Saturday, November 20, 2010

வேரென நீயிருந்தாய்...(17)

பொறியியற் கற்கை நெறியின் முதலாண்டுத் தேர்விற்கான கற்கை விடுமுறையின் இறுதி நாள். மாலை மங்கி இருள் கவியத் தொடங்கியிருந்தது. தமிழ் சிங்கள வேறுபாடின்றி சிரேஷ்ட மாணவர்கள் அனைவரும் முதலாண்டு மாணவர்கள் எல்லோரினதும் அறைகளுக்கு வந்து தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க ஆரம்பித்திருந்தார்கள். பல்கலைக்கழக வாழ்வின் முதல் பரீட்சை. எமக்கான துறையினைத் தீர்மானிக்கப் போவதும் இந்தப் பரீட்சையின் பெறுபேறுகள் தான். அதுவும் ஆங்கில மொழியில். மனதுக்குள் ஏற்கனவே உருவாகியிருந்த பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.

எப்படி ஆரம்பித்து எப்படி முடிந்தது என்பதை உணர்வதற்குள் காலம் கடுகதி வேகத்தில் நாட்களை ஓட்டி விட்டிருந்தது. மழை விட்டாலும் தூவானம் விடாது என்பது போல் பரீட்சை முடிந்து விட்டிருந்தாலும் Drawing corrections சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்தது. அந்த இடைவெளிக்குள் அவசரஅவசரமாக தமிழ்ச்சங்கமும் சங்கீத நாட்டிய சங்கமும் இணைந்து எமது சமாந்தர பிரிவைச் சேர்ந்த அனைத்துப் பீட மாணவர்களுக்குமான வரவேற்பு விழாவினை புதுவசந்தம் என்கின்ற பெயரில் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஊருக்கு சீக்கிரமே போகவேண்டும் என்கின்ற ஆவலில் என்னுடைய Drawing correction-களை இரவு முழுதும் கண்விழித்து காலையிலேயே முடித்து மதியமளவில் சமர்ப்பித்ததில் மனம் நிம்மதியடைந்திருந்தது. விமானப் பயண அநுமதி வேண்டி ஒரு மாதத்திற்கு முதலிலேயே யாழ்ப்பாண மாணவர்கள் எல்லோரும் ஒன்றாக பாதுகாப்பமைச்சிடம் விண்ணப்பித்திருந்தாலும் எங்களுக்கான அனுமதிகள் இன்னமும் வந்து சேர்ந்திருக்கவில்லை.

பெரும்பாலான தமிழ் மாணவர்களின் அறைகளிலிருந்து “கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு...” உரத்த சத்தத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது தான் ஜீன்ஸ் திரைப்படத்தின் திரையிசைப்பாடல்கள் வெளியாகிச் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தன. எங்களுக்கும் விடுமுறைதான். அதுவும் மூன்றரைமாத விடுமுறை முதல் மூன்று மாதங்களும் NAITA-வின் Engineering Training. நல்ல வேளையாக எங்களுக்கான Training யாழ்ப்பாணத்திலேயே கிடைத்திருந்தது. ஆனாலும் எங்களுக்கோ விடுமுறை விட்டும் உடனேயே வீட்டுக்குச் செல்ல முடியாத நிலை. நாடிருந்த நிலையில் வேறுபிரதேசங்களுக்கும் செல்வதில் பல சிக்கல்கள் காணப்பட்டன. எனவே பொழுதைப் போக்குவதற்காக புதுவசந்தம் நிகழ்ச்சிக்குச் செல்வோம் என நானும் தீபனும் முடிவெடுத்து E.O.E.பெரேரா அரங்கினுள் நுழைந்தோம்.

.....
பரீட்சையில் பாஸ்பண்ணி
பாஸூக்கு அலைந்து
எத்தனையோ தடைதாண்டி
'தாண்டிக் குளம்' தாண்டி
.....

எமது சகமாணவன் ஒருவன், கவிதை என்கின்ற பெயரில் அறுத்துக் கொண்டிருந்தான். எப்படா முடிப்பான்? என்றிருந்தது. ஏதாவது நகைச்சுவை நாடகங்கள் இருந்தால் நன்றாயிருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. அப்படியான அறிகுறி எதுவுமே தெரியவில்லை. ஏதோவொரு பீடத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருந்தனர். பெண்பாத்திரம் ஒன்று திரைக்கு வந்ததும் விசில் பறந்தது. ஏனோ அங்கிருக்கப் பிடிக்கவில்லை ஆயினும் தீபனின் இரசனையைக் கலைக்க விரும்பாததால் அமைதியாயிருந்தேன். சிற்றுண்டியும் குளிர்பானமும் வரவே எடுத்து அருந்திக் கொண்டோம்.

“ஜெயந்தன்! வந்த வேலை முடிஞ்சுது தானே. அப்ப இனி நாங்க வெளிக்கிடுவம்”

'அடப்பாவி! இவன் ஏதோ நாடகத்தை ரசித்துப் பார்க்கிறான் என்று நினைத்தால்...'

“அப்ப CC-க்க போவமாடா? இப்ப போனா ஒருத்தரும் பெரிசா இருக்கமாட்டாங்கள். இன்ரர்நெற் பார்க்கலாம்” தீபனை அழைத்தேன். அப்போதெல்லாம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்திற்குள் அமைந்திருந்த Computer Center-இல் 6 கணினிகளில் மட்டுமே இணைய இணைப்பு கொடுக்கப் பட்டிருந்தது. பகல் வேளைகளில் அவற்றையெல்லாம் சிரேஷ்ட மாணவர்களுக்கே ஒதுக்கியிருந்தார்கள். எனவே மாலை நான்கு மணிக்குப் பிறகே நாங்கள் CC-க்குள் நுழைய முடியும். அப்படி நுழைந்தாலும் இணைய இணைப்புள்ள கணினிகள் கிடைப்பது அருமை. அதுவும் 32MB RAM கொண்ட அந்தக் கணினிகளின் வேகத்தைச் சொல்லிப் பிரயோசனம் இல்லை.

CC-க்குள் நுழைகையில் அதைப்பூட்டிக் கொண்டிருந்தார்கள்.

“இதுவும் சரிவரேல்லை. ம்ம்... ஆ! பெராவில கார்ணிவெல் நடக்குதடாப்பா! அங்க போய்ப்பாப்பம் வாடா”

Elect lab இற்கும் car park இற்கும் இடையே அமைந்திருந்த பாதையினுாடே நடந்து பனிதெனியாவுக்குள் இறங்கி பேரூந்தினைப் பிடித்தோம். கார்ணிவெல் களைகட்டியிருந்தது. கிணற்றுக்குள் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓடுவதை இரசித்துவிட்டு வெளியே வர,

“ஹேய்!”

எங்கேயோ கேட்ட குரலாக இருக்கவே திருப்பினேன். நதீஷா வேறொரு பெண்ணுடன் நின்றிருந்தாள்.


“When are you going to your hometown?”

“We are waiting for the MOD clearence”

“Oh! Then have you submitted the drawing corrections? I've submitted them this evening."

“Yes! I've submitted before the lunch time.”

“Then how was the exam?”

“just...”

“Tomorrow if you are free, then you can visit my home. It is just one killometer from the Katugastota bridge”



திரும்பித் தீபனைப் பார்த்தேன். வேறெங்கோ பாரத்துக் கொண்டிருப்பதாய் பவ்லா காட்டினான். இவன் எப்பவுமே இப்படித்தான். எதுவுமே தெரியாத அப்பாவிப் பிள்ளையாட்டம் பாவனை செய்துவிட்டு பொறுத்த இடங்களில் போட்டுக் குடுப்பவன்.

“Hey! You can also visit to my place.”

அவள் தீபனையும் அழைத்தது நிம்மதியாய் இருந்தது. இனி இவர் இதைப் போட்டுக்கொடுக்கேலாது. அப்பிடிச் செய்தால் அவருக்கும் சேர்த்துத்தான் நோட்டீஸ் வரும்.

“Sure! give me your address, we will come tomorrow for lunch.”

தனது வீட்டு முகவரியையும் எடுக்க வேண்டிய பேரூந்து மற்றும் இறங்க வேண்டிய தரிப்பிடம் என்பவற்றையும் விபரமாகக் கூறிவிட்டு விடைபெற்றாள்.

“என்னடா? உண்மையா நாளைக்குப் போகப் போறியா?” என்னால் தீபனைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

“ரெண்டு பேரும்தான் போறம்.”

“பிறகு லெக்சர்கோலில நோட்டீஸ் விடுவாங்களடா”

“அம்மாண நீயொரு லெப்பையடா. இன்னும் மூண்டரை மாசத்துக்குப் பிறகுதான் இனி எங்களுக்கு கம்பஸ். அதுக்குள்ள இதையெல்லாம் மறந்து போயிருவாங்கள். இல்லாட்டியும் நீயும் நானும் சொல்லாட்டி எங்கட பெடியளுக்கு நாங்க போனது எப்பிடித் தெரியவரும்?”

மறுநாள் மதியம் கட்டுகஸ்தோட்டையில் நதீஷாவின் வீட்டை அடைந்திருந்தோம். ஓரளவிற்கு விசாலமான வசதியான வீடு. வீட்டினுள்ளே குளுமையாக இருந்தது. வீடு பளிச்சென்று துப்பரவாக நேர்த்தியாக அழகாக இருந்தது. தொலைக்காட்சிப் பெட்டிக்கருகில் வெண்கலத்தாலான கண்கள் மூடிய புத்தர் கருணையே உருவாகக் காட்சியளித்தார். அவருக்கு முன்னே பித்தளைத் தட்டத்தில் தண்ணீருக்குள் நித்திய கல்யாணி மலர்கள் வட்ட வடிவில் சீராக மிதந்து கொண்டிருந்தன. நேற்று கார்ணிவெல்லில் பார்த்த அந்தப் பெண்ணும் நதீஷாவுமே இருந்தார்கள்.

“Where is your parents?”
-தீபன் எப்போதுமே ஆட்களைத் தோண்டித் துருவி விடயங்களைக் கறந்து விடுவதில் வல்லவன். அதற்கு நான்கூட விதிவிலக்காக அமைய முடியவில்லை. என்னைப் பற்றிய எல்லா விடயங்களையும் அவன் என்னிடம் 'போட்டு வாங்கியிருந்தான்'.

“My mother is no more. father is working in Colombo, and my brother is a disabled and she is my brother's wife.”

“What is your father?”

“He is a police officer.”

அவளது அண்ணிக்கு நாங்கள் ஆங்கிலத்தில் உரையாடுவது புரியாமலிருந்தது. அவர் நதீஷாவிடம் ஏதோ சொல்ல, அவள் சிரித்துக் கொண்டே

“Shall we talk in Sinhale please. I understand that you don't know much, but she feels odd as she can't understand English.”

“கமன்-ன” (பரவாயில்லை) என்றான் தீபன்.

எங்கள் பேர் ஊர்களைப் பரிமாறிக் கொண்டோம். தீபனிலும் விட அவள் என்னையே அதிகம் விசாரிப்பதாய்ப் பட்டது.

“ஒயாகே தாத்தா மொனவத கரண்ணே?” (உங்கட அப்பா என்ன செய்கிறேர்?)

“நத்தியூணா” (காணாமல் போய்ற்றேர்)

“அய்? மொக்கத உணே?” (ஏன்? என்ன நடந்தது?)

