Friday, November 4, 2011

வேரென நீயிருந்தாய்...(37)

26 நவம்பர் 2001. படைத்துறை மேலாண்மையினைப் பறைசாற்றிவிட்டிருந்த தமிழர் தேசத்தின் குரலை, அது சொல்லப் போகும் சேதியை உலகு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாள். எங்கள் பல்கலைக்கழக வாழ்க்கையிலும் முக்கியமான நாள். விடுகை வருடத்தின் இறுதிப்பரீட்சையும் முடிவுற்ற நாள். பல்கலைக்கழக மாணவ வாழ்க்கையின் இறுதி நாள். வரவுகளின்றி செலவுகள் செய்து மகிழ்ந்திருந்த வாழ்வின் இறுதி நாள். எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ? என்கின்ற பிரிதலின் வலியை உணர்த்திய நாள். பசுமை நிறைந்த
நினைவுகளைச் சுமந்து கொண்டு பிரிந்த நாள்.


பரீட்சைகள் முடிவுற்றதும் பெரும்பாலான மாணவர்கள் அக்பரினை விட்டு வெளியேறுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சிலர் குழுக்களாக இணைந்து புகைப்படங்கள் எடுப்பதிலும் ஆர்வம் காட்டினர். மாலை மயங்குகையில் குழுக்களாகச் சேர்ந்து பல்கலைக்கழக வாழ்வின் இறுதித் தினத்தினைக் கொண்டாடுவதில் முனைந்தனர்.


தீபனும் நானும் இன்னும் சிலரும் ஒன்றாக டெவன்-சிற்குள் நுழைந்தோம். தலதா மாளிகைக்கு அண்மையில் அமைந்திருக்கும் Devens மற்றும் கண்டி ஏரிக்கு முன்னால் அமைந்திருக்கும் Lake Front போன்ற பிரத்தியேக உணவகங்களில் சக மாணவர்களின் கூட்டம் அதிகமாய்க் காணப்பட்டது. அது சிரேஷ்ட மாணவர்களின் பட்டமளிப்பு விழாவின் போதான cap collection-இனை நினைவிற்கு கொண்டு வந்தது. cap collection dayள எங்களால் இலகுவில் மறக்க முடியாத ஒன்று. பட்டமளிப்பு முடிந்து வரும் ஒவ்வொரு மாணவர்களிடமும் குழுக்களாகச் சென்று கைகுலுக்கி அவர்களை வாழ்த்திவிட்டு தொப்பியை நீட்ட நூறு ரூபாயிலிருந்து ஐநூறு ரூபாய் வரை ஒவ்வொருவரும் தொப்பியினுள் இடுவார்கள். எங்கள் சேகரிப்பு முடிந்ததும், அன்றைய இரவே கண்டி நகருக்குள் இருக்கும் பிரத்தியேக உணவகங்களுக்குள் சென்று விடுவோம். தண்ணியடிப்பவர்கள் lake front -இற்கும் மற்றவர்கள் devens -இற்கும் செல்வது வழமை. சேர்த்த காசை அன்றைக்கே செலவு செய்துவிட வேண்டும். அதுவம் தின்பண்டங்களுக்கு மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டுமென்கின்ற எழுதப்படாத விதியிற்கேற்ப விரும்பிய அனைத்து வகை உணவுகளையும் ருசி பார்த்து விட்டு இனி எதுவும் முடியாது என்கின்ற நிலையிலும் கையில் காசு மிச்சமிருக்கும். பின் நொறுக்குத் தீனிகளையும் வாங்கிக்கொண்டு van-உம் பிடித்துக் கொண்டு விடுதிகளுக்குத் திரும்புகையில், எங்களுக்கு பணமளித்த பட்டமளிப்பு நடைபெற்ற மாணவர்களில் சிலர் பேரூந்திற்கு காத்திருப்பதையும் காணக்கூடியதாகவிருக்கும்.


Devens Special இனை முடித்துவிட்டு விடுதி திரும்புகையில் நெஞ்சு கனத்துப் போய்க் கிடந்தது. அடுத்து என்ன என்கின்ற கேள்வி எழுந்தது. “தம்பி என்ன செய்கிறீங்க?” என்கின்ற பெரிசுகளின் கேள்விகளுக்கு இதுநாள் வரையில் “இஞ்சினியருக்குப் படிச்சுக் கொண்டிருக்கிறன்” எண்டு பெருமையாச் சொன்னதை இனிச் சொல்லேலாது. உத்தியோகம் புருஷ லட்சணம் என்பார்கள். வேலையொண்டு எடுக்கும் வரைக்கும் இப்பிடியான கேள்விகளை எதிர்கொள்வதன் தர்மசங்கடத்தினை இனித்தான் உணரப் போகின்றோம். பெரும்பாலான ஆய்வுகூடங்களில் தற்காலிக போதானாசரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. பட்ட மேற்படிப்பை மேற்கொள்வதற்கு விரும்பியிருந்த மாணவர்களே அவற்றிற்கு விண்ணப்பிப்பதில் ஆர்வம் காட்டியிருந்தனர். ஏனையோர் வேலை தேடுவதில் ஈடுபட்டிருந்தனர். தீபனுக்கு கொழும்பில் Site Engineer வேலை ஏற்கனவே ஏற்பாடாகியிருந்தது. மேற்படிப்பில் ஈடுபடுவதா அல்லது வேலை தேடுவதா என்கின்ற குழப்பத்தில் என்னால் எந்த முடிவினையும் எடுக்க முடியாமலிருந்தது.


இனிமேலும் அம்மாவைத் தனியே விட முடியாது. அவள் பாவம். வயதான காலத்தில் தனியே விடுவதில் எனக்கும் இஷ்டமில்லை. Site Engineer-ஆகப் போய் கொழும்பில் வேலை செய்தால் கிடைக்கும் வருமானத்தில் அம்மாவையும் கொழும்பில் கொண்டு வந்து வைத்திருக்க முடியாது. நாட்டு நிலைமைகள் விரைவில் சீர்படும் அறிகுறிகள் தென்பட்டன. அப்படியொரு நிலை உருவாகின் civil Engineers இற்கு வடகிழக்கில் நல்ல demand ஏற்படும். நிறைய NGO-களில் வேலைவாய்ப்புகள் உண்டாகும் என்கின்ற பரவாலான அனுமானத்தால் அதுவரை காலமும் தற்காலிக போதனாசிரியராக வேலை செய்யலாம் என்கின்ற எண்ணத்தில் நானும் அதற்கு விண்ணப்பித்து விட்டிருந்தேன்.


இரு தினங்களின் பின்னர் Fluid Lab- இற்காக நடாத்தப்பட்ட நேர்முகத்தேர்வில் நதீஷாவையும் அங்கே காணக்கூடியதாக இருந்தது. farewell party-யின் பின்னர் அவள் என்னிடமிருந்து விலகியிருப்பதாகவே பட்டது. என்னுடனான சந்திப்புகளை அவள் தவிர்பபதை என்னால் அவதானிக்கமுடிந்தது. விலகியிருக்கையில் நெருங்கி வந்தவள், நெருங்கி வருகையில் விலகிச் செல்வது மனதிற்கு கஷ்டமாய் இருந்தது. வலியப் போய் அவளுடன் உரையாடுவதற்கு என்னுடைய ஈகோ இடம் கொடுக்கவில்லை. அத்துடன் அக்காவைப் பற்றிய உண்மையை அவளிடம் இனிமேலும் மறைப்பது சிரமமாயிருக்கும் என்பதால் முன்னர் இது பற்றித் தீபனிடம் கேட்டதற்கு அவன் என்னைத் திட்டித் தீர்த்திருந்தான்.


