Monday, April 9, 2012

வேரென நீயிருந்தாய்...(52)

அம்மாவின் அந்திரெட்டியை சாட்டிக்கடற்கரையில் முடித்துவிட்டுப் பின் வீட்டுக்கிருத்தியத்திற்குப்பதிலாக திருநெல்வேலி முத்துத்தம்பி பள்ளிக்கூடத்தில் உள்ள ஆதரவற்றோர் சிறுவர் இல்லத்தில் மதியபோசனத்தையும் முடித்துவிட்டு மறுநாள் நதீஷாவும் நானும் காலையிலேயே புறப்பட்டு வவுனியா வந்து கண்டிக்குப் பயணமானோம்.

“ஒருமதிரி அம்மாவின்ரை அலுவல்கள ஒழுங்காச் செய்து முடிச்சிற்றம் என?”

“ஓம். நீங்களும் என்னோட வந்ததால எனக்கும் பெரிய துணையா இருந்திச்சு”

“வாழ்நாள்பூரா இனி நாங்க ரெண்டுபேரும் ஒராளுக்கொராள் துணையாத்தானே இருக்கப்போறம்”

“ம்ம்ம்... பார்த்தீங்களா? மூண்டு நாளைக்குமுதல் குருந்துவத்தையிலயிருந்து வெளிக்கிடேக்குள்ள தனியாளா அடுத்து என்ன செய்யிறது எண்டே தெரியாம வெளிக்கிட்டன். ஆனா இண்டைக்கு?”

“ஏன் இண்டைக்கு என்ன?”

“இண்டைக்கு என்னவா? அண்டைக்கு வெளிக்கிடேக்குள்ள எனக்கெண்டு ஒருத்தரும் இருக்கேல்ல. ஆனா இண்டைக்கு எனக்கெண்டு காதலியா, மனைவியா, அம்மாவா எல்லாத்திலும்விட ஒரு நல்ல friend ஆ, எல்லாமா நீங்க இருக்கிறீங்க. இதைவிட வேற எனக்கென்ன வேணும்?”

“ஹலோ சேர்! இன்னும் எங்களுக்குக் கல்யாணம் ஆகேல்ல. அதுக்குள்ள wife எண்டெல்லாம் கதைக்க வெளிக்கிடுறியள்”

“என்னைப் பொறுத்தவரைக்கும் அக்காக்கு முன்னால அம்மா வாங்கின சங்கிலியப் போட்டதுதான் நான் உங்களுக்குக் கட்டின தாலி. ஆனபடியா இப்ப நீங்க என்ரை wife. அதாலதான் அந்திரெட்டி செய்யேக்குள்ள உங்களை எள்ளும் தண்ணியும் இறைக்கச் சொல்லிவிட்டது”

“ஓ! அப்ப இனி அடுத்து என்ன செய்யப் போறம்?”

“கல்யாணம் முடிஞ்சா அடுத்தது என்னவெண்டு தெரியாதா?”

“வேண்டாம். உங்கட பேச்சும் பார்வையும் ஒருமாதிரிப் போகுது”

“ஏன்? என்ன மாதிரிப் போகுதாம்?”

“இப்ப எதுக்கு இவ்வளவு கிட்டவா உங்கட முகத்தைக் கொண்டுவாறீங்க?”

“நான் கதைக்கிறது உங்களுக்கு வடிவாக் கேக்கேல்லையோ எண்டு நினைச்சுத்தான்”

“அதெல்லாம் வடிவாக் கேக்குது. நீங்க வடிவா comfortable-ஆ முதல் இருந்து வந்தமாதிரியே இருந்து கதையுங்கோ. எனக்கு காது வடிவாக் கேக்கும்”.

“உங்களை.....”

“என்ன உங்களை? ஏன் நிப்பாட்டீற்றீங்கள்? மிச்சத்தையும் சொல்லுங்கோ”

“இல்ல நான் சொல்ல மாட்டன்”

“பரவாயில்லை சொல்லுங்க”

“ஊஹும், நான் சொல்ல மாட்டன்”

“அய்! வெக்கத்தைப்பாரு. சும்மா சொல்லுங்க...”

“போங்கோ நீங்க. நான் இனி உங்களுக்கு ஒண்டுமே சொல்ல மாட்டன்”

தலையைத் திருப்பிக் கொண்டேன்.

“அச்சாப்பிள்ளை! என்ரை செல்லமெல்லா! எனக்குச் சொல்லுங்கவன்”

தன்கைகளிளால் என் முகத்தினைத் தன்னை நோக்கித் திருப்பினாள். இருவர் முகங்களும் நேரெதிரே மிகச்சிறிய இடைவெளியில்....... அவள் கண்கள் காந்தமாய் என்கண்களை ஈர்த்துக் கொண்டிருக்க வைத்தவிழி வாங்காமல் அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்

பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க
ஊனுருக உயிருருக .....


எனக்குள் ஏதோவெல்லாம் செய்தது, கண்கள் தாமாகவே தாழ்ந்தன.

இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின்
வடம் கொண்ட அல்குல் பணிமொழி வேதப் பரிபுரையே


ஒருவர் மூச்சுக்காற்று மற்றவர்மேல் உஷ்ணத்தை உண்டாக்கியது. இன்னும் விட்டால் எங்கள் கட்டுப்பாடுகள் தளர்ந்துவிடலாம் என்கின்ற விழிப்புணர்வு வர

திரும்பிக் கொண்டேன்.

“நாங்க கண்டியில சின்னதா engagement வைப்பமா?”

“உங்களை disturb பண்ணீற்றனா ஜேந்தன்? I'm sorry. நான் வேணுமெண்டு செய்யேல்ல”

“நான் சீரியசாத்தான் கேக்கிறன். எதுக்கு நாங்க wait பண்ணவேணும்”

“அம்மா செத்து ஒரு வருஷம் ஆனாப்பிறகுதானே...”

“இது அம்மா விரும்பின கல்யாணம். அதோட இன்னும் கொஞ்ச எங்கட நாளில வருஷப்பிறப்பும் வந்திரும். அதுக்குப்பிறகு செய்யலாம் தானே. சிலபேர் அப்படிச் செய்யிறவை”

“உங்கட விருப்பம் ஜேந்தன்”

“ஏன்? அப்ப உங்களுக்கு விருப்பமில்லையா?”

“என்ன கதைக்கிறீங்க நீங்க? நான் உங்களை உங்கட சொந்தக்காரர் ஏதும் சொல்லுவினமோ எண்டுதான் யோசிக்கிறன்”

“மற்றாக்களுக்காக நாங்க வாழேலாது. இது எங்கட வாழ்க்கை.. எங்கட விருப்பப்படிதான் நாங்க வாழவேணும். மற்றாக்களுக்கு இடைஞ்சல் இல்லாம இருந்தாச் சரி”

“அப்பிடியெண்டால் எனக்கு double OK.”

“சரி நதீஷா! அப்ப நாங்க இனி எங்கடபாட்டில நித்திரையைக் கொள்ளுவம்”

“ஏன்? உங்களுக்கு நித்திரை வருகுதா?”

“வரயில்லைத்தான். ஆனா இப்பிடி உங்களுக்குப் பக்கத்திலையிருந்து பார்த்துக்கொண்டிருந்தா ஏதும் தப்புத்தண்டா நடந்திருமோ எண்டு பயமாயிருக்கு”

“ஹலோ சேர், நீங்க இப்ப bus-க்குள்ளதான் இருக்கிறீங்க”

“எங்கட முதல்முத்தம் கூட சட்டப்படியான கல்யாணத்திற்கு பிறகு இருக்கிறதுதான் எனக்கு விருப்பம்”

“ஏன்? நான் உங்களை kiss பண்ணீருவன் எண்டு பயப்பிடுறீங்களா? இவ்வளவுநாளா என்னோட பழகி என்னைப்பற்றி நீங்க தெரிஞ்சுகொண்டது இவ்வளவு தானா?”

“Sorry நதீஷா. அம்மா மேல promise நான் உங்களைப் பற்றி அப்பிடி நினைக்கேல்லை. எனக்கு என்னிலைதான் நம்பிக்கை குறைஞ்சுகொண்டு போகுது”

“இவ்வளவுநாளும் ஒழுங்கா இருந்தனீங்கதானே. பிறகென்னத்துக்குப் பயப்பிடுறீங்க?”

“முந்தி நீங்க ஆரோ. ஆனா உங்கட கழுத்தில இந்தச் சங்கிலியப் போட்டாப்பிறகு எனக்கு நீங்க என்ரை wife ஆத்தான் தெரியுறீங்க. அதாலதான் என்னைக் control பண்ணேலாமப் போயிருமோ எண்டு சாடையாப் பயம் வந்திற்று. அஞ்சுவது அஞ்சாமை பேதமை எண்டு வள்ளுவரே சொல்லியிருக்கிறார்”

“Don't worry ஜேந்தன். நீங்க அப்பிடிச் செய்ய மாட்டீங்க. உங்களால உங்களைக் control பண்ணேலும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. anyway இப்ப நாங்க நித்திரையைக் கொள்ளுவம். பிறகு நாளைக்கு வேலைக்கும் போகவேணும்”


2002 April 24, அதுவொரு புதன் கிழமை. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அன்றைய நாள் காலை, எளிமையாக எங்கள் பதிவுத்திருமணம் நதீஷாவின் வீட்டில் நடைபெற்றது. மதிய உணவின் பின்னர். புனித தலதா மாளிகைக்குச் சென்று பௌத்த மதகுருமார்களிடம் ஆசிபெற்றுப் பின்னர் கட்டுக்கலைப் பிள்ளையார் கோவிலில் அருச்சனை செய்துவிட்டு குறிஞ்சிக்குமரனுக்குச் சென்று மாலைமாற்றிக் கொண்டு குருந்துவத்தையில் எனது இருப்பிடத்திற்குத் திரும்பினோம். வீடு எளிமையாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. தீபனும் வேறு சில நண்பர்களும் அங்கே எமக்காகக் காத்திருந்தனர்.

இரவ 07:30 மணியளவில் Devons-இலிருந்து இரவுணவு எடுத்துவரப்பட அனைவரும் ஒன்றாய் உணவருந்தினோம். அதன் பின்னர் மற்றவர்கள் யாவரும் விடைபெற்றுச் செல்ல நானும் நதீஷாவும் தனித்து விடப்பட்டோம்.

நதீஷா குளித்துவிட்டு வர நான் குளியலறைக்குச் சென்றேன். குளித்துவிட்டுவர வீட்டின் ஒரு மூலையில் விளக்கு வைத்திருந்தாள். நான் வந்ததும் என்னையும் அழைத்துச் சென்று அருகே நிற்கவைத்துவிட்டு விளக்கேற்றி வணங்கிவிட்டு என் காலில் விழப் போனவளைப் பதற்றத்துடன் தடுத்தேன்.

“இதென்ன நதீஷா? இதென்ன பழக்கம்?”

“ஏன்? இதில என்ன தப்பு?”

“என்ரை காலில விழுகிறீங்க? அப்பிடிச் செய்யாதீங்க சரியா?”

“உங்களுக்குப் பிடிக்கேல்லையெண்டா நான் இனிச் செய்யேல்ல. ஆனா எங்கட வழக்கப்படி நாங்க நல்லநாள் விஷேஷ நாள்களில பெரியாக்களின்ரை காலில விழுந்துதான் ஆசீர்வாதம் வாங்கிறனாங்க”

“தெரியும். நானும் சிங்கள ஆக்கள் கனபேரை அப்பிடிச் செய்யேக்க பார்த்திருக்கிறன். ஆனா நாங்க ரெண்டு பேரும் சமம். எங்களில ஒராள் பெரிசு இன்னொராள் சின்னனெண்டு இல்லை”

“OK. தங்கள் சித்தம் என் பாக்கியம்” சிரி்த்தாள். அள்ளி அணைத்துக் கொண்டேன்.

