Thursday, January 14, 2010

பேரூந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்

இன்றைய காலை பணியிடத்திற்குச் செல்வதற்கான பேரூந்துத் தரிப்பிடத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை. காலம் அகாலமாகிக் கொண்டிருக்க, உடலுக்குள் அலாரம் அடிக்க ஆரம்பித்தது. விட்டால் சரிவராது என்றது உள்ளுணர்வு. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்னரான பட்டறிவு படமாயோட ஆரம்பித்தது.

அது இந்த ஆங்கில வருடத்தின் முதல் வேலைநாள். மூன்றரை நாள் விடுமுறையை அடுத்து வந்த நாளாதலால் சீக்கிரமே இருப்பிடத்தை விட்டுக் கிளம்பியிருந்தேன். பேரூந்தத் தரிப்பிடத்தை அடைகையில் நான் செல்ல வேண்டிய பேரூந்தும் வந்த விட்டிருந்தது. வழமை போன்றே காலியாகவிருந்த ஜன்னலோர இருக்கையொன்றில் அமர்ந்து கொண்டே வெளியாலே துமித்துக் கொண்டிருந்த மழையினூடாக வேடிக்கை பார்க்கலானேன். அடுத்து வந்த தரிப்பிடத்தை அடைகையில் மழை பலத்து விட்டிருந்ததனால் பேரூந்திற்குள் ஏறுபவர்களை நோக்கினேன்.

பலரையும் தவிர்த்து ஒரு பெண் என் கவனத்தை ஈர்த்தாள். முப்பது வயது மதிக்கத்தக்கதான அந்தப் பெண் மலே அல்லது இந்திய-மலே கலப்பினத்தவளாக இருக்கக்கூடும். முகம் கழுவிவிட்டு வந்து முகத்தைத் துடைக்காமல் பவுடரைப் பூசினால், ஈரம் உலர்ந்த பின்னர் எப்படி இருக்குமோ அப்படியே அவள் முகமெங்கும் திட்டுத்திட்டாக வெள்ளையாக பவுடர் அப்பிக் கிடந்தது. வந்தவள் எனக்கு முன் வரிசையில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள். வெளியே மழை இன்னமும் அடைத்துப் பெய்யத் தொடங்கியது.

சிறிது நேரத்தின் பின் மீண்டும் பார்வையினை பயணிகள் மீது ஓட விட்டேன். இப்போது இந்தப் பெண் தன்னை அலங்கரித்தக் கொண்டிருப்பதனை அவதானிக்கக்கூடியதாயிருந்தது. அவளது கைப்பைக்குள் இருந்து விதம் விதமான தூரிகைகளும் விதவிதமான வர்ணப் பூச்சுக்களும் இடையிடையே வெளியே வந்து அவள் முகத்தில் விளையாடிக் கொண்டிருந்தன. அரை அங்குலமளவிலான தூரிகையினைப் பயன்படுத்தி முகமெங்கும் உரஞ்சுகையில் எனக்குள் வியப்பு மேலிட்டது. நான் அதானிக்காதிருந்த பொழுதுகளில் இன்னும் என்னென்ன விதமான உபகரணங்களைப் பயன்படுத்தினாளோ? அவளது கைப்பைக்குள் அழகுசாதனப் பொருட்களைத் தவிர்த்து வேறு ஏதேனும் பொருட்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்றே எனக்குப் பட்டது. எல்லாப் பெண்களினதும் கைப்பைகள் இப்படித்தான் அழகுசாதனப் பொருட்களால் நிரப்பப் பட்டிருக்குமா?

எனக்கான இறங்குமிடம் வந்தது. இறங்குகையில் தான் அவளது முகத்தினை முன்பக்கமாய் அவதானிக்க முடிந்தது. ஆச்சரியமாயிருந்தது. வெள்ளைத் திட்டுத்திட்டாய் அலங்கோலமாயிருந்த முகம், இப்போது அழகில் ஜொலித்துக் கொண்டிருந்தது. இப்போது அவளது முகத்தைப் பார்ப்பவர்கள் யாரும் அவளை பதினெட்டு வயதிற்கு மேல் மதிக்க மட்டார்கள். பாரதி வியந்து பாடிய பதினாறு வயதுப் பருவ மங்கை இப்படித்தான் இருப்பாளோ?


அவளை மறுபடி பார்க்க முடிந்தால், அதுவும் இன்றையைப் போல் பின்னாலிருந்தல்லாமல் அவள் தன்னை அலங்கரிப்பதை அருகிலிருந்து பார்க்க நேர்ந்தால் அந்த இளமை பெயரும் ரசவாதத்தை நானும் அறிந்து கொள்ளலாமே என்கின்ற ஏக்கம் எழுந்தது.

அழகு நிலையங்களிலிருந்த வெளிவரும் பெண்களின் பின்னால் செல்லாதீர்கள். சில வேளைகளில் அவர் உங்களின் பாட்டியாகவும் இருக்கக்கூடும் என்பது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே சொல்லப்படுகின்றது என்று அதுவரை நினைத்திருந்த எண்ணம் காணாமல் போயிருந்தது.

அன்றைய தினம் நேரத்துடனேயே பணியிடத்திற்குச் சென்றிருந்ததால், மறுநாள் விழிப்புமணி ஒலி எழுப்புகையில் அதனை snooze mode இற்கு மாற்றிவிட்டு இழுத்திப் போர்த்துக் கொண்டேன். சொர்க்கம் என்று ஒன்று இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையோ பொய்யோ, என்னைப் பொறுத்தவரை, விழிப்புமணி ஒலித்த பின்னும் அதை snooze mode இற்கு மாற்றிவிட்டு இழுத்திப் போர்த்திக் கொண்டு உறங்கும் சுகமிருக்கிறதே, அதைத் தான் சொர்க்கமென்பேன். அந்த சொர்க்கத்தை அனுபவி்த்ததன் விளைவு, இருப்பிடத்தை விட்டு வெளியேறும் நேரம் பிந்தி விட்டிருந்தது.


பேரூந்திற்கு தரித்து நிற்கையில் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு யுகங்களாய்க் கடந்து கொண்டிருந்தது. “காத்திருந்தால் நிமிடங்கள் வருடமென்பாய், வந்து விட்டால் வருடங்கள் நிமிடமென்பாய். காதலித்துப்பார்...” என்று கவிதை எழுதிய வைரமுத்து, இப்படியான ஒரு சூழ்நிலையை அனுபவித்திருக்க மாட்டாரோ என்றே எண்ணத் தோன்றியது.

வந்த பேரூந்தினுள் என்னைத் திணித்துக் கொண்டே ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்தாலும் மனம் என்னவோ என்னை விட்டு வெகுதூரம் சென்று விட்டிருந்தது. ஒவ்வொரு தரிப்பிடத்திலும் பேரூந்து பயணிகளுக்காக தரிக்கையில் எரிச்சல் எரிச்சலாய் வந்தது. ஏறுகின்ற இறங்குகின்ற பயணிகளை மனத்திற்குள் திட்டத் தொடங்கினேன். பேரூந்து சமிக்ஞை விளக்குகளில் நிற்கையில் சமிக்ஞை விளக்குகளின் மேல் கோபமாய் வந்தது. பேரூந்து மெதுவாகச் செல்வது போன்ற உணர்வு ஏற்பட, என்னடா இவன் பேய்ப்... தேய்ச்சுக் கொண்டு போகிறான் என்று சாரதியின் மேல் ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. இப்போது வயிற்றுற்குள் அமிலச் சுரப்புகள் உண்டாவதைத் தெளிவாக உணரமுடிந்தது. ஒருவாறாக நான் இறங்க வேண்டிய தரிப்பிடம் வரவே இருக்கையை விட்டு எழுந்தேன்.

அட! எனது பக்கத்து இருக்கையில் அதே பெண் தன் ஒப்பனைகளை முடித்து விட்டு சிறிய தளவாடியொன்றில் தன் முகத்தினைச் சரிபார்த்துக் கொண்டிருந்தாள்.

எதனை நான் பார்க்க வேண்டுமென்று முந்தைய தினம் நான் விரும்பியிருந்தேனோ, அதற்கான சந்தர்ப்பம் மறுநாளே வாய்த்து விட்டிருந்தும் நானிருந்த மனநிலையினால் அதனைத் தவற விட்டிருந்தேன். அன்றைய தினம் பணியிடத்தை அடைந்து விரல் பதிக்கையில் 5 நிமிடங்கள் மட்டுமே தாமதமாகியிருந்தது. ஆயினும் வயிற்றினுள் அளவிற்கு மீறிச் சுரந்து விட்டிருந்த அமிலம் அன்றைய நாள் முழுதும் தொந்தரவினைத் தந்து கொண்டிருந்தது.

நினைவுச்சுழல் நிகழ்காலத்திற்குத் திரும்ப பதற்றமடைவதில் எந்த பிரயோசனமும் இல்லை என்கின்ற தெளிவு உண்டானது. சிறிது நேரத்திலேயே எனக்கான பேரூந்தும் வந்து சேர்ந்தது. மீண்டும் ஜன்னலோர இருக்கை. அலைபேசி வானொலியில் என்னை இணைத்துக் கொண்டேன்.

“பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம் பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்...”

பாடல் செவிகளைத் தழுவிக்கொண்டிருக்க எண்ணப்பறவை சிறகடிக்கத் தொடங்கியது.

பயணங்களின் போது எங்களில் பெரும்பாலானவர்கள் ஜன்னலோர இருக்கைகளையே விரும்புகின்றோம். முக்கியமாக வெளியே விடுப்புப் பார்க்கவும், இயற்கையை இரசிக்கவும் என ஏராளமான விடயங்கள் பேரூந்தின் வெளியே கொட்டிக் கிடக்கின்றன. பேரூந்திற்குள்ளே அப்படித் தொடர்ந்து இரசிப்பதற்கு பெரிதாக எதுவும் இருக்காது என்கின்ற நினைப்பும் எமக்கு வேண்டிய அல்லது விரும்பத்தக்க விடயங்கள் வெளியே தான் இருக்கின்றன என்கின்ற எண்ணமும் தானே எமக்குள் இருக்கிறது. அதே வேளைகளில் பேரூந்தில் வரும் இளம் ஜோடிகளைப் பார்த்தால், அவர்களின் உலகமோ, அந்த இருவரிலும் மட்டுமே தங்கியிருக்கின்றது. அருகிலிருப்பவர்கள் பற்றிய எந்தவிதமான பிரக்ஞைகளுமின்றி அவர்கள் செயற்படும் விடயங்களைப் பார்க்கையில் என்ன தோன்றுகின்றது?

எமக்கான உலகம் எங்களால்தான் தீர்மானிக்கப் படுகிறது. புறக்காரணிகளால் அல்ல. ஆனாலும் நாங்கள் புறக்காரணிகளில் புலனைச் செலுத்திவிட்டு எங்களால் கட்டமைக்கப்படக்கூடிய உலகத்தை, அதுதரும் சந்தோசத்தை, அமைதியை அனுபவிக்க மறந்து விடுகின்றோம். ஜன்னலோர வாசிகளைப் போல எமக்கு வெளியே காணப்படும் விடயங்களில் எம்மைத் தொலைத்து விடுகி்ன்றோமே அன்றி எமக்குள் ஆழ்ந்து சென்று பார்க்கத் தவறி விடுகின்றோம். அத்துடன் பல முகமூடிகளையும் அணிந்து மற்றவர்களிடம் எம்மை மறைக்க ஆரம்பித்துப் பின் எம்மிடமிருந்தும் நாம் தொலைந்து விடுகின்றோம்.

இறங்கவேண்டிய இடம் வரவே எண்ணங்கள் கலைத்து இறங்கிக் கொண்டேன். இன்றைக்கு 15 நிமிடங்கள் தாமதாமாகி விட்டிருந்தது. ஆனாலும் மனது சந்தோசமாகவிருந்தது. இன்றைக்கு மட்டுமாவது முகமூடிகள் அகற்றி இருக்க வேண்டுமெனத் தீர்மானித்துக் கொண்டேன். சக பணியாட்கள் பொங்கல் வாழ்த்துத் தெரிவிக்கையில்தான் இன்றைக்குப் பொங்கல் சாப்பிட வேண்டுமென்கின்ற ஆவல் எழுந்தது. நான் மட்டுமன்றி மற்றவர்களும் பொங்கல் உட்கொள்ள விரும்பவே மதிய உணவாகப் பொங்கல் கிடைக்குமா என்று கேட்டு உணவகங்களுக்கு மேற்கொண்ட அழைப்புகள் பயன் தரவில்லை. எனது இருப்பிடத்திற்கு அண்மையில் இருக்கும் நண்பன் இங்கே வந்த பிறகும் பொங்கல் பொங்குவது ஞாபகத்திற்கு வந்தது. இன்றைக்கு முகமூடி அணியக்கூடாது என்று எண்ணியிருந்தது நினைவிற்கு வந்ததாலோ அல்லது ஆசை வெட்கம் அறியாது என்பதனாலோ google இல் அவனுடன் தொடர்பினை ஏற்படுத்தினேன். அவனுக்கும் நான் கேட்க முதலிலேயே புரிந்து விட்டது. ஏற்கனவே எனது இருப்பிடத்தில் குளிர்சாதனப் பெட்டிக்குள் எனக்கான பொங்கல் வைக்கப்பட்டிருப்பதாக அறியத் தந்தான். பொங்கலோ பொங்கல்! உள்ளம் நிறைந்த பொங்கல்.

4 comments:

  1. பொங்கலோ பொங்கல்.

    நல்லா இருக்கு. :))))

    ReplyDelete
  2. அருமையா இருக்கு

    எப்பமும்மே அதிக பத்ட்டம் நிகழ்காலஇன்பத்தை இழக்க வைக்கும்

    நல்லா
    விளக்கியிருக்கீங்க

    ReplyDelete
  3. Apologies for my lack of knowledge in using Tamil font. I very much enjoyed your language and the beautiful expression from your heart. I also read and enjoyed your post on the Tamil vizha. Hoping to visit your site regularly, with best wishes,

    -R. Jagannathan

    ReplyDelete
  4. சந்தோசம் என்பது எப்போதும் மனதைப் பொறுத்ததே. மனதை பக்குவப்படுத்திக்கொண்டால் எதையும் இயல்பானதாகவும் மகிழ்சிக்குரியதாகவும் எடுத்துக்கொள்ள முடியும் தானே?

    ReplyDelete