Friday, August 19, 2011

வேரென நீயிருந்தாய்...(33)

அதுவொரு சனிக்கிழமை, மாலைச்சூரியன் தன்னை மறைத்துக் கொள்ள ஆரம்பித்திருந்தான். இறுதியாண்டு விரிவுரைகள் முடிவடைவதற்கு சில வாரங்களே எஞ்சியிருக்கையில் எமது கனிஷ்ட மாணவர்களால் எங்களுக்கான பிரியாவிடை நிகழ்ச்சி Drawing hall இற்குள் நடாத்தப்பட்டுக் கொண்டிருந்தது. எமது பல்கலைக்கழக வாழ்வின் இறுதி நிகழ்ச்சி அது.

இப்போதுதான் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்ததது போல் இருக்கிறது. ஆனால் அதற்குள் நான்கு வருடங்கள் ஓடி மறைந்து விட்டிருந்தன. காலம் வெகுவேகமாகக் கரைந்து கொண்டிருப்பது புரிந்தது. இந்தக் காலச் சுழலில் தான் எத்தனை மாற்றங்கள்?

சிறிலங்காவின் பொருளாதாரம் ஜூலை 24ம் திகதி கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்கியழிப்பு நடவடிக்கையுடன் ஆட்டம் காணத்தொடங்கியிருந்தது. தமிழர்தரப்பு தன் படைத்துறை மேலாண்மையைப் பறைசாற்றியிருப்பதால் விரைவில் வெளிநாடுகளின் தலையீட்டுடனான சமாதான நடவடிக்கைகள் ஏற்படலாம் என்கின்ற எதிர்பார்ப்புகள் பலமாகக் காணப்பட்டன. 2001 ஏப்ரல் 25இல் சிறிலங்காப் படையினரின் பலத்த எதிர்பார்ப்புடன் ஆனையிறவை மீளக் கைப்பற்றுவதற்கென ஆரம்பிக்கப்பட்ட தீச்சுவாலை படைநடவடிக்கை மூன்று நாட்களில் முற்றாக முறியடிக்கப்பட்டிருந்த நிலையில் யுத்தகளம் பெரும்பாலும் அமைதியாகவே காணப்பட்டாலும், அமைதிக்கான முன்னெடுப்பு நடவடிக்கைகள் எவையும் பெரிதாக எடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிந்திருக்கவில்லை. 2000ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் யாழ்ப்பாணம் தமிழர் படையிடம் வீழ்ச்சியடையும் நிலையிலிருந்தது. ஆயினும் இந்தியாவின் நேரடி இராணுவத் தலையீட்டைத் தவிர்ப்பதற்காக அது பின்வாங்க வேண்டியிருந்ததுடன், ஒருதலைப் பட்சமாக யுத்த நிறுத்தத்தையும் அறிவித்திருந்தது. அந்த அவகாசத்தைப் பயன்படுத்திய சிறிலங்காப்படைகள் புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட அதிநவீன ஆயுதங்களின் உதவியுடன் யாழ்குடாநாட்டிலிருந்து தமிழர்படைகளை பின்வாங்கச்செய்வதில் வெற்றியும் கண்டிருந்தன. அந்த மமதையில் தான் மூன்று நாட்களில் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை மூலம் தமிழர் படை வென்றெடுத்த ஆனையிறவை மீளக் கைப்பற்றப் போவதாக அறைகூவல் விடுத்து தீச்சுவாலை நடவடிக்கையை ஆரம்பித்துத் தோல்வி கண்டிருந்தது.

“ஜெயந்தன் டேய்! வாடா ESU றூமுக்குப் பின்னால. எல்லாரும் அங்கதான் நிக்கிறாங்கள்”
சகமாணவனொருவன் வந்து கையைப்பிடித்து இழுத்தான். சிந்தனை கலைய அவனுடன் சென்றேன்.

“மள்ச்சான்! இழ்துதான் நான் கழ்சியா அழ்க்கிறது. இனி நான் குடிக்க மாட்டன்” மப்பேறிய நிலையில் ஒருவன் உளறினான்.

“ஜெயந்தன்! இந்தா நீயும் குடி!. இது தான் கம்பசில எங்கட கடைசிப்பார்ட்டி”

“இல்லை. எனக்கு வேண்டாம்.”

“பேய்ப்... அடியடா!. welcome party அண்டைக்கு அடிச்சனிதானே! பிறகென்ன? farewel party-க்கும் அடி!”

Welcome party-யின் நினைவுகள் நெஞ்சினில் வந்து மோதின.

அக்கா! துக்கம் தொண்டையை அடைத்தது. அந்த நிகழ்வின் பின் அக்கா மானசீகமாக என்னிடம் வந்ததில்லை. இப்போது அவளுமில்லை. அவள் இல்லாமல் போனதை இன்னமும் அம்மாவிடம் தெரிவிக்கவுமில்லை. சிலவேளை அம்மாவும் அவளின் வீரச்சாவை பத்திரிகை வாயிலாக அறிந்திருக்கலாம். ஆயினும் அவள் அதைத் தெரிந்ததாய்க் காட்டிக்கொள்ளவில்லை. அக்காவைப் பற்றிய உரையாடல்கள் எழுவதைத் தவிர்ப்பதைப் பார்க்கையில் நானும் அம்மாவும் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருப்பதாய்த்தான் இப்போது படுகிறது.

மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிரும் போது அது பெருகுகின்றது. துக்கத்தை மற்றவர்களுடன் பகிர்கையில் அது குறைவடைகின்றது என்பதை உணர்ந்திருந்தாலும், அக்காவின் இழப்பால் ஏற்பட்ட துக்கத்தினை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியாத நிலையில் நானிருந்தேன். எந்தக்காயத்தையும் காலம் ஆற்றிவிடும் என்கின்ற நம்பிக்கையைப் பொய்யாக்கி அக்காவின் நினைவுகள் அடக்கமுடியாமல் என்னுள் பிரவாகிக்கத் தொடங்க கண்கள் கலங்கியது.

“மச்சான் ஒண்டுக்கும் கவலைப்படாத! இந்தா இதை அடி! எல்லாக் கவலையும் மறந்து போயிரும்!”

மறுத்தேன்.

“அட பேய்ப்...! இன்னும் கொஞ்ச நாளில இஞ்சினியர்ஸ் எண்டு சொல்லி எத்தினை official meeting-குகள் நடக்கும். அங்கையெல்லாம் போய் தண்ணியடிக்காம இருந்தா மரியாதையில்லை. அதுக்கு இப்ப இஞ்சையே பழகீற்றா நல்லது தானே! அங்க போய்க் குடிக்கத் தொடங்கினா, பிறகு அளவு தெரியாமக் குடிச்சு நோண்டியாகாம.... வாடா வந்து சும்மா அடி!”

“ஜெயந்தன் டேய் நாங்க எல்லாரும் தானே அடிக்கிறம். இண்டைக்கு விட்டாப் பிறகு எப்ப நாங்க எல்லாரும் இப்பிடி ஒண்டா இருக்கப் போறம்?”

“மச்சான்! நீ உண்மையா friendship-ஐ மதிக்கிற ஆளெண்டா இப்ப எங்களோட இருந்து தண்ணியடிக்கவேணும். இல்லையெண்டா போ. அங்கனேக்க எங்கையும் நதீஷா நிப்பாள். போயிருந்து அவளுக்கு வாளி வை. சும்மா இதில நிண்டு எங்களுக்கு விசரைக் கிளப்பாதை.”
-எல்லாருமாச் சேர்ந்து அலுப்படிக்கத் தொடங்கினார்கள்.

நதீஷாவை இழுக்காம இவங்களால இருக்கேலாது போல. - மனது சலித்தது.

அக்காவின் வீரச்சாவை அறிந்ததன் பின் நதீஷாவுடன் என்னால் சகஜமாக உரையாட முடியாமலிருந்தது. அப்பாவைக் கண்டுபிடித்துத் தருவதாகக் கூறியிருந்த அவளின் தந்தையின் மரணத்திற்கு அக்காவே காரணமாகியிருந்தது மனதைப் பிசைந்துகொண்டிருந்தது. அக்காவைப் பற்றி அவளுக்கு தெரிந்திருக்காது என்றாலும் அவளைக் காண்கையில் எனக்குள் குற்ற உணர்வொன்று வந்து உறுத்திக்கொண்டேயிருந்தது. அவளோ தந்தையின் மரணத்தின் பின்னர் என்னுடன் இன்னும் நெருங்கத் தொடங்கியிருந்தாள்.

“நீங்க இப்ப எப்படி இருக்கிறீங்க? வீட்டில எல்லாரும் OK-யா?”

“ofcourse. ஏன் கேட்கிறீங்க?”

“அப்பிடியெண்டா நாங்க கொஞ்சம் distance வைச்சுப் பழகுவா?”

“ஏன்? ஏன் அப்பிடிச் சொல்லுறீங்க?”

“இல்ல. நாங்க கொஞ்சம் கூட close ஆப் பழகிற மாதிரியிருக்கு? பாக்கிற ஆக்களும் வித்தியாசமாக் கதைப்பினம். அதுதான்”

“உங்களுக்கு என்னோட இப்பிடிப் பழகிறது பிடிக்கேல்லையா?”
அவள் முகத்தில் சோகம் பரவுவது தெரிந்தது.

“அப்பிடியெண்டில்லை.”

“அப்பப் பிறகேன் நீங்க மற்றவையைப் பற்றிக் கவலைப்படுறீங்க?”

“அப்பிடியில்லை. பிறகு அது உங்கட life-ஐயும் affect பண்ணலாம்”.

“ஒயாட்ட தண்ணுவத? ஒயாத்தமாய் மகே ஜீவிதயே...”


3 comments:

  1. நீண்ட நாளாக அடுத்த பதிவை காணவில்லை எண்டு எதிர்பார்த்திருந்தேன்.


    கதையோட்டத்தில் நானும் கலந்து அதனுடன் பயணிப்பதாக ஒரு உணர்வு. எங்களை அதிகம் காக்க வைக்காமல் தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  2. >இப்போதுதான் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்ததது போல் இருக்கிறது. ஆனால் அதற்குள் நான்கு வருடங்கள் ஓடி மறைந்து விட்டிருந்தன. காலம் வெகுவேகமாகக் கரைந்து கொண்டிருப்பது புரிந்தது. இந்தக் காலச் சுழலில் தான் எத்தனை மாற்றங்கள்?

    அது பாருங்கோ எங்களுக்கும் இப்பமாதிரித்தான் இருக்குது. உள்ளிட்ட காலத்தில் இருந்து இப்ப 20 ஆண்டுகள் போயிற்று.

    நிற்க, சிங்கப்பூர்ச் சூழலிலும் ஒன்றிரண்டு பதிவுகள் போட்டால் என்ன?

    ReplyDelete