Thursday, April 23, 2009

கடவுளர் பற்றிய கனவிலிருப்போர்க்கு.....

இடுக்கண் களைந்தெம்
இன்னல் தீர்க்க வராத
“இரக்கமிலி”களைப்
பற்றிய கனவிலிருப்போரே!

கண்டேன்!
அந்த கடவுளரை
அண்டேன் என
நின்றவன் நான்,
விண்டேன் உம்மனக்குறைகளை.

ரொம்பப் பாவம் அவர்கள்.
அவர்தம் குறைகளை முறையிட,
ஆளின்றிய அவ(/க)தி நிலையில் அவர்கள்.

உம்குறை தீர்க்க
அவர்கட்கும் ஆசையாம்.
ஆனாலும் எல்லோர்க்கும்
வயதாகி விட்டதாம்.
அவதரித்து வருதற்கும்
அலுப்பாயிருக்கிறதாம்.

சிவனின் நெற்றிக்கண்ணில்
பூ-வளர்ந்து விட்டதாம் (catract).
அறுவைச் சிகிச்சையாலும்
அதையகற்ற முடியாதாம்.

சக்திக்கு மாதவிலக்கு நின்று
நெடுங்காலமாகி விட்டதாம்.
பேரப்பிள்ளைகள் வேண்டி
பிள்ளைகளுடன் பிரச்சனையாம்.

பிள்ளையாரால் ஒரு
பிள்ளையை உருவாக்க
தொப்பை தடையென்று
gym-இற்குப் போய் treadmill-இல் ஓடி
அதையும் உடைத்தாயிற்றாம்.

முருகனுக்கோ முதிர்ச்சியடையுமுன்பே
திருமணமாகி அதுவும்
இருமணமாகி, ஏற்பட்ட
சக்களத்திச் சண்டையினால்
உண்டான உளவியல் நெருக்கீட்டால்
பெண்டிரை அண்டவே பயமாம்.

யுகந்தோறும் அவதரித்துக்
களைத்த கண்ணனால்
அடிமுடி தேடி, பட்ட அவமானத்துடன்
நாபிக் கமலத்தில் இன்னோர்
அயனை இனிநினைக்கவே முடியாதாம்.

பிரம்மனுக்கோ
பிரணவ மந்திரமே மறந்து விட்டதாம்.
பின் எப்படி படைப்பதாம்
அதுவம் இன்னோர் கடவுளை?

ஆஞ்சநேயர் இன்னமும்
பிரமச்சரிய விரதத்தையே
பின்பற்றுகிறாராம்.

ஆதலினால்,
கடவுளர் பற்றிய
கனவினில் இருப்போரே!

உறக்கம் கலைத்து
உண்மையை உணருங்கள்.

இல்லையேல்,
“வாருங்கள் நாங்களினி
பேய்களை வழிபடுவோம்”
எனச் சிலர் உங்களை
தடம் மாற்றக்கூடும்.

நக்கிப் பிழைத்தற்கா, இல்லை
நாய் வாழ்க்கை வாழ்தற்கா
நாமங்கு தவம் செய்தோம்?

எமக்காக இங்கே
கடவுளரும் வரப்போவதில்லை.
பேய்களும் தரப்போவதில்லை
எமக்கான வரத்தை.

18 comments:

  1. அற்ப்புதமான கவிதை
    வார்த்தைகள் நச் - னு இருக்கு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி பிரியமுடன் பிரபு

    ReplyDelete
  3. மனிதனை நம்பாமல், மிருகங்களை கடவுளாக நம்பி துதித்த மடமையை காலம் தெளிய வைக்கிறது. கடவுளே பொய்யென தெரியும்போது பேய்களை நம்ப வேண்டிய அவசியம் என்ன? ஓ! மனிதனே, மனிதனை நம்பு, மனிதனாக இருக்க நீயும் முயற்சி செய்.

    ReplyDelete
  4. வார்த்தைகளை வைத்து கடவுளை இழிவுசெய்வதில் எனக்கும் பிடித்த செயல். ஆனாலும், இந்து மதத்துக்கு மட்டுமே கல் எறியும் கோழைகளில் அலம்பல்கள் சில நேரம் எரிச்சல் ஊட்டுபவையாக உள்ளது.

    முடிந்தால் மற்றைய மதங்களுக்கும் கல் எறிந்து பாரும் உம் வீரம் பாராட்டுப்படும்.

    ReplyDelete
  5. கவிதையின் அனல் சுடுகிறது.ஆனால் கருத்து?
    'IF THERE IS NO GOD,WE HAVE TO CREATE ONE' என்று மாக்ஸிம் கார்க்கி ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு சொன்னதாகப் படித்த ஞாபகம் வருகிறது ,நண்பா.

    ReplyDelete
  6. வரவிற்கும் தங்களின் கருத்திற்கும் நன்றி rav
    //
    கடவுளே பொய்யென தெரியும்போது பேய்களை நம்ப வேண்டிய அவசியம் என்ன? ஓ! மனிதனே, மனிதனை நம்பு,
    //
    உண்மையை உணராதவர்கட்கே கடவுளரோ அல்லது பேய்களோ தேவைப்படுகின்றன. உண்மையை அறிவதற்கு எல்லாவற்றையும் சந்தேகித்தே தீரவேண்டும். பிற மனிதர்களுடன் சேர்த்து சந்தேகிப்பவன் தன்னையும் சந்தேகித்தே ஆகவேண்டும்

    ReplyDelete
  7. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி mathavan.
    //
    இந்து மதத்துக்கு மட்டுமே கல் எறியும் கோழைகளில் அலம்பல்கள் சில நேரம் எரிச்சல் ஊட்டுபவையாக உள்ளது.

