Saturday, April 16, 2011

வேரென நீயிருந்தாய்...(26)

1987ஆம் ஆண்டு பிறந்து விட்டிருந்தது. பாடசாவைக் கல்வித்திட்டத்திலும் மாற்றங்கள் கொண்டுவரப் பட்டிருந்தன. அதுவரை ஆறாம் வகுப்பிலிருந்து ஆரம்பிக்கும் பெரிய பாடசாலைகள் இப்போது ஐந்தாம் வகுப்பிற்குரிய மாணவர்களையும் உள்வாங்கத் தொடங்கியிருந்தனர். வகுப்புகள் என அழைக்கப்பட்டவை ஆண்டுகள் என அழைக்கப்படலாயிற்று. ஐந்தாம் வகுப்பு ஆறாம் ஆண்டாயிற்று. O/L சோதனை எடுக்கும் பத்தாம் வகுப்பு பதினொராம் ஆண்டென மாற்றியழைக்கப்பட்டது. பொதுவாக ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வைத்தே பெரிய பள்ளிக்கூடங்களுக்கான அனுமதிகள் தீர்மானிக்கப்படும். இப்போது நிலைமை மாற்றமடைந்ததால் பெரிய பாடசாலைகள் எல்லாமே ஆறாம் ஆண்டிற்கான நுழைவுத் தேர்வை நடாத்தி மாணவர்களுக்கான அனுமதியை வழங்கிக்கொண்டிருந்தன.

ஜனவரி 1987 இல் சரஸ்வதி வித்தியாலயத்தில் இருந்து யா/வேலணை சேர் வைத்தியலிங்கம் துரைசுவாமி மத்திய மகா வித்தியாலயம் என்கின்ற மிக நீண்ட பெயரால் அழைக்கப்படுகின்ற வேலணை மத்திய கல்லூரிக்கு மாறியிருந்தேன். இடைப்பட்ட ஒரு நாள் மாலைநேரம் உலங்கு வானூர்தி ஒன்றும், பொம்மர்கள் என்று அழைக்கப்படுகின்ற சியாமாசெட்டி ரக குண்டு வீச்சு விமானங்கள் இரண்டும் வந்து கா.பொ.இரத்தினம் அவர்கள் வீட்டின் மேல் தாக்குதலை நடாத்தி விட்டுச் சென்றிருந்தன. அதுதான் தீவகத்தில் நடாத்தப்பட்ட இரண்டாவது வான் தாக்குதல் (மதலாவது வான் தாக்குதல் 1986 ஆம் ஆண்டில் சுருவில் பகுதியில் நடாத்தப் பட்டிருந்தது). அந்தத் தாக்குதலில் இயக்கத்தால் வளர்க்கப்பட்ட இரண்டு குதிரைகள் கொல்லப்பட்டிருந்தன. அப்போதைய நாட்களில் குண்டு வீச்சு விமானிகள் தங்களுக்குள் உரையாடிக் கொள்வதை வானொலிகளின் பண்பலை (FM) அலைவரிசைகளில் எங்களால் செவிமடுக்கக் கூடியதாகவிருந்தது. யாழ்ப்பாணத்திற்கும் வேலணைக்குமான பயணத் தொடர்புகள் அராலிக் கடலினூடாகவும் தம்பாட்டிக் கடலினுாடகவுமே நடைபெற்றுக் கொண்டிருந்தன.

1987 மே மாத இறுதியளவில் யாழ்குடாநாட்டை கைப்பற்றும் வகையில் 'ஒப்பரேஷன் லிபரேஷன்' படை நடவடிக்கையினை பிரிகேடியர் டென்சில் கொப்பேகடுவ தலைமையிலான சிறிலங்காப் படைகள் மூர்க்கமாய் ஆரம்பித்திருந்தன. பலாலி படைத்தளத்திலிருந்து புறப்பட்ட படைகள் விமான மற்றும் கடற்படைத் தாக்குதல்களின் உதவியுடன் தொண்டைமானாறுப் பகுதியூடாக முன்னேறி வல்வெட்டித்துறையைக் கைப்பற்றி மேலும் முன்னேறி நெல்லியடி வரை வந்திருந்தனர். வடமராட்சி மக்கள் பெருமளவிலான உயிர் உடமை இழப்புகளுடன் யாழ் நகரின் ஏனைய இடங்களுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். மொத்தக் குடாநாட்டிற்குமான ஆனையிறவினுாடான உணவுப் பொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட உணவுப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் அகதிகளாகி வள்ளங்களினூடாக பாக்கு நீரிணையைக் கடந்து இந்தியாவில் தஞ்சமடையத் தொடங்கினர்.

ஈழத் தமிழ் மக்கள் தங்களுடைய மீட்பர்களாக இந்தியாவை நம்பிக் கொண்டிருந்தனர். இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் உயிருடன் இருக்கும் வரை, பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு பங்களாதேஷிற்கு உதவியது போன்று இலங்கையிலும் தமிழீழம் மலர்வதற்கு இந்தியா தன் படைகளை அனுப்பி உதவி செய்யும் என்கின்ற அதீத நம்பிக்கை ஈழத்தமிழர்களிடையே நிலவி வந்தது. தூரதிர்ஷ்ட வசமாக 1984 ஒக்ரோபர் 31 இல் இந்திரா காந்தி அம்மையார் கொல்லப்பட தமிழர்களிடையே அந்த நம்பிக்கை சற்றுக் குறைந்து விட்டிருந்தாலும், எந்தக் காலத்திலும் இந்தியா தங்களைக் கைவிடாது என்கின்ற அசையா நம்பிக்கை அவர்களிடையே இருந்தது. இப்போதும் இந்தியா தங்கள் உதவிக்கு வரும் என்று காத்திருக்கத் தொடங்கினர். ஆனாலும் ராஜீவ் காந்தி அவர்கள் தலைமையிலான இந்திய நடுவண் அரசு, இந்திராகாந்தி அம்மையாரைப் போன்று தமிழர்கள் மீது அதிக கரிசனை கொண்டிருந்ததாகத் தெரியவில்லையாயினும், யாழ்ப்பாணத்தில் உணவுப் பொருட்களுக்காய்த் தவிக்கும் மக்களுக்கான உணவுப்பண்டங்களை கப்பல் மூலமாக வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. மக்கள் எல்லோரும் இந்தி உணவுக் கப்பல்களின் வருகையை ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்திருக்கத் தொடங்கினர். கப்பல் புறப்பட்டு விட்டதாக சேதிவர பாடசாலைகளில் எல்லாம் எங்களிடையே மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. ஆயினும் அப்போதைய சிறிலங்கா அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியும் தங்கள் இறையாண்மைக் கடலுக்குள் இந்தியக் கப்பல்கள் நுழைவதை தமது கடற்படை அனுமாதிக்காது என்று அறிவித்திருந்ததால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் போர் மூண்டு பாகிஸ்தான் போன்று இலங்கையும் இரண்டாகப் பிரிந்து விடும் என்று அரசியல் அறிவில்லாத பெரும்மாலான மக்கள் கற்பனைகளில் மிதக்கத் தொடங்கினர்.