“room அங்கை ready பண்ணி வைச்சிருக்கு”

அறைக்குள் நுழைந்தோம்.

இதுதான் முதல் ராத்திரி
அன்புக்காதலி என்னை ஆதரி

தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு
.........

கைகளில் வாரி வழங்கிய பாரி
தந்தானோ நீ தந்த மாதிரி
இதழோ கொடி முந்திரி
அதில் தேன்துளி சிந்தும் பைங்கிளி






பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44 பாகம்-45 பாகம்-46 பாகம்-47 பாகம்-48 பாகம்-49 பாகம்-50 பாகம்-51

Friday, April 6, 2012

வேரென நீயிருந்தாய்...(51)

“சரி, இடம் வந்திற்றுது. இறங்குங்கோ!”

விழித்துப் பார்த்தேன். van சாட்டிக்கடற்கரையை அடைந்து விட்டிருந்தது. அங்கே அமைக்கப்பட்டிருந்த சிறிய மண்டபத்தினுள் நுழைந்தோம். அதை ஒழுங்குபடுத்தி பிண்டங்கள் செய்து ஆவாகனம் பண்ணிப் படைத்து திருப்பொற்சுண்ணம் படித்து, கொஞ்சமாய் வெம்பி, வெளித்தெரியாமல் அழுது முடித்து, எள்ளும் நீரும் இறைக்க நதீஷாவை அழைத்துப் பின் அனைத்தையும் எடுத்துச சென்று கடலினுள் கரைத்து அப்படியே மும்முறை மூழ்கி எழுந்து பின் ஆசுவாசமாக நீந்திவிட்டு வெளியே வந்தேன்.



தொண்ணூறுகளில் அப்பாவுடன் நீந்தியதற்குப் பிறகு இன்றுதான் சாட்டிக்கடலில் நீந்தியிருக்கின்றேன். நதீஷாவும் கடலினில் குளித்துவிட்டு உடைமாற்றி வந்ததும் மீண்டும் van- இல் கிளம்பினோம்.குருக்களுக்கு வேறொரு அந்திரெட்டியும் இருந்ததால் அவர் எங்களுடன் வரவில்லை.

“நதீஷா! இந்த இடம்தான் சாட்டி வெள்ளைக்கடற்கரை எண்டுறது. பாருங்க கடல் நிலம் எவ்வளவு clear ஆத் தெரியுதெண்டு. இதில கடலலையும் பெரிசா வாறேல்லை. நிலமும் நல்ல clear-ஆ இருக்கிறதால எல்லாரும் இந்த இடத்துக்குத்தான் குளிக்க வாறவை”

“ஓ! இதென்ன முன்னுக்கு? Mosque-ஆ? அப்ப இஞ்சை முஸ்லீம்ஸ்ம் இருக்கினமா?”

“ஓம் இது பள்ளிவாசல்தான். 90 க்கு முந்தி இஞ்சையும் கொஞ்ச முஸ்லீம்ஸ் இருந்தவை. பிறகு இயக்கம் முஸ்லீங்கள் எல்லாரையும் வெளியேறச் சொல்லேக்குள்ள அவையும் வெளியேறீற்றினம்.”

“அப்பிடி முஸ்லீம்ஸ்ஸை வெளியேற்றினது சரியா?”

“எப்பிடிச் சரியெண்டு சொல்லேலும்?”

“அப்பையேன் அப்பிடிச் செய்தவை?”

“அப்பிடிச் செய்தது பிழைதான். கிழக்கில சில முஸ்லீம் குழுக்கள் தமிழரைக் கொலை செய்தீச்சினம். பதிலுக்கு இயக்கமும் அங்கையிருக்கிற முஸ்லீம்களைக் கொலை செய்தீச்சினம். பழிக்குப் பழியெண்டு அது அங்கை கிழக்கில தொடரேக்குள்ள, இஞ்சையும் கொஞ்ச முஸ்லீம்ஸ் தமிழருக்கு எதிரா இயங்குகினம் எண்டு கேள்விப்பட்டு ஓட்டுமொத்த முஸ்லீம்களையும் கலைச்சுப் போட்டினம். ஒரு இனத்தில இருக்கிற கொஞ்சப்பேர் செய்யிற பிழைக்காக அந்த இனத்தையே கலைச்சது பிழைதான். அந்த மக்கள் என்ன பாவம் செய்தீச்சினம்? ஒரே நாளில தங்கட இடத்தைவிட்டு எங்கபோறது எண்டே தெரியாம வெளிக்கிட்டுப் போகேக்க அவைக்கு எப்பிடி இருந்திருக்கும்? பாருங்க அவை 1990 October 30 ஆம் திகதி ஒட்டுமொத்தமா தங்கட இடத்தை விட்டுப் போச்சினம். அதுக்குப் பிறகு சரியா அஞ்சு வருசம் கழிச்சு யாழ்ப்பாணம் வலிகாமத்தில இருந்த அத்தனை தமிழாக்களும் 1995 October 30 இல தங்கட இடங்களை விட்டு வெளியேறீச்சினம். தமிழரின்ரை நியாயமான இந்தப் போராட்டம் பயங்கரவாதமா வெளியுலகுக்குக் காட்டுப்படுறதுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமா அமைஞ்சிற்றுது.”

“ஓ! அப்ப வேறையென்னென்ன பிழை விட்டவை?”

“ஹலோ ஹலோ, சரி பிழை சொல்லுறதுக்கு எனக்கென்ன தகுதி இருக்கு? எனக்குச் சரியெண்டு படுகிறது இன்னொராளுக்குப் பிழையாத் தெரியும். அவருக்குச் சரியெண்டு தெரியிறது எனக்குப் பிழையாத் தெரியும். சரிபிழையெல்லாம் எங்கட எண்ணத்தைப் பொறுத்தது. இண்டைக்குச் சரியெண்டு தெரியிறதே சிலவேளையில நாளைக்குப் பிழையெண்டு தெரியும்.”

“விளங்குது. ஆனா வேறை என்னத்தை அவை செய்யாம விட்டிருக்கலாம் எண்டு நீங்க நினைக்கிறீங்க?”

“நீங்க சுத்திச்சுத்தி சுப்பற்ற கொல்லேக்குள்ள தான் வாறீங்க”

“உங்களுக்கு நான் என்ன கேக்கிறன் எண்டு விளங்குது தானே? அப்ப நேரேயே சொல்லுங்கவன்”

“ரஜீவ் காந்தியைக் கொலை செய்ததால அவைய பயங்கரவாதிகளெண்டு ஈசியா வெளிநாடுகளுக்குப் பிரச்சாரம் செய்யக்குடியதாயிருந்துது. அதோட இந்தியாவும் இந்தப் போராட்டத்தை முழுசா எதிர்க்கத் தொடங்கீற்றுது”

“ஏன் முந்தியே இந்தியா இயக்கத்துக்கு எதிரா சண்டை பிடிச்சதுதானே”

“இந்தியா செய்தது சரியெண்டு யாருமே சொல்லேலாது. அதுவும் அமைதிப்படையெண்டு சொல்லி வந்திற்று எத்தினை ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்களை அநியாயமாக் கொன்றது?. அது செய்தது முழுக்க முழுக்க அராஜகமும் அநியாயமும் தான். அதுக்குப் பழிக்குப்பழியாத் தான் ரஜீவைக் கொன்றிருப்பினம். ஆனா இந்தப் போராட்டம் என்னத்துக்காகத் தொடங்கப்பட்டது? அதை அடையிற வழியைத்தான் அவை யோசிச்சிருக்கவேணும். அதைவிட்டிட்டுப் பழிக்குப்பழி வாங்கிறதால என்ன பிரயோசனம்? வன்மம் தான் கூடிக்கொண்டு போகும். அப்பிடிப் பழிக்குப்பழி வாங்க வெளிக்கிட்டதுதான் நிறைய நாடுகள அவையைப் பயங்கரவாத இயக்கம் எண்டு சொல்லித் தடைசெய்யக் காரணமாப் போய்ற்றுது.”

“அப்ப ரஜீவை் காந்தியைக் கொலைசெய்திருக்காட்டி இந்தியா அவைக்கு help பண்ணியிருக்குமா?”

“கடைசி மட்டும் இந்திய அரசு உதவி செய்திருக்காது. அது இலங்கையில தமிழருக்கெண்டு ஒருநாடு வாறதுக்கு விடாது. அப்பிடி வந்தா தமிழ்நாட்டிலையும் பிரச்சினை வருமெண்டு அது பயப்பிடுது. ஆனா ரஜீவ்காந்தியைக் கொல்லாம விட்டிருந்தா தமிழ்நாட்டில எதிர்ப்பு வந்திருக்காது. அவையின்ரை support இருந்திருக்கும்”

“இப்பிடி இந்தியாவின்ரை எதிர்ப்பிருந்தும் அவை இந்தளவுக்கு வென்றிருக்கினம்தானே. பிறகென்னத்துக்கு இந்தியாவுக்குப் பயப்பிடவேணும்”

“வென்றிருக்கினம்தான். ஆனா ஆனையிறவைப்பிடிச்சவை ஏன் யாழ்ப்பாணத்தைப் பிடிக்கேல்லை. அப்ப சாவகச்சேரி, தனங்கிளப்பு எண்டு செம்மணிக்கு கி்ட்ட வரைக்கும் இடையால வந்து பிடிச்சுப் போட்டு ஏன் விட்டிட்டுப் போனவை?”

”ஏன்?”

“ஆமியை மீட்டுக் கொண்டு போறம் எண்ட சாட்டில இந்தியா ஆமி யாழப்பாணத்துக்கு வர ரெடியாகிற்றுது. அவையை வரவிட்டா பிறகு அவையைத் திரும்பிப் போகச் செய்யேலாது. அதோட ரஜீவ் காந்தியின்ரை கொலையைச் சாட்டாவைச்சு அலுப்பெடுக்கத் தொடங்கீருவாங்கள். அதாலைதான் யாழ்ப்பாணத்தைப் பிடிக்காம விட்டிருப்பினமெண்டு நினைக்கிறன்.”

“மச்சான் டேய்! முன்னால செக்பொயின்ற் வருகுது. கொஞ்சம் அமத்தி வாசிச்சுக் கொண்டு வாறீங்களா?”
உதயனின் குரலுக்கு அமைதியானோம்.

“ஜெயந்தன் டேய்! இப்ப பதிணொண்டரையாகுது. பன்னிரெண்டரைக்கு திண்ணைவேலி முத்துத்தம்பிப் பள்ளிக்கூடத்தில அம்மாவின்ரை பேரில மத்தியானச் சாப்பாட்டுக்கு ஒழுங்குபடுத்தியிருக்கு. நாங்க இப்ப நேரே அங்கபோனமெண்டாச் சரிதானே,”

“ஓமடா”

“அப்ப இவா என்ன மாதிரி? வழியில இறக்கிவிடவேணுமோ? இல்லாட்டி”

“இல்லையில்ல இவாவும் அங்க வரட்டும்”

“சரி!. அப்ப அண்ணே நீங்க van-ஐ நேர திண்ணைவேலிக்கு விடுங்கோ”


பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44 பாகம்-45 பாகம்-46 பாகம்-47 பாகம்-48 பாகம்-49 பாகம்-50

Thursday, April 5, 2012

வேரென நீயிருந்தாய்...(50)

எங்களுக்கிடையில் சிறிது மௌனம் நிலவியது. நதீஷா வீதியின் இரு பக்கமும் மாறிமாறி விடுப்புப் பார்த்தவாறே வந்தாள். சிறிதாகத் திறந்திருந்த ஜன்னலினுாடாக காற்று வந்து காதோரத்தை அறைந்து கொண்டிருந்தது. அதுகூட இதமாகத்தான் இருந்தது.