    முடிந்தால் மற்றைய மதங்களுக்கும் கல் எறிந்து பாரும் உம் வீரம் பாராட்டுப்படும்.
    //
    சகிப்புத்தன்மையே இந்துமதத்தின் மாபெரும் பண்பு.
    கடவுளருக்கு கல் எறிந்தவரையே (எறிபத்த நாயனார்) நாயன்மார்களில் ஒருவராக ஏற்றுக்கொண்ட மதம் இந்துமதம். மதங்கள் வேறு கடவுளர் வேறு என்பது எனது கருத்து. மதங்கள் கடவுளர் பெயரைச் சொல்லி மக்களை நெறிப்படுத்துபவை(?) என்றே எண்ணுகிறேன்

    ReplyDelete
  8. தற்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஷண்முகப்ரியன்.
    //
    கவிதையின் அனல் சுடுகிறது.ஆனால் கருத்து?
    //
    கருத்து/முடிவு வாசகனிடமே விடப்பட்டிருக்கிறது.

    //
    'IF THERE IS NO GOD,WE HAVE TO CREATE ONE' என்று மாக்ஸிம் கார்க்கி ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு சொன்னதாகப் படித்த ஞாபகம் வருகிறது ,நண்பா.
    //
    'WHY DO WE NEED A GOD?'
    உளவியல் ரீதியில் மனிதனுக்கு ஒரு வடிகாலாக அவை அமைகின்றன. ஆனால் அதீத நம்பிக்கை கைவிடப்படுகையில் அதுவே தீவிர வெறுப்பாகவும் மாறிவிடும் அபாயம் இரு்கிறது.

    ReplyDelete
  9. //ஆஞ்சநேயர் இன்னமும்
    பிரமச்சரிய விரதத்தையே
    பின்பற்றுகிறாராம்.
    //

    அவருக்கு ஏற்ற பெண் கிடைக்கவில்லை போலும்.

    ஆஞ்சநேயருக்கு மகன் இருக்கிறானாம்.

    ஒரு முறை ஆஞ்சநேயர் கடல் மார்க்கத்தில் பறக்கும் போது ஆஞ்சநேயர் உடலில் இருந்து வியர்வைத் துளி விழ அதை ஒரு திமிங்கிலம் விழுங்க, திமிங்கிலத்தின் வயிற்றில் கரு வளர்ந்து மீன் ஒரு மகவை பெற்றுக் கொடுத்ததாம்.

    :)

    நல்லா எழுதி இருக்கிங்க !

    ReplyDelete
  10. வணக்கம் வலசு

    நெருப்பாய் நிற்கும் கவிதை
    வேற என்ன சொல்லுரதுனு தெரியவில்லை

    நன்றி
    இராஜராஜன்

    ReplyDelete
  11. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி கோவி.கண்ணன்
    //
    ஆஞ்சநேயருக்கு மகன் இருக்கிறானாம்.

    ஒரு முறை ஆஞ்சநேயர் கடல் மார்க்கத்தில் பறக்கும் போது ஆஞ்சநேயர் உடலில் இருந்து வியர்வைத் துளி விழ அதை ஒரு திமிங்கிலம் விழுங்க, திமிங்கிலத்தின் வயிற்றில் கரு வளர்ந்து மீன் ஒரு மகவை பெற்றுக் கொடுத்ததாம்.
    //
    இப்போது தான் இதைப்பற்றிக் கேள்விப்படுகின்றேன். தகவலுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  12. தங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி வனம்

    ReplyDelete
  13. கடவுளை குறைவாக எடை போட்டாய்...!!!
    கடவுளுக்கு எதிராக தடை போட்டாய்.....!!!!
    மடிந்தது உன் கனவுச்சூழ்ச்சி...!!!!!
    முடிந்தது உன் எழுத்து ஆட்சி...!!!!!!

    கடவுளின் சாபத்தால் மறுபடி உன்னை இணையத்தில் சந்திக்க இயலாமல் ஏங்கும் க.ஆரூரன்

    ReplyDelete
  14. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி ஆரூரன்.

    வாருங்கள் நாங்கள்
    சாபங்களையே வரங்களாக்குவோம்

    ReplyDelete
  15. கடவுளை இவ்வளவு தாக்கியும் திட்டியும் எழுதிய உனக்கு, அவர் உனக்கு அவர் சாபங்களையே வரங்களாக்கும் சக்தியை தந்திருக்கிறார் என்றால்.......!!!!!!!!!! God is Great.....????

    அன்புடன் ஆரூரன்

    ReplyDelete
  16. ஊர்வசியின் சாபம் அருச்சுனனுக்கு அஞ்ஞாதவாச காலத்தில் வரமாய் அமையவில்லையா?

    ReplyDelete
  17. ஊர்வசி ஊர்வசி டேக்கிற் ஈஸி ஊர்வசி,
    சாபம் கொடுக்க வரங்கள் ஆனால் டேக்கிற் ஈஸி ஊர்வசி, என்ற மனத்தளர்வை நீக்கும் பாடல் அப்போது இல்லாத காரணத்தால், ஊர்வசி மனமுடைந்து மனநோய்க்கு ஆளாகாமல் தடுப்பதற்காக கடவுள் ஊர்வசியின் சாபம் சாபமாகவே அர்ச்சுனக்கு இருக்க கடவது என பணித்தார்..!!
    அன்புடன் ஆரூரன்

    ReplyDelete
  18. வேலணையிலும் வலசுகள் உண்டோ?

    ReplyDelete