ஆயினும் இந்தியாவின் உண்மை முகத்தை ஏற்கனவே அறிந்திருந்த தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) 1982 ஆம் ஆண்டளவிலேயே இது பற்றிய எச்சரிக்கையினை 'வங்கம் தந்த பாடம்' - நூலினூடாக வெளிப்படுத்தியிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைப் போலவே புளொட்டின் தலைவர் உமாமகேஸ்வரன் அவர்களும் இந்தியா பற்றிய சரியான தீர்க்கதரிசனத்தினை வெளிப்படுத்தியிருந்தார். புளொட் தனது படைபலத் தேவைகளுக்கு இந்தியாவை மட்டுமே நம்பியிராமல் முதன்முதலாக பிறநாடுகளில் போராயுதங்களைக் கொள்வனவு செய்து அவற்றைக் கப்பல் மூலமாக இலங்கைக்கு கடத்தி வரும் வழியில் அந்த ஆயுதக்கப்பலை இந்தியா இடைமறித்துத் தன்வசப்படுத்தியிருந்தது. இந்திய ஆளும் வர்க்கம் எப்போதுமே அயல்நாடுகளின் பிரச்சனையைத் தனது சுயலாபத்திற்காகவே பயன்படுத்தி வந்திருக்கிறது. இது பற்றிய விழிப்புணர்வை தமிழ் மக்களிடையே ஏற்படுத்துவதற்காக 1985ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் யாழ் பல்கலைக் கழகத்தினரால் 'மாயமான்' என்கின்ற வீதி நாடகமும் அரங்கற்றப்பட்டு வந்து கொண்டிருந்தது. ஆனாலும் தமிழ் மக்களிடம் இந்திய நடுவண் அரசு பற்றிய மாயையினைக் களையக் கூடியதாக இருக்கவில்லை. அந்தளவிற்கு இந்தியா எங்களின் மீட்பர் என்கின்ற மயக்கம் தமிழர்களிடையே புரையோடிப்போய்க் கிடந்தது.

1987 ஜூன் 4ம் திகதி மதியம் எங்கள் நம்பிக்கைகளைப் பொய்யாக்குமாற் போல் அந்த சேதி வந்தது. இந்திய உணவுக்கப்பல்கள், இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு இலங்கைக் கடற்படையினால் அவை திருப்பி அனுப்பப்பட்டு விட்டன. மக்கள் மனங்களில் ஏக்கங்கள் குடிகொண்டன. அன்றைய மாலை யாழ்மக்கள் வித்தியாசமான இரைச்சல்களுடன் அதற்குமுன் என்றுமே பார்த்திராத போர்விமானங்கள் யாழ்வான்பரப்பினுள் சீறிப் பாய்ந்து தாழப்பறந்து வந்தன. கிலிகொண்டு மக்கள் பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்து கொண்டனர். ஆயினும் எந்தவொரு குண்டு வெடிப்பு ஓசையையும் கேட்க முடியவில்லை. தூரத்தில் இருந்தவர்கள் அந்த விமானங்களிலிருந்து பொதிகள் வீசப்படுவதை அவதானித்திருந்தனர். விமானங்கள் யாழ் வான்பரப்பை விட்டு வெளியேறியதும் மக்கள் விமானங்கள் பொதிகள் வீசிய இடங்களைச் சென்று பார்த்தபோது அவையெல்லாம் உணவுப் பொதிகளாய்க் காணப்பட்டன. அன்றைய இரவு இந்தியச் செய்தி, அது இந்தியாவின் மனிதாபிமான நடவடிக்கையான 'ஒப்பரேஷன் பூமாலை' என்பதாக அறிவித்தது.

சண்டை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. மக்களிடம் விடுதலைப் புலிகளின் படைபலம் பற்றியும் ஏனைய இயக்கங்களை தடை செய்தமை பற்றிய விமர்சனங்கள் எழலாயிற்று. அவர்களால்தான் தமிழர் படைபலம் குன்றிப் போய் இந்நிலை ஏற்பட்டதாகக் கதைக்கத் தலைப்பட்டார்கள். மாதம் ஒன்று ஓடி மறைந்து ஜூலை ஐந்தாம் தேதியும் வந்தது. அது ஈழப் போராட்ட வரலாற்றில் மிகமுக்கிமான நாளாகவும் அமைந்துவிட்டிருந்தது.

முதன்முதலாக தற்கொடைப் போராளி கப்டன் மில்லர் ஈழவிடுதலைப் போரில் புதியவொரு அத்தியாயத்தைத் தொடக்கி வைக்க மக்கள் மனதில் விடுதலைப் போர் வெற்றிபெறும் என்கின்ற நம்பிக்கை மறுபடியும் உண்டாயிற்று. அன்றைய தற்கொடைத் தாக்குதலில் நெல்லியடியில் அமைந்திருந்த இராணுவமுகாம் அழிக்கப்பட்டு பெருமளவிலான சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டிருந்தனர். பின் வந்த நாட்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிராபகரன் அவர்களை பேச்சுவார்த்தைக்காக வருமாறு இந்தியா அழைப்பு விடுத்தது. 24 ஜூலை 1987 இல் பிரபாகரன் அவர்கள் இந்தியா பயணமாக மக்கள் விடுதலை கிட்டிவிட்டதான மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். இந்தியாவிற்கு பேச்சுவார்த்தைக்கென அழைக்கப்பட்டு ஏறத்தாழ கைதியாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட நிலையில், 1987 ஜூலை 29 இல், சிறிலங்காத் தலைநகர் கொழும்பில், அப்போதைய இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அதைத் தொடர்ந்து இந்தியப் படையினர், அமைதி காக்கும் படையினராக வட கிழக்கு மாகாணங்களில் வந்திறங்கினர். பின் இந்தியாவின் தீர்வுத்திட்டம் திணிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் திரும்பிய பிரபாகரன் அவர்கள் 04 ஓகஸ்ற் 1987 இல் சுதுமலைப் பிரகடனத்தை வெளியிட்டு, இந்தியாவிடம் ஆயுதக் கையளிப்பதற்கு இணங்குவதாக அறிவித்தார்.

போர் நின்றுவிட்ட சூழ்நிலையில் எங்கள் காவலர்களாக இந்திய அமைதி காக்கும் படையினர் உலாவர, அவர்கள் செல்லும் வழிகள் எங்கணும் தமிழ் மக்கள் ஆராத்தி எடுத்து வரவேற்று தங்கள் பிரியத்தையும் மகிழ்ச்சியையும் வெளிக்காட்டினர்.




Wednesday, April 13, 2011

வேரென நீயிருந்தாய்...(25)

கப்பல் பயணத்தின் அலுப்புத்தீர்வதற்கு இரு நாட்கள் எடுத்திருந்தது. மறுநாள் மாலை பிளேன்ரீ-யுடன் வறுத்த கச்சான் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அம்மா அருகில் வந்து அமர்ந்தார். சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு,

“ஜேன்! இந்தா! இந்தக்கடிதத்தை வாசி!

அம்மாவை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.

“அக்காட்ட இருந்து வந்தது. நீ ஆறுதலா இருக்கேக்க வாசிக்கட்டும் எண்டுதான் இவ்வளவுநாளும் தராம இப்பதாறன்.

