Saturday, January 16, 2010

பரத்தை பத்தினியானாள். பத்தினி பகவதியானாள்.

மாதவி இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் நேற்று (16 ஜனவரி 2010) மாலை வள்ளல் பொ.கோவிந்தசாமிப்பிள்ளை திருமண மண்டபத்தில் நடைபெற்ற, “தமிழர் திருநாள்” விழாவிற்குச் சென்றிருந்தோம். விழாவின் பிரதம விருந்தினராக சிங்கப்பூர் சட்ட மற்றும் இரண்டாம் உள்துறை அமைச்சர் திரு சண்முகம் அவர்களும் சிறப்பு விருந்தினராக சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்திருந்தனர்.

மாலை 6.00 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா ஆரம்பமாகியது. தமிழ்த்தாய் வாழ்த்து என்றவுடன் பாரதியாரின், “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே...” தான் நினைவிற்கு வந்து விடுகின்றது. இலங்கையில் நடைபெறுகின்ற தமிழ் விழாக்களிலெல்லாம் “...தொல்லை வினை தரு தொல்லையகன்று சுடர்க தமிழ்நாடே...” (தயவு செய்து இதில் உள்குத்து ஏதும் இருப்பதாகக் கருத வேண்டாம்) என்று தான் தமிழ்த்தாய் வாழ்த்து இன்னமும் பாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கெல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்து அவரவர்கள் இயற்றியே படிக்கிறார்கள். ஒவ்வொரு விழாக்களிலும் புதியபுதிய தமிழ்த்தாய் வாழ்த்துக்களைக் கேட்கக்கூடியதாய் இருக்கின்றது.

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தமிழ்ப்புகழ் பாடிய வாயால்

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்வள்ளுவர்போல் இளங்கோவைப் போல் யாங்கணமே பிறந்த தில்லைஉண்மை வெறும் புகழ்ச்சியில்லை

என்று தமிழ்ப்புலவர்களின் பெருமையும் கூறியவன் பாரதி.

மாதவி இலக்கிய மன்றத்தின் இவ்விழாவில் சிறப்புரை ஆற்றிய சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களின் உரையிலும் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் இளையோடியிருந்தது. மாதவி இலக்கிய மன்றத்தினாரால் பள்ளி மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற சிறார்களின் உரைகளும், பாடல்களும், ஆடல்களும், மாறுவேடங்களும் நன்றாகவே இருந்தன். ஆயினும் அவற்றில் விஜய் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சிகளின் பாதிப்பு இருந்ததை அவதானிக்க முடிந்தது.

மேளதாளங்களுடனும் மயிலாட்டம் மற்றும் கரகாட்டம் எனபவற்றுடனும் நிகழ்ச்சியின் நடுவே பிரதம விருந்தினர் விழா மேடைக்கு அழைத்து வரப்பட்டார். தமிழ் மொழி பற்றி உரையாற்றிய மாணவி பல அரிய தகவல்களையும் சிங்கையில் இருந்து தமிழ்மொழி அழிந்து போகக்கூடிய சாத்தியப்பாடுகள் பற்றிய விழிப்புணர்வினையும் ஏற்படுத்தினார். எழுதி வைத்திருந்து அவர் வாசித்திருந்தாலும், அதில் இருந்த கருத்துக்களும், ஏற்ற இறக்கங்களுடன் உரையாற்றிய விதமும் மிகவும் நன்றாகவே இருந்தது. அங்கு பேசியிருந்த சிறார்கள் பலரினதும் உரையிலும் மொறிசியஸ் நாட்டைப் போன்று சிங்கையிலும் வருங்காலத்தில் தமிழ் மொழி தெரியாத தமிழர்கள்தான் இருக்கக்கூடுமோ என்றும் சந்தேகம் உண்டானது.

