Friday, April 6, 2012

வேரென நீயிருந்தாய்...(51)

“சரி, இடம் வந்திற்றுது. இறங்குங்கோ!”

விழித்துப் பார்த்தேன். van சாட்டிக்கடற்கரையை அடைந்து விட்டிருந்தது. அங்கே அமைக்கப்பட்டிருந்த சிறிய மண்டபத்தினுள் நுழைந்தோம். அதை ஒழுங்குபடுத்தி பிண்டங்கள் செய்து ஆவாகனம் பண்ணிப் படைத்து திருப்பொற்சுண்ணம் படித்து, கொஞ்சமாய் வெம்பி, வெளித்தெரியாமல் அழுது முடித்து, எள்ளும் நீரும் இறைக்க நதீஷாவை அழைத்துப் பின் அனைத்தையும் எடுத்துச சென்று கடலினுள் கரைத்து அப்படியே மும்முறை மூழ்கி எழுந்து பின் ஆசுவாசமாக நீந்திவிட்டு வெளியே வந்தேன்.



தொண்ணூறுகளில் அப்பாவுடன் நீந்தியதற்குப் பிறகு இன்றுதான் சாட்டிக்கடலில் நீந்தியிருக்கின்றேன். நதீஷாவும் கடலினில் குளித்துவிட்டு உடைமாற்றி வந்ததும் மீண்டும் van- இல் கிளம்பினோம்.குருக்களுக்கு வேறொரு அந்திரெட்டியும் இருந்ததால் அவர் எங்களுடன் வரவில்லை.

“நதீஷா! இந்த இடம்தான் சாட்டி வெள்ளைக்கடற்கரை எண்டுறது. பாருங்க கடல் நிலம் எவ்வளவு clear ஆத் தெரியுதெண்டு. இதில கடலலையும் பெரிசா வாறேல்லை. நிலமும் நல்ல clear-ஆ இருக்கிறதால எல்லாரும் இந்த இடத்துக்குத்தான் குளிக்க வாறவை”

“ஓ! இதென்ன முன்னுக்கு? Mosque-ஆ? அப்ப இஞ்சை முஸ்லீம்ஸ்ம் இருக்கினமா?”

“ஓம் இது பள்ளிவாசல்தான். 90 க்கு முந்தி இஞ்சையும் கொஞ்ச முஸ்லீம்ஸ் இருந்தவை. பிறகு இயக்கம் முஸ்லீங்கள் எல்லாரையும் வெளியேறச் சொல்லேக்குள்ள அவையும் வெளியேறீற்றினம்.”

“அப்பிடி முஸ்லீம்ஸ்ஸை வெளியேற்றினது சரியா?”

“எப்பிடிச் சரியெண்டு சொல்லேலும்?”

“அப்பையேன் அப்பிடிச் செய்தவை?”

“அப்பிடிச் செய்தது பிழைதான். கிழக்கில சில முஸ்லீம் குழுக்கள் தமிழரைக் கொலை செய்தீச்சினம். பதிலுக்கு இயக்கமும் அங்கையிருக்கிற முஸ்லீம்களைக் கொலை செய்தீச்சினம். பழிக்குப் பழியெண்டு அது அங்கை கிழக்கில தொடரேக்குள்ள, இஞ்சையும் கொஞ்ச முஸ்லீம்ஸ் தமிழருக்கு எதிரா இயங்குகினம் எண்டு கேள்விப்பட்டு ஓட்டுமொத்த முஸ்லீம்களையும் கலைச்சுப் போட்டினம். ஒரு இனத்தில இருக்கிற கொஞ்சப்பேர் செய்யிற பிழைக்காக அந்த இனத்தையே கலைச்சது பிழைதான். அந்த மக்கள் என்ன பாவம் செய்தீச்சினம்? ஒரே நாளில தங்கட இடத்தைவிட்டு எங்கபோறது எண்டே தெரியாம வெளிக்கிட்டுப் போகேக்க அவைக்கு எப்பிடி இருந்திருக்கும்? பாருங்க அவை 1990 October 30 ஆம் திகதி ஒட்டுமொத்தமா தங்கட இடத்தை விட்டுப் போச்சினம். அதுக்குப் பிறகு சரியா அஞ்சு வருசம் கழிச்சு யாழ்ப்பாணம் வலிகாமத்தில இருந்த அத்தனை தமிழாக்களும் 1995 October 30 இல தங்கட இடங்களை விட்டு வெளியேறீச்சினம். தமிழரின்ரை நியாயமான இந்தப் போராட்டம் பயங்கரவாதமா வெளியுலகுக்குக் காட்டுப்படுறதுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமா அமைஞ்சிற்றுது.”

“ஓ! அப்ப வேறையென்னென்ன பிழை விட்டவை?”

“ஹலோ ஹலோ, சரி பிழை சொல்லுறதுக்கு எனக்கென்ன தகுதி இருக்கு? எனக்குச் சரியெண்டு படுகிறது இன்னொராளுக்குப் பிழையாத் தெரியும். அவருக்குச் சரியெண்டு தெரியிறது எனக்குப் பிழையாத் தெரியும். சரிபிழையெல்லாம் எங்கட எண்ணத்தைப் பொறுத்தது. இண்டைக்குச் சரியெண்டு தெரியிறதே சிலவேளையில நாளைக்குப் பிழையெண்டு தெரியும்.”

“விளங்குது. ஆனா வேறை என்னத்தை அவை செய்யாம விட்டிருக்கலாம் எண்டு நீங்க நினைக்கிறீங்க?”

