Saturday, May 8, 2010

வேரென நீயிருந்தாய்... (12)


அதுவொரு வெள்ளி இரவு. குறிஞ்சிக்குமரன் கோவிலிலிருந்து எங்களில் சிலரையும் அழைத்துக்கொண்டு இறங்கிக்கொண்டிருந்தார்கள்.

என்னருகில் வந்த ஒருவன்,

எனக்குப் பின்னால என்னோட வா” என்று சொல்ல சரியென்று தலையாட்டினேன்.


பள்ளிவாசல் அருகிலிருந்த பள்ளத்தாக்கின் ஒற்றையடிப் பாதையினூடக இறங்கி, படிக்கட்டினை அடைகையில்,

டேய்! எத்தனை படிக்கட்டு எண்டு எண்ணிக்கொண்டு வாறாய். கீழ வந்ததும் சரியாச்சொல்ல வேணும். இல்லையெண்டால் திரும்பவும் மேல ஏறி எண்ணிக்கொண்டு வரவேணும் சரியா?”

படிக்கட்டுகளை எண்ணிக் கொண்டே அவர்களுடன் இறங்கத் தொடங்கினேன்.

என்னடா உன்ரை பெயர்?

“திடுக்கிட்ட தீவான்”

இப்ப உனக்கு என்ன ராக்கிங்கே நடக்குது? card name-ஐச் சொல்லு

“ஜெயந்தன்”

அப்பன் இல்லையோடா உனக்கு?

“சுந்தரலிங்கம் ஜெயந்தன்”

எந்த இடம்?

“வேலணை.”

கொப்பர் என்ன வேலை பாக்கிறேர்?

அமைதியாயிருந்தேன்.

கேட்டது விளங்கேல்லையா?

“இல்லை. விளங்கினது”

அப்ப ஏன் பதில் சொல்லேல்லை?

அப்பா உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பதே தெரியாத நிலையில் என்னவென்று சொல்வது? மீண்டும் மௌனமாயிருந்தேன்.

என்னடா? அப்பா செத்துப்போய்ற்ரேரா?

மீண்டும் பதிலளிக்காதிருந்தேன்.

சரி வீட்டிலை எத்தினை பேர்?

“ரெண்டு பேர்.”

ஆராரு?

“நானும் அம்மாவும்”

கூடப்பிறந்த ஆக்கள் ஒருத்தரும் இல்லையோ?

அக்காவைப்பற்றி இங்கே இருக்கும் சூழ்நிலையில் எப்படி சொல்ல முடியும்? மௌனமாயிருந்தேன்.

என்ன? ஒழுங்காக் கேட்டால் பதில் சொல்லமாட்டியளோ? ராக்கிங் குடுத்தாத் தான் சொல்லுவியளோ?

“இல்லை என்னோட கூடப்பிறந்த ஆக்கள் ஒருத்தரும் இல்லை.”

சரி! இது வரைக்கும் எத்தினை படி இறங்கியிருக்கிறம்?

“எண்ணேல்லை”

ஏன்?

“உங்களோடை கதைச்சுக் கொண்டு வந்ததில எண்ண மறந்திற்றன்”

ஏன்ரா? ஒரே நேரத்தில ரெண்டையும் செய்ய உனக்குத் தெரியாதா? multi tasking எண்டு கேள்விப்படேல்லையா?

மௌனமாயிருந்தேன்.

உனக்கு இறங்க முதல் என்ன சொன்னான்? போ! மேல ஏறிப்போய் திரும்ப எண்ணிக்கொண்டு வா!

மேலே ஏற,

உன்னோட கனக்கக் கதைக்க வேணும். கீழ வந்து என்னைச் சந்திக்க வேணும். சரியா?

சரி என்று சொல்லியவாறே மேலே ஏறினேன். இருபது படிகள் வரை ஏறியிருப்பேன். எதிரே வந்தவர்களில் ஒருத்தன்,

அண்ணை எங்க மேல போறாய். வாடா எங்களோட”.

அவர்களுடன் சேர்ந்து கீழே இறங்கி நடக்கலானேன்.

டேய்! உன்னை என்னோடையெல்லா வரச்சொன்னான்.

அவன் எங்களோடைதான் வருவான்.