இதெல்லாம் சும்மா Infatuation. இன்னும் கொஞ்ச நாளில கம்பஸ் முடிஞ்சு நாங்களெல்லாம் பிரிஞ்சிருவம். அதுக்குப் பிறகு நீங்க ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் மறந்திருவீங்க. கண்டி மழையையும் கம்பஸ் காதலையும் நம்பேலாது எண்டு சொல்லுறது உனக்குத் தெரியாதா?




Monday, October 31, 2011

வேரென நீயிருந்தாய்...(36)

“மச்சான் இண்டைக்கு எல்லாரும் தண்ணியடிக்கத்தான் வேணும். குடிக்க மாட்டன் எண்டிறவைக்கெல்லாம் இண்டைக்குப் பருக்கிறதுதான்.”

நிகழ்காலத்திற்கு வந்தேன்.

“மச்சான் டேய்! நீ ஊத்து. டேய் நீ இஞ்ச வந்து இவனைப்பிடி. நான் பருக்கிறன். ஒருத்தரும் இண்டைக்குத் தப்பேலாது..”

கிட்ட வந்து மடக்கினார்கள். மிண்டினேன்.

“ஜெயந்தன்! இதுதான் கடைசியா அடிக்கிறது. எங்கட friendship உனக்கு இனி வேண்டாமெண்டா விட்டிட்டுப் போ”

மற்றவர்களும் அதை ஆமோதிக்கவே என்நிலை சங்கடத்திற்குள்ளானது.

“நான் மட்டுமா அடிக்காம நிக்கிறன்? அங்க உள்ளுக்குள்ளையும் நிக்கிறாங்கள் தானே. அவங்கள் எல்லாரும் குடிச்சா நானும் குடிக்கிறன்”

“இண்டைக்கு ஒருத்தரும் தப்பேலாது. அவங்களையும் ஒவ்வொருத்தரா இழுத்துக் கொண்டு வரத்தான்போறம். இப்ப நீ அடி”

நட்புக்களை முறிக்காமல் இதிலிருந்து தப்ப முடியாது என்பது விளங்கியது. ‎"If friendship is your weakest point then you are the strongest person in the world" என்கின்ற வாக்கியம் நினைவினில் வந்தது. அக்காவும் மனதினுள் வந்து போனாள். welcome party-யின் பின் குடிப்பதில்லையென்று அக்காமேல் மனதிற்குள் சத்தியம் செய்ததும் நினைவினில் வந்து தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. அக்காதான் இப்போது உயிரோடு இல்லையே. மனம் சாயத்தொடங்கியது. பருக்க வந்ததைத் தடுத்து நானே வாங்கி அருந்தினேன். மற்றவர்கள் உற்சாகப் படுத்த மீண்டும் பருகிவிட்டு அப்படியே எழுந்து நடக்க, குறிஞ்சித்தென்றல் உடலைத் தழுவி சிலீரிட வைக்க, அப்பா! என்னெவொரு சுகானுபவம்?. சொர்க்கம் தெரிந்தது. காலடியில் தரை ஆடுவதாய் பட்டது. கட்டடங்களும் ஆடத்டெதாடங்க தள்ளாட்டமாய் உணர்ந்தேன். அப்படியே மெதுவாய் நடந்து farewell party நடந்து கொண்டிருக்கும் drawing room-இன் வெளிப்புறச் சுவரருகே சென்று சுவரைப் பிடித்துக் கொண்டேன். தலை பாரமாய் இருந்தது. அப்படியே படுக்கவேண்டும் போல் இருந்தது. என்னையறியாமலேயே கால்கள் வழுவி மெதுவாய் நிலத்தில் சரிந்து விழுந்தேன்.

***

“அங்க பாரடி! ஜெயந்தனும் தண்ணியடிச்சிற்று அதிலப் படுத்துக் கிடக்கிறான்”

“ஓமடி! vomit பண்ணீற்று அதுக்கு மேலயே படுத்துக்கிடக்குது”

யாரோ பெண்கள் சிலர் உரையாடிக் கொண்டு செல்வது மயக்கத்தில் கேட்டது. எழுந்து பார்க்க முடியாதவாறு தலைவலி என்னை முடிக்கிப் போட்டது. சற்று நேரம் கழித்து இருவர் என்னை நோக்கி வருவதைக் காலடியோசையில் இருந்து அனுமானித்தாலும் எழுந்து பார்க்கச் சக்தியற்று அப்படியே கிடந்தேன்.

“ஓயா அறப் பத்த அல்லண்ட, ஆ! ஏகமத் தமாய்! ஜேந்தன் நகிடிண்ட” (நீங்க அந்தப் பக்கம் பிடியுங்க. ஆ! அப்பிடித்தான். ஜேந்தன் எழும்புங்கோ)

இது... இந்தக்குரல் நதீஷா. அவமானமாய் உணர்ந்தேன். அவள் தனது தோழியையும் அழைத்து வந்து என்னை எழுப்பிக் கொண்டு போய் ESU room இறகுள் கொண்டு சென்றாள். அங்கே இருந்த bench-இல் கிடத்திவிட்டு தன்னுடன் வந்திருந்த தோழியிடம், என்னை அக்பரில் கொண்டு சென்று விடுவதற்காய் வேறு மாணவர்களை அழைத்துவரச் சொன்னாள். சுறறுமுற்றும் பார்த்தேன் farewell party முடிந்து மாணவர்கள் கிளம்பத் தொடங்கியிருந்தார்கள். என்மேல் எனக்கே வெறுப்பாய் வந்தது. எவ்வளவு நேரமாய் வெறுந்தரையில் மப்பில் படுத்துக் கிடந்திருக்கிறேன் ஒரு பூனா மகனும் என்னைத் தூக்கிக் கொண்டு போய் அக்பரில விடேல்லை. பெரிய புடுங்கிகள் மாதிரி friendship-ஐப் பற்றிக் கதைசசு என்னை தண்ணியடிக்க வைச்சிற்று நடுறோட்டில விட்டிட்டுப் போய்ற்றாங்கள். இவங்களையெல்லாம் friends எண்டு நினைச்சு நான் தான் ஏமாந்து போய்ற்றன். தீபன் வன்னியிலயிருந்து சொந்தக்காரர் வந்திருக்கினம் எண்டு அவையைப் பார்ரக் வவுனியாவிற்குப் போயிருந்தது நினைவிற்கு வந்தது. அவன் இருந்திருந்தால் இந்தளவிற்கு வந்திருக்காது. உண்மையான நட்பு ஒருபோதும் தப்பான வழியில் எம்மைச் செல்ல வைக்காது. தப்பான வழிக்கு எம்மை இழுத்து விடுவது உண்மையான நட்பாக இருக்முடியாது. நான் தான் உண்மையான நட்புக்களை அடையாளம் காணத் தவறியிருக்கின்றேன்.

நதீஷாவைப் பார்த்தேன். எதுவும் நடவாதது போல் வாசலையே பார்த்தக் கொண்டிருந்தாள். இவள் மனதை எவ்வளவு காயப்படுத்தியிருக்கிறேன். அதையெல்லாம் மறந்து விட்டு இப்போதும் இங்கே எனக்காய்... இவள் மட்டும் தமிழிச்சியாய் இருந்திருந்தால்? மனம் மருகியது.

“அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுக் கிண்ணத்தை இனிநான் தொட மாட்டேன்.”

“ஜேந்தன்! ஏன் அழுகிறீங்க? நான் உங்களை disturb பண்ணீற்றனா? அதாலதான் குடிச்சீங்களா? sorry ஜேந்தன் என்னால இனி உங்களுக்கு எந்த disturbance-உம் வராது. promise. Please இனிமேல் குடிக்காதீங்க. உங்களை மட்டும் நம்பித்தான் உங்கட அம்மா இருக்கிறா. அவாக்கு நல்ல மகனா இருங்கோ. நீங்க நிறைய கொள்கைகளோட இருக்கிறனீங்க. அதுகளையும் ஞாபகம் வைச்சிருங்கோ. திரும்பவும் சொல்லுறன். promise-ஆ நான் இனி உங்களை disturb பண்ண மாட்டன். நீங்க உங்கட அம்மாவைச் சந்தோஷமா வைச்சிருங்கோ. இதை நான் ஒரு friend-ஆகத்தான் உங்களிட்டக் கேக்கிறன். உங்களை நான் முந்தி disturb பண்ணினதுக்கு என்னை மன்னியுங்கோ. நீங்க சொன்ன மாதிரி நாங்க friends ஆகவே இருப்பம். உங்கட நல்ல குணத்துக்கு உங்களுக்கும் உங்கட அம்மாக்கும் பிடிச்ச மாதிரி நல்ல பொம்பிளை கிடைப்பா. Wedding-இற்கு எனக்கும் invitation அனுப்புங்கோ”

அவள் சொல்லச் சொல்ல எனக்குள் அவள்மேல் காதல் பெருகியது. அவளை உற்றுப் பார்த்தேன்.கண்கள் கலங்கியிருந்தன.

“உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன்”

நதீஷாவின் தோழியுடன் வேறும் இரு சிங்கள மாணவர்கள் எங்களை நோக்கி வந்தார்கள்.

“OK. you can go with them. they will take you to your room. bye”


Monday, September 19, 2011

வேரென நீயிருந்தாய்...(35)

“உங்களுக்கு love பண்ணுறதுக்கு எத்தினை வருஷம் தேவையெண்டு எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு? சொன்னா நம்புவீங்களா? முதன்முதல் உங்கள postal course class-இல கண்ட அண்டையில இருந்தே எனக்குத் தெரிஞ்சிற்றுது நீங்கதான் என்ரை வாழ்க்கை எண்டு.”

உடம்பு ஒருமுறை ஆடியது. இவள் என்ன சொல்கிறாள்? இவளை நான் முதன்முதல் பார்த்த அன்றைய அதே தினத்தில் நானும் குழம்பிப் போயிருந்தேன். இவளுடன் நன்கு பழகியிருப்பதாக உள்மனம் சொல்லிக்கொண்டேயிருந்தாலும் அதற்கான எந்தவொரு சாத்தியக்கூறுமே இருந்திருக்கவில்லையாதலால் பின்வந்த நாட்களில் அந்த உள்ளுணர்வு மறைந்து போயிருந்தது. ஆனால் இப்போது இவள் சொல்வதைப் பார்க்கையில்...

“உங்களுக்குத் தெரியுமா? உங்களைப் பார்த்த அண்டைக்கு நானாகத்தானே உங்களோட வந்து கதைச்சன். நீங்க தமிழெண்டு சொன்னதும் என்னால நம்பேலாம இருந்துது. உங்களோட கனகாலம் பழகினது போல எனக்கு இருந்திச்சு. எனக்கே ஏன் அப்பிடியெல்லாம் இருந்தது எண்டு இப்ப வரைக்கும் தெரியாது. ஆனா இதையே யோசிச்சு எத்தினை நாள் நித்திரை கொள்ளாம இருந்தனான் தெரியுமா? இது போன ஜென்மத் தொடர்புதான். இதெல்லாம் உங்களுக்கு விளங்காது.”

அவள் சொல்லச் சொல்ல எனக்கு மண்டை விறைக்கத் தொடங்கியது. நான் அனுபவித்த அதே உணர்வுகளை அவளும் அனுபவித்திருக்கிறாள். ஆனால் அவையெவற்றையுமே இத்தனை காலமாய் வெளிக்காட்டாமல் இருந்திருக்கிறாள். ஒருவேளை இது ஜென்மாந்திரத் தொடர்புதானோ? நம்ப மறுத்தது மனது. சரி. இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இன்றைய சூழ்நிலையில் இது சரிவருமா? அதுவும் இவளது தந்தையின் மரணத்திற்கு எனது அக்காதான் காரணமென்பது தெரியவந்தால் இவளது உணர்வுகள் எப்படியிருக்கும். மனைவியென்றானபின் இவளிடமிருந்து இவையெல்லாவற்றையும் மறைக்க முடியுமா? இதுவரைகாலமும் எனக்கு வேறு உடன்பிறப்புகளே இல்லை என்று நான் சொன்னதெல்லாம் பொய் என்கின்ன உண்மை தெரியவருகையில் என்மேல் அவள் வைத்திருக்கின்ற நம்பிக்கைகள் உடைந்து சிதறாதா? அதன்பின் எங்கள் வாழ்க்கை நரகமாகிப் போய்விடாதா? இல்லை அம்மாதான் இதற்கு மனப்பூர்வமாகச் சம்மதிப்பாளா? அல்லது ஏற்கனவே அவள் தனது மருமகளாய் யாரையேனும் வரித்துக் கொண்டிருப்பாளோ? வாக்குக்கூடக் கொடுத்திருப்பாளோ. அப்பாவைப் பறிகொடுத்து அக்காவை இழந்து இப்போது எனக்காய் மட்டும் ஜீவிக்கும் அவள் வாழ்க்கையில் என்ன சந்தோஷத்தை அனுபவித்திருப்பாள். அவளுக்கு மகனாய் நான் கொடுக்கக்கூடிய சந்தோஷம் அவளையே தனது மருமகளைத் தீர்மானிக்க விடுவதுதான். தாயும் மனைவியும் உத்துப் போனால்தான் ஒரு ஆணால் தன் குடும்பத்தை சந்தோஷமாகக் கொண்டு செல்லமுடியும். காதலில் தோற்றவர்கள் எல்லாம் வாழ்க்கையில் தோற்றா போய்விட்டார்கள்? காதலில் வெற்றிபெற்ற எத்தனையோபேர் மணவாழ்க்கையில் தோற்றுப்போயிருக்கிறார்களே. காதலிக்கையில் கண்ணுக்கு மறைந்துகிடக்கின்ற எத்தனையோ விடயங்கள் மணமானதும் விசாலமாகி வாழ்ககையையே நரகமாக்கி விடுகிறதே. இப்போது நான் இவள் காதலை ஏற்றுக் கொண்டாலும் இவளை என்னால் சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியுமா? என்னுடன் வாழ்வதால் தான் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதால்தானே என்னைக் காதலிக்கின்றாள். அவளது காதலை ஏற்றுக்கொண்டுவிட்டு பின் அவளை சந்தோஷமாக வைத்திருக்க முடியாவிட்டால் என்னை வெறுத்து ஒதுக்க மாட்டாளா? இவளை மணமுடிப்பதால் என் இனத்திலிருந்து நானும் அவள் இனத்திலிருந்து அவளும் ஒதுக்கப்பட்டவர்களாக மாட்டோமா? இரு இனங்களினாலும் நாங்கள் சந்தேகிக்கப்பட மாட்டோமா?