விளக்கமாகச் சிங்களத்தில் சொல்லத் தெரியாததாலும் சொல்வதில் உள்ள தயக்கத்தாலும்,

“மட்ட ஹரியட்ட மதக்க-ந. கொடக் கால இசற மெயா நத்தியூணா” (எனக்கு சரியா நினைவில்ல. கன காலத்துக்கு முதலே காணாமப் போய்ற்றேர்)

“ஒயாகே கஸ்பண்ட் மொனவதக் கரண்ணே?” (உங்கட husband என்ன செய்கிறேர்)
-அவளின் வினாக்களிலிருந்து என்னை விடுவிக்க இடையில் புகுந்தான் தீபன்.

அவள் கண்களில் நீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன.

“எயாட்ட கொட்டி வெடி தீலா. தங் எயாட்ட மொக்குத் கரண்ட-ப” (அவருக்கு புலி சுட்டது [வெடி வைச்சிட்டுது]. அவரால இப்ப ஒண்டும் செய்யேலாது)

“அய் கொட்டி வெடி தீலா? கொகேத மேக்க உணே?” (ஏன் புலி சுட்டது? எங்க இது நடந்தது?)
-தீபன் கதையை வளர்க்க எனக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.

“மெயா கமுதாவெட்ட வெடக்கரா. அணுபகாய் வகே வெலிஓயாவெங் பைற்-உணா நே. எத்தக்கொட்ட தமாய் மேக்க உணே. பிட்ட பஸ்ஸ, தாம மெயாட்ட மொக்குத் கரண்ட-ப” (இவர் படையில இருந்தவர். தொன்னூற்றியஞ்சில (95) மணலாறில சண்டை நடந்தது தானே. அப்பத்தான் இது நடந்தது. அதுக்குப் பிறகு இவரால ஒண்டும் செய்யேலாது)

“ஓ!”
-இருவருமே உச்சுக் கொட்டினோம்.

நடைபெறுகின்ற சண்டையில் சிங்களக் குடும்பங்களும் பாதிக்கப்படத்தான் செய்கின்றன என்பது புரிந்தது. ஆனாலும் 95 இல் எதிர்பாரத விதமாகப் பாரிய தோல்வியில் முடிவடைந்த மணலாறு இராணுவப்படைத் தொகுதிகள் மீதான தாக்குதல் சம்பவம் நினைவினில் வந்து போனது. தாக்குதலுக்காக உள்ளே புகுந்திருந்த பெருமளவிலான பெண் போராளிகள் எதிர்பாராது சுற்றிவளைக்கப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டு பின் அவர்களின் பிறப்புறுப்புக்கள் சிதைக்கப்பட்ட நிலையில் அவர்களின் வித்துடல்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரூடாக கையளிக்கப்பட்டிருந்தது. அந்தக் காலம் தமிழர்களுக்குப் போதாத காலம். 1995 ஜூலை 09 இல் ஆரம்பிக்கப்பட்ட முன்னேறிப்பாய்தல் படைநடவடிக்கையினுாடாக வலிமேற்குப் பிரதேசங்களை ஆக்கிரமித்திருந்தது. அந்த வேளையில் தான் நவாலி சென்ற். பீற்றர்ஸ் தேவாலயம் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் நூறு்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உடல் சிதறிப் பலியாகியிருந்தனர். வெற்றிபெற்று விட்டதான இறுமாப்பிலிருந்த சிறிலங்காப்படையினரை அதே மாதம் 14ம் திகதி புலிப்பாய்ச்சல் நடவடிக்கையினுாடாக பழைய இடங்களுக்கே திருப்பியனுப்பிய வெற்றிக்களிப்பில் தமிழர் தேசம் இருக்கையில்தான், தமிழர்படை தன் இதயபூமியில் நடாத்த இருந்த அந்தச் சண்டை பாரிய உயிர் இழப்புக்களுடன் தோல்வியைத் தழுவியிருந்தது. அது கொடுத்த தெம்பில் மீண்டும் யாழ்நகரைக் கைப்பற்றுவதற்கான சூரியக்கதிர் நடவடிக்கையினை சிறிலங்காப்படையினர் ஆரம்பித்திருந்தனர். அந்த நடவடிக்கையைில் ஈடுபட்டிருந்த சிறிலங்காப் படையினரை துடைத்தழிக்கும் நடவடிக்கையில் இறங்கிய தமிழர்படை குறுகிய கால இடைவெளியில் மீண்டுமொரு தடவை எதிர்பாராத வகையில் பாரிய உயிரிழப்பினைச் சந்தித்திருந்தது. அதன் பின்னர் தற்காப்பச் சமரில் மட்டுமே ஈடுபட்டவாறு தமிழர் படை தன் தளங்களை வன்னிக்கு நகர்த்திக் கொண்டது. 95 ஓகஸ்ரின் இறுதியில் ஒட்டுமொத்த வலிகாமமும் வடமராட்சிக்கும் தென்மராட்சிக்கும் இடம்பெயர 95 டிசம்பர் 05ம் திகதி மனிதர்களற்ற யாழ்நகரைக் கைப்பற்றித் தனது வெற்றி விழாவினைக் கொண்டாடியிருந்தது சிங்கள தேசம்.

எங்களிடையே நிலவிய நீண்ட மௌனத்தைக் கலைத்து உணவருந்த வருமாறு அழைத்தாள் நதீஷா.

Friday, November 19, 2010

வேரென நீயிருந்தாய்...(16)

அன்றைய மாலை அக்பர் விடுதியும் கலகலத்துக் கொண்டிருந்தது. முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு வைபவம் பல்கலைக்கழகத்தின் Gym இற்குள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. முதலாண்டு மாணவர்கள் எல்லாம் தங்களை அலங்கரித்துக்கொண்டு குழுக்கள்குழுக்களாகப் பிரிந்தும் சேர்ந்தும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தனர். என் மனம் ஏனோ அமைதியிழந்து காணப்பட்டது. எந்தக்குழுவுடனும் சேராது தனித்திருக்கவே விரும்பினேன். ஆயினும் நண்பர்களின் வற்புறுத்தல்கள் அதிகமாகத் தொடங்கியிருந்தது. என்னவென்று சொல்லித் தப்பிப்பது? சில மாதங்களுக்கு முன்னர் எமது பிரிவின் சுற்றுலாப் பயணத்தின் நினைவுகள் மனதில் நெருடலை ஏற்படுத்தின.


முதலாண்டு மாணவர்களின் அந்த வருடத்திற்கான சுற்றுலா (batch trip) சிறிலங்காவின் தென்பகுதியை நோக்கியதாக அமைந்திருந்தது. சூரியன் மேற்கே சாயத் தொடங்கியிருந்த நேரம், காலி (Galle) கடற்கரையில் நீராடி விட்டு எழுந்து வந்து உடைமாற்றிப் பின் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம்.

“Jeyanthan! join with us to take a group photo"
நதீஷா அழைத்தாள்.

சுற்றும் முற்றும் பார்த்தேன். தமிழ் மாணவர்களில் தீபன் மட்டுமே அருகில் நின்றிருந்தான். இவன் எப்பிடியும் இதைப் போட்டுக்குடுப்பான். பிறகு மற்றவர்களின் கடி தாங்கமுடியாதுபோய்விடும். யோசித்தேன். இளநீர் குடிச்சவனும் கள்ளன்தான் கோம்பை சூப்பினவனும் கள்ளன்தான். அவனையும் என்னுடன் சேர்ந்து படம் எடுக்க வருமாறு அழைத்தேன். நமட்டுச் சிரிப்புடன் வந்தவன், திடீரென புகைப்படம் எடுக்க நின்றிருந்த சிங்களப் பெண்ணிடம் புகைப்படக்கருவியினை வாங்கிவிட்டு அவளையும் எங்களுடன் சேர்ந்துநிற்கச் சொல்லிவிட்டு அவன் புகைப்படப்பிடிப்பாளனாக மாறிவிட்டான். “ஆப்புத் தான்” என்றது உள்மனது. நன்றி சொல்லிவிட்டு அந்தச் சிங்களப் பெண்கள் வேறிடம் நோக்கிச் செல்ல,

“வாழ்ந்திற்றாய் மச்சான்!” கொடுப்புக்குள் சிரித்தான் தீபன்.

'படம் எடுத்த விசயம் C-Wing காரங்களுக்குத் தெரிஞ்சுதெண்டால் அவ்வளவுதான்! லெக்சர் கோலில நோட்டீசுகள் விட்டே கிழிச்சுப்போடுவாங்கள் ஏற்கனவே C-Wing இல இருக்கிற கொஞ்சப் பேரோட கறள். அவங்கள்தான் லெக்சர் கோலில நோட்டீசுகள் எழுதி நாறடிக்கிறவங்கள் என்கின்ற சந்தேகம் ஏறத்தாழ உறுதிப்படுத்தப் பட்டிருந்தது. இந்த விஷயம் வெளிய நோட்டீசில வராமத் தடுக்கிறதெண்டால், சாட்சிக்காரனின் காலில விழுகிறதை விட சண்டைக்காரன்ர காலில விழுகிறது மேல் எண்டது மாதிரி தீபனைத் தான் வாயைத் திறக்காமச் செய்ய வேணும்.'

திரும்பினேன். தீபன் சற்றுத்தூரத்தில் வேறு நண்பர்களுடன் என்னைக்காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். ''சரி! விஷயம் கைமீறி விட்டது' சலித்துக் கொண்டது மனது. நீராடிவிட்டு வருகையில் வந்திருந்த உற்சாகம் காணாமல் போயிருந்தது. எதிலும் ஒன்றிப்போகமுடியாமல் மனம் தத்தளித்தது. திங்கட்கிழமை விரிவுரை மண்டபத்தில் வரப்போகும் நோட்டீசுகளை எண்ணி அது சஞ்சலப்பட ஆரம்பித்தது. இந்த மனம் எப்போதும் இப்படித்தான். மற்றவர்களைப் பற்றி வரும் நோட்டீசுகளை ஆவலுடன் தேடித்தேடி வாசிக்கும் மனது, தன்னைப்பற்றி ஏதாவது நோட்டீசுகள் வருகின்றது எனின் கோபப்படுகின்றது அல்லது வெறுத்துப்போகின்றது. எதையுமே இயல்பாய் பகிடியாய் எடுத்துக் கொள்வதற்கு அதனால் இயலாமல் இருக்கிறது. நான் என்கின்ற Ego அதற்கு நிறையவே இருப்பதுதான் அதற்கான காரணம். இந்த Ego-வினை அகற்றாமல் இருக்கும் வரை எந்தவொரு விடயத்தையுமே உள்ளவாறே இயல்பாய் ஏற்றுக்கொள்வது கடினம் தான்.

மாலைச்சூரியன் மறையத்தொடங்குகையில் பேரூந்துகளுக்குள் ஏறிக்கொண்டோம். ஆட்டங்கள் பாட்டங்கள் மாறி அது நேயர் விருப்பம் நிகழ்ச்சியாக மாறியது.

“ஹலோ!”

“எங்களுக்கு ஒரு பாட்டுப் போடுறீங்களா?”

“என்ன பாட்டு?”

“சிங்களத்துச் சின்னக் குயிலே எனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லு மயிலே...”

“யாராருக்காகவெல்லாம் இந்தப் பாடலைக் கேட்கின்றீர்கள்?”

“ஜெயந்தனுக்காக மட்டும்”

பாடல் ஆரம்பிக்க என்னை இழுத்து நடுவில் விட்டுவிட்டு சுற்றிவர நின்ற கைதட்டி ஆடிப்பாடத் தொடங்கினார்கள். சுற்றிவரப் பார்த்தேன் முன்னுக்கு சிலர் வாளி வைத்துக் கொண்டிருந்தார்கள். ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. “உங்கா! முன்னுக்கே பப்பிளிக்கா வாளி வைக்கிறாங்கள். அவங்களையெல்லாம் விட்டிட்டு சும்மா ஒரு போட்டோ எடுத்த என்னை வைச்சு நக்கலடிக்கிறதைப் பார்க்க இரத்தம் கொதித்தது. ஆக்களோட கொழுவ வேணும் போலத் தோன்றியது. அப்படிக் கொழுவினால் விஷயம் இன்னும் பெரிதாகி விடும் என்பதால் அடக்கிக் கொண்டேன்.

