Friday, April 17, 2009

வேரென நீயிருந்தாய்...(3)

க்கும்ம்ம்...க்கும்ம்ம்...க்கும்ம்ம்...
கூய்ங்.கூய்ங்.கூய்ங்.கூய்ங்.கூய்ங்.கூய்ங்.கூய்ங்.கூய்ங்.கூய்ங்.கூய்ங்........

ஆட்டிலறி எறிகணைகளும் பல்குழல் எறிகணைகளும் காதை செவிடாக்கத்தொடஙகின.

*****************

“நதீஷா, நவீன், நாவினி எல்லாரும் கெதியா பங்கருக்குள்ள போங்கோ. ஷெல்லடிக்க வெளிக்கிட்டாங்கள்.”

“நதீஷா நீர் அங்க என்ன செய்யுறீர்?”

“அடுப்பில கஞ்சியிருக்கப்பா. இன்னும் அஞ்சு நிமிசத்தில இறக்கீரலாம். நீங்க பிள்ளையளோட பங்கருக்குள்ள இருங்கோ நான் வந்திருவன்.”

“அப்பா! கிட்டவா அடிக்கிறாங்கள். அம்மாவை கெதியா வரச்சொல்லுங்கப்பா.”-நாவினி அழுதாள்.

“நீங்க ரெண்டுபேரும் உள்ளுக்குள்ளையே இருங்கோ. நவீன் குழப்படி செய்யக்கூடாது. நான் போய் அம்மாவைக் கூட்டிக்கொண்டு வாரன். நாவினி! நவீனைப் பார்த்துக் கொள்ளுங்கோ. தம்பியை வெளிய வர விடாதீங்க. சரியா”
சொல்லிவிட்டு பங்கரை விட்டு வெளியே வந்தேன்.

நாவினி யார்? நவீன் யார்?

மற்றவர்களுக்கு அவர்கள் இருவரும் எங்கள் இரட்டைப்பிள்ளைகள். நிமிடக் கணக்கில் நாவினி நவீனுக்கு அக்காவாகி விட்டாள். ஆனால் எனக்கும் நதீஷாவிற்கும் அவர்கள் பிள்ளைகள் மட்டுமா? எத்தனை பேருக்குத் தெரியும் இந்த ஜென்மாந்திரத் தொடர்பு? சொன்னாலும் அவர்களால் புரிந்து கொள்ளத்தான் முடியுமா?

க்கும்ம்...

கண்ணிமைக்கும் கணத்திற்குள் என்ன நடக்கிறது என்று புரிவதற்குள்... எங்கேயோ தூக்கிவீசப்படுகிறேன். எல்லாமே மங்கலாகி பச்சையாகி இருளாகி.....

*****************

ஐயோ! அம்மா! என்ரை ஐயோ.....நதீஈஈஈஷாஆஆஆ...

வலி உயிர் பிழிந்தது. கால்வலி மறைந்து களுத்து விண்விண்ணென வலிக்கத் தொடங்கியது. கையை அசைக்க இயலவில்லை. களுத்தைத் திருப்பக் கூட முடியில்லை. தலையை உரசிச் செல்வது போல் கிபிரின் (மிகையொலி குண்டுவீச்சு விமானம்) பேரிரைச்சல் காதைக் கிழித்தது.

“த.ண்..ணீ...” தாகம் எடுக்க முனகத் தொடங்கினேன்.

“டொக்ரர்! இஞ்ச இந்தாளுக்கு உயிர் இருக்குப்போல. அனுங்கிச் சத்தம் கேட்குது.”
-இது, இது சின்னவனின் குரல்.

“சின்னவன்! அவரைப் பார்த்தால் களுத்தில சரியான அடிபோல. ஸ்ரெச்சரக் கொண்டுவந்து ஆளத்தூக்கி மற்றக் கட்டிடத்துக்குள்ள கொண்டுபோங்கோ.”
-இது புதிய குரல். ஆம்பிள டொக்ரர். அப்ப அந்த டொக்ரர் அக்கா எங்க?

“அண்ணே! எனக்கு என்ன நடந்தது?”
ஸ்ரெச்சரில் கிடத்திய சின்னவனிடம் கேட்கிறேன்.

“ஆஸ்பத்திரிக்குள்ளயும் கிபிர்க்காரன் குண்டு போட்டுட்டான் அண்ணை.”

“அப்ப அந்த டொக்ரர் அக்கா எங்க?”

கனத்த மௌனம். சின்னவனிடமிருந்து பதில் இல்லை.

