Wednesday, September 30, 2009

தமிழ்மொழி தன்னைத் தக்கவைத்துக் கொள்ளுமா?



“தக்கன பிழைக்கும்” என்றார் சாள்ஸ் டாவின்.

செம்மொழியாகிய எம்மொழியாம் தமிழ்மொழி எதிர்காலத்தில் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளுமா?

இவ்வினாவினை எனக்குள் விதைத்தது அண்மையில் எனக்கு வந்தவொரு கருத்துப் பகிர்வு. பொதுவாக பெயரில்லாமல் (Anonymus) வரும் பின்னூட்டங்களுக்கு நான் பதிலளிப்பதில்லை. ஆயினும் இது, நான் திகதிகளை குறிப்பிடும் முறையைத் தவறென்று கூறி “நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே” என்கின்ற எச்சரிக்கையுடன்(?) வந்ததாலும், அந்தத் குற்றச்சாட்டு சரியென்று நானும் உணர்ந்ததாலும் அதற்கு நானும் பதிலளித்திருந்தேன். பின் அந்த நக்கீரர் தன்னை எனக்கு அறியத்தந்த போது மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது. எனது மரியாதைக்குரிய நபர்களில் அந்தக் கலைஞனும் ஒருவர். பல கலைஞர்களை உருவாக்கிய பெருமைக்கும் சொந்தக்காரர் அவர்.

இப்போதெல்லாம் தமிழ் திகதிகளை பெரும்பாலும் தின நாட்காட்டிகளிலும் மற்றும் அழைப்பிதழ்களிலும் மட்டுமே காணக்கூடியதாய் இருக்கிறது. மற்றம்படிக்கு நாங்கள் யாவருமே ஆங்கிலத் திகதியினையே எமது வழக்கில் கொண்டிருக்கின்றோம். சரி, உலக நியமத்திற்கு அமைவாக அதைத்தான் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் நிச்சயமாக அதனால் பல சிக்கல்கள் உருவாகும். இலக்கங்களில் பயன்படுத்துகையில் மொழிப் பிரச்சனை இல்லை. ஆனால் அதில் உள்ள சிக்கல் என்னவென்றால் சில இடங்களில்/நாடுகளில் நாள்/மாதம்/ஆண்டு (dd/mm/yyyy) என்றும் வேறுசில இடங்களில்/நாடுகளில் மாதம்/நாள்/ஆண்டு (mm/dd/yyyy) என்றும் பாவனையில் இருப்பதால் பல சந்தர்ப்பங்களில் சரியான திகதியை அறிவது கடினம். உதாரணமாக 08/09/2009 என்கின்ற திகதியை எடுத்துக் கொண்டால் அது ஒன்பதாம் மாதத்தின் (September) எட்டாம் நாள் என்பதா அல்லது எட்டாம் மாதத்தின் (August) ஒன்பதாம் நாள் என்பதா என்கின்ற குழப்பத்தை உருவாக்கிவிடும். ஆனால் 14/09/2009 என்பதிலோ அல்லது 09/14/2009 இந்தப் பிரச்சனை இல்லை. இது சம்பந்தமான நடைமுறைச் சிக்கல்களை, கணினியில் database சம்பந்தமான வேலைகளில் உள்ளவர்கள் அறிந்திருப்பார்கள். எழுத்து வழக்கில் இந்தச் சிக்கலை எவ்வாறு கையாள்வது?

ஆங்கில ஆண்டு January யில் தொடங்கி December இல் முடிவடைவதாலும் அதற்கேற்ப தற்போது தமிழ் ஆண்டு தை மாதத்தில் தொடங்கி மார்கழி மாதத்தில் முடிவடைவதாலும், இன்றைய திகதியினை எழுத்தில் குறிப்பதற்கு புரட்டாதி 30 எனப் பயன்படுத்தலாம் என்றே எண்ணியிருந்தேன். அது தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டதை ஏற்றுக் கொண்டதால் இலங்கைப் பத்திரிகைகள் எவ்வாறு இதைக் கையாள்கின்றன என்று பார்த்த போது அவை தமிழ் திகதியினைத் தமிழிலும் ஆங்கில திகதியினை ஆங்கிலத்திலுமே அச்சடிக்கின்றன. இன்றைய திகதியை September 30 என்று அழைப்பதே சரியானதாகத் தோன்றுகிறது. ஆயினும் இதனை ஆங்கிலம் கலவாமல் தமிழில் எழுதும் போது செப்ரம்பர் என்று எழுதுவதா அல்லது செப்டம்பர் என்று எழுதுவதா? அதே போல் இலங்கையைச் சேர்ந்தவர்கள் August மாதத்தினை ஓகஸ்ற் என்று உச்சரிக்கும்/எழுதும் அதேவேளையில் இந்தியாவில் இருப்பவர்கள் ஆகஸ்ட்டு என்றும் சிலர் ஆகஸ்து என்றும் உச்சரிக்கறார்கள்/எழுதுகிறார்கள். ஆக தமிழ் மொழியில் இந்த மாதங்களைக் குறிப்பதில் சிக்கல்கள் உண்டாகின்றன.

வேற்று மொழிச் சொல்லைத் தமிழ்மொழிக்குள் உள்வாங்குவது தவறல்ல. அப்படி உள்வாங்கினால்தான் அந்தமொழி வளரும் என்று உறுதியாக நம்புகின்றேன். ஆயினும் அப்படி உள்வாங்கப்படும் சொல் ஒரே சொல்லாகவும் (spelling) ஒரே உச்சரிப்பையும் கொண்டதாகவும் அமைந்தாலே அது அழகாக இருக்கும் என்றே நான் நினைக்கின்றேன்.
ஆங்கிலத்தில் இங்கிலாந்தின் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் வேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக இங்கிலாந்து ஆங்கிலத்தில் colour என்கின்ற சொல்லிற்கு அமெரிக்க ஆங்கிலத்தில் color என்கின்ற சொல்லே பயன்படுத்தப் படுகிறது (spelling வித்தியாசம்). இப்படியானவற்றை வைத்துக் கொண்டு தமிழிலும் அவ்வாறே பயன்படுத்தலாம் என்று கூறுவதிலும் பார்க்க பொதுவான ஒரு சொல்லைப் பயன்படுத்துவதே சிறந்ததாயிருக்கும் என்று நான் கருதுகின்றேன். அண்மையில் இங்கே பதிவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்திற்கு எதேச்சையாக நானும் சென்றிருந்தேன். அங்கிருந்த பதிவர்களில் பலர் தங்களது எழுத்துப்பிழைகளைத் திருத்துவதற்கு தமிழில் ஒரு எழுத்துப்பிழைதிருத்தி (spell checker) இல்லையே என்று கவலை தெரிவித்திருந்தார்கள். ஏற்கனவே தமிழ் எழுத்துப் பிழைதிருத்தி ஒன்று (https://addons.mozilla.org/en-US/firefox/addon/8902) Mozilla Firefox இணைய உலாவியிற்கு addon வடிவில் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பினும் அதில் இன்னமும் பெருமளவிலான சொற்கள் இணைக்கப்படவேண்டி இருக்கின்றன.

