Tuesday, March 27, 2012

வேரென நீயிருந்தாய்...(48)

“ஜேந்தன் எழும்புங்க!”

நதீஷா என்னைத் தட்டி எழுப்பவே விழித்துப் பார்த்தேன். பேரூந்து முகமாலையை அடைந்து விட்டிருந்தது. இறங்கிச் சென்று எங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் மீண்டும் பேரூந்தில் ஏறிக்கொண்டோம். இப்போது பேரூந்து இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளிருந்து சிறிலங்காப் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்தது. மறுபடியும் அங்கே எங்களைப் பதிந்துவிட்டு யாழ்நகர் நோக்கிச் செல்லும் சிற்றூர்தியினுள் ஏறிக்கொண்டோம். மாலைநேரம் நெருங்கிக்கொண்டிருந்ததால் பயணிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்பட்டது. இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம்.

நதீஷா மிகவும் களைத்துப் போயிருந்தாள். பேரூந்து புறப்பட நேரமாகுமென்பதால் அருகிலிருந்த சிற்றுண்டிக்கடைக்குள் நுழைந்து நெக்ரோவும் மலிபன் 'கிறீம் கிறேக்கர் விஸ்கற்'-றும் வாங்கிவந்து இருவரும் பசியாறிக்கொண்டோம். வரும்வழியில் நான் தூங்கிவிட்டிருந்ததால் இப்போது தெம்புடன் இருந்தேன். அவளோ மிகவும் களைத்துப்போயிருந்தள். அவள் தலையை என் தோளிற் சாயவைத்து அவளை உறங்கச் சொன்னேன். கண்களை மூடிக்கொண்டாள். நானும் கண்களை மூடிக் கொண்டேன்...

மனம் சிற்றூர்தியிலிருந்து வந்த பாடலில் இலயித்தது.

உன் மடியில் நானுறங்க கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ?

“இப்ப mind எவ்வளவு calm-ஆ, happy-ஆ இருக்குது தெரியுமா?”

“ஏன் இப்ப எழும்பின்னீங்க? பேசாமப் படுங்க நதீஷா. நீங்க சரியாக் களைச்சுப் போயிற்றீங்க”

“எங்களுக்கு ஏற்றமாதிரி situation song போகுது என?”

ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா
வாழ்விருககும் நாள் வரைக்கும் தஞ்சம் உன்தன் நெஞ்சமம்மா


“ம்ம்ம்..........”

அன்னமிடும் கைகளிலே ஆடிவரும் பிள்ளை இது
உன்னருகில் நானிருந்தால் ஆனந்தத்தின் எல்லையது.


“இண்டைக்கு இருக்கிறமாதிரி இவ்வளவு சந்தோஷமா ஒருநாளும் நான் இருந்ததில்லைத் தெரியுமா? இப்ப உங்கட wife-ஆ உங்கட ஊருக்கு வாறதை நினைச்சா எவ்வளவு சந்தோஷமா இருக்கு. அம்மாவும் இருந்திருந்தா அந்தமாதிரி இருந்திருக்கும்.”

“ம்....... எல்லாமே கனவு மாதிரி....”

“யாழ்ப்பாணம் போறாக்கள் கெதியா வாங்கோ. bus வெளிக்கிடப் போகுது. கெதியா. அண்ண புட்போட்டில நிக்காம உள்ளுக்கை போங்கோ...”

வன்னியிலிருந்து அடுத்த பேரூந்தில் வந்த பயணிகளுடன் சிற்றூர்தி நிறைந்துவிட அது புறப்பட்டது. மீண்டும் நதிஷா என் தோளில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள். அவள் அருகாமையினை இரசித்தவாறே நானும் பயணிக்கலானேன். கொடிகாமம், சாவகச்சேரி, கைதடி, நாவற்குழி எல்லாம் தாண்டி செம்மணியை நோக்கி வநது கொண்டிருக்கையில் நதீஷா எழுந்து விட்டிருந்தாள்.

“இன்னும் யாழ்ப்பாணம் வரேல்லயைா?”

“இன்னும் கொஞ்சநேரம் தான். இந்தா செம்மணிக்குக் கிட்ட வந்திற்றம்”

“ஓ! இதுதானா அந்த செம்மணி?”

“ஏன்? உங்களுக்கு செம்மணியைப் பற்றித் தெரியுமா?”

“கேள்விப்பட்டனான். கிருஷாந்தி......... அதெல்லாம் இஞ்சதானே நடந்தது.”

கிருஷாந்தி மட்டுமா?

அது 1996ஆம் ஆண்டு July மாதம் 18ஆம் திகதி அதிகாலையில் முல்லைத்தீவு படைத்தளத்தொகுதி மீது இயக்கம் ஓயாத அலைகள்-1 எனப் பெயரிட்டு அழித்தொழிப்புத் தாக்குதலை மேற்கொண்டது. மறுநாள் மாலை அந்தப் படைத்தளத்தொகுதி முற்றாக அவர்கள் வசம் வீழ்ந்தது. அந்தத் தளத்தினை மீட்பதற்கென வந்த சிறிலங்காவின் மீட்புப்படையினர் கடும் சமரின் பின் 23ம் திகதி அந்தத் தளத்தினை அடைந்திருந்தாலும், அங்கு நிலைகொள்ளமுடியாத காரணத்தினால் அத்தளத்தினைக் கைவிட்டுவிட்டுப் பின்வாங்கியிருந்தனர். அந்தச் சமரில் 1400 வரையிலான சிறிலங்காப்படையினர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும்முகமாக ஆயிரம் வரையிலான அப்பாவித் தமிழ் இளைஞர்கள் தென்மராட்சிப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு அறுநூறு வரையிலானோர் செம்மணிப் பிரதேசத்தினுள் கொன்று புதைக்கப்பட்டனர். கிருஷாந்தி கொலை வழக்கில் இத்தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து இரவு நேரங்களில் செம்மணிப் புதைகுழிகள் இரகசியமாகத் தோண்டப்பட்டு அங்கிருந்த சடலங்கள் எடுக்கப்பட்டு எச்சமின்றி எரித்தழிக்கப்பட்டன.

“அரியாலை, கச்சேரியடி இறங்கிறாக்கள் முன்னால வாங்க. மற்றாக்கள் கொஞ்சம் விலத்தி இறங்கிறவைக்கு வழிவிடுங்கோ”

சிற்றூர்தி இப்போது யாழ்நகரினை வந்தடைந்திருந்தது. கைத்தொலைபேசிகளுக்கான சமிக்ஞைகள் யாழப்பாணத்திற்கு வந்திராத காரணத்தால் அருகிலிருந்த கடையொன்றினுள் செனறு நதீஷாவின் அங்கிளுடன் தொடர்பு கொண்டோம். அவர் ஆரியகுளம் சந்திக்கு அண்மையில் அமைந்திருக்கும் மாடிக்கட்டடத்திற்கு வரச்சொன்னார். அது முன்னர் 'உதயம் பல்பொருள் அங்காடி' - ஆக இருந்தது. இப்போது அது படையினரின் பாவனையில் இருந்தது. முச்சக்கர வண்டியொன்றில் ஏறி அவ்விடத்தை அடைந்து நதீஷாவினை அவள் அங்கிளிடம் விட்டுவிட்டு நான் விடைபெற்றேன்.


பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44 பாகம்-45 பாகம்-46 பாகம்-47

No comments:

Post a Comment