“அண்ணை அந்த டொக்ரர் அக்காவுக்கும் காயமா?”

“அந்த அக்கா வீரச்சாவடைஞ்சிற்றா அண்ணை.”

“என்ன?” அதிர்ந்தேன்.

வீரச்சாவு என்றால் அவர்...?

ஓ! அதனால் தான் அந்த இக்கட்டான வேளையில் கூட எவ்வளவு இயல்பாக பதற்றமில்லாமல் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். மற்றவர்களை பங்கருக்குள் அனுப்பிவிட்டு கடமையே கண்ணாக.... காலனுக்கும் கடமையை செய்பவர்களைக் கண்டால் மிகவும் பிடிக்கும் போல....

“அண்ணை! நீங்க யோசிக்காதீங்கோ” நீங்க நாளைக்கு வரைக்கும் தாக்குப் பிடிச்சிட்டியள் எண்டால் பிறகு கப்பலில ஏறிரலாம்.”

இழப்புகள் வாடிக்கையாகிப் போனதால் சில நிமிடங்களிலேயே, ஏற்படுகின்ற இழப்புகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் சின்னவனுக்கும் வந்திருக்கிறது. இந்த ஏற்றுக் கொள்ளலைப் பற்றித் தானே பெரியபெரிய ஞானிகளெல்லாம் போதிக்கிறார்கள். காலம் களிம்பு தடவியாற்றாத காயமும் உண்டோ? ஆனால் பெரும்பாலானவர்கள் தமக்கு நேர்ந்த இழப்புகளை ஏற்றுக்கொள்ளமுடியாமல் இருப்பதால் அல்லவா பெரும் மனஉளைச்சல்களுக்கு ஆளாகின்றார்கள்.

சொல்ல வார்த்தையேதும் இல்லாததால் மௌனமானேன்.

“அண்ணை! நீங்க கடுமையா யோசிக்கிறீங்க போல. ஒண்டுக்கும் யோசிக்காதைங்கண்ணை. நான் உங்கட அவாவ தேடிக் கூட்டிக் கொண்டுவாறன். நீங்க ரெண்டுபேரும் நாளைக்குக் கப்பலில போகலாம்.”
சொல்லிவிட்டு சின்னவன் அகன்றான்.

எல்லோரையும் ஏற்றிச் செல்லக் கப்பல் வருமா....?

********************

கப்பலில் பயணிப்பதற்காக வந்திருந்தவர்களெல்லாம் அருகருகே அமைந்திருந்த இரு வீடுகளில் தற்காலிகமாக இளைப்பாறுவதற்காய் வாகனங்களிலிருந்து இறக்கிவிடப்பட்டிருந்தார்கள். வீடுகள் மிகவும் விசாலமானவையாய் இருந்தன. நிலைகளிலிருந்த கதவுகளும் சாளரங்களும் காணாமற் போயிருந்தன. சுற்றிவரவும் பற்றைகள் பற்றிப் படர்ந்து அந்த அயல் முழுவதும் ஒரே பற்றைக்காடாய்க காட்சியளித்தது. தூரத்தில் சில இடிபாடடைந்த வீடுகளும் ஒரு கோவிலும் பாழடைந்து காணப்பட்டன. ஒரு காலத்தில் மிகவும் பரபரப்பான நகரம் கலந்த கிராமமாக இருந்த இடம் இன்று இப்படியாய் வாழ்வின் நிலையற்ற தன்மைக்கு சாட்சியாய். தூரத்துக் கடற்காற்றில் பனைவடலிகள் சலசலத்தன. தொலைதூரத்தில் உலங்குவானூர்தி ஒன்று உறுமி உறுமிச் சென்றுகொண்டிருந்தது.

“அண்ணே திருகோணமலைக்குப் போய்ச்சேர எவ்வளவு நேரம் எடுக்கும்?”
அருகிலிருந்தவரைக் கேட்டேன்.

“பின்நேரம் வெளிக்கிட்டம் எண்டால் நாளைக்கு விடியேக்க Tringo-வில நிக்கலாம்.”

“கப்பல் குலுக்குமோ அண்ணே?”

“இது பெரிய கப்பல் எண்டபடியால பெரிசாக் குலுக்காது எண்டுதான் நினைக்கிறேன்.” சொன்னவர்
“தம்பி இந்த bag-களைக் கொஞ்சம் பாத்துக் கொள்ளுங்கோ. நான் ஒருக்கா bathroom-க்குப் போய்ற்றுவாறன்.” என்றவாறே விலகினார்.

என்னுடன் ஒன்றாக வந்திருந்த மற்றைய இருவரையும் பார்க்கிறேன். பயணக்களைப்பில் தூங்கிவிழுந்து கொண்டிருந்தார்கள்.

“கட்டி ஒக்கம போலிமட்ட எண்ட.” (எல்லாரும் வரிசையி்ல் வாருங்கள்) என்ற கடற்படைச் சிப்பாயின் குரல் கேட்டு தூங்கிவழிந்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் தூக்கம் கலைந்து பரபரப்பாயினர்.

என்னுடன் வந்திருந்தவர்களுடன் நானும் இணைந்து கொண்டேன். ஒவ்வொருவரின் உடைமைகளும் உடலும் தீவிர சோதனைக்குப் பின்னர் மீண்டும் வேறு பேரூந்துகளில் ஏற்றப்பட்டோம். பேருந்தின் ஜன்னல்கள் எல்லாம் கறுப்பு வர்ணம் பூசப்பட்டு வெளியே பார்க்க முடியாதவாறு மறைக்கப்பட்டிருந்தன. மக்கள் மாக்களாக அடையப்பட பேரூந்து புறப்பட்டது. பத்து நிமிட பயணத்தின் பின்னர் கதவுகள் திறக்கப்பட கடற்காற்று முகத்தில் மூசியறைந்தது. கரைக்கு அண்மையில் லங்காமுதித அணைக்கப் பட்டிருக்க வந்திருந்வர்கள் தங்கள் தங்கள் கையுடைமைகளுடன் (hand-luggage) கப்பலுக்குள் ஏறிக்கொண்டிருந்தனர்.

பரந்து விரிந்திருந்த நீலக்கடலை நோக்கினேன். அமைதியான அளவான அலைகள். சற்றுத் தொலைவிலேயே இரண்டு பாரிய கப்பல்கள் ஒன்று பாதி மூழ்கியவாறும், மற்றையது 90 பாகையில் சாய்ந்து கிடையாகவும் மூன்றாம்கட்ட ஈழப்போரின் சாட்சியங்களாய் தரைதட்டிக் கிடந்தன. திடீரென எங்கிருந்தோ விரைந்த வந்த நீருந்துவிசைப் படகொன்று அவற்றின் அருகிற் செல்ல மாடப்புறாக்கூட்டம் ஒன்று விர்ரென்று ஒருமித்து சிறகடித்துப் பறந்து பின் மீண்டும் அந்தக் கப்பலுக்கே திரும்பியது.

“கட்டி ஒக்கம அத்துலட்ட யண்ட.” (எல்லாரும் உள்ளுக்குள் செல்லுங்கோ) வேறொரு கடற்படையினன் கட்டளை பிறப்பிக்க கப்பலின் மேற்தட்டிலிருந்தவர்களுடன் அவசரஅவசரமா இறங்கி கப்பலின் உள்ளே சென்றேன். சிறிது நேரத்தில் கப்பல் புறப்படுவதை உணரமுடிந்தது. அதன்பின் அரைமணிநேரம் கழித்து மேற்தட்டுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

அந்திச் சூரியன் செம்மஞ்சள் நிறத்தில் தொலைதூரத்தில் கடலுக்குள் மூழ்க ஆரம்பித்திருந்தான். “...கண்டி நகரில் குளிரோ கடுமை. காங்கேசன்துறையில் வெயிலோ கொடுமை...” சின்ன வயதில் பாடப்புத்தகத்தில் படித்த பாடல் நினைவுக்கு வந்தது. கண்டி நோக்கி, எதிர்காலக் கனவுகளுடனும் பகிடிவதை (ராகிங்) பற்றிய பயங்களுடனும், எங்களுடைய பயணம் ஆரம்பித்தது. ஊரையும் உறவுகளையும் பிரியும் இதயவலியுடன் நானும் மற்றைய இருவரும் (நண்பர்களாக மாறப் போகின்றவர்கள்) கரையினை நோக்க, காங்கேசன்துறை துறைமுகம் எம்மைவிட்டு விலகிக் கொண்டிருந்தது.


(வேர் விடும்)

4 comments:

  1. payanamgal epoothum ethirpaarpugaludanum nambikkaihaludanume aarambikkappaduhintrana. sellum paathai sariyaanathaaga irukkirathaa enpathu thaan mukkiyam.

    ReplyDelete
  2. நன்றி rav, உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.

    ReplyDelete
  3. மிக அருமையான மனதை பாதிககும் எழுத்து நடை.

    ReplyDelete
  4. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி அறிவிலி

    ReplyDelete