ஓலைச்சுவடிகளில் எழுதிப் பின் அச்சிலேற்றி தமிழை வளர்ப்பதென்பதெல்லாம் மலையேறிப்போய்விட்ட இலத்திரனியல் காலம் இது. விஜயதசமி அன்றோ அல்லது தைப்பூசம் அன்றோ தட்டில் அரிசி பரவி ஏடுதொடக்குவதெல்லாம் வருங்கால சந்ததியினருக்கு பழைய பஞ்சாங்கம். இனி ஏடு தொடக்குவது கூட (அப்படி ஒரு சடங்கு செய்யவேண்டும் என்று விரும்புவர்கள்) கணினியில் தான் தொடங்குவார்கள். ஆக தமிழையும் கணினியில் கையாள்வதற்குத் தகுந்த மாதிரி இலகுவாக்கினாலேயே கணினியில் தமிழ் வளரும். அதற்காக தமிழின் சிறப்பியல்புகளை புறக்கணிக்க வேண்டியதில்லை. “'ங'-போல் வளை” என்று ஒரு பழமொழியே இருக்கிறது. உயிர்மெய் எழுத்துக்களில் 'ங' வரிசையில் 'ங' தவிர ஏனை எழுத்துக்கள் பாவனையில் இல்லை. ஆயினும் 'ங'-விற்காக அந்த வரிசையில் உள்ள ஏனைய 11 எழுத்துக்களையும் தமிழில் வீணாக வைத்துக் கொண்டிருக்கும் அதேவேளையில் பல ஆங்கிலச் சொற்களைச் சரியாக உச்சரிப்பதற்கான தமிழ் எழுத்துக்கள் எங்களிடம் இல்லை. வடமொழியின் ஆதிக்கம் தமிழிற்குள் பல சொற்களைப் (ஜ,ஸ,ஷ,ஹ) புகுத்தியது. அப்போதிருந்த தமிழறிஞர்கள்/ஆர்வலர்கள் இதைச் செய்திருக்கிறார்கள். ஆகவே தமிழ் மொழிக்கு வெறுமனே செம்மொழி என்கின்ற அந்தஸ்தை மட்டும் அளித்துவிட்டு தங்கள் கடமை முடிந்து விட்டது என்று உரியவர்கள் எண்ணாமல் தமிழ் மொழி தன் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியை (“கன்னித் தமிழோ கம்பன் கவியோ...” என்று பாடாமல் இனி “கன்னித் தமிழோ கணினித் தமிழோ...” என்று வேண்டுமானாலும் பாடலாம்.) அடைய உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய தருணம் இது.

இல்லையேல் “தக்கன பிழைக்கும் அல்லன அழியும்.” என்பதற்கு எடுத்துக்காட்டாக தமிழ்மொழியும் அமைந்துவிடும்.

Sunday, September 27, 2009

தமிழ் அழிகிறது. நடிக்கத் தெரியாத இயக்குனர் சேரன் ஆட்டோகிராப் தர மறுத்தார்


இன்றைய காலை எனக்கு, அதிகாலை 5.00 இற்கே ஆரம்பித்து விட்டது. 4.45 இற்கு ஒலிஎழுப்பி நித்திரையைக் குழப்பிய விழிப்புமணி (Alarm) ஓசையுடன் ஆரம்பித்த உறக்கத்திற்கும் விழிப்பிற்குமான போரில் 5.00 மணியளவில் உறக்கத்தைத் தோற்கடித்து விழிப்பு அதிசயமாய் வெற்றிவாகை சூடிக்கொண்டது. காலைக்கடமைகளாய் வரித்துக்கொண்டவற்றை முடித்து, இருப்பிடம் விட்டு வெளியேற நேரம் காலை 6.15 ஐத் தாண்டி விட்டிருந்தது. மென்பனிக்குளிரின் சில்லிடலுக்கு உடலில் ஏறியிருந்த உஷ்ணம் குறைவது இதமாய் இருந்தது.

நீண்டநாட்களின் பின்னானவொரு இயற்கை மதிய உணவினை முடித்துவிட்டிருக்கையில், மாலை 3.15 மணியளவில், இங்கு வந்த பின்னர் அறிமுகமாகியிருந்த அம்மா ஒருவரின் அழைப்பு. இன்று மாலை சிங்கப்பூர்க் கவிமாலையினரின் 10ஆம் ஆண்டு நிறைவையொட்டி பொது நூலகத்தில் கவிதைநூல் வெளியீடு இருப்பதாகவும், தனது கவிதைகளும் அந்நூலில் பிரசுரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். வழமையாக இங்கே நடைபெறும் விழாக்களுக்கு அவரே தன்னுடன் என்னை அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால் இம்முறை அவர் அழைக்கையில் நான், அவரிடத்தில் இருந்து வெகுதொலைவில் இருந்தேன். அத்துடன் இந்நிகழ்ச்சிக்கு சிங்கப்பூர் சட்ட அமைச்சர் திரு. சண்முகம் அவர்களுடன் சிறப்பு விருந்தினராக சேரனும் வருவதால் என்னை வரமுயற்சிக்குமாறு அறிவுறுத்தினார்.