அடுத்து வந்த திங்கட்கிழமை காலையில் எதிர்பார்த்தபடியே என்னைப் பற்றியும் நோட்டீசுகள் வந்திருந்தன. மற்றையவர்களுடன் ஒப்பிடுகையில் அது குறைவாக இருந்தாலும் அது தந்த பாதிப்பு இன்னமும் மனதில் இருந்தது. எனவேதான் வெளியே சென்று படம் எடுத்தால் சிலவேளை நதீஷாவையும் காண நேரிடலாம். அப்படி நேர்ந்தால் அவள் இயல்பாக படமெடுக்கக் கூப்பிட அதைப்பார்த்து பிறகு லெக்சர் கோலில நோட்டீஸ் வர, ஏன் தேவையில்லாத உபத்திரவங்கள்? எனவேதான் படம் எடுத்துக்கொண்டு செல்லும் குழுக்களுடன் இணைவதைத் தவிர்த்துக் கொண்டிருந்தேன்.

“ஜெயந்தன்! என்னடா செய்யுறாய். கெதியா வாடாப்பா. எல்லாரும் போய்ற்றாங்கள் புறோக்கிறாமெல்லாம் தொடங்கப் போகுது”
தீபன் அழைத்தான்.

மகாவலியின் மேலான அக்பர் பாலத்தினைக் கடந்து Gym இனை அடைகையில் “காதல் ரோஜாவே... எங்கே நீ எங்கே?...” பாடலை ஒருவன் பாடிக் கொண்டிருந்தான்.

“ஜெயந்தன் டேய்! உனக்குச் சிற்றுவேஷன் சோங் போகுதடாப்பா”

”பேய்ப். அம்மாண வாயில வருகுது. சத்தம் போடாம அமத்திக் கொண்டு வா”

சற்று நேரத்தில் ஒவ்வொருவராக உள்ளே வருவதும் சிலரை அழைத்துக் கொண்டு வெளியே போவதுமாய் இருந்தார்கள். அருகில் இருந்த தீபன் என்னையும் வெளியே வருமாறு அழைத்தான். சென்றோம்.

“இந்தா மச்சான்! அடியடா”

“எனக்கு வேண்டாம். எனக்குப் பழக்கமில்லை”

”பேய்ப்.... நாங்க மட்டும் என்ன வீட்டிலையே பழகீற்றா வந்தனாங்கள். சும்மா அடியடா!”

“நான் போறன். நீங்க இருந்து அடியுங்கோ”

”பேய்ப்... நீ மட்டும் போறியோ? அங்கை உள்ளுக்கை போய் சரக்குகளுக்கு போட்டுக் குடு ஆராரு தண்ணியடிக்கிறம் எண்டு”

“ஏன்ரா நதீஷா உன்னைத் தண்ணியடிக்கக்கூடாதெண்டு சொன்னவளோ?”

'என்னடா இவங்கள் எல்லாத்துக்கும் அவளை இதுக்குள்ள இழுக்கிறாங்கள். ஏன்தான் அவள் எனக்கு குறூப்மேற்றா வந்து சேர்ந்தாளோ?' விசராய்க் கிளம்பியது.

“ஜெயந்தன்! நீ நதீஷாவுக்குப் பயந்துதான் தண்ணியடிக்கமாட்டன் எண்டுறாய்”

என்னுடைய Ego-வில் விழுந்தது அடி.

“இஞ்ச கொண்டா அடிச்சுக் காட்டுறன்”

பிளாஸ்ரிக் தம்ளரில் கலந்து தந்ததை வாங்கி முகர்ந்து பார்த்தேன். வயிற்றைப் பிரட்டியது.

“பாத்துக்கொண்டிருக்காம அப்பிடியே மூக்கைப் பொத்திக்கொண்டு அடித்தொண்டையில ஊத்து. ஒரு பெக் போய்ற்றுதென்றால் பிறகு ஒண்டும் தெரியாது”

தொண்டைக்குழியில் கரித்துக் கொண்டே வயிற்றுக்குள் சில்லிட்டுக் கொண்டு இறங்குவதை உணர்ந்தேன்.

“இந்தா மச்சான்! கோல்ட் லீப். இதையும் இழுத்துப்பார்”

உதட்டில் பொருத்தி புகையினை உள்ளுக்குள் இழுத்தேன். தொண்டை கமறிப் புரக்கடித்தது.

சிறிது நேரம் செல்ல மிதப்பாய் இருந்தது. சுற்றிவர இருப்பவையெல்லாம் இலேசாக ஆடுவதாய் தெரிந்தது.

“இன்னொரு பெக் அடி மச்சான்”

இப்போது அதன் மணமும் சுவையும் ரம்மியமாய் தெரிந்தன.

“ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு....” பாடல் வரிகள் மனதிற்குள் ஓட,

“ஜேன்!”

“அழ்க்கா!” - திடுக்கிட்டேன். இவள் எப்படி இங்கே?

“என்னடா இது?”

“அழ்து சுழ்ம்மா தாழ்ன்”

“இதுக்காகவா இஞ்ச வந்தனி?”

“எழ்ன்ன நீ? சுழ்ம்மா தொணதொணழ்ன்னு?”

“என்னடா குடிகாரங்கள் மாதிரி தண்ணியடிச்சு போட்டு உளறுறாய்? அம்மாக்குத் தெரிஞ்சுதெண்டால்..?

“சள்தான் போழ்டி”

தலைசுற்றியது. ஓவ்வ்வ்... வாந்தி வாந்தியாய் வந்தது. மண்டை விண்விண்ணென வலிக்கத் தொடங்கியது. எடுத்த வாந்தியின் மேல் அப்படியே சாய்ந்தேன்.

“ஆள் பிளற்றாகிற்றான். தூக்கிக்கொண்டுபோய் றூமில போட்டிட்டு வாங்கடாப்பா”
எங்கோ கனவில் கேட்பதாய் இருந்தது.

விழிப்பு வருகையில் தாங்கமுடியாத தலைவலி. அந்தத் தலைவலிதான் விழிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனது கட்டிலில் வாந்தியெடுத்துவிட்டு அதன் மேலேயே கிடப்பதை உணர்கையில் அருவருப்பாய் இருந்தது. எழ முயற்சித்தேன். முடியவில்லை. தலைப்பாரமாய் இருந்தது.

“அம்மா... அக்கா...” முனகினேன். யாரையும் வரக் காணோம்.

“அக்கா....” வழமையாய் வந்து என் பாரம் தீர்ப்பவள் வரக்காணோம். நேற்றிரவு நடந்தது நினைவினில் வந்தது. ச்சே! என்ன மனிதன் நான். அக்காவைப் போய்த் திட்டியிருக்கின்றேனே. ரோசக்காரி அவள் இனி வரமாட்டாள். மண்டை வெடித்தது. எதையோ இழந்துவிட்டு வெறுமையாய் தனிமையை உணர்ந்தேன். மதுவின் இயல்பு பற்றி எப்போதோ வாசித்த கதையொன்று நினைவினில் வந்து போனது.

ஒரு அறையினுள் ஒரு போத்தல் மதுவும், கிளர்ச்சியூட்டும் மாதுவும், பச்சிளங் குழந்தையும் இருந்தார்கள். நன்னடத்தையைச் சோதிப்பதற்காய் ஒருவனைக் கூட்டிவந்து அந்த அறையினுள் இருக்கும் மதுவை அருந்த வேண்டும் அல்லது அந்த இளம் மாதுவை வன்புணர்ச்சி செய்யவேண்டும் அல்லது அந்தப் பச்சிளங் குழந்தையை அடித்துக் கொல்ல வேண்டும் என்றார்கள். சிறிது நேரம் யோசித்த அந்த மனிதன் மது தனக்கு மட்டும் தான் கெடுதல் தரும். மற்றைய இரண்டும் பிறருக்கு கேடு செய்யும் என்பதால் அங்கிருந்த மதுவினை எடுத்துப் பருகினான். போதையேறியதும் புத்தி தடுமாறியது. காமம் தலைதூக்கியது. மாதுவின் மேல் பாய்ந்தான். அதைக்கண்ட குழந்தை வீரிட்டு அலறியது. அந்த அழுகையொலி அவனுக்கு நாரசமாய் இருக்கவே அந்தக் குழந்தையைத் தூக்கி அடித்துக் கொன்றுவிட்டு மங்கையின் மீது மீண்டும் பாய்ந்து தன் காம இச்சைகளைத் தீர்த்துக் கொண்டான்.

ஏறத்தாழ நானும் அந்த மனிதனின் நிலையிலேயே இருப்பதாய் உணர்ந்தேன். கண்களில் நீர் பெருகியது.


Thursday, November 18, 2010

வேரென நீயிருந்தாய்...(15)



1998ம் ஆண்டின் தைப்பொங்கலினை அக்பர் C-wing இனில் கோலாகலமாகக் கொண்டாடியிருந்தோம். அதைத்தொடர்ந்து வந்த சில நாட்களிலேயே பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு முதலாம் ஆண்டிற்கான முதற்பாதி தவணைக்காலம் அவசரமாக முடிக்கப்பட்டு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. விடுமுறையினை அடுத்து பெருமளவிலான மாணவர்கள் தங்கள் தங்கள் வீடுகளுக்குத்திரும்பியிருக்க யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களில் வேறிடங்களுக்கு செல்லமுடியாதவர்கள் மட்டும் அக்பரில் தங்கியிருந்தோம். சிறிலங்கா அரசு தனது சுதந்திரதினப் பொன்விழாவினை கண்டி நகரில் கொண்டாடுவதற்கு பெருமெடுப்பிலான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்ததனால் பாதுகாப்புக் காரணங்களைமுன்னிட்டு நாங்கள் எல்லோருமே கண்டி நகருக்குள் செல்வதனைத் தவிர்த்துக்கொண்டிருந்தோம். அப்போதைய பிரதிப் பாதுகாப்பமைச்சர் ஜெனரல் அநுருத்த ரத்வத்தை அவர்கள் கண்டிநகரில் நடக்க இருக்கும் சுதந்திரப் பொன்விழாவினை எந்தக்கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாதென சவால் விட்டதை அடுத்து கண்டி நகரெங்கும் பாதுகாப்புக் கெடுபிடிகள் மிகவும் அதிகரித்திருந்தன. தமிழ் மாணவர்களிடையே ஒருவித அச்சநிலை காணப்பட்டுக்கொண்டிருந்தது.


ஜனவரி 25, அதுவொரு ஞாயிற்றுக்கிழமை. முதல்நாள் சனிக்கிழமை இரவு முழுவதும் கொட்டக் கொட்ட விழித்தபடி அடித்திருந்த 'கொன்' (அரட்டை) காரணமாகக் காலையில் ஆழ்ந்த தூக்கத்தில் கிடந்தோம்.

'க்கும்ம்ம்....'

