Monday, November 9, 2009

வள்ளுவர் ஆணாதிக்கவாதி. தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளிய டாக்டர் கி.வீரமணி



சிங்கப்பூர், பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில், நேற்றைய (08 நவம்பர் 2009) மாலை வள்ளல் பொ.கோவிந்தசாமிப்பிள்ளை திருமண மண்டபத்தில் நடைபெற்ற, 'பெரியார் கண்ட வாழ்வியல்' எனும் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம்.


புதுமைத் தேனி மா.அன்பழகன் அவர்கள் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த எம்.இலியாஸ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். வழமையான வரவேற்புரை போன்றல்லாது அது, வரவிருக்கும் செம்மொழி மாநாட்டினையொட்டியதான ஒரு வேண்டுகோள் உரையாகவும் அமைந்திருந்தது. பின் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் “புதியதோர் உலகம் செய்வோம்...” பாடலுக்கு மாணவியொருவர் மிக அற்புதமாக நடனமாடினார். பின்னர் வந்த குழந்தையொன்று “தமிழுக்கு அமுதென்று பேர்...” என்கின்ற பாடலை வயதிற்கு மீறிய முதிர்ச்சியுடன் மிக அருமையாகப் பாடினார்.

இம்முறை முதன்முறையாக சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தினரால் 'பெரியார் விருது' விருது வழங்கப்பட்டது. சிங்கை தேசிய நூலக வாரியத்தின் மூத்த அதிகாரி திருமதி புஷ்பலதா அவர்கள், தமிழ்மொழி வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய/ஆற்றிக் கொண்டிருக்கும் பணிக்காக அவ்விருது, வழங்கிக் கௌரவிக்கபட்டார்.

டாக்டர். சோம. இளங்கோவன் அவர்களின் வாழ்த்துரையினை அடுத்து தமிழ்நாடு திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் சிறப்புரை ஆரம்பித்தது.


அவரின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவர் 30 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் பெருமளவு நிமிடங்களுக்கு மேடையில் அமர்ந்திருந்தவர்களைப் பற்றியே புகழ்ந்து கொண்டிருந்தபோது, ச்சே! 30 நிமிட நேரத்தையும் இப்படியே தான் விரயமாக்கப் போகின்றாரோ என்று, அவரிடம் வேறு பல விடயங்களையும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மனது சலிததுக் கொண்டது. பின் அவர் பெரியாரின் வாழ்வில் இடம்பெற்ற பல சம்பவங்களையும் பகிர்ந்து கொண்டபோது என்ன மனிதர் இவர்? இப்படிக் கீழ்த்தரமானவராக நடந்து கொள்கின்றாரே என்றுதான் எண்ணத்தோன்றியது.

பெரியார் ஒருபோதுமே தன்னை யாரும் மேடையில் வைததுப் புகழ்ந்து பேசுவதை விரும்பியதில்லை. மேலும் அவர், ஒருவரை மிகக் கடுமையாகத் தண்டிக்க வேண்டுமெனில், தண்டிக்கப்பட வேண்டியவரை மேடையில் ஏற்றி வைத்துவி்ட்டு அவரைப்பற்றிப் புகழ்ந்து கொண்டே இருந்தால் அதை விடக் கடுமையான தண்டனை வேறொன்று இருக்க முடியாது என்றார். அப்படியானால் மேடையில் இருந்து விழாவைச் சிறப்பித்தவர்கள் மேல் டாக்டர் கி. வீரமணி அவர்களுக்கு அப்படி என்ன கோபமோ? தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளைகளையும் கிள்ளி விட்டிருந்தார்.

