Friday, October 23, 2009

தொல்லைபேசிகளாகும் தொலைபேசிகள்!

மலேசிய வானொலியாகிய மின்னல் F.M. இன் நேற்றைய கண்ணாடித்துண்டுகள் என்னும் பெயரிலான சமூகப்பிரச்சினைகளை அலசி ஆராயும் நிகழ்ச்சியினை செவிமடுத்த போதினில் நெஞ்சு பகீரென்றது. வரும் குறுந்தகவல்கள் (SMS) மற்றும் அறியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புக்கள் எத்தனை தூரத்திற்கு இளையவர்களுக்கு, அதிலும் குறிப்பாக பள்ளிப்பருவப் பெண்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்துகின்றது என்பதைப் பாதிக்கப்பட்டவர்கள் பகிர்ந்து கொண்ட போது நெஞ்சடைத்துப் போனது.

பொதுவாக முன்பின் தெரிந்திராத நபர்களிடமிருந்து வரும் குறுந்தகவல்கள், அதை அனுப்பியவர் யாராயிருக்கும் என்கின்ற ஆவலைத் தூண்டிவிடும். அதிலும் குறிப்பாக இளையவர்கள் அதனை ஒரு புதிர் போல எண்ணி அதை விடுவிக்கும் முயற்சியில் இறங்கி விடுகிறார்கள். எனவே அவர்களும் பதில் அனுப்ப, அவர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட வலைக்குள் அவர்கள் விழுந்து விடுகிறார்கள். குறுந்தகவல்களினூடாக ஏற்படும் உறவுகளுக்குள் சிக்கியவர்களில் இளம்பெண்களே கூடுதலான பாதிப்பினை அனுபவிக்கிறார்கள். நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவி கூறியவாறு சிலவேளைகளில் அதன் பாதிப்பு அவர்களின் வாழ்க்கை முறையையே மாற்றிவிடுகிறது. அல்லது அவர்களை ஒருவகை மனநோய்க்குள் தள்ளி விடுகிறது. தமக்கு ஏற்பட்ட பாதிப்பினை பெற்றோர்களிடம் கூடச் சொல்வதற்கான அவர்களின் தயக்கத்தால் அவர்கள் மனநோயாளிகளாக மாறிவிடும் அபாயமும் இருக்கிறது.

அந்த நிகழ்ச்சியில் கல்நது கொண்ட கல்வியியலாளர்கள் கூறியது போல் சிறுவர்களுக்கு கைத்தொலைபேசி தேவைதானா என்கின்ற கேள்வி நியாயமானதாகவே எனக்கும் பட்டது. கைத்தொலைபேசியால் சிறுவர்களுக்கு கிடைக்கும் அனுகூலங்களை விட பிரதிகூலங்களே அதிகம். அதிலும் இப்போது video-camera உட்பட இணையத் தொடர்பு வசதிகளும் கைத்தொலைபேசியில் கிடைக்கப்பெறுவதால் பதின்ம வயதினரின் முக்கிய கவனக்கலைப்பானாக இந்தக் கைத்தொலைபேசிகள் மாறி விடுகின்றன. பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிடப் பெற்றோர்களாலும் முடியாதிருப்பதால் பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்பதை அறியாது தங்கள் பிள்ளைகள் அப்பாவிகள் என்றே பெரும்பாலான பெற்றோர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தக் கைத்தொலைபேசிகளால் ஏற்படும் தொல்லைகள் பதின்மப் பருவத்தினரை மட்டும் தான் பாதிக்கின்றன என்று சொல்வதற்கில்லை. ஆயினும் பாதிக்கப்பட்டவர்களில் பெருமளவிலானோர் பதின்மப் பருவத்தினராகவே காணப்படுகின்றனர். நேற்றைய கண்ணாடித்துண்டுகள் நிகழ்ச்சியினை செவிமடுத்துவர்கள் பல தகவல்களை அறிந்திருப்பார்கள். அந்நிகழ்ச்சியினை வழங்கியவர்கள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள்.