“அங்க! அதில தூரத்தில கோயில் மாதிரி ஒண்டு தெரியுது. ஆனா அதைச் சுற்றி ஒரு வீடுகளையும் காணேல்லை. ஏன் அப்ப அந்த வெளிக்குள்ள ஒரு கோயில் கட்டியிருக்கு?”

“அது கறுப்பாத்தை அம்மன் கோயில். அங்கால இன்னும் கொஞ்சம் தள்ளிப்போனா ஆக்களின்ரை வீடுகள் வரும். கோட்டைப்பிரச்சனைக்கு முதல் அங்க நிறைய ஆக்கள் இருந்தவை. ஆனா தொன்னூற்றியொண்டில இடம்பொயர்ந்துபோனாப் பிறகு இப்பை அங்கை ஆரும் இருக்கினமோ தெரியாது.”

“ஓ!”

“இஞ்ச முன்னாலையும் ஒரு கோயில் ஒண்டு வருகுது”

“அதுதான் மண்கும்பான் பிள்ளையார் கோயில். தொண்ணூறாம் ஆண்டு வரைக்கும் தேருக்கெல்லாம் நாங்க வாறனாங்க. சித்திரை வருஷப்பிறப்பண்டுதான் இஞ்சை தேர்த்திருவிழா நடக்கிறது. நிறைய சனம் வரும். கச்சான் கடைகள், மணிக்கடைகள், ஐஸ்கிறீம் வானுகள் எண்டு எங்களுக்கு அண்டைக்கு வேட்டைத் திருவிழாத்தான்.”

“மச்சான் டேய்! வங்களாவடியால போய்ப் போவமா அல்லது இதால திரும்பி வெள்ளைக்கடற்கரையால போவமா?” முன்னாலிருந்த உதயன் கேட்டான்.

“வங்களாவடியாலயே போவம். ஏனெண்டா வீட்டடியையும் பார்த்துக்கொண்டு போகலாம் தானே”

மண்கும்பான் பிள்ளையாருக்காக குறைந்திருந்த van-இன் வேகம் அதிகரித்தது.

“அதென்ன அஙக முன்னால தூரத்தில ஜங்சன் ஒண்டு தெரியுது. அதோட கடல்ப்பக்கமாகயும் றோட்டுப் போகுது. அங்காலயும் ஆக்கள் இருக்கினமா?”

“அதுதான் அராலிச்சந்தி. அங்கால போற றோட்டில போனா அராலித்துறை வரும் பிறகு அதிலயிருந்து boat-இல யாழ்ப்பாண அராலிக்குப் போகலாம்.கோட்டைப் பிரச்சினைக்கு நாங்கெல்லாம் இதால போய்த்தான் யாழ்ப்பாணம் போறனாங்க. இந்தப் பயணமும் கிட்டத்தட்ட கிளாலிப்பயணம் மாதிரித்தான். நிறையப் பேர் இதுக்குள்ளையும் செத்திருக்கினம். கிளாலில நேவி வந்து சுடும். ஆனா இதுக்குள்ளை ஹெலி வந்து சுடும். அதால கொஞ்சகாலத்துக்குப்பிறகு இதாலையும் இரவிலதான் பயணம் செய்யிறனாங்கள்.”

“ஓ!. இதுதுான் அந்த அராலியா? இஞ்சைதானே டென்சில் கொப்பேகடுவா செத்தது?”

“ஓமோம். இஞ்சை இதுக்குக்கிட்டத்தான் அது நடந்தது”

அது 1992ம் ஆண்டு August மாதம் 08ஆம் நாள். தீவகப் பகுதியிலிருந்து யாழ்நகரைக் கைப்பற்றுவதற்கான இறுதிநேர ஏற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக சிறிலங்காப் படையினரின் அப்போதைய வடமாகாணக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பே கடுவ, மற்றும்யாழ்மாவட்டப் படைத்தளபதி பிரிகேடியர் விஜய விமலரட்ண ஆகிய நட்சத்திரத் தளபதிகளுடன் ஏனைய முக்கியமான தளபதிகளும் வேலணை அராலித்துறைக்கு விஜயம் செய்துவிட்டுத் திரும்பும் வழியில் நிகழ்த்தப்பட்டவொரு நிலக்கண்ணிவெடித்தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து அந்தப் படைநடவடிக்கையும் கைவிடப்பட்டிருந்தது.

“உங்கட அப்பாவும்..........”

நதீஷாவின் வார்த்தைகள் சிந்தனையைக் கிளறின.

22 August 1990 வரை இந்திய ஆக்கிரமிப்புப் படைகளினதும் அப்போது அவர்களுடன் கைகோர்த்திருந்த தமிழ் துணைப்படைகளினதும் அராஜகங்களைத் தவிர்த்து நேரடி இராணுவத் தாக்குதல்களுக்குப் பெரிதாக முகம் கொடுத்திராத மக்களுக்கு அன்றைய தினம் எதிர்மாறாய் விடிந்திருந்தது. இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் காலத்தில் இயங்கிய தமிழ் இராணுவத்துணைக்குழுக்கள் தமிழ்த் தேசிய இராணுவம் என்கின்ற பெயரில் கட்டாய ஆட்சேர்ப்பில் இறங்கிப் பெருமளவிலான தமிழ் இளைஞர்களை பிடித்திருந்தன. பிள்ளைபிடிகாரர்கள் என்கின்ற காரணப் பெயருடன் வலம் வரும் அவர்களைக் கண்டால் சிறுவர்களாகிய நாங்களே ஓடிஒளிந்து விடுவோம். அப்படியானால் மீசை அரும்பிய இளைஞர்களின் நிலை?. தீவகப்பகுதியிலிருந்த பல இளைஞர்கள் புகையிலை ஏற்றிச்செல்லும் லொறிகளில் மநை்திருந்து இலங்கையின் தென்பகுதிகளுக்குத் தப்பிச் சென்றிருந்தனர். பிரேமதாச அவர்கள் சிறிலங்காவின் அதிபராகி இந்தியப்படைகள் வெளியேற்றப்பட்டதன் பின்னர். நிலமை சீராகியிருந்தாலும் மீண்டும் சமாதானம் சீர்குலையும் அறிகுறிகளே தென்பட்டன. இடையிடையே ஹமீது அவர்கள் பலாலிக்கு வந்து இயக்கத்துடன் நடாத்திய பேச்சுவார்த்தைகளும் பலனின்றிப் போக சண்டை மீண்டும் ஆரம்பித்து விட்டிருந்தது.

22 August 1990 இல் ஊர்காவற்றுறையில் தரையிறங்கி நிலை கொண்டிருந்த சிறிலங்காப் படையினர் இருநாட்கள் கழித்து 24 August 1990 அன்று அங்கிருந்து வடக்கு வீதி வழியாக கடற்கரையை அண்மித்த வெளிகளினுாடாகவும் ஊர்களினூடாகவும் முன்னேறி அல்லைப்பிட்டியை அடைந்திருந்தனர். அவர்கள் சென்றவழியெங்கும் ஏற்படுத்தியிருந்த கொடூரங்கள் சொல்லிமாளாதவை. 350 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்களை அவர்கள் கொன்று விட்டிருந்தனர். பெருமளவினோர் சுட்டும் வெட்டியும் குற்றுயிராக விடப்பட்டிருந்தனர். அவ்வாறு காயமடைந்தவர்களைப் தப்பியோடியிருந்த உறவினர்கள் பின்னர் வந்து மீட்டு புங்குடுதீவு வைத்தியசாலைகளில் அனுமதித்திருந்தனர். அதுமட்டுமன்றி அந்த இராணுவத்தினர் பலரைப் பணயக்கைதிகளாக்கித் தங்களுடன் அழைத்துச் சென்றிருந்தனர். எங்ளைப் பாதுகாப்பாக அனுப்பிவிட்டு முக்கியான பொருட்களை எடுத்துவருவதாகச் சொல்லிச் சென்றிருந்த அப்பாவைக் காணாமல் தவித்த எங்களுக்கு, சில நாட்களின் பின்னர் சந்தித்த தெரிந்தவர் ஒருவர் அப்பாவை மண்டைதீவில் வைத்து ஹெலியில் ஜட்டியுடன் ஏற்றியதைத் தான் கண்டதாகக் கூறியிருந்தார் அதன்பின்னர் இன்றுவரை அப்பாவைப்பற்றிய எந்தவொரு தகவல்களும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அவரைத் தேடித்திரிந்த நவீன காலத்து சாவித்திரியான அம்மாவும், (அம்மா மட்டுமா அம்மாவைப் போல் எத்தனையாயிரம் பெண்கள் தங்கள் கணவர்களையும் பிள்ளைகளையும் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்) போய்ச் சேர்ந்து இதோ இன்றைக்கு அந்திரெட்டிக்காக அவரின் சாம்பலைக் கரைப்பதற்காக சாட்டிக்குச் சென்று கொண்டிருக்கின்றேன். அக்காவுக்கும் அம்மாவுக்கும் அவர்களின் பிதிர்க்கடன்கனைச் செலுத்தலாம். அப்பாவுக்கு என்ன செய்வது? மரணத்திலும் கொடிது மறக்கப்படுவது என்பார்கள். அதனிலும் கொடிது மறைக்கப்படுதல்.

ஔவையாரும் முருகனும் இருந்திருந்து இப்போது இங்கே சந்தித்து முருகன் ஔவையாரிடம் எது கொடிது என்று கேட்டிருந்தால்.

கொடிது கொடிது வறுமை கொடிது;
அதனினும் கொடிது இளமையில் வறுமை;
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்;
அதனினும் கொடிது அன்புஇலாப் பெண்டிர்;
அதனினும் கொடிது இன்புற
அவர்கையில் உண்பதுதானே

என்றிருக்க மாட்டார் மாறாக

கொடிது கொடிது மரணம் கொடிது
அதனினும் கொடிது மறக்கப் படுதல்
அதனினும் கொடுது மறைக்கப் படுதல் தானே.

என மூன்று வரியிலேயே முடித்திருப்பார்

“I'm sorry ஜேந்தன். அப்பாவை ஞாபகப்படுத்தீற்றனா?”

“இல்லையில்ல நான் OK”

“அப்பையேன் உங்கடமுகம் ஒருமாதிரி இருக்கு?”

“இல்லை வீடும் கிட்டவரப் பழைய நினைவுகள் வந்திற்றுது. ஆனா நான் OK”

“Sorry ஜேந்தன்”

“என்ன நீங்க? சும்மா சும்மா sorry சொல்லிக் கொண்டு? நீங்க என்ன செய்தனீங்க? நான்தான் உங்களைப் பற்றி நினைக்காம பழைய நினைவுகளில இருந்திற்றன். இந்தா அராலிச்சந்திக்கு வந்திற்றம். இதால அப்பிடியே நேரே போனா ஊர்காவற்றுறைக்குப் போகலாம். இதை வடக்கு றோட் எண்டு சொல்லுறது. பிறகு அங்கையிருந்து அப்பிடியே boat-இல காரைநகருக்கம் போகலாம். முந்தி Ferry service எல்லாம் இருந்தது. சண்டையோட அது நிண்டிட்டுது. இப்பிடியே வலது பக்கம் திரும்பினா முதலே சொன்னது போல அராலித்துறைக்குப் போகலாம். நாங்க இப்ப இடது பக்கம் திரும்பிறம். இதால போனா வேலணை வரும் முந்தியெண்டா பிறகு அங்கையிருந்து புளியங்கூடல் வழியாவும் ஊர்காவற்றுறைக்குப் போகலாம். சுருவில் வழியாவும் போகலாம். ஆனா இப்ப வேலணை central college அடியெல்லாம் camps இருக்கிறதால சுத்திச் சுருவலால தான் போகேலும். அதோட சுருவிலுக்குப் போகாம நேரே போனா அப்பிடியே புங்குடுதீவுக்குப் பாலத்தால போகலாம். பிறகு அங்கையிருந்து boat இல நயினாதீவு நெடுந்தீவு எண்டு மற்றத் தீவுகளுக்கும் போகலாம்”

நதீஷா சிரித்தாள்.

