Saturday, February 27, 2010

கடவுளின் வரத்தைப் புறக்கணித்தவன்


அது அவனுக்குள் நிகழ்ந்த போது அவன் பால்ய வயதிற்குள் போயிருந்தான். பதின்மம் வராத பருவம் அது. வீட்டு முற்றத்தில் அதே பருவத்தைச் சேர்ந்தவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அது வேறு பாடசாலைகளில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். ஆதலினால் அயல் வீட்டுச் சிறுவர்களும் இணைந்து தங்களுக்குள் அவர்கள் பிரிந்து விளையாடிக்கொண்டிருந்தனர். உயரம் பாய்தல் அவனுக்குக் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. பாடசாலையில் படிக்கும் வேறொரு மாணவனின் திறமையைப் பற்றிய சிலாகிப்பு வந்தது. அப்படியே காற்றில் பறந்து மிதந்து வருவது போன்றான அவனின் ஸ்ரைல் வியப்பூட்டுவதாய் இருந்தது. அது அவனுக்கு ஒரு கோழியினை நினைப்பூட்டியது.

சில வருடங்களுக்கு முன்னர் அந்த நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. அப்போது அவனது வீட்டில் கோழிமுட்டை அடைவைத்திருந்தார்கள். ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் செல்லும் முன்னும் பள்ளியால் வந்த உடனேயும் ஓடிச்சென்று குஞ்சு பொரித்து விட்டதா என்று பார்ப்பதே அவன் வாடிக்கை. குஞ்சுகள் ஒவ்வொன்றாய்க் கோதுடைப்பதைக் காண்கையில் அவனுக்குள் ஒரு ஆனந்தப் பரவசம். கைகளையும் கால்களையும் உதறிக் குதித்துக் குதூகலிப்பது அவனது ஆனந்தத் தாண்டவம். சில நாட்களிலேயே அந்தக் குஞ்சுகளைக் கைகளால் அளைவதும் அவற்றை அள்ளிக் கன்னத்தோடு வைத்துக் கொஞ்சுவதும் அவனுக்குள் இன்ப ஊற்றுக்களைக் கிளறிவிடும் சுகானுபவங்கள். ஒரு மதியம் தாண்டிய வேளையில் அவன் வெளியிலிருந்து உணவருந்திக்கொண்டிருந்த வேளையில்தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது.

கோழிக்குஞ்சுகள் சற்றே வளர்ந்திருந்ததால் அவற்றினை காகங்களால் தங்களின் அலகுகளால் கொத்திக் காவிச்செல்ல முடியாத காரணத்தினால் அந்தக் குஞ்சுகள் தாய்க்கோழியுடன் சுதந்திரமாக உலவிக்கொண்டிருந்தன. எங்கிருந்தோ சட்டென காற்றை சிலாவிக்கொண்டு வந்த பருந்தொன்று தன் கால்களினால் ஒருகுஞ்சினைப் பற்றிக் கொண்டு பறக்க எத்தனித்த போதுதான் தாய்க்கோழி தாவிப்பாய்ந்து பருந்தைத் தாக்கியது. எதிர்பாராது ஏற்பட்ட அமளியில் அங்கே நின்றிருந்த நாயும் பருந்தின் மீது பாயவே பருந்து பயந்து போயிருக்க வேண்டும். கால்களிலிருந்து குஞ்சினை நழுவவிட்டுவிட்டுத் தப்பித்துக் கொண்டது. இருந்தும் கோழி விடுவதாயில்லை. தன் சிறகுகளை அடித்தடித்துப் பறந்து பறந்து பருந்தினை அந்த இடத்தை விட்டுத் துரத்துவதிலேயே குறியாய் இருந்தது. அதற்கு முன்னர் கோழிகள் அவ்வளவு உயரத்திற்குப் பறந்து அவன் பார்த்ததில்லை. இரவில் கோழிகளை வாதனாராணி மரத்தின் கிளைகளில் படுக்க விடுவதற்கே அவை ஒவ்வொரு கிளைகளாய் தாவித் தாவி ஏறுவதை வேடிக்கை பார்த்திருக்கிறான்.

அந்தக் கோழிபோல் தன்னாலும் பறக்க முடிந்தால் எப்படியிருக்கும்? அவனது நினைப்பை மற்றைய பையன்களின் கூக்குரல் கலைத்தது.

“டேய் உன்ர முறை. ஓடி வந்து பாய்.”

“இவனால இந்த உயரத்தைப் பாய ஏலாது.”