கவிமாலைப் பொழுது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சேரன் யாராயிருக்கும் என்பது பிடிபடவில்லை. பெரும்பாலும் இலங்கையைச் சேர்ந்த ஒரு கவிஞராக இருக்கும் என நினைத்துக் கொண்டேன். ஏனெனில் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றவொரு கவிமாலை நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து தெளிவத்தை ஜோசப் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். இலங்கையிலிருந்து சேரன் என்கின்ற பெயரில் ஒரு பிரபலமான கவிஞரை நான் கேள்விப்பட்டதில்லை. நெல்லைக் க.பேரன்-ஐ அறிந்திருக்கிறேன். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார்.


இருந்தாலும் பொதுநூலகத்தின் அரங்கினை மாலை 4.45 மணியளவில் சென்றடைந்தேன். ஒருசிலரே அங்கே காணப்பட்டனர். 5.00 மணியளவில் அரங்கினுள் சென்று அமர்ந்தேன். அப்போதுதான் மேடையைக் கவனித்தேன். அதிலிருந்தே இயக்குனர் மற்றும் நடிகரான திரு. சேரன் அவர்களே சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பதை அறிந்து கொண்டேன். 5.15 வரை அதிகம் கூட்டமில்லாதிருந்த இடம் நிறையத் தொடங்கியது. அவர்கள் குறிப்பிட்டிருந்ததைப் போன்று சரியாக மாலை 5.30 இற்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. இயக்குனர் சேரன் எந்தவித பந்தாவுமில்லாமல் சாதாரண உடையுடன் வந்து முன்வரிசையில் அமர்ந்து கொண்டார்.


கவிமாலைப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றவர்களின் கவிதைகளைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் திரு சண்முகம் அவர்களும் விழாவில் பங்கேற்றுக் கொண்டார். தொடர்ந்து “பொன்மாலைப் பூக்கள்” கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டினை இயக்குநர் திரு சேரன் அவர்கள் நடாத்தி வைத்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை மேடைக்கு வந்து நூல்களைப் பெற்றுக் கொள்ளுமாறு அடுத்தடுத்து விடுக்கப்பட்ட வேண்டுகோளினை அடுத்து நானும் சென்று ஒரு நூலினைப் பெற்றுக்கொண்டேன். அத்தனை பேருக்கும் சலிக்காமல் இன்முகத்துடன் கைகொடுத்து களைத்திருந்தார் சேரன். அவரது கைகள் கடினமாயிருக்கும் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் அவை மிகவும் மிருதுவாகவேயிருந்தன. பொதுவாகவே ஒருவருடன் கைகுலுக்கும் போது என்னையறியாமலேயே என் மனம் அவரது கையின் மென்மையை எடைபோட்டுவிடும். இது நபிகள் அவர்களின் வாழ்க்கையில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தினை பாடசாலைக்காலங்களில் பாடப்புத்தகத்தில் படித்ததனால் ஏற்பட்ட விளைவு என்றே நினைக்கிறேன். மீண்டும் எனது இருக்கைக்கு வந்து கவிதைத் தொகுப்பினை பிரட்டினேன்.


“நீயும் போய் சிநேகாவைத் தொட்டு நடிச்ச கைக்கு, கைகொடுத்திட்டு வா.” என்கின்ற குரல் கேட்டு திரும்பிய எனக்கோ அதிர்ச்சி. அதைச்சொன்ன வாலிபருக்கு வயது நிச்சயம் 65 இற்கு மேல் இருக்கும். தன்வயதொத்த இன்னொரு இளைஞரிடம்(?) அவர் அதனைக் கூறிக்கொண்டிருந்தார். இருவருமே எனக்கு அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். புத்தகத்தினைப் படிப்பது போல் பாவனை செய்து கொண்டே அவர்களை அவதானித்தேன. முதலில் கூறியவர் தனது சட்டைப்பையில் இருந்து ஒரு பேனாவைத் தனது நண்பருக்கு எடுத்துக்காட்டி, இந்தப்பேனையாலே தான் சிநேகாவிடம் ஆட்டோகிராப் வாங்கியதாகப் பெருமைப்பட்டுக் கொண்டார். பின் அவரும் போய் சினேகாவைத் தொட்டு நடித்த கைக்கு கைகொடுத்துவிட்டு வந்தது வேறுவிடயம்.