“நீங்க உண்மையைச் சொல்லுங்க. எதுக்காகப் பயப்படுறீங்க?”

“ஏன் நான் என்னத்துக்குப் பயப்பிட வேணும்?”

“அப்பப்பிறகேன் உண்மையை ஒத்துக்கொள்ளத் தயங்கிறீங்க?”

“சரி உண்மையெண்டே வைச்சுக் கொண்டாலும் எங்கடை வாழ்க்கை சந்தோஷமா இருக்காது. யோசிச்சுப் பாருங்க. உங்கட இடத்தில நான் இருந்தா ஏதும் பிரச்சினை வரேக்குள்ளை உடனே பக்கத்தில இருக்கிற சனமெல்லாம் நான் இயக்கம் சொல்லி பொலிசிட்டையோ ஆமியிட்டையோ பிடிச்சுக் குடுத்துப் போடுவினம். அதேபோல நீங்க எங்கட ஊருக்கு வந்தாலும் உங்கள ஒரு உளவாளியாத் தான் அங்கை இருக்கிறவை பாப்பினம். இதெல்லாம் இப்ப உங்களுக்கு விளங்காது. பிறகு அனுபவிக்கேக்குள்ள ஏன்ரா இவனைப் போய் லவ் பண்ணினன் எண்டு யோசிப்பீங்க. இதெல்லாம் தேவையா? நாங்க friends-ஆவே இருப்பம்.”

“ஏன் உங்கடை காவல்துறைப் பொறுப்பாளர் நடேசன்ரை wife-உம் ஒரு சிங்கள பெம்பிளை தானே. ஆமிக்காரரில எத்தினை பெரியாக்கள் தமிழ்ப் பெம்பிளைகளை marry பண்ணியிருக்கினம் எண்டு உங்களுக்குத் தெரியுமா?”

“அதெல்லாம் பிரச்சினை பெரிசா வரமுதல் நடந்தது. ஆனா இப்ப சரிவராது”

“சரி அப்ப நாங்க இப்ப புதுசாத் தொடங்கி வைப்பம். இப்பிடியாவது இந்த நாட்டில பிரச்சனை இல்லாமப் போகுதா எண்டு பார்ப்பம்”

“நதீஷா! நீங்களும் இந்தப் போரால பாதிக்கப்பட்டிருக்கிறீங்கதான். நான் மறுக்கேல்லை. ஆனா எப்பையுமே உங்கட இனம் அதிகாரம் செலுத்திற ஆக்களாககும் ஆக்கிரமிக்கிற ஆக்களாகவும் இருக்கிறதாலதான் அந்தப் பாதிப்புகள் உங்களுக்கு வருகுது. ஆனா எங்களுக்கு சண்டை நடக்கேக்ககையும் பாதிப்புத்தான் அதுக்கு முதலும் பாதிப்புத்தான். அதாலதான் சண்டையே வந்தது. இப்பிடி கலப்பினக் கல்யாணம் செய்யிறதால தமிழனம்தான் அழிஞ்சு போகுமேயொழிய சமாதானம் வராது. எண்டைக்கு அதிகாரம் எல்லாஇன மக்களுக்கும் சமமாக கிடைக்குதோ, அதுக்குப் பிறகு வேணுமெண்டா நீங்க சொல்லுறது சரியா இருக்கலாம். இப்பத்தைய நிலையில தமிழரிட்டை அடிவாங்கின வலிதான் அதிகமாயிருக்கு. அதுக்குப் பரிகாரம் செய்யாம வேற என்னதான் செய்தாலும், அந்தவலி திரும்பித்திரும்பி வந்துகொண்டேயிருக்கும்.”

“OK. தெரிஞ்சோ தெரியாமலோ தமிழாக்களின்ரை வலிகளுக்கு என்ரை குடும்பமும் காரணமாயிருந்திருக்கு. அதுக்குப் பரிகாரம் செய்யிறதுக்கு நான் ரெடி. என்ன செய்யவேணுமெண்டு சொல்லுங்கோ. நான் செய்யிறன்.”

“அதெல்லாம் சரிவராது”

”காதலன் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து... தெரியும்தானே. எல்லாம் சரிவரும்”

”போற பாதையே தெரியாதாம். சும்மா பிடிவாதம் பிடிக்காம உங்கடை அலுவல்களைப் பாருங்கோ”

“புது வெள்ளம் சேரும்போது வழியென்ன பாதையென்ன? காத்தாகி வீசும்போது திசையென்ன தேசம் என்ன?”
சிரித்தாள்.

ஆச்சரியாமாயிருந்தது. எப்படி இவளுக்கு இந்தப்பாடல்களெல்லாம் தெரிய வந்திருக்கும்?

“மனசத் தாழ்போட்டு மயிலே நீ போ.. வேணாம் விளையாட்டு”

“பரவாயில்லை. கடைசில சரியா நடந்தாச் சரி”

“சும்மா வீணான கற்பனைகளை வளர்க்காதீங்க. இதுக்குமேல உங்களோட நான் இதைப்பற்றிக் கதைக்க மாட்டன். இது சத்தியம்.”

அவள் வதனம் சுருங்கிப் போனது.

“OK. நானும் இனி இதைப்பற்றி உங்களோடை கதைக்க மாட்டன்”

இருவருக்குமிடையில் மௌனம் வந்து குந்திக்கொண்டது.



Friday, September 16, 2011

வேரென நீயிருந்தாய்...(34)

“ஒயாட்டத் தண்ணுவத, ஒயாத்தமாய் மகே ஜீவிதய?”

காலடியில் நிலம் வழுவுவதாய் உணர்ந்தேன். கடைசியில் தீபனின் கணிப்பு சரியாகி விட்டது. எதிர்பார்த்திராத நேரத்தில் அவள் வெளிப்படுத்திய வார்த்தைகள் திகைபை்பையே உண்டு பண்ணியது. வாயடைத்துப்போய் நின்றேன். எதையும் முளையிலேயே கிள்ளிவிட வேண்டும் என்பது எவ்வளவு உண்மையானது! தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்து நிற்பதாய்ப் பட்டது. ஆயினும் அடிமனதிற்குள் அவள் வார்த்தைகள் ஒருவித சந்தோஷத்தைப் பிரசவிப்பதையும் என்னால் உணரமுடிந்தது. இது ஒருபோதுமே சரிப்பட்டு வராது. என்ன செய்யலாம்? எப்படி இவள் மனதைக் காயப்படுத்தாமல் இதிலிருந்து வெளிவரலாம்? சிந்தனைகள் ஓடத் தொடங்கின.

“ஏன் திடீரெண்டு silent ஆகிற்றீங்க?”

நதீஷாவின் வினா சிந்தனைகளை அறுத்தது. இப்போதுகூட எதுவும் ஆகிவிடவில்லை. இவளுக்குப் புரியும்படி எடுத்துக் கூறினாள் புரிந்துகொண்டு விலகிவிடுவாள் என்கின்ற நம்பிக்கை துளிர்விட்டது.

“என்ன நீங்க? என்னெல்லாமோ சொல்லுறீங்க. உங்களுக்கு என்ன நடந்தது?”

“ஏன் நான் சொன்னது உங்களுக்கு விளங்கேல்லையா? You are my life ஜேந்தன்”

“Please நதீஷா. இதெல்லாம் சரிப்பட்டு வராது. ஏன் வீணா உங்கடை மனதை அலைய விடுறீங்க?”

“ஏன் அப்படிச் சொல்லுறீங்க. love பண்ணுறது பிழையா?”

