Sunday, July 26, 2009

கட்டுடைத்தல்



அடை வைக்கப்பட்டிருந்தவென்
நினைவுப் பட்சியின்று தன்
கோதுடைத்து புறப்பட்டது.



கோழிக்குஞ்சின் கதகதப்புடன்,
படபடத்தவதன் சிறகுகளுடன்
உள்ளங்கைக்குள் உள்வாங்கினேன்.


இறகுகளை வருடிக்கொடுக்க,
பீமனுக்கான அநுமனின்
விஸ்வரூபமாயது வெளிப்பட்டது.


முடியாது. இனி முடியாது.
இதுவென்றுமினி மடியாது
என்றவாறேயது புறப்பட்டது.


அடைகாத்தல் முடிந்து, இனி
அடைத்துவைத்தல் முடியாது
ஆதலினால் விட்டுவிட்டேன்.



நினைவுப் பறவையினித்தன்
கட்டுடைத்து சிறகுவளர்க்கும்
இமயத்தின் சிகரம் செல்லும்.



சூரியவொளிதாண்டி சூனியவெளிதாண்டி
விரிவடையும் பிரபஞ்சங்கடந்துமது
சிறகினை விரிக்கும்.



நான்வளர்த்த குஞ்சினைத்
தனித்தனுப்ப தடுமாறும்
தாய்மை மனமெனக்கு.


ஆதலினால், அப்பட்சியின்
உறவுகளை உங்கள்
நெஞ்சங்களில் அடைத்திருப்போரே


திறந்திடுங்கள் உங்கள்
உள்ளக் கூண்டுகளை. என்
எண்ணப்பறவை புறப்படட்டும்.



தன் இருத்தலின் எந்தவொரு
அடையாளத்தையும் அதற்கு
விட்டுவைக்கும் விருப்பவி்ல்லை.


இறகுகள் ஒவ்வொன்றாய்
உதிரட்டும். அதன் உதிரத்தின்
கடைசிச் சொட்டும் தீரட்டும்.


ஈற்றணுவும் இற்றுப்போகும்வரை
அது பறக்கட்டும். பறந்து அந்த
பிரபஞ்சம் அளக்கட்டும்.

7 comments:

  1. அருமை நல்லா இருக்கு நண்பா

    ReplyDelete
  2. கோதுடைத்து புறப்பட்ட கட்டுடைத்தல் பற்றி சும்மா சொல்லக்கூடாது....!!!!

    சுப்பர் மாமு நீ கலக்கு=====>>>
    அன்புடன் ஆரூரன்

    ReplyDelete
  3. அற்புதமான கவிதை
    வேலணை
    நீங்கள் கொண்ட பாடு பொருள் ஒன்றாய் இருபினும்
    எனக்கு வேறு கதவுகளை திறந்து வைத்தது இந்த கவிதை
    அருமை
    ரொம்ப ரசித்தேன்

    ReplyDelete
  4. கிளிக்கு றெக்கை முளைத்துடுத்து...அதான் ஆத்தை வுட்டு பறந்து போயிற்று....!!

    அருமை....வலசுக்குள் ஒரு கவிஞன் பார்த்திருக்கிறேன். இன்று ஒரு கலைஞனை பார்க்கிறேன். இனி....!
    தொடருங்கள் ...வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
    ஆ.ஞானசேகரன், ஆரூரன், பாலா, அ.மு.செய்யது, கதியால்.

    ReplyDelete
  6. நல்ல கவித்துவம் மற்றும் அழகிய கோர்ப்பு.
    தமிழை visual முறையாக வளர்க்க முடியும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு.
    நாலு வரி எழுதவே ஆயிரம் பஞ்சப்பாட்டு பாடும் எம்மவர் மத்தியில் வாரம் ஒரு ஆக்கம் எழுத நேரம் ஒதுக்கும் வலசுக்கு வாழ்த்துக்கள்.
    நன்றியுடன் லோகீசன்

    ReplyDelete