அவங்களோடை போனால் நீ பிறகு என்னட்டைச் செத்தாய் மவனே.

என் நிலை இருதலைக்கொள்ளி எறும்பானது. இப்போது எந்தப் பக்கம் போனாலும் மற்றப் பக்கத்தினரின் ஆத்திரத்திற்கு உள்ளாக வேண்டிய நிர்ப்பந்தம். முன்னவருடன் சென்றால் பின்னால் வந்த மூவரினதும் கோபத்திற்கு ஆளாகவேண்டும். இவர்களுடன் சென்றால் அவர் ஒருவரின் கோபத்திற்கு மட்டுமே ஆளாகவேண்டும். எனவே பின்னால் வந்தவர்களுடன் இணைந்து செல்லலானேன். அவர்களுடனேயே 'ஐடியல்' இல் இரவுணவை முடித்துவிட்டு வெளியே வந்தேன்.

ஏன்ரா அவனை விட்டிட்டு எங்களோட வந்தனி? நீ அவனோடையெல்லா போயிருக்கோணும். அவனிட்டத் துலையப்போற

என்று அவர்கள் சொன்னதும் பகீர் என்றது.

சரி சரி. இண்டைக்கு எங்களோட எங்கட றூமுக்கு வா!

அக்பர் விடுதிக்குச் செல்லலாம் என்ற நினைப்பில் மண் வீழ்ந்தது.

அவர்களின் இருப்பிடத்தை அடைந்ததும்,

இன்னும் கொஞ்சநேரத்தில அவன் வந்திருவான். உன்னைக் கண்டான் எண்டால் துலைப்பான். அறைக்குள்ள போய்ப்படுத்து நித்திரையைக் கொள்ளு

அட! அவர்கள் எல்லோருமே ஒரே வீட்டில்தான் தங்கியிருக்கிறார்களா? நெஞ்சம் படபடக்க அறையினுள் சென்று படுத்துக்கொண்டே, காதைத் தீட்டி வைத்துக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் அவனின் குரல் கேட்டது.

மச்சான்! உன்னட்டை ஒரு விசிற்றர் வந்திருக்கிறேரடாப்பா.

என்னைத்தான் போட்டுக்கொடுக்கிறார்கள் என்பது விளங்கியது.

ஆரடா?

றூமுக்குள்ள படுத்துக்கிடக்கிறான். போய்ப்பார்”.

அறையின் மின்குமிழ் ஒளிர்ந்தது.

அட பேய்ப்....எழும்பி வெளியால வாடா

அட்ரீனலினின் அதிஉச்ச சுரப்புடன் வெளியே வந்தேன்.

அடியடா ரிப்ஸ். சொல்லும்மட்டும் நிப்பாட்டக்கூடாது.

சொல்லி விட்டு அறையினுள் நுழைய, நான் ரிப்ஸ் (தண்டால்) அடித்துக் கொண்டிருந்தேன்.

டேய் என்ன செய்யிறாய்?
அப்போதுதான் வீட்டினுள் நுழைந்திருந்த வேறொருவன் என்னைப் பார்த்துக் கேட்டான்.

நிப்பாட்டீற்று எழும்பு!

எழுந்தேன்.

என்னடா பேர்?

“சுந்தரலிங்கம் ஜெயந்தன்”

எந்த இடம்?

“யாழ்ப்பாணம்”

யாழ்ப்பாணம் எவ்விடம்?

”வேலணை”

வேலணை எங்க? அந்தப் பிள்ளையார் கோயிலுக்கு என்ன பேர்? மறந்து போச்சு. அதுக்குக் கிட்டவா?

யாழ்ப்பாணத்தில் எல்லா ஊர்களிலும் கோயில்கள் இருக்கும் என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டு யாழ்ப்பாணமே தெரியாதவர்கள் எல்லாம் அந்தப் பிள்ளையார் கோயிலுக்குக் கிட்டவா வீடு என்றோ அல்லது இந்த வைரவர் கோயிலுக்குக் கிட்டவா வீடு என்று கேட்டு ஏதோ தானும் அந்த இடத்தைச் சேர்ந்தவன்தான் என்று காட்டிக் கொள்வதைப் பலமுறை அனுபவத்தில் கண்டிருந்ததால் எரிச்சல் வந்தது.