“நீங்க சுத்திச்சுத்தி சுப்பற்ற கொல்லேக்குள்ள தான் வாறீங்க”

“உங்களுக்கு நான் என்ன கேக்கிறன் எண்டு விளங்குது தானே? அப்ப நேரேயே சொல்லுங்கவன்”

“ரஜீவ் காந்தியைக் கொலை செய்ததால அவைய பயங்கரவாதிகளெண்டு ஈசியா வெளிநாடுகளுக்குப் பிரச்சாரம் செய்யக்குடியதாயிருந்துது. அதோட இந்தியாவும் இந்தப் போராட்டத்தை முழுசா எதிர்க்கத் தொடங்கீற்றுது”

“ஏன் முந்தியே இந்தியா இயக்கத்துக்கு எதிரா சண்டை பிடிச்சதுதானே”

“இந்தியா செய்தது சரியெண்டு யாருமே சொல்லேலாது. அதுவும் அமைதிப்படையெண்டு சொல்லி வந்திற்று எத்தினை ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்களை அநியாயமாக் கொன்றது?. அது செய்தது முழுக்க முழுக்க அராஜகமும் அநியாயமும் தான். அதுக்குப் பழிக்குப்பழியாத் தான் ரஜீவைக் கொன்றிருப்பினம். ஆனா இந்தப் போராட்டம் என்னத்துக்காகத் தொடங்கப்பட்டது? அதை அடையிற வழியைத்தான் அவை யோசிச்சிருக்கவேணும். அதைவிட்டிட்டுப் பழிக்குப்பழி வாங்கிறதால என்ன பிரயோசனம்? வன்மம் தான் கூடிக்கொண்டு போகும். அப்பிடிப் பழிக்குப்பழி வாங்க வெளிக்கிட்டதுதான் நிறைய நாடுகள அவையைப் பயங்கரவாத இயக்கம் எண்டு சொல்லித் தடைசெய்யக் காரணமாப் போய்ற்றுது.”

“அப்ப ரஜீவை் காந்தியைக் கொலைசெய்திருக்காட்டி இந்தியா அவைக்கு help பண்ணியிருக்குமா?”

“கடைசி மட்டும் இந்திய அரசு உதவி செய்திருக்காது. அது இலங்கையில தமிழருக்கெண்டு ஒருநாடு வாறதுக்கு விடாது. அப்பிடி வந்தா தமிழ்நாட்டிலையும் பிரச்சினை வருமெண்டு அது பயப்பிடுது. ஆனா ரஜீவ்காந்தியைக் கொல்லாம விட்டிருந்தா தமிழ்நாட்டில எதிர்ப்பு வந்திருக்காது. அவையின்ரை support இருந்திருக்கும்”

“இப்பிடி இந்தியாவின்ரை எதிர்ப்பிருந்தும் அவை இந்தளவுக்கு வென்றிருக்கினம்தானே. பிறகென்னத்துக்கு இந்தியாவுக்குப் பயப்பிடவேணும்”

“வென்றிருக்கினம்தான். ஆனா ஆனையிறவைப்பிடிச்சவை ஏன் யாழ்ப்பாணத்தைப் பிடிக்கேல்லை. அப்ப சாவகச்சேரி, தனங்கிளப்பு எண்டு செம்மணிக்கு கி்ட்ட வரைக்கும் இடையால வந்து பிடிச்சுப் போட்டு ஏன் விட்டிட்டுப் போனவை?”

”ஏன்?”

“ஆமியை மீட்டுக் கொண்டு போறம் எண்ட சாட்டில இந்தியா ஆமி யாழப்பாணத்துக்கு வர ரெடியாகிற்றுது. அவையை வரவிட்டா பிறகு அவையைத் திரும்பிப் போகச் செய்யேலாது. அதோட ரஜீவ் காந்தியின்ரை கொலையைச் சாட்டாவைச்சு அலுப்பெடுக்கத் தொடங்கீருவாங்கள். அதாலைதான் யாழ்ப்பாணத்தைப் பிடிக்காம விட்டிருப்பினமெண்டு நினைக்கிறன்.”

“மச்சான் டேய்! முன்னால செக்பொயின்ற் வருகுது. கொஞ்சம் அமத்தி வாசிச்சுக் கொண்டு வாறீங்களா?”
உதயனின் குரலுக்கு அமைதியானோம்.

“ஜெயந்தன் டேய்! இப்ப பதிணொண்டரையாகுது. பன்னிரெண்டரைக்கு திண்ணைவேலி முத்துத்தம்பிப் பள்ளிக்கூடத்தில அம்மாவின்ரை பேரில மத்தியானச் சாப்பாட்டுக்கு ஒழுங்குபடுத்தியிருக்கு. நாங்க இப்ப நேரே அங்கபோனமெண்டாச் சரிதானே,”

“ஓமடா”

“அப்ப இவா என்ன மாதிரி? வழியில இறக்கிவிடவேணுமோ? இல்லாட்டி”

“இல்லையில்ல இவாவும் அங்க வரட்டும்”

“சரி!. அப்ப அண்ணே நீங்க van-ஐ நேர திண்ணைவேலிக்கு விடுங்கோ”


பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44 பாகம்-45 பாகம்-46 பாகம்-47 பாகம்-48 பாகம்-49 பாகம்-50

1 comment:

  1. வாழ்க்கையில் ஒருதரமோ அல்லது இரண்டுதரமோ போய்வந்த வேலணை/சாட்டிக் கடலை மறக்கவில்லை. அதுமாதிரித்தான் 1982 இல் போன நயினாதீவும் நாகபூஷணீ அம்மன் கோவிலும்...

    ReplyDelete