Saturday, January 30, 2010

என் பிரசவங்களும் நானும்.




பிரசவித்தல் எனக்கிப்போ
நரக வேதனை.

விலைமகள் வீட்டு
வெற்றிலைப் பெட்டியாய்,
யாரோவெல்லாம், ஏன்,
எதுவெல்லாமோ கூட
என்னுடன் கூடிக்களிக்கிறது,
என் மறுப்பையும்
பொருட்படுத்தாமல்...

பேடு துரத்திப் பின்
ஏறி மிதித்துச் செல்லும்
சேவலாய்ச்
சில கணங்களிலும்

நட்டநடு வீதிகளில்
கொழுவி இழுபட்டுத்
திரியும் நாய்களாய்
நாகரிகமற்ற நிலைகளிலும்

நடுநிசிப் பொழுதுகளின்
நிசப்தம் குலைத்து
வெருண்டு புணரும் பூனைகளாய்
நாட்கணக்கிலும்

காலங்களும் அதன்
கோலங்களும்
என்மன யோனியில்
புணர்ந்து தள்ளுகின்றன.

கருக் கட்டல்களினதும்
கருச் சிதைவுகளினதும்
கலவரத்தில் தவித்தாலும்
கலவிவிடுகிறது இயற்கை.

கூடிக்கழித்த களிப்பில்
குறுகுறுத்துப் போகிற மனசின்
கருப்பைத் தொட்டிக்குள்ளிருந்து
கரையேறுகின்றன கவிதைகள்.

3 comments: