Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, July 7, 2015

பார்வை

வெறுமை











வெள்ளைத்தாளில்
புள்ளிவைத்து
புளித்துப்போன
கேள்வியைக் கேட்ட
மனோதத்துவ நிபுணரிடம்
சலித்துக்கொண்டே சொன்னேன்
புள்ளிதான் தெரிகிறது.

உறுத்தலைப்பார்க்காமல்,
பரந்திருக்கும் வெறுமையை
பார்க்கப்பழகென்றார்

அதன்பின்னர்தான் எனக்கிப்படி!

அணுவிலும் அநேகம் வெறுமையென்றே
ஆழ்ந்துபார்க்க கறை மறைந்தது
தொடர்ந்துபார்க்க தாளும் மறைந்தது

பின்னும் பார்க்க,
பின்புலம் மறைந்து பின்னும் மறைந்து
அகிலமும் மறைந்தனைத்தும் மறைந்து

மறைந்ததெல்லாம் மறைந்து
மன்னிக்கவும்.
மறைந்ததெல்லாம் மறந்து
எல்லாம் மறந்து
மருந்தும் மறந்து

அகவைத்தியரிடம் செல்லாமல் நான்
கண்வைத்தியரிடம் சென்றிருக்க வேண்டும்

Sunday, February 13, 2011

நட்சத்திரங்களுடன் நட்பாய்ச் சிரித்து. . .

ஏகாந்த வெளிகளில்
தனித்திருக்கும்
நிசப்த இரவுகளில்
வானத்தில் கண் சிமிட்டும்
நட்சத்திரங்களுடன்
நட்பாய்ச் சிரித்தவாறே. . .


இணையத் துடிக்கும்
இமைகள் இரண்டினதும்
தவிப்புகளைத் தவிர்த்தவாறே. . .


தாயகக் கனவினை நெஞ்சினிலும்
கயவர் வரவினை விழிகளிலும்
ஏந்தியவாறே. . .


தேச சேவையில்
தேக தேவை மறந்து
காப்பரணுள்
காவலுக்கிருக்கையில்
பௌர்ணமி கடந்த
பத்தாம் நாள் நிலவாய்
மெலிதாயுன் நினைவுகளும்
மனதினுள் படரப் பார்க்கும்


உன் ஸ்பரிசங்களின்
சிலிர்ப்புகளாய் பனிக்காற்றின்
சில்லிடல்கள்


தாய்தந்த யாக்கையிலும்
தாயகத்தின் இருப்பை
அதிகமாய் நேசிக்கும்
உனக்கும் எனக்கும்
விடுதலையின் வாசிப்பே
சுவாசிப்பாக. . .
அன்பின் யாசிப்பு
இரண்டாம் பட்சமென்பதில்
இரண்டற்ற கருத்து.


என்னைப் போலவே
எம் தேசத்தின்
இன்னோர் மூலையில்
சென்றிக்கு நிற்கும்
என்னுயிரே, என்னவளே!


என் தோள்களில்
உன்கர மாலையாக
ஏ.கே.யின் தாங்குபட்டி.


என் நெஞ்சழுத்தும்
உன்மார்புக் கச்சைகளாய்
ஹோல்சர்கள்,
உறக்கங்களில் கூட
இணைபிரியாமல்.


அய்யர் மாரிலும்
அதிகமாய்
அருந்ததி நட்சத்திரம்
உனக்கும் எனக்குமே
பழக்கப் பட்டிருக்கும்.


தென் துருவத்துடன்
முப்பது பாகையில்
சாய்ந்து கிடக்கும்
தென்சிலுவை-யாய். . .
நெஞ்சுக்கூடு தழுவியாடும்
நஞ்சுக்கூடாய்
தேசநினைவுகளுடன்
உன்ஞாபகங்கள் என்னில்
பிணைந்து விட்டிருக்கின்றன.


என்னுயிரானவளே!
என்னைப் போலவே
தனித்திருக்கும் வேளைகளில்
உனக்குள்ளும் என் நினைவுகள்
இனித்திருக். . .


ஓ!
சற்றுப் பொறு பெண்ணே!
இரவின் நிசப்தத்தைக்
குலைத்துக் கொண்டு
சரக் சரக் சப்திப்பு.