சட்ட அமைச்சர் திரு. சண்முகம் அவர்கள் தனதுரையில் தமிழ்மொழி அழிந்து வருவதையிட்டு தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார். பத்தாண்டுகளுக்கு முன்னர் ஏறத்தாழ 50% மான தமிழ்க்குடும்பத்தினர் இங்கே தங்களுக்குள் தமிழில் உரையாடிக் கொண்டதாகவும், தற்போது அது 20% மாகக் குறைந்து விட்ட தகவலையும் அவர் தெரிவித்தார். உண்மைதான். காலையில் நான் சென்றிருந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு தமிழ் மாணவனுக்கு தமிழில் உரையாடத் தெரியவில்லை. அவரால் மற்றவர்கள் பேசுவதை ஓரளவிற்கு புரிந்து கொண்டாலும், ஒரு வார்த்தைகூட தமிழி்ல் பேசுவதற்கு அவரால் இயலவில்லை.


பின் திரு. சேரன் அவர்களைப் பற்றி அறிமுக உரையாற்றிய பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் இயக்குனர் சேரனுக்கு நடிக்கத் தெரியாது என்றார். ஆமாம்! பின்னர் சேரன் அவர்களின் உரையிலும் அதை அறியக்கூடியதாய் இருந்தது. அவர் உரையாற்றுகையில் எவ்வித நடிப்புமி்ன்றி வெளிப்படையாகவே பேசினார். சேரன் அவர்களின் சிறப்பியல்புகள் பற்றி மேலும் விபரித்த திரு இளங்கோ அவர்கள், சிங்கப்பூர் விமானநிலையத்தில் பணத்தாள் ஒன்றில் கையெழுத்திடுமாறு கேட்ட இரசிகர் ஒருவருக்கு பணத்தாளில் ஆட்டோகிராப் இட இயக்குனர் சேரன் அவர்கள் மறுத்துவிட்டதைக் கூறிப் புகழ்ந்தார்.


இயக்குனர் சேரன் அவர்களின் படங்களை விரும்பிப் பார்த்திருந்தாலும் அவரின்மேல் தனிப்பட்ட ரீதியில் எந்தவிதமான அபிமானமும் இன்றி ஏனைய பெரும்பாலான (பெரும்பாலான என்பதைக் கவனிக்கவும்) திரையுலகத்தினரைப் போலவே அவரையும் பத்தோடு பதினொன்றாக எண்ணியிருந்தேன், இறுதி நிகழ்வாக இடம்பெற்ற அவரின் சிறப்புரையினைக் கேட்கும் வரை. அதன்பின்னான கேள்வி பதில் நிகழ்வில் அவர் பதிலளித்த விதமும் வெளிப்படையாகவே தன் தவறுகளை நியாயப்படுத்தாமல் அதை ஒப்பக் கொண்ட விதமும், அவர் மேலான மரியாதையை மிகவும் உயர்த்தின.

(இந்தப்பதிவு நீண்டு விட்டதால் இவை பற்றிய தகவல்கள் அடுத்த பதிவில்)

மறக்கமுடியாத சரஸ்வதி பூசையும், சாப்பாடும்


அது 2003ஆம் ஆண்டு காலப்பகுதி. அக்பர் விடுதியை ஞாபகப்படுத்தும் விதத்திலேயே தெஹிவளையில் எமது வசிப்பிடமும் அமைந்திருந்தது. அதே விடுதி நண்பர்கள் பலரும் ஒன்றாக, மீண்டும் அக்பர் வாழ்க்கையை நாம் அனுபவித்துக் கொண்டிருந்தோம். அந்த வருடத்தைய வீட்டுப்பூசையன்று என்னையும் இன்னொரு நண்பனையும் தவிர ஏனையவர்கள் கொழும்பில் வசிக்கும் தங்களின் உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டிருந்தனர்.

எங்கள் இருவருக்கும் அவல், சுண்டல் எல்லாம் சாப்பிடவேண்டும் என்கின்ற அவா. கோவிலுக்குப் போகலாமா என்றான் நண்பன். எனக்கோ கோவிலுக்குச் செல்ல இஷ்டமில்லை. ஆயினும் இருவருக்குமே சரஸ்வதி பூசைச் சாப்பாடு சாப்பிட்டே ஆகவேண்டும் என்கின்ற கட்டாயம். அதற்கு உணவின் மீதான பிரியம் மட்டுமல்ல, மற்றைய நண்பர்களிடம் கடி வாங்காமல் இருக்கவேண்டுமே என்கின்ற மானப்(?) பிரச்சனை. சிறிது நேரம் யோசித்து விட்டு என்னுடன் பணியிடத்தில் அறிமுகமாகியிருந்த வேறொரு நண்பரின் வீட்டுக்குச் செல்வதென்கின்ற முடிவுடன் வெள்ளவத்தைக்குப் புறப்பட்டோம்.

அந்த நண்பரின் வீட்டில் இப்படியான கொண்டாட்டங்கள் எல்லாம் மிகச் சிறப்பாகச் செய்யப்படும். அங்கே சென்றபோது அவர்கள் வீட்டில் பூசை நடைபெற்றுக் கொண்டிருந்தது. எம்மைக் கண்டதும் நண்பரின் தாயார் இருந்து சாப்பிட்டு விட்டுப் போகும்படி கூறினார்.

“ஏன் அன்ரி? என்ன விசேசம்?” என்றோம்.

“இண்டைக்கு சரஸ்வதிபூசை வீட்டில செய்யிறம்.” என்றார்.

“ஓ! அப்ப சரஸ்வதி பூசை தொடங்கீற்றுதா?” என்றான் என்னுடன் வந்திருந்த நண்பன்.

“பரவாயில்லை அன்ரி. நாங்க இன்னொரு நாளைக்கு வாறம். இண்டைக்கு வேற அலுவல் ஒண்டு இருக்கு.” என்றேன் நான்.

உடனேயே நாங்கள் வந்திருந்த வீட்டுக்குரிய நண்பர் “அதெல்லாம் முடியாது. இருந்து சாப்பிட்டிட்டுத்தான் போக வேணும். இன்னும் கொஞ்ச நேரத்தில பூசையெல்லாம் முடிஞ்சிரும்.” என்றவாறே பூசையறைக்குள் சென்று விட்டார்.

“இல்ல, நாங்க போகவேணும்.” என்றவாறே தலையைச் சொறிந்தான் என்னுடன் வந்திருந்த நண்பன்.

மற்ற நண்பரின் தாயாரின் வற்புறுத்தலின் பேரில் ஒருவாறாக இருவரும் இருந்து சாப்பிட்டுவிட்டுச் செல்வதற்கு இணங்கிக் கொண்டோம். சிறிது நேரத்திலேயே சக்கரைப் பொங்கல், அவல், சுண்டல் உழுந்து வடையென வயிறும் மனமும் நிறைந்துவிட விடைபெற்றவாறே வீட்டை விட்டு விலகி வீதிக்கு வந்தவுடன் ஆரம்பித்த சிரிப்பு தெஹிவளையில் எமது இருப்பிடம் வந்து சேர்ந்த பின்னும் நிற்கவில்லை. மறுநாள், என்றைக்கேனும் நான் மீண்டும் எழுத ஆரம்பிக்கும் காலங்களில் இந்நிகழ்ச்சியைப்பற்றி கட்டாயம் எழுதுமாறு என்நண்பன் கேட்டுக்கொண்டான்.