விடுதிக் கட்டடங்கள் யாவும் குலுங்கி அதிர்ந்தன. அதைத்தொடர்ந்து துப்பாக்கி வேட்டுக்கள் சடசடத்தன. எல்லோருடைய நித்திரையும் கலைந்து விட்டிருக்க ஒருவரையொருவர் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தோம். எங்கேயோ குண்டு வெடித்திருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமானதாக இருக்கவில்லை. காலை உணவிற்காகச் சிற்றுண்டிச்சாலையை அடைகையில் சிங்கள சிரேஷ்ட மாணவர்களின் முறைத்த முகங்களையே எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கண்டி தலதா மாளிகைக்குள் தற்கொடைத் தாக்குதல் நடைபெற்றிருப்பது தெரியவந்தது. வழமையாக உணவிற்காக வெளியே 'அக்கா' வீட்டிற்கோ அல்லது ஐடியலுக்கோ செல்லும் எல்லோருமே பீதியின் காரணமாக அக்பர் சிற்றுண்டிச்சாலையிலேயே தங்கள் உணவினனை அருந்திவிட்டிருந்தனர். மாலை நேரமளவில் ஜே.வி.பி.யின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த சிலர்வந்து தமிழ்மாணவர்களை வெளியே எங்கேயும் செல்லவேண்டாமென்றும். எங்களுக்கான பாதுகாப்பு வெளியே கிடையாது என்றும் எச்சரித்துச்சென்றனர். பல்கலைக்கழக விடுதிகளுக்குள் நுழைய முயன்றிருந்த சில காடையர்களை அவர்கள் திசைதிருப்பி அனுப்பிவிட்டிருந்தது தெரியவந்தது. கட்டுக்கலைப் பிள்ளையார் கோவிலின் முகப்பு வேறுசில காடையர்களால் உடைத்து விடப்பட்டிருப்பதாகச் சேதி வந்தது. அந்தக் கோயிலுக்கு நேர்முன்னாலேயே சிறிலங்கா காவற்றுறையினரின் காவல் நிலையம் ஒன்று அமைந்திருப்பதும் நினைவில் வந்துபோனது.

இரவானதும் மீண்டும் காடையர்கள் எம்மைத்தாக்குவதற்காக எமது விடுதிக்கு வரலாம் என்கின்ற அச்சம் எழுந்தது. அதை எவ்வாறு எதிர்கொள்வது அல்லது எப்படித் தப்பிப்பது என்கின்ற யோசனை எல்லோர் மனதையும் குடைந்தது. ஈற்றில் New-wing இல் உள்ள மாணவர்களும் C-wing இல் சென்று தங்கலாம் என்றும், யாராவது பெருமெடுப்பில் அடிக்க வந்தால் அப்படியே யன்னல்களுக்குள்ளால் குதித்து பற்றைகளுக்குள் பதுங்கி விடுவதென்றும் குறைந்த அளவில் வந்தால் எமது பாதுகாப்பிற்காகத் திருப்பித் தாக்குவது என்றும் முடிவானது. ஆயினும் எல்லோருடைய முகங்களிலும் பயம் பரவிக்கிடப்பதைக் காணமுடிந்தது. உறக்கத்தினைக் கலைப்பதற்காய்ச் சில மாணவர்கள் 304 விளையாட ஆரம்பித்திருந்தார்கள். நேற்றைய இரவுத் தூக்கம் வேறு கண்களைச் சுழற்றியது.


Wednesday, November 10, 2010

வேரென நீயிருந்தாய்...(14)


ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு
சூரையன் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே!



வரப்பிரகாஷின் சாவினை அடுத்து பகிடிவதை முற்றிலுமாய் நின்று போய் விட்டிருந்தது. பின்வந்தவொருநாளில் பகிடிவதை உத்தியோகபூர்வமாக முடிவிற்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்டிருந்த ஒரு சிலரைத் தவிர அனேகமாக நாங்கள் எல்லோருமே வரப்பிரகாஷை மறந்துவிட்டு எங்களெங்கள் வேலைகளில் ஈடுபடலானோம்.

விரிவுரைகளின் போதான தூக்கக்கலக்கங்களை களைவதற்கு துண்டுகளில் வரும் கிசுகிசுக்கள் உதவிக்கொண்டிருந்தன. Drawing வகுப்புகளின் போது போதனாசிரியர்கள்வந்து வரைந்து கொண்டிருக்கும் படங்களின் மேல் 'B' தர பென்சில்களால் வட்டமடித்துக் கடுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள். அதைத் தவிர்த்து ஏனைய ஆய்வு கூட வகுப்புகளும் surveying - உம் சந்தோஷமாகச் சென்று கொண்டிருந்தன. ஐந்து பேர்களைக் கொண்டிருந்த சில குழுக்களைச் சேர்ந்தவர்கள் வந்து Surveying அலுப்பாயிருக்கின்றது என்று கூறுவதைக் கேட்க வியப்பாயிருந்தது. எனது surveying குழுவில் நான்கு பேர் மட்டுமே. அதிலும் ஒராள் பெண். மற்றைய பெண்களைப் போலல்லாது ஆண்களுக்குச் சமமாக நதிஷாவும் பற்றைகள் பள்ளங்களுக்குள் இறங்கி வேலையில் ஈடுபடுவது அவள் மேல் ஒரு மரியாதையை உருவாக்கியிருந்தது. மற்றைய குழுக்களில் பெண்களுக்காகவும் ஆண்களே பற்றைகளுக்குள் இறங்குவதும் அதைச் சில ஆண்கள் வலியப்போய் விரும்பிச் செய்வதும் வேறு விடயம். அப்படியான விடயங்களே கிசுகிசுக்களாக வந்து விரிவுரைகளில் எங்களை விழிப்புடன் வைத்திருந்தன. பெண்களுடன் ஆண்கள் கதைக்கக் கூடிய தருணங்களாக ஆய்வுகூடங்களும் Surveying-மே விளங்கின. பாடசம்பந்தமான உரையாடல்கள்கூட சில வேளைகளில் வாளி வைப்பதாக திரிபடைவதும் உண்டு. எங்களுக்கிடையில் வாளி என்றும் அன்ரி-வாளி என்றும் இரு பிரிவுகள் உருவாகி விட்டிருந்தன. வாளிகள் என்று தங்களை அழைத்துக் கொள்வதனை யாருமே விரும்பியிருக்கவில்லையாயினும் அன்ரி-வாளி என்று தங்களை அழைத்துக் கொள்வோர் அப்படிக் கூறிப் பெருமைப்பட்டுக் கொள்வதையும், மற்றவர்கள் காணாதவிடத்து கள்ளவாளி வைப்பதில் ஈடுபடுவதையும் காணக்கூடியதாக இருந்தது. அதுகூட ஒரு அரசியல் மாதிரித் தான். சொல்வதொன்று செய்வதொன்று. அரசியலில் இதெல்லாம் சகஜம், இல்லையா?

இப்போதெல்லாம் நதீஷாவுடன் கூச்சமில்லாமல் உரையாடுவதற்கு நான் பழகியிருந்தேன். அதற்கு அவள் சிங்களமாயிருந்ததால் எங்களைப் பற்றி விரிவுரை மண்டபங்களில் கிசுகிசுக்கள் வராது என்பதும் ஒரு காரணமாயிருந்திருக்கக் கூடும். அதனுடன் முதல் நாள் சந்திப்பில் ஏற்கனவே இவளுடன் நன்றாகப் பழகியிருந்ததாக தோன்றியது கூட இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. இப்போது கூட அப்படித் தோன்றினாலும் அதற்கான எந்தவொரு சாத்தியமும் இருக்கவில்லையென்பது தான் வெளிப்படை உண்மை. இவையெல்லாவற்றையும் தவிர்த்துப் பார்த்தால், இப்போதுதான் முதன்முறையாக என்வயதொத்த ஒரு பெண்ணிடம் பழக வேண்டிய சந்தர்ப்பம் உண்டாகியிருக்கின்றது. இவளுடன் கூச்சமில்லாமல் பழகினாலும் ஏனைய பெண்களுடன் அது சிங்களப் பெண்களாயிருந்தாலும் சரி, பழகுவதில் உள்ள இயல்பான கூச்சம் இன்னமும் போகவில்லை என்பதை Explorer Club-இனரால் அழைத்துச் செல்லப்பட்ட மலையேற்றம் (hike) உணர்த்தியது.

அது முதலாண்டு மாணவர்களுக்கான Explorer club -இன் அறிமுகம். அதையொட்டி ஒரு மலையேற்றத்திற்கு ஒழுங்கு செய்திருந்தார்கள். கண்முன்னே விரவித் தெரியும் கந்தானை மலைத்தொடரின் உச்சியில் கால் பதிப்பதற்கான நாள். மனதிற்குள் கொண்டாட்டம். அந்த மலைத்தொடரின் முகட்டுக்குக் கீழேயே முகில்ப்படலங்கள் விளையாடித் திரிவதை கீழேயிருந்து பார்த்திருக்கின்றேன். மலையேறினால் நிச்சயம் அந்த முகில்களை அளைந்து விளையாடலாம். நினைக்கவே உடல் சிலிர்த்தது.

ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது. அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது...
பொதுவாக தமிழ்ப் பெண்கள் மலையேற்றத்திற்கு போவதில்லை. இம்முறையும் அப்படியே. ஆனாலும் வழமைக்கு மாறாக பல ஆண்களும் வரமுடியாத நிலையில் இருந்தார்கள். பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் நாடகப் போட்டி அன்று மாலை EOE அரங்கில் நடைபெற இருந்தது. அந்தப் போட்டியில் எமது பிரிவும் (batch) போட்டியிடவிருப்பதனால் பெரும்பாலான மாணவர்களும் மலையேற்றத்திற்கு வரவில்லை. “வாளி வைக்கிறவங்கள் தான் சங்கங்களோட திரியிறவங்கள்” என்கின்ற கருத்து பகிடிவதைக் காலங்களிலேயே திணிக்கப்பட்டிருந்தது. தமிழ் நிகழ்ச்சிகளுக்கும் எனக்கும் வெகுதூரம். அதற்காக கதை, கவிதை, நாடகம் என்றால் என்னவிலை என்று கேட்பதில்லை. ஏதோ அதற்கும் எனக்கும் தொடர்பில்லை. நாய்க்கேன் போர்த்தேங்காய் என்கின்ற நினைப்பு. அவ்வளவே. நாங்கள் தங்களுக்கு ஆதரவு தராமல் மலையேறுகின்றோம் என்று நாடகத்தில் பங்கேற்ற சிலருக்குக் கடுப்பு, எங்களுக்கோ மலையேற்றத்தை விட்டிட்டு இதென்ன கண்டிறியாத நாடகம் என்கின்ற வெறுப்பு.

“நீங்க நல்லா வாளி வையுங்கோடாப்பா” என்று விட்டு நாங்கள் மலையேற்றத்திற்கு கிளம்பி விட்டோம்.

காடுகள் பற்றைகளுக்குள்ளால் முன்னே செல்பவர்கள் வழியேற்படுத்தித்தர நாங்கள் சிறுசிறு குழுக்களாகப் பின் தொடர்ந்தோம். குளவிகள் இருக்கும் சில இடங்களில் மௌனமாய் நகர்ந்தோம். சில மேடுகளை முன்னே சென்றவர்கள் அமைத்துத் தந்த கயிற்றைப் பிடித்துக்கொண்டு ஏறினோம். மிகுந்த களைப்பாய் உணர்ந்தேன். என்னுடன் வந்திருந்த மற்றைய சில நண்பர்களும் களைத்துப் போகவே அங்கிருந்த புற்றரை மீது அமர்ந்து கொண்டோம். ஏறத்தாழ அதுவும் ஒரு போர்ப்பயிற்சிப் பட்டறை போன்றே தோன்றியது. திடீரென அக்காவின் நினைப்பு வந்தது. இதைவிடக் கடுமையான பயிற்சிகள் எல்லாம் அவள் எடுத்திருப்பாள் என்கின்ற எண்ணமே சோர்வைப் போக்கியது. சில சிங்களப் பெண்கள் நாங்கள் களைத்துப்போய்க் குந்தியிருப்பதைப் பார்த்துச் சிரித்தவாறே கடந்து சென்றார்கள்.