கரங்களில் றைபிள் இறுக,
சட்டெனக் குனிந்து
உருண்டு தவழ்ந்து
பதுங்கி நிலையெடுத்து
சுடுகலனை மேலுயர்த்தி
சுட்டுவிரல் ட்ரிகர் பதித்து
இருதயத்துடிப்பின்
இருநூறு ஹேட்ஸ் அதிர்வுடன்
உற்றுப் பார்க்கையில். . .


அடச்சே!
மந்தை விட்டு
மாறிவந்த மாடொன்று.


ம்!,
இனியென்ன?
மறுபடியும் விடியும்வரை
நட்சத்திரங்களுடன்
நட்பாய்ச் சிரித்தவாறே. . .

Monday, September 27, 2010

உணர்ச்சிகள் அற்ற கவிதை


உணர்ச்சிகள் அற்றவனின்
புணர்ச்சியின் எச்சமாய்
வெற்றுத்தாளில் ஒரு
வறண்ட கவி(/)தை!

வார்த்தை ஜாலங்களோ
மாய் மாலங்களோ
அற்றவொரு வெறும்
வெற்றுக் கவி(/)தை!

தையல் பற்றியோ - கொண்ட
மையல் வற்றியோ, அன்றி
பற்றுக்கள் தொலைத்தவனின்
பரிதாபக் கவி(/)தை!

பொய்களைத் தாண்டி
மெய்களைத் தீண்டி
உவமைகள் வேண்டி
உவப்பற்ற கவி(/)தை!

கருவே காணதவொரு
கர்ப்பப்பை போன்று
உருவே கொள்ளாமலொரு
மலட்டுக் கவி(/)தை!

நாற்றுநடா வயல்போன்று
எழுதுகோல் விடும்
கீற்றுக்கள் தீண்டாத
அரூபக் கவி(/)தை!

Friday, May 28, 2010

தேடலும் தொலைத்தலும்!













ஒவ்வொரு முறையும்
எங்கேயென்றே தெரியாத
ஏதாவதொரு புள்ளியில்தான்
ஆரம்பிக்கின்றன
எனது தேடல்கள்!











நுாலின் ஒற்றைநுனி பற்றி
சிக்கெடுக்கும்
பக்குவத்துடன்தான்
ஆரம்பிக்கின்றன
ஒவ்வொரு தடவையும்.












இழையோடும் பாதையோடு
விழைந்து செல்லும்
விழிகள், விட்டுவிடும்
இடம்தான் ஈற்றில்
புரிபட்டு விடுவதில்லை.













எதிலோவெல்லாம் தொடங்கி
எங்கோவெல்லாம் சேர்ந்து
சோர்ந்து போகையில்
மறந்து விடுகின்றன
முடிவிடப் புள்ளிகள்.












அமர்க்களமாய் ஆரம்பித்தாலும்
இதோ! இப்படித்தான்!
ஈற்றில் என்னவென்றே தெரியாமல்
தொலைந்து போகின்றன
அந்தத் தேடல்கள்!

Tuesday, February 23, 2010

தேடல்

எதற்காக அழுகிறது குழந்தை
என்பதை அறியாது தவிக்கும்
தந்தையாய்....

எதற்காகத் தேடல்
அல்லது
எதற்கான தேடல்?

எதையென்று தேடுவது?
எதற்காகத் தேடுவது?
சலித்துப் போகிறது மனசு.

ஈர்ப்பின்றிய தேடல்களா?
தேவையற்ற தேடல்களா?
எஞ்சுகின்றன கேள்விகள்.

சலித்துத் தேடிப், பின்
தேடலைத் தேடி...
தேடிச் சலிக்கிறது நெஞ்சு.

இருந்தும்,
ஓடிக்கொண்டிருக்கிற காலநதியில்
தேடிக் கொண்டுதானிருக்கிறது
பாழாய்ப்போன மனசு.

Saturday, January 30, 2010

என் பிரசவங்களும் நானும்.




பிரசவித்தல் எனக்கிப்போ
நரக வேதனை.

விலைமகள் வீட்டு
வெற்றிலைப் பெட்டியாய்,
யாரோவெல்லாம், ஏன்,
எதுவெல்லாமோ கூட
என்னுடன் கூடிக்களிக்கிறது,
என் மறுப்பையும்
பொருட்படுத்தாமல்...

