Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Monday, September 6, 2021

மச்சாளின் கல்யாணம்

”அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு; தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?”

கெலோனாவிலிருந்து (Kelowna) வான்கூவர் நோக்கிய பயணத்தில், வன்கூவரினை அண்மிக்கையில், கொழுந்துவிட்டுப் பற்றி எரிந்துகொண்டிருந்த காட்டுத்தீயினைக் காண்கையில் பாரதியாரின் இப்பாடல்தான் மனதிற்குள் எழுந்து வியாபித்துக் கொண்டிருந்தது. அந்தத் தீ பாரதியாரை அடுத்துப் பட்டினத்தாரையும் இழுத்துக்கொண்டு வந்தது.

முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே

பட்டினத்தாரின் இந்தப் பாடலுடன் தொடர்புபட்ட ஞாபகச் சங்கிலித் தொடர் எனக்குச் சுந்தரமூர்த்தி அம்மானை நினைவுக்குக் கொண்டுவந்தது. நான் முதன்முதலாகச் சாட்டி மயானத்திற்குச் சென்று ஒரு பிணம் எரிவதைப் பார்த்ததென்றால் அது சுந்தரமூர்த்தி அம்மானின் பிணத்தைத்தான்.

சுந்தரமூர்த்தி அம்மானைத் தெரியாதவர்கள் 1990 இற்கு முற்பட்ட காலத்தில் வேலணையில் இருந்திருக்க மாட்டார்கள். அதற்காக வேலணை தவிர்ந்த ஏனைய இடங்களில் உள்ளவர்களுக்கு அவரைத்தெரியாது என்று அர்த்தமல்ல. யாழ்ப்பாணத்தில் அக்காலத்திலிருந்த மாட்டுவண்டிச் சவாரிப்போட்டி ஆர்வலர்களில் பெரும்பாலானவர்கள் சுந்தரமூர்த்தி அம்மானின் பரம இரசிகர்கள். முதலிலேயே சொல்ல மறந்து விட்டேன். அந்தக் காலத்தில் அதாவது இந்தியன் ஆமி இலங்கைக்கு வருவதற்குச் சில மாதங்கள் முன்பு வரை, சுந்தரமூர்த்தி அம்மான் யாழ்ப்பாணத்தில மிகவும் பிரபலமான ஒரு மாட்டுவண்டிச் சவாரிக்காரன். மாட்டுவண்டிச் சவாரியில ஆள் ஒரு புலி. 

1987 இல், இலங்கை விமானப்படையின் பொம்மர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், கா.பொ. இரத்தினம் அவர்களின் வீட்டின்மீது, நடாத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் அங்கு நின்றிருந்த இரண்டு குதிரைகள் கொல்லப்பட்டது பத்திரிகைகளில் வந்த செய்தி. ஆனால் அதே குண்டுத் தாக்குதலில் சுந்தரமூர்த்தி அம்மான் ஆசை ஆசையாய் வளர்த்த, மாட்டுவண்டிச் சவாரிகளில் அவருக்கு வெற்றிகளை ஈட்டித்தந்த, அவருடைய இரண்டு எருத்து மாடுகளும் படுகாயமடைந்து ஒரு கிழமையிலேயே இறந்துபோன விடயம் ஏனோ தெரியவில்லை, ஒரு செய்தியிலையும் வரவில்லை. ஆனா அது அவற்றை குடும்பத்தின்ரை வாழ்க்கையையே தூக்கிப் பிரட்டிப் போட்டுது. 

அதுவரைக்கும் சுந்தரமூர்த்திஅம்மான் வீட்டை நான் அடிக்கடி போறதுக்கு முக்கிய  காரணம்  அவரும் அவருடைய வண்டில் மாடுகளும்தான். நான் எப்ப போனாலும் ”வாடா மருமோன” எண்டுதான் பாசமாக் கூப்பிடுவார். அப்போதெல்லாம் ”வாங்க சின்ன மச்சான்” எண்டு அவரின் மகள் என்னை அன்பாகக் கூப்பிட்டாலும் நான் ஆசையாய்  ஓடிப்போய் பக்கத்தில்  நிற்பது அம்மானுக்குப் பக்கத்தில்த்தான். ஏனென்றால் அவர் எப்போதுமே அந்த எருத்து மாடுகளுக்கு அண்மையில்த்தான் நிற்பார். 