அதற்கடுத்தடுத்த வருடங்களில் வந்த சரஸ்வதி வீட்டுப்பூசையன்று நாங்களே அவல் மற்றும் சுண்டல் செய்து கொண்டதும், வேறு நண்பர்களின் இடங்களில் கோழிப்பொங்கல் செய்து பகிர்ந்து கொண்டதெல்லாம் வேறு விடயம்.

Friday, September 25, 2009

நிலைமாறும் உலகம்.


இன்றைய நடுநிசி தாண்டிய நள்ளிரவில், தொடரூர்ந்து (MRT) விட்டு, கூடவந்த நண்பர்கள் விலகி எனது இருப்பிடம் நோக்கிய நடைப்பயணத்தில் IPod இனை அணிந்து கொள்ள, “நிலைமாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி....” என்கின்ற பழைய பாடல் நெஞ்சத்தைக் கிள்ளியது.

இருப்பிடம் அடைந்து இணையத்தில் இணைகையில் “மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது.” என்கின்ற மிகப்பிரபலமான வாக்கியம் (Change is the one that never changes in the world) கண்ணில் பட்டது.

மின்னஞ்சலில் வாசிக்கப்படாதிருந்த மின்மடல்களில் ஒன்று சில வாரங்களுக்கு முன்னர் Yahoo Geocities யிடமிருந்து வந்திருந்தது.

ஆகா! அவர்களும் கடையை மூடுகிறார்களாம்.

2000ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பல்வேறு நிறுவனங்கள் இலவச இணையத்தள சேவைகளை வழங்கிக் கொண்டிருந்தாலும், அப்போதெல்லாம் நிரந்தர நம்பகத் தன்மை கொண்டதாக Yahoo குழுமத்தின் geocities சேவையே விளங்கியது. பல தளங்களில் உருவாக்கி வைத்திருந்த இலவச இணையத்தளங்கள் பலவும் சிலமாதங்களுக்குத் தொடர்ச்சியான கவனிப்பில்லாமல் இருக்கையில் அந்த சேவை வழங்குனர்களால் துண்டிக்கப்பட்டிருந்தன. ஆயினும் Yahoo குழுமம் தனது சேவையினைத் தொடர்ச்சியாக வழங்கி அதன் கொள்கைகளைப் பேணிப் பாதுகாத்துக் கொண்டிருந்தது. இப்போது அந்த நம்பிக்கையிலும் கைவைத்து விட்டார்கள். வரும் ஐப்பசி (October) 26 ஆம் திகதியுடன் Yahoo குழுமத்தின் Geocities தனது இலவச இணையத்தள சேவையினை நிறுத்திக் கொள்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டார்கள்.

அனிச்சையாய் mouse pointer கணினியின் வலப்பக்க கீழ் மூலையில் சென்று ஓய்வெடுக்க September 26, 2009 என இன்றைய தேதி மின்னியது.

ஒவ்வொரு கணங்களும் மின்னல்வேகத்தில் ஓடிமறைய காலச்சக்கரம் சீக்கிரமாய்ச சுழன்று செல்வதான உணர்வுகள்.

சில தசாப்தங்களுக்குள் எத்தனை மாற்றங்கள். இப்படியான ஓர் தினத்தில்தான் பாரதத்தின் பணநோட்டுக்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் காந்தியின் (மகாத்மா) வேதனையுடன் கூடிய அவமானம் கலந்த கண்ணீரில் கரைந்து போயிருந்தன.

பாரதத்தின் தேசபிதாவாகக் கருதப்படும் மகாத்மா காந்தி, பாகிஸ்தான் பிரிந்து சென்ற பின்னர் அந்நாட்டுக்கு இந்திய திறைசேரியிலிருந்த பகிர்நதளிக்கப்படாதிருந்த நிதியினைப் பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கச் சொல்லி, இந்திய அரசிற்கு எதிராக அவரது பாணியிலான அகிம்சாவழியிலான உண்ணா நோன்பினை மேற்கொண்டிருந்தார். அப்போதைய பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களும், பாரதத்தின் பண நெருக்கடிக்கள்ளும் மகாத்மாவின் போராட்டத்திற்கு மதிப்பளித்திருந்தார்.

