியாகத் தமிழ்மொழியே இருப்பதால் எமது பிள்ளைகளுக்குத் தமிழ்மொழி அவசியம் என்பதையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அதுமட்டுமன்றி கனடாவில் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலுள்ள அரச நிறுவனங்களும் அரசுசாரா நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களுக்குத் தமிழ்மொழி தெரிந்திருப்பதை விரும்புவதையும் காணக்கூடியதாக உள்ளது. எனவே கனடாவில் தமிழர் செறிந்து வாழும் இடங்களில் வேலைவாய்ப்பிலும் தமிழ்மொழியறிவு செல்வாக்குச் செலுத்துகின்றது என்பதையும் நாங்கள் உணர்ந்து எங்கள் பிள்ளைகளுக்குப் புரியவைத்தல் வேண்டும்.

முப்பது நாப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவில் தமிழ்ப் பாடசாலைகள் அமையும் என்று கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் இன்றைய நிலை? இன்று கனடாவில் சில வைத்தியசாலைகளிலும், வைப்பகங்களிலும் கூட தமிழ்மொழியிலான அறிவுப்புகள் மற்றும் சேவைகள் வழங்கப்படுகின்றன. வருங்காலம் எப்படி அமையும் என்று யாருக்கும் தெரியாது. ஒரு மரத்தை நடுபவன் அந்த மரம் தனக்கு உபயோகப்படும் என்று நினைத்து நடுவதிலும் பார்க்க தன் சந்ததி, அந்த மரத்தால் அதிக பயனடையும் என்று நினைத்தே நடுகின்றான். எனவே நாமும் பலனை எதிர்பாராது எம் கடமையினைச் செய்வோம். எமது இளம் தலைமுறை விரும்பியேற்கும் வகையில் அவர்களுக்குத் தமிழ்மொழி அறிவை ஊட்டுவோம். அவர்கள் தங்களது இளம் சந்ததிக்கு ஏற்ற முறையில் தமிழ்மொழியறிவைக் கொடுப்பார்கள் என்று நம்புவோம். நம்பிக்கைதான் வாழ்க்கை. காலம் பதில் சொல்லட்டும்.


நன்றி: தாய்வீடு (மே 2018)

Friday, March 23, 2018

சங்கவையும் சங்கீதாக்களும்


நேரம் நள்ளிரவாகிக்கொண்டிருந்தது. வானின் உச்சியில் முழுநிலா காய்ந்துகொண்டிருந்தது. நிலவின் ஜொலிப்பில் நட்சத்திரங்கள் தம் சோபையை இழந்துவிட்டிருந்தன. கூதற்காற்று காதோரங்களைக் கூசச்செய்துகொண்டிருந்தது. அந்த ஊரோ ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருந்தது. ஆயினும் இருஜோடி விழிகள் மாத்திரம் அந்த நள்ளிரவிலும் உறக்கம் துறந்து கலக்கத்தில் எங்கோ தொலைவை வெறித்தபடியே இருந்தன.

'சங்கீ!"

நள்ளிரவின் அந்த அமைதியைக் கலைக்காமல் மிகமிக மெல்லமாக ஒலித்தது அங்கவையின் குரல்.

'என்னக்கா?'

அங்கவையை ஏறிட்டு நோக்கினாள் சங்கவை.

'கபிலர் தாத்தாவைப் பாரேன்! பாவம் அவர். எமக்காக எல்லா இடமும் அலைந்து திரிகிறார்.'

'ஆமாம் அக்கா. எங்கள் அரண்மனையில் எத்தனை மதிப்புடன் அவர் இருந்தார். இப்போது எமக்காக அவர்படும் அவமானங்களைப் பார்க்கச் சகிக்கமுடியாமல் இருக்கிறதக்கா'

'ஏன்தான் இந்த மன்னர்களுக்கு இத்தனை பேராசையோ? எம்தந்தை வேள்பாரி எவருக்கும் எந்தக் கெடுதலையும் கனவில்கூட நினைத்ததில்லையே'

'அவர் மனிதர்களை மட்டுமா நேசித்தார்? மரஞ்செடிகொடிகளைக்கூட நேசித்த அந்த மாமனிதரை இப்படி வஞ்சகமாய் வீழ்த்திவிட்டார்களே பேராசைக்காரப் பெருவேந்தர்கள்'

'முல்லைக்குத் தேர்கொடுத்தான் பாரி என்று பாரெங்கும் எம்தந்தையின் கொடைத்தன்மையை எல்லாப் புலவர்களும் புகழ்ந்தார்களே'

'ஆமாம் அக்கா! கபிலர் தாத்தாகூட அப்பாவை மழை என்று போற்றினாரே ஞாபகமிருக்கிறதா அக்கா?'

