Wednesday, April 28, 2010

அப்பா என்றால் என்ன அம்மா?



அப்பா எண்டால் என்ன அம்மா?

பாடசாலையால் வந்திருந்த பள்ளிச் சிறுமி செல்வி. சுதந்திரி சிந்தனா விண்மினி தன் தாய்களில் ஒருத்தியான சிந்தனாவிடம் கேள்வியெழுப்பினாள்.

எதற்காக கேட்கிறாய் விண்?

விண்மினியை விண் என்று சுருக்கிக் கூப்பிடுவது சிந்தனாவின் வழக்கம். சுதந்திரிக்கோ விண்மினி எப்போதுமே மினி தான். இந்த விடயத்தில் ஏனோ சுதந்திரியும் சிந்தனாவும் முரண்பட்டுக் கொண்டாலும், கடந்த எட்டுவருட இல்வாழ்க்கையில் அவர்களுக்கிடையே வேறு பெரிதாக எந்தவொரு கருத்து முரண்பாடுகளும் ஏற்பட்டிருந்ததில்லை. ஆயினும் சிந்தனாவிற்கு இப்போது சுதந்திரியின் போக்கில் சாடையான சந்தேகம் ஒன்று துளிர்விட ஆரம்பித்திருந்தது. ஒருவேளை விண்மினியின் இந்தக் கேள்விக்கு சுதந்திரி தான் காரணமாக இருப்பாளோ? சந்தேகம் என்பதும் கணினிக்கான ஒரு வைரஸ் போன்றதே. அது மூளையின் நினைவடுக்குகளினுள் நுழைந்து விட்டால் போதும். வெறும் சாதாரண விடயங்களுக்கெல்லாம் சந்தேகப்படும் விடயத்துடன் முடிச்சுப் போட்டு முழு மனதையுமே முடிந்து விட்டு விடும். அது சுயபுத்தியினை வேலை செய்ய விடாது.

சுதந்திரி அம்மா ஏதும் சொன்னாளா?

விண்மினியிடம் வினவினாள் சிந்தனா.

இல்லையம்மா!

அப்ப எதுக்கு அப்பாவைப் பற்றிக் கேட்கிறாய்?

இண்டைக்கு பள்ளிக்கூடத்திற்கு புதுசா வந்த பிள்ளை ஒண்டு தனக்கு அப்பா இருக்கு எண்டு சொன்னது. எனக்கு அப்பா எண்டால் என்னெண்டு விளங்கேல்ல என்ர பிறண்ட்ஸ்சிலையும் ஒருத்தருக்கும் அப்பா எண்டால் என்னெண்டு தெரியாதாம். அதுதான் கேட்டனான். அப்பா எண்டால் என்னம்மா?

ச்சே! அநியாயமாய் சுதந்திரியைச் சந்தேகித்து விட்டேன். தன்னையே நொந்து கொண்டாள் சிந்தனா.

தொடர்புபட்ட செய்தி: (நன்றி http://www.globaltamilnews.net/)


இருநூறு ஆண்டு காலமாக நீடித்து நிலைத்து நின்ற மரபை அடியோடு புரட்டிப் போட்டிருக்கிறது அண்மையில் இங்கிலாந்தில் நடந்தவொரு சம்பவம்.

குழந்தை பிறந்தால் அதன் பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் தாயினுடையதும் தந்தையுடையதும் பெயரைப் பதிவு செய்யும் மரபு 170 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது.

ஆனால் பிரிட்டனில் அண்மையில் கொண்டு வரப்பட்ட ஒரு (Human Fertilisation and Embryology Act 2008) சட்டம் ஒரு பால் உறவுப் பெற்றோரை பெற்றாரின் இடத்தில் பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் குறிப்பிட வகை செய்கிறது.

இதன்படி கடந்த வருடம் ஏப்ரல் 1இற்குப் பின்னர் கருக் கொண்ட குழந்தைகளுடைய ஒருபால் உறவுப் பெற்றோர் பிறக்கும் குழந்தையின் பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் தாய் மற்றும் தந்தை என்பதற்குப் பதிலாக தாய் மற்றும் பெற்றோர் என்று தனது ஒரு பால் உறவு இணையைக் குறிப்பிட இந்தச் சட்டம் வகை செய்கிறது.

இச்சட்டத்தின் கீழ் பிரிட்டனில் பிறந்து முதல் குழந்தை லில்லி மே. லில்லி மே கடந்த மார்ச் 31ஆம் திகதி பிறந்தாள். அவளுடைய தாய்மார்கள் நடாலி வூட்ஸ்(38) மற்றும் பெற்றி நொவெல்ஸ்(47) ஆவார்.