பின் பேரன்கள் காலம், மாற்றம் மட்டுமே மாறாதது என்பதை அதுவும் உணர்த்தியது.

Wednesday, September 16, 2009

இன்றுடன் நிறைவுற்ற இன்று ஒரு தகவல்


இன்றைய மாலைநேரச் செய்தி இந்தத் தகவலைச் செவியில் அறைந்தது. தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள் இன்று (16 புரட்டாதி 2009) இயற்கையெய்தி விட்டார். இனிமேல் எமக்கு இன்று ஒரு தகவல் சொல்ல அவர் வரமாட்டார்.

பிரபலமான எழுத்தாளரும் வானொலி மற்றும் தொலைக்காட்சிப் பேச்சாளருமான அமரர் தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள், தமிழ் உலகால் நன்கு அறியப்பட்டவர். தன் தனிப்பட்ட பாணியிலான பேச்சாற்றலினால் கேட்பவர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். அவரின் 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியினை அநேகமாக தமிழ் வானொலி நேயர்கள் அனைவருமே இரசித்திருப்பார்கள். யாழ்ப்பாணத்தில் 'வலம்புரி' நாளிதழ் தினந்தோறும் இவரின் 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியினைப் பிரதியெடுத்து வெளியிட்டு வந்தது.

நல்லவொரு கருத்தினைக் கூறிவிட்டு முத்தாய்ப்பாக அதற்குப் பொருத்தமானவொரு நகைச்சுவைக் கதையையும் கூறி எம் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர். முதன்முதலில் அவரது நிழற்படத்தினைப் பார்த்த பொழுது இவரா அவர் எனச் சந்தேகமாகவே இருந்தது. கருத்துக்களில் மட்டும் சொல்லாது வாழ்க்கையிலும் செய்து காட்டிய மிக அரிய எளிமையான மனிதர் அவர். அவரை முதற்தடவை பார்க்கும் எவருமே இந்த மனிதருக்குள் இப்படியொரு திறமையிரக்கும் என நம்பமாட்டார்கள். அவரது ஒரு நிகழ்ச்சியில் அவரே இதைப்பற்றிக் கூறியிருக்கிறார். அது அவர் தொலைக்காட்சியில் அறிமுகமாகியிராத காலம். ஆனாலும் வானொலியினூடாக அவரது 'இன்று ஒரு தகவல்' மூலம் தென்கச்சி கோ.சுவாமிநாதன் என்கின்ற பெயர் பிரபலமாகியிருந்தது. ஒருமுறை அவர் பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கையில் அவரின் பின்னால் இருந்தவர்களில் ஒருவர், மற்றவரிடம் “முன்னுக்கிருப்பவரைப் பார்த்தால் தென்கச்சி கோ.சுவாமிநாதன் போல் உள்ளது.” என்றுகூற அதற்கு மற்றவர் “இருக்காது, அவர் எவ்வளவு அறிவாளி. இவரைப் பார்த்தால் படித்தவர் போலவா தெரிகிறது?” என்றாராம். நம்மாளோ (அதாங்க தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள்) எதையுமே காட்டிக்கொள்ளாமல் அமைதியாய் இருந்துவிட்டாராம்.

அண்மையில் இவரிடம், சிரிக்கச் சிரிக்க கதை சொல்கிறீர்களே? ஒரு குட்டிக்கதை மூலம் கேட்பவர்களைக் கண் கலங்கச் செய்ய முடியுமா? எனக் கேட்டதற்கு அவர் அளி்த்த பதில்;

நல்ல இதயமுள்ள வாசகர்களைக் கண்கலங்கச் செய்ய இன்றைக்குக் குட்டிக்கதை கூடத் தேவையில்லை. ஒரு வார்த்தை போதும்.

''ஈழத் தமிழர்கள்!''


(தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுக்கு எமது இதய அஞ்சலிகள்)