“love பண்ணுறது பிழையில்லத்தான். ஆனா அந்த love-ஆல பல பிரச்சினைகள் வருமெண்டால், அதைத் தவிர்க்கிறது நல்லதுதானே”

“ஏன்? பிரச்சினைகளை face பண்ண உங்களுக்குப் பயமா?”

“அஞ்சுவது அஞ்சாமை பேதமை. எண்டு வள்ளுவரே சொல்லியிருக்கிறேர். love பண்ணினா marry பண்ண வேணும். நாங்க ரெண்டுபேரும் marry பண்ணிறதெண்டா சும்மாவா? அதுவும் நாடு இப்ப இருக்கிற நிலையில நரிக்கு உழுந்து வடை கேட்ட மாதிரி. இதெல்லாம் சரிப்பட்டு வராது.”

“அதுதான் ஏனெண்டு கேக்கிறன்”

“நீங்க சிங்களம். நான் தமிழ். நாங்க சேர்ந்து வாழுறது சரிப்பட்டுவராது.”

“சும்மா சும்மா தமிழ் சிங்களம் எண்டுசொல்லி மழுப்பாதீங்க. உங்களுக்கு என்னைப் பிடிக்கேல்லையா?”

“ஏன் இப்பிடியெல்லாம் கதைக்கிறீங்க? ஒரு friend-ஆ உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா அதுக்கு மேல love எல்லாம் வேண்டாம்..”

“உங்கட நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்க உங்களுக்கு என்னில love இல்லையெண்டு?”

“எதை நீங்க love எண்டு சொல்லுறீங்க?”

“dictionary கொண்டுவந்து தரவா?”

“இஞ்ச வாங்க! உங்களுக்கு எப்ப இருந்து என்னைத் தெரியும்? கம்பசுக்கு வந்தாப் பிறகுதானே! அதுவும் நாங்க group mates-ஆ இருந்ததாலதானே பழகினம். சிலவேளை நாங்க ரெண்டுபோரும் group mates-ஆ வந்திருக்காட்டி சும்மாதானே இருந்திருப்பம். சிலவேளை எங்கட பெயர்கள்கூட ஒருத்தருக்கொருத்தர் தெரிஞ்சிருக்காது. அப்பப் பிறகென்ன? இதெல்லம் சும்மா உடம்பு செய்கிற வேலை”

“ஹலோ சேர்! கொஞ்சம் அமத்தி வாசிக்கிறீங்களா? விட்டா ஏதோ நான் அலையிற மாதிரிக் கதைச்சுக்கொண்டே போறீங்க?”

“sorry நான் அப்பிடி mean பண்ணேல்லை. ஆனா...”

“என்ன ஆனா ஆவென்னா எண்டுகொண்டு? உங்களுக்கும் என்னில love இருக்கு. ஆனா உங்கட Ego அதைச் சொல்ல விடாமத் தடுக்குது. அவ்வளவு தான்”

“நான் என்ன சொல்ல வாறனெண்டா, love எண்டு ஒண்டில்லை. இதெல்லாம் ஓமோன்களின்ரை அட்டகாசம். அவ்வளவுதான். அதை விளங்கிக்கொண்டால் சரி”

“சும்மா சும்மா விதண்டாவாதம் கதைக்காதீங்க. love வந்து மனசு சம்பந்தப்பட்டது. நான் love-ஐப்பற்றிக் கதைக்கிறன். நீங்க lust-ஐப்பற்றிக் கதைச்சுக் கொண்டிருக்கிறீங்க. வருகுது...”

“lust இல்லாம love இல்லை”

“உங்களுக்கு வேணுமெண்டால் அப்பிடியிருக்கலாம்”
அவள் முகம் சுழிக்கத் தொடங்கியது. மீண்டும் பிரச்சனை பெரிதாகி விடுமோ என்கின்ற பயம் எழுந்தது.

“சரி OK. இதைப்பற்றிக் கதைக்க வெளிக்கிட்டா எப்பையும் பிரச்சனைதான் வருகுது. அதால இந்த விஷயத்தைப் பற்றிக் கதைக்கிறதை இனி நிப்பாட்டுவமா?”

“நான் சொல்ல வேண்டியதை உங்களுக்குச் சொல்லிப் போட்டன். you are my life அதில மாற்றம் இல்லை.”

“என்ன நீங்க? சும்மா சும்மா அதையே சொல்லிக்கொண்டு. ஒரு நாலு வருஷமாத் தான் என்னோட பழகிறீங்க. அதுக்குள்ள உங்களுக்கு என்னைப் பற்றி என்ன தெரியுமெண்டு love பண்ணுறீங்க?”

“உங்களுக்கு love பண்ணுறதுக்கு எத்தினை வருஷம் தேவையெண்டு எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு? சொன்னா நம்புவீங்களா? முதன்முதல் உங்கள postal course class-இல கண்ட அண்டையில இருந்தே எனக்குத் தெரிஞ்சிற்றுது நீங்கதான் என்ரை வாழ்க்கை எண்டு.”


Friday, August 19, 2011

வேரென நீயிருந்தாய்...(33)

அதுவொரு சனிக்கிழமை, மாலைச்சூரியன் தன்னை மறைத்துக் கொள்ள ஆரம்பித்திருந்தான். இறுதியாண்டு விரிவுரைகள் முடிவடைவதற்கு சில வாரங்களே எஞ்சியிருக்கையில் எமது கனிஷ்ட மாணவர்களால் எங்களுக்கான பிரியாவிடை நிகழ்ச்சி Drawing hall இற்குள் நடாத்தப்பட்டுக் கொண்டிருந்தது. எமது பல்கலைக்கழக வாழ்வின் இறுதி நிகழ்ச்சி அது.

இப்போதுதான் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்ததது போல் இருக்கிறது. ஆனால் அதற்குள் நான்கு வருடங்கள் ஓடி மறைந்து விட்டிருந்தன. காலம் வெகுவேகமாகக் கரைந்து கொண்டிருப்பது புரிந்தது. இந்தக் காலச் சுழலில் தான் எத்தனை மாற்றங்கள்?

சிறிலங்காவின் பொருளாதாரம் ஜூலை 24ம் திகதி கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்கியழிப்பு நடவடிக்கையுடன் ஆட்டம் காணத்தொடங்கியிருந்தது. தமிழர்தரப்பு தன் படைத்துறை மேலாண்மையைப் பறைசாற்றியிருப்பதால் விரைவில் வெளிநாடுகளின் தலையீட்டுடனான சமாதான நடவடிக்கைகள் ஏற்படலாம் என்கின்ற எதிர்பார்ப்புகள் பலமாகக் காணப்பட்டன. 2001 ஏப்ரல் 25இல் சிறிலங்காப் படையினரின் பலத்த எதிர்பார்ப்புடன் ஆனையிறவை மீளக் கைப்பற்றுவதற்கென ஆரம்பிக்கப்பட்ட தீச்சுவாலை படைநடவடிக்கை மூன்று நாட்களில் முற்றாக முறியடிக்கப்பட்டிருந்த நிலையில் யுத்தகளம் பெரும்பாலும் அமைதியாகவே காணப்பட்டாலும், அமைதிக்கான முன்னெடுப்பு நடவடிக்கைகள் எவையும் பெரிதாக எடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிந்திருக்கவில்லை. 2000ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் யாழ்ப்பாணம் தமிழர் படையிடம் வீழ்ச்சியடையும் நிலையிலிருந்தது. ஆயினும் இந்தியாவின் நேரடி இராணுவத் தலையீட்டைத் தவிர்ப்பதற்காக அது பின்வாங்க வேண்டியிருந்ததுடன், ஒருதலைப் பட்சமாக யுத்த நிறுத்தத்தையும் அறிவித்திருந்தது. அந்த அவகாசத்தைப் பயன்படுத்திய சிறிலங்காப்படைகள் புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட அதிநவீன ஆயுதங்களின் உதவியுடன் யாழ்குடாநாட்டிலிருந்து தமிழர்படைகளை பின்வாங்கச்செய்வதில் வெற்றியும் கண்டிருந்தன. அந்த மமதையில் தான் மூன்று நாட்களில் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை மூலம் தமிழர் படை வென்றெடுத்த ஆனையிறவை மீளக் கைப்பற்றப் போவதாக அறைகூவல் விடுத்து தீச்சுவாலை நடவடிக்கையை ஆரம்பித்துத் தோல்வி கண்டிருந்தது.