30 நிமிடங்களைத் தாண்டி சூடுபிடித்து நீண்டு சென்ற உரை ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரத்தினை விழுங்கி விட்டிருந்தாலும் பார்வையாளர்களைத் தனது பேச்சினால் கட்டிப்போட்டிருந்தார். பெரியார் கண்ட வாழ்வியலினை பலரும் முறையாக அறிந்திருக்கவில்லை என்று குறைபட்டுக் கொண்டார். பெரியாரைப் பற்றிப் பலரும் அறிந்திருந்தாலும் அவர்களில் பெரும்பாலானவர்களும் குருடர்கள் பார்த்த யானை போன்றே பெரியாரின் ஒவ்வொரு பக்கங்களை மட்டுமே அறிந்திருப்பதாகவும் கூறினார். உண்மைதான், பெரியாரினால் வலியுறுத்தப்பட்ட பெண்விடுதலை, சிக்கனம், சீர்திருத்தத் திருமணம் என்பவற்றையெல்லாம் விட்டுவிட்டு , நாத்திகம் பேசுவதற்கு மட்டுமே இப்போதெல்லாம் பெரியாரின் பெயர் உபயோகிக்கப்படுகிறது.

“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”

என்கின்ற குறளினை உவமைக்கு எடுத்திருந்த டாக்டர் கி.வீரமணி அவர்கள், ஆண்களை மட்டுமே இக்குறள் குறிப்பதாகக் கூறினார். மேலும்,

“ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்”

என்கின்ற குறளினையைம் கூறிய அவர் வள்ளுவர் ஆணாதிக்க வாதியாக இருந்திருப்பாரோ என்கின்ற சந்தேக விதையினையும் தூவிவிட்டிருந்தார். ஒரு ஆணுக்கு இந்த சமூகத்தில் என்னென்ன உரிமைகள் உள்ளதோ அதே உரிமைகள் ஒரு பெண்ணுக்கும் இருக்கவேண்டும் என்பதற்காக பெரியார் அயராது உழைத்ததாகவும் கூறினார். சிங்கப்பூர், எப்போதோ பெரியார் கண்ட, பெண்விடுதலையை அடைந்து விட்டிருப்பதைப் பார்த்து தான் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.

நிகழ்ச்சிகள் நிறைவுற வெளியே வந்தோம். அப்போது வயதானவர் ஒருவர் எங்களருகில் வந்து நாங்கள் எங்கே இருக்கின்றோம் என்று வினவினார். நாங்கள் சொன்னதும், என்னருகில் நின்றிருந்த அம்மாவிடம் “உங்கள் பெண்பிள்ளைகள் யாரும் மணமாகாமல் இருக்கின்றார்களா?” என்றார். ஒருவேளை அந்த அம்மாவிற்கு தெரிந்தவராய் இருக்கலாம் என்கின்ற எண்ணத்தில் நான் பார்வையாளனானேன். அவர் தனது மகனுக்குத் தகுந்த பெண் தேடுவதாகவும், ஊரில் (இந்தியாவில்) பெண்கள் இருந்தால் அறியத்தரும்படியும் கேட்டது தான் அந்த உரையாடலின் சாராம்சம். பின் அநத அம்மாவுடன் உரையாடிய போது இன்றுதான் அவரை முதன்முதலில் சந்திப்பதாகவும், இங்குள்ள பெரும்பாலான பெற்றோர் தங்கள் ஆண்பிள்ளைகளுக்கான மணமகள்களை ஊரிலேயே தேடுவதாகவும், அப்படி இணைந்து கொண்ட குடும்பங்கள் ஒற்றுமையாக இருப்பதாகவும், இங்கேயே திருமணம் செய்து கொண்ட பெரும்பாலனவர்களின் குடும்பங்கள் விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் நிற்பதாகவும் கூறினார். அப்படியானால், இதைத்தான் பெரியார் கண்ட பெண்விடுதலை என்பதா?

10 comments:

  1. ந்ல்ல கேள்வி. பகுத்தறிந்து பார்க்கிறீர்கள்.

    ReplyDelete
  2. வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி அறிவிலி

    ReplyDelete
  3. For the first time some one put valluvar from a different light. Thanks for sharing this beautifull insight with us.