எனக்கும் இப்படியான முன்பின் அறிந்திராத நபர் ஒருவரிடமிருந்து தொல்லை வந்து கொண்டிருந்தது. அது 2003ஆம் ஆண்டு காலப்பகுதி. ஒரு நாள் நள்ளிரவு தாண்டிய நேரம் திடீரென தொலைபேசி அலறியது. நித்திரை குழம்பி அதை எடுக்க கையசைக்க அழைப்பொலி நின்று விட்டது. யாராயிருக்கும் என்கின்ற நினைப்புடன் அழைப்பு எண்ணைப் பார்த்த போது, அது புதிய இலக்கமாயிருந்ததுடன் அதே இலக்கத்திலிருந்து ஒரு குறுஞ்செய்தியும் வந்திருந்தது. 'Sellam niththiraiyaa? Good night da sellam'. மண்டை குறுகுறுத்தது. எவன்டா அவன்? அறுப்பான் நித்திரையால இருக்கிறவனை எழுப்பி good night சொல்லுறது என்கின்ற ஆத்திரத்துடன் அந்த இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்த இணைப்புத் துண்டிக்கப் பட்டது.

தொடர்ந்து சில நாட்களுக்கு நள்ளிரவு ஒரு மணி இரண்டு மணிக்கெல்லாம் குறுஞ்செய்தியும் சில கணநேர அவகாசத்தில் துண்டிக்கப்படும் அழைப்புகளும் தொடர்ந்தன. நான் அழைப்பினை ஏற்படுத்த இணைப்புத் துண்டிக்கப்பட்டு விடும். அட! யாரோ ஒரு பொண்ணு எனக்கும் ரூட்டு விடுது என்று மனதுக்குள்ளும் சின்னதாய் ஒரு சந்தோசம்.

அந்த சந்தோசம் ஒரு நாள் கூட நிலைக்கவில்லை. மறுநாள் வந்த குறுஞ்செய்தி விசரைக் கிளப்பியது. “Ennadi nee, naan eththanai sms anuppuran nee oru sms kooda enakku anuppa maaddiyaa?". அந்தச் செய்தியைப் பார்த்ததும் யாரோ என்னைக் காய வைக்கிறார்கள் அல்லது தவறுதலாக எனக்கு அனுப்புகிறார்கள் என்றே எனக்குப் பட்டது. எனவே பதிலுக்கு அவர் யாரெனக் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பினேன். “Your sweet heart" என உடனேயே பதில் வந்தது. சரி விளையாடுறான். வாடா மாப்பிள, வந்து மாட்டிக்கிட்டியா நாங்களும் விளையாடுவோம்ல, என்கின்ற எண்ணத்தில் நானும் அந்த முகமறியாத் தொடர்புடன் விளையாடத் தொடங்கினேன்.

நண்பன் ஒருவனின் உதவியுடன் தொலைபேசி இலக்கத்தை வைத்து அந்த நபரின் விபரங்களை அறிந்த போது அவர் என்னிலும் 8 வயதுகள் குறைந்த ஒரு மாணவன் என அறிய வந்தது. அவன் நான் பெண் எனவே நம்பிவிட்டான். என்னை சீரியசா காதலிப்பதாக வேறு குறுஞ்செய்திகளில் உளற ஆரம்பித்தான். இத்தனைக்கும் ஒருதடவை கூட தொலைபேசியில் உரையாடியதில்லை. ஒருநாள் அதிகாலை 3 மணியளவில் “Intraikku enka veeddila maadu kantru poaddathu. enakku un gnaapakam thaan. niththirai varukuthillai. sms anuppudi" என்று குறுந்தகவல் அனுப்பி விட்டு துண்டித்த அழைப்பினை (missed call இனை தமிழில் துண்டித்த அழைப்பு எனலாமா?) ஏற்படுத்தினான். வழமை போன்றே நானும் சற்று நேரம் கழித்து துண்டித்த அழைப்பினை ஏற்படுத்தினேன். மறுநாள் யோசித்த போது பாவமாய் இருந்தது. எனக்கு இதுவரையிலான செலவு 2.00 ரூபாய் தான் (ஒரேயொரு குறுஞ் செய்தி மட்டுமே. மற்றதெல்லாம் துண்டித்த அழைப்பு). ஆனால் அவனுக்கோ அது 200.00 ரூபாயையும் தாண்டி விட்டிருந்தது. மேலும் விளையாட்டைத் தொடருவும் மனம் விரும்பவில்லை.