“ஜெயந்தன் டேய்! வாடா ESU றூமுக்குப் பின்னால. எல்லாரும் அங்கதான் நிக்கிறாங்கள்”
சகமாணவனொருவன் வந்து கையைப்பிடித்து இழுத்தான். சிந்தனை கலைய அவனுடன் சென்றேன்.

“மள்ச்சான்! இழ்துதான் நான் கழ்சியா அழ்க்கிறது. இனி நான் குடிக்க மாட்டன்” மப்பேறிய நிலையில் ஒருவன் உளறினான்.

“ஜெயந்தன்! இந்தா நீயும் குடி!. இது தான் கம்பசில எங்கட கடைசிப்பார்ட்டி”

“இல்லை. எனக்கு வேண்டாம்.”

“பேய்ப்... அடியடா!. welcome party அண்டைக்கு அடிச்சனிதானே! பிறகென்ன? farewel party-க்கும் அடி!”

Welcome party-யின் நினைவுகள் நெஞ்சினில் வந்து மோதின.

அக்கா! துக்கம் தொண்டையை அடைத்தது. அந்த நிகழ்வின் பின் அக்கா மானசீகமாக என்னிடம் வந்ததில்லை. இப்போது அவளுமில்லை. அவள் இல்லாமல் போனதை இன்னமும் அம்மாவிடம் தெரிவிக்கவுமில்லை. சிலவேளை அம்மாவும் அவளின் வீரச்சாவை பத்திரிகை வாயிலாக அறிந்திருக்கலாம். ஆயினும் அவள் அதைத் தெரிந்ததாய்க் காட்டிக்கொள்ளவில்லை. அக்காவைப் பற்றிய உரையாடல்கள் எழுவதைத் தவிர்ப்பதைப் பார்க்கையில் நானும் அம்மாவும் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருப்பதாய்த்தான் இப்போது படுகிறது.

மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிரும் போது அது பெருகுகின்றது. துக்கத்தை மற்றவர்களுடன் பகிர்கையில் அது குறைவடைகின்றது என்பதை உணர்ந்திருந்தாலும், அக்காவின் இழப்பால் ஏற்பட்ட துக்கத்தினை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியாத நிலையில் நானிருந்தேன். எந்தக்காயத்தையும் காலம் ஆற்றிவிடும் என்கின்ற நம்பிக்கையைப் பொய்யாக்கி அக்காவின் நினைவுகள் அடக்கமுடியாமல் என்னுள் பிரவாகிக்கத் தொடங்க கண்கள் கலங்கியது.

“மச்சான் ஒண்டுக்கும் கவலைப்படாத! இந்தா இதை அடி! எல்லாக் கவலையும் மறந்து போயிரும்!”

மறுத்தேன்.

“அட பேய்ப்...! இன்னும் கொஞ்ச நாளில இஞ்சினியர்ஸ் எண்டு சொல்லி எத்தினை official meeting-குகள் நடக்கும். அங்கையெல்லாம் போய் தண்ணியடிக்காம இருந்தா மரியாதையில்லை. அதுக்கு இப்ப இஞ்சையே பழகீற்றா நல்லது தானே! அங்க போய்க் குடிக்கத் தொடங்கினா, பிறகு அளவு தெரியாமக் குடிச்சு நோண்டியாகாம.... வாடா வந்து சும்மா அடி!”

“ஜெயந்தன் டேய் நாங்க எல்லாரும் தானே அடிக்கிறம். இண்டைக்கு விட்டாப் பிறகு எப்ப நாங்க எல்லாரும் இப்பிடி ஒண்டா இருக்கப் போறம்?”

“மச்சான்! நீ உண்மையா friendship-ஐ மதிக்கிற ஆளெண்டா இப்ப எங்களோட இருந்து தண்ணியடிக்கவேணும். இல்லையெண்டா போ. அங்கனேக்க எங்கையும் நதீஷா நிப்பாள். போயிருந்து அவளுக்கு வாளி வை. சும்மா இதில நிண்டு எங்களுக்கு விசரைக் கிளப்பாதை.”
-எல்லாருமாச் சேர்ந்து அலுப்படிக்கத் தொடங்கினார்கள்.

நதீஷாவை இழுக்காம இவங்களால இருக்கேலாது போல. - மனது சலித்தது.

அக்காவின் வீரச்சாவை அறிந்ததன் பின் நதீஷாவுடன் என்னால் சகஜமாக உரையாட முடியாமலிருந்தது. அப்பாவைக் கண்டுபிடித்துத் தருவதாகக் கூறியிருந்த அவளின் தந்தையின் மரணத்திற்கு அக்காவே காரணமாகியிருந்தது மனதைப் பிசைந்துகொண்டிருந்தது. அக்காவைப் பற்றி அவளுக்கு தெரிந்திருக்காது என்றாலும் அவளைக் காண்கையில் எனக்குள் குற்ற உணர்வொன்று வந்து உறுத்திக்கொண்டேயிருந்தது. அவளோ தந்தையின் மரணத்தின் பின்னர் என்னுடன் இன்னும் நெருங்கத் தொடங்கியிருந்தாள்.

“நீங்க இப்ப எப்படி இருக்கிறீங்க? வீட்டில எல்லாரும் OK-யா?”

“ofcourse. ஏன் கேட்கிறீங்க?”

“அப்பிடியெண்டா நாங்க கொஞ்சம் distance வைச்சுப் பழகுவா?”

“ஏன்? ஏன் அப்பிடிச் சொல்லுறீங்க?”

“இல்ல. நாங்க கொஞ்சம் கூட close ஆப் பழகிற மாதிரியிருக்கு? பாக்கிற ஆக்களும் வித்தியாசமாக் கதைப்பினம். அதுதான்”

“உங்களுக்கு என்னோட இப்பிடிப் பழகிறது பிடிக்கேல்லையா?”
அவள் முகத்தில் சோகம் பரவுவது தெரிந்தது.

“அப்பிடியெண்டில்லை.”

“அப்பப் பிறகேன் நீங்க மற்றவையைப் பற்றிக் கவலைப்படுறீங்க?”

“அப்பிடியில்லை. பிறகு அது உங்கட life-ஐயும் affect பண்ணலாம்”.

“ஒயாட்ட தண்ணுவத? ஒயாத்தமாய் மகே ஜீவிதயே...”


Thursday, June 9, 2011

வேரென நீயிருந்தாய்...(32)

அன்புள்ள ஜேன்குட்டிக்கு!