'ம்ம்ம்.. எப்படியடி சங்கீ அதை மறக்கமுடியும்?'

அந்த நான்கு நயனங்களிலும் அந்த அரண்மனைக் காட்சிகள் விரிந்தன.

பறம்புமலையைத் தலைநகராகக்கொண்டு அதைச்சூழவிருந்த முன்னூறு ஊர்களையும் நீதிவழுவாது மிகச்சிறப்பாக ஆட்சிபுரிந்துகொண்டிருந்தான் வேளிர்குல திலகம் பாரிவேள் மன்னன். அவன் வீரத்தில் மட்டுமல்லாது வாரிவாரி வழங்கும் கொடையிலும் சிறந்து விளங்கினான். நாளாந்தம் பல்வேறுநாடுகளைச் சேர்ந்த புலவர்கள், பாணர்கள், விறலியர்கள், இரவலர்கள் என எல்லோரும் அவனைநாடிச்சென்று பரிசில்களும் தானங்களும் பெற்றுக் கொண்டிருந்தனர். அப்படி வந்தவர்தான் கபிலரும். ஆயினும் பாரியின் ஆத்மநண்பராக மாறி அவன்  அவைக்களப்புலவரானார். அதுமட்டுமன்றி பாரிவேள் மன்னனின் குழந்தைகளான அங்கவை சங்கவை ஆகியோருக்கு ஆசானாகவும் ஆகினார்.

அவையில் கூடும் பல்வேறு இடங்களைச் சேர்ந்த புலவர்களும் பாரிமன்னனைப் போன்றவொரு கொடைவள்ளலைத் தாங்கள் அறிந்ததேயில்லை என்று புகழ்பாடினர். அதைக்கேட்ட கபிலர், பாரியைப் போன்றே கொடையளித்து உலகை வறுமையின்பிடியிலிருந்து காக்கும் வேறொருவரும் உள்ளார் என்கிறார்.

அவையிலுள்ளோர் திகைக்கிறாhர்கள். யார் அவர்? இதுகாறும் நாங்கள் அப்படியொருவரைக் கேள்விப்பட்டதில்லையே என்று கபிலரை வினவுகிறார்கள். உடனே கபிலர் தன்பாடலை எடுத்துவிடுகிறார்,

பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே
- (புறநானூறு – 107 ஆம் பாடல்)

சிறந்த புலவர்கள் எல்லோரும் பாரி பாரி என்று எம்மன்னனின் பல்வேறு சிறப்புகளையும் கொடைத் தன்மையையும் புகழ்ந்துபாடுகின்றனர். ஆனால் இந்த உலகில் பாரி ஒருவன் மட்டுமே அப்படிச் சிறப்பு வாய்ந்த வள்ளல் அல்ல. இவ்வுலகைக் காப்பதற்காக மாரியும் இங்கே உள்ளது என்கிறார்.

நீரின்றி அமையாது உலகு என்றார் பின்னர் வந்த வள்ளுவர். அந்த நீரினை உலகுக்குத் தருவது மழையே. மழை பொய்த்துவிட்டால் எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடி உலகே அழிந்துவிடும். முகில்கள் மழையினை மண்ணுக்கு ஈந்து உலகைக் காப்பதுபோல் பாரிமன்னனும், தன் ஈகையால் இவ்வுலகைக் காத்துக்கொண்டிருக்கிறான் என்று அவனைக் குறைத்துக் காட்டுவது போன்ற தொனியில் உயர்வாகக் புகழ்கிறார் கபிலர்.

பாரியின் புகழ் மென்மேலும் பரவு முடியுடை மூவேந்தர்களுக்கும் பொறாமைத்தீ மூழ்கிறது. தாங்கள் பெரும்படையுடனும் வலிமையுடனும் இருக்கப் புலவர்கள் யாரும் தங்களைப் பாடாது குறுநிலமன்னனான பாரியைப் போற்றிப்பாடுவது பொறுக்காமல், மூவேந்தர்களுமே ஒன்றிணைந்து பாரியின் மேல் போர்தொடுத்து அவன் பறம்புமலையை முற்றுகையிட்டனர்.