எங்களை விட்டுப் பிரிந்ததன் பின்னர் அக்காவிடமிருந்து வந்த முதல் கடிதம் அது. ஆவலுடன் வாசிக்கலானேன். எப்படியோ அவள் என்னைப்பற்றி அறிந்து விட்டிருக்கிறாள். தன்னுடைய சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வதற்காகவே அந்தக்கடிதம். காடுகளில் நாவற்பழங்களைக் காணும் நேரங்களில் என் நினைவுகள் தன்னுள் துளிர்த்தெழுவதை அவளால் தடுக்க முடியாமலிருக்கிறது.

அது இந்திய படையினரின் ஆக்கிரமிப்புக்கு சிலவருடங்கள் முற்பட்ட சரஸ்வதிபூசைக் காலம். வங்களாவடியில் இருக்கும் சரஸ்வதி வித்தியாலயத்திலேயே அக்காவும் நானும் கல்வி கற்றுக் கொண்டிருந்தோம். சரஸ்வதி பூசைக்காலங்களில்தான் நாவற்பழங்களும் மரங்களில் காய்த்துக் குலுங்கும். நாவற்பழம் கிரந்தி என்று சொல்லி வீட்டில் சாப்பிட விடமாட்டார்கள். ஆனால் அக்காவிற்கோ நாவற்பழங்களின் மேல் அப்படியொரு கொள்ளைப்பிரியம். அதிலும் ஔவைப்பாட்டியின் சுட்டபழம் சுடாதபழம் கதையைப் பாடப்புத்தகத்தில் படித்த பின்னர் அவளுக்கு சுட்டபழம் வேணும், ஆனா அது சுடாம இருக்க வேணும். அதுக்கு அவளுக்கு நான் வேணும்.

நாங்கள் பாடசாலை செல்லும் வழியில்தான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கா.பொ. இரத்தினம் அவர்களின் வீடு இருக்கிறது. அந்த வீட்டிற்குப் பின்னால் உள்ள காணியொன்றில் பெரிய நாவல் மரமொன்று இருந்தது. அதன் பழங்கள் திராட்சைப்பழ அளவில் இருக்கும். அதன் சுவையும் தனித்துவமானது. பாடசாலை விட்டு அவ்விடத்திற்கு வந்ததும், அக்கா என்னை மரத்தில் ஏறி தனக்கு நல்ல பழுத்த பழங்களாகப் பறித்துத் தரும்படி கெஞ்சுவாள். அவளுக்கு நிலத்தில் விழுந்த பழங்களை உண்பதற்குப் பிடிக்காது. ஒருமுறை இப்படித்தான் ஏறிக் கொண்டிருக்கும் பொழுது தவறி விழுந்து, நல்ல வேளையாக காலெல்லாம் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பித்துக் கொண்டேன். பொதுவாக, நாவல் மரங்களிலிருந்து விழும் ஆண்பிள்ளைகள் தப்பித்துக் கொள்வது அரிது என்று ஊரில் சொல்வார்கள். அது நாவல் மரத்திற்கேயுரிய நாணம் என்று சொல்லி ஆண்பிள்ளைகளை நாவல்மரங்களில் ஏறவிடுவதில்லை. அந்நிகழ்ச்சியில் அம்மாவிடம் வேண்டிக் கொண்ட அர்ச்சனையின் பின் அந்த வருடத்திற்கு அக்காவின் நாவற்பழ ஆசை அடங்கிப்போயிருந்தது. அடுத்த வந்த வருடம் கா.பொ.இ வீட்டில் இயக்கக்காரர்கள் வந்து முகாமிட்டிருந்தார்கள். அவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப். ஐச் சார்ந்தவர்கள் ஊரவர்கள் பேசிக் கொண்டார்கள். அப்போது அந்த வீட்டின் முன்னே ஒரு பீரங்கிக்குழல் நீண்டிருக்கும். அதன் வாய் சாக்குப் போட்டு மூடப்பட்டிருக்கும். பாடசாலை செல்லும் போதும் வரும்போதும் அந்த பீரங்கிக்குழலை வேடிக்கை பார்ப்பது எங்களுக்கு வாடிக்கையாகிப் போனது.

பின் வந்த சில நாட்களில் ஈ.பி.ஆர்.டில்.எப் இனர் அந்த வீட்டினை விட்டு வெளியேற வேறொரு இயக்கத்தினர் அந்தவீட்டினை தங்களின் தங்ககமாக மாற்றிவிட்டிருந்தனர். அந்தக் காலங்களில் ஊரில் ஈறோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, ரெலா, ரைகர்ஸ், புளொட் என அறுபத்தெட்டு இயக்கங்கள் இருந்தனவாயினும் ரெலோ, ரைகர்ஸ், ஈ.பி. (ஈ.பி.ஆர்.எல்.எப்) புளொட் என்பனவே ஆயுத ரீதியில் பலம் மிக்கவையாக மக்களிடையே பிரபல்யமாகத் தொடங்கியிருந்தன. படித்தவர்கள் மத்தியில் ஈறோஸ் செல்வாக்குப் பெற்றிருந்தது. மற்ற இயக்கங்களைப் போலன்றி புளொட் பொதுமக்களிடமே தங்களுக்கான உணவுப் பொட்டலங்களைப் பெற்றுக்கொண்டிருந்ததுடன் இராணுவ ரீதியிலான தாக்குதல்களை அது பெருமளவிற்கு நடத்தியிருந்ததாகவும் தெரியவில்லை.

'காத்தடிக்குது புயலடிக்குது காரைநகரில ஈ.பி அடிக்குது போறவழியில ரெலோ அடிக்குது வாற வழியில ரைகர் அடிக்குது வயிறு முட்ட புளொட் அடிக்குது'

என மக்களிடையே அதன் செல்வாக்கும் குறையத் தொடங்கியிருந்தாலும் கோட்டையில இருந்து சிறிலங்காப் படையினர் எறிகணைகளை ஏவும் நேரங்களைக் கணக்கிட்டு அபாய ஒலி எழுப்பி யாழ்நகர் மக்களை எச்சரிக்கை செய்யும் பணியை அது செவ்வனே செய்து கொண்டிருந்ததுடன் யாழ் சத்திரச் சந்திக்கு அண்மையில் மணல்மூட்டைகளால் காப்பரண் அமைத்து, அந்த வழியே யாழ் கோட்டையிலிருந்து வரும் துப்பாக்கிச் சூடுகளையும் ஏவுகணைகளையும் அது தடுத்துக் கொண்டிருந்தது. அந்தக்காலத்தில் காரைநகர் கடைற்படை முகாமே ஈ.பி.ஆர்.எல்.எப். இனரின் பிரதான இலக்காக இருந்தது. அடிக்கடி அங்கே சென்று சொறிவதை அவர்கள் வாடிக்கையாக்கிக் கொண்டிருந்தனர்.

திடீரென் ஒருநாள் மதியம் போல் அப்பா கடையை மூடிவிட்டு வேகமாக வீட்டுக்கு வந்தவர்,

“பெடியள் தங்களுக்குள்ளையே அடிபட வெளிக்கிட்டிட்டாங்களாம். இண்டைக்கு இஞ்சையும் ரெலோவும் ரைகர்ஸ்சும் சண்டை பிடிக்கப் போறாங்களாமெண்டு கேள்வி. ஒருத்தரும் ஒருஇடமும் போகாம வீட்டுக்குள்ளேயே இருங்கோ” என்றார்.