சில நடனநிகழ்ச்சிகளுடன் கோலாட்டம், கும்மி போன்ற தமிழர் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் மிகவும் இரசிக்கக் கூடியனவாக இருந்தன. ஆயினும் இந்தக் கலைகளும் விரைவில் அழிந்து விடுமோ என்றும் கிலேசம் உண்டானது. மயிலாட்டத்தை நான் பார்த்தது இதுவே முதல் தடவை. என் பால்ய வயதினில் ஒரு தடவை நானும் கோலாட்டத்தில் பங்கு பற்றியிருக்கிறேன். அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து ஒரேயொரு தடவை பேராதனைப் பல்கலைக்கழக நிகழ்ச்சியொன்றில் கோலாட்ட நிகழ்வினைக் காணமுடிந்தது. அதன் பின்னர் இன்றுதான் காணக்கி்டைத்தது. தமிழர் பாரம்பரியக் கலைகள் அழிந்த போவது பற்றிய கவலைகள் பலரைப் போலவே என்னிடமும் உண்டு. 2002ஆம் ஆண்டு காலப் பகுதியில் நாட்டுப்பாடல்கள் மற்றும் நாட்டாரிலக்கியங்கள் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்காக தமிழ் தகவல் தொழில்நுட்ப ஒருங்கமைப்பினூடாக (TITA) சில மாதங்கள் ஈடுபட்டிருந்த போதே நாங்கள் எத்தனை விடயங்களை தொலைத்து விட்டிருக்கிறோம் என்பது தெரிய வந்தது. அதற்கு முன் இவையெல்லாம் இனித்தேவையில்லை என்றே எண்ணியிருந்தேன். இப்போதைய தமிழக தொலைக்காட்சிகளால் நடாத்தப்படும் நிகழ்ச்சிகளுடன் ஒப்பிடும் போது விரசமேயில்லாத பல பாரம்பரிய ஆடற்கலைகளை நாம் எமது அடுத்த சந்ததிக்கு மறைத்து விட்டோமோ என்று வருத்தமாக இருக்கிறது.

சட்ட மற்றும் இரண்டாம் உள்துறை அமைச்சர் திரு. சண்முகம் அவர்கள் மிகவும் சுருக்கமாகவும் அதே சமயம் தெளிவாகவும் சில கருத்துக்களை முன்வைத்தார். இன்றைய நிகழ்ச்சி ஏற்பாட்டினை வியந்துரைத்ததுடன் அவரின் உரையினூடாக ஒரு நாட்டு அரசாங்கம் எப்படி தன் குடிமக்களிடையே ஏற்படக்கூடிய பிரச்சனைகளை உணர்ந்து அதை முன்கூட்டியே தடுப்பதில் காட்டும் அக்கறையை உணர முடிந்தது. சில தினங்களுக்கு முன்னாள் மலேசிய உயர் நீதிமன்றம் கடவுளைக் குறிப்பதற்கு “அல்லா” என்கின்ற பெயரை முகம்மதியர்கள் அல்லாதவர்களும் பயன்படுத்தலாம் என்று தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து சில கத்தோலிக்க தேவாலயங்கள் சேதமாக்கப்பட்டு மதக்கலவரங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் பக்கத்து நாடான சிங்கையில் நடைபெற்ற இந்தத் “தமிழர் திருநாள்” விழாவின் முக்கிய புரவலராக ஒரு முகம்மதியரே இருந்ததுடன் பலமதங்களைச் சேர்ந்தவர்களும் இந்நிகழ்ச்சிகளில் ஒற்றுமையுடன் பங்குபற்றியிருந்தனர்.

இறுதி நிகழ்வாக எல்லோரும் ஆவலுடன் காத்திருந்த சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களின் சிறப்புரை ஆரம்பமாகியது. தலைப்பே இல்லாமல் உரையாற்றி திரு. சுகி சிவம் அவர்கள் மாதவி இலக்கிய மன்றத்தின் நிகழ்வாதலால் தான் சிலப்பதிகாரத்தையும் இடையிடையே தொட்டுச் செல்வேன் என்று தொடக்கத்திலேயே கூறியிருந்தார். இன்றைய வாழ்வை வளமாக்குவதற்குத் தேவையான பல கருத்துக்களை அவரின் பாணியிலேயே சின்னச்சின்ன நகைச்சுவைக் கதைகளினூடாக வந்திருந்தவர்களின் மனங்களில் விதைத்துக் கொண்டிருந்தார். உள்ளதை அல்லது நடந்து முடிந்த விடயங்களை அப்படியே ஏற்றுக்கொள்வது பற்றியும் அதனால் கிடைக்கும் அனுகூலங்கள் பற்றியும் மிகவும் சிறப்பாக உரையாற்றனார். மனமெனும் குரங்கிடம் நாம்-ஆகிய விமானங்களைச் செலுத்துவதற்கு அனுமதித்து விடுவதால் ஏற்படும் விபத்துகள் பற்றிக் கூறியது அருமையாக இருந்தது.

கோவலன் கண்ணகியைப் பிரிந்தது அவள் மேல் எற்பட்ட வெறுப்பினால் அன்று என்றும், அது மனித மனம் கொள்ளும் சலிப்பினால் ஏற்பட்டதாகவும் கூறினார். எதைக்கண்டு மாதவியை மோகித்தானோ, பின் அதே காரணத்திற்காகவே மாதவியை விட்டும் பிரிகின்றான் கோவலன். தாம்பத்தியத்தில் கண்ணகி கொடுப்பதைப் பெற்றுக்கொள்பவளாக விளங்கினாள். மாதவியோ கொடுப்பவளாகவே விளங்கினாள். அந்த வித்தியாசமே கோவலனைக் கண்ணகியிடமிருந்து பிரித்து மாதவிபால் வீழ்த்தியிருக்கிறது. விருப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் அந்த விருப்பே பின்னர் வெறுப்பாகவும் மாறியிருக்கிறது. ஆக ஒரு தாளின் இரு பக்கங்களையும் போன்றதே விருப்பும் வெறுப்பும். இதனையே மிக எளிமையாக ஓஷோ அவர்கள் “சிரசாசனம் செய்யும் போதும் நான் நானாகவே இருக்கின்றேன்” என்று குறிப்பிட்டிருக்கின்றார் என்றார். தன் மனைவியை முற்றுமுழுதாய்ப் புரிந்த கொண்ட கணவனும் இல்லை. கணவனை முற்றுமுழுதாய்ப் புரிந்து கொண்ட மனைவியும் இல்லை. இதைப் புரிந்து கொண்டு வாழ்ந்தாலே குடும்பத்தில் ஏற்படும் முக்கால்வாசிப் பிரச்சனைகள் தீர்ந்தவிடும் என்றார்.

கோவலனும் கண்ணகியும் மணமுடிக்கையில் அவர்கள் வயது முறையே பாதினாறும் பன்னிரெண்டும் என்று தான் ஒரு பள்ளியில் கூறியபின்னர், ஆட்டோகிராப் வாங்க வந்த பையன் தன் அப்பாவிற்கு வந்து வகுப்பெடுக்கும் படி கூறியதாக நகைச்சுவையாகக் கூறிய சொல்வேந்தர், மேலைத்தேய கீழைத்தேய பண்பாட்டு வித்தியாசங்களைப் பற்றியும் விளக்கமளித்தார். கீழைத்தேயங்களில் பதின்மப் பருவத்திலேயே மணம்முடித்துக் கொடுப்பது தவறென்றும், அதே வேளை மேலைத்தேயங்களில் பதின்மப் பருவங்களில் பிள்ளைகள் திருமண பந்தமின்றி பாலியல் உறவுகளில் ஈடுபடுவதை அனுமதிப்பதும் தவறென்றும் எடுத்துரைத்த அவர் வளமான வாழ்ககைக்கு யௌவனம் மலரும் பருவததில் உள்ளவர்களுக்கு தியானத்தைக் கற்றுக்கொடுப்பதே அவர்கள் வாழ்க்கையை மேன்மைப்படுத்திக் கொள்ள உதவும் என்றார். ஈற்றில் நிகழ்ச்சியை நிறைவு செய்ய வேண்டிய வேளை வந்து விட்டதை விழாக்குழுவினர் சில தடவைகள் நினைவூட்டிய பின்னர், சிலப்பதிகாரத்தின் கதையை மிகச் சுருக்கமாக இருவரிகளில் கூறினார்.

பரத்தை பத்தினியானாள். பத்தினி பகவதியானாள்.

விழா முடிந்து, நான் சேர்ந்து போயிருந்த அம்மாவுடன் உரையாடிய போது, இன்னும் கொஞ்ச நேரம் அவரைப் பேச விட்டிருக்கலாம் என்றேன். அதை அவரும் ஆமோதித்தார். நான் பல இலக்கியக் கருத்துகளையும் அவரது விளக்கங்களையும் எதிர்பார்த்தே போயிருந்தேன். அம்மா சொன்னார், “அவற்ற பேச்சைக் கேட்டாப்பிறகு நல்லா நடக்கவேணும். மற்றாக்களி்ன்ர மனச நோகப்பண்ணக்கூடாது. அப்பிடி இப்பிடியெல்லாம் இருக்கவேணும் போல இருக்கும். ஆனா ரெண்டு நாள் போனா எல்லாம் மறந்து போயிற்று பழைய மாதிரி வந்திருவம்” என்றார்.

உண்மைதானே?

1 comment:

  1. சொல்வேந்தர் சுகி சிவம் தனது பட்டத்தை தக்க வைக்க.... நடைமுறைக்கு ஒவ்வாத நல்ல கருத்துக்களை முன் வைப்பார் அதை வயசான பாட்டியும் மனதளவில் வயசாகிய வலசும் கேட்டு சிலாகிக்க முடியும்

    அறியாமை தான் இங்கே பேரின்பம் அன்பே, காதலின் வகுப்பில் மாணவன் தான் பாண்டிதனே........!!!!!!!!.

    ஜயங்காரு வீட்டு அழகே என்று தொடங்கும் பாடலை மறுமுறை கேட்க சிபார்சு செய்கிறேன்

    -ஆரூரன்

    ReplyDelete