டேய்! உன்னை என்ன சொல்லீற்றுப் போனான்? ஏன் எழும்பினனீ? அடியடா ரிப்ஸ்

கொஞ்சம் பொறு மச்சான். நான் இவனோடை கொஞ்சம் கதைக்க வேண்டியிருக்கு

நீ எவ்வளவு நேரமெண்டாலும் கதை. இவன் இண்டைக்கு இஞ்சதான் இருக்கப்போறான். இண்டைக்குத்தான் இவனுக்கு என்னைப்பற்றித் தெரியப் போகுது.

வேலணை எவ்விடம்?

“மணியாறன் வீட்டடி.”

மணியாறன் வீட்டடியோ?

“ஓம்!”

அப்பர் என்ன வேலை?

மௌனமாயிருந்தேன்.

அப்பர் இல்லையே? செத்திற்றேரே?

சரிசரி. எல்லாரும் ஒருநாள் சாகிறதுதான். என்ன வேலை செய்தவர்?

“கடை வைச்சிருந்தவர்”

எங்கை?

“வங்களாவடியில”

ஓ! அப்ப நீ, வேலணை சென்றலில படிச்சனியா?

“ஓம்”

எத்தனையாம் ஆண்டு வரைக்கும் படிச்சனி?

“91 இல முழுசா இடம்பெயருற வரைக்கும் படிச்சனான்”

அப்ப பள்ளிக்கூடத்தில என்னைக் காணேல்லையா?

“கண்டது போலதான் இருக்கு. சரியா ஞாபகமில்லை”
சும்மா சடைந்தேன்.

ம்ம்ம்... நீ மணியாறன் வீட்டடி எண்டு சொன்னனி என. ஆ! உனக்கு ஜெயந்தினியைத் தெரியுமா?

நெஞ்சு திக்கென்றது. அங்க இங்க சுத்திக் கடைசியா அடிமடியில கையை வைச்சிட்டானே.

“எந்த ஜெயந்தினி?”

90 ஆம் ஆண்டு எந்த வகுப்பில படிச்சனீ?

“8ம் வகுப்பு”

அவள் அப்ப என்னோட O/L படிச்சுக் கொண்டிருந்தவள். அவளும் மணியாறன் வீட்டடிதான்.

“தெரியேல்லை”.

வடிவா யோசிச்சுப்பார். ஒரு நீலக்கலர் லேடீஸ் சைக்கிளில வாறவள்.

ஆரையடா விசாரிக்கிறாய்?” - இடையில் புகுந்தான் அவன்.

ஜெயந்தினி எண்டு ஒரு சுப்பர் சரக்கு மச்சான். என்னோட படிச்சவள். 90 ஆம் ஆண்டு பிரச்சனைக்குப் பிறகு அவளைக் காணக்கிடைக்கேல்ல.

இஞ்ச வா! உனக்கு அவளத் தெரியாதோ? உங்கட வீட்டுக்குக் கிட்டத்தான் அவளும் இருந்திருக்க வேணும்.

“ஞாபகம் இல்லை அண்ணே!”

அவளின்ர அப்பர் வங்களாவடிச் சந்தியில கடை வைச்சிருந்தவர். நல்லா யோசிச்சுப்பார். அவளுக்குத் தம்பியும் ஒருத்தன் இருந்தவன். உங்களோட தான் படிச்சிருப்பான் எண்டு நினைக்கிறன்.

“எனக்கு நினைவில்லை அண்ணே!”

பொய் சொல்வதென்று முடிவெடுத்த பின் அதில் தளம்பக்கூடாது என்பதை கடந்தகால பகிடிவதை அனுபவங்களிலிருந்து உணர்ந்திருந்ததால் பொய்யுரைத்தேன்.

நீ சுத்துறாய்

“இல்லையண்ணே!”

உன்ரை அப்பரும் வங்களாவடியில தானே கடை வச்சிருந்தவர்?

தயக்கத்துடன் தலையசைத்தேன். பிடி கொடுத்து விட்டேன் என்கின்ற பயம் வயிற்றைக் கலக்கியது.