மாலை மூன்று மணியளவில் சடசடக்கத் தொடங்கிய துப்பாக்கி வேட்டுக்கள் மாலை ஏழு மணியின் பின்னரே ஓய்விற்கு வந்தன. அன்றைய சண்டையில் தபால் கந்தோரடியில் நின்று விடுப்புப்பார்த்த ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.

ஒரு பிள்ளை ரைகர்ஸ்ஸிலும் இன்னொருபிள்ளை வேறொரு இயக்கத்திலும் இருந்த குடும்பத்தவர்கள் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தார்கள். சில தினங்களில் வடக்கு கிழக்கு ரைகர்ஸின் கட்டுப்பாட்டுக்குள் வர ஏனைய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உயிர் பிழைப்பதற்காய் தப்பி வெளி நாடுகளுக்கு ஓடிக்கொண்டிருந்தனர்.



Thursday, March 31, 2011

வேரென நீயிருந்தாய்...(24)

பொறியியற் கற்கைநெறியின் இரண்டாம் வருடத்தின் இறுதித் தவணைக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கையில், நாங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள எந்திரிவியற் பிரிவுகளின் விபரங்கள் அறிவிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் இயலுமானவரை நதீஷாவிற்கும் எனக்குமான இடைவெளியினை அதிகரித்திருந்தேன். அவளிடமிருந்து விலகியிருக்க நான் விரும்புவதை அவள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. அவளது மனதை நோகடிக்காத வண்ணம் இந்த கற்கையாண்டின் இறுதியுடன் அது தானாகவே நடந்துவிடும் என்கின்ற திடமான நம்பிக்கையும் எனக்கு இருந்ததால் நானும் அதைப்பற்றிப் பின்னர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. எப்படியும் அவள் மின்னியல்சார் எந்திரவியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பாள் என்றே எண்ணியிருந்தேன். இந்தக் கற்கையாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் நாங்கள் எமக்கு விருப்பமான கற்கை நெறிகளுக்கு விண்ணப்பித்திருந்ததை குறிப்பிட்டு அதை உறுதிப்படுத்துமாறு கேட்கப்பட்டிருந்த நிரலில் அவள் மின்னியல் துறைக்கே விண்ணப்பித்திருந்தாள். அந்த விபரம் வெளியான அன்றே என்னிடம் வந்து,

“நீங்க உண்மையிலேயே சிவிலா செய்யப் போறீங்க?” - ஆச்சரியமாய்க் கேட்டாள்.

“ஓம்!”

“ஏன்? உங்களுக்கு elect செய்ய விருப்பமில்லையா?”

“இல்லை. எனக்கு civil தான் செய்ய விருப்பம்.”

“ஓ! நீங்க முந்தி சொன்னது தான். but நான் நம்பேல்லை. நீங்க பொய் சொலலுறது எண்டுதான் நான் நம்பினது.” - அவள் முகத்தில் இலேசான கவலைக்கீற்றுகள் வந்து செல்வதை அவதானிக்கக் கூடியதாகவிருந்ததாயினும் அதைப் பற்றிய எண்ணங்கள் தொடர்ந்து விரிவதை அனுமதிக்காமல் அதை அப்படியே விட்டுவிட்டிருந்தேன்.


அன்றைய மாலை நாங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கும் கற்கைநெறிகளுக்கான இறுதி செய்யப்பட்ட விபரங்கள் வெளியிடப்பட்டிருந்தது. அதில் நதீஷாவும் குடிசார் எந்திரிவியலுக்கே (Civil Engineering) விண்ணப்பித்திருப்பதும் அத்துறைக்கே அவள் தெரிவு செய்யப்பட்டிருப்பதும் வியப்புடனான அதிர்ச்சியாயிருந்தது. இன்னும் இருக்கும் இரண்டு வருடங்களுக்கும் மீண்டும் அவளுடன்தான் ஆய்வுகூடங்களில் செலவிடவேண்டியிருக்கப் போகின்றதே என்கின்ற ஏக்கம் வந்தது. எதற்காக இவள் civil-ற்கு வந்திருப்பாள்? எனக்காகவா? அப்படியானால் அவள் என்னைக் காதலிக்கின்றாளா?

சந்தேகம் வலுக்கத் தொடங்கியிருந்தது. இதுவரை காலமும் சாடையாக அந்தச் சந்தேகம் இருந்திருந்தாலும், அவள் friendly-யாகப் பழகுவதை நான்தான் தப்பாக அர்த்தப்படுத்திக் கொள்கின்றேனோ என்கின்ற எண்ணமே மிகையாகவிருந்தது. இப்போது மனது குழம்பத் தொடங்கியது. பல்வேறு சிந்தனைகளும் மனதிற்குள் ஓடின. ஒருவேளை என்னைப் போலவே அவளுக்கும் நான் தன்னைக் காதலிக்கின்றேனோ என்கின்ற சந்தேகம் இருந்து, என்னிடமிருந்து விலகியிருக்க விருப்பப்பட்டு அதனால் என்னை elect செய்யச் செய்வதற்காக இப்படி நாடகமாடியிருக்கவும்கூடுமோ. ச்சே! ஏன் இப்படியெல்லாம் என்மனம் கேவலமாய்ச் சிந்தனையைச் சிதற விடுகின்றது?

என்னைப் போலவே அவளும் குடிசார் எந்திரவியல் கற்கை நெறிக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறாள். இந்தக்கணத்தில் அது மட்டுமே ஆதார உண்மை. ஏனையவையெல்லாம் அதற்கான காரணத்தைச் சிருஷ்டிக்கும் என்னுடைய மனப் பிரமைகளே! உள்மனம் விழிப்படைய சிந்தனை கலைந்தது.

எமக்கு விடப்பட்டிருந்த ஒருமாத கற்கை விடுமுறை கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் மேலுமொரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்ட்டிருந்தது. பரீட்சைகள் யாவும் முடிவடைய கிடைத்த ஒருமாதகால விடுமுறையைக் கழிக்க ஊருக்குப் புறப்பட ஆயத்தமானோம்.

இன்னமும் யாழ்குடாநாட்டிற்கும் ஏனைய பிரதேசங்களுக்கமான போக்குவரத்து சீராக்கப்பட்டிருக்கவில்லை. திருகோணமலைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பற்போக்குவரத்துக்கூட இடையிடையேதான் நடைபெற்றுக்கொண்டிருந்தது. கப்பல் யாழ் செல்லும் சரியான திகதி தெரியாதிருந்தாலும் யாழ் செல்லும் மாணவர்கள் யாவரும் இணைந்து கப்பலில் செல்வதென்று முடிவாகி ஒருசில இடைவெளிகளில் திருகோணமலையினை நோக்கி எங்கள் பயணத்தை மேற்கொண்டிருந்தோம்.