நீ இதை வாசிக்கும் இந்தக் கணத்தில் நான் உங்களை விட்டு, எங்கள் நாட்டை விட்டு, எங்கள் நாட்டின் விடியலுக்காக இவ்வுலகை விட்டே பிரிந்திருக்கக்கூடும். கவலைப் படாதேடா. எப்படியும் அடுத்த பிறப்பிலும் உன்னுடனேயே இருப்பேன். விளங்கும் என நினைக்கிறேன். மானுட ஆன்மா மரணம் எய்தாது என்றான் கண்ணன். நாங்கள் எல்லோருமே ஏதோவொரு வகையில் அருச்சுனர்களே. இந்த வாழ்க்கையும் ஒரு குருஷேத்திரம் தான். எல்லாம் எப்பவோ தீர்மானிக்கப்பட்டாயிற்று. அதை நிறைவேற்றும் நாங்கள் வெறும் கருவிகளே. ஒருவகையில் நானும் இப்போது கீதாவுபதேசம் பெற்ற விஜயன்தான். வரித்துக்கொண்ட கடமையைச் செய்வதில், அதையும் நிறைவாகச் செய்யவேண்டும் என்பதில் அதிக அக்கறை இருக்கின்றது. உன்னை நேரில் சந்தித்தால் என்மனவுறுதி ஆட்டம் கண்டுவிடலாம் என்கின்ற அச்சமும் நிரம்பவே உண்டு. ஆதலால்தான் உன்னோடான சந்திப்புகளைத் தவிர்த்துக் கொண்டிருக்கின்றேன். இன்றுடன் நான் இடம் மாறுகின்றேன். இப்பிறப்பில் இனிமேல் உன்னைச் சந்திக்க முடியும் என்கின்ற நம்பிக்கை எனக்கில்லை. ஆனால் நிச்சயம் அடுத்த பிறப்பிலும் உன்னோடுதானிருப்பேன். உன்னை நினைத்து எனக்குப் பெருமையாக இருக்கிறது. அப்பாவின் கனவை நிறைவேற்றியதற்கு மிக்க நன்றி. அம்மா இனி உனது பொறுப்பு. அவா கஷ்ரப்பட்டது காணும். இனி அவாவை நீதான் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேணும். என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அம்மாவையும் கவலைப் பட விடாதே. இழப்புகள் எங்களுக்குப் புதியவையல்ல. இந்தக் கடிதத்தை நீயாக உடைத்து வாசிக்காமல் தீபனே உன்னிடம் தந்து வாசிக்கச் சொல்லியிருந்தால் நான் உங்களை விட்டுப் பிரிந்து விட்டேனென்று அர்த்தம்....................

மண்டை விறைக்க கையினிலிருந்த கடிதம் நழுவிக் கீழே விழுந்தது. கண்கள் இருண்டு கொண்டு செல்வது புரிகையில் தீபன் என்னை உலுக்க ஆரம்பிப்பது புரிந்தது.

“ஏன்ரா அக்காவைக் கண்டத என்னட்டச் சொல்லாம மறைச்சனி?”

“இல்லையடா! அவாதான் உன்னட்டச் சொல்லக்கூடாதெண்டு promise பண்ணச் சொல்லிக் கேட்டவா. அதாலதான் நான் ஒண்டுமே சொல்லேல்லை.”

“அடச்சீ! எவ்வளவு காலமடா அக்காவைப் பார்த்து? இனி எங்கையடா பார்க்கேலும்?”

அடிவயிற்றிலிருந்து ஏதோவொன்று வெடித்துக் கிளம்புவதாய் உணர்ந்தேன். அப்பா காணாமல் போனபோதுகூட இவ்வளவு தூரத்திற்கு அந்தக் கவலை என்னை வாட்டியிருக்கவில்லை. அக்காவிற்கு நித்திய கண்டம் பூரண ஆயுசு என்றே எண்ணியிருந்தேன். அந்த நினைப்பு இப்போது சிதைந்து சின்னாபின்னமாகிப் போயிருந்தது. வாழ்ககையில் எதுவுமே நிரந்தரமில்லை என்பது அறிவுக்குத் தெரிந்திருந்தாலும் அதை ஏற்க முடியாமல் மனது கிடந்து தவியாய்த் தவித்தது. உலகமே வெறுமையாய் சூனியமாகிப் போனதான உணர்வு நெஞ்சினை ஆக்கிரமிக்கத் தொடங்க தனியனாக உணரத் தொடங்கினேன். கண்களில் நீரருவிகள் ஏற்கனவே ஊற்றுப் பெருக்கத் தொடங்கியிருந்தன.

“ஜேயந்தன் டேய்! control yourself-டா. விசிறிகள் ஆருக்கும் விசயம் தெரிஞ்சுதெண்டால் பிறகு பிரச்சனையாகீரும்.”

“உனக்கு எப்பிடித் தெரியும் அக்கா வீரச்சவெண்டு?”

“இந்தா பேப்பரில கிடக்குது பாரன்.”

வீரகேசரியினைப் பிரட்டினேன்.

..... அண்மையில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத்தாக்குலை மேற்கொண்டவர் ஒரு பெண் தற்கொலைக்குண்டுதாரியெனத் தெரிய வந்திருக்கின்றது. அத்துடன் அங்கே கண்டெடுக்கப்பட்ட தேசிய அடையாள அட்டையின் பிரகாரம் அவரது பெயர் சுந்தரலிங்கம் ஜெயந்தினி என்றும், வவுனியாவை முகவரியாகக் கொண்டிருந்தாலும் அவரது சொந்த இடம் வேலணை என்பதும் இரகசியப் பொலிசாரின் விசாரணைகளில் தெரிய வந்திருக்கின்றது...

“மச்சான் எனக்குத் தலை வெடிக்குதடா... என்னடா நடக்குது? அப்ப, அக்காவின்ரை குண்டுவெடிப்பிலதான் நதீஷாவின்ரை அப்பாவும் செத்திருக்கிறேர். ரெண்டு பேருமே ஒண்டாச் செத்திருக்கினம் பாரன். அவற்றை செத்த வீட்டுக்கு நாங்களும் போய்ற்று வந்திருக்கிறம். ஆனா அக்காவின்ரை?”

உங்களுக்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும்.
ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும்.
பொங்கும் மகிழ்வோடு நீங்கள் போய்விடுவீர்கள்.
போனபின்னே நாமழுவோம் யாரறிவீர்கள்?

“ஜெயந்தன்! நீ இதைப்பற்றி ஒருத்தருக்கும் ஒண்டும் கதைக்காதை. பேசாம அவாவுக்குச் செய்ய வேண்டிய கிரியைகளை மட்டும் செய்வம் என?. அம்மாவுக்கும் இப்போதைக்கு இதைப்பற்றி ஒண்டும் சொல்ல வேண்டாம் சரியா?



Wednesday, June 8, 2011

வேரென நீயிருந்தாய்...(31)

அன்றைய தினம் மதிய உணவிற்காக றொலெக்ஸ்ஸில் சென்று இருக்கையில் அமர்கையில்,

”ஜெயந்தன் டேய்! நீ இண்டைக்கு இந்தப் பக்கமா வந்து இரு. அப்பத்தான் அவளைப் பார்க்கலாம்.”

அமர்ந்தேன். உணவருந்திய பின்னும் நீண்ட நேரமாகியும் யாரும் வரக் காணோம்.

“அம்மாண உனக்கு விசரடா!”