நடாலி வூட்ஸ்உம் பெற்றி நொவெல்ஸ்உம் 16 வருடங்களாக ஒரு பாலுறவுக்காரர்களாக இருந்து வருகிறார்கள். நடாலி வூட்ஸ் ஆண் ஒரு பாலுறவு மற்றும் பெண் ஒருபாலுறவு குறித்த மருத்துவ ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறார். பெற்றி நொவல்ஸ் விநியோகச் சாரதியாகப் பணியாற்றுகிறார்.

16 வருடங்களாக இருவரும் இணைந்து வாழ்ந்தாலும் எட்டு வருடங்களுக்கு முன்னர் தான் அவர்களுக்கு ஒரு குழந்தை தேவை என்று உணர்ந்தார்கள்.

நாங்கள் இருவருமே தாயாராக விரும்பினோம். நடாலி வூட்ஸ் தான் தாயாராவது என்பதில் மிகத் தெளிவாக இருந்தார். இதனால் இலகுவாக எமக்கு முடிவெடுக்க முடிந்தது. அதேநேரத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட சட்டம் நாம் இருவருமே சட்டப்படி பெற்றாராக இருக்க அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. அது பெற்றாராக வர விரும்பியிருந்த எம் இருவருக்குமே ஒரு வரப்பிரசாதமாக இருந்தது.

என்கிறார் பெற்றி நொவெல்ஸ்.

குழந்தை பெறுவதாக முடிவு செய்ததுமே நடாலி வூட்ஸ் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். குழந்தை பெறுவதற்காக விந்து தானம் செய்யும் விந்து வங்கியூடாக விந்தைப் பெற்று கருத்தரித்தார்.

விளைவாக கடந்த மார்ச் 31இல் அழகான பெண்குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். முன்னைய சட்டங்களின்படி பெற்றாராக நடாலி வூட்ஸின் பெயர் மட்டுமே பிறப்புச்சாட்சிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்திருக்கும். ஆனால் பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டத்தின்படி ஒரு பால் உறவினைக் கொண்ட இருவருமே சமமாக குழந்தையின் பெற்றாராக கணிக்கப்படுவர் என்பதால் இருவரது பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

நாங்கள் இருவருமே பெற்றாராக பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் கையொப்பமிட்டது மகிழ்ச்சியளிக்கிறது. நான் மட்டுமே சட்டரீதியான பெற்றார் என்ற கவலையிலிருந்து இது என்னை விடுவித்திருக்கிறது. என்கிறார் நடாலி வூட்ஸ்.

ஒரே பாலினத்தைச் சேர்ந்த எங்கள் இருவரது பெயர்களுமே பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதானது எங்களைப் போன்ற ஒருபாலுறவுக் குடும்பங்களுக்கு மேலும் அங்கீகாரம் வழங்குவதாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ஒரு வரலாற்று முன்னுதாரணத்தை நாங்கள்; உருவாக்க விரும்பினோம் என்றும் வூட்ஸ். வலியுறுத்துகிறார்.


பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் 170 வருடங்களுக்கு மேலாக இருந்து வந்த தாய் தந்தையரின் பெயரைக் குறிப்பிடும் வழக்கத்தை இது மாற்றி இருக்கிறது. தற்போதைய பிறப்புச் சாட்சிப்பத்திரமோ தந்தையுடைய பெயரை அதிலிருந்து விடுவித்து இருக்கிறது.

பிரிட்டனின் பிறிஜ்ரன் என்ற இடத்தைச் சேர்ந்த பிறப்புச் சாட்சிப் பத்திரப் பதிவு அலுவலகமோ புதிய சட்டத்தின் கீழான முதலாவது பதிவு இதுவெனச் சொல்கிறது.

ஆம், அந்த ஒருபாலுறவுத் தம்பதியின்ர் ஒரு வரலாற்று முன்னுதாரணத்தைத் தான் நிகழ்த்தியிருக்கிறார்கள்.

குழந்தை லில்லி வளர்ந்ததும் நடாலி வூட்ஸை அம்மா என்று அழைப்பாள். பெற்றி நொவெல்ஸை அம்மா பி என்று அழைப்பாள். ஆனால், அப்பா என்று அவள் யாரையும் அழைக்கப் போவதில்லை.