திருகோணமலைக்குள் செல்வதற்கு ஐந்து இடங்களில் சோதனைச் சாவடிகளில் ஏறியிறங்கிச் செல்கின்ற காலம் அது. அப்போதெல்லாம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஒன்றுகூடல்களில் யாரேனும் elect செய்யும் மாணவர்களைக் கடிப்பதற்கு இந்தத் திருமலைப் பயணம் ஒரு வாய்ப்பாக அமைந்து விடும். “சிவில் கட்ட ஒக்கம பயிண்ட” (civil ஆக்கள் எல்லாரும் இறங்குங்க) எண்டு check point-ல ஆமிக்காரன் சொல்ல இவர் bus-ஐ விட்ட இறங்கயில்லை. பிறகு ஆமிக்காரன் வந்து “அய்? ஒயா கமுதாவத?” (ஏன்? நீங்க படையினனா?) எண்டு கேக்க “ந, ந, மம elect கரணவா” (இல்லை இல்லை. நான் elect செய்யிறன்) எண்டு சொன்னேராம்”. இப்போது அந்த சோதனைச்சாவடிகளை நாங்களும் அடைந்திருந்தோம். எங்களுடன் வந்திருந்த ஒரு மாணவன் நிறையப் பொருட்களை வைத்திருந்ததால் அவற்றைச் சோதனைக்குக் காட்டுவதற்காக நானும் அவனுடனேயே நின்றிருந்தேன்.

“ஒயா மொணவத கரண்ணே?” (நீங்க என்ன செய்யுறீங்க?)

“மம இஞ்சினேருட்ட இகணகன்னவா” (நான் இஞ்சினியருக்குப் படிக்கிறன்)

“ஐசியெக்கத் தெண்ட” (அடையாள அட்டையைத் தாருங்கள்)
-கொடுத்தான்.

“மே மொணவத?” (இது என்ன?)

”மே இங்குறு” (இது இஞ்சி)

“மேக்க?” (இது?)

”மேக்கத் இங்குறு” (இதுவும் இஞ்சி)

“அற bag-க்கெக்க மொணவத தியன்னே?” (அந்த bag-க்குக்குள்ள என்ன இருக்குது?)

“அற bag-க்கெக்கத் இங்குறுதட தமாய்த் தியன்னே” (அந்த bag-க்குக்குள்ளயும் இஞ்சிதான் இருக்குது)

“ஒயா இஞ்சினேருட்ட இகணகன்னவாத நத்தங் இங்குறு business கரணவாத?” (நீங்க இஞ்சினியருக்குப் படிக்கிறீங்களா அல்லது இஞ்சி வியாபாரம் செய்யிறீங்களா?)
-நக்கலடித்தான் அந்தப் படையினன்.

அக்கால கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ளி இஞ்சி போன்றவைக்குப் பெருந்தட்டுப்பாடாக இருந்தது. சீரற்ற போக்குவரத்துக் காரணமாக திருகோணமலையில் ஐம்பது ரூபாவாக விற்கும் ஒரு கிலோ இஞ்சியின் விலை யாழ்ப்பாணத்தில் இரண்டாயிரம் ரூபாவைத் தொட்டிருந்தது. ஆயினும் நாங்கள் பயணித்த அந்தக் கப்பல் யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்ததன் பிற்பாடு இஞ்சி ஒருகிலோ அறுநுாறு ரூபாயாகக் குறைந்திருந்தது.


Sunday, February 13, 2011

நட்சத்திரங்களுடன் நட்பாய்ச் சிரித்து. . .

ஏகாந்த வெளிகளில்
தனித்திருக்கும்
நிசப்த இரவுகளில்
வானத்தில் கண் சிமிட்டும்
நட்சத்திரங்களுடன்
நட்பாய்ச் சிரித்தவாறே. . .


இணையத் துடிக்கும்
இமைகள் இரண்டினதும்
தவிப்புகளைத் தவிர்த்தவாறே. . .


தாயகக் கனவினை நெஞ்சினிலும்
கயவர் வரவினை விழிகளிலும்
ஏந்தியவாறே. . .


தேச சேவையில்
தேக தேவை மறந்து
காப்பரணுள்
காவலுக்கிருக்கையில்
பௌர்ணமி கடந்த
பத்தாம் நாள் நிலவாய்
மெலிதாயுன் நினைவுகளும்
மனதினுள் படரப் பார்க்கும்


உன் ஸ்பரிசங்களின்
சிலிர்ப்புகளாய் பனிக்காற்றின்
சில்லிடல்கள்


தாய்தந்த யாக்கையிலும்
தாயகத்தின் இருப்பை
அதிகமாய் நேசிக்கும்
உனக்கும் எனக்கும்
விடுதலையின் வாசிப்பே
சுவாசிப்பாக. . .
அன்பின் யாசிப்பு
இரண்டாம் பட்சமென்பதில்
இரண்டற்ற கருத்து.


என்னைப் போலவே
எம் தேசத்தின்
இன்னோர் மூலையில்
சென்றிக்கு நிற்கும்
என்னுயிரே, என்னவளே!


என் தோள்களில்
உன்கர மாலையாக
ஏ.கே.யின் தாங்குபட்டி.


என் நெஞ்சழுத்தும்
உன்மார்புக் கச்சைகளாய்
ஹோல்சர்கள்,
உறக்கங்களில் கூட
இணைபிரியாமல்.


அய்யர் மாரிலும்
அதிகமாய்
அருந்ததி நட்சத்திரம்
உனக்கும் எனக்குமே
பழக்கப் பட்டிருக்கும்.


தென் துருவத்துடன்
முப்பது பாகையில்
சாய்ந்து கிடக்கும்
தென்சிலுவை-யாய். . .
நெஞ்சுக்கூடு தழுவியாடும்
நஞ்சுக்கூடாய்
தேசநினைவுகளுடன்
உன்ஞாபகங்கள் என்னில்
பிணைந்து விட்டிருக்கின்றன.


என்னுயிரானவளே!
என்னைப் போலவே
தனித்திருக்கும் வேளைகளில்
உனக்குள்ளும் என் நினைவுகள்
இனித்திருக். . .


ஓ!
சற்றுப் பொறு பெண்ணே!
இரவின் நிசப்தத்தைக்
குலைத்துக் கொண்டு
சரக் சரக் சப்திப்பு.


கரங்களில் றைபிள் இறுக,
சட்டெனக் குனிந்து
உருண்டு தவழ்ந்து
பதுங்கி நிலையெடுத்து
சுடுகலனை மேலுயர்த்தி
சுட்டுவிரல் ட்ரிகர் பதித்து
இருதயத்துடிப்பின்
இருநூறு ஹேட்ஸ் அதிர்வுடன்
உற்றுப் பார்க்கையில். . .


அடச்சே!
மந்தை விட்டு
மாறிவந்த மாடொன்று.


ம்!,
இனியென்ன?
மறுபடியும் விடியும்வரை
நட்சத்திரங்களுடன்
நட்பாய்ச் சிரித்தவாறே. . .