“நல்லா கதையை மாத்துவீங்க என? சரி இதென்ன இப்ப ஒரு சின்னக் கோயிலொண்டு போய்ச்சுது?”

“அது அதிசய வைரவர் கோயில்”

இப்போது van மணியாறன் வீட்டடியை நெருங்கிவிட்டிருக்க,

“நதீஷா! இந்தா இந்த வலது பக்கம் போற ஒழுங்கைக்குள்ளதான் எங்கட வீடு இருந்தது”

“அப்ப திரும்பிப் போகேக்க அங்க போயிற்றுப் போவமா?”

“வேண்டாம். இப்ப அதெல்லாம் ஒரே பத்தைக்காடாக் கிடக்கும். van-இலையும் போகேலுமோ தெரியாது. அதோட போகேக்குள்ள வேறை பாதையால போவம்”

“சரி உங்கட விருப்பம்”

“இல்லை. உங்களுக்கு இடங்கள் காட்டிறதுக்காகத்தான் மற்றப் பாதையால போவம் எண்டனான். அப்பிடியே வெள்ளைக்கடற்கரையடியால மண்கும்பானுக்குப் போய்ப் போகலாம்.”

“சரி, இஞ்சால நிறைய ஆக்கள் இருந்திருக்கினம் போல. ஒரே வீடுகளாகக் கிடக்கு?”

“ஓமோம். இன்னும் கொஞ்சத்தூரம் போக வங்களாடிவச் சந்தி வந்திரும்.அதிலயிருந்து தான் புங்குடுதீவுக்குப் போற றோட்டும் ஊர்காவற்றுறைக்குப் போற றோட்டும் பிரியிறது.”

“நதீஷா! இந்தப் பக்கம் இந்த வீட்டைப் பாருங்களன். இஞ்சை தான் நான் ஞானம் ரீச்சரிட்ட நேசறி படிச்சனான். அவா இப்பையும் இஞ்சதான் இருக்கிறாவாம்”

“ஓ! அதென்ன முன்னால இன்னொரு கோயில் தெரியுது? இஞசாலையெல்லாம் நிறையக் கோயில்கள் என?”

“ஓமோம்! இது வங்களாவடி முருகன் கோயில். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் எண்டு பழமொழியே இருக்கு. அதால சைவக்காரர் இருக்கிற எல்லா இடங்களிலையும் நிறைய கோயில்கள் இருக்கும்”

“அதேன் இந்தக் கோயில் மட்டும் வித்தியாசமாயிருக்கு?”

“ஏன் என்ன வித்தியாசம்?”

“இல்ல நான் பார்த்த எல்லாக் கோயில்களிலையும் முன்னால ஒருவாசல்தான் இருக்கும். சாமி சிலைகள் எல்லாம் உள்ளுக்க இருக்கும். ஆனா இந்தக் கோயிலில முன்னால இன்னொரு சின்னக்கோயில் மாதிரி கட்டியிருக்கு”

“ஓ! அதுவா? அது வைரவர். முந்தி இதில ஒரு சின்ன வைரவர் கோயில்தான் இருந்தது. ஊராக்களெல்லாம் சித்திரைக் கஞ்சிக்கு இஞ்சைவந்து படைக்கிறவை. ஒருமுறை ஒராளுக்குக் முருகன் கலை வந்து இன்னொராளுக்கு வைரவர் கலைவந்து தாங்கதான் இதிலை இருக்கப்போறமெண்டு ரெண்டு பேரும் சண்டைபிடிச்சு, பிறகு ரெண்டுபேரும் சேர்ந்திருப்பமெண்டு தங்களுக்குள்ளை சமாதானமாகிற்றினமாம். அதுக்குப்பிறகுதான் சனம் முருகன் கோயிலை இதில கட்டினது. அதால அந்தக் கோயிலில ரெண்டு வைரவர். மற்றக் கோயில்களில இருக்கிறமாதிரி உள்ளுக்குள்ளை ஒரு வைரவரும் முந்தியிருந்த வைரவருக்காக வெளியால ஒரு சின்னக் கொட்டிலும் போட்டிருக்கு”

“ஓ OK OK"

வேலணை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கடையடியில் van-ஐ சிறிது நேரம் தரித்து நிற்கச் சொல்லிவிட்டு உதயன் அந்திரெட்டி செய்யும் ஐயரை அழைத்துவருவதாகக் கூறிச் சென்றான்.

“இந்தப் பள்ளிக்கூடத்திலதான் நான் நாலாம் வகுப்பு வரைக்கும் படிச்சனான்.”

முன்னாலிருந்த வேலணை. சரஸ்வதி வித்தியாலயத்தை அவளுக்குக் காட்டினேன். ஏனோ தெரியவில்லை என் சின்ன வயதுக் கதைகளை என்சம்பந்தப்பட்ட இடங்களை நதீஷாவிடம் பகிர்வதில் மனம் அதீத சந்தோஷம் அடைந்து கொண்டிருந்தது.

“அப்பப் பிறகு எங்கை படிச்சனீங்க?”

“91 இல இடம்பெயருற வரைக்கும் வேலணை சென்றலில. ஆனா இப்ப அது security zone-ஆ இருக்கிறதால நாங்க அங்கை போகேல்லாது”

“இஞ்சே அந்தா. அதிலயொரு புளியமரம் தெரியுதெல்லா. அதுக்குக்கீழ முந்தியொரு வயதுபோன ஒராள் பெட்டிக்கடை வைச்சிருந்தவர். அப்பாக்குத் தெரியாம களவாப் போய் புளுட்டோ இனிப்பெல்லாம் அவரிட்டைத்தான் வாங்கிறனாங்க. அதோட முந்தி சின்னனில இன்னொரு ரொபியும் வாங்கிறனாங்க, அதுக்குள்ள நல்லநல்ல வடிவான stickers வரும் எண்டதால”

“ம்ம்ம்...அப்ப சின்னனில நிறைய களவெல்லாம் செய்திருக்கிறீங்க போல...”

“அப்பிடியெண்டில்ல. அப்பாவின்ரை கடை றோட்டுக்கு இந்தப் பக்கம் இருந்தது. அப்பா பல்லுச் சூத்தையாகிப் போயிருமெண்டு இனிப்பு ரொபியொண்டும் சாப்பிட விடமாட்டேர். அதாலதான் அம்மா தாற காசில பெடியளோட களவாய்ப் போய் வாங்கிறனான்”

“இந்தா நேரே முன்னுக்குத் தெரியுது. முந்தி இதில library இருந்தது. அதோட சேர்ந்து ஆயுர்வேத ஆஸ்பத்திரி இருந்தது. சும்மா வருத்தமெண்டு பொய்சொல்லி இஞ்சை வந்த கோரோசனை வேண்டுறனான். எனக்கு அது விருப்பம். VC, court, police station எல்லாம் இந்த வளவுக்குள்ள தான் இருந்தது. இந்தத் தேவா அரங்கு இப்பதான் வந்திருக்கு.”

“எல்லாம் சொல்லீற்றீங்க. அப்ப hospital இஞ்சை இருக்கேல்லையா?”

“நல்ல கதை. அது இப்பிடியே அந்தப் புளியடியால திரும்பினாத் தெரியும். புளியமரத்துக்குப் பின்னால AGA office இருக்குது.”

“அப்ப நீங்க ஒருக்காவும் அந்தக் hospital-க்குப் போனதில்லையா?”

“சைக்கிளால விழுந்து வாற காயங்களுக்கு மருந்துகட்ட அங்கதான் போறனான். சண்டை நடக்கேக்குள்ளை திருநாவுக்கரசு எண்டு ஒரு டொக்ரர் இருந்தவர். அவர்அப்ப bunger-க்குள்ளை வைச்சே பிள்ளைப்பேறெல்லாம் பார்த்தவராம்”

“ஓ! அப்ப உங்களுக்கு வேலணையில வந்திருக்க விருப்பமா?”

“ஆருக்குத்தான் பிறந்த .இடத்தில இருக்கப் பிடிக்காது? சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா எண்ட பாட்டுக் கேள்விப்படேல்லையா?”

“அப்ப நாங்களும் இஞ்சையே வந்திருப்பமா?”

“நதீஷா! நாங்க அடிக்கடி வந்து போகலாம். ஆனா இஞ்சையே நிரந்தரமா இருக்கிறதெண்டது ரெண்டுபேருக்கும் கஷ்ரமாத்தான் இருக்கும்”

“ஏன் அப்படிச் சொல்லுறீங்க?”

“யோசிச்சுப் பாருங்க. எதுக்கா எல்லாருக்குமே பிறந்த இடத்தில பற்று பாசம் எல்லாம் வருகுது?”

“ஏன்?”

“ஏனெண்டா அதுதான் நாங்க.”

“நீங்க என்ன சொல்லுறீங்க?”

“நான் எண்டு நாங்க என்னத்தைச் சொல்லுறம்? இந்த உடம்பையா? அப்பிடியெண்டா சினனனில இருந்த அதே உடம்பா இப்ப இருக்கிற இந்த உடம்பு? இல்லையே. விஞ்ஞானரீதியா உடலில இருக்கிற எல்லாக் கலங்களும் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டுதானே இருக்கு. அதோட ஆக்கள் செத்தாப்பிறகும் அவையின்ரை உடம்பு இருக்குத்தானே”

“அப்ப என்னத்தை நான் எண்டு சொல்லுறது? எங்கட எண்ணங்களையா?”

“எப்பிடி உடம்பில்லாம நாங்க இருக்கமுடியாதோ அப்பிடித்தான் மனம் எண்டு ஒண்டில்லாமலும் நாங்க இருக்கேலாது எண்டுதான் நான் நினைக்கிறன். அதோட உடம்பிலும் விட மனசுதான் நாங்க யாரு எண்டுறதை தீர்மானிக்குது. ஆனா எனக்குத்தெரிஞ்ச ஒராள் அடிபாடு ஒண்டுக்குள்ள அம்பிட்டு மயங்கிவீழந்து ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகி பிறகு அவருக்கு நினைவெல்லாம் தப்பி அவர் தான் ஆரெண்டதையே மறந்து போய் சரியாக் கஷ்ரப்பட்டுக் கொண்டிருந்தவர். அவற்றை நினைவுகள் எல்லாம் அழிஞ்சாப்பிறகும் தான் ஆரெண்டே தெரியாம அவர் உயிரோடதான் வாழ்ந்தவர் எண்டா எண்ணங்கள் தான் நாங்க எண்டு எப்பிடிச் சொல்லுறது?”

“நீங்க என்ன சொல்ல வந்தனீங்க. இப்ப என்ன சொல்லுறீங்க.”

“ம் கதையில நான் வேறை எங்கையோ போய்ற்றன். நான் என்ன சொல்ல வந்தனானெண்டா, சின்னவயசிலதான் நாங்க ஒவ்வொண்டையும் அறியத் தொடங்குகிறம். எல்லாருக்கும் அவையின்ரை அம்மாவையின்ரை சாப்பாடுதானே நல்ல ருசியாத் தெரியும். ஏன் அப்பிடி? ஏனெண்டா அதுதான் அவை முதன்முதலா விரும்பிச்சாப்பிட்ட சாப்பாடு. அந்த முதல் அனுபவத்தை மூளை மறக்காது. பிறகு வாற அது சம்பந்தமான ஒவ்வொரு அனுபவத்தையும் மூளை அந்த முதலாவது அனுபவத்தோட ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கீரும். முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்கமுடியாது எண்டுவினம். அதுகளை மட்டுமல்ல. எல்லா முதல் அனுபவங்களையும் மறக்கேலாதுதுான். எங்கட வாழ்க்கையில நடக்கிற பெரும்பாலான சம்பவங்களின் முதல் அனுபவம் சின்ன வயசிலதான் எங்களுக்குக் கிடைக்குது. அதாலதான் சின்னவயசில வளர்ந்த இடத்தில எல்லாருக்கும் ஒரு பற்று வாறது.”