அந்தமாடுகளைக் கொஞ்சம் அளைந்துகொண்டு நிற்கையிலேயே மச்சாள் ஏதாவது தின்பண்டங்களைக் கொண்டுவந்து தருவார் அல்லது குடிப்பதற்கு ஏதாவது தருவார். அதனால்த்தான் முதலில் அவர்மீது எனக்குப் பிரியம் உண்டாகியது. ஏனோ தெரியவில்லை. மாமி மட்டும் கொஞ்சம் விலத்தியே நின்று கொள்வார். மாமாவுக்கும் மாமிக்கும் அவ்வளவிற்கு ஒத்துவராது என்பது அந்தவயதில் எனக்கே புரிந்திருந்தது.

மாமியும் மச்சாளைப்போல நல்ல வடிவும் நிறமும். மாமாவும் கறுப்பெண்டாலும் நல்ல களையான ஆள்தான். ஆனால் என்ன, முன்மண்டை முழுக்க அவருடைய நாம்பன் மாடுகள் நல்லா நக்கிக் கொடுத்ததாலயோ என்னவோ நல்ல வழுக்கை. சனிக்கிழமைகளில் வெய்யில் வெளிச்சத்தில அவருடைய தலை, மாமி நல்லாப் புளி போட்டு விளக்கி வைக்கிற பித்தளைச் செம்புகள் மாதிரி, பளபளவெண்டு மினுங்கும். சனிக்கிழமைகளில்த்தான் அம்மான் மாடுகளைக் குளிப்பாட்டிற்றுத் தானும் நல்லா எண்ணெய் தேய்த்து முழுகிறவர். 

அவர் தன்னுடைய முழு நேரத்தையும் தன்னுடைய சவாரி மாடுகளைக் கவனிப்பதிலேயே செலவழிப்பார். மாமிக்கு அது பிடிப்பதில்லை. ”இந்த மனிசனுக்கு என்னைக் கட்டி வைச்ச நேரம் பேசாம ஒரு மாட்டைக் கட்டி வைச்சிருக்கலாம். அதுவும் நாம்பன் மாட்டை. போயும் போயும் இந்த மனிசனுக்குப்போய் என்னைக் கட்டி வச்சாங்களே. இதைக்கட்டி நான் என்னத்தைக் கண்டன்” எண்டு அடிக்கடி புறுபுறுத்துக் கொண்டிருப்பார்.

சுந்தரமூர்த்தி அம்மான் எங்களுக்குச் சொந்த மாமாவோ அல்லது ஒன்றுவிட்ட மாமாவோ கிடையாது. ஆனாலும் உறவுமுறையில் அவர் மாமா என்பது மட்டும் நிச்சயம். அது மட்டுமல்லாமல் அப்போது மச்சாளை, அதுதான் சுந்தரமூர்த்தி அம்மானின் மகளை, எனது ஒன்றுவிட்ட அண்ணாவான எனது பெரியப்பாவின் மகன் சுத்திக் கொண்டிருந்தார். அவரும் மச்சாளும் அப்போது வேலணை மத்திய கல்லூரியில்தான் க.பொ.த. உயர்தரம் படித்துக்கொண்டிருந்தார்கள். நான் பத்து வயது கூடத் தாண்டாத பாலகன் என்பதால், என்னைத் தூதுவிடுவதற்கு அண்ணா முயற்சித்துக் கொண்டிருந்தார். அண்ணா மட்டுமல்ல அண்ணாவிலும் வயது கூடிய வேறுபல அண்ணன்மாரினுடைய சைக்கிள்களும் மச்சாளின் வீட்டிற்கு அண்மையில் அடிக்கடி சுத்திக் கொண்டிருக்கும். 

மச்சாளைக் கனபேர் சுழட்டிக்கொண்டிருந்தாலும் மச்சாள் பெரியப்பாவின்ரை மகனில மனப்படுகிறது எனக்கும் புரிந்திருந்தது. அடிக்கடி என்னட்டை அண்ணாவைப் பற்றி விசாரிப்பா. ஆனால் ஏனென்று தெரியாது, அவர் அண்ணாவைப்பற்றி விசாரிப்பது எனக்குப் பிடிக்காது. மச்சாள் என்னுடன் மட்டும்தான் பழகவேண்டும் என்று என் மனதிற் தோன்றும். மாமாவுக்கும் தன்ரை மகளில நல்ல பிரியம். தன்ரை மகளை ஊரில இல்லாத இளவரசனுக்குத்தான் கட்டிக்குடுப்பன் எண்டு அடிக்கடி சொல்லுவார். அதைக்கேட்டால் என்னுடைய இதயத்தை யாரோ பிடிச்சுக் கசக்கிப்போட்டுப் போறதுபோல இருக்கும்.