மச்சான்! நீ செமையாச் சுத்துற. ஆனா இன்னொரு வேலணையானுக்குச் சுத்துப்பாக்கிறாய் எண்டது உனக்கு விளங்கேல்ல. ஜெயந்தினி, ஜெயந்தன் பேர்களைப் பார்க்க விளங்கேல்லை? டேய் நீ அவளின்ர தம்பி தானே. உண்மையைச் சொல்லு அவள் இப்ப என்ன செய்யிறாள்?

ஆட்களை அறியாமல் அக்காவைப் பற்றி எப்படிச் சொல்ல முடியும்? நாக்குக் கூசினாலும் எனக்கு அப்பிடியொரு அக்காவே இல்லை என்றேன்.

மச்சான் டேய்! இவன் செமச்சுத்துச் சுத்துறான் மச்சான். இவனோட இனிக் கதைச்சு வேலையில்ல. நீயே கவனிச்சுக் கொள்ளு

சொல்லிவிட்டு என்னை விட்டுவிட்டு விலகினான்.

அண்ணை நீ ரிப்ஸை அடிக்கத் தொடங்கு

50 இற்கு மேல் தாண்ட முடியவில்லை. pushup பண்ண முடியாமல் அப்படியே படுத்து விட,

என்ன களைச்சுப் போயிற்றியே? எத்தனை ரிப்ஸ் அடிச்சனீ?

“அம்பது”

சரி எழும்பித் தோப்புக்கரணம் போடு. அஞ்ஞூறு (500) தோப்புப் போட வேணும்.

மண்டை விறைத்தது. என்னால் அவ்வளவு போட முடியாது என்பது புரிந்தது. எதுவும் செய்யாமல் அப்படியே நின்றேன்.

என்னடா முறாய்க்கிறாய்? போடச் சொன்னால் போட மாட்டியா?

அமைதியாய் இருந்தேன்.

சரி! அப்ப நீ வெளியால போ. நீ அன்ரி ராக்கர் எண்டு நான் மற்றாக்களுக்கு inform பண்ணி விடுகிறன். நீ இனி ஒருத்தரிட்டையுமே ராக்கிங் வாங்கத் தேவையில்லை.

அதற்கும் அமைதியாயிருந்தேன்.

போடா வெளிய. அன்ரி ராக்கர் எல்லாம் இஞ்சை வரக்கூடாது.

அன்ரி ராக்கர் ஆக மாறி விட்டால் பிறகு instructors-மாரிடம் சொல்லி course works எல்லாம் fail-ஆக்கிப் போடுவாங்கள். ஒரு நிகழ்ச்சிகளுக்கும் போக விடமாட்டாங்கள். எல்லாரும் ஒருமாதிரித்தான் பார்ப்பார்கள். படிப்பை முடிச்சு வெளியால வாறதே சரியான கஷ்டம் எனப் பரவியிருந்த பலவிதமான வதந்திகளையும் உண்மையென நம்பியதன் விளைவாக தன்னிச்சையாக வெளியே செல்ல முயன்ற கால்களை மூளை தடுத்து நிறுத்தியது.

“நான் தோப்புக் கரணம் போடுறன் அண்ணே!”

அப்பிடியெண்டால் ஆயிரம் தோப்புக்கரணம் போடவேணும். போடு

ஆரம்பித்தேன். சிறிது நேரத்தின் பின்னர்,

எத்தின போட்டிட்டாய்?

“நூற்றிமுப்பத்தெட்டு”

ம்... தொடர்ந்து அடி

அடித்துக் கொண்டேயிருந்தேன்.

மீண்டும் சிறிது நேரத்தின் பின்,

இப்ப எத்தின?

“முன்னூற்றிப்பன்னிரெண்டு”

அதுக்குள்ள முன்னூற்றிப்பன்னிரெண்டு அடிச்சிற்றியோ? சிலோவாப் (slow) பண்ணு. பிறகு உடம்புக்கு ஏதாவது ஆகீரும்

ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுதிச்சாம். மனதிற்குள் வன்மம் பிறந்தது. கடவுளே எனக்கு ஏதாவது ஆக வேண்டும். அதன் பழி இவன் மீது விழவேண்டும். எல்லோரும் இவனைக் கேவலமாய்ப் பார்க்க வேண்டும். நான் செத்தாலும் பரவாயில்லை. இவன் பழிவாங்கப்படவேண்டும் என்கின்ற விபரீத எண்ணம் ஆற்றாமையின் உச்சக்கட்டத்தில் வந்து நின்றது. மிக மிக வேகமாக தோப்பக்கரணம் போடத் தொடங்கினேன்.