லில்லிக்கு அப்பா என்றொருவர் இல்லாதது பற்றி நாங்கள் உரையாடினோம். ஆனால் ஒரு அப்பா ஒரு அம்மா என்பதை விட இதில் பல விடயங்கள் இருக்கின்றன. ஒரு குழந்தைக்கு அவசியமானது எந்த நிபந்தனைகளுமில்லாத அளவற்ற அன்பு. பெற்றியாலும் என்னாலும் அந்த அளவற்ற அன்பை லில்லிக்குக் கொடுக்க முடியும் என்கிறார் நடாலி வூட்ஸ்.

குழந்தைக்குத் தேவையானது பரிபூரணமான அன்பு. அதனை எங்கள் இருவராலும் கொடுக்க முடியும். ஆனால் துயரார்ந்த வகையில் சிலருக்கு இதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் தேவையற்ற பல அபிப்பிராயங்களை இங்கொன்றும் அங்கொன்றுமாக அவர்கள் உதிர்த்து விட்டிருக்கிறார்கள். எனது பெற்றார் எனது பாலியல் தேர்வு காரணமாக என்னுடன் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். அவர்கள் ஒரு அற்புதமான அழகான குழந்தையின்பத்தை இழக்கிறார்கள் என்றும் சொல்கிறார் நடாலி வூட்ஸ்.

இந்த நிலைமையால் குழந்தைக்கு பாட்டா பாட்டிமாருடைய உறவும் கிடைக்கப் போவதில்லை. துரதிர்ஷ்டவசமாக பெற்றி நொவெல்ஸ்இன் பெற்றோரும் ஏற்கெனவே இறந்து விட்டார்கள்.

சமூகம் மாறி வருகிறது. குடும்பங்கள் மாறிவருகின்றன. பெற்றாராக ஆகலாமா என நம்பிக்கையற்றிருந்த மக்கள் இப்போது ஆகி வருகிறார்கள். ஒரு வகையில் இப்போது நாங்கள் விளையாட்டு மைதானத்தைச் சமப்படுத்தி வருகிறோம் என்று இச்சட்டத்தை வரவேற்கிறார் பேராசிரியையான லிஸா ஜர்டின். தற்போது எல்லாப் பெற்றோரும் தங்களுடைய பாலினம் குறித்தோ அந்தஸ்து குறித்தோ கவலைப்படாமல் பெற்றோராக தமது குழந்தையின் பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் பெயரிட முடிகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இவர்கள் இச்சட்டத்தை வரவேற்றாலும், இவற்றை விமர்சிப்பவர்களும் இல்லாமல் இல்லை.

பிறப்புச் சாட்சிப்பத்திரம் குழந்தை எப்படி உருவாகியது என்பதை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறானால் உண்மையான தாயுடையதும் தந்தையுடையதும் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்கிறார் இனப்பெருக்க ஒழுக்கவியல் தொடர்பாகப் பணிபுரியும் ஜோசப்பின் குவான்ரவெளி.

பிறப்புச்சாட்சிப் பத்திரங்கள் இவ்வாறே வருமெனில் நாங்கள் கலாசாரத்தின் அனைத்து அம்சங்களையும் மறந்தவர்களாகி விடுவோம். அது மட்டுமல்லாமல் கலைச் சொற்களுடன் நாம் விளையாடுபவராகி விடுவோம். ஒரு நாள் குழந்தை தனது தகப்பன் யார் என வினவும் போதும், குழந்தை எவ்வாறு பிறந்தது என்றும் உயிரியல் விளக்கும். அதற்கான வாய்ப்பு இங்கு இல்லாமற் போய்விடுகிறது என்றும் சுட்டிக்காட்டுகிறார் அவர்.

ஓவ்வொரு குழந்தைக்கும் தனது தந்தையை அறிந்து கொள்ள உரிமை இருக்கிறது. இந்தச் சட்டம் முதல் தடவையாக குழந்தைகள் தந்தை இல்லாமல் பிறக்க வகையேற்படுத்துகிறது. ஒரு தந்தை குழந்தையின் வாழ்வில் முக்கிய பாத்திரத்தை ஆற்றுகிறார். அதேபோல் குடும்பத்திலும் தந்தை ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றுகிறார் என்பதைக் குறிப்பிட்டேயாக வேண்டும். அது மட்டுமல்லாமல் சிறுவர்களுக்கு தமது உயிரியல் ரீதியான தந்தை யாரென அறிந்து கொள்ளும் உரிமையும் இருக்கிறது எனவும் அவர் வலியுறுத்துகிறார்.