Wednesday, January 26, 2011

வேரென நீயிருந்தாய்...(23)


1999 ஆம் ஆண்டு தமிழர் திருநாள். வழமை போன்று பேராதனை குறிஞ்சிக்குமரன் ஆலயத்தில் இம்முறையும் சிறப்பாகப் பொங்கல்விழா நடைபெற்றிருந்தது. தீபன் காலையிலேயே எழுந்து கோவிலுக்குச் சென்று விட்டிருந்தான். காலைக் குளிருக்கு படுக்கையை விட்டு எழும்பும் பஞ்சியில் கிடந்தவெனக்கு பசிக்க ஆரம்பித்தது. எழுந்து குளித்துவிட்டு வழமையாகச் செல்லும் அங்குணாவலை 'நாணா' கடையை அடைந்தேன்.

பற்றீஸ்ஸுகள் கடும் மரமஞ்சள் நிறத்தில் கண்ணாடிப் பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும் சலிப்பு வந்தது. இதுகால வரையிலான நாணா கடையின் வாடிக்கையாளர் அனுபவத்தில் பற்றீஸின் நிறத்தை வைத்தே அதன் தயாரிப்பு தினத்தை அறிந்துவிடும் வல்லமையை நாங்கள் எல்லோருமே பெற்றிருந்தோம். எப்படியும் இந்தப் பற்றீஸ் நான்கு தினங்களுக்கு முன்னர்தான் தயாரித்ததாக இருக்க வேண்டும். முதல்நாளில் இளமஞ்சள் நிறத்தில் காணப்படும் பற்றீஸ்ஸுகள் விற்றுத்தீராவிட்டால் அடுத்துவரும் நாட்களில் மீண்டும்மீண்டும் அப்படியே எண்ணெய்ச்சட்டிக்குள் போய்வர அதன் நிறம் கொஞ்சமாக மாறத் தொடங்கிப் பின் கடும் மரமஞ்சள் நிறத்தினை அடைந்துவிடும்.

“நாணா! இது இண்டைக்கு செய்த பற்றீஸா? நிறம் ஒருமாரி இரிக்கே (ஒருமாதிரி இருக்கே)”
என்கின்ற எங்களின் ஆரம்பகாலக் கேள்விகளுக்கு இப்போதும் அவரின் பதில்

“ஆ! இன்னிக்குத்தான் செஞ்ச. மிச்சம் கரிகிப் போய்ச்சி” (இன்றைக்குத்தான் செய்தது. நல்லாக் கருகிப் போய்விட்டது)

அறியாதவர்கள் ஒருவாய் கடித்ததும் உள்ளிருக்கும் ஊசிப்போன கறியின் புளிப்புத்தன்மையை உணர்ந்து அதை அப்படியே துப்பி விடுவார்கள்.

“நாணா! பாண் பாகயாயும் மீன் ஆணமும் குடுங்க” (பாண் அரை றாத்தலும் மீன் குழம்பும்)

நாணா கடையில் உணவருந்திவிட்டு வீட்டினை அடைகையில் தீபன் வந்திருந்தான்.

“என்னடாப்பா! இண்டைக்கும் நாணாகடை தானா?”

“ஓமடா! எப்பிடிப் போச்சு பொங்கலெல்லாம்?”

“ம்.. நல்லா இருந்துது. நீதான் கன விசயங்களை மிஸ் பண்ணீற்றாய்”
சொல்லிவிட்டு அவன் என்னைப் பார்த்துக் கொடுப்புக்குள் சிரிப்பதாய்ப் பட்டது.

“மச்சான் மச்சமில்லாமல் எனக்குச் சாப்பாடு இறங்காதெண்டு உனக்குத் தெரியும்
தானேடா. பிறகேன் வாயைக் கிளறுறாய்?”

“அம்மாண நீயொரு லெப்பையடா நான் என்ன, நீ புக்கையை மிஸ் பண்ணீற்றியெண்டா சொன்னான்? ஆனா மச்சான் அடுத்த தைப்பொங்கலுக்கு நான் கோயிலுக்குப் போறனோ இல்லையோ நீ கட்டாயம் போவியடா. எவ்வளவு பந்தயம் வேணுமெண்டாலும் நான் பிடிக்கிறன்.”

“சரியடாப்பா! அண்டைக்குச் சூரியன் மேற்கால உதிக்குமெண்டால் வேறென்ன செய்யேலும்.”

“சூரியன் மேற்கால உதிக்குதோ கிழக்கால உதிக்குதோ எனக்குத் தெரியாது. ஆனா இனி உனக்குத் தெற்காலதான் உதிக்கும்.”

“அது எங்கையெண்டாலும் உதிக்கட்டும். உதிக்கேக்குள்ள அதைப் பாப்பம். இப்ப நீ பொங்கல் கொண்டாந்தனியே (கொண்டு வந்தனியோ) இல்லையோ?”

“இனி நான் ஏன்ராப்பா உனக்குப் புக்கை கொண்டு வரோணும். அதுக்குத்தான் வேறையாக்கள் வந்திற்றினமே. இனி நாங்க கொண்டந்தாலும் நீங்க சாப்பிட அவை விடுவினமா?”

“இஞ்சை வா! இப்ப என்ன கதைக்கிறாய் நீ?”

“நான் கதைக்கிறது மட்டும்தான் மச்சான். எண்டாலும் நீ காய்தான்ரா! கியல வெடக் ந (சொல்லி வேலையில்லை) மச்சான். அது சரியடாப்பா! பிறகு வீட்டில பொங்கேக்குள்ள சர்க்கரைப் பொங்கல் பொங்குவீங்களா இல்லாட்டி கிரிபத் (பாற்சோறு) தானா?”

இவன் என்னத்தைப் பற்றிக் கதைக்கிறான்? எனக்கு மண்டை காயத் தொடங்கியது.

“அம்மாண வாற ஆத்திரத்துக்கு, இப்ப என்னத்தைப் பற்றி நீ கதைக்கிறாய்?”

“இப்பையேன் நீ என்னோட ஏறுறாய்?”

“நீதானே என்னோட சும்மா சொறிஞ்சு கொண்டிருக்கிறாய்?”

“உன்ரை ஊரில வைச்சு நானெல்லாம் உன்னோட இனி சொறியேலுமாடாப்பா?”

“இப்ப நீ என்ன சொல்ல வாறாயெண்டு விளங்குது. அம்மாண, மகனே உனக்கு எத்தின தரம் சொல்லிப்போட்டன், இப்பிடியெல்லாம் கதைக்காதை எண்டு. பிறகென்னத்துக்குப் புடுங்கிக் கொண்டு நிக்கிறாய்?”

“இல்லை மச்சான், எனக்கெண்டா அவள் உன்னில சரியா மனப்படுகிறாள் போல இருக்கடா. இண்டைக்கு எங்கட batch தமிழ்ச் சரக்குகளோட அவளும் கோயிலுக்கு வந்தவளடா”

“பேய்ப்... அவள் வந்தா அதுக்கு நான் என்ன செய்யிறது? என்னோட இனிமேல் இதைப் பற்றிக் கதைச்சியெண்டால் பிறகு அம்மாண நான் நானா இருக்கமாட்டன். சொல்லிப்போட்டன்.”