“நீங்க என்ன சொல்ல வாறீங்க? அப்ப உங்களுக்கு இனி இஞ்சையிருக்க விருப்பமில்லையா?”

“அப்பிடியில்லை நதீஷா. நான் என்ன சொல்லுறன் எண்டா சின்ன வயசில அனுபவிச்ச அதே உணர்வுகளை இப்பவும் அனுபவிக்கவேணுமெண்டு ஆசையாத்தான் இருக்கு. ஆனா எதிர்பார்க்கின்ற அந்த உணர்வுகள் இனித்திரும்பிக் கிடைக்காது எண்டதுதான் உண்மை.”

“ஏன் அப்பிடிச் சொல்லுறீங்க?”

“யோசிச்சுப் பாருங்க? அதே சின்னவயசு அனுபவங்களை எனக்குத் தரவோ ஞாபகப்படுத்தவோ இப்பை இந்த இடங்களை விட்டா மனிசர் எண்டு ஆரு இருக்கினம்? சொந்தக்காரரோ ஊராக்களோ ஒருத்தரும் இஞ்சையில்லை. கொஞ்சப்பேர் சண்டையால செத்துப் போய்ற்றினம். அரைவாசிப்பேருக்கு மேல பிரச்சினைகளோட வெளிநாடுகளுக்குப் போய் அங்கையே செற்றிலாகீற்றினம். மிஞ்சின ஆக்களும் யாழ்ப்பாணம் வவுனியா கொழும்பெண்டு போயிற்றினம். அப்ப இந்த நிலத்தையும் கட்டிடங்களையும் விட்டா ஊரெண்டு சொல்லிப் பாசம் வைக்க ஆரு இருக்கினம்? ஊரெண்டிறது வெறும் நிலத்தை மட்டுமில்ல அங்கையிருக்கிற மக்களையும் சேர்த்துத்தான். மக்களே இல்லாமப் போனாப்பிறகு...?”

“அப்ப இப்ப உங்களுக்கு உங்கட ஊரில வெறுப்பு வருதா?”

“ம்ம்ம்...என்ன சொல்லுறீங்க நதீஷா? சொந்தஊரில வெறுப்பு வருமா? சொந்த ஊர் மேல இருக்கிற பாசம்தான் போகுமா? நான் செத்தாலும் எனக்கு என்ரை ஊரில வெறுப்பு வராது. நான் என்ன சொல்லுறன் எண்டா இதில்லை என்ரை நினைவுகள் வாழத்துடிக்கின்ற ஊர். அந்த ஊர் எப்பவோ அழிக்கப்பட்டு விட்டது எண்டதுதான் உண்மை. ஆனா அந்த நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுறதுக்கு இது தேவை.”

“அண்ணே! van-ஐ எடுங்கோ. வெளிக்கிடுவம்.”

நதீஷாவுடனான உரையாடலில் உதயனும் ஐயரும் வந்துவிட்டிருந்ததைக் கவனிக்கத் தவறியிருந்தேன்.

van கிளம்பி புளியடியால் திரும்பி ஆஸ்பத்திரி தாண்டிச் சென்று கொண்டிருக்க எங்களுக்குள் மௌனம் வந்து குந்திக்கொண்டது. நதீஷா இருபுறமும் தன் பார்வையைச் செலுத்திக் கொண்டே வந்தாள். அவளுக்கு இவையெல்லாம் புதிது. மலைநாட்டில் பிறந்து வளர்ந்த அவளுக்கு பார்க்குமிடமெங்கினும் சமதரையாகக் கிடக்கும் பிரதேசங்கள் வித்தியாசமாகவே தெரியும். அவளைக்குழப்பாமல் நான் சற்றே கண்களை மூடிக் கொண்டேன்.




பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44 பாகம்-45 பாகம்-46 பாகம்-47 பாகம்-48 பாகம்-49

Wednesday, March 28, 2012

வேரென நீயிருந்தாய்...(49)

காலை விடிந்துவிட்டிருந்தது. எழுந்து காலைக்கடன்களை முடிக்கையில் உதயனும் வந்து விட்டிருந்தான். அவன் தான் இங்கே அம்மாவின் அந்திரெட்டிக்கிரியைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருப்பவன்.

“மச்சான் டேய்! இன்னும் பத்து நிமிசத்தில van வந்திரும். என்னமாதிரி ரீ ஏதும் குடிச்சிற்று வரப்போறியோ இல்லாட்டி போகேக்கை வழியில ரவுணுக்க குடிச்சிற்றுப் போவமா?”

“இல்லடா. இண்டைக்கு விரதம்தானே. எல்லாத்தையும் முடிச்சிற்றுக் குடிப்பம்.”

“ஐயருக்கு அங்க வேலணையிலயே ஒழுங்கு படுத்தியிருக்கு. சாமான்களெல்லாம் எங்கட வீட்டில கிடக்கு. அப்பிடியே போற வழியில அதையும் ஏத்திக்கொண்டு பாட்டுப்படிக்கிற ஆளையும் மற்றவரையும் ஏத்திக்கொண்டு போவம் என.”

“அதோட நதீஷாவும் வரும்”

“அதாரு நதீஷா?”

“அது தான் என்ரை wife ஆ வரப்போறவா?”

“இப்ப ஆள் எங்க? இதைப்பற்றி நீ முதல்ல ஒண்டும் சொல்லேல்லையே”

“அதெல்லாம் பிறகு ஆறுதலாச் சொல்லுறன். அந்தா van ஒண்டு பள்ளேக்கை (படலைக்குள்ள) நிக்குதுபோல. அதுவா நாங்க போற van?"

“ஓமடா van வந்திற்றுது. அப்ப வெளிக்கிடு போவம்.”

வாகனத்தில் புறப்பட்டு அந்திரெட்டிக்குத் தேவையான பொருட்களையும் மற்றைய இருவரையும் ஏற்றிக் கொண்டு ஆரியகுளம் சந்திக்குச் சென்றோம். அங்கே நதீஷா ஏற்கனவே தயாராக இருக்கவே அவளையும் ஏற்றிக்கொண்டு ஸ்ரான்லி வீதியூடாகச் சென்று மிட்டாய்கடைச்சந்தியில் காங்கேசன்துறை வீதியைப்பிடித்து சத்திரச்சந்தியை அடைய முன்னே முற்றவெளிக்குள்ளால் கோட்டை தெரிந்தது.

“அந்தா! அதுதான் jaffna fort"

நதீஷாவிற்கு காட்டினேன்.

“கிட்ட போகலாமா?”

“உள்ளுக்குள்ள போகேலாது. ஆனா அதுக்குக் கிட்டவாத்தான் இப்ப போகப்போறம்.”

van முற்றவெளிக்கு அண்மையில் வந்து வலதுபுறமாய்த் திரும்ப அந்தப் பாரிய தொலைத்தொடர்பு கோபுரம் கண்ணில் பட்டது.

“இந்தா telecom tower இருக்குத்தானே. அப்ப ஏன் இஞ்ச dialog-இன்ரை coverage இல்லாம இருக்கு?”

“இது அந்தக்காலத்தில இருந்தே இருக்குது. எப்பிடியும் இன்னும் கொஞ்ச காலம் போக இஞ்சையும் coverage வந்திரும்.”

இப்போது van பண்ணையை அடைந்து விட்டிருக்க, கோட்டையின் ஒருபகுதி தெளிவாகத் தென்பட்டது.

“திலீபன்ரை death aniversary அண்டுதானே இதை எல்ரீரி பிடிச்சது?”

“ஓம்! 1990 ஆம் ஆண்டில. பிறகு தொண்ணூற்றைஞ்சில ஆமி யாழ்ப்பாணத்தப் பிடிக்கேக்க கோட்டையும் போய்ற்றுது”

அது 1990 ஆம் ஆண்டு காலப்பகுதி, யாழ்கோட்டையின் முற்றுகையை உடைக்க தீவுப்புகுதியினூடாக நரவேட்டையாடியவாறே மண்டைதீவினை அடைந்திருந்த சிறிலங்காப்படையினர், அதன்பின்னர் கோட்டையினை மீட்பற்கு மேற்கொண்ட முயற்சியில் ஒரு தொகுதிப்படையினர் கோட்டையினுள் சென்று விட்டிருந்தாலும், கோட்டையை தொடர்ந்து தக்கவைத்திருக்க முடியாமு என்பதனை உணர்ந்திருந்தனர். மேலும் திலீபனின் நினைவுநாளன்று மீண்டும் கோட்டையைக் கைப்பற்ற இயக்கம் நடவடிக்கை எடுக்க இருப்பதனை அறிந்து முதல்நாள் இரவே கோட்டையை விட்டு வெளியேறி மண்டைதீவை அடைய திலீபனின் மூன்றாவது நினைவுநாளான 26 september 1990 அன்று யாழ் கோட்டையில் புலிக்கொடி ஏறியது.

“இந்தக் கோட்டையில் என்று புலிக்கொடி பறக்கிறதோ, அன்றுதான் எமக்கு விடிவு. அன்றுதான் எமக்கு சுதந்திரம்.” என்ற திலீபனின் கனவு, யாழ்நகர மக்களைப்

பொறுத்தவரை மெய்ப்பட்டது. இந்தக் கோட்டையில் இருந்து வந்த எறிகணைகளால் ஏற்பட்ட அழிவுகள் எத்தனை? சிறிலங்காப்படைகள் மட்டுமா? அமைதிப்புறா வேடமணிந்து வந்திருந்த வல்லுறுகள், வைத்தியசாலையையே துவம்சம் செய்திருந்தன. காந்தி தேசத்தின் அகிம்சாவாத முகமூடியினை திலீபன் கிழித்தெறிந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே 10 October 1987 அன்று இந்தக் கோட்டையிலிருந்து வந்த இந்தியப்படைகள் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து அங்கு கடமையிலிருந்த வைத்தியர்கள், ஊழியர்கள், நோயாளிகள் என் சுமார் அறுபது வரையலான அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்து கொன்றுகுவித்திருந்தன.

“கட்டிய ஒக்கம கொஹேத யன்னே?” (எல்லாரும் எங்க போறீங்க?)

-பண்ணை சோதனைச்சாவடியிலிருந்த படையினனின் கேள்வியில் சிந்தனை கலைந்தது.

“வேலணைட்ட யனவா” (வேலணைக்குப் போறம்)
முன்னாலிருந்த உதயன் பதிலளித்தான்.

வாகனத்திற்குள்ளால் எல்லாரையும் எட்டிப்பார்த்துத் திருப்தியுற்ற பின்னர் வாகனத்தைத் தொடர்ந்து செல்ல அனுமதித்தான். இப்போது van பண்ணை வீதிவழியே பயணத்தை ஆரம்பித்தது. இரு புறமும் கடலிருக்க அதன்நடுவே அமைந்திருந்த சிதைவடைந்த வீதியினூடாக நாங்கள் பயணிக்கலானோம்.

சங்கிலிப்பாலத்தைக் கடந்து மண்டைதீவுச்சந்தியில் போடப்பட்டிருந்த வேகக்குறைப்புத் தடைகளையும் தாண்டிய பின்னர் van இப்போது ஓரளவிற்கு வேகம் எடுத்திருந்தது. வீதியின் இருமருங்கும் பார்வையைச் செலுத்தலானேன். கடல்நீர் வீதியின் இடது புறத்திலிருந்து வலதுபுறம் நோக்கி 'போக்கு'-களினுாடாகவும் பாலத்தினுாடாகவும் பாய்ந்து கொண்டிருந்தது.

“ஏன் கடல் இப்பிடி இந்தப் பக்கம் தண்ணி கூடவாவும் மற்றப்பக்கம் குறைவாவும் இருக்கு? தண்ணி எப்பவும் இந்தப்பக்கம் தான் ஓடுமா?”
- ஆச்சரியத்துடன் கேட்டாள் நதீஷா.

“இது இப்பிடித்தான். ரெண்டு பக்கமும் மாறிமாறி ஓடிக்கொண்டிருக்கும். காலமையில இந்தப்பக்கம் ஓடிச்சுது எண்டா பின்னேரம் மற்றப்பக்கம் ஓடும்.”

“அப்ப எப்பவுமே காலமையில இந்தப்பக்கத்திலயிருந்துதான் ஓடுமா?”

“இல்லையில்லை. வடிவாத் தெரியாது. நான் நினைக்கிறன் சந்திரன் இருக்கிற பக்கத்துக்கு தான் கடல்தண்ணி ஓடிக்கொண்டிருக்கும். பௌர்ணமிக்கு கடல் பொங்கிறதுக்குக் காரணம் சந்திரனின்ர ஈர்ப்புவிசை எண்டு சொல்லுறவை. இதுவும் அதாலையாத்தான் இருக்கும்”

“ம்ம்... இதுதான் இலங்கையில ஆக நீளமான பாலமாயிருக்கும். என?”

“இதில்ல. புங்குடுதீவுப்பாலம் தான் ஆக நீளம் கூடினது”

இப்போது நாங்கள் அல்லைப்பிட்டியை நெருங்கிக் கொண்டிருந்தோம்

“ஓ! ஆ! அதென்ன பெரிய building ஒண்டு இடிஞ்சு கிடக்கு?“

“அதுதான் அல்லைப்பிட்டி அலுமினியம் factory”

“அப்ப அது இப்ப இல்லையா?”

“எனக்குத் தெரிஞ்சு இது ஒருக்காவும் இயங்கேல்லை. நாங்க சரியான சின்னனா இருக்கேக்கை இயங்கினதாம். பிறகு சண்டை தொடங்கினாப்பிறகு மூடுப்பட்டிட்டுது”

அல்லைப்பிட்டிச்சந்தியிலுிருந்த சோதனைச்சாவடியைத் தாண்டி பயணித்துக் கொண்டிருந்தோம். இருபுறமும் வெட்டவெளிகள். வலது பக்கம் தூரத்தே கடல் தெரிந்தது.

“இந்த இடங்களில ஒருத்தரும் விவசாயம் செய்யிறதில்லையா?”

“மாரி காலத்தில றோட்டடுக்கு ரெண்டு பக்கமும் சரியான வெள்ளம் நிக்கும். அதோட கடல் தண்ணியும் கலக்கிறதால இந்த இடமெல்லாம் உவர் நிலமா மாறிற்றுது. அதால இந்த இடங்களில பயிர் ஒண்டும் செய்யேலாது”

“அப்ப கடலை மறிச்சு அணைகட்டினா கொஞ்ச காலத்துக்குப் பிறகு பயிர் செய்யலாம் தானே. அதோட நன்னீரும் உள்ளுக்குள்ளை நிக்கிறதால அந்தத் தண்ணிய பிறகு பயிர்ச்செய்கைக்குப் பாவிக்கலாம் தானே”

“பூனைக்கு ஆரு மணி கட்டிறதெண்ட மாதிரி இது இப்பிடியே கிடக்கு. முந்தியும் இந்த நன்னீர் சேமிப்புப் பற்றி கனபேர் ஐடியாக்கள் எல்லாம் போட்டவைதான். ஆனா சண்டை நடக்கிறதாலயோ என்னவோ பிறகு அதைப்பற்றி ஒருத்தரும் கதைக்கறேல்ல.”



பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44 பாகம்-45 பாகம்-46 பாகம்-47 பாகம்-48

Tuesday, March 27, 2012

வேரென நீயிருந்தாய்...(48)

“ஜேந்தன் எழும்புங்க!”

நதீஷா என்னைத் தட்டி எழுப்பவே விழித்துப் பார்த்தேன். பேரூந்து முகமாலையை அடைந்து விட்டிருந்தது. இறங்கிச் சென்று எங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் மீண்டும் பேரூந்தில் ஏறிக்கொண்டோம். இப்போது பேரூந்து இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளிருந்து சிறிலங்காப் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்தது. மறுபடியும் அங்கே எங்களைப் பதிந்துவிட்டு யாழ்நகர் நோக்கிச் செல்லும் சிற்றூர்தியினுள் ஏறிக்கொண்டோம். மாலைநேரம் நெருங்கிக்கொண்டிருந்ததால் பயணிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்பட்டது. இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம்.

நதீஷா மிகவும் களைத்துப் போயிருந்தாள். பேரூந்து புறப்பட நேரமாகுமென்பதால் அருகிலிருந்த சிற்றுண்டிக்கடைக்குள் நுழைந்து நெக்ரோவும் மலிபன் 'கிறீம் கிறேக்கர் விஸ்கற்'-றும் வாங்கிவந்து இருவரும் பசியாறிக்கொண்டோம். வரும்வழியில் நான் தூங்கிவிட்டிருந்ததால் இப்போது தெம்புடன் இருந்தேன். அவளோ மிகவும் களைத்துப்போயிருந்தள். அவள் தலையை என் தோளிற் சாயவைத்து அவளை உறங்கச் சொன்னேன். கண்களை மூடிக்கொண்டாள். நானும் கண்களை மூடிக் கொண்டேன்...

மனம் சிற்றூர்தியிலிருந்து வந்த பாடலில் இலயித்தது.

உன் மடியில் நானுறங்க கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ?

“இப்ப mind எவ்வளவு calm-ஆ, happy-ஆ இருக்குது தெரியுமா?”

“ஏன் இப்ப எழும்பின்னீங்க? பேசாமப் படுங்க நதீஷா. நீங்க சரியாக் களைச்சுப் போயிற்றீங்க”

“எங்களுக்கு ஏற்றமாதிரி situation song போகுது என?”

ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா
வாழ்விருககும் நாள் வரைக்கும் தஞ்சம் உன்தன் நெஞ்சமம்மா


“ம்ம்ம்..........”

அன்னமிடும் கைகளிலே ஆடிவரும் பிள்ளை இது
உன்னருகில் நானிருந்தால் ஆனந்தத்தின் எல்லையது.


“இண்டைக்கு இருக்கிறமாதிரி இவ்வளவு சந்தோஷமா ஒருநாளும் நான் இருந்ததில்லைத் தெரியுமா? இப்ப உங்கட wife-ஆ உங்கட ஊருக்கு வாறதை நினைச்சா எவ்வளவு சந்தோஷமா இருக்கு. அம்மாவும் இருந்திருந்தா அந்தமாதிரி இருந்திருக்கும்.”

“ம்....... எல்லாமே கனவு மாதிரி....”

“யாழ்ப்பாணம் போறாக்கள் கெதியா வாங்கோ. bus வெளிக்கிடப் போகுது. கெதியா. அண்ண புட்போட்டில நிக்காம உள்ளுக்கை போங்கோ...”

வன்னியிலிருந்து அடுத்த பேரூந்தில் வந்த பயணிகளுடன் சிற்றூர்தி நிறைந்துவிட அது புறப்பட்டது. மீண்டும் நதிஷா என் தோளில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள். அவள் அருகாமையினை இரசித்தவாறே நானும் பயணிக்கலானேன். கொடிகாமம், சாவகச்சேரி, கைதடி, நாவற்குழி எல்லாம் தாண்டி செம்மணியை நோக்கி வநது கொண்டிருக்கையில் நதீஷா எழுந்து விட்டிருந்தாள்.

“இன்னும் யாழ்ப்பாணம் வரேல்லயைா?”

“இன்னும் கொஞ்சநேரம் தான். இந்தா செம்மணிக்குக் கிட்ட வந்திற்றம்”

“ஓ! இதுதானா அந்த செம்மணி?”

“ஏன்? உங்களுக்கு செம்மணியைப் பற்றித் தெரியுமா?”

“கேள்விப்பட்டனான். கிருஷாந்தி......... அதெல்லாம் இஞ்சதானே நடந்தது.”

கிருஷாந்தி மட்டுமா?

அது 1996ஆம் ஆண்டு July மாதம் 18ஆம் திகதி அதிகாலையில் முல்லைத்தீவு படைத்தளத்தொகுதி மீது இயக்கம் ஓயாத அலைகள்-1 எனப் பெயரிட்டு அழித்தொழிப்புத் தாக்குதலை மேற்கொண்டது. மறுநாள் மாலை அந்தப் படைத்தளத்தொகுதி முற்றாக அவர்கள் வசம் வீழ்ந்தது. அந்தத் தளத்தினை மீட்பதற்கென வந்த சிறிலங்காவின் மீட்புப்படையினர் கடும் சமரின் பின் 23ம் திகதி அந்தத் தளத்தினை அடைந்திருந்தாலும், அங்கு நிலைகொள்ளமுடியாத காரணத்தினால் அத்தளத்தினைக் கைவிட்டுவிட்டுப் பின்வாங்கியிருந்தனர். அந்தச் சமரில் 1400 வரையிலான சிறிலங்காப்படையினர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும்முகமாக ஆயிரம் வரையிலான அப்பாவித் தமிழ் இளைஞர்கள் தென்மராட்சிப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு அறுநூறு வரையிலானோர் செம்மணிப் பிரதேசத்தினுள் கொன்று புதைக்கப்பட்டனர். கிருஷாந்தி கொலை வழக்கில் இத்தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து இரவு நேரங்களில் செம்மணிப் புதைகுழிகள் இரகசியமாகத் தோண்டப்பட்டு அங்கிருந்த சடலங்கள் எடுக்கப்பட்டு எச்சமின்றி எரித்தழிக்கப்பட்டன.

“அரியாலை, கச்சேரியடி இறங்கிறாக்கள் முன்னால வாங்க. மற்றாக்கள் கொஞ்சம் விலத்தி இறங்கிறவைக்கு வழிவிடுங்கோ”

சிற்றூர்தி இப்போது யாழ்நகரினை வந்தடைந்திருந்தது. கைத்தொலைபேசிகளுக்கான சமிக்ஞைகள் யாழப்பாணத்திற்கு வந்திராத காரணத்தால் அருகிலிருந்த கடையொன்றினுள் செனறு நதீஷாவின் அங்கிளுடன் தொடர்பு கொண்டோம். அவர் ஆரியகுளம் சந்திக்கு அண்மையில் அமைந்திருக்கும் மாடிக்கட்டடத்திற்கு வரச்சொன்னார். அது முன்னர் 'உதயம் பல்பொருள் அங்காடி' - ஆக இருந்தது. இப்போது அது படையினரின் பாவனையில் இருந்தது. முச்சக்கர வண்டியொன்றில் ஏறி அவ்விடத்தை அடைந்து நதீஷாவினை அவள் அங்கிளிடம் விட்டுவிட்டு நான் விடைபெற்றேன்.


பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44 பாகம்-45 பாகம்-46 பாகம்-47

Friday, February 17, 2012

வேரென நீயிருந்தாய்...(47)

சந்தோஷம், பரவசம், காதல், கவலை, இழப்பின் பிரிவுத்துயர் என எல்லாம் கலந்தவொரு மனநிலையில் துயிலுமில்லத்தை விட்டு வெளியேறினோம். எம்மை ஏற்றி வந்தவர்கள் மீளவும் தங்களது வாகனத்தில் ஏற்றிக் கொண்டுபோய் கிளிநொச்சி பேரூந்து நிலையத்தில் எம்மை முகமாலை செல்லும் பேரூந்தில் ஏற்றிவிட்டுப் பேரூந்து புறப்பட அவர்களும் அவ்விடத்தை விட்டு அகன்றனர். இப்போது முதல் தடவையாக நானும் நதீஷாவும் அருகருகே அமர்ந்திருக்க பேரூந்து தன் பயணத்தை ஆரம்பித்தது.

இனி நதீஷா என்னவளா? நினைக்கவே நெஞ்சுக்குள் தித்தித்தது. நடப்பது கனவா நனவா என்கின்ற சந்தேகம் எழுந்தது. அவள் பக்கமாகத் திரும்பி அவளை நோக்கினேன்

“என்ன பார்க்கிறீங்க?”

“சும்மா தான். இதெல்லாம் உண்மையா? இல்லாட்டி நான் கனவு காணுறனா எண்டு doubt வருகுது.”

“எத்தினை நாள் நான் உங்களக் கனவில கண்டிருப்பன் தெரியுமா?”

“உண்மையைச் சொல்லட்டா? உங்களைப்போலதான் எனக்கும், முதன்முதலா postal course இல உங்கள கண்ட அண்டைக்கு, அதுக்கு முதலிலயே உங்களோட கனகாலம் பழகினமாதிரி இருந்துது. ஆனா நீங்க வந்து என்னோட கதைச்சு நீங்க சிங்களமெண்டு தெரிஞ்சாப்பிறகு சரியாக் குழம்பிப் போயிருந்தன்”

“அப்பையேன் இதை முதலிலயே சொல்லேல்ல?”

“என்னெண்டு சொல்லுறது?”

“அப்ப இது போன ஜென்மத் தொடர்புதான் எண்டுறதை இப்பவாவது நம்புறீங்களா?”

“கொஞ்ச நம்பிக்கை வருகுது”

“இன்னும் நான் உங்களைக் கொஞ்சவேயில்லையே”

“நீங்க என்ன கதைக்கிறீங்க?”

“இப்ப நீங்க தானே சொன்னீங்க கொஞ்ச, நம்பிக்கை வருகுது எண்டு?”

“ஆகா! நீங்க எங்கையோ போய்ற்றீங்க”

“இல்லையே உங்களுக்குப் பக்கத்திலதானே இருக்கிறன்”

“ம்ம்ம் நல்லாக் கதைக்கப் பழகீற்றீங்க... ”

“எல்லாப் புகழும் உங்களுக்கே”

“Thanks-ma”

“You are welcome-pa”

சிரித்துக் கொண்டே இருவரும் இருக்கையில் சாய்ந்து கொண்டோம்.

மனம் மகிழ்ச்சியாய் நிம்மதியாய் இருந்தது. பேரூந்தின் ஜன்னலூடாக வருகின்ற காற்று நதீஷாவின் கன்னவோரததுக் குழல்களை அழைத்து வந்து என்காதோரத்தை தீண்டுவது கிறக்கத்தைத் தந்தது. மனம் அதிலே இலயிக்க கண்களை மூடிக்கொண்டேன்.

பேரூந்து பரந்தன் சந்தியைத் தாண்டி விட்டிருக்கையில் பயணிகளில் பெரும்பாலானோரும் தூங்கி விழுந்து கொண்டிருந்தனர். நதீஷாவைப் பார்த்தேன். ஆழ்ந்த தூக்கத்திலிருந்தாள். ஒருவேளை இவள்சொல்வதுபோல் இது பூர்வஜென்மத் தொடர்புதானோ?. ஜோதிடத்தின்படி 12ம் இடத்தில் கேது இருந்தால் மறுபிறவி இல்லை என்பார்களே. அப்படியானால் ஜோதிடமும் உண்மைதானா? குழப்பமாயிருந்தது. வாழ்க்கையில் பல விடயங்கள் எமக்குப் புரிவதில்லை. புரிந்துவிட்டன என்று நினைப்பவைகூட சிலசமயங்களில் மீண்டும் குழப்பங்களைத் தருவதும் உண்டு. தொடர்ந்து சிந்தித்தால் இப்போது இருக்கின்ற மனநிம்மதியினை அது குலைத்துவிடக்கூடும் என்பது புரிந்தது. சிந்தனையைக் கலைத்துவிட்டு உறங்க முயற்சித்தேன். உறக்கம் வர மறுத்தது. சுற்றிவரப் பார்த்தேன். எல்லாமே வெறும் வெட்டவெளிகள் தான்.

'சந்தோஷ மேகங்கள் வந்தாடும் நேரத்தில் செந்தூரப் பூமழை தூவியது...'

பேரூந்திலிருந்து மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்த பாடலில் கவனத்தை ஈர்த்தது.

'வந்தவன் போனவன் எங்களை வென்றவன் வாசல் மறித்தானடா- எங்கள்
தந்தைக்கு முந்திய சொந்தங்களும் அதைத் தாங்கி இருந்தாரடா .....'


அது 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆந் திகதி, இருள் கவியும் நேரம் கண்டி நகரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு நண்பனுக்கு தொலைபேசி அழை்பபொன்று வந்தது. உரையாடிவிட்டு சொன்னான்,

“மச்சான் ஆனையிறவை இயக்கம் பிடிச்சிற்றுதாம்”

“சும்மா போடா. நீ நல்லாத் தள்ளுவ”

“அம்மாணடா. இஞ்சை இன்னும் நியூஸ் வரேல்ல. ஆனா அங்க UKயில IBC-யில அறிவிச்சுக் கொண்டிருக்கிறாங்களாம். அங்கையிருந்து தான்ரா இப்ப call வந்தது.”

'சென்றார்கள் வென்றார்கள் என்றார்கள் அந்நேரம்
தேகமெல்லாம் மின்னல் ஓடியது - எங்கள்
தேகமெல்லாம் மின்னல் ஓடியது.'


22 ஏப்ரல் 2000. அன்றைய இரவு தமிழ் மாணவர்களிடையே மகிழ்ச்சி பிரவாகமாக ஓடிக்கொண்டிருந்தது. சிலர் குருந்துவத்தைக் கடையில் cake வெட்டி party வைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வழியால் சென்ற சிங்கள மாணவர்களையும் அழைத்து அவர்களுக்கும் கொடுத்தார்கள். அவர்களும் எதுவும் அறியாமல் நன்றி சொல்லிவிட்டு வாங்கிக் கொண்டு சென்றார்கள். அக்பர் விடுதியில் முதலாமாண்டு மாணவர்கள் வெடி கொழுத்திக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

24 ஏப்ரல் 2000, காலை விரிவுரைகளுக்குச் சென்கையில் சிங்கள மாணவர்களின் முறைத்த முகங்களை எதிர் கொள்ள நேர்ந்தது. தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்கும் இடையில் வெளித்தெரியாத முறுகல்நிலை உருவாகிக் கொண்டிருந்தது. இரு தரப்பு மாணவர்களிடமும் இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதில் ஜே.வி.பி.யினைச் சேர்ந்த மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

“ஆனையிறவுக்குக் கிட்ட வந்திற்றம். பிள்ளைகள் எழும்புங்கோ”

யாரோ ஒரு பெரியவர் தன்கூட வந்தவர்களை பழைய நினைவுகள் கலைந்தன. மீண்டும் பாடலில் கவனம் செலுத்தினேன்

'ஆனந்தப் பூங்காற்று காதினிலே வந்து
ஆலோலம் ஆலோலம் பாடுதம்மா இன்று
ஆனையிறவிலே ஏறிடும்போதிலே
ஆகாயம் கைகளில் ஆடுதம்மா
உப்புக்கடலே உப்பளக்காற்றே
உம்மைத் தழுவுகின்றோம்
ஊருக்குப் போகின்ற வீதியில் ஏறிட
ஏனோ அழுகின்றோம்...'


கண்ணோரத்தில் நீர்த்துளிகள் எட்டிப்பார்த்தன. பேரூந்தும் ஆனையிறவினை அண்மித்து விட்டிருந்தது. பேரூந்தின் கண்ணாடிச் சாளரங்களுக்குள்ளால் இருபுறமும் பார்த்தேன். வற்றிய கடல்வெளிகளில் இடையிடையே சிறுசிறு பற்றைகள் தென்பட்டன. இந்த இடத்திற்காக எத்தனை மறவர்கள் தங்கள் ஆவிகளை நீத்திருப்பார்கள்? வன்னிப்பெருநிலப்பரப்பை யாழ்குடா நாட்டுடன் இணைக்கும் இந்தக் குறுகிய தரைவழிப்பாதைக்காய் எத்தனை சமர்கள்? எத்தனை சண்டைகள்?

“அந்தா! அதுதான் 91 இல கரும்புலியாப் போன tank”

யாரோ ஒருவர் சொல்ல பலரும் அவர் காட்டிய திக்கினில் பார்வையைச் செலுத்தினர்.

அது 1991 ஆம் ஆண்டுகாலப்பகுதி. வேலணையிலிருந்து வெளியேறி யாழில் தஞ்சமடைந்திருந்த நேரம். இயக்கம் ஆனையிறவு மேல் தாக்குதல் நடாத்த இருப்பதாக பரவலாகக் கதை அடிபட்டுக்கொண்டிருந்தது. இறுதியாக, ஆனையிறவைப் பிடிப்பதற்கான சண்டையை யூலை 10ஆம் திகதி ஆரம்பித்து விட்டிருந்தது. மறுநாள் மாலை உல்லாச விடுதி கைப்பற்றப்பட விரைவில் ஆனையிறவும் கைப்பற்றப்பட்டுவிடும் என்கின்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆயினும் நாட்கள் இழுபட்டன. சிறிலங்காப் படையினர் கட்டைக்காடு வெற்றிலைக்கேணிப் பகுதிகளில் தரையிறங்கி ஆனையிறவை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க இப்போது பல முனைகளில் சண்டை ஆரம்பித்து விட்டிருந்தது.

27 யூலை 1991, இயக்கம் வெற்றிலைக்கேணியிலிருந்து முன்னகருகின்ற படைகளைத் தடுத்தபடியே கடைசி முயற்சியாக மீண்டுமொரு தடவை ஆனையிறவைக் கைப்பற்ற முயற்சி செய்தது. லெப். கேணல் சரா, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட tank ஒன்றினை ஆனையிறவு முகாமுக்குள் கொண்டு செல்ல எடுத்த முயற்சி பாதிவழியிலேயே சிறிலங்காப் படைவீரன் ஒருவனால் சிதைக்கப்பட்டது. அந்த படையினன் தன்னுயிரைப் பொருட்படுத்தாமல் முகாமை நோக்கி வந்த Tank-இனுள் ஏறி இரு கைக்குண்டுகளை வீசித் தானும் மடிந்து போனான். கிட்டத்தட்ட அதுவும் இயக்கத்தின் தற்கைாடைத்தாக்குதலுக்கு ஒப்பாவொரு சிறிலங்காப்படையினனின் தாக்குதலாகும். பின் ஆனையிறவு முற்றுகையை இராணுவம் உடைத்த பின்னர் அந்தப் படையினன் சிறிலாங்கா அதிபர் பிரேமதாச அவர்களால் 'பரம வீர விபூஷண' என்கின்ற இராணுவ அதியுயர் விருது வழங்கி நினைவுகூரப்பட்டான்.



பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44 பாகம்-45 பாகம்-46

Thursday, February 16, 2012

வேரென நீயிருந்தாய்...(46)

நதீஷா பொலித்தீன் உறையினால் சுற்றப்பட்டவொரு பார்சலை என்னிடம் நீட்டினாள். வாங்கிப் பிரித்தேன். கடித உறையொன்று மேலாகத் தெரிந்தது. எடுத்துப் பார்த்தேன். அதனுள் சில ஆவணங்கள் இருந்தன. எடுத்துப் படித்தேன். அவை எமது வேலணை வீட்டினதும் மற்றைய காணிகளினதும் உறுதிகள். ஆச்சரியத்துடன் அவளை நோக்கினேன்.

