Wednesday, January 26, 2011

வேரென நீயிருந்தாய்...(23)


1999 ஆம் ஆண்டு தமிழர் திருநாள். வழமை போன்று பேராதனை குறிஞ்சிக்குமரன் ஆலயத்தில் இம்முறையும் சிறப்பாகப் பொங்கல்விழா நடைபெற்றிருந்தது. தீபன் காலையிலேயே எழுந்து கோவிலுக்குச் சென்று விட்டிருந்தான். காலைக் குளிருக்கு படுக்கையை விட்டு எழும்பும் பஞ்சியில் கிடந்தவெனக்கு பசிக்க ஆரம்பித்தது. எழுந்து குளித்துவிட்டு வழமையாகச் செல்லும் அங்குணாவலை 'நாணா' கடையை அடைந்தேன்.

பற்றீஸ்ஸுகள் கடும் மரமஞ்சள் நிறத்தில் கண்ணாடிப் பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும் சலிப்பு வந்தது. இதுகால வரையிலான நாணா கடையின் வாடிக்கையாளர் அனுபவத்தில் பற்றீஸின் நிறத்தை வைத்தே அதன் தயாரிப்பு தினத்தை அறிந்துவிடும் வல்லமையை நாங்கள் எல்லோருமே பெற்றிருந்தோம். எப்படியும் இந்தப் பற்றீஸ் நான்கு தினங்களுக்கு முன்னர்தான் தயாரித்ததாக இருக்க வேண்டும். முதல்நாளில் இளமஞ்சள் நிறத்தில் காணப்படும் பற்றீஸ்ஸுகள் விற்றுத்தீராவிட்டால் அடுத்துவரும் நாட்களில் மீண்டும்மீண்டும் அப்படியே எண்ணெய்ச்சட்டிக்குள் போய்வர அதன் நிறம் கொஞ்சமாக மாறத் தொடங்கிப் பின் கடும் மரமஞ்சள் நிறத்தினை அடைந்துவிடும்.

“நாணா! இது இண்டைக்கு செய்த பற்றீஸா? நிறம் ஒருமாரி இரிக்கே (ஒருமாதிரி இருக்கே)”
என்கின்ற எங்களின் ஆரம்பகாலக் கேள்விகளுக்கு இப்போதும் அவரின் பதில்

“ஆ! இன்னிக்குத்தான் செஞ்ச. மிச்சம் கரிகிப் போய்ச்சி” (இன்றைக்குத்தான் செய்தது. நல்லாக் கருகிப் போய்விட்டது)

அறியாதவர்கள் ஒருவாய் கடித்ததும் உள்ளிருக்கும் ஊசிப்போன கறியின் புளிப்புத்தன்மையை உணர்ந்து அதை அப்படியே துப்பி விடுவார்கள்.

“நாணா! பாண் பாகயாயும் மீன் ஆணமும் குடுங்க” (பாண் அரை றாத்தலும் மீன் குழம்பும்)

நாணா கடையில் உணவருந்திவிட்டு வீட்டினை அடைகையில் தீபன் வந்திருந்தான்.

“என்னடாப்பா! இண்டைக்கும் நாணாகடை தானா?”

“ஓமடா! எப்பிடிப் போச்சு பொங்கலெல்லாம்?”

“ம்.. நல்லா இருந்துது. நீதான் கன விசயங்களை மிஸ் பண்ணீற்றாய்”
சொல்லிவிட்டு அவன் என்னைப் பார்த்துக் கொடுப்புக்குள் சிரிப்பதாய்ப் பட்டது.

“மச்சான் மச்சமில்லாமல் எனக்குச் சாப்பாடு இறங்காதெண்டு உனக்குத் தெரியும்
தானேடா. பிறகேன் வாயைக் கிளறுறாய்?”

“அம்மாண நீயொரு லெப்பையடா நான் என்ன, நீ புக்கையை மிஸ் பண்ணீற்றியெண்டா சொன்னான்? ஆனா மச்சான் அடுத்த தைப்பொங்கலுக்கு நான் கோயிலுக்குப் போறனோ இல்லையோ நீ கட்டாயம் போவியடா. எவ்வளவு பந்தயம் வேணுமெண்டாலும் நான் பிடிக்கிறன்.”

“சரியடாப்பா! அண்டைக்குச் சூரியன் மேற்கால உதிக்குமெண்டால் வேறென்ன செய்யேலும்.”