பேடு துரத்திப் பின்
ஏறி மிதித்துச் செல்லும்
சேவலாய்ச்
சில கணங்களிலும்

நட்டநடு வீதிகளில்
கொழுவி இழுபட்டுத்
திரியும் நாய்களாய்
நாகரிகமற்ற நிலைகளிலும்

நடுநிசிப் பொழுதுகளின்
நிசப்தம் குலைத்து
வெருண்டு புணரும் பூனைகளாய்
நாட்கணக்கிலும்

காலங்களும் அதன்
கோலங்களும்
என்மன யோனியில்
புணர்ந்து தள்ளுகின்றன.

கருக் கட்டல்களினதும்
கருச் சிதைவுகளினதும்
கலவரத்தில் தவித்தாலும்
கலவிவிடுகிறது இயற்கை.

கூடிக்கழித்த களிப்பில்
குறுகுறுத்துப் போகிற மனசின்
கருப்பைத் தொட்டிக்குள்ளிருந்து
கரையேறுகின்றன கவிதைகள்.

Thursday, December 31, 2009

என்னைக் கண்டீர்களா?



எனக்குள்ளேயே
நான் இருப்பதாய்
நெடுநாளாயிருந்தவென்
நினைப்பு கலைந்ததெனக்கு.

வேறெங்கோவெல்லாம்
என்னைக் கண்டதாய்,
கண்டவர்கள் வந்து
சொல்லக் கேட்டேன்.

வாய்வழி வந்து
செவிவழி புகுந்து,
பின்னும் நான்
அலைகின்றேனாம்.

பலரும் பார்த்துவிட்டுப்
பார்க்காமலேயே போவதைப்,
பார்த்ததாய்ச் சொல்கிறார்கள்.

காற்று வெளிகளில்
கால்தடம் பதி்ப்பதாய்
தூற்றவும் செய்கிறார்களாம்.

எனக்குள் நானிருந்ததான
நினைப்பெனக்கு
கலைந்ததிப்போ.

உங்களைத் தான்!
எங்கேனும் கண்டீர்களா
நானின்றி என்னை?

Saturday, August 1, 2009

தொடர் வினா

நிலைத்தலுக்கும்
கொண்ட நிலையைக்
கலைத்தலுக்குமிடையில்
வாழக்கை வழுவுகிறது.

ஒற்றை வாக்கியம்கூட, ஒருவர்
நிலையைக் கலைத்துப்போடலாம்.
தாசிகூறிய மந்திர வார்த்தை
நகுலனை ராமதாசராக்கிற்றே!

நிலைத்தல் எப்போதுமே
நிலையற்றதாயிருப்பினும்
அந்த நிலைமாறலில்கூடவொரு
நிலைத்தன்மை இருக்கலாம்.

கலைத்தல்கூட, கைகூடிவரலாம்
அப்போதேயெம் மாயச் சுயம்
தொலைத்துத் தெளிவுகாணும்
வல்லமை கொளல் வேண்டும்.

நிலைப்பேனா? இல்லையின்னும்
அலைவேனா? கொண்ட சுயம்
கலைப்பேனா? மீண்டு, நான்
பிழைப்பேனா? தொடரும் வினா.

Tuesday, July 28, 2009

நன்றி நவிலலும், பிரியாவிடையும்

யார் சொன்னது காலம்
தொடர்ச்சியானதென்று?
ஒவ்வொரு கணப்பொழுதுகளும்
ஒன்றுடனொன்று சம்பந்தமேயில்லாமல்...

ஒவ்வொரு கணப் பொழுதினையும்
தனித்தனியாகவே வெட்டியகற்றியவாறே...
வேதாளம் வீழ்த்தும் விக்கிரமாதித்தனாய்
என்பொழுதுகள் கழிந்துகொண்டிருக்கின்றன.

என்றைக்கேனும் எனக்கானவொருநாளில்
நானுமந்த “முறைதெரியாக் கதை”யிற்கான
பதிலினை அளிக்கவேண்டியதாயிருக்கலாம்.
அன்றைக்கெந்தன் சுயமழிந்து போயிருக்கும்.

