“தக்கன பிழைக்கும்” என்றார் சாள்ஸ் டாவின்.
செம்மொழியாகிய எம்மொழியாம் தமிழ்மொழி எதிர்காலத்தில் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளுமா?
இவ்வினாவினை எனக்குள் விதைத்தது அண்மையில் எனக்கு வந்தவொரு கருத்துப் பகிர்வு. பொதுவாக பெயரில்லாமல் (Anonymus) வரும் பின்னூட்டங்களுக்கு நான் பதிலளிப்பதில்லை. ஆயினும் இது, நான் திகதிகளை குறிப்பிடும் முறையைத் தவறென்று கூறி “நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே” என்கின்ற எச்சரிக்கையுடன்(?) வந்ததாலும், அந்தத் குற்றச்சாட்டு சரியென்று நானும் உணர்ந்ததாலும் அதற்கு நானும் பதிலளித்திருந்தேன். பின் அந்த நக்கீரர் தன்னை எனக்கு அறியத்தந்த போது மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது. எனது மரியாதைக்குரிய நபர்களில் அந்தக் கலைஞனும் ஒருவர். பல கலைஞர்களை உருவாக்கிய பெருமைக்கும் சொந்தக்காரர் அவர்.
இப்போதெல்லாம் தமிழ் திகதிகளை பெரும்பாலும் தின நாட்காட்டிகளிலும் மற்றும் அழைப்பிதழ்களிலும் மட்டுமே காணக்கூடியதாய் இருக்கிறது. மற்றம்படிக்கு நாங்கள் யாவருமே ஆங்கிலத் திகதியினையே எமது வழக்கில் கொண்டிருக்கின்றோம். சரி, உலக நியமத்திற்கு அமைவாக அதைத்தான் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் நிச்சயமாக அதனால் பல சிக்கல்கள் உருவாகும். இலக்கங்களில் பயன்படுத்துகையில் மொழிப் பிரச்சனை இல்லை. ஆனால் அதில் உள்ள சிக்கல் என்னவென்றால் சில இடங்களில்/நாடுகளில் நாள்/மாதம்/ஆண்டு (dd/mm/yyyy) என்றும் வேறுசில இடங்களில்/நாடுகளில் மாதம்/நாள்/ஆண்டு (mm/dd/yyyy) என்றும் பாவனையில் இருப்பதால் பல சந்தர்ப்பங்களில் சரியான திகதியை அறிவது கடினம். உதாரணமாக 08/09/2009 என்கின்ற திகதியை எடுத்துக் கொண்டால் அது ஒன்பதாம் மாதத்தின் (September) எட்டாம் நாள் என்பதா அல்லது எட்டாம் மாதத்தின் (August) ஒன்பதாம் நாள் என்பதா என்கின்ற குழப்பத்தை உருவாக்கிவிடும். ஆனால் 14/09/2009 என்பதிலோ அல்லது 09/14/2009 இந்தப் பிரச்சனை இல்லை. இது சம்பந்தமான நடைமுறைச் சிக்கல்களை, கணினியில் database சம்பந்தமான வேலைகளில் உள்ளவர்கள் அறிந்திருப்பார்கள். எழுத்து வழக்கில் இந்தச் சிக்கலை எவ்வாறு கையாள்வது?
ஆங்கில ஆண்டு January யில் தொடங்கி December இல் முடிவடைவதாலும் அதற்கேற்ப தற்போது தமிழ் ஆண்டு தை மாதத்தில் தொடங்கி மார்கழி மாதத்தில் முடிவடைவதாலும், இன்றைய திகதியினை எழுத்தில் குறிப்பதற்கு புரட்டாதி 30 எனப் பயன்படுத்தலாம் என்றே எண்ணியிருந்தேன். அது தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டதை ஏற்றுக் கொண்டதால் இலங்கைப் பத்திரிகைகள் எவ்வாறு இதைக் கையாள்கின்றன என்று பார்த்த போது அவை தமிழ் திகதியினைத் தமிழிலும் ஆங்கில திகதியினை ஆங்கிலத்திலுமே அச்சடிக்கின்றன. இன்றைய திகதியை September 30 என்று அழைப்பதே சரியானதாகத் தோன்றுகிறது. ஆயினும் இதனை ஆங்கிலம் கலவாமல் தமிழில் எழுதும் போது செப்ரம்பர் என்று எழுதுவதா அல்லது செப்டம்பர் என்று எழுதுவதா? அதே போல் இலங்கையைச் சேர்ந்தவர்கள் August மாதத்தினை ஓகஸ்ற் என்று உச்சரிக்கும்/எழுதும் அதேவேளையில் இந்தியாவில் இருப்பவர்கள் ஆகஸ்ட்டு என்றும் சிலர் ஆகஸ்து என்றும் உச்சரிக்கறார்கள்/எழுதுகிறார்கள். ஆக தமிழ் மொழியில் இந்த மாதங்களைக் குறிப்பதில் சிக்கல்கள் உண்டாகின்றன.