“இதுகளெல்லாம் எப்பிடி உங்களிட்ட வந்தது”

“மற்றதுகளையும் பாருங்களன்”

உறுதிகளை ஒரு பக்கம் வைத்துவிட்டு அவள் தந்த பார்சலுக்குள் இருக்கும் மற்றவற்றை நோக்கினேன். ஒரு சிறிய பொதியொன்று காணப்பட்டது. பிரித்தேன். அத்தனையும் அம்மாவினதும் அக்காவினதும் நகைகள். இவையெல்லாம் எப்படி இவளிடம் வந்திருக்கும்? ஒருவேளை அம்மா கண்டிக்கு வரும்போது தன்னுடன் எடுத்து வந்திருக்கக்கூடும். நான் அவற்றைக் கவனிக்காமல் விட்டிருந்திருக்கிறேன். அம்மாவின் செத்தவீட்டில் இவள் அவற்றைக் கவனித்து பத்திரமாக எடுத்து வைத்திருந்திருப்பாளோ?

“எனக்கே இதெல்லாம் இஞ்சையிருந்தது தெரியாது. உங்களுக்கு எப்பிடிக் கிடைச்சது?”

“ஆ! மந்திரத்தால வந்தது. எப்பிடிக் கிடைச்சதெண்டதைப் பற்றி நீங்க ஏன் கவலைப்படுறீங்க? உங்கட things உங்களுக்குக் கிடைச்சாச் சரிதானே?”

“please உண்மையைச் சொல்லுங்க நதீஷா?”

“அப்ப மிச்சத்தையும் பாருங்க”

அவள் தந்த பார்சலைத் துளாவினேன். அடியினில் ஒரு கடிதம் ஒட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. எடுத்துப் பிரித்தேன்.

என்ரை ஜேன்குட்டிக்கு!

கனக்க எழுத ஆசை. ஆனா ஏலாம கிடக்கு. ஏனெண்டு தெரியேல்ல இந்தக் கடிதத்தை எனக்கு எழுதவேணும் போல கிடக்கு. எனக்கு இப்ப நெஞ்சுக்குள்ளை என்னவோ செய்யுது. இது ஆஸ்மாவால வாற முட்டா எனக்குத் தெரியேல்ல நான் இன்னும் எவவளவு நேரத்துக்கு உயிரோட இருப்பனோ தெரியாது. அதுக்குள்ள உனக்குச் சில விசயங்களைச் சொல்லிப் போடவேணும். நீ சரியான கல்லுளி மங்கனடா. லவ் பண்ணினா அதைச் சொல்லுறதுக்கு துணிச்சல் வேணும். ஆம்பிளைப் பிள்ளையா இருந்து கொண்டு இப்பிடிச் செய்ய உனக்கு வெக்கமாயில்லை. உனக்கொண்டு தெரியுமா? நானும் உன்ரை கொப்பரும் லவ் பண்ணித்தான் கட்டின்னாங்க. நான் ஓமெண்ட உடனேயே உன்ரை அப்பா தங்கட வீட்டில சொல்லிப்போட்டு நேரே வந்து உன்ரை அம்மாப்பாட்டைச் சொல்லிப்போட்டேர். அந்தத்துணிச்சலில ஒரு கொஞ்சம் கூட உன்னட்டை இல்லையெண்டது கவலையாயிருக்கு. நதீஷா சிங்களமெண்டதாலை தான் நீ பயப்பிடுறாய் எண்டு விளங்குது. ஆனா காதல் எண்டு வந்திற்றா இதெல்லாத்தையும் பார்க்கேலாது. முதலில மனிசராயிருக்கவேணும். தமிழ் சிங்களமெண்டிறதெல்லாம் அதுக்குப் பிறகுதான். எனக்கெப்பிடி இதெல்லாம் தெரியுமெண்டு யோசிக்கிறியா? உன்ரை முகத்தைப் பார்த்தவுடனேயே உனக்கு என்ன பிரச்சினை எண்டு எனக்குத் தெரிஞ்சிரும். நதீஷா தான் எனக்கு இப்ப துணையா என்னோட ஆஸ்பத்திரியில நிக்குது. நான் அவளுக்கெண்டு வாங்கின சங்கிலி இதுக்குள்ள இருக்கு. அதை நீயே அவளின்ரை கழுத்தில போட்டுவிடு.
எனக்கு நெஞ்செல்லாம் சரியா வலிக்குது. எனக்கேதும் ஒண்டு நடந்துதெண்டா உன்னை நதீஷா பாத்துக்கொள்ளும். நீ ஒண்டுக்கும் கவலைப்படாம இரப்பன்.

இப்படிக்கு,
அன்புள்ள அம்மா

அம்மாவுக்கு எப்படி இதெல்லாம் தெரிந்திருக்கும்? ஆச்சரியத்தின் எல்லைக்கே போய்விட்டேன். நதீஷாவின் முகத்தை நோக்கினேன் முறுவலித்தாள்.

“அம்மாக்கு எப்பிடி உங்களைப் பற்றித் தெரியும்? உங்களுக்கு எப்பிடி அம்மாவோட பழக்கம்?”

“நீங்க கல்யாணம் கட்ட மாட்டனெண்டு சொன்னதில அம்மாக்கு doubt வந்திற்று. அவா தீபனுக்கு call பண்ணிக் கேட்டிருக்கிறா. அவர் சாடையா என்னைப்பற்றிச் சொல்லியிருக்கிறேர். பிறகு நான் உங்கட வீட்ட ஒருநாள் சாப்பிட வந்தனான் தானே. அண்டைக்கு சாப்பிட வந்த ஆக்களுக்குள்ள நான் மட்டும் தானே பெம்பிளை. அதால அவா என்னோட வடிவாக் கதைச்சவா. அப்ப நான் நல்லாத் தமிழ் கதைச்சதால அவாக்கு நான் ஆரெண்டு தெரியாதாம். அண்டைக்கே அவாக்கு என்னைப் பிடிச்சுக் கொண்டுதாம். பிறகு நான் ஆரெண்டு தீபனிட்டைக் கேக்க அவர் எல்லாத்தையும் சொல்லிப்போட்டேர். அதுக்குப் பிறகு உங்கட அம்மாதான் எனக்கு call பண்ணிக் கதைக்கத் தொடங்கினவா”

“அப்ப இதெல்லாம் தீபனக்குத் தெரியுமா? உங்கட நம்பர் அம்மாக்கு என்னெண்டு கிடைச்சது?”

“தீபனுக்குத் தெரியமா தெரியாதெண்டு எனக்குத் தெரியாது. ஆனா நான் உங்கட வீட்ட சாப்பிட வந்த அண்டைக்கு நான் ஆரெண்டு தெரியாமலே அம்மா என்ரை hand phone நம்பரை என்னெட்ட வாங்கினவா. அதோட நான் தமிழ் எண்டு நினைச்சு உங்களுக்கு கட்டி வைக்க அவாக்கும் விருப்பம் வந்ததாம். உடனே கேக்கிறது சரியில்லையெண்டிட்டுத்தான் கேக்காம இருந்தவாவாம்”

“அப்பையேன் அம்மா இதைப்பற்றி எனக்கொண்டும் சொல்லேல்லை”

“நான் கேட்டன். அவா சொன்னா காதலிக்கிறது நீங்க. அதால நீங்களாவே வந்து சொல்லவேணும். அந்தத் துணிச்சல் உங்களுக்கு வரவேணும். அதால தானும் உங்களை tease பண்ணுறதாவும், என்னையும் உங்களை tease பண்ணச்சொல்லிச் சொன்னவா. உங்களுக்குத் தெரியுமா? நான் எனக்கு proposal ஒண்டு சரிவந்திற்றுது எண்டு சொல்லி ஒருநாள் half day leave எடுத்தன். அண்டைக்கு உங்கட வீட்டபோய் நான் தான் சமைச்சன். நீங்களும் taste ஆ இருக்கெண்டு சொன்னீங்க எண்டு அம்மா சரியான சந்தோஷமாம். ஏனெண்டா நல்ல ருசியாச் சமைச்சுக் குடுத்தா எந்தப் புருஷனும் தன்ரை மனிசியோட சண்டைபிடிக்க மாட்டினமாம். அப்ப நாங்களும் சண்டை பிடிக்காம இருப்பம் எண்டு சொன்னவா”

அம்மா மேலிருந்த மரியாதையும் பாசமும் பன்மடங்கு பெருகின. அப்படிப்பட்ட அம்மாவின் இழப்பை நினைக்கையில் கண்கள் கலங்கின.

“please அழாதீங்க ஜேந்தன். இனி உங்களை நான் நல்லாப் பாத்துக்கொள்ளுவன் எண்டு உங்கட அம்மாக்கும் promise பண்ணிக் குடுத்திருக்கிறன்”

இப்படியான உறவுகள் கிடைக்க நான் என்ன தவம் செய்திருக்க வேண்டும்?

“சரி! நேரமாகுது. விட்டா நீங்க இப்பிடியே இருந்திருவீங்க போலகிடக்கு. எழும்புங்க வெளிக்கிடுவம்.”

எழுந்தேன். அம்மாவின் கடித உறைக்குள்ளிருந்த சங்கிலி நிலத்தில் விழவே, சங்கிலி பற்றி அம்மா எழுதியிருந்ததும் நினைவிற்கு வந்தது. குனிந்து அந்த சங்கிலியை எடுத்தேன். அதில் ஒட்டிக்கொண்ட மண்துகள்களை ஊதினேன்.

“அக்காவின்ரை நினைவிடத்தில இருக்கிற மண்ணும் பட்டபடியா அக்காவின்ரை ஆசீர்வாதமும் இந்தச் சங்கிலிக்குக் கிடைச்சிற்றுது.”

“அப்ப உங்களுக்கு அக்காவில கோபம் வரேல்லையா?”

“உண்மையைச் சொல்லட்டா? உங்கட அம்மா சொல்ல முதலே எனக்கு அந்த dount வந்திற்றுது. ஏனெண்டா முந்தி எனக்கு ஒரு குழப்பம். உங்களுக்கும் என்னில விருப்பம் இருக்கெண்டு தெரியும். எப்பிடித் தெரியுமெண்டு கேக்காதீங்க. ஒரு ஆம்பிளை எங்களோட பழகிறதை வச்சே நாங்க பெம்பிளையள் ஈசியா அதைக் கண்டு பிடிச்சிருவம். ஆனா என்னில விருப்பமிருந்தும் நீங்க ஏன் என்னை லவ் பண்ண hesitate பண்ணுறீங்க எண்டு குழம்பிக் கொண்டிருந்தன். அப்பா செத்தாப் பிறபு வந்த news paper களில வந்த செய்திகளை வாசிக்கேக்க ஒருவேளை அது உங்களட அக்காவா இருக்கலாம் எண்டு நினைச்சன். முதலில கோபம் வந்தது. ஆனா பிறகு உங்கட நிலையிலயிருந்து யோசிச்சுப் பார்த்தன். நானா இருந்தாலும் அப்பிடித்தான் behave பண்ணியிருப்பன். அதால எனக்கு உங்களில வந்த கோபம் போய் லவ் தான் இன்னும் கூடிச்சுது.”

அவளின் பேச்சைக் கேட்கையில் அவளை அப்படியே இறுக்கிக் கட்டித்தழுவ வேண்டும் போலிருந்தது. அடக்கிக் கொண்டேன்.

“நானும் எவ்வளவு நேரமாக் கழுத்தை நீட்டிக்கொண்டிருக்கிறன். சங்கிலியைக் கையில வைச்சுக்கொண்டு என்ன யோசினை?

நீட்டிய அவள் கழுத்தில் அம்மா வாங்கிய சங்கிலியை அணிவித்தேன்.

“மாங்கல்யம் தந்துநானே ந மம ஜீவ ந ஹேது நா கண்ட் டே பத்னாமி சுபகே சஞ்சீவ சரத சதம்”




பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44 பாகம்-45