சவாரி மாடுகள் இரண்டும் இறந்ததன் பின்னர் மாமா முற்றிலும் ஒடுங்கிப்போயிருந்தார். இப்போது மாமி கொஞ்சம் மகிழ்ச்சியாய் இருப்பதாய்ப்பட்டது. அந்த மகிழ்ச்சியும் கனநாள் நீடிக்கவில்லை. அதற்கு நாட்டு நிலைமையும் ஒரு காரணம். 

கப்டன் மில்லரின் தற்கொடைத்தாக்குதலை அடுத்து ஒப்பரேசன் லிபரேசன் தோல்வியில் முடிவடைந்ததும் அதைத்தொடர்ந்து இலங்கை இந்திய அமைதி ஒப்பந்தம் உருவானதும் மிகவேகமாக நடைபெற்றது. அமைதிப்படை என்ற பெயரில் இந்தியப்படையினர் எமது பிரதேசங்களில வந்திறங்கியதை மக்கள் கொண்டாடிக்கொண்டிருக்க, எங்கள் ஊரில் அதை முதலில் எதிர்த்தவர் சுந்தரமூர்த்தி அம்மான்தான். 

”ஆமி எண்டால் அவனுக்கெண்டு ஒரு குணம் இருக்கும். அது இலங்கை ஆமியெண்டால் என்ன? இந்தியன் ஆமி எண்டால் என்ன? எல்லாம் ஒண்டுதான். இண்டைக்கு அவனைப் பார்த்து ஈயெண்டு இளிக்கிறயள். அவன் நாளைக்குத் தன்ரை குணத்தைக் காட்ட வெளிக்கிடுவான். அப்ப ஓடுவியள் எல்லாரும் முன்னாலயும் பின்னாலயும் பொத்திக்கொண்டு”

அம்மான் அப்பிடிச் சொல்லேக்குள்ள எல்லாரும் அவரை நக்கலாகப் பார்த்தார்கள். ஆனால் விரைவிலேயே நாட்டு நிலைமை மீண்டும் மாறத் தொடங்கியது. அமைதி ஒப்பந்தத்திற்கு எதிராகக் கைதுசெய்யப்பட்ட குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு வேங்கைகளை இறக்கவிட்டு இந்திய அரசு வேடிக்கை பார்த்தது. அமைதி ஒப்பந்தத்தில் கூறப்பட்டவற்றுக்கு எதிராக இலங்கை அரசு இயங்கத் தொடங்கியது. இந்திய அரசு அதைப்பற்றிய அக்கறையின்றித் தன் நலனை மட்டும் கருத்திற் கொண்டு இயங்கிக்கொண்டிருந்தது. 

இந்நிலையில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து 1987ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15ம் திகதி நல்லூரின் வீதியில் தியாகி திலீபன் நீர்கூட அருந்தாமல் தன் உண்ணாநோன்பினைத் தொடங்கினார்.

இந்தியாவின் தேசத்தந்தையாகக் கருதப்படுபவர் மகாத்மா காந்தி அவர்கள். அவர் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராக உண்ணாநோன்பிருந்தே பாரததேசத்திற்கான விடுதலையினைப் பெற்றுத் தந்தார் என்று கூறப்படுகிறது. அப்படியான அகிம்சாவாதியைத் தேசத்தந்தையாகக்கொண்ட பாரதநாடு திலீபனின் உண்ணாநோன்பினை ஏறெடுத்தும் பாராமல் அலட்சியமாய் நடந்துகொண்டது. 

ஈழப்பிரதேசமெங்கும் திலீபனின் உண்ணாநோன்பிற்கு ஆதரவாகப் பெருமளவில் மக்கள் அணிதிரளத் தொடங்கினார்கள். ஆங்காங்கே அடையாள உண்ணாவிரதங்களும் இடம்பெற்றன. சந்திகளில் ஒலிபெருக்கிகளில் திலீபனின் உடல்நிலை பற்றிய அறிவித்தல்களும் உண்ணாநோன்பிற்கு ஆதரவான பாடல்களும் ஒலிபரப்பாகின.