அதன் பின்னர் ஆய்வுகூடங்களுக்கு செய்முறை வகுப்பகளுக்குச் செல்வது வெறுப்பைத் தர ஆரம்பித்திருந்தது. கடவுளே third year-ஆவது இவள் வேற field-இற்குப் போய்விட வேண்டுமென மனம் அங்கலாய்க்கத் தொடங்கியது. இயன்ற வரைக்கும் ஆய்வகூடங்களில் நதீஷாவுடனான உரையாடல்களை, அவை பாடசம்பந்தமாக இருப்பினும் கூட, தவிர்க்க ஆரம்பித்திருந்தேன்.

அடுத்து வந்த சில வாரங்களில் எங்கள் பிரிவிற்கான ஆண்டுச் சுற்றுலா வந்திருந்தது. இம்முறை அது நுவரேலியாவில் உள்ள உலகின் முடிவிடத்தை (world's end) நோக்கியதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நதீஷாவும் இதில் பங்குபற்றினால் சிலவேளைகளில் தேவையில்லாத கிசுகிசுக்களுக்கு ஆளாகவேண்டிவருமோ என்கின்ற தயக்கம் இருந்தாலும், நுவரெலியாவின் குளிரை அனுபவிக்கவும் உலகின் முடிவிடம் என்று சொல்லப்படுகின்ற அந்தப் பிரதேசத்தைச் சென்று பார்க்கும் ஆவலிலும் சுற்றுலாவிற்குச் செல்ல இணங்கியிருந்தேன்.


இம்முறைச் சுற்றுலாவில் நதீஷா பங்குபற்றவில்லை என்பதை அறிநததும் மனதிற்குள் நிம்மதி வந்தது. காலை உணவினை நுவரெலியாவில் முடித்து விட்டுப் பின்னர் உலகின் முடிவிடத்தை நோக்கி எங்கள் பயணம் குதூகலமாக ஆரம்பித்தது. இதற்கு மேல் பேரூந்தில் செல்ல முடியாது என்று சொல்லி எங்களை நடந்து போகச் சொன்னார்கள். அனைவரும் பேரூந்துகளிலிருந்து இறங்கி சிறுசிறு குழுக்களாக உலகின் முடிவிடம் என்று சொல்லப் படுகின்ற பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். இடையிடையே பலரும் குழுக்கள் குழுக்களாக புகைப்படம் எடுத்துக் கொள்வதைப் பார்க்கையில் ஏனோ தெரியவில்லை நதீஷாவின் நினைவு மனதிற்குள் வந்து போனது. யார் வரவில்லை என்று ஆரம்பத்தில் சந்தோஷப் பட்டிருந்தேனோ, இப்போது அவள் வரவில்லை என்பதற்காய் என்மனம் ஏங்குகின்றதோ என்கின்ற சந்தேகம் எழுந்தது.

அவள் வந்திருந்தால் எப்படியும் ஒரு புகைப்படமாவது எடுப்பதற்கு அவள் அழைத்திருப்பாள். இப்போது அழைப்பதற்கு யாருமேயில்லாததால் தான் தனிமையாய் உணர்கிறேன். அதனால் தான் அவளைப்பற்றி நினைக்கின்றேன் என்பதை என்மனது ஏற்பதாய்த் தெரியவில்லை. அதையும் மீறி ஏதோவோர் ஈர்ப்பு அவளிடம் ஏற்பட்டிருக்கின்றதோ என்கின்ற சந்தேகம் மனவுளைச்சலைக் கொடுத்தது.

சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு என்பது போல் இப்போது, ஆரம்பத்திலிருந்த மகிழ்ச்சி மறைந்து விட்டிருந்தது. எனக்குள் காதல்பூ முகிழ்க்கத் தொடங்குகின்றதோ என்கின்ற சந்தேகம் மிகுந்த மனச் சஞ்சலத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது. இதெல்லாம் உனக்குச் சரிவராது அப்படியிருந்தால் அதை முளையிலேயே கிள்ளியெறிந்து விடவேண்டுமென அடிமனம் ஆணையிடத் தொடங்கியது. எப்படி எனக்கு காதல், அதுவும் இவளிடம் வரமுடியும்? அப்படியிருந்தாலும் இது வெறுமனே இனக்கவர்ச்சியாகத்தான் இருக்குமேயன்றி ஆத்மார்த்த காதலாக இருக்க முடியாது. இவ்வளவு நாள் பக்கத்திலிருந்து பழகிய பழக்கதோஷம், இப்போது அவள் இல்லையென்றவுடன் மனதில் சிறு ஏக்கத்தைக் கொடுத்திருக்கின்றது. அவ்வளவு தான். இனிமேல் இது தொடர்பாக மிகவும் விழிப்பாக இருக்க வேண்டுமெனத் தீர்மானித்துக் கொண்டேன்.



Thursday, December 23, 2010

வேரென நீயிருந்தாய்...(22)

அன்றைய விளக்கத்தின் பின்னர் நதீஷா பெரிதும் மாறிப் போயிருந்தாள். இயன்றவரையிலும் ஆங்கிலத்தில் உரையாடுவதைத் தவிர்த்து தமிழிலேயே என்னிடம் உரையாடலைத் தொடர்ந்து கொண்டிருந்தாலும் எனக்குள் அவள் மீதான அச்சம் முற்றுமுழுதாக விலகியிருக்கவில்லை. எதற்காக இவள் தமிழில் இவ்வளவு ஆர்வமாக இருக்கின்றாள் என்கின்ற சந்தேகம் மனதைக் குடைந்து கொண்டிருந்தது.

“உங்கள் நண்பரின் நண்பன் உளவாளியாக இருக்கலாம்.” என்கின்ற வாசகங்களை 95 இற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் பரவலாகக் காணக்கூடியதாக இருந்திருந்தது. அக்காலப்பகுதியில் உளவாளிகள் அதிக அளவில் ஊடுருவியிருப்பதாக தெரிய வந்திருந்தது. 1991 இல் ஆனையிறவுப் படைத்தளத்தின் மீதான ஆகாய கடல் வெளித் தாக்குதல் தோல்வியில் முடிவடைந்திருக்கையில் யாழ்குடா நாட்டிற்கும் வன்னிப்பெருநிலப்பரப்பிற்குமான போக்குவரத்துத் தொடர்பு ஆட்டம் கண்டிருந்தாலும், பின்னர் கட்டைக்காடு வெற்றிலைக்கேணி தொடக்கம் ஆனையிறவு வரை நீண்டு அமைக்கப்பட்டிருந்த சிறிலங்கா இராணுவ வேலிகளை பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு அது அகற்றி விட்டிருந்தது. ஆயினும் ஆனையிறவுத்தளம் மீதான முற்றுகையை உடைப்பதற்காய் தரையிறக்கப்பட்டிருந்த படையினர் கட்டைக்காடு வெற்றிலைக்கேணிப் பிரதேசங்களில் நிரந்தரப் படைத்தளங்களை அமைத்துக் கொண்டு விட்டிருந்ததால் இப்போது ஊரியான் கொம்படியூடான சேற்று நிலப் பகுதியே வன்னியையும் யாழ்குடாவையும் இணைக்கும் போக்குவரத்துப் பாதையாக மாறிவிட்டிருந்தது. பொதுமக்கள் பயணம் செல்லும் அந்தப் பாதையில் ஒரு வெடிகுண்டுத்தாக்குதலைத் தன்னுடைய உளவாளிகைளைக் கொண்டு நடாத்தி அதன்மூலம் மக்களைப் பேரச்சத்துக்குள் தள்ள முயன்ற சிறிலங்காப் படைகளின் முயற்சி பிசுபிசுத்துப் போயிருந்ததை அடுத்து, மக்களிடையே உளவாளிகள் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகவே அவ்வாறான வாசகங்கள் யாழ்குடாவெங்கும் பரவலாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. “எல்லாவற்றையும் சந்தேகி” என்கின்ற மனநிலையை அந்தச் சூழ்நிலை உண்டாக்கி விட்டிருந்தது. ஆதலினால் இப்போது நதீஷா மீதும் இலேசான சந்தேகம் துளிர்விட ஆரம்பித்திருந்தது.