இப்ப எத்தினை?

“அறுநூற்றியெழுபத்தெட்டு”

காணும் நிப்பாட்டு

“நீங்கதானே ஆயிரம் போடச் சொன்னீஙங்க!”

அது அப்ப. இப்ப சொல்லுறன், காணும் நிப்பாட்டு

நிறுத்தாமல் அடித்துக் கொண்டிருந்தேன்.

நீ என்ன அன்ரி ராக்கரா?

“இல்லை”

அப்ப சொல்லுறது கேக்க வேணும். நிப்பாட்டு எண்டால் நிப்பாட்ட வேணும்

மதம் கொண்ட யானையின் நெற்றியில் அங்குசத்தால் குத்துகையில் எப்படி அதன் வெறி தணிகிறதோ, அப்படியே அன்ரி ராக்கர் என்கின்ற மந்திரச் சொல்லுக்கு என் மனமும் ஏனோ பணிந்து விட்டது.

களைச்சுப் போனாய். இந்தா ரீ-யைக் குடி

விசர் விசராய்க் கிளம்பியது. குடிக்க மறுத்தேன்.

இதுவும் ராக்கிங்தான். குடிக்க விருப்பமில்லையெண்டால் அன்ரி ராக்கர் எண்டு சொல்லீற்று வெளிய போ!

தந்த தேனீரைக் குடித்தேன்.

சரி! அக்பருக்கு இப்ப போகப் பயமெண்டால் இங்கையே படுத்திற்று விடிய எழும்பிப் போ!

“இல்லை நான் அக்பருக்கே போறன்”

அதுவும் நல்லம் தான். விடியேக்க ஆரும் கண்டாங்கள் எண்டால் பிறகு பிடிச்சுக் கொண்டு போயிருவாங்கள். ரோச்லைட் வேணுமா நேரம் ஒரு மணியாகப் போகுது

”வேண்டாம்”

தனியப் போகப் பயமெண்டால் றோட்டுவரைக்கும் வரவா?

சிரிப்பாய் வந்தது. அங்குணாவலையில் இருக்கையில் ராக்கிங் முடிந்து நடுச்சாமம் 12 மணிக்குப் பின்னரும் கூட சுடுகாட்டினைக் கடந்து இருப்பிடத்திற்குச் சென்றிருக்கிறேன். அந்தளவிற்கு பகிடிவதை பற்றிய பயம் பேய்கள் பிசாசுகள் பற்றிய பயத்தினை விரட்டி விட்டருந்தது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக இங்கிருந்து நகரச் சொல்லி மனம் கூறியது.

“இல்ல நான் போயிருவன்” கூறிவிட்டு, விரைவாக நடக்க முடியாமல் கால்தொடைகளுக்குள் பிடித்துக் கொண்டதால் மெதுவாக நடந்து 15 நிமிடங்களில் அடைய வேண்டிய அக்பர் விடுதியினை 40 நிமிடங்களில் சென்று சேர்ந்து எனது அறையினை அடைந்தேன்.

என்னடா? இப்பத்தான் வாறியா? ஆரு பிடிச்சுக் கொண்டு போனவங்கள்?
அறைக்கதவைத் திறக்கையில் எழுந்த சத்தத்தைக் கேட்டு விழித்துக் கொண்டு கேட்டான் அறை நண்பன் தீபன்.

“மச்சான்! இவ்வளவு நாளும் நான் ஒருத்தருக்கும் ராக்கிங் குடுக்கிறதில்லையெண்டுதான் இருந்தனான். இப்ப சொல்லுறன் மச்சான். அடுத்த batch-இல ஆராவது அந்தப் பேய்ப்....... தெரியுமெண்டு சொன்னாங்களோ அவங்கள் எல்லாரும் என்னட்டச் செத்தாங்கள் மச்சான்”

என்னை வியப்புடன் பார்த்த தீபன் எழுந்து விளக்கைப் போட்டான்.