“மச்சான்! விசிறிச் சரக்குகள் எங்கள நக்கலாப் பாக்கிறாளவை. எழும்புங்கோடா. வெக்கமடா”
எழுந்து நடக்கத் தொடங்கினோம்.

“ஜெயந்தன்!”

திரும்பினேன். நதீஷா நின்றிருந்தாள்.

“mmmm... have some snacks."
அவளிடமிருந்த ஒரு பையை நீட்டினாள்.

“Thanks"
வாங்கிக் கொண்டேன்.

“ஹே! மெயா தமாய் நதிஷாகே ஜெயந்தன்” (இது தான் நதிஷாவின்ர ஜெயந்தன்)
அவளுடன் வந்த பெண்கள் அவளைக் கலாய்க்க, சிரித்துக் கொண்டே சென்றார்கள்.

“மச்சான் குடுத்து வச்சனியடா... ”
என்னிடமிருந்த பையினைப் பறித்துக் கொண்டார்கள்.

எனக்கு எதையுமே தராமல் தின்று தீர்த்தவர்கள்,

“அப்ப எப்ப மச்சான் கிச் பார்ட்டி?”
என்னையும் கலாய்க்கத் தொடங்கினார்கள்.

'இதை இப்படியே விட்டால் பிறகு லெக்சர் ஹோல் நோட்டீஸ் வரைக்கும் போய்விடுமே' என்கின்ற பயம் வந்தது.

'இவளுக்கேன் இந்தத் தேவையில்லாத வேலை?' நதிஷாவின் மேல் ஆத்திரமாய் வந்தது.

'கதையை உடனேயே அமத்த வேணும்' மூளைக்குள் அலாரமடித்தது.

“இது மச்சான், surveying-இலயும், workshop-இலயும் என்னைக் கொண்டு வேலை வேண்டுறதுக்கெடாப்பா! இவளவையைப் பற்றித் தெரியாதே?” மனதறிந்து பொய் சொன்னேன்.

“நீ சடையுறாய் மச்சான். என்னவோ எனக்கெண்டால் இது நல்லதாய்ப்படேல்ல. சொல்லிப்போட்டன்”

கோபம் கோபமாய் வந்தது.

“என்ன கதைக்கிறாய் நீ? அம்மாண வாற ஆத்திரத்திற்கு. உனக்கு என்னைப் பற்றி எல்லாக் கதையும் தெரியும். பிறகுமேன் இப்பிடிக் கதைக்கிறாய்?”
அறை நண்பன் தீபனை அதட்டினேன். அவனுக்கு அப்பாவைப்பற்றியும் அக்காவைப் பற்றியும் தெரிந்திருந்தது.

“சரிசரி விடடாப்பா! ஏன் இப்ப கோபப்படுகிறாய்? விசிறிப் பெட்டையள் சோஷலாத்தான் பழகுவாளவை. நாங்க சும்மாதான் உன்னைக் கடுப்பேத்தின்னாங்கள். சரிசரி வெளிக்கிடு. மற்றாக்களெல்லாம் கனதூரம் போய்ற்றாங்கள்”

விரைவாக நடக்க ஆரம்பித்தோம்.

மனது கொந்தளித்துக் கொண்டிருந்தது. அமைதியாய் சலனப்படாதிருந்த மனம் இந்தவொரு சின்னச் சம்பவத்தால் குழம்பிக் கொண்டிருந்தது. இவ்வளவு நாளும் ஒருத்தரும் எந்தவொரு பெட்டையையும் வைச்சு என்னைக் கடிச்சதில்லை. இப்ப இவளால கடிவாங்க வேண்டிக்கிடக்கே. அவமானமாய் உணர்ந்தேன். சுற்றிவர ஒரே புகார் மூட்டமாய் இருந்தது. இந்தப் புகார் மூட்டம் தான் கீழேயிருந்து பார்க்கையில் அழகான முகில்க் கூட்டங்களாய்த் தெரிகின்றன. எந்த முகில் கூட்டங்களைத் தொட்டு அனுபவிக்க வேண்டுமென்று ஆவல் பட்டிருந்தேனோ, அது இப்போது என்னைத் தழுவிக் கொண்டு இருந்தாலும் அந்த சிலிர்ப்புகளையும் சில்லிடல்களையும் பூரணமாய் அனுபவிக்க முடியாதவாறு இந்தவொரு சின்னச் சம்பவம் என்னைப் பாதித்து விட்டிருக்கிறது. எப்படியானவொரு முட்டாள் நான்!

இயல்பாய் எதேச்சையாய் நட்புணர்வில் தரப்பட்ட ஒரு உணவுப் பண்டத்திற்காய் இப்படியா குழம்புவது? கடைக்கண்ணால் அவளை நோக்கினேன். எந்தவொரு விகல்பமுமின்றி தன் தோழிகளுடன் அவள் சிரித்துப் பேசியவாறே அந்த ரம்மியமான சூழலை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அவளிடம் எந்தக் கல்மிஷமும் கிடையாது என்பதை அவளது அந்த இயல்பான சிரிப்பும் முகபாவனையும் அடித்துச் சொல்லிற்று. நான்தான் சும்மா மற்றவர்களின் பேச்சைக்கேட்டுக் குழம்பியிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். இப்போது மனம் இலேசாகியிருந்தது.

கூதல்காற்று உடலைத் தழுவியது. கீழிருந்து பார்க்கையில் ஏற்பட்டிருந்த முகில்களின் மீதான பிரியமும் பிரமிப்பும் இப்போது குறைந்து விட்டிருந்தன. பஞ்சுப் பொதி போல் அள்ளி விளையாடலாம் என எண்ணியிருந்ததற்கு மாறாக உண்மையில் அவை வெறும் புகார்க் கூட்டங்களே என்பதும், ஆயினும் துாரத்துப் பார்வைக்கே அவை அழகாகத் தோன்றுகின்றன என்பதும் தெரிந்தது. எமது வாழ்வில் பெரும்பாலான விடயங்கள் அப்படித்தானே! தூரத்தில் பார்த்து நாம் மயங்குபவற்றின் உண்மைச் சொரூபங்கள் அவற்றை அண்மித்து விட்டதன் பின் தானே தெரிகின்றன அல்லது புரிகின்றன.

Monday, November 8, 2010

வேரென நீயிருந்தாய்... (13)

“எல்லாவற்றையும் நீ ஏற்றுக் கொள்பவனாயிருந்தால் இந்த உலகில் உனக்கெதிரானது என்று எதுவுமே இராது” - ஓஷோ

அந்தச் சம்பவத்தின் பின்னர், பகிடிவதை பற்றிய எனது எண்ணங்கள் மாற்றமடைந்திருந்தன. பல்கலைக்கழக வாழ்க்கையில் பகிடிவதையும் ஒரு அங்கமே என மனது ஏற்றுக்கொண்டு விட்டதனால் அதைப்பற்றிய பயமும் ஓரளவிற்கு மறைந்து விட்டிருந்தது.

அது 13ம் திகதி October மாதம் திங்கட்கிழமை, காலை விரிவுரை மண்டபத்தில் முதலாவது விரிவுரைக்காகக் காத்திருக்கையில்தான் அந்தச்சேதி எம்மிடையே பரவத் தொடங்கியிருந்தது.

“வரப்பிரகாஷை ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணியிருக்காம்.”
நெஞ்சு திக்கென்றது. “எப்ப நடந்தது? என்ன நடந்தது?” எல்லோரும் குசுகுசுக்கத் தொடங்கினார்கள்.

“போன திங்கக்கிழமை றுாம் ராக்கிங்குக்கு கூட்டிக்கொண்டு போய் அஞ்ஞூறு (500) தோப்படிக்கச்சொல்லி விட்டவங்களாம். பிறகு அவனால நடக்கேலாமக் கிடக்கெண்டு சைக்கிளில ஏத்திக்கொண்டுவந்து பஸ் ஏத்திவிட்டவங்களாம். ஆள் வீட்ட போய் ஏலாதெண்டு இப்ப நவலோகாவில அட்மிட் பண்ணியிருக்காம்.”

ஒவ்வொருவரும் அங்கலாய்த்துக் கொண்டிருக்கையில்,

“மணியடா! அப்ப இனி எங்களுக்கு ராக்கிங் இருக்காது.” - என்றான் ஒருவன்.

”பேய்க்கதை கதைக்கிறாய். ராக்கிங் நிண்டுதெண்டால் இவ்வளவு நாளும் நாங்கள் வேண்டினதை ஆருக்குக் குடுக்கிறது?”

இன்னொருவன் எழுப்பிய கேள்வி விரிவுரையாளரின் வருகையுடன் அடங்கியது.

பல்கலைக்கழக சூழல் ஓரளவிற்கு மாறியிருந்தது. விடுதிகளிலிருந்த சிரேஷ்ட மாணவர்களில் பகிடிவதைக்கு வரச்சொல்லியிருந்தவர்களெல்லாம் வரத்தேவையில்லையென தகவல் அனுப்பியிருந்தார்கள். எல்லோரிடமும் இன்னதென்று கூறமுடியாத ஒருவித பய உணர்வு பரவிக்கிடந்தது.

அந்தவார முடிவின் நாள். வெள்ளிக்கிழமை இரவு. குறிஞ்சிக்குமரன் ஆலயத்தை விட்டு முதல் தடவையாக பகிடிவதை பற்றிய பயமின்றி நண்பர்களாகக் கூடி இறங்கிக்கொண்டிருந்தோம்.

“அண்ணைமார்! என்ன ராக்கிங் குளிர் விட்டுப் போச்சோ? official-ஆ உங்களுக்கு இன்னும் ராக்கிங் முடியேல்ல. ஆ! ஒண்டு ரெண்டு மூண்டு நாலு அஞ்சு. அஞ்சு பேரும் அப்பிடியே எங்களுக்குப் பின்னால குருந்துவத்தைக்கு வாறீங்கள். சரியே?”
பின்னால் அமைதியாக நடந்தோம்.

“டேய்! உங்களுக்குள்ள சிரிச்சுக் கதைச்சுக் கொண்டு வாங்கோ. இல்லாட்டிப் பாக்கிறவைக்கு ராக்கிங்குக்குக் கொண்டுபோற மாதிரி தெரிஞ்சிரும்.”
எமக்கிடையிலான இடைவெளியினை அவர்கள் அதிகரித்தார்கள்.

குருந்துவத்தையை அடைந்து அவர்களின் அறையிற்குள் பிரவேசித்தோம்.

“வரப்பிரகாஷ் ஆசுப்பத்திரியில இருக்கிறதக் கேள்விப்பட்டிருப்பியள் எண்டு நினைக்கிறன். வேறை யாருக்கும் ஆசுப்பத்திரிக்குப் போக விருப்பமோ?”
மௌனமாயிருந்தோம்.

“ராக்கிங் நல்லதோ கூடாதோ?”
அதற்கும் பதில் பேசாதிருந்தோம்.

“ஒழுங்காக் கேட்டா பதில் சொல்லத் தெரியாதாடா உங்களுக்கு?”
“இல்லையண்ணே.... அது வந்து...”
கோரஸாக இழுத்தோம்.

“எங்களோட ராக்கிங்கைப் பற்றிக் கதைக்க பயமாயிருக்கா? அப்பிடியெண்டால் உங்களை என்ன செய்யலாம்......? ஆ...! சரி ஆராருக்கு மேடையில பேசி அனுபவமிருக்கு?”
எல்லோரும் இல்லையென்றவாறே தலையசைத்தோம்.