நல்லூரின் வீதியில் நடந்தது யாகம்
நாலுநாள் ஆனது சுருண்டது தேகம்
தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை
திலீபனைப் பாடிட வார்த்தைகள் இல்லை

மக்கள் அனைவரும் இன்னதென்று கூறமுடியாத சோகத்தில் மூழ்கியிருந்தனர். ஆயினும் அடிமனதில் காந்திதேசம் கைவிடாது என்கின்ற ஆழ்ந்த நம்பிக்கை அவர்களை ஆற்றுப்படுத்தியிருந்தது.

”அவங்கள் திலீபனைச் சாக விட்டிருவாங்கள். அவங்களுக்கு எங்களில ஒரு அக்கறையும் இல்லை. இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுக்கு ஆதரவா இருக்கிறதாலதான் எங்களைப் பாவிச்சு இதுக்குள்ள புகுந்திருக்கிறாங்கள்” எண்டு சுந்தரமூர்த்தி அம்மான் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார்.

பசித் தீயை எரித்த பட்டினித் தீ நீ!
பன்னிரு நாட்கள் பசியுனக்குத் தீனி 

காந்திதேசம் தன் அகிம்சாவாதக் கொள்கையைக் கைவிட்டுவிட்டதை உலகுக்கு உணர்த்தியவாறே பன்னிரு நாட்களில் செப்ரம்பர் 26ம் திகதியன்று தியாகி திலீபன் காவியமானான். அமைதிப்புறா வேடமிட்டு வந்திருப்பவை வேட்டையாடத் துடித்துக் கொண்டிருக்கும் வல்லூறுகளே என்பதை ஈழதேசமும் உணர்ந்து கொண்டது. அதில் முதன்மையானவர்களில் ஒருவனாகப் பெரியப்பாவின் மகனும் இணைந்து கொண்டான்.

எப்பவுமே புதுசாப் பூத்த பூவரசம் பூப்போல நல்ல பளபளப்பா பிரகாசித்துக்கொண்டிருந்த மச்சாளின்ரை முகம் அதுக்குப் பிறகு வாடிப்போன புகையிலை மாதிரி, முகமெல்லாம் கறுத்துப்போய் நல்லா வயக்கெட்டுப் போனது.

சில மாதங்களில் ஊரெல்லாம் மீண்டும் போர் பரவியது. ஒரு வருடத்திற்குள்ளாகவே போராளிகளுக்கு உதவி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்தியப்படையுடன் சேர்ந்தியங்கிய மண்டையன்குழு அம்மானை மண்டையில் போட்டுவிட்டதாக ஊரில் பேசிக் கொண்டார்கள். அம்மானின் செத்தவீட்டிற்கு இந்தியப்படைக்கும் அதன் கூலிக்குழுக்களுக்கும் அஞ்சிப் பலர் வரவில்லை. அதனாலேயே சுடலைக்குச் செல்லும் சந்தர்ப்பம் பதினொரு வயதில் எனக்கு வாய்த்திருந்தது. 

அதுவரை இளவரசியாக இருந்த மச்சாளும், ”அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையும் உடையேம். . .” என்று கலங்கிய பாரிவேந்தனின் மகளிருக்கு ஒப்பானார். 

என்ன, அங்கவை சங்கவைக்குக் கபிலர் இருந்தார். மச்சாளுக்குத்தான் மாமியை விட்டால் யாருமில்லையே. பின்னால் திரிந்தவர்களையும் போர் வந்து ஊரைவிட்டு விரட்டியடித்துவிட்டது  மாமியோ ஊர் உலகம் அடிபடாதவர். அம்மானிடம் அவரை ஒப்படைத்த ஒரே வருடத்தில் அவரது பெற்யோரும் ஒருவர் பின் ஒருவராக வேறு கருப்பையூர்களுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். 

அம்மான் இருக்கும் வரை அவரைப் பெரிதாக மதிக்காத மாமி, இப்போதுதான் அம்மானின் அருமையை உணரத் தொடங்கினார். அதனால் என்ன பயன்? அம்மான் இறந்த இருமாதங்களிலேயே மாமி கிழவியாகிவிட்டதைப் போல் தோற்றமளித்தார். வயிற்றுப்பாட்டிற்காக தங்கள் காணியில் மாமியும் மச்சாளும் தோட்டவேலைகளில் ஈடுபடத் தொடங்கினர். 

