Tuesday, May 4, 2010

வேரென நீயிருந்தாய்...(10)


பொறியியற் கற்கைநெறியின் முதலாம்நாள், அக்பர் விடுதிக்குள் குடியேறி இரண்டு நாட்களே கழிந்திருந்தன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எமக்கென தரப்பட்டிருந்த அறைகளைச் சுத்தம்செய்து ஒழுங்கு படுத்துவதிலேயே கழிந்து விட்டிருந்தது. காலை 8.00 மணிக்கு விரிவுரை மண்டபம் 8 இல் ஆரம்பித்த முதலாவது விரிவுரை 9.00 மணிக்கு முடிவுற Surveying Lab இற்கு விரைந்தேன். A2.4 குழுவிற்கான இடத்தினைத் தேடிக்கொண்டிருக்கையில், அட! அது அவளேதான். postal course வகுப்பில் முதற்தடவை சந்தித்ததன் பின்னர் இன்றுதான் அவளைக்காண்கின்றேன். அன்றைய அந்த வகுப்பின் பின்னர் அவள் வேறு வகுப்பிற்கு மாற்றப்பட்டிருந்திருக்கலாம். பகிடிவதை எல்லாவற்றையுமே மறக்கச் செய்திருந்தது. உண்மையில் நாம் சந்தித்த எவையுமே எமது நினைவுகளிலிருந்து அழிந்து விடுவதில்லை. மாறாக எம்மால் அவற்றைச் சரியான தருணங்களில் நினைவுபடுத்திக்கொள்ள முடிவதில்லை. சரியான தூண்டல்கள் கிடைக்கும் போது அனைத்துமே மறுபடியும் நினைவிற்கு வந்து விடுகின்றன. இல்லையெனில், மனோவியலாளர்களால் தம்மிடம் வருவோரை ஆழ்நிலை உறக்கத்திற்கு அழைத்துச்சென்று அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிய முடியாமல் போய்விடுமே!

என்பக்கமாய் பார்த்து அவள் புன்னகைப்பது தெரிந்தது. அட! என்னை நினைவினில் வைத்திருக்கின்றாளே என்று மனத்திற்குள் எழுந்த மகிழ்ச்சி மறுநொடியே காணாமல் போனது.

“ஒயாத் ஏரூ-த?” (நீங்களும் A2 வா?)
-என் பின்னாலிருந்து கேட்டவொரு பெண்குரலுக்கு,

“ஓவ்! மம ஏரூ-போர். ஒயா?” (ஓம்! நான் A2.4. நீங்க?)
-என்கின்ற அவளின் பதிலைக் கேட்டதும், அட இவளும் என்னுடைய குறூப் தான் எனத்தெரிந்தது. அவளின் இடத்தை அடைகையில் மேலும் இரண்டு ஆண்களும் வந்து விட்டிருந்தனர். எங்கள் குழுவிற்கான போதனாசிரியர் வந்ததும்,

“Where is the other one?”
-ஐவர் இருக்க வேண்டிய குழுவினில் ஒருவரைக் காணவில்லையென்பதை அறிந்து கேட்டார் போதனாசிரியர்.

அட! ஆமாம், ஜெயக்கொடியை இன்னும் காணவில்லையே? எங்கே போய்த்தொலைந்தாள்? எப்படியிருப்பாளோ? மனதிற்குள் வினாக்கள் எழுந்தன.

“OK. let me know your names. you are...?”

“I'm Jeyaweera from Matara”

“You...?”

“I'm Jeyasundra from Kegale”

“You...?”

“I'm Jeyanthan from Jaffna”

“And you...?”

“I'm Nadheesha from Kandy”

“OK. Please take all the things and follow me”

எமது குழுவிற்கென ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த உபகரணங்களை எடுத்துக் கொண்டு அவரின் பின்னால் விரைந்தோம். ஜெயக்கொடிக்கு என்ன நேர்ந்திருக்கும் என மனம் யோசித்துக் கொண்டிருந்தாலும் ஏதோ ஒன்று விசித்திரமாயப் பட்டது. எனது முதல்நாள் ஆங்கில வகுப்பில் இவளை, என்ன பெயர் சொன்னவள்? ஆ! நதீஷா எப்போதோ கண்டிருப்பதாகவும், அவளுடன் நன்றாகப்பழகியிருப்பதாகவும் மனதிற்குத்தோன்றியிருந்தது. ஆனால் அதற்கான எந்தவொரு சந்தர்ப்பமும் இருந்திருக்கவில்லை. ஆனால் இப்போது surveying lab இல், அவள் எனது groupmate ஆக வந்துசேர்ந்திருக்கிறாள். அப்படியானால், அதுவும் ஒருவகை தீர்க்கதரிசனம் தானோ? வேறு ஏதேனும் ஆய்வுகூடங்களிலும் இவள் என்னுடன் groupmate ஆக இருக்கின்றாளா என்று பார்க்க வேண்டும். அன்றைக்கு ஜெயக்கொடியின் பெயரைப் பார்த்ததில் மற்றவர்களில் கவனம் செலுத்தவில்லை என்பது மூளையில் உறைத்தது.

'மனமே மனமே! தடுமாறும் மனமே!
உள்ளுக்குள்ளிருந்தே உயிர் கொல்லும் மனமே
பெண்ணைப் பார்க்கும் போது நீயும் சிறகை விரிக்காதே. . .
'

உள்மனதிற்குள் பாடல் ஓடியது.

'ஜேன்! தப்புப் பண்ணுகிறாய். தேவையற்ற எண்ணங்களை உதறிவிட்டு வந்த வேலையைப்பார். உனக்கான இலக்குகள் வேறு' மனதின் வேறொரு மூலைக்குள்ளிருந்து அக்காவின் குரல் கேட்டதும் நினைவுகளை உதறிவிட்டு chain-ஐ எறிந்தேன்.

2 comments:

  1. Nice one. U tell this now. U might have told us in 1998. We should have done something for you. Now Late Buddy! Anyway u bring us 12 years before! Keep it up.

    ReplyDelete
  2. வரப்பிகாக்ஷின் வலிகளின் விவரிப்பை மேலும் எதிர்பார்க்கிறோம். முடிந்துவிடப்போகிறதோ என்கிற ஏக்கம் உங்கள் எழுத்தின் வெற்றிக்குச் சான்று. மிகத்துல்லியமான உங்கள் பார்வையில் இன்னும் நிறையப்பட்டிருக்கவேண்டும் என்பதால் ஒரு நாவலாகவே இதை மாற்றிவிடலாம்.

    ReplyDelete