“சரி அப்ப அஞ்சுபேரும் லைனில நில்லுங்க பாப்போம்.”
எல்லோருமே முதலாவதாக நிற்கப் பயப்பட்டுக் கடைசிக்குப் போய்க் கொண்டிருந்தோம்.

“டேய் என்னடா செய்யுறியள். லைனில நிக்கச் சொன்னால் கடைசீல போய் நிக்கறதுக்கு அடிபட்டுக் கொண்டிருக்கிறியள். இதையே சங்கக் கடையில நிவாரணச் சாமான் வேண்டப் போய் நிண்டியள் எண்டால் முன்னுக்கு நிக்கிறவனைப் பிடிச்சுப் பின்னால தள்ளுவியள்.”
'அட! தமிழனாய்ப்பிறந்த எல்லோருக்குமே சங்கக் கடையில நிவாரணம் வேண்டின அனுபவம் இருக்கும் போல. தமிழில முதல்ச் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் எண்டு மூண்டு சங்கங்கள் இருந்து தமிழ வளர்த்ததெண்டும், ஆனாலும் முதல் இரண்டு சங்க காலங்களின் தகவல்கள் வெள்ளப் பெருக்கால் அழிந்துவிட்டனவென்றும் கடைச்சங்கம் பற்றிய தகவல்களையே அறியக் கூடியதாக இருக்கென்றும் ஓ.எல்லில (O/L) படிச்சனாங்கள். அந்தக் கடைச்சங்கம் மட்டும் இன்னும் அழியாம இருக்கிறது சங்கக் கடையா மாறி எங்கட தமிழருக்கு நிவாரணம் குடுக்கத் தானாக்கும்.' எழுந்த நினைவினைக் கத்தரித்தது சீனியரின் குரல்.

“டேய் இஞ்சால நிக்கிற நீங்க ரெண்டு பேரும் ஒரு குறூப், அங்கால நிக்கிற ரெண்டு பேரும் மற்ற குறூப். நடுவில நிக்கிறநீ நடுவர். சரியா? இப்ப இஞ்சால நிக்கிற ரெண்டு பேரும் ராகிங் நல்லது. அது தேவையெண்டு சொல்லிப் பேச வேணும். அங்கால நிக்கிற ரெண்டு பேரும் ராக்கிங் கூடாது. அது தேவையில்லை எண்டு சொல்லிப் பேச வேணும். நடுவர் கடைசியாத் தீர்ப்புச் சொல்ல வேணும். சரியா? தொடங்குங்க.”
தட்டுத் தடுமாறி பகிடியாக நடுவராக நின்ற நான் ஆரம்பித்து வைக்க விவாதம் பகிடிவதை பற்றிய பயம் மறந்து சீரியாகச் செல்லத் தொடங்கியது. ஒவ்வொருவர் பார்வையிலும் ராக்கிங்கின் அனுகூலங்களும் பிரதிகூலங்களும் வெளிவரலாயின. உடல்வதை (physical & chemical) தவிர்த்து ஏனையவற்றை ஏற்றுக் கொள்வதில் யாருமே முரண்பட்டிருக்கவில்லை. அன்ரி ராக்கராக போவதில் யாருக்கும் உடன்பாடும் இருக்கவில்லை. எல்லோருமே ஒரே சமூகமாக இருந்து பல்கலைக்கழக வாழ்க்கையை அனுபவிக்க விரும்பினார்கள். விவாதம் முடிவின்றித் தொடரவே மீண்டும் பாகம் இரண்டு அடுத்தவாரம் தொடரும் என்று அறிவிப்பாளர் பாணியில் சொல்லிவிட்டு எங்களை அவர்கள் இடத்தினின்றும் விரட்டி விட்டார்கள். அதன் பின்னர் அவர்கள் யாரையும் காணவும் கிடைக்கவில்லை.

அது 26 October 1997, ஞாயிற்றுக்கிழமை இரவு. அக்பர் விடுதியில் இரவுணவினை அருந்திக்கொண்டிருக்கையில் அந்தச்சேதி வந்தது. வரப்பிரகாஷ் மரணித்துவிட்டான். சிரேஷ்ட மாணவர்கள், கனிஷ்ட மாணவர்கள் என்கின்ற வேறுபாடின்றி எல்லோர் முகங்களிலும் சோகம் அப்பிக்கிடந்தது. எங்களுடன் ஒருவனாகவிருந்து பல்கலைக்கழக வாழ்வினை அனுபவிக்கும் கனவுகளுடன் இருந்தவன் ஆரம்பப்படிக்கட்டிலேயே அஸ்தமித்துப்போய்விட்டான். ஏனைய சிரேஷ்ட மாணவர்களைப்போன்றே எதுவித தீய உள்நோக்கமுமின்றி அந்தப்பகிடிவதையில் ஈடுபட்ட அந்த சிரேஷ்ட மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாயிற்று. வாழ்க்கை என்பது எதிர்பாராத பல்வேறு திருப்பங்களைக் கொண்டவொரு திகில்ப் படம் போன்றது என்று கூறுவது எவ்வளவு நிதர்சனமானது என்பதை மீண்டும் அது உணர்த்திற்று.


பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12

Tuesday, November 2, 2010

தவறவிட்டவைகள்.

காலை பணியிடத்தில் வேலை ஆரம்பித்த சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு தொலைபேசி அழைப்பு. அவருடைய ஒரு முக்கியமான அலுவல் சம்பந்தமாக நாங்கள் இருவருமே கவனிக்கத் தவறியிருந்த ஒரு விடயம் அதிர்ஷ்டவசமாக அவருக்கு மின்னஞ்சலூடாக நினைவூட்டப்பட்டிருந்தது. அந்த மின்னஞ்சல் நினைவூட்டல் இல்லாதிருந்துவிடின் அந்த அலுவல் அதோகதிதான். [பலாப்பழத்தை வைச்சுப் பாத்துக்கொண்டிருக்க வேண்டியிருந்திருக்கும் :-)]

மதியம் வேறொரு நண்பன் ஒருவனிடமிருந்து வந்த மின்னஞ்சலின் இணைப்பினூடக இந்த வலைப்பூவினைச் சென்றடைந்திருந்தேன். ஏற்கனவே பலமுறை அந்த வலைப்பூவினை ரசித்திருக்கின்றேனாயினும் கடைசியாக எப்போது சென்றேன் என்பது நினைவிலில்லை. பொதுவாக வேலைகளில் அலுப்படிக்கும் நேரங்களில் தமிழ் வலைத்திரட்டிகளில் சென்று வலைப்பூக்களைத் தரிசிப்பதேயன்றி எந்தவொரு வலைப்பூவினதும் நிரந்தர வாசகனாக இருப்பதில்லை. என்னுடைய இயல்பே அப்படித்தான். சிலதளங்களின் நிரந்தர வாசகனாகி விட வேண்டும் என்கின்ற உந்துதலைத் தந்தாலும் என்னுடைய தாமசக்குணம் அதனைச் செயற்படுத்த விடுவதில்லை.

ஆழ்மனதின் அற்புத சக்திகள் என்கின்ற தலைப்பின் கீழ் மனதை ஒருமுனைப் படுத்துதல் பற்றிய அந்த கட்டுரையை விரும்பி இரசித்திருந்த மனது அதனை உடனடியாகச் செயற்படுத்த விழைந்தது. இந்த மனம் எப்போதும் இப்படித்தான், புதியவைகளை நாடி ஓடிக்கொண்டிருக்கின்றதேயின்றி அவற்றைத் தொடர்ந்து கைக்கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை. மனதின் விந்தைகளை அறிந்துவிட ஆசைப்படுவதேயன்றி அறிந்தவற்றைத் தொடர்ந்து கடைப்பபிடிப்பதில் அக்கறை காட்டுவதில்லை. அல்லது கவனிக்காமல் விட்டுவிட்டு புதிய விடயங்களை தேடி அலைந்து கொண்டிருக்கிறது.

முன்னால் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தது விசைப்பலகை (Key Board). அதில் உற்றுக்கவனிக்க என்ன இருக்கின்றது என்கின்ற அலட்சியம் எப்போதுமே. பத்து வருடங்களுக்கும் மேலாகப் பார்த்துப் பழகிய பரிச்சயம் அதனுடன். கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததைப் போன்றே ஆரம்பத்தில் அலுப்பும் அலட்சியமும் வந்தது. ஆயினும் தொடர்ந்து உற்று நோக்கிக் கொண்டேயிருந்தேன். இப்போது பெட்டிகள் கோலம் போட ஆரம்பித்தன. அது வேறு அனுபவங்களை இழுத்து வரத்தொடங்கியது. எனக்கு எப்போதும் தொடர்ச்சியாகப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தால் அந்தப் பெட்டிகளின் ஓரங்கள் வழியே கோலங்கள் வரையத்தொடங்கிவிடும் மனது. விசைப்பலகையில் குவிக்க நினைத்தால் அது விரிவடையத் தொடங்கியது. மனதை அடக்கநினைத்தால் தான் அடங்காது முரண்டுபண்ணும், அதை விட்டுவிட்டு அமைதியாய் அதை அலட்சியப்படுத்தினால் தானே அடங்கிவிடும் என்கின்ற சூட்சுமம் தெரிந்திருந்ததால் அடங்கும் வரை அமைதியாயிருந்தேன்.

விசைப்பலகையில் எத்தனை விசைகள் (keys) இருக்கின்றன. உங்களில் எத்தனைபேருக்கு உங்கள் விசைப்பலகையில் உள்ள விசைகளின் எண்ணிக்கை தெரிந்திருக்கின்றது வாழ்க்கையில் முதற்தடவையாக விகைகளின் எண்ணிக்கையை எண்ணத் தொடங்கினேன். நான் இதுவரையில் பாவித்திராத விசையொன்றும் (Scroll Lock) என் கவனத்திற்கு வந்தது. அதன் பயன்பாடு பற்றி அறிந்து கொள்வதற்காகக google-இனை நாடினேன். என்னை அலைய வைக்காமல் யாரோ ஒரு புண்ணியவானுக்கும் அந்த சந்தேகம் வந்து அதற்கு வேறொரு புண்ணியவானும் பதிலளித்திருந்தார்.

மனம் வியப்பும் வெறுப்பும் கலந்தவொரு நிலைக்குப் போனது. இந்தவொரு சின்னப் பொருளிலேயே இத்தனைவருட காலமாய் இந்தச் சின்னச்சின்ன விடயங்களைக் கவனிக்காமல் விட்டிருக்கின்றேன் என்றால்...

என்னத்தைச் சொல்லுறது? நீங்கள் எப்படி?

Sunday, October 17, 2010

காதல் வானிலே.


விமானத்தில் ஏறுவதற்கு முன்னராக boarding gate சோதனையைக் கடந்து boarding pass பதிந்ததன் பின்னர் அறையினுள் காத்திருக்கையில், அலைபேசி அதிர்ந்தது.

"It's amazing how quickly time moves. Yesterday I thought I loved her, but now I don't care about her at all." - Little Manhattan (2005).

குறுஞ்செய்தியை வாசித்ததும் சிரிப்பு வந்தது. “What a love!"