நாள்தோறும் மாறிவரும் சுயம்
நாளைகூட மறைந்து போகலாம்
அதுகூடிவரும் நன்நாளினில்
நான்கூட மறைந்து போகலாம்.

அதற்குள் என் சுயம்கரைத்தல் வேண்டும்.
நானேயகிலமாகி, அந்தவகிலமும் நானாகி
நானும் நானாகி, எல்லாமும் நானாகி
நான்கரைந்து எங்குமாதல் வேண்டும்.

அப்போது நீங்கள் நானாகியிருக்கலாம்.
நான் உங்களிலும் நிறைந்திருக்கலாம்.
யாரறிவர்? அப்போது நான் மறந்திருக்கலாம்
இல்லை நீங்களேயென்னை துறந்திருக்கலாம்.

ஆதலினாலென் அன்புக்குரியோரே!
இதுவரைகாலும் நினைவுப் பாளம்பாளமாய்
கணங்களை வெட்டிக் கட்டிவைத்திருக்கும்
காலக் குவியலுக்குளிருந்து கூறுகிறேன்.

நன்றி! நன்றி!! நன்றி!!!
என்னுற்ற உறவுகளே! நயமான நட்புகளே!
எதிரியாயென்னை எண்ணிக்கொண்டோரே!
பட்டும்படாமலும் பழகிக்கொண்டோரே!

உங்களிடமெந்த வேறுபாடுகளோ - அன்றி,
கருத்துமுரண்பாடுகளோ இப்போதெனக்கில்லை.
ஏற்றுக்கொள்ளுங்கள் என்பிரியாவிடையினை
ஏனெனில் நாளைநான் கரை(லை/ல)ந்துபோயிருக்கலாம்

Sunday, July 26, 2009

கட்டுடைத்தல்



அடை வைக்கப்பட்டிருந்தவென்
நினைவுப் பட்சியின்று தன்
கோதுடைத்து புறப்பட்டது.



கோழிக்குஞ்சின் கதகதப்புடன்,
படபடத்தவதன் சிறகுகளுடன்
உள்ளங்கைக்குள் உள்வாங்கினேன்.


இறகுகளை வருடிக்கொடுக்க,
பீமனுக்கான அநுமனின்
விஸ்வரூபமாயது வெளிப்பட்டது.


முடியாது. இனி முடியாது.
இதுவென்றுமினி மடியாது
என்றவாறேயது புறப்பட்டது.


அடைகாத்தல் முடிந்து, இனி
அடைத்துவைத்தல் முடியாது
ஆதலினால் விட்டுவிட்டேன்.



நினைவுப் பறவையினித்தன்
கட்டுடைத்து சிறகுவளர்க்கும்
இமயத்தின் சிகரம் செல்லும்.



சூரியவொளிதாண்டி சூனியவெளிதாண்டி
விரிவடையும் பிரபஞ்சங்கடந்துமது
சிறகினை விரிக்கும்.



நான்வளர்த்த குஞ்சினைத்
தனித்தனுப்ப தடுமாறும்
தாய்மை மனமெனக்கு.


ஆதலினால், அப்பட்சியின்
உறவுகளை உங்கள்
நெஞ்சங்களில் அடைத்திருப்போரே


திறந்திடுங்கள் உங்கள்
உள்ளக் கூண்டுகளை. என்
எண்ணப்பறவை புறப்படட்டும்.



தன் இருத்தலின் எந்தவொரு
அடையாளத்தையும் அதற்கு
விட்டுவைக்கும் விருப்பவி்ல்லை.


இறகுகள் ஒவ்வொன்றாய்
உதிரட்டும். அதன் உதிரத்தின்
கடைசிச் சொட்டும் தீரட்டும்.


ஈற்றணுவும் இற்றுப்போகும்வரை
அது பறக்கட்டும். பறந்து அந்த
பிரபஞ்சம் அளக்கட்டும்.

Tuesday, June 9, 2009

தினந்தோறும் மனதோடு தினவெடுக்கும் நினைவுகள்.

நேற்றைய நினைவிலும்
நாளையின் கனவிலும்
இதோ இந்தக் கணம்
கரைந்து கொண்டிருக்கிறது.