அவன் உயரம் பாய்வதற்காக கட்டி வைக்கப்பட்டிருந்த கயிற்றினைப் பார்த்தான். அவனால் அதைத்தாண்ட முடியாது என்றே அவனும் நினைத்துக் கொண்டான். இதற்கு முதல் இதிலும் சற்றுக் குறைந்த உயரங்களையே அவனால் தாண்ட முடிந்ததில்லை. ஆகவே அதைத் தாண்டுவதற்கு தான் தகுதியற்றவன் என்றும் அவன் நம்பத் தொடங்கினான்.

“நான் வரேல்ல. நீங்க விளாடுங்கோ” - அவன் பின்வாங்கி வீட்டீற்குள் நுழைய முற்பட்டான்.

மற்றவர்கள் கேலிபண்ணத் தொடங்கினார்கள்.

“அந்தக் கதைப்புத்தகத்தில வந்த முனிவரைப் (சித்தரை) போல நீயும் தவம் செய்து பறக்கிற வரம் வாங்கிக் கொண்டு வந்தாத்தான் இனி எங்களோட உன்னைய விளாடச் சே(ர்)ப்பம்”.

அவனுக்கு அழுகைஅழுகையாக வந்தது. அந்தப்புத்தகத்தில் வந்த முனிவரைப் போல தன்னால் காற்றில் நடந்து பறந்து திரிய முடியாதா? தவிப்பாயிருந்தது. மனதின் ஒரு மூலைக்குள் உன்னாலும் முடியும் என்றொரு குரல் கேட்டது. வீட்டிற்குள் நுழைந்தவன். திரும்பி வந்தான்

“இஞ்ச விடுங்கோ! நானும் பாய்வன்.”

அவன் ஓடிவந்து ஒரு காலை உயர்த்தினான். அவன் அப்படித்தான். இரண்டுகால்களையும் ஒரே நேரத்தில் ஒன்றாக உயர்த்திப் பாய்வதை அவன் கற்றிருக்கவில்லை. உயர்த்தி வைத்தகாலினை அப்படியே அந்தரத்தில் வேறோ எதுவொன்று தாங்கிப்பிடிப்பதாய் அவன் உணர்ந்தான். படியில் ஏறுவது போல் அவன் மற்றைய காலையும் தூக்கி இன்னும் ஒருபடி உயரே வைத்தான். மற்றவர்கள் அவனை விப்புடன் பார்ப்தை அவனால் அவதானிக்கக் கூடியதாய் இருந்தது.

ஆம். இப்போது அவனால் காற்றுவெளியில் ஏறிச்செல்லக்கூடியதாகவிருந்தது. அவன் இன்னுமொருபடி மேலே ஏற, மற்றையவர்கள் “ஐயோ! பேய்ய்........” என்று அலறியடித்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு ஓடிக்கொண்டிருந்தார்கள்.

அவர்களின் கூக்குரலைக் கேட்டதும் அவனுக்குள்ளும் அச்சம் துளிர்விடத் தொடங்கியது. அவன் இறங்குவற்கு எத்தனித்தான். முடியவில்லை. அவனால் கால்களால் நிலத்தை நோக்கி இறக்கமுடியவில்லை. அவன் எத்தனிக்கும் ஒவ்வொரு முறையும் அவன் மேலே மேலே போய்க்கொண்டிருந்தான்.

அவன் மிகவும் பயந்து விட்டான். ஏதோவொன்று அவனை மேல்நோக்கி ஈர்த்துக் கொண்டிருந்தது. இப்போது அவன் வீட்டின் சீலிங்கின் உயரத்தை அடைந்து விட்டிருந்தான். அவன் அலறினான் யாரையாவது உதவிக்கு வரும்படி. யாரையும் காணோம். அவன் ஒருவாறாக தன்னைச் சமாளித்துக் கொண்டு வெளியே நீட்டிக்கொண்டிருந்த சீலிங்கிற்கும் கூரைக்குமிடையில் தன்னை நுழைத்துக் கொண்டான். தான் ஒருவாறாக தப்பிவிட்டதாக அவனுக்குள் எழுந்த நினைப்பினைப் பொய்யாக்கி கூரை உடைந்து விடுமாற் போல் ஆடிக்கொண்டிருந்தது. கூரையின் மீதான நம்பிக்கையினை இழந்து விட்டதன் பின்னர் அவன் வேறொரு பலமான ஒரு பொருளைத் தேடத் தொடங்கினான். சற்றுத் தள்ளியிருந்த முற்றத்து வேம்பு கண்ணில் பட்டது. அந்த வேம்பில் ஊஞ்சல் கட்டி ஆடுவது அவன் நினைவிற்கு வந்தது. ஊஞ்சல் ஆடுவது அவனுக்கு மிகவும் பிடித்த செயல். அதில் அவன் தன்னை மறப்பதுண்டு. ஊஞ்சல் ஆடும் அந்த வேப்பமரத்துக் கிளை மிகவும் பலமானதென்று பெரியவர்கள் சொல்ல அவன் கேள்விப்பட்டிருக்கின்றான். காலினைப் பக்கவாட்டில் உதைத்துத் தாவி அவன் அந்த வேப்பமரக் கிளையினைப பற்றிக் கொண்டான். அங்கிருந்த புறாக்கள் வெருண்டு விர்ரென்று சிறகடித்து சற்றுத் தூரத்திலிருந்த தென்னைமரங்களில் அமர்ந்து கொண்டன. அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