“சத்தியமாடா. அவள் உனக்கு எறியத்தான் வாறவள். ஆனா என்னெண்டு தெரியேல்லை. ஆளா இண்டைக்குக் காணேல்லை. ஒருவேளை இண்டைக்கு நீ றோட்டுப்பக்கம் பார்த்துக் கொண்டிருக்கிறதைக் கண்டிட்டு ஒளிச்சிற்றாளோ தெரியேல்ல. வா! நாங்க மயூரிப் பக்கமா நிண்டு பாப்பம்.”

”போடாங்! நீ நிண்ட பார். நான் றூமுக்குப் போறன்”

”நீ போ மச்சான்! இண்டைக்கு நான் இதுக்கொரு முடிவு கண்டிட்டுத்தான் வருவன். அப்பிடியில்லையெண்டால் என்ரை பேரை மாத்து.”

“சரிசரி! றூமுக்குப் போய் நான் உனக்கு வேற பேர் யோசிக்கிறன்”.
தீபனை விட்டுவிட்டு கிளம்பி அறைக்கு வந்த சிலமணி நேரங்களில் தீபன் வந்தான். அவன் முகத்தில் பதட்டம் தெரிந்தது. அவன் சட்டைப் பையினுள் கடிதம் ஒன்று இருப்பதும் தெரிந்தது.

“என்ன மச்சான்? அப்ப இனிப்புதுப் பேரால கூப்பிடலாமா?”

”பேய்ப்..! நான் அவவைக் கண்டு கதைச்சிற்றுத்தான் வாறன்!”

“ஓ! அப்ப அவள் இப்ப உனக்கு அவாவாகிற்றாவோ? அவள் மச்சான் உனக்காகத்தான் வந்திருக்கிறாள். இண்டைக்கு நானும் றோட்டுப்பக்கம் பாத“துக் கொண்டிருக்கிறதைப் பார்த்திற்று ஒளிஞ்சு நிண்டிருக்கிறாள். அது உனக்கும் தெரிஞ்சு என்னைக் காய்வெட்டி விட்டிட்டு நீ நிண்டு கதைச்சுப் போட்டு வந்திருக்கிறாய் என! அதுக்குள்ள லவ் லெட்டர் கூட கிடைச்சிற்றுது போல. அப்ப எப்ப மச்சான் கிச் பார்ட்டி?”

“காடு பத்தியெரியுதெண்டு கரடி காவெடியெடுத்து ஆடிச்சாம். விஷயம் தெரியாம சும்மா அலம்பிக் கொண்டிருக்கிற. இந்தக் கடிதம் உனக்குத்தான்!”

“விட்டா நல்லா தீத்துவேடா! சரி எனக்கு வந்த கடிதம் தானே கொண்டா! உடைச்சு வாசிப்பம்”
-எட்டித் தீபனின் சட்டைப்பையிலிருந்த கடிதத்தை எடுத்தேன்.

“அம்மாண கடிதத்தை இப்ப உடைச்சுப் பார்க்காத!”

“இது எனக்கு வந்த கடிதம் தானே! அப்ப நான் உடைச்சுப் பார்க்கலாம் தானே!”
-அவசரமாக கடிதத்தை உடைக்க வெளிக்கிட, தீபன் அதைப் பறிக்க எத்தனித்தான். முடியாமல் போகவே,

“உன்ர அக்கா மேல சத்தியமா, அதை உடைக்காத!”

”பேய்ப்..! என்ன பேய்க்காட்டுறியா? நீங்க லவ் பண்ணுறது. கண்ட சரக்குகளுக்கும் லவ் லெற்றர்ஸ் குடுக்கிறது வாங்கிறது. ஆனா கேட்டா ஏதோ நாங்கதான் சரக்குப் பார்த்துக்கொண்டு திரியிறமெண்டு கதைகட்டிறது. நீயும் உன்ர கடிதமும். இந்தா பிடி”

தீபன் மௌனமாயிருந்தான்.

***************

“ஏன் ஜேந்தன் சும்மா பொய் சொல்லுறீங்க?”

“நான் எப்ப பொய் சொன்னனான்?” -தலை தானாகவே கவிழ்ந்து கொண்டது.

“அது உங்களுக்கே தெரியும்தானே!.”

“என்ன நீங்க?”

“அப்ப என்ர கண்ணைப் பார்த்துச் சொல்லுங்க பார்ப்பம்?”

“என்ன சொல்ல வேணும்?”

“இப்ப நீங்க சொன்ன பொய்யை என்ர கண்ணைப்பார்த்துச் சொல்லுங்க பார்ப்பம்!”

“நான் என்ன பொய் சொன்னனான்?”

”ஏன்? நீங்க என்ன பொய் சொன்னீங்க எண்டு உங்களுக்கு மறந்து போய்ற்றுதா?”

**************

ஜனக மகாரஜாவின் அரசவை! வேதம் கற்றுணர்ந்த ஞானிகளும் பண்டிதர்களும் விவாதங்களில் களைத்துப்போக மைத்ரேயியும் யாக்ஞ வல்கியரும் தங்கள் விவாதத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தனர்.

பார்வையாளர்கள் விஷயஞானமின்றி அவர்கள் இருவரினதும் விவாதங்களை வேடிக்கை பார்க்கலாயினர். ஒரு கட்டத்தில் மைத்ரேயியின் வினாவிற்கு விடையளிக்க முடியாமல் திண்டாடினான் யாக்ஞ வல்கியன். ஒரு பெண்ணிடம் தோற்பதா? ஆண் என்கின்ற ஆணவம் கண்ணை மறைக்க விவாதம் மறந்தது, விவாதம் நடக்கும் சபை மறந்தது. தன் நிலை மறந்தது.

“இதற்கு மேலும் நீ கேள்வி கேட்பாயானால் நின் சிரசு சுக்குநுாறாய் வெடித்துச் சிதறட்டும்.”

************

“நீங்க உங்கட லிமிற்றைத் தாண்டி ஓவராப் போறீங்க நதீஷா!. இதுக்கு மேல உங்களோட கதைக்க எனக்கு விருப்பமில்லை.”

இருவருக்குமிடையில் மௌனம் வந்து அமர்ந்து கொண்டது.

************

அன்று ஞாயிற்றுக்கிழமை. சனிக்கிழமை கொன் (அரட்டை) அடித்துவிட்டுப் படுக்கப் பிந்தியிருந்ததால் வழமை போன்று அன்றும் பிந்தியே எழும்பியிருந்தேன். என்றுமில்லாதவாறு அன்றைய வீரகேசரி

வாரமலர் எனது கட்டிலில் வைக்கப்பட்டிருந்தது. நான் எழுந்ததைக் கண்டதும். அறைக்கதவை இறுகத் தாழிட்டுவிட்டு அருகில் வந்தமர்ந்தான் தீபன். வியப்பாயிருந்தது.

“என்னடா?“

“இவ்வளவு நாளும் உனக்கு சொல்லாம மறைச்ச ஒரு உண்மையை இப்ப சொல்ல வேணும்.”

“என்ன மச்சான் என்னெண்டு சொல்லன்”

“வெள்ளைவத்தை றொலெக்ஸ்ஸில ஒரு பெம்பிளைப்பிள்ளையைக் காணுறனான். அவா உனக்கு ஒரு கடிதம் தந்தவா என்று சொன்னன். ஞாபகமிருக்கா?”

“இப்ப ஏன் அதைத் திரும்பவும் தொடங்கிற?”

“இந்தா அந்தக் கடிதம். இப்ப அதை நீ வாசிக்கலாம்.”