“சூரியன் மேற்கால உதிக்குதோ கிழக்கால உதிக்குதோ எனக்குத் தெரியாது. ஆனா இனி உனக்குத் தெற்காலதான் உதிக்கும்.”

“அது எங்கையெண்டாலும் உதிக்கட்டும். உதிக்கேக்குள்ள அதைப் பாப்பம். இப்ப நீ பொங்கல் கொண்டாந்தனியே (கொண்டு வந்தனியோ) இல்லையோ?”

“இனி நான் ஏன்ராப்பா உனக்குப் புக்கை கொண்டு வரோணும். அதுக்குத்தான் வேறையாக்கள் வந்திற்றினமே. இனி நாங்க கொண்டந்தாலும் நீங்க சாப்பிட அவை விடுவினமா?”

“இஞ்சை வா! இப்ப என்ன கதைக்கிறாய் நீ?”

“நான் கதைக்கிறது மட்டும்தான் மச்சான். எண்டாலும் நீ காய்தான்ரா! கியல வெடக் ந (சொல்லி வேலையில்லை) மச்சான். அது சரியடாப்பா! பிறகு வீட்டில பொங்கேக்குள்ள சர்க்கரைப் பொங்கல் பொங்குவீங்களா இல்லாட்டி கிரிபத் (பாற்சோறு) தானா?”

இவன் என்னத்தைப் பற்றிக் கதைக்கிறான்? எனக்கு மண்டை காயத் தொடங்கியது.

“அம்மாண வாற ஆத்திரத்துக்கு, இப்ப என்னத்தைப் பற்றி நீ கதைக்கிறாய்?”

“இப்பையேன் நீ என்னோட ஏறுறாய்?”

“நீதானே என்னோட சும்மா சொறிஞ்சு கொண்டிருக்கிறாய்?”

“உன்ரை ஊரில வைச்சு நானெல்லாம் உன்னோட இனி சொறியேலுமாடாப்பா?”

“இப்ப நீ என்ன சொல்ல வாறாயெண்டு விளங்குது. அம்மாண, மகனே உனக்கு எத்தின தரம் சொல்லிப்போட்டன், இப்பிடியெல்லாம் கதைக்காதை எண்டு. பிறகென்னத்துக்குப் புடுங்கிக் கொண்டு நிக்கிறாய்?”

“இல்லை மச்சான், எனக்கெண்டா அவள் உன்னில சரியா மனப்படுகிறாள் போல இருக்கடா. இண்டைக்கு எங்கட batch தமிழ்ச் சரக்குகளோட அவளும் கோயிலுக்கு வந்தவளடா”

“பேய்ப்... அவள் வந்தா அதுக்கு நான் என்ன செய்யிறது? என்னோட இனிமேல் இதைப் பற்றிக் கதைச்சியெண்டால் பிறகு அம்மாண நான் நானா இருக்கமாட்டன். சொல்லிப்போட்டன்.”

அதன் பின்னர் ஆய்வுகூடங்களுக்கு செய்முறை வகுப்பகளுக்குச் செல்வது வெறுப்பைத் தர ஆரம்பித்திருந்தது. கடவுளே third year-ஆவது இவள் வேற field-இற்குப் போய்விட வேண்டுமென மனம் அங்கலாய்க்கத் தொடங்கியது. இயன்ற வரைக்கும் ஆய்வகூடங்களில் நதீஷாவுடனான உரையாடல்களை, அவை பாடசம்பந்தமாக இருப்பினும் கூட, தவிர்க்க ஆரம்பித்திருந்தேன்.

அடுத்து வந்த சில வாரங்களில் எங்கள் பிரிவிற்கான ஆண்டுச் சுற்றுலா வந்திருந்தது. இம்முறை அது நுவரேலியாவில் உள்ள உலகின் முடிவிடத்தை (world's end) நோக்கியதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நதீஷாவும் இதில் பங்குபற்றினால் சிலவேளைகளில் தேவையில்லாத கிசுகிசுக்களுக்கு ஆளாகவேண்டிவருமோ என்கின்ற தயக்கம் இருந்தாலும், நுவரெலியாவின் குளிரை அனுபவிக்கவும் உலகின் முடிவிடம் என்று சொல்லப்படுகின்ற அந்தப் பிரதேசத்தைச் சென்று பார்க்கும் ஆவலிலும் சுற்றுலாவிற்குச் செல்ல இணங்கியிருந்தேன்.