என்னடா நடந்தது? இவ்வளவு நாளும் நாங்க தூஷணம் கதைச்சால் எங்களைப் பேசுறநீ, இண்டைக்கு நீயே தூஷணம் கதைக்கிற?

“அந்தப் பேய்ப்....யை வேற என்னெண்டு சொல்லுறது? எனக்கு மச்சான் தோப்படிச்சதோ இல்லாட்டி கறண்ட் வேண்டினதோ வலிக்கேல்லை மச்சான். தோப்படிக்கேக்க அந்தப் ... சொன்னான் மச்சான் மெதுவா அடி. இல்லாட்டி உடம்புக்கு ஏதாவது ஆகிருமாம். அதைத்தான் மச்சான் என்னால தாங்கேலாமக் கிடக்கு”

சரிசரி இதெல்லாம் சகஜமெடாப்பா? ராக்கிங் முடிய இன்னும் ஒருமாதம் தானே கிடக்கு. விண்டோஜின் வேணுமெண்டால் அந்த மேசை லாச்சிக்க கிடக்கு. எடுத்துப் பூசிற்றுப் படுடாப்பா

விளக்கை அணைத்து விட்டு தீபன் படுத்துக் கொண்டான்.

அவன் மீதான ஆத்திரம் அதிகரித்துக் கொண்டே சென்றது. அடுத்த batch-இல் அவனைத் தெரியுமென்று யாரெல்லாம் சொல்கிறார்களோ அவர்களை வதைத்தெடுப்பதாய்த் தீர்மானித்துக் கொண்டதன் பின்தான் மனக் கொந்தளிப்பு ஓரளவிற்கு அடங்கியது.

***********

ஜேன்....! வலிக்குதாடா...?

“அக்கா..... நீ எப்படி இஞ்ச?”

எனக்கெல்லாம் தெரியும். உன்னைப்பற்றி நான் எவ்வளவோ நினைச்சு வைச்சிருக்கிறேன். அதையெல்லாம் கலைச்சுப்போடாதே

“நீ என்ன சொல்லுறாய்? எனக்கொண்டும் விளங்கேல்லை”

நீயும் இண்டைக்கு ஒரு பெம்பிளையை அதுவும் ஒரு தாயைக் கேவலமாய்ப் பேசிப்போட்டாய்தானே!.

“என்ன சொல்லுற நீ?”

தீபனிடம் உன்னை ராக் பண்ணினவனைப்பற்றி நீ தூஷணத்தால் பேசினனீ தானே. அவன் செய்த பிழைக்கு எப்படி நீ அவன்ர அம்மாவைப் பழிக்கலாம்?

அடடா! அகராதிகளில் அடங்காத செந்தமிழ் வார்த்தைகள் எல்லாமே பிறப்புறுப்புகளையும் பிறப்பித்தவளையும் பற்றிமல்லவா இருக்கின்றன. எதற்காக ஒருவனை ஏசுவதற்காக அவன் தாயைப் பழிக்க வேண்டும்? இதுவும் பெண்ணடிமைத்தனத்தின் மீதான ஆணாதிக்கத்தின் ஒரு வகை வெளிப்படா? உண்மையிலேயே ஒவ்வொரு ஆணின் தப்பிற்கும் அவன் தாய்தான் காரணமா? அப்படியானால் தந்தைக்கு அதில் எந்தப் பங்கும் கிடையாதா? “தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து முந்தி யிருப்பச் செயல்” என்றாரே வள்ளுவர். பின் எதற்காக எனது தமிழ் சமூகம் ஒரு ஆணைத் திட்டுவதற்காய் அவன் தாயைக் கேவலப்படுத்துகிறது?. எல்லா சமூகங்களிலும் எதிராளியைத் திட்டுவதற்காய், எதிராளியின் அன்னை இழுக்கப்படுகிறாளா? குழப்பமாயிருந்தது. “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே...” பாடல் நினைவினில் வந்து போனது. அக்காவைப் பார்த்தேன். சிரித்தாள்.

எங்கடை அம்மாவைப் பற்றி என்ன நினைக்கிறாய்? அப்பா இருக்கேக்கையும் சரி, ஆமி பிடிச்சுக்கொண்டு போனாப்பிறகும் சரி. உன்னைப் பிழையாவா வளர்த்திருக்கிறா?