தன்னிறைவுபெற்ற நாடாகத் தன்நாட்டை உருவாக்கி வைத்திருந்தவன் பாரி. அவன் தானத்தில் மட்டுமன்றி வீரத்திலும், ஓரரசைத் திறம்படக் கொண்டுநடத்துவதிலும் வல்லவனாயிருந்தவன். மூவேந்தர்களின் முற்றுகை அவன் தேசத்தைப் பாதிக்கவில்லை. பகைவர்கள் உள்ளே நுழைய முடியாதபடி அவன் காவல் மிகமிகப் பலமாக இருந்தது. பாரியின் ஆருயிர் நண்பரான கபிலரும் தன் பங்கிற்கு மலைகளில் உள்ள கிளிகளையும் குருவிகளையும் பழக்கி நெற்கதிர்களையும் தானியங்களையும் முற்றுகைக்கு அப்பாலுள்ள பிரதேசங்களிலிருந்து அரண்மனைக்கு எடுத்துவரச் செய்திருந்தார். எனவே மாதக்கணக்கில் நீண்ட முற்றுகையால் எந்தப் பயனும் கிட்டாமல் மூவேந்தரும் விழிபிதுங்கினர். அந்தநேரத்தில்த்தான் கபிலர் தன்னையும் அறியாமல் ஒரு மாபெரும் தவறினையிழைத்தார்.

மூவேந்தர்களையும் எள்ளிநகையாடக் கருதிய கபிலர் ஒரு பாடலை ஓர் ஓலையில் எழுதி முற்றுகையிட்டிருந்த மூவேந்தருக்கும் அனுப்பினார். பாரிமன்னன் சரணடைவதற்கான ஓலை அதுவென நம்பிய அரசர்கள் மூவரும் ஓலையைப் பிரித்து அதிலிருந்த பாடலைப் படித்ததும் ஏமாற்றம் அடைந்தனர்.

அளிதோ தானே பாரியது பறம்பே !
நளிகொண் முரசின் மூவிரு முற்றினும்
உழவர் உழாதன நான்கு பயனுடைத்தே;
ஒன்றே, சிறியிலை வெதிரினெல் விளையும்மே
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பல மூழ்க்கும்மே;
மூன்றே, கொழுங்கொடிவள்ளிக்கிழங்கு வீழ்க்கும்மே;
நான்கே, அணிநிற வோரிபாய்தவின் மீதழிந்து
திணிநெடுங் குன்றம் தேன் சொரியும்மே.
வான்க ணற்றவன் மலையே; வானத்து
மீன்க ணற்றதன் சுனையே; யாங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும்,
தாளிற் கொள்ளலிர்இ வாளிற் றரலன்;
யானறி குவனது கொள்ளு மாறே,
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி
விரையொலி கூந்தனும் விறலியர் பின்வர
வாடினர் பாடினர் செலினே
நாடும் குன்றும் ஒருங்கீ யும்மே
- (புறநானூறு – 109 ஆம் பாடல்)

எல்லா வகையான வளங்களும் இயற்கையாகவே மலிந்திருக்கும் பறம்புமலையில் மக்களுக்குத் தேவையான அனைத்துவிதமான உணவுப்பொருட்களும் தாமாகவே விளைகின்றன. பாரியின் பறம்புமலையோ பகைவரால் வெற்றிகொள்ளப்பட முடியாத அளவிற்குப் பலமும் இயற்கை அரணும் வாய்ந்தது. ஆயினும் உங்களுக்கு அவனது இந்த நாடும் பறம்புமலையும் வேண்டுமாயின், நீங்கள் பாணர்கள் விறலியர்களுடன் வந்து இரந்து நிற்பின், பாரி உங்களுக்குத் தன்நாட்டையும் இந்தப் பறம்புமலையையும் தானமாகவே தந்துவிடுவான் என்பது அப்பாடலின் சுருக்கமான பொருள்.

அப்பாடலைப் படித்ததும் அவர்கள் பாரியைத் தம்மால் போரில் வெற்றிகொள்ளமுடியாது என்பதைத் தெளிவாக உணர்ந்தனர். மூவரசர்களும் கூடி மந்திராலோசனை நடத்தினர். அவர்களிடம் ஒரு வஞ்சக எண்ணம் உருவாகியது.