மரணங்கள் பற்றிய
பிரக்ஞையின்றியே
பிரேதங்களின் பின்னால்
பவனி வருகைகள்.

இத்தனை நடந்தபின்பும்,
நிலவுகூட வளர்ந்தும்தேய்ந்தும்...
காற்றுக்கூட வீசாமலில்லை
கடல்கூட மூசாமலில்லை

எவன் எக்கேடுகெட்டால்
எனக்கென்ன என்றவாறே
சுட்டெரித்துக் கொண்டு
சூரியனும் அஸ்தமித்துவிடுகிறது.

நிரந்தரமானது இக்கணமேயெனினும்
நாளையைப் பற்றிப் பேசிப்பேசியே
நாக்கலுத்துப் போகிறது. யாருக்குத் தெரியும்
நாளையப்பொழுதிற்கு நானிருப்பேனா?

Friday, May 8, 2009

புத்தனின் புதிய ஞானம்



ஆசைகளைத் துறக்கச்சொல்லி,
கௌதம புத்தனாய்
பரிநிர்வாணமடைந்த
போதிசத்வருக்கும்
ஆசை வந்தது
மீண்டும் அவதரிக்க.

ஆரம்பப் பிறப்பு
அமிபா-வாய் இருந்தபோது்ம்
இறுதிப் பிறப்பின்
அரச சுகபோகமும்
சித்தார்த்தன் சிந்தையில்
தித்திப்பாய் இருந்தது.
சிந்தித்தார் புத்தர்.

யுத்தம் வெறுத்து
அசோகனைப் பௌத்தனாக்கியது
கலிங்கத்துப் பரணி
இன்றோ அசோகச் சக்கரம்
வழிநடத்த புத்தனின் பக்தரால்
ஈழத்துப் பரணி!

கண்கள் கலங்கியது
கௌதமனுக்கு.
கருவாய் உருவாகிக்
காலத்தைக் கடத்த
காருண்ய உள்ளம்
தடை விதித்தது.

இறங்கி வந்தார்
இலங்கைக்கு,
சமாதான தூதுவனாய்.

அரசனைக் கண்டு
ஆலோசனை சொல்ல
ஆசையும் வந்தது.
தகவல் அனுப்பி,
காத்திருந்தார்.

ஆணவம் பூசிய
சேதி வந்தது!

போர்நிறுத்தம் பற்றிப்
பேசுவதென்றால்
நாடுகடத்தப் படலாம்,
கேட்கவொரு
நாதியில்லையெனில்
கைதியாக்கப்பட்டு
காணாமலும் ஆக்கப்படலாம்.

போதிசத்வர் பொறுமையிழந்தார்
தன்னை யாரென அறிவித்தார்.
அகிம்சைக்குத் திரும்புமாறு
அறிவுறுத்தத் தொடங்கினார்.

பௌத்த பிக்குகள்
புத்தரின் சிலைகளை
அடித்து நொறுக்கினர்.
புத்தரைக் கொல்லச் சொல்லி
ஆர்ப்பாட்டமும் செய்தனர்

அரசகுழாம்,
அந்தரங்க மாநாடு நடத்தி
பேச்சுக்கு அழைத்தது.

சமரசப் பேச்சும்
நடந்து முடிந்தது.

போதிசத்வருக்கு நன்றாய்ப்
‘போதிக்க’ப்பட்டது.
ஆசைகளைத் துறந்தவருக்கு,
ஆசையூட்டப்பட்டது.
நாடாளுமன்றப் பதவியும்
நவநாகரிக மங்கையரும்
கௌதம புத்தரைச் சித்தார்த்தன் ஆக்கின.

இத்தனை இன்பங்களையும்
ஏன் நான் துறந்தேன்?

பெண்ணின்பப் பேரின்பத்தைவிட்டு
வேறின்பத்தைத் தேடி
பேடியாய் அலைந்தேனே.

யசோதரை சரியில்லையோ?
சித்தார்த்தனுக்கு சாடையாய்
சந்தேகம் வந்தது.

அதிகார மமகாரம்
தரும் போதை
எந்தத் தியானம் தரும்?

அன்னப்பறவையின் வழக்கின் பின்
மைத்துனன் சூழ்ச்சி செய்திருப்பானோ?
தேவதத்தனின் கையாளோ என் தேரோட்டி?

