Thursday, February 25, 2010

வேரென நீயிருந்தாய்... (9)

அன்றும் ஒரு வெள்ளி மாலை. தீவிர ஆங்கில வகுப்புகள் (Intensive English course) முடிவதற்கு ஒரு வாரமே எஞ்சியிருந்தது. முதலாமாண்டிற்கான ஆய்வுகூடங்களுக்கு மாணவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய நிரல் ஆய்வுகூடங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வரவே, யார்யார் எங்கள் group mates ஆக வரப்போகின்றார்கள் என்கின்ற ஆவலுடன் ஆய்வுகூடங்களுக்கு விரைந்தோம்.

Miss. N. Jeyakody
Mr. S. Jeyanthan

அனைத்து ஆய்வுகூடங்களிலும் என்னுடன் ஒரு தமிழ்ப்பெண்ணின் பெயரும் சேர்ந்தே இருப்பது தெரிந்ததும் மனதுக்குள் பரவசம் ஒன்று புகுந்து கொண்டது. யாரந்த ஜெயக்கொடி என்பதை அறிவதற்கு ஆவல்பட்டது நெஞ்சு.

இருப்பிடத்திற்கு திரும்பலாம் என்று நினைக்கையில், தோளில் ஒரு கை விழுந்தது. திரும்பினேன். வரப்பிரகாஸ் நின்றிருந்தான்.

“எப்பிடி இருக்கிறீங்க ஜெயந்தன்? கண்டு கனகாலம் ஆச்சு.”

“இருக்கிறன். நீங்க எப்பிடி இருக்கிறீங்க வரப்ஸ்?”

இருவரும் உயர்தர வகுப்புகளில் ஒன்றாகவே இருந்து படித்திருந்தாலும் எங்களுக்கிடையிலான உரையாடல்கள் நீங்கள், நாங்கள் என்ற வகையிலேயே இருந்து வந்தது. பொதுவாக என்னுடன் நீங்கள் என்று சொல்லி உரையாடும் சமவயதுக்காரர்களை நானும் நீங்கள் என்று சொல்லிக் கதைப்பதையே வாடிக்கையாகக்கொண்டிருந்ததாலும், வரப்பிரகாஸிற்கும் எனக்குமிடையில் நெருங்கிய சினேகிதம் ஏற்படாதிருந்த காரணத்தினாலும் நீங்கள், நாங்கள் என்றவாறே எங்களிற்கிடையிலான உரையாடல்கள் இருந்து வந்தன. ஏறத்தாழ இரு வருடங்களின் பின் முதல்தடவையாக இன்றே அவனைச் சந்திக்கின்றேன். ஆள் ஊரில் இருந்ததிற்கு ஒரு சுற்றுப் பெருத்திருந்தான்.

“என்ன மாதிரி ராகிங்? கஸ்ரமா?”
-என்றான்.

“என்ன இப்ப வந்து இப்பிடிக்கேக்கிறீங்க?”
-அவனை ஆச்சரியத்துடன் கேட்டேன்.

“இல்ல. நான் இன்னும் றூம் ராக்கிங் ஒருத்தரிட்டையும் வாங்கேல்ல. கனபேர் வரச் சொல்லியிருக்கிறாங்கள். போக நேரம் கிடைக்கேல்லை.”