“ஐயோ! என்ன கதைக்கிற நீ! எங்கட அம்மா, அவவை எதுக்கு இப்ப இதுக்குள்ள கொண்டு வாறாய். அவா என்ன பிழை செய்தவா?”

அடுத்த batch-இல உன்னட்ட ராக்கிங் வாங்கப் போறவனும் உன்னைத் திட்டுறன் எண்டு எங்கடை அம்மாவைத்தானே பழிக்கப்போறான்

நெற்றிப்பொட்டில் அறைந்தாற் போல் வலித்தது.

இன்று என்னை பகிடிவதைக்கு உட்படுத்தியவனுக்கும் அவனது பகிடிவதைக் காலத்தில் இப்படித்தான் வலித்திருக்குமோ? அவனது சீனியர் மேல் எழுந்த வன்மத்தை என்னிடம் பழி தீர்த்திருக்கிறான். நான் எனது ஜூனியர்களிடம் பழிதீர்க்க நினைத்திருக்கிறேன். இப்படியே தலைமுறை தலைமுறையாய் இந்த வினை கைமாறிக் கொண்டேயிருக்கப் போகின்றதா? இதுவும் இந்திய தமிழ்த்திரைகளில் வருகின்ற மாமியார் மருமகள் கொடுமை போன்றது தானா?

“அக்கா!” - கேவலுடன் எழுந்தேன்

அட! எல்லாமே கனவுதானா?

தொடைகளில் வலி பரவி வருவது தெரிந்தது. எழுந்து விண்டோஜினை எடுத்துத் தேய்த்துக் கொண்டேன். சற்று நேரத்திலேயே வலி குறைந்தது. நெஞ்சை அழுத்திப் பிடித்து வைத்திருந்த பாரம் ஒன்று விலகிச் செல்வதையும் உணர்ந்தேன். கனவில் வந்து என் மன வலிகளுக்கு களிம்பு தடவி களைந்து விட்டுச் சென்றிருக்கிறாள். எவ்வளவு நாசூக்காக நான் பண்ணவிருந்த தப்பினை உணர்த்திவிட்டிருக்கிறாள்? இப்படியொரு அக்கா கிடைக்க, நான் என்ன தவம் செய்திருக்க வேண்டும்? இனியெடுக்கும் எல்லாப்பிறப்பிலும் இந்தப் பந்தம் தொடரவேண்டும். இறையே! நீ இருப்பது உண்மையோ பொய்யோ நானறியேன். ஆனாலும் உன்னிடம் எனக்கொரு வரம் வேண்டுமென்றால். என் எல்லாப் பிறப்பிலும் இநதப் பந்தங்களைத் தொடரச் செய்வாயாக!

பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11

3 comments:

  1. நண்பா.. இன்று தான் இந்தப் பக்கம் வந்தேன். பல்கலைப் பகிடி வதைகள் மிக மிக நன்றாக சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் உள்ளன. இன்னும் நிறைய எழுதுங்கோ. பகிடி வதைகள்... அருமை.

    ReplyDelete
  2. // தோப்படிக்கேக்க அந்தப் ... சொன்னான் மச்சான் மெதுவா அடி. இல்லாட்டி உடம்புக்கு ஏதாவது ஆகிருமாம். அதைத்தான் மச்சான் என்னால தாங்கேலாமக் கிடக்கு”// மிகவும் அருமையாகக் கதையை நகர்த்துகிறீர்கள்.... தொடர்ந்து வாசிக்க ஆவலாக இருக்கிறது..

    ReplyDelete
  3. என் பெரா ஞாபகங்களைக் கொண்டுவந்தீர்கள். நான் 1991 - 1995 அங்கு இருந்தேன். றாகிங் செய்த எந்தப் பேய்ப் %$%^& பயலும் எனக்கு பிறகு எந்த உதவியும் செய்யவில்லை. ஆதனினால் நான் ராகிங் கொடுக்கவில்லை. கொடுமை என்னவென்றால், என் தம்பிக்கு "உன் அண்ணனிடம் ராகிங் நல்லா வாங்கின்னான்" எண்டு பொய் சொல்லி நல்லாக ராகிங் கொடுத்தாங்கள். பேய்ப் #@#@## மக்கள்.

    ReplyDelete