காதல் - புனிதமானதா? இல்லை அசிங்கமானதா?
காதல் இயற்கையானது தான் என்பதை ஏற்றுக்கொண்டாலும் அதுவொரு புதிராகவே அவனுக்குப் பட்டது. கவர்ச்சியான கன்னிகள் கணநேரங்களுக்குச் சலனப்படச் செய்தாலும் அதையெல்லாம் காதல் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மற்றவர்கள் சொல்கின்ற அனுபவங்களையோ அல்லது அந்தக்கால இந்திரனில் தொடங்கி இந்தக்காலத்து எந்திரன் வரை கூறப்படும் காதல்களையோ அவனால் புரிந்த கொள்ள முடியவில்லை. உயிரியின் அடிப்படை இயல்பான இனப்பெருக்கத்திற்கான ஓர் ஏற்பாடுதான் இந்தக்காதலின் அடிநாதமாக இருக்கமுடியும். எந்தவொரு ஆணும் சரி பெண்ணும் சரி வயதுமுதிர்ந்த எதிர்ப்பாலினைக் காதலித்ததாக வரலாறு கிடையாதே. இனத்தொடர்ச்சியின் அடிப்படையான காமமே நாகரிகமடைந்து காதலாக மாறியிருக்கலாம். ஆயினும் காதலுக்காக உயிரை விட்டவர்களைப் பார்க்கையில் குழப்பமாய் இருக்கிறது.

“காதல் என்ற ஒன்று அது கடவுள் போல. உணரத்தானே முடியும் சொல்ல வார்த்தை இல்லை” திரையிசைப்பாடல் ஞாபகத்தில் வந்து போனது.

காதலை உணராத வரைக்கும் அதைப்பற்றி சிந்தித்து நேரத்தை விரயமாக்குவதில் அர்த்தமில்லை என்பது புரிகையில், பயணிகளை விமானத்திற்குள் அனுமதிக்கத் தொடங்கியிருந்தார்கள்.

விமானப்பணிப்பெண்ணின் வரவேற்பினை ஏற்பதற்கு முன்பாக அங்கே வைக்கப்பட்டிருந்த அன்றைய ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டே விமானப்பணிப்பெண்ணின் செயற்கைத்தனமான புன்னகையுடனான வரவேற்பினை அலட்சியப்படுத்தி உள்நுழைந்து தனக்கான ஆசனத்தைப் பார்த்தான் 56C. அதில் சென்றமர்ந்தான். Check In counter - இல் ஜன்னலோர இருக்கையைக் கேட்கையில், அனைத்து ஜன்னலோர இருக்கைகளும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறி அவனை எரிச்சல் படுத்தியிருந்தார்கள். ஆயினும் அந்தக் கரையோரத்தின் மூன்று இருக்கைகளிலும் அவனைத்தவிர வேறு யாரேனும் வந்தமர்ந்ததாகத் தெரியாததால் அருகே வந்த விமானப் பணியாளரிடம் சொல்லிவிட்டு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டான். விமானம் பறப்படுவதற்கான அறிகுறிகளைக் காணவில்லை. இருக்கையின் முன்னேயிருந்த காணொலியிலும் படம் பார்ப்பதற்கான சமிக்ஞைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கவி்ல்லை. கொண்டுவந்திருந்த தினசரியைப் பிரட்டினான்.





“மாயை என்றால் என்ன கிருஷ்ணா?”

நெடுநாளாக தனக்கு புரியாதிருந்த புதிரினை அந்த நாராயணனிடம் வினவினார் நாரதர்.

முறுவலித்தான் மாதவன். இன்றைக்கும் தனக்குப் பரந்தாமன் பதில் தரப்போவதில்லை என்பதைப் புரிந்து கொண்ட நாரதருக்கு எரிச்சலாய் வந்தது.

அறிதுயிலின் போதே அனைத்தையும் அறிந்து கொண்டிருக்கின்ற அந்த அனந்தகிருஷ்ணனுக்குத் தெரியாத நாரதரின் மனப் புகைச்சல்?

“அலுப்பாயிருக்கிறது. வா! ஒருமுறை பூலோகம் சென்று வருவோம்”

நாரதரையும் தன்னுடன் அழைததுக் கொண்டு அப்போதே மண்ணுலகினை அடைந்தான் அந்த ஆதிகேசவன்.

அதிசயமாய் அவர்கள் பாலை நிலத்தினை அடைந்திருந்தார்கள். பயணக் களைப்பினைக் காட்டாது நாரதரும் நடந்தார். தொண்டை வரண்டு நாவடைத்தது.

“நாரதா! தாகமாயிருக்கிறது. தாகசாந்தி செய்ய வேண்டும். எங்காவது நீர்நிலைகள் இருக்கின்றதா என்று தேடிப்பார்த்து எனக்கும் கொண்டு வருவாயாக.”

கூறிவிட்டு அங்கே நின்ற பட்டுப்போன ஒரேயொரு மரத்தின் நிழலில் அமர்ந்து கொண்டான் கிருஷ்ணன்.

நீர்நிலைகள் நாடி நாரதரும் நாயாய் அலைந்தார். கானல் நீர்களைக் கண்டுகண்டு ஏமாந்தார். விரக்தியின் விளிம்புக்கு வந்தவரின் கவனத்தை எங்கோ துரத்தில் கேட்ட சத்தம் ஈர்த்தது. இது நீரோடையின் சலசலப்புச் சத்தமே. சத்தம் வந்த திக்கை நோக்கி நாரதர் நடக்கலானார்.



பெருமளவிலான வணிகச்செய்திகளையே தாங்கிருந்த செய்தித்தாள்களை வேகமாகப் பிரட்டலானான் அவன். சில இலக்கங்களுடன் கூடிய சதுரக்கட்டங்கள் கண்கைளை ஈர்த்தன. அட சுடோக்கு! தன் சட்டைப்பையிலிருந்த பேனாவினை எடுக்கையில் விமனப்பணிப்பெண் ஒருவர் இவனது இருக்கைக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த இருக்கையினை சுட்டிக்காட்டி துாரத்தில் உள்ள ஒருவருடன் உரையாடுவது தெரிந்தது. ஜன்னலோர இருக்கையினின்றும் தன்னை எழச்சொல்லப் போகின்றார்களே என்கின்ற எரிச்சல் உண்டானது. நள்ளிரவு பன்னிரெண்டு மணி கழித்துப் புறப்படும் அந்த விமானம் தன் முடிவிடத்தினை அடைகையில் அங்கேயும் நள்ளிரவு தாண்டி ஓரிரு மணித்துளிகளே கடந்திருக்கும் என்பதால் ஜன்னலோரத்தில் அமர்வதால் எந்தவொரு அனுகூலங்களும் இல்லையென்பது தெரிந்திருந்தாலும் ஏனோ அவனது மனம் அந்த இருக்கையினையே விரும்பிக் கொண்டிருந்தது. ஜீன்ஸ் சேர்ட் அணிந்தவொரு இளம்பெண் தன் இருக்கையினை விமானப்பணிப்பெண்ணிடம் சரிபார்த்துவிட்டு அவனது பக்கத்திருக்கையில் வந்து அமர்ந்தாள். நல்லவேளை! இந்த ஜன்னலோர இருக்கைக்கு உரியவர் அவளில்லை. அவன் சந்தோஷப்பட்டான். பத்திரிகையில் சுடோக்கினை நிரப்புவதில் ஈடுபடலானான்.

“Oh! Sudoku?"
வீணை நாதம் மீட்ட செவிகள் குளிர்ந்தன அவனுக்கு.

திரும்பினான். அவள்!

அண்ணலும் நோக்க அவளும் நோக்க, அங்கே கம்பர் இல்லாத குறை!

நடுஉச்சியில்லாமல் இடப்பக்கம் சற்றே சரித்துக் கன்னஉச்சியிட்டுப் பின் வாரிவிட்டிருந்த கூந்தல் பளபளத்துக் கொண்டிருந்தது.

அவனைப்பார்த்துச் சிரித்தாள். இல்லையில்லை சிணுங்கினாள், இல்லையில்லை சில்லறையாய்க் கொட்டினாள். அவளது கன்னக்குழிக்குள் அவன் விழுந்து கொண்டிருந்தான்.

அடச்சே! என்னவிது. எப்படிச் சொல்வது. இப்படியொரு மயக்கும் சிரிப்பினை எங்குமே பார்த்ததில்லையே. அவன் மயங்கிக்கொண்டிருப்பதாய் உள்ளுணர்வு எச்சரிக்கை விடுக்கவே மயக்கத்தை உதறினான். அவளை உற்றுப் பார்த்தான். அவள் ஒரு தமிழ் அல்லது சிங்களப் பெண்ணாகவே இருக்கவேண்டும் என்று அவளுடைய தோற்றம் சொல்லியது. சிங்கையிலிருந்து செல்வதென்றாலும் அங்கங்களைக் கொஞ்சமேனும் காட்டாமல் மூடியணிந்திருந்த ஆடைகள் அவளது பண்பாட்டைப் பறைசாற்றின. அவள் ஒன்றும் பெரிய அழகியென்று சொல்வதற்கில்லை. ஆனாலும் ஏதோவொன்று அவளிடம் அவனை வசீகரித்துக் கொண்டிருந்தது.

“How to do sudoku?”
சுடோக்கு நிரப்புகையில் வேறு யாரேனும் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் அவனுக்கு எரிச்சல் வந்திருக்கும். ஏனோ தெரியவில்லை அவளது கேள்வி அவனுக்கு சந்தோஷத்தையே கொடுத்தது.

“We should use the numbers only from 0 to 9 and each of the small 3x3 sqare can have one number only once....mmmm and also in each row and each column one number can come only once. By the by did you ever try it?”

“No no... I just heared about it that it's good for the brain, but I never tried it.“

”Oh! then do you want to try this one, but you see, they mentioned it's the hard one."
- 'டேய்! அடங்குடா' உள்மனம் எச்சரித்தது.

“No thanks. you carry on.."
புன்னகைத்தவாறே அவள் தன் இருக்கைப் பட்டியை அணிந்து கொள்ள இவனுக்குள் பூகம்பம் உண்டானது. பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு ஒரு பூகம்பத்தினை ஏற்படுத்தும் என்கின்ற கோயாஸ் கோட்பாடு அவனுக்குள் உண்மையாகிக்கொண்டிருந்தது (butterfly effect).

அவளுடன் உரையாடலைத் தொடர விரும்பினாலும், எப்படித் தொடர்வதென்று தெரியாமல் திண்டாடினான். வலவனின் (வலவன் - pilot) வேண்டுகோளுக்கிணங்க எற்கனவே அலைபேசியினை அணைத்துவிட்டிருப்பதால் நண்பர்களிடம் அறிவுரை பெறலாம் எனவெழுந்த நினைப்பிலும் மண் விழுந்தது. எப்படி அவளைத் தன்பக்கம் ஈர்க்கலாம்? அவனுக்குள் சிந்தனைகள் வேர்விட ஆரம்பித்தன.

கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகின்றானோ என்றே அவனுக்குத் தோன்றியது? அவளுக்கும் சுடோக்கில் ஆர்வம் இருப்பதால் அதை வைத்தே அவளை வசீகரிக்கலாம் என்றது ஒருமனது. ஓரக்கண்ணால் அவளை அவதானித்தவாறே சுடோக்கின் கட்டங்களை நிரப்பிக் கொண்டிருந்தவன் ஓரிடத்தில் தடுமாறினான். இனி trial & error முறையிலேயே எஞ்சியிருக்கும் கட்டங்களை நிரப்பலாம் என்பது புரிந்தது. விரைவாகச் செய்துமுடிக்க வேண்டிய அங்கலாய்ப்பில் முதலாவது எடுகோள் தப்பாகிப் போனது இறுதி இருகட்டங்களையும் நிரப்ப முயற்சிக்கையில்தான் புரிந்தது. அவளும் இவன் நிரப்புவதையே பார்த்துக் கொண்டிருப்பதால் தான்விட்ட தவறினை அவள் அறிந்து தன் மீதான impression - இனைக் குறைத்துக்கொள்வதை அவன் விரும்பவில்லை. தவறே விடாதது போல் எஞ்சிய இருகட்டங்களையும் நிரப்பிவிட்டு,

பெருமிதமாக அவளைப் பார்த்தான்.

அட! கண்ணாலும் இப்படியெல்லாம் பேசமுடியுமா?. வியப்பினைக் காட்டிப் பாராட்டுவதாயும் இன்னும் என்னென்னவெல்லாமாகவும் அவள் விழிகள் நர்த்தனமாடின.

இது அளாப்பல் ஆட்டம் என்றெழுந்த எண்ணத்தினை All is fair in love and war என்கின்ற பிரபல்யமான ஆங்கில பழமொழியினைச் சொல்லி அடக்கிக் கொண்டான்.

“Wow! you did even the very hard one in a short period. you are great!"
அவள் பாராட்டுக்கள் மேகங்களைத் தாண்டிப்பறந்து கொண்டிருந்த விமானத்தினின்றும் வெளியே வந்து மேகங்களில் அவளும் அவனும் மட்டுமே ஓடி விளையாடுவதைப் போன்ற கிறக்கத்தைத் தந்தன.

“So, you are from Singapore or...?"

"No no.. I'm from SriLanka"

"Then are you working here or studying?"
அவளுக்கு 24 அல்லது 25 வயதிருக்கும் என அவன் அனுமானித்திருந்தான்.

”No no. I just visited here for my mum"

"Oh! then your mum is working here"

"No no. She had been admitted in the hospital for a treatment"

"ப்ச், what happenend to her? anything serious?"

"No no. Now she is OK. She had some cardiac problems. So my father took her here, then I came from Australia to look after her."

"So you are working there in Australia?"

"No no. Just few months before only I completed my management degree there."

"So as you are going to sriLanka, are you going to work there?"

"Oh No no. I got a job in Dubai, I just want to spend some days in my hometown with my relatives and then I'll move to Dubai"

என்னடாப்பா எல்லாக் கேள்விகளுக்கும் எடுத்தவுடன் No no என்கின்றாளே என்கின்ற எண்ணம் அவனுக்குள் எழுந்தாலும் தான் அறிய வேண்டிய தகவல்கள் தானாகவே வந்தடைந்து கொண்டிருப்பது அவனுக்குப் பரவசத்தைத் தந்தது.

”So, where is your hometown?"

”Negombo. By the by I've forgot to ask your name"

"My name? oh! my name is...., but my friends call me Nara."

"Oh! Are you a Sinhala?"

"No no, I'm Tamil, and you?"

"Oh I see, but your nick name seems to be a Sihalala name. Right?...mmmm me...? mmmm.... how to say? actually my mother is a burger and father is a Sinhalese, but I know even Tamil a little bit."

"Oh! how do you know Tamil."

"Many tamil friends studied with me in the International school. So I know Tamil little."

இதற்கும் மேலே எப்படித் தொடர்வதென்று சிந்தித்தான்.

“Nara! if you don't mind may I know why do you have this nick name?"

"mmm... actually in my childhood, in a drama I acted as Naradar, so then my childhood friends called me Naradar and then... later on it becomes Nara, By the by may I know your name."

"So you are an actor? WOW!... mmm... my name? like your friends, my friends call me as Krrish, but I'm not an actress,hahahaa ok? rather I'm a fan of the Hindi actor Krrish and I had a very good collection of his photos. So my friends called me so..".

தோளைக் குலுக்கினாள், உதிர்ந்தான் அவன்.

இதற்கு மேலும் எப்படித் தொடர்வதென்று தெரியாமல் தடுமாறினான். ஆனாலும் அவளுடனான உரையாடலைத் தொடரவே விரும்பினான். ஆயினும் விமானச்சிப்பந்திகள் உணவினைப் பரிமாற ஆரம்பித்திருந்ததால் இருவரின் கவனமும் உணவின் மேல் சென்றது.

உணவினைமுடித்துவிட்டுத் தனக்கு உறக்கம் வருவதாய்ச் சொல்லிவிட்டு அவள் படுத்துக் கொண்டள். தன் உறக்கம் தொலைத்தான் இவன்.

“எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளா?....”

எப்படி இந்த மாற்றம் தனக்குள் உண்டானது?. இதுதான் அந்தக் காதலா? நெஞ்சோடு காதல் வருமென்று நேற்றுவரை நம்பாதிருந்தவன் குழம்பினான். எப்படி இவளிடம் தன்மனம் நாய்க்குட்டியாய் ஓடிச் செல்கிறது? இது காதலா? அல்லது காமத்தின் மாயையா? காமத்தின் மயக்கமாயிருப்பின் அதற்கான எந்தவிதமான தூண்டல்களும் தன்னுள் எழவில்லையே. ஏன்? எனச்சிந்தித்தான். அப்படியானால் இது காதல்தானா?

“காதல் என்ற சொல்லில் காமம் கொஞ்சம் உண்டு இடையில் சின்னக் கோடு அதுதான் வேறுபாடு...”

பாடல்வரிகள் நினைவில் ஓடின. இவள் மேல் தனக்கு காமமும் உண்டாகுமா? உறங்கிக்கொண்டிருக்கும் அவளைப் பார்த்தான்.

“ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ?...”
பாடல் இவளுக்காகவே எழுதப்பட்டது போல் அவனுக்குள் தோன்றிற்று.

“காதல் ஒற்றைக் கண்ணில் காமம் ஒற்றைக் கண்ணில் ரெண்டு கண்ணால் உன்னைப் பார்க்கிறேன்...”
எல்லாக் காதல் பாடல்களும் பின்னணிகளும் மனதிற்குள் ஓடின.

“மனதை அலைபாயவிடாதே! அப்புறம் மீள முடியாது. எதையுமே முளையிலேயே கிள்ளிவிடவேண்டும்” என்கின்ற எச்சரிக்கைச் செய்தியினை ஒரு மனம் திரும்பத்திரும்ப அனுப்பிக் கொண்டிருந்தது. இது காதலெனின் தலைக்கு மேலே மின்குமிழ் (bulb) ஒளிர வேண்டுமே. மணிச்சத்தம் கேட்கவேண்டுமே. அப்படிக் கேட்குமானால் இது காதல்தான் என்பதை உறுதி செய்து கொள்ள முடியுமென அவன் நம்பினான். ஆயினும் இரவு விளக்குகளைத் தவிர அனைத்து மின்விளக்குகளையும் அணைத்துவிட்டுப் பறந்து கொண்டிருக்கும் விமானத்திற்குள் இவையெல்லாம் சாத்தியமில்லை என்பது அவனுக்குப் புரியாமலில்லை. எனவே அவன் எச்சரித்த மனதினைப் புறக்கணிக்கத் தொடங்கினான்.

“விழாமலே இருக்க முடியுமா? விழுந்து விட்டேன் காதல் வலையிலே...”
பாடலில் மனம் லயித்தது.

உறக்கம் இல்லா விழித்தபடி பார்த்திருக்கும் கனவுகளில் மூழ்கினான். சட்டென்று விமானம் மெதுவாய்க் குலுங்கியது போன்று உணர்ந்தான் 'டிங்'- என்று ஒருவகை மணியொலி எழும்பியது. அதைத் தொடர்ந்து விமானத்தினுள்ளும் மின்விளக்குகள் ஒளிரத் தொடங்கின.

“Please pasten your seat belts” என்கின்ற அறிவிப்பு ஒலிபரப்பப்பட்டது. விமானம் செல்லும் பாதையில் காற்றுப் பொட்டலங்கள் (Air pockets) இருப்பதையும் அதனால்தான் இந்த எச்சரிக்கை அறிவிப்புக்கள் என்பதையும் புரிந்து கொண்டான்.

இப்போது அவன் மனம் மிகவும் சந்தோஷமாகவிருந்தது. இது காதல்தான் என்பதில் துளியளவிலேனும் சந்தேகம் எழவில்லை. அவளும் எழுந்து விட்டிருப்பது தெரிந்தது.

ஒரு பெண் உண்மையிலேயே அழகிதானா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவள் நித்திரையால் எழுந்தவுடன்தான் தெரிந்து கொள்ள முடியும். அவளையே உற்றுப் பார்த்தான். புன்னகைத்தாள். கைகளை நீட்டி சோம்பல் முறிக்கையில் இலேசாக உரசுப்பட அவனுக்குள் மின்சாரம் பாய்ந்தது.

“கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை....”

அவளிடம் அவளது மின்னஞ்சல் முகவரியினைப் பெற்றுக் கொண்டான். அவள் மீண்டும் உறக்கத்திற்குச் செல்ல, விமானத்திலிருந்து இறங்கியதும் தன்காதலை அவளிடம் தெரிவித்துவிடவேண்டுமென்ற முடிவுடன் கண்ணயர்ந்தான்.

“மன்மதலீலையை வென்றார் உண்டோ...?”






ஆற்றங்கரையையடைந்த நாரதர் தண்ணீர் பருகிவிட்டு கிருஷ்ணனுக்கும் எடுத்துக் கொண்டு எழுந்ததும் அப்படியே திகைத்துப் போய்விட்டார். ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை என ஏராளம் அப்சரஸ்களைப் பார்த்தும் சஞ்சலப்பட்டிராத மனத்திற்குள் பூமழை பொழிந்தது. சன்னியாசியாய் தேச சஞ்சாரியாய்த் திரிந்த கலகக்காரர் சம்சாரியானார். நாட்கள் வருடங்களாகி உருண்டோடுவதை அதிகரித்து வரும் மழலைச் செல்வங்கள் உணர்த்தின.

என்றுமில்லாதவாறு ஒரு மாரிகாலமும் வந்தது. அடைமழை. ஆறு பெருகிப் பெருக்கெடுத்து ஊருக்குள் நுழைந்தது. ஆழிப்பேரலை போன்று இது ஆற்றுப் பேரலை. உற்ற மனையாளையும் பெற்ற குழந்தைகளையும் ஆற்று வெள்ளத்திற்குப் பறிகொடுத்துவிட்டு தேற்றுவாரின்றி தேம்பியழுகையில்தான் நாராயணனின் நினைவு வந்தது. வந்த வேலை மறந்து எங்கெங்கோ அலைந்து எதிலோவெல்லாம் மனதைப் பறிகொடுத்து மீண்டும் ஆரம்ப்பப் புள்ளிக்கே திரும்பியிருந்த நாரதர் தன்னை நொந்தவாறே வந்த வழியே நடந்தார்.

அங்கே அந்த கோபாலன் இவருக்காய்க் காத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவன் காலடியில் வீழ்ந்து கதறப் போனவரை,

“தண்ணீர் எடுத்துவர இவ்வளவு நேரமா? ஏன் அருகில் எங்கேனும் ஆறுகள் இருக்கவில்லையா?”

கோவிந்தனின் கேள்விகளைக் கேட்ட நாரதருக்குள் மின்னலடித்தது. அப்படியானால் இதுவரையில் தான் அனுபவித்தவையெல்லாம்???????

பக்தனின் நெடுநாளைய சந்தேகத்தைத் தீர்த்துவிட்ட சந்தோஷத்தில் புன்னகைத்தான் மாயவன்.




பயணிகள் யாவரும் வெளியேறியபின் விமானத்தினைத் துப்பரவு செய்ய வந்த பணியாளன் இருக்கை 56A யினை அடைந்தான். கீழே ஒரு காகிதத்துண்டு கசக்கி வீசப்பட்டிருந்தது. அதை எடுத்துப் பிரித்துப் படித்தான். kirrish.lanka@gmail.com