இம்முறைச் சுற்றுலாவில் நதீஷா பங்குபற்றவில்லை என்பதை அறிநததும் மனதிற்குள் நிம்மதி வந்தது. காலை உணவினை நுவரெலியாவில் முடித்து விட்டுப் பின்னர் உலகின் முடிவிடத்தை நோக்கி எங்கள் பயணம் குதூகலமாக ஆரம்பித்தது. இதற்கு மேல் பேரூந்தில் செல்ல முடியாது என்று சொல்லி எங்களை நடந்து போகச் சொன்னார்கள். அனைவரும் பேரூந்துகளிலிருந்து இறங்கி சிறுசிறு குழுக்களாக உலகின் முடிவிடம் என்று சொல்லப் படுகின்ற பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். இடையிடையே பலரும் குழுக்கள் குழுக்களாக புகைப்படம் எடுத்துக் கொள்வதைப் பார்க்கையில் ஏனோ தெரியவில்லை நதீஷாவின் நினைவு மனதிற்குள் வந்து போனது. யார் வரவில்லை என்று ஆரம்பத்தில் சந்தோஷப் பட்டிருந்தேனோ, இப்போது அவள் வரவில்லை என்பதற்காய் என்மனம் ஏங்குகின்றதோ என்கின்ற சந்தேகம் எழுந்தது.

அவள் வந்திருந்தால் எப்படியும் ஒரு புகைப்படமாவது எடுப்பதற்கு அவள் அழைத்திருப்பாள். இப்போது அழைப்பதற்கு யாருமேயில்லாததால் தான் தனிமையாய் உணர்கிறேன். அதனால் தான் அவளைப்பற்றி நினைக்கின்றேன் என்பதை என்மனது ஏற்பதாய்த் தெரியவில்லை. அதையும் மீறி ஏதோவோர் ஈர்ப்பு அவளிடம் ஏற்பட்டிருக்கின்றதோ என்கின்ற சந்தேகம் மனவுளைச்சலைக் கொடுத்தது.

சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு என்பது போல் இப்போது, ஆரம்பத்திலிருந்த மகிழ்ச்சி மறைந்து விட்டிருந்தது. எனக்குள் காதல்பூ முகிழ்க்கத் தொடங்குகின்றதோ என்கின்ற சந்தேகம் மிகுந்த மனச் சஞ்சலத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது. இதெல்லாம் உனக்குச் சரிவராது அப்படியிருந்தால் அதை முளையிலேயே கிள்ளியெறிந்து விடவேண்டுமென அடிமனம் ஆணையிடத் தொடங்கியது. எப்படி எனக்கு காதல், அதுவும் இவளிடம் வரமுடியும்? அப்படியிருந்தாலும் இது வெறுமனே இனக்கவர்ச்சியாகத்தான் இருக்குமேயன்றி ஆத்மார்த்த காதலாக இருக்க முடியாது. இவ்வளவு நாள் பக்கத்திலிருந்து பழகிய பழக்கதோஷம், இப்போது அவள் இல்லையென்றவுடன் மனதில் சிறு ஏக்கத்தைக் கொடுத்திருக்கின்றது. அவ்வளவு தான். இனிமேல் இது தொடர்பாக மிகவும் விழிப்பாக இருக்க வேண்டுமெனத் தீர்மானித்துக் கொண்டேன்.



3 comments:

  1. பொங்கல் அவசியமா?

    ReplyDelete
  2. “சூரியன் மேற்கால உதிக்குதோ கிழக்கால உதிக்குதோ எனக்குத் தெரியாது. ஆனா இனி உனக்குத் தெற்காலதான் உதிக்கும்.”

    நல்லா இருக்கு,

    மொழி நடை ஒரு முறை மணி டியூஷன் சென்டர் ஐ நினைவூட்டியது...

    ReplyDelete
  3. சில ஆக்களுக்கு North-pole இக்கு கிட்டவா சூரியன் உதிக்கிறதா தகவல் வருகுது. இனி எளுத்தில கொஞ்சம் கவனம் தேவை.

    அத்துடன் லெப்பை என்றால் என்ன என தயவு செய்து விளக்கவும்.

    முரளி, பெரிய-பிரித்தானியா.

    ReplyDelete