Wednesday, June 17, 2009

முக்தியடைய என்ன வழி?

(இது ஒன்றும் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் நோக்கத்திலல்ல)

காலாதிகாலம் தொட்டே பிறந்தவர் அனைவருக்கும் இறப்பும் உறுதிப்படுத்தப்பட்டே வந்திருக்கிறது. மார்க்கண்டேயர், அசுவத்தாமா போன்றவர்களைச் சிரஞ்சீவிகள் என்று கூறினாலும் இன்றுவரை அவர்களின் இருப்பு உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே கணிதத் தொகுத்தறிவுக் கோட்பாட்டின் பிரகாரமும் இறப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. ஆக இறப்பு மட்டுமே நிச்சயப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கையில் வாழ்க்கை ஜனனத்திற்கும் மரணத்திற்கும் இடையில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது.

அப்படியெனில் எதற்காக இந்த வாழ்க்கை? வாழ்க்கையின் இலக்குத்தான் என்ன?

இப்படியான கேள்விகள் எழுந்த போதினில்தான் மதங்கள் உருவாகினவா? சரி மதங்கள் என்ன கூறுகின்றன? முக்தியடையச் சொல்கின்றன. அதற்கான வழிகள் எனச் சிலபல முறைகளையும் கூறுகின்றன. அவ்வாறான வழிகளில் விஞ்சி நிற்பது கடவுளை ஏற்று வழிபடுதலாகும். கடவுளின் அருள்பெற்றால் முக்தியடையலாம் என்று அடித்துச் சொல்லப் படுகிறது.

எனினும் காலந்தோறும் கடவுளர் எனத்தம்மைச் சொல்லிக்கொண்டோ, அன்றி கடவுளரின் தூதர்கள் எனத் தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்டோ இப்புவியில் அவதரித்து எம்மை முக்திக்கு அழைத்துச் செல்லும் வரம் நல்குவதாக பலர் உறுதியளித்திருந்தாலும், ஏனோ தெரியவில்லை, இன்னமும் எம்மில் யாரும் முக்தியடைந்ததாகத் தெரியவில்லை. ஆதலால் அந்தக்கடவுளரையும் அவர்தம் தூதர்களையும் புறக்கணித்து விட்டு ஆதிக்கடவுளை நம்பி தவங்கள் மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டுமாதலால், ஆத்திகர்களுக்கு எதிராய் நாத்திகர்களும் கடைவிரிக்கிறார்கள். இது கலிகாலம் வேறா? இப்போது கடவுளே இல்லை என்னும் நாத்திகவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. கடவுள் உண்டு, அவர் எமக்கு மோட்சமளிப்பார் என்கிற நம்பிக்கையில் தவம் செய்வோரில் பலருக்கும் குழப்பம். அவர்கள் கடவுளை மறுப்போருக்கெதிராக தாமும் கதைக்கத் தொடங்க தவம் கலைந்து போவதைப் பற்றிய கவலை பலருக்கு இல்லாமல் போய்விடுகிறது.

“தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்” என்றவர் தெய்வப்புலவர் வள்ளுவர். ஆக கடவுளால் முடியாதெனினும் தீவிர முயற்சி அறுவடையைத்தரும். எமது தவமோ மோட்சத்தைத் தேடி. அதை அடைவதற்கு இந்துமதம் பல வழிகளைக் கூறி உதாரணபுருஷர்களாய் நாயன்மார்களைப் பட்டியலிடுகிறது.

ஒருதடவை பெங்களூர் சென்றிருந்தபோது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (ISKCON) மையத்திற்கும் செலலும் வாய்ப்புக் கிடைத்தது. அதன் ஸ்தாபகர் மறைந்த, பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்கள் அருளிச்சென்ற சில ஆன்மீக நூல்களை தரிசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. கலிகாலத்தில் மோட்சம் அடைவதற்கு இலகுவான வழி இறைவனின் நாமவளிப் பிரார்த்தனையாகும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இந்து மதத்தில் மோட்சமடைவதற்கான வழிகளில் ஒன்றாக அடியவர் வழிபாடு பற்றியும் சொல்லப்படுகிறது. சமயகுரவருள் ஒருவரான திருநாவுக்கரசர் மேல் பக்தி கொண்டு அதன்மூலமாகவே ஒரு நாயனாரான அப்பூதியடிகளைப்பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஊரெல்லாம் நாவுக்கரசர் நாமத்தில் நீர்ப்பந்தல் அமைத்து அடியவர்கள் தாகம் தீர்த்த அவர் பெருமையை அறிந்திருக்கிறோம்.

“தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்...”
-என்றார் சமயகுரவர் நால்வரில் மற்றொருவரான சுந்தரர்.

எனவே நாம் முக்தியடைவதற்கு, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கின்ற வாதப்பிரதிவாதங்களை விட்டுவிட்டு கடவுளின் நாமாவளியைப் பாடிக்கொண்டு அல்லலுறும் அடியவர் துயர்தீர்க்கும் வழிபாட்டில் ஈடுபடுவதே இப்போதைய சூழ்நிலையில் சாலச் சிறந்ததாய் இருக்கும்.

15 comments:

  1. //“தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
    திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்...”
    -என்றார் சமயகுரவர் நால்வரில் மற்றொருவரான சுந்தரர்.

    எனவே நாம் முக்தியடைவதற்கு, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கின்ற வாதப்பிரதிவாதங்களை விட்டுவிட்டு கடவுளின் நாமாவளியைப் பாடிக்கொண்டு அல்லலுறும் அடியவர் துயர்தீர்க்கும் வழிபாட்டில் ஈடுபடுவதே இப்போதைய சூழ்நிலையில் சாலச் சிறந்ததாய் இருக்கும். //

    மேலே நீங்கள் சுட்டிய பாடலும் சரி, சமயக் குரவர்களாக கருத்தப்பட்ட மூவரும், சமண சமயத்திற்கு எதிராக பேயாட்டம் ஆடி, எண்ணாயிரம் சமணர்களை கழுவேற்றினார்கள் என்பதே வரலாறு. சமயவெறிப் 'பிடித்த்வர்களின்' பாடலில் இருந்து முக்தி அடைய வழி இருப்பதாக தாங்கள் சொல்வது விந்தையிலும் விந்தை.

    யாருமே முக்தி அடைந்ததில்லை என்பதாக பதிவின் தொடக்கத்தில் குறுப்பிட்ட நீங்கள் கடைசியில் குழம்பியது ஏன் ?

    பிறப்பற்ற தன்மை உயர்வு என்போர் அதாவது முக்தி வேண்டுவோர் அனைவருமே உலகை, உலக மக்களை நேசிக்க தெரியாத்வர்கள், அல்லது உலகையே கொடுமையானதாக நினைப்பவர்கள். உலகமும், வாழ்க்கையும் இயற்கை, நீரோட்டம் போல் சென்று கொண்டிருந்தால் மரணபயம் இருக்காது. அதை புரிந்து கொண்டால் எத்தனை பிறவி வேண்டுமானாலும் இன்பத்துடனே பிறக்கலாம். அதன் பிறகு முக்தி என்ன ? அல்லது ஒருவன் கடவுளே ஆனாலும் அவையெல்லாம் பிறவியும் அதன் பயனுக்கும் கீழேதான்.

    வாழ்க்கையையும், பிறரையும் நேசிக்கச் சொல்லிக் கொடுக்காதோர் மாயமானென முக்தி ஒன்றை சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்கள். நாமும் அதைப் பார்க்க முயற்சிக்கிறோம்.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கோவி.கண்ணன்.

    //
    யாருமே முக்தி அடைந்ததில்லை என்பதாக பதிவின் தொடக்கத்தில் குறுப்பிட்ட நீங்கள் கடைசியில் குழம்பியது ஏன் ?
    //
    "இன்னமும் எம்மில் யாரும் முக்தியடைந்ததாகத் தெரியவில்லை."
    என்றே குறிப்பிட்டிருக்கிறேன் (எம்மில் என்பதைக் கவனிக்கவும்).

    மேலும் முக்தியடைதல் பற்றிய உங்கள் தளமும் எமது தளமும் வேறானவை.
    ”இது ஒன்றும் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் நோக்கத்திலல்ல” :-)

    ReplyDelete
  3. //
    எனவே நாம் முக்தியடைவதற்கு, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கின்ற வாதப்பிரதிவாதங்களை விட்டுவிட்டு கடவுளின் நாமாவளியைப் பாடிக்கொண்டு அல்லலுறும் அடியவர் துயர்தீர்க்கும் வழிபாட்டில் ஈடுபடுவதே இப்போதைய சூழ்நிலையில் சாலச் சிறந்ததாய் இருக்கும்.
    //
    ஏதோ சொல்ல வருகிறீர்கள் என்பது புரிகிறது.
    அடியவர்களாகிய எங்களுக்கு உச்சபட்ச அவலம் ஆரம்பித்து இன்றுடன் திங்கள் ஒன்று நிறைவடைகிறது. முக்தியடைவோம் இது நிச்சயம்.