    ReplyDelete
  4. ஊரில், உலகை அறியாத அல்லது அறியவிடாத பெண்கள் இருப்பதாக கருத வேண்டியுள்ளது. சிங்கை தமிழ்ப் பெண்ணுக்கும் தமிழ்நாட்டு தமிழ்ப்பெண்ணுக்கும் சுதந்திரத்தின் அளவீடுகளில் மாற்றமுள்ளது என்பதை அவரது விருப்பம் சுட்டி நிற்கிறது. பெண், அவள் எங்கிருந்தாலும் அவளுக்குரிய சுதந்திரத்தை அவள் அனுபவித்துக்கொண்டே இல்லறத்தில் ஈடுபட ஆண்கள் தயாராக இல்லையே. வாழ்க்கையில் அன்புக்கு முக்கியத்துவம் தர யாரும் தயாராக இல்லை. தனது ஆளுமை மீதான சந்தேகமே அடக்குமுறையில் நம்பிக்கைகொள்ள வைக்கிறது. ஆனால் அந்த அடக்குமுறையே சுதந்திரத்திற்கான தேடுதலில் நாட்டங்கொள்ள வைக்கிறது. அடக்குமுறையின் தீவிரத்திற்கேற்ப சுதந்திரத்தின் தேடுதலும் தீவிரமடைகிறது என்பதே உண்மை.

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Prakash

    ReplyDelete
  6. //
    Anonymous said...
    ஊரில், உலகை அறியாத அல்லது அறியவிடாத பெண்கள் இருப்பதாக கருத வேண்டியுள்ளது. சிங்கை தமிழ்ப் பெண்ணுக்கும் தமிழ்நாட்டு தமிழ்ப்பெண்ணுக்கும் சுதந்திரத்தின் அளவீடுகளில் மாற்றமுள்ளது என்பதை அவரது விருப்பம் சுட்டி நிற்கிறது. பெண், அவள் எங்கிருந்தாலும் அவளுக்குரிய சுதந்திரத்தை அவள் அனுபவித்துக்கொண்டே இல்லறத்தில் ஈடுபட ஆண்கள் தயாராக இல்லையே. வாழ்க்கையில் அன்புக்கு முக்கியத்துவம் தர யாரும் தயாராக இல்லை. தனது ஆளுமை மீதான சந்தேகமே அடக்குமுறையில் நம்பிக்கைகொள்ள வைக்கிறது. ஆனால் அந்த அடக்குமுறையே சுதந்திரத்திற்கான தேடுதலில் நாட்டங்கொள்ள வைக்கிறது. அடக்குமுறையின் தீவிரத்திற்கேற்ப சுதந்திரத்தின் தேடுதலும் தீவிரமடைகிறது என்பதே உண்மை.
    //
    கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
    அடக்குமுறைக்கு வேறு காரணங்களாக எதிராளியைப் பற்றிய பயமும் தாழ்வு மனப்பான்மையும் கூட காரணமாக இருக்கின்றன. குடும்பப் பிரிவிற்கு புரிந்துணர்வின்மையும், அதேசமயம் தமது பொறுப்புக்களைத் தட்டிக்கழிப்பதுடன், தனக்குரிய கடைமைகளைச் செய்யாது உரிமைகளை மாத்திரம் அனுபவிக்க நினைப்பதுவும் பிரதான காரணங்களாக அமைகின்றன.

    ReplyDelete
  7. //இதைத்தான் பெரியார் கண்ட பெண்விடுதலை என்பதா?//

    நல்ல கேள்வி பதிலுக்காக காத்திருக்கின்றேன்

    ReplyDelete
  8. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆ.ஞானசேகரன்.
    யார் பதிலளிப்பார்கள்? :-)

    ReplyDelete
  9. தெளிவான கட்டுரை,வலசு.

    கேள்விகளை மட்டும் கேட்டபடி, பதில்களைஎதிர்பாராமல் வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கிறது.

    ReplyDelete
  10. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஷண்முகப்ரியன்.

    ReplyDelete