மனதின் ஒரு மூலைக்குள் தாழ்வு எண்ணம் ஒன்று வந்து குந்துவதை உணரமுடிந்தது. நாங்கள் எல்லாம் இவ்வளவு நாளா ராக்கிங் வேண்டி எவ்வளவு கஸ்ரப்படுகிறம். எங்களைப் போல ராக்கிங் வேண்டவேண்டிய இவன் இன்னும் ஒருத்தரிட்டையும் றூம்ராக்கிங் வேண்டவில்லை என்று சொல்வதைக்கேட்கையில் மனத்தி்ற்குள் பொறாமை வந்தது. யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நினைக்கத்தெரியாத வயது அது. வயது மட்டுமல்ல அந்த சூழ்நிலையும் அப்படியாய்த்தானிருந்தது. எங்கள் மனக்கிடக்கைகளை இன்னொருவரிடம் பகிர்வதனூடாக மனத்தை அழுத்திப் பிடித்துவைத்திருக்கும் விடயங்களிலிருந்து வெளிவருவதற்கான சாத்தியங்கள் அற்று பெரும்பாலானோர் வீடுகளிலிருந்து வெகுதூரம் விலகியிருந்தோம். எங்கள் மனவேதனைகளை பகிர்ந்துகொண்டிருந்த நட்புகள் எல்லாம் ஏறத்தாழ ஒத்த நிலையிலேயேவிருந்ததால் மற்றவர்களின் இன்னல்களுடன் எங்கள் இன்னல்களை ஒப்பிட்டே ஆறுதலடைந்து கொண்டிருந்தோம். ஆக நான் பெற்ற எந்தத்துன்பமும் இவன் பெறவில்லை என்றதும் இயல்பாகவே மனத்திற்குள் அவன் மீது பொறாமை எழுந்தது. ஆயினும் அதை வெளிக்காட்டாமல் நடிக்கத் தொடங்கினேன்.

படிப்பு எங்களுக்கு நிறையவே நடிக்கக்கற்றுத்தந்திருக்கிறது. அதற்குவேறு, நாகரிகம் என்றும் பெயர் சூட்டி விட்டிருக்கிறது. யார் நன்றாக நடிக்கின்றானோ/ளோ அவனே/ளே நல்லவன்/ள் என்று நம்பவும் வைத்திருக்கிறது. அவன்/ள் அப்படி நடந்து கொண்டால் தான் நல்லவன்/ள் என்றும் எமக்கு சொல்லித் தந்திருக்கிறது. புத்தகப்படிப்பு வெறும் அறிதலைத் தருகின்றதே அன்றி புரிதலைத்தருவதில்லை. அறிதல் வேறு, புரிதல் வேறு. யாரோ சொல்வதை அல்லது எழுதி வைத்ததை நம்புவது அல்லது பின்பற்றுவது அறிதல். புரிதல் நாமாக உணர்ந்து கொள்ளுதல். அறிதல் எமக்கு வெளியில் இருந்து எம்மால் பெறப்படுகிறது. புரிதல் எமக்குள் எம்மால் உணரப்படுகிறது. இயல்பாக நடக்கும் ஒரு உளவியல் மாற்றம் அது. அதுவும் ஒருவகை ஞானம் தான். அந்த ஞானம் ஒருசிலருக்கு மட்டும் இயல்பாகவே வந்து விடுகிறது. மற்றையவர்களுக்கு அனுபவம் அதை கற்பித்துத்தருகின்றது. அந்தப் புரிதல் ஏற்பட நிறையவே அனுபவப்படவேண்டியிருக்கிறது. அல்லது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியையும் விழிப்புணர்வுடன் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. 21 வயதினில் யாரால் அப்படியானவொரு விழிப்புணர்வுடன் இருக்கமுடிகிறது? அப்படியொரு விழிப்புணர்வினைப் பெற்றிருந்தால் அது வரம். அந்த வரம் எத்தனை பேருக்கு வாய்த்திருக்கிறது? ஆனால் அந்த வயதும், பழகிவந்த சூழ்நிலையும் இயல்பாகவே உள்ளத்து உணர்வுகளை மறைக்க கற்றுத்தந்திருந்தது.

“எப்பிடி இன்னும் ஒருத்தற்றையும் றூமுக்குப் போகாமத் தப்பியிருக்கிறீங்க? நீங்க என்ன, அன்ரி-றாக்கரா?” - வியப்புடன் கேட்டேன்.

“இல்லையில்ல. நான் அன்ரிறாக்கர் இல்ல.எனக்கு கிட்டடியில CIMA final exam வருகுது. அதால நான் week-end-க்கெல்லாம் கொழும்புக்கு போயிருவன். ஆரும் வரச் சொன்னாலும் போறதில்லை. அதுதான் பயமாயிருக்கு. அம்பிட்டால் கொண்டுபோய் முறிமுறியெண்டு முறிப்பாங்கள் எண்டுதான் நினைக்கிறன்.” கவலையுடன் சொன்னான்.