தந்தையின் பெயரைக் குறிப்பிடாமலே ஒரே பாலினத்தைச் கொண்ட இருவர் பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் ஒப்பமிடுவதை சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவர் பரோனிஸ் டெச் வெளிப்படையாகவே கண்டிக்கிறார், குழந்தை தனது அடையாளத்தை அறிந்து கொள்ளும் உரிமையை இது பறிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இது உண்மைத் தகவல்களை மறைக்கிறது. உயிரியல் சார்ந்த பெற்றோர் யார் என்று இனம் காண முடியாமல் குழப்பமடைய வைக்கிறது. அதுமட்டுமல்லாமல் சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தவறான தகவல்களை இது வழங்குகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால் இந்தச் சட்டங்களும் ஒழுங்கு முறைகளும் வெறுமனே இரண்டு நூற்றாண்டு காலத்துக்குட்பட்டவை தானே என்று வாதிடுகிறார் விக்ரம். சமூக வரலாறென்பது தாய் வழித்துடையானதாகவே மிக நீண்டகாலம் இருந்து வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

கடந்த நூற்றாண்டின் இறுதியிலும்கூட தமிழகத்தின் சில பகுதிகளில் தாய் வழி மரபு இருந்து வந்திருக்கிறது என்றும் அவர் சொல்கிறார். தவிரவும் மரபணு சோதனை அறிமுகமாவதற்கு முன்னர் தாய் அந்தக் குழந்தைக்கு யார் தந்தை எனச் சொல்கிறாளோ அதனை நம்புவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார் அவர்.

எவ்வாறாயினும் இந்தச் சம்பவம் குழந்தையின் பிறப்புச்சாட்சிப் பத்திரத்தில் அவர்களுடைய பிறப்புக்கு உயிரியல் ரீதியாகக் காரணமான இருவரது பெயர்களும் மிகச்சரியாகக் குறிப்பிடப்பட வேண்டும் எனக் குரலெழுப்பும் அழுத்தக் குழுக்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனால் ஆண், பெண். ஒருபாலுறவு மற்றும் இருபாலுறவு தொடர்பான அமையத்தைச் சேர்ந்த ஸ்ரோன்வால் சட்டத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்தினை வரவேற்றிருக்கிறார். ஒரு பாலுறவுக்காரர்களுக்கு மிகவும் அவசியமாக இருந்த ஒரு சட்டமும் இது தான் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

லண்டன் பல்கலைக்கழகம் மற்றும் கிளார்க் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஒரு பகுதியான பேர்க் பெக் கல்லூரி நடாத்திய ஆய்வில் ஆண் பெண் பெற்றாரை விட ஒரே பாலினத்தைச் சேர்ந்த தம்பதிகள் சிறந்த பெற்றாராகத் திகழ்வது தெரிய வந்துள்ளது. இதற்கு அடிப்படையான காரணம் என்னவென்றால் அவர்கள் தற்செயலாக குழந்தையைப் பெற்றெடுப்பதில்லை. குழந்தை ஒன்றைப் பெற்றெடுக்க விரும்பினால் அது தொடர்பாக தெளிவான திட்டவட்டமான முடிவை அவர்கள் எடுக்க வேண்டியிருக்கிறது. அதன் பின் அதற்காக விந்து வழங்குனர் ஒருவரையும் கண்டடைய வேண்டியிருக்கிறது என்று குறிப்பிடுகிறது.

இது தவிர மூன்றிலொரு பங்கு பிரிட்டிஷ் மக்கள் ஆண் பெண் தம்பதிகளை விட ஒரேபாலினத்தைச் சேர்ந்த பெற்றோர் சிறப்பானவர்கள் என்று நம்புவதாக பிரிட்டிஸ் சமூக நடத்தைகள் தொடர்பான வருடாந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இவையெல்லாம் நடாலி வூட்ஸ்க்கும் பெற்றி நொவெல்ஸ்க்கும் ஆறுதல் தரக் கூடியவை.

குழந்தை தான் எவ்வாறு உருவாகினேன் என அறிய விரும்புவது அதனுடைய அடிப்படை உரிமை. இப்புதிய சட்டம் அதனை மறுக்கிறது என்ற குற்றச்சாட்டை நிராகரிக்கும் இச்சட்டத்திற்கு ஆதரவானவர்கள் லில்லிக்கு 18 வயதானதும் அவள் விரும்பினால் அவள் உருவாகக் காரணமான விந்தை யார் தானம் செய்தார்கள் என்று அறியும் உரிமை அவளுக்கு இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால், அவர் அவர் விந்தை தானம் செய்த ஒருவர் என்பதற்கப்பால் நாங்கள் அவரைத் தந்தையாக நினைக்கவில்லை. அவர் அப்பா அல்ல. விந்து தானம் செய்த ஒருவர் அவ்வளவு மட்டுமே என்றும் அழுத்துகிறார் வூட்ஸ்.

No comments:

Post a Comment