    ReplyDelete
  4. இந்த பக்கத்த்தை முக்கி முக்கி வாசித்தவர்கள் எல்லாம் சுத்தி ஸாரி முக்தி அடைந்தாக கொள்ளலாமா மிஸ்டர் வலசு

    அன்புடன் ஆரூரன்

    ReplyDelete
  5. ஆத்திகமா? நாத்திகமா? புரியவில்லை

    ReplyDelete
  6. //தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்

    இதுதான் என்றும் உண்மையான ஒன்று..!

    ReplyDelete
  7. //
    எனவே நாம் முக்தியடைவதற்கு, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கின்ற வாதப்பிரதிவாதங்களை விட்டுவிட்டு...
    //
    கடவுள் இல்லையென்று ஆத்திகவாதிகளும் இப்போது அறிவித்து விட்டார்கள்.

    ReplyDelete
  8. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி ஆரூரன்.
    புரிந்துகொண்டு குழம்பாமல் தவத்தினைத் தொடர்ந்தால் நாங்களும் “முக்தி”யடையலாம்.

    ReplyDelete
  9. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி ஆ.ஞானசேகரன்.
    //
    ஆத்திகமா? நாத்திகமா? புரியவில்லை
    //
    புரியாவிடில் மாத்தி யோசியுங்கோ, புரிந்துவிடும். :-)

    ReplyDelete
  10. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி சுபானு.

    ReplyDelete
  11. //
    Anonymous said...
    கடவுள் இல்லையென்று ஆத்திகவாதிகளும் இப்போது அறிவித்து விட்டார்கள்.
    //
    எங்கள் வேண்டுதல் “முக்தி”யே

    ReplyDelete
  12. எனினும் காலந்தோறும் கடவுளர் எனத்தம்மைச் சொல்லிக்கொண்டோ, அன்றி கடவுளரின் தூதர்கள் எனத் தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்டோ இப்புவியில் அவதரித்து எம்மை முக்திக்கு அழைத்துச் செல்லும் வரம் நல்குவதாக பலர் உறுதியளித்திருந்தாலும், ஏனோ தெரியவில்லை, இன்னமும் எம்மில் யாரும் முக்தியடைந்ததாகத் தெரியவில்லை. ஆதலால் அந்தக்கடவுளரையும் அவர்தம் தூதர்களையும் புறக்கணித்து விட்டு ஆதிக்கடவுளை நம்பி தவங்கள் மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.//

    பெரிய விஷயங்களைப் பின்னூட்டத்தில் அடக்க முடியாது.
    இருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

    நீங்கள் புரிந்து கொண்டிருக்கும் சொற்களின் அர்த்தங்களே வேறு,வலசு.
    முக்தி என்றால் சுருக்கமாக ஜே.கிருஷ்ணமூர்த்தி சொன்னதைப் போல 'Freedom from the Known'
    தெரிந்ததிலிருந்து விடுதலை.
    உண்மையான ஞானிகள் நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் வேறெந்த உத்தரவாதத்தையும் தரவில்லை.
    அதே போல் மரணத்தை வெல்தல் என்று சொலவது உடலால் நிகழும் மரணத்தை அல்ல.மரணம் என்ற உங்கள் கருத்தை,concept ஐப் புரிந்து கொள்வதாகும்.

    உடல் அழியக் கூடியது என்றுதானே எல்லோரும் திருப்பித் திருப்பிக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

    நீங்கள் ஆழ்ந்து உறங்கும் போது என்ன நடக்கிறது, அதனை மட்டும் சிந்தியுங்கள்.நிறைய விளங்கும்.

    ReplyDelete
  13. முக்தியை இவ்வளவு சிறிய பதிவில் ெசால்லிட்டீங்க!
    நல்லாயிருக்கு பாஸ்..

    ReplyDelete
  14. தங்களின் வரவிற்கும் மேலான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஷண்முகப்ரியன்

    ReplyDelete
  15. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி கலையரசன்.
    புரிந்து கொண்டீர்களா? :-)

    ReplyDelete