அவன் கவலைப்படுவதைப் பார்த்ததும் மனத்திற்குள் ஏதோ இளகியது.

“நீங்க பயப்படுற மாதிரியெல்லாம் இருக்காது வரப்ஸ். என்ன மக்சிமம் ஐநூறு அல்லது ஆயிரம் தோப்படிக்கச்சொல்லுவாங்கள். ரிப்சும் அடிக்க வேண்டியிருக்கும். நீங்க எதுக்கும் வீட்டில இருக்கேக்க தோப்பு அடிச்சுப் பழகினீங்க எண்டால் பிறகு அடிக்கேக்க காலுக்குள்ள பிடிக்காது. சும்மா ஆக்களுக்கெண்டால் முதல் தரம் நூறு அல்லது இருநூறுதான் அடிக்கச் சொல்லுவாங்கள். உங்கள எப்பிடியும் கனக்கத்தான் அடிக்கச் சொல்லுவாங்கள். நீங்கள் அடிச்சுப் பழகிறது நல்லது.”

“அடிக்க எங்க நேரம் கிடைக்குது. சரி. நான் வெளிக்கிடுகிறன். இங்கினேக்க கண்டாங்கள் எண்டால் பிறகு அலுப்பாயிரும்.”
-என்றவாறே வரப்பிரகாஸ் விலகினான்.

இருப்பிடத்தினை நேரத்துடனே அடைந்துவிட்டிருந்தேன். மற்றையவர்களும் வந்து விடவே இரவுணவினை முடித்ததன் பின்னர் கார்ட்ஸ் விளையாட்டுடன் கொன்-னும் ஆரம்பித்தது.

“மச்சான் உனக்கு ஆராரடா குறூப்மேற்ஸ்? எனக்கு எல்லாத்திலையும் கடுவன்கள் தான்”
- என்றான் ஒருவன்.

“எனக்கும் தான்ராப்பா?”
-என்றான் கவலையுடன் மற்றொருவன்.

“எனக்கு ஒண்டுக்கு ரெண்டு மச்சான்.”
-என்றான் இன்னொருவன்.

“அடி சக்கை. அப்ப workshop-ல மூண்டு மடங்கு வேலை செய்யவேணுமெண்டு சொல்லு.”

“Surveying-ஐ விட்டிட்டாய் மச்சான். அப்ப தியோடலைற் போல் (pole) எல்லாத்தையும் அண்ணைதான் காவவேணும்.”

“உங்களுக்குப் பொறாமையடா. அதுதான் இப்பிடிக் கதைக்கிறீங்கள். மவனே ஆரெண்டாலும் சும்மா என்னோட கதைக்கிறதெண்டு சாட்டிக் கொண்டு lab-க்குள்ள வாளிவைக்க வாங்கோ அப்பத் தெரியும்.”

“ஜெயந்தன்! உனக்கு ஆரடா குறுப்மேற்ஸ்?”

மௌனமாயிருந்த என்னையும் கலாய்க்கத் தொடங்கினார்கள்.

“ஆள் பம்மிறதைப் பாத்தால் விளங்கேல்லையே.”

“ஆரடா? தமிழா விசிறியா?”

“தமிழ்“

“ஆராள்?”

“ஆரெண்டு தெரியேல்லை. ஆனா பேர் ஜெயக்கொடி எண்டு கிடக்கு”.

“ஜெயக்கொடியா? கேள்விப்பட்ட பேராத் தெரியேல்ல. எடுறா அந்த லிஸ்ர. எல்லாத் 'தானா'-ப்பெட்டைகளின்ர டீரெய்ல்சும் இருக்குத்தானே.”

list எடுத்துத் தேடினோம்.

“இவள் சுத்திப்போட்டாள் மச்சான். இவளின்ர டீரெய்ல்ஸ் எங்களிட்ட இல்லை.”


பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8

No comments:

Post a Comment