சிலநாட்களி்ன் பின்னர் வந்துபோன மாவீரர்தின இறுதிநாள் நிகழ்ச்சிக்கு வான்புலிகள் உலங்குவானூர்தியிலிருந்து முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தின் மீது பூக்களைத் தூவியதை அடுத்து வான்புலிகளின் உதயம் பற்றி முதன்முறையாக விடுதலைப்புலிகளால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்குச் சிலகாலங்களுக்கு முன்னரும் ஒரு உலங்குவானூர்தி வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்களின் மீது நீண்ட நேரமாகத் தாழப்பறந்து கொண்டிருந்ததை அவதானித்த மக்கள் அது விடுதலைப்புலிகளின் வானூர்தியென்றே எண்ணியிருந்தனராயினும், அன்றைய சம்பவத்தினை ரத்வத்தையும் பிரபாகரனும் தங்கள் வாழ்வில் மறக்கவே மாட்டார்களென்று பின்னர் தினமுரசில் அதன் ஆசிரியர் அற்புதன் அவர்கள் விபரித்திருந்தார். அந்த உலங்குவானூர்தியில் சிறிலங்காவின் பாதுகாப்பு இணையமைச்சர் ஜெனரல் அநுருத்த ரத்வத்தை அவர்கள் உட்பட சிறிலங்காப்படைகளின் முக்கிய படையதிகாரிகளும் பயணித்திருந்தனர். உலங்குவானூர்தியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்றடைய வேண்டிய இடத்தினைக் கண்டடைவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அது தாழ்ந்து பறந்துகொண்டே முடிவிடத்தினைத் தேடிக்கொண்டிருக்க, கீழே அதை வேடிக்கை பார்த்தவர்கள் அதை வான்புலிகளின் உலங்குவானூர்தியென்றே எண்ணியிருந்தனர். பின் அந்த உலங்குவானூர்தி சூனியப் பிரதேசத்திற்குள் தரையிறங்கி அதிலிருந்தவர்கள் எல்லாம் பாதுகாப்பாக தங்கள் இடங்களை அடைந்து விட்டிருந்தனர். அப்படியானவொரு சம்பவத்தினைக் கனவிலும் எண்ணிப்பார்த்திருக்க முடியாத விடுதலைப்போராளிகளும் அந்த உலங்குவானூர்தி தங்களதே என்கின்ற எண்ணத்தில் அந்த அரிய சந்தர்ப்பத்தினைக் கோட்டைவிட்டிருந்தனர்.

1997 மே 13 இல் பெருமெடுப்புடன் ஆரம்பிக்கப்பட்டிருந்த வெற்றி நிச்சயம் படைநடவடிக்கை பதினெட்டு மாதங்களைக் கடந்த தொடர்ந்து கொண்டிருக்கையில் திடீரென 1998 டிசம்பர் 04ஆம் திகதியன்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அந்தச் செய்தியை வெளியிட்டிருந்தது. சூரிய சக்தி (ரிவிபல) நடவடிக்கை மூலம் அது ஒட்டுசுட்டான் பகுதியைக் கைப்பற்றியிருப்பதாக அறிவித்ததனூடாக வெற்றி நிச்சயம் (ஜெய சிக்குறு) நடிவடிக்கை அறிவிக்கப்பட்ட அதன் இலக்கை அடையாமலேயே முடிவுக்கு வந்ததனை மறைமுகமாக அறிவித்திருந்தது.

பின்வந்த சில நாட்களில் எங்களின் முதலாண்டுப் பரீட்சையின் விரிவான பெறுபேறுகள் வெளியாயிருந்தன. அதைத் தொடர்ந்து நாங்கள் தொடர விரும்பும் பொறியியில் கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. எனக்கும் நதீஷாவிற்கும் விரும்பிய கற்கைநெறியைத் தொடர்வதற்கு ஏற்புடையதான பெறுபேறுகளே வெளியாகியிருந்தது.

“நீங்க என்ன Engineering செய்யப் போறீங்க?”
நதீஷா தான் ஆரம்பித்தாள்.

“நீங்க என்ன decide பண்ணியிருக்கிறீங்க?”

“நான்தான் முதல் கேட்டது. அப்ப நீங்கதான் முதல் சொல்லவேணும். சரிதானே?” - சிரித்தாள்.

“நான் இன்னும் decide பண்ணேல்ல.”

“ஏன்?”

“இல்லை, இனித்தான் decide பண்ணவேணும்.”

“உங்களுக்கு elect செய்ய விருப்பமா?”

நான் ஏற்கனவே Civil Engineering செய்வதாகத் தீர்மானித்து அதற்கான விண்ணப்பத்தினையும் நிரப்பி அனுப்பி விட்டிருந்தேனாயினும், இவள் எதற்காக நான் செய்யவிருக்கும் துறையினைப்பற்றி அக்கறை காட்ட வேண்டும்? என்னை எதற்காகவேனும் ஒரு பகடைக்காயாக மாற்ற நினைக்கின்றாளா? அவளது நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்ததால்,

“ஏன் கேக்கிறீங்க?” - என்றேன்

“இல்ல, உங்களுக்கு elect செய்யிறதுக்கு result காணும் தானே. அதுதான் கேட்டன். நான் இன்னும் decide பண்ணேல்ல. அதுதான் உங்களுக்கு எது விருப்பமெண்டு கேட்டனான்.”

“உங்களுக்கு எது விருப்பமோ அதைச் செய்யுங்க.”
அவளிடமிருந்து விலகவேண்டும் போலிருந்தது.

“நீங்க என்ன செய்யப் போறீங்க எண்டு சொல்லுங்களன். please....”

“நான் என்ன செய்யப் போறன் எண்டதைப் பற்றி நீங்க ஏன் கவலைப்படுகிறீங்க? உங்களுக்கும் elect செய்யுறதுக்கு result காணும்தானே. அப்ப உங்களுக்கு எது விருப்பமோ அதுக்கு apply பண்ணுங்கோ.”
சற்று முறைப்பாகவே நான் சொன்னதைக் கேட்டதும் அவள் முகத்தில் சோகம் படர்வதைக் காணக்கூடியதாயிருந்தது. பார்க்கப் பாவமாயிருக்கவே,

“நான் civil தான் செய்யப் போறன். அதுக்கு apply-யும் பண்ணீற்றன்.”
கூறிவிட்டு அங்கிருக்கப் பிடிக்காமல் இருக்கவே அங்கிருந்து விலகி நடந்தேன்.