மறுநாள் பொதுத் தொலைபேசியில் அவனை அழைத்து விபரம் சொன்னபோது அதிர்ந்து விட்டான். ஆனாலும் அவன் லேசுப்பட்ட ஆளில்லை. வெள்ளவத்தை W.A.சில்வா மாவத்தையில் இருந்து கொண்டு வீட்டிலை மாடு கன்று போட்டிருக்குதென்று கதை விட்டிருக்கிறான். தன்னுடன் இணையத்தில் பெண் பெயரில் chat செய்த ஒருவரே தனது தொலைபேசி இலக்கம் என்று என்னுடைய இலக்கத்தினை அவனுக்குக் கொடுத்ததாகக் கூறினான். இதைப் பற்றி என் நண்பர்களிடம் கூறி அந்த குறுஞ்செய்திகளைக் காட்டியபோது அவர்களும் “மச்சான் இதே உண்மையில ஒரு பெட்டைக்குப் போயிருந்துதெண்டா அவன்ரை லவ் சக்சசாகியிருக்கும்” என்றனர். உண்மைதான் பெரும்பாலான குறுஞ்செய்திகள் அவ்வளவு உருக்கமாகவும், மனதைக் கரைப்பனவாகவுமே இருந்தன.

ஆக பெற்றோர்களே உங்கள் பதின்மவயதுப் பிள்ளைகளின் கைத்தொலைபேசிகள், அழைப்புக்கள், குறுந்தகவல்கள் தொடர்பாகக் கவனமாக இருங்கள். சரி பெரியவர்கள் என்று அழைக்கப்படுகின்றவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை இந்த அசைபடத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.




5 comments:

  1. ஆம் நண்பா,... நல்ல பகிர்வு மிக்க நன்றி

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு. சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி பாவிப்பதால் அவர்களின் மூளையில் சில பாதிப்புக்கள் ஏற்படுவதாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.

    ReplyDelete
  3. ஆமாம்...சிறுவர்களுக்கு கைத்தொலைபேசி தேவைதானா? இதுவும் ஒரு உளவியல் பிரச்சினை என்றே நான் பார்க்கிறேன். சிலரை சங்கடத்துக்குள்ளாக்க வேண்டும் என்றே சிலர் அலைகிறார்கள்..! நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவு...!!!

    ReplyDelete
  4. நீண்ட நாட்களின் பின்னர் வலைப்பதிவின் பக்கம் வந்த போது சுவாரசியத்துடன் நல்ல தகவலை வாசிக்கக் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. எனக்கும் இந்த அனுபவம் இருக்கின்றது.. இன்னொருவனைக் கலாத்து ஏமாற்றியது, இன்னொரு சமயம் நான் ஏமாற்றுப்பட்டது.. எப்போதும் சிரிப்பு வருகின்ற நிகழ்ச்சி.. ;)

    ReplyDelete
  5. வணக்கம்....
    கண்ணாடித் துண்டுகள் என்ற நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் என்ற முறையிலும் அறிவிப்பாளன் என்ற முறையிலும் உங்களுக்கு மின்னல் சார்பில் என் நன்றியை தெரிவிக்கின்றேன்.

    (இப்போதுதான் கவனித்தேன்)

    இவ்வாண்டுத் தொடக்கம் கண்ணாடித்துண்டுகள் நிகழ்ச்சி ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு மணி 7.30க்கு ஒலியேறுகின்றது. சமுக பிரச்சனைகளை மையமாகக் கொண்டு நடத்தப்படும் இன்நிகழ்ச்சிக்கு உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.

    இப்படிக்கு தயாஜி வெள்ளைரோஜா
    http://tayagvellairoja.blogspot.com/

    www.minnalfm.com
    (மின்னல் பண்பலை)

    ReplyDelete