மூவேந்தர்களும் பாணர்களாக மாறி விறலியருடன் சேர்ந்து பறம்பு மலைக்குள் புகுந்தனர். இரவலர்களாக உள்ளே வருபவர்களுக்கு எந்தவித காவல்த்தடையும் பாரியின் ஆட்சியில் இருந்ததில்லை. பாரியின் அரண்மனைக்குள் புகுந்த அந்த மூன்று வேடதாரிகளும் நயவஞ்சகமாகப் பாரியைக் கொன்று அவன் நாட்டையும் பறம்புமலையையும் கைப்பற்றினர்.

பாரியின் உயிர் நண்பரான கபிலரால் பாரியின் இழப்பைத் தாங்கமுடியவில்லை. பாரியின் மரணத்திற்குத் தனது பாடல்தான் காரணமாகிவிட்டதோ என்கின்ற குற்றவுணர்ச்சியும் அவருள்ளத்தில் எழுந்து அவரைத் துளைத்தது. உயிர்வாழ்வதை வெறுத்தார். ஆயினும் பாரியின் மகள்களும் அவரின் மாணவிகளுமான அங்கவையையும் சங்கவையையும் கரையேற்றிவிட்டு வடக்கிருக்கத் துணிந்தார்.

அங்கவையையும் சங்கவையையும் மணமுடித்து ஏற்றுக்கொள்ளுமாறு பல்வேறுமன்னர்களையும் சென்று வேண்டினார். மூவேந்தர்களுக்கும் அஞ்சிய ஏனைய குறுநில மன்னர்களோ, பாரியின் புதல்விகளை மணக்க மறுத்தனர்.

சில வாரங்களுக்கு முன்னர் மூவேந்தர்களுமே போட்டிபோட்டு மணஞ்செய்துகொள்ள விரும்பிய,  சகல சௌபாக்கியங்களுடனும் விளங்கிய அந்தவிரு அரசிளங்குமாரிகளும் இப்போது எல்லோராலும் தீண்டத்தகாதவர்களாய்ப் பார்க்கப்பட்டனர். அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைகள் போல், இவர்கள் இருக்குமிடங்களை நாடிவந்து உதவிபெற்றுச் சென்றவர்கள் எல்லாம் இப்போது இவர்களைக் கண்டாலே அஞ்சி ஒதுங்கினர்.

'சங்கீ! கவலைப்படதேடி. நாம் இப்படி இருப்பதைப் பார்த்தால் கபிலர்தாத்தா இன்னும் வருந்துவார்.'
'ஆமாம் அக்கா, அவர் பாவம். எமக்காகத்தான் இன்னமும் உயிருடனிருக்கிறார். அவருக்காகவாவது நாம் கவலையில்லாமல் இருப்பதைப்போன்று நடிக்கவேண்டும்'

'ம்ம்ம்...' அங்கவையிடமிருந்து பெருமூச்சொன்று எழுந்தது.


'பார்த்தீர்களாக்கா இந்த நன்றிகெட்ட உலகத்தை. அன்று எம் தந்தையின் அரசாட்சியில், வலிய வந்து எம்மிடம் அன்புபாராட்டுவதாய்க்காட்டி நடித்தவர்கள் எல்லாரும் இன்று எம்மை ஈனப்பிறவிகள் போன்று ஒதுக்கிவைப்பதைப் பார்க்கையில் நெஞ்சு ஆறுதில்லையாக்கா'

'ஆமாம் சங்கீ. அன்றைக்கு அப்பாவும் இருந்தார், எம்மிடம் அரசும் இருந்தது. இன்று அப்பாவும் எம்முடன் இல்லை. அரசும் இல்லை. அனாதைகளாகிவிட்டோமடி'

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே!
- (புறநானூறு - 112 ஆம் பாடல்)

*****************************

“அப்பாவை விடவே மாட்டார்களாண்ணா?” - கேவினாள் சங்கீதா

“அழாதே சங்கீ! அண்ணா நானிருக்கிறேன்” - சின்னஞ்சிறுவயதிலேயே பக்குவப்பட்டுவிட்ட கனி தன் தங்கைக்கு ஆறுதல் கூறினான்

தான் கருவிலிருக்கையிலேயே தன் தந்தை பிரிக்கப்பட்டுவிட்ட சோகத்திற்குச் சொந்தக்காரி அந்தக் குட்டித்தேவதை. தன் பிரிய கணவனின் பிரிவால் வாடினாலும் கருசுமந்த உயிரையும் கருவிலிருக்கும் உயிரையும் நினைந்திரங்கித் தன் காலத்தை ஓட்டிய தாயினையும் இழந்து இன்று தன் தனயனுடன் தனித்து விடப்பட்டிருக்கிறாள்.