சந்தேகநோய் மனப் பிரதேசமெங்கும்
பன்றிக் காய்ச்சலாய் பரவத்தொடங்கியது.

‘மென்டிஸ்’ ரெண்டு பெக்
உள்ளே செல்ல, துறந்தவை
அத்தனைக்கும் ஆசைப்பட்டான்.
அனுபவிக்கத் துடித்தான்.

இம்சித்தல், பெண்களை
இச்சித்தல்,
துய்த்தல், பின்
இரத்தத்தில் தோய்த்தல்.

எங்கே கிடைக்கும்?

சிந்திக்க சிந்திக்க
சித்தார்த்தனுக்கு
மீண்டும் “ஞானம்” பிறந்தது.

புதிய புத்தன் புறப்பட்டான்!
போர்க்களம் நோக்கி,
கூரிய நகங்களுடனும்,
கடைவாய்வரை நீண்ட
கோரப் பற்களுடனும்.

Thursday, April 23, 2009

கடவுளர் பற்றிய கனவிலிருப்போர்க்கு.....

இடுக்கண் களைந்தெம்
இன்னல் தீர்க்க வராத
“இரக்கமிலி”களைப்
பற்றிய கனவிலிருப்போரே!

கண்டேன்!
அந்த கடவுளரை
அண்டேன் என
நின்றவன் நான்,
விண்டேன் உம்மனக்குறைகளை.

ரொம்பப் பாவம் அவர்கள்.
அவர்தம் குறைகளை முறையிட,
ஆளின்றிய அவ(/க)தி நிலையில் அவர்கள்.

உம்குறை தீர்க்க
அவர்கட்கும் ஆசையாம்.
ஆனாலும் எல்லோர்க்கும்
வயதாகி விட்டதாம்.
அவதரித்து வருதற்கும்
அலுப்பாயிருக்கிறதாம்.

சிவனின் நெற்றிக்கண்ணில்
பூ-வளர்ந்து விட்டதாம் (catract).
அறுவைச் சிகிச்சையாலும்
அதையகற்ற முடியாதாம்.

சக்திக்கு மாதவிலக்கு நின்று
நெடுங்காலமாகி விட்டதாம்.
பேரப்பிள்ளைகள் வேண்டி
பிள்ளைகளுடன் பிரச்சனையாம்.

பிள்ளையாரால் ஒரு
பிள்ளையை உருவாக்க
தொப்பை தடையென்று
gym-இற்குப் போய் treadmill-இல் ஓடி
அதையும் உடைத்தாயிற்றாம்.

முருகனுக்கோ முதிர்ச்சியடையுமுன்பே
திருமணமாகி அதுவும்
இருமணமாகி, ஏற்பட்ட
சக்களத்திச் சண்டையினால்
உண்டான உளவியல் நெருக்கீட்டால்
பெண்டிரை அண்டவே பயமாம்.

யுகந்தோறும் அவதரித்துக்
களைத்த கண்ணனால்
அடிமுடி தேடி, பட்ட அவமானத்துடன்
நாபிக் கமலத்தில் இன்னோர்
அயனை இனிநினைக்கவே முடியாதாம்.

பிரம்மனுக்கோ
பிரணவ மந்திரமே மறந்து விட்டதாம்.
பின் எப்படி படைப்பதாம்
அதுவம் இன்னோர் கடவுளை?

ஆஞ்சநேயர் இன்னமும்
பிரமச்சரிய விரதத்தையே
பின்பற்றுகிறாராம்.

ஆதலினால்,
கடவுளர் பற்றிய
கனவினில் இருப்போரே!

உறக்கம் கலைத்து
உண்மையை உணருங்கள்.

இல்லையேல்,
“வாருங்கள் நாங்களினி
பேய்களை வழிபடுவோம்”
எனச் சிலர் உங்களை
தடம் மாற்றக்கூடும்.

நக்கிப் பிழைத்தற்கா, இல்லை
நாய் வாழ்க்கை வாழ்தற்கா
நாமங்கு தவம் செய்தோம்?

எமக்காக இங்கே
கடவுளரும் வரப்போவதில்லை.
பேய்களும் தரப்போவதில்லை
எமக்கான வரத்தை.