வேற்று மொழிச் சொல்லைத் தமிழ்மொழிக்குள் உள்வாங்குவது தவறல்ல. அப்படி உள்வாங்கினால்தான் அந்தமொழி வளரும் என்று உறுதியாக நம்புகின்றேன். ஆயினும் அப்படி உள்வாங்கப்படும் சொல் ஒரே சொல்லாகவும் (spelling) ஒரே உச்சரிப்பையும் கொண்டதாகவும் அமைந்தாலே அது அழகாக இருக்கும் என்றே நான் நினைக்கின்றேன்.
ஓலைச்சுவடிகளில் எழுதிப் பின் அச்சிலேற்றி தமிழை வளர்ப்பதென்பதெல்லாம் மலையேறிப்போய்விட்ட இலத்திரனியல் காலம் இது. விஜயதசமி அன்றோ அல்லது தைப்பூசம் அன்றோ தட்டில் அரிசி பரவி ஏடுதொடக்குவதெல்லாம் வருங்கால சந்ததியினருக்கு பழைய பஞ்சாங்கம். இனி ஏடு தொடக்குவது கூட (அப்படி ஒரு சடங்கு செய்யவேண்டும் என்று விரும்புவர்கள்) கணினியில் தான் தொடங்குவார்கள். ஆக தமிழையும் கணினியில் கையாள்வதற்குத் தகுந்த மாதிரி இலகுவாக்கினாலேயே கணினியில் தமிழ் வளரும். அதற்காக தமிழின் சிறப்பியல்புகளை புறக்கணிக்க வேண்டியதில்லை. “'ங'-போல் வளை” என்று ஒரு பழமொழியே இருக்கிறது. உயிர்மெய் எழுத்துக்களில் 'ங' வரிசையில் 'ங' தவிர ஏனை எழுத்துக்கள் பாவனையில் இல்லை. ஆயினும் 'ங'-விற்காக அந்த வரிசையில் உள்ள ஏனைய 11 எழுத்துக்களையும் தமிழில் வீணாக வைத்துக் கொண்டிருக்கும் அதேவேளையில் பல ஆங்கிலச் சொற்களைச் சரியாக உச்சரிப்பதற்கான தமிழ் எழுத்துக்கள் எங்களிடம் இல்லை. வடமொழியின் ஆதிக்கம் தமிழிற்குள் பல சொற்களைப் (ஜ,ஸ,ஷ,ஹ) புகுத்தியது. அப்போதிருந்த தமிழறிஞர்கள்/ஆர்வலர்கள் இதைச் செய்திருக்கிறார்கள். ஆகவே தமிழ் மொழிக்கு வெறுமனே செம்மொழி என்கின்ற அந்தஸ்தை மட்டும் அளித்துவிட்டு தங்கள் கடமை முடிந்து விட்டது என்று உரியவர்கள் எண்ணாமல் தமிழ் மொழி தன் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியை (“கன்னித் தமிழோ கம்பன் கவியோ...” என்று பாடாமல் இனி “கன்னித் தமிழோ கணினித் தமிழோ...” என்று வேண்டுமானாலும் பாடலாம்.) அடைய உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய தருணம் இது.
இல்லையேல் “தக்கன பிழைக்கும் அல்லன அழியும்.” என்பதற்கு எடுத்துக்காட்டாக தமிழ்மொழியும் அமைந்துவிடும்.