ஒவ்வொரு பெண்குழந்தைகளினதும் குட்டிவயதுக் கதாநாயகனாய் விளங்குவது தந்தையே. இவளோ தந்தையைக் கண்ணாலேயே காணமுடியாத துர்ப்பாக்கிய நிலையிலிருந்தாள். எல்லாமாக விளங்கிய அன்னையும் மரணத்தைத் தழுவிவிடத் தன் சின்னஞ்சிறு அண்ணனுடன் நிர்க்கதியாய்த் தவிக்கின்றாள்.

“அப்பாவை நம்மிடம் விடுவதற்கு என்னண்ணா செய்யலாம்?”

அந்த மழலை சங்கீதா தன் மனவேதனைகளைச் சொல்லியொரு மடலை வரைந்திருக்கிறது. அது செவிடன் காதில் ஊதிய சங்காகாதிருக்கட்டும்!

அன்புடன் சதுரிகா அக்காவுக்கு!

அம்மாவையும் இழந்து அப்பாவையும் பிரிந்து நானும் அண்ணாவும் அநாதையாய் இருக்கின்றோம். நான் அம்மாவின் வயிற்றில் இருந்த போதே அப்பா கைது செய்யப்பட்டார். எனக்கு இன்று எனக்கு பத்து வயது இதுவரைக்கும் அப்பாவுடன் பாசமாக பழகியது இல்லை. அம்மாவின் செத்தவீட்டில்தான் அப்பாவின் மடியில் இருக்கக் கிடைத்தது. அதுவும் கொஞ்சநேரமே. அம்மா இல்லாத இந்த வீட்டில் நானும் அண்ணாவும் அப்பாவுடன் இருக்க ஆசையாய் இருக்கு. அக்கா! உங்களுக்குத் தெரியும் அப்பாவின் பாசமும் அருமையும். நீங்கள் கருணை வைத்து உங்கட அப்பாவுக்கு கொஞ்சம் சொல்லி எங்கட அப்பாவை மன்னித்து விடச்சொல்லுங்கோ.

அக்கா நான் இப்ப கடவுளை விட உங்கட அப்பாவைதான் நம்புறன் ஏனென்றால் இந்த உலகத்தில் அவரால் மட்டும்தான் எங்கட அப்பாவை விடுவிக்க முடியும். இது நடக்க நீங்களும் உங்கட அப்பாவிடம் சொல்லுங்கோ. அன்புள்ள அக்கா அம்மாவும் அப்பாவும் இல்லாத இந்த வீட்டில் எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை.அக்கா என்னை உங்கள் தங்கையாக நினைத்து எனது அப்பாவை விடுதலை செய்ய நீங்களும் உதவுங்கள்.

நன்றி

இப்படிக்கு அன்புள்ள உங்கள் தங்கையாக,
ஆ.சங்கீதா

இப்படி இன்னும் எத்தனை சங்கீதாக்கள் வெளித்தெரியாமல்!

**************

தாய்வீடு - ஏப்ரல் 2018 இற்காக எழுதப்பட்டது.

Friday, March 9, 2018

எண்களில் விளையாடும் தமிழ்


தமிழ்மொழியில் இலக்கங்களை எழுதுவதற்கென்று தனித்துவமான குறியீடுகள் அல்லது எழுத்துகள் இருந்தாலும், இன்றைய நாட்களில் பஞ்சாங்கங்களைத் தவிர்த்து அவை பயன்படும் இடங்களைக் காண்பது அரிது. ஆயினும் மொரீசியஸ் நாட்டின் பணத்தாள்களில் இவ்விலக்கங்களை இப்போதும் காணக்கூடியதாயிருப்பது குறித்துத் தமிழர்கள் அனைவரும் பெருமை கொள்ளலாம்.

இத்தமிழ் இலக்கங்களை வைத்து, சிறுவர்கள் முதல் பெரும் புலவர்கள் வரை தமிழில் விளையாடி வந்திருக்கிறார்கள். அவற்றைப்பற்றிச் சற்றே பார்க்கலாம்.

சிறுவயதில் விடுகதைகள் அல்லது புதிர்கள் போட்டு அவற்றை அவிழ்க்கச்சொல்லி விளையாடுவது சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டுகளில் ஒன்றாகும். அந்த வகையில் தமிழ் எண்களை வைத்துச் சிறுவர்கள் பகிடியாக விளையாடும் விடுகதைகளில் ஒன்றைப் பார்ப்போம்.

உன் தலையில ஏழ (ஏழு) வைச்சு இடையில அஞ்ச (ஐந்து) வைச்சு கடைசியா மையை வைச்சா உன்பெயர் வரும் அது என்ன?


இவ்விடுகதைக்கான விளக்கத்தினை இனிப் பார்ப்போம்

தலையில் ஏழு: முதலாவது எழுத்தாக ஏழு. தமிழ் இலக்கங்களில் ஏழைக் குறிப்பது .
இடையில் ஐந்து: இடையில் வரும் எழுத்தாக ஐந்து. தமிழ் இலக்கங்களில் ஐந்தைக் குறிப்பது ரு.
கடைசியில் மை: கடைசி எழுத்து மை.

ஆகவே இம்மூன்று எழுத்துகளையும் அதே வரிசைப்படி இணைக்க எருமை எனவரும்.

இனித் தமிழிலக்கியத்தில், இவ்வாறு தமிழெண்களை வைத்து விளையாடப்பட்டிருக்கும் ஒளவையாரின் ஒருபாடலைப் பார்ப்போம்.

எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேற்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னா யடா

இப்பாடலுக்குரிய விளக்கத்தை இனிப்பார்ப்போம்.

எட்டேகால் லட்சணமே: தமிழ் இலக்கங்களில் எட்டைக் (8) குறிப்பதற்கு '' வும் கால்ப்பங்கினைப் (1/4) குறிப்பதற்கு '' வும் பயன்படுத்தப்படுகிறது.  எனவே எட்டேகால் இலட்சணமே என்பதன் பொருள் அவலட்சணமே என்னும் பொருளைக்குறித்து நிற்கின்றது

எமனேறும் பரி என்பது எருமையையும் பெரியம்மை வாகனம் என்பது காகத்தையும், முட்ட மேல்கூரையில்லாவீடு என்பது குட்டிச் சுவரையும் குலராமன் தூதுவன் என்பது இராமனின் தூதுவனாய் இலங்கைசென்று சீதையைச் சந்தித்த அனுமனின் இனமான குரங்கையும் குறித்து நிற்கின்றது. ஆரை அடா சொன்னாய் என்பது ஆரைக் கீரையைச் சொன்னாய் என்றும் பொருள் கொள்ளலாம். அப்படியல்லாமல் யாரையடா சொன்னாய் என்று கோபத்தில் கேட்பதாகவும் பொருள் கொள்ளலாம்

இங்கே கவனிக்கத்தக்கவேண்டிய விடயம் இப்பாடல் பாடப்பட்ட நிலைக்களனாகும். இப்பாடல் கம்பரைப்பார்த்து ஒளவையார் பாடியது என்று சொல்வோரும் உள்ளனர் ஆயினும் இப்பாடல் ஒட்டக்கூத்தரை நோக்கியே பாடப்பட்டது என்பதே உண்மையாகும்.

புலவர்களுக்குள் எப்போதுமே போட்டியும் பொறாமையும் காணப்படுவது அக்கால இயல்பாகும். ஒருமுறை ஒட்டக்கூத்தர் முன்னாலும் புகழேந்திப்புலவர் பின்னாலும்வர மன்னன் வீதியுலா செல்கிறான். அப்போது தன் இருகால்களையும் நீட்டிக்கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஒளவையார் ஒட்க்கூத்தருக்கு எவ்வித மரியாதையுமு; செய்யாமல் அப்படியே அமர்ந்திருக்கிறார். மன்னன் வருகையில் ஒருகாலை மடக்குகிறார். புகழேந்திப்புலவருக்கு இருகால்களையும் மடக்குகிறார். அதைக்கண்ட ஒட்டக்கூத்தர் அவமானத்தால் ஒளவையாரைச் சாடும் நோக்கில் மன்னன் முன்னிலையில் ஒளவையாரைப் பார்த்து, அவரை ஏளனம் செய்யும் வகையிலும் அதேசமயம் விடுகதையாகவும்,

ஒருகாலடி நாலிலைப் பந்தலடி. என்கிறார்.

அதற்குப் பதிலடியாகவே ஒளவையார் எட்டேகால் இலட்சணமே எனத் தொடங்கி ஆரை அடா சொன்னாய் என்று பெரும்பாலும் நான்கு இலைகளுடனேயே காணப்படும் ஆரைக்கீரை விடையாக வரும் வகையில் ஒட்டக்கூத்தரை அவர் தன்னை மறைமுகமாக அடி என்று சொன்னதற்குப் பதிலடியாக அவரையும் மறைமுகமாக அடா என்று சொல்லி ஏளனம் செய்து பாடுகின்றார்.

பின்னர் இவர்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்கினை மன்னன் அறிந்து காரணம் கேட்டு, ஒட்டக்கூத்தர் தான் புகழேந்திப்புலரிலும் சிறந்தவர் என்று கூற மன்னன் ஒட்டக்கூத்தரையும் புகழேந்தியையும் போட்டியிடவைக்க, ஒளவையார் மதி என்னும் பொருளினைத் தமது ஒரு பாடலில் மூன்றுமுறை வருமாறு பாடல் அமைக்கச் சொல்கிறார். ஒளவையாரையும் புகழேந்தியாரையும்  அவமதிக்கவேண்டும் என்கின்ற ஆத்திரத்தில் அவர்

வெள்ளத்து அடங்காச் சின வாளை
வேலிக் கமுகின் மீதேறித்
துள்ளி முகிலைக் கிழித்து மழைத்
துளியோடு இறங்கும் சோணாடா!
கள்ளக் குறும்பர் குலம் அறுத்த
கண்டா! அண்டர் கோபாலா!
பிள்ளை மதி கண்ட எம்பேதை
பெரிய மதியும் இழந்தாளே

என்று இரண்டு மதிகளை மட்டுமே கொண்டு தன் பாடலை முடிக்க, உடனேயே ஒளவையார்,

ஒட்டா ஒருமதி கெட்டாய்

என்று கூறி ஒட்டக்கூத்தரின் ஆணவத்தை அடக்குகின்றார்.

புகழேந்தியர் தன் பாடலில் மூன்று மதிகள் (பிறை) வருமாறு பாடிய பாடலைக் கீழே காணலாம்

பங்கப் பழனத்து உழும் உழவர்
பலவின் கனியைப் பறித்தொன்று
சங்கிட்டு எறியக் குரங் கிளநீர்
தனைக் கொண்டு எறியும் தமிழ்நாடா!
கொங்கார்க் கமரர் பதியளித்த
கோவே! ராஜ குல திலகா!
வெங்கட் பிறைக்கும் கரும் பிறைக்கும்
மெலிந்த பிறைக்கும் விழிவேலே!

தமிழ் இலக்கங்களை மட்டுமன்றி சாதாரண எண்களை வைத்தும் தமிழ்ப்புலவர்கள் தம் வித்துவத்தைக் காட்டிச் சென்றிருக்கிறார்கள். அந்த வகையில் விவேகசிந்தாமணியில் அமைந்த ஒருபாடலை இனிப்பார்ப்போம்.

ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே கேளாய்
உண்மையாய் ஐயரையும் அரையும் கேட்டேன்
இருநான்கும் மூன்றுடனே ஒன்றும் சொல்லாய்
இம் மொழியைக் கேட்டபடி ஈந்தாய் ஆயின்
பெருநான்கும் அறுநான்கும் பெறுவாய் பெண்ணே
பின்னேஓர் மொழிபுகல வேண்டாம் இன்றே
சரிநான்கும் பத்தும் ஒரு பதினைந் தாலே
சகிக்க முடியாதினி என் சகியே மானே!

இப்பாடலுக்குரிய விளக்கத்தை இனிப்பார்ப்போம்.

ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே: ஒரு நாலும் இரண்டு அரையும் ஒன்றும்
( 4 + 2 x 1/2 + 1 = 6 - இராசிகளில் ஆறாவது கன்னி)
ஐயரையும் அரையும்: ஐந்து அரையும் அரையும்
(5 x 1/2 + 1/2 = 3 - வாரத்தில் மூன்றாவது நாளான செவ்வாய்)
இருநான்கும் மூன்றுடனே ஒன்றும்: இரண்டு நான்கும் மூன்றும் ஒன்றும்
 (2 x 4 + 3 + 1 = 12 - பன்னிரெண்டாவது நட்சத்திரம் உத்தரம். உத்தரம் -> உத்தரவு = விடை/பதில்)
நான்கும் அறுநான்கும்: நான்கும் மேலும் ஆறு நான்குகளும்
(4 + 6 x 4 = 28 - தமிழ் ஆண்டுகள் என்று சொல்லப்படுபவற்றில் 28 ஆவது ஆண்டு 'ஜெய' ஆகும்)
சரிநான்கும் பத்தும் ஒரு பதினைந் தாலே: நாலும் பத்தும் பதினைந்தும்
( 4 + 10 + 15 = 29 - தமிழ் ஆண்டுகள் என்று சொல்லப்படுபவற்றில் 28 ஆவது ஆண்டு 'மன்மத' ஆகும்)

இதனை மேலும் விளக்கமாகப் பார்க்கின்
ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே கேளாய் - கன்னியே கேளாய்
உண்மையாய் ஐயரையும் அரையும் கேட்டேன் - உண்மையாய் உன் செவ்வாயைக் கேட்டேன்
இருநான்கும் மூன்றுடனே ஒன்றும் சொல்லாய்- பதிலைச் சொல்வாய்
இம் மொழியைக் கேட்டபடி ஈந்தாய் ஆயின் - நான் கூறியவற்றை விளங்கிக்கொண்டு எனக்கு பதில் உரைப்பாயானால்
பெருநான்கும் அறுநான்கும் பெறுவாய் பெண்ணே - ஜெயம் பெறுவாய் / வெற்றியடைவாய் பெண்ணே
பின்னேஓர் மொழிபுகல வேண்டாம் இன்றே - நான் வேறெதுவும் உனக்குச் சொல்லத் தேவையில்லை,
சரிநான்கும் பத்தும் ஒரு பதினைந் தாலே - மன்மதத்தாலே - அதனால் உண்டான காதல் உணர்வினை/வேதனையினை
சகிக்க முடியாதினி என் சகியே மானே! - இனியும் என்னால் தாங்கமுடியாது என் தோழியே, மான் போன்றவளே

இனிக் காளமேகப்புலவர் பாடிய ஒருபாடலைப் பார்ப்போம்

பூநக்கி ஆறுகால், புள்ளினத்துக்கு ஒன்பதுகால்,
ஆனைக்கு கால் பதினேழ் ஆனதே. மானே கேள்!
முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு,
கண்டதுண்டு, கேட்டதில்லை காண்!

இப்பாடலுக்கான விளக்கம்:
பூநக்கி ஆறுகால்: பூ-நக்கி - பூவினை நக்கும் வண்டு. வண்டிற்கு ஆறு கால்கள் உண்டு
புள்ளினத்துக்கு ஒன்பதுகால்: புள்ளினம் - பறவை, ஒன்பது கால் (9 x 1/4 = 2 1/4 -இரண்டேகால்) பறவைக்கு இரண்டே (தேற்று ஏகாரம்) கால்
ஆனைக்கு கால் பதினேழ் ஆனதே: ஆனை - யானை, கால் பதினேழ் (1/4 x 17 = 4 1/4 - நாலேகால்) யானைக்கு நாலே (தேற்று ஏகாரம்) கால்.

இந்த வகையில் அண்மைக்காலத்துக் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல் ஒன்றை நோக்குலோம்.

சரவணப் பொய்கையில் நீராடி என்கின்ற பாடலில்

அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை

அஞ்சுதலை என்பது ஐந்து தலைகளைக் குறிக்கவில்லை. மாறாக அஞ்சுதல் அதாவது பயத்தினைக் குறிக்கின்றது.
ஆறுதலை என்பது ஆறு தலைகள் என்கின்ற கருத்தில் அல்லாமல் ஆறுதல் என்பதைக் குறிக்கின்றது.



நன்றி: தாய்வீடு (மார்ச் 2018)