இந்தியப் படையுடன் இயங்கிய கூலிப்படைகளின் அப்போதைய பிள்ளைபிடிக்கும் நாட்டுநிலை காரணமாக நானும் வீட்டைவிட்டு வெளியே செல்வதில்லை. இந்தியப் படை வெளியேற நாங்களும் படிப்பைச் சாட்டாக வைத்து யாழ்ப்பாணத்திற்கு இடம் மாறினோம். அதன் பின்னர் அம்மான் குடும்பத்தினருடான தொடர்பு அருகியிருந்தது.

2002 இல் A9 பாதை திறந்தபோது நான் படிப்பு முடிந்து கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்தேன். பாதை திறந்த பின்னர், நான் ஊருக்குச் செல்லும் வேளைகளில் மச்சாள் வீட்டிற்கும் செல்லவேண்டும் என நினைப்பதுண்டு. 

”குமர் முத்திக் குரங்கானது போல” என்று ஊரில் ஒரு சொலவடை உண்டு. 1988 இற்குப் பின்னர் 2003 இல், ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகள் கழித்து மச்சாளைப் பார்த்தபோது எனக்கு அப்பிடித்தான் தோன்றியது. 

பேரிளம் பெண்ணாகத் தோற்றமளிக்க வேண்டிய முப்பத்திமூன்று வயதிலேயே ஆள் மிகவும் வயதாகிக் கிழண்டிவிட்ட உருவத்துடன் தோற்றமளித்தார். மாமியின் நிலையோ படுமோசம். ஒரு நேரச் சாப்பாட்டுக்கே சிங்கியடிக்கும் அழிபசி நிலையில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். என்னால் இயன்ற உதவிகளைச் செய்வதாகக் கூறிவிட்டு வந்து பின் அதைப்பற்றி மறந்தும் விட்டேன்.

புலம்பெயர்ந்து, பின் 2015 இல் ஊருக்குப் போயிருந்த போது மாமி இறந்துவிட்ட செய்தியறிந்து மச்சாளைச் சென்று பார்த்தேன். மாமியும் இப்போது இல்லாததால், தனிமையிலும் வறுமையிலும் இருக்கும் அவரின் நிலை என்னுள் ஒரு வெறுமையை உருவாக்கியது. அந்த வறுமை நிலையிலும் அவரின் உபசரிக்கும் பண்பு மாறியிருக்கவில்லை. அதுமட்டுமன்றிக் கனடாவிற்குக் கொண்டு செல்வதற்காக பனாட்டு, புழுக்கொடியல் என்பவற்றையும் வற்புறுத்தித் தந்தார். பழைய ஞாகங்கள் வந்து மனதைப் பிசைந்தது. அக்காலத்தில் எத்தனையோ இளைஞர்களின் கனவுக் கன்னியாய் இருந்த மச்சாளின் நிலை, வாழ்வின் நிலையற்ற தன்மையை எடுத்தியம்பியது. 

ஊரில் இல்லாத இராஜகுமரனை, தேவதையாய்த் துள்ளித் திரிந்த தன் இளவரசிக்குத் திருமணம் செய்விக்க நினைத்திருந்த மாமா இருந்திருந்தால். . . 

2018 இல் மீண்டும் ஊருக்குப் போயிருந்த போது மச்சாளின் குடிசைக்கும் சென்றிருந்தேன். அங்கே மச்சாள் இருககவில்லை. அருகில் உள்ளவர்களிடம் விசாரித்த போது, அவர் திருமணமாகிக் கணவனுடன் நீர்வேலியில் வசிப்பதாய்ச் சொன்னார்கள். கதைகளில் தான் இதுபோன்ற நம்பமுடியாத இனிய அதிர்ச்சிகளைக் கேள்விப்பட்டிருக்கின்றேன். இப்போது நிஜமாகவே என் காதுகளில் அந்த வார்த்தைகள் தேனாய் இனித்தன. மனதிற்குள் ஏதோ ஒரு பாரம் கழன்று விலகி நிறைவாய் உண்ந்தேன்.

மறுநாள் வேறொரு உறவின நண்பனைச் சந்திக்கையில் மச்சாளின் வாழ்வைப் பற்றிச் சிலாகித்தேன். யாரேனும் இளமைக்காலத்தில் அவரைக் காதலித்திருந்த ஒருவராக அது இருக்கக்கூடுமோ என்ற என் சந்தேகத்தைக் கூறினேன்.

”அட பேயா! அப்பிடியெல்லாம் ஒண்டுமில்லையடா. அந்த மனிசