Sunday, December 27, 2009

கனவு

இரவைத் தின்று
வளர்கின்றன கனவுகள்.
வதவதவென விதவிதமாய்
கற்பனைக்கும் அப்பால்.

புவியீர்ப்புவிசை எனக்கு
புறக்கணிக்கப்படுகிறது.
ஈர்ப்பின்றியவாறே எனது
இசைவுகளும் அசைவுகளும்.

அர்த்தங்கள் இழக்கும்
தர்க்கங்களும், எந்தவொரு
புத்தகத்திலும் இல்லா
வித்தகங்களுமாய்...

கனவிலும் வருகின்ற
கனவுகள் எந்தப்
புனைவிலும் வாராத
நினையா நிகழ்வுகள்.

கற்பிதங்களா? அன்றி
அற்புதங்களா? அவைபற்றி
செப்பவே முடியாத
சொப்பனங்கள்.

கனவு வாழ்க்கையா?
வாழ்க்கைக் கனவா?
இரவுகளில் கனவா?
கனவுகளில் இரவா?

கனவு தின்கின்ற
உறக்கம்! அல்லது
உறக்கம் தின்கின்ற
கனவு! நிஜமெது?

3 comments:

  1. “கனவு” என்ற கடலுக்குள் அடிக்கடி மூழ்கித் திழைக்கிறேன். ஆனாலும் இன்று வரை கனவு பற்றிய என் தேடல் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. அது ஒரு வரப்பிரசாதம் எமக்கு. என்னைப் பொறுத்தவரை சொப்பனங்களும் ஒரு சொர்க்கமே. நான் அடைய முடியாத பல இலட்சியங்களை சொப்பனத்திலே அடைந்திருக்கிறேன். கவிதை அருமை. தொடரட்டும் வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி கதியால் மற்றும் ஷண்முகப்ரியன்.

    ReplyDelete