ஆயினும் மேல்நோக்கிய ஈர்ப்பு விசை அதிகரிக்கத் தொடங்கியது. அவனுக்குள் பீதி கிளம்பியது. உதவிக்கு யாரையும் காணவில்லை. அங்கும் இங்குமாய்த் தலையைத் திருப்பிப்பார்த்தான். தென்கிழக்கு மூலையில் முருகன் கோவிலின் விமானம் தெரிந்தது. அவன் முருகனின் நாமத்தை உச்சரிக்கத் தொடங்கினான். மறுபடி மறுபடி ஓம் முருகா என்று உச்சரித்துக் கொண்டிருக்கையில் அவன் நாக்குகுழறத் தொடங்கியிருந்தது. இப்போது அந்த உச்சரிப்பு 'ம்...கா' என்று மருவியிருப்பதை அவன் உணர்ந்தான். அதைத் திருத்த முயற்சிக்க 'கா' 'வா'-வாகி விட்டிருந்தது. அந்த 'ம்...வா' இப்போது 'ம்...ச்வா' வாக மாறி மருவிப் பின் 'சிவா'-வாவி விட்டிருந்ததை அவன் உணர்கையில் அந்தக்குரல் அவனுக்குள் ஒலித்தது.

“நான் கடவுள் வந்திருக்கின்றேன். உனக்கென்ன வரம் வேண்டுமோ கேள்'

அவனுக்கு அதிர்ச்சியாயிருந்தது. அவன் கடவுளை அங்கு எதிர்பார்த்திருக்கவில்லை. அத்துடன் அவனால் அந்தக் குரலையும் நம்பமுடியாதிருந்தது. தன்னை மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொண்டான். இப்போது இவன் சிறு பராயத்தினன் அல்ல. அவன் தன் தற்போதைய நிலையை அடைந்திருந்தான். ஆயினும் வேப்பமரத்திலேயே தொங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தான். எப்போது அந்த மாற்றம் நிகழ்ந்தது என்பதை அவன் உணரத் தவறியிருந்தான். இப்போது அவன் கடவுளை அலட்சிப்படுத்தத் தொடங்கினான். அந்தக் குரல் அவன் செவிக்குள் மீண்டும் ஒலித்தது. தான் கேலி செய்யப்படுவதாய் அவனுக்குள் சினம் கிளர்ந்தது. “உன்ர வரமும் பூனாவும். என்னைக் கீழே போகவிடு”.

“உன்னை விடுவதாயில்லை. நன்றாக யோசித்துவிட்டுச் சொல்”. இப்போது தன்னருகிலிருந்து ஏதோவொன்று விலகுவதை அவனால் உணரமுடிந்தது. அவனைத் தாங்கியிருந்த அந்த வேப்பங்கிளை மரத்தை விட்டு அவனுடன் சேர்ந்து மேலே கிளம்பத் தொடங்கியிருந்தது.

இப்போது என்ன வரம் கேட்கலாம் என்கின்ற சிந்தனை அவனுக்குள் எழுந்தது. தனக்கு எதுவும் தேவையில்லை. அப்படிக் கேட்பது சுயநலம் என்று எண்ணிக்கொண்டான். தன் உறவுகளுக்காகக் கேட்பதும் சுயநலமே என்றது மனது. நட்புக்களுக்காகக் கேட்கலாமா? அப்படியானால் எந்த நட்புக்காக் கேட்கலாம் என்று குழம்பிய மனது அதுவும் சுயநலத்துடன் சம்பந்தப்பட்டதே என்றது. சரி. என் இனத்திற்காக கேட்கலாமா? ஒரே வரத்தில் என்னினம் மீட்சிபெறமுடியுமாறு கடவுளை மடக்க முடியுமா? அவன் தன் வரத்தினூடாக கடவுளை மடக்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தான்.

எது என் இனம்? அவனுக்குள் குழப்பம் உண்டாயிற்று. என்னினம் தனக்குள்ளேயே அடிபடுகிறதே, என்று கவலைப்படுகையில் சற்றே கீழே குனிந்து பார்த்தான். இப்போது அவன் மிக உயரத்திற்கு வந்துவிட்டிருந்தான். தன்னினம் பற்றிய நினைப்பு மறந்து உலகத்தைப்பற்றிய நினைப்பு உண்டாயிற்று. போரற்ற, வறுமையற்ற, அமைதியான, சந்தோசமான உலகை அவன் நினைக்கத் தொடங்கினான். பூரிப்பாயிருந்தது. தான் சார்ந்த உலகிற்கு தன்னால் ஏதாவது செய்ய முடியும் என்று பரவிய சந்தோசம் சற்று நேரத்திலேயே கலைந்தது. இப்போது பூமிப்பந்து ஒரு கால்பந்தளவில் அவன் கண்களுக்குத் தெரிய அவன் மேலும் மேலும் மேலே போய்க் கொண்டிருந்தான்.

இப்போது பிரபஞ்சம் பற்றிய நினைப்பு அவனுக்குள் எழுந்தது. அவன் வசித்துவந்த பூமிப்பந்து ஒரு புள்ளியாய்த் தெரிய அவனுக்கான உலகில் அவன் விரிந்து கொண்டேயிருந்தான். ஒரு நிலையில் அவனுக்கு எல்லாமே மங்கலாகி மண்ணிறமானவொரு மலைப்பாங்கான பிரதேசம் தென்பட்டது. யாரும் ஏன் எதுவுமே தென்படவில்லை. மரங்களில்லை புற்களில்லை. அதுவொரு சுடுகாடாய்த் இருக்கக்கூடுமென அவன் ஊகிக்கத் தொடங்கினான். எரிந்த பிணங்களின் எஞ்சிய எலும்புத்துண்டுகள் ஆங்காங்கே பரவிக்கிடப்பதாய் உணர்ந்தான். தன்னுடலைப் பார்த்தான். காணவில்லை.

உண்மையாய்த்தான். அவனால் அவன் உடலைக்காண முடியவில்லை. இப்போது அவன் உருவற்றிருந்தான். தான் எங்கிருக்கின்றேன் என்றே அவனால் உணரமுடியவில்லை. இப்போது அவனுக்குப் பயம் வரவில்லை. ஏன்? பதட்டம் கூட வரவில்லை. அப்போதுதான் தான் உணர்வகளும் இழந்திருப்பதாக அவனுக்குப்பட்டது. மகிழ்ச்சியில்லை. வெறுப்பில்லை. சலிப்பில்லை. காதலில்லை. காமமில்லை. ஏன்? இதுவரை காலமும் அவன் அனுபவித்த எந்தவொரு உணர்வுகளுமின்றி அவன் சும்மாயிருந்தான். இப்போது அவன் தன்னைத் தேடத் தோடங்கினான். அவனால் அவனைக்காண முடியவில்லை.

அங்கிருக்கும் ஒவ்வோர் அணுக்களிலும் அவன் இருப்பதாயும் இல்லாமலிருப்பதாயும் ஒரே சமயத்தில் அவன் உணர்ந்தான். தன்னைத் தேடுவதைத் தவிர்த்து அப்படியே சும்மாவிருக்கத் தொடங்கினான். எவ்வளவு நேரம் அப்படியேயிருந்தான் என்பது அவனுக்கச் சரியாகத் தெரியவில்லை. அதுவொரு கணப்பொழுதாகவும் இருந்திருக்கலாம். இல்லை பலகோடி யுகங்களாகவும் இருந்திருக்கலாம். அதைப்பற்றி இப்போதும் அவனால் சரியாகச் அனுமானிக்க முடியவில்லை. ஆயினும் அவன் விழித்த போது அந்த வேப்பமரத்து ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்ததாய் நினைவிற்கு வந்தது. கடவுளின் வரம் பற்றிய சிந்தனைகள் எதுவும் அவனிடம் காணப்படுவதாய்த் தெரியவில்லை.

6 comments:

  1. Dear Thamby,
    Great and it is very interesting. Long live your contribution to Tamil. Sathiamanai

    ReplyDelete
  2. அழகிய வாசிப்பனுபவம் .நல்ல தமிழ்

    ReplyDelete
  3. வேரென நீயிருந்தாய் 10 மிகுதியை ஐ விரைவில் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  4. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  5. அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
    அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)

    திருவடி தீக்ஷை(Self realization)

    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
    நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

    http://sagakalvi.blogspot.com/


    Please follow

    (First 2 mins audio may not be clear... sorry for that)
    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
    http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
    http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo



    Online Books
    http://www.vallalyaar.com/?p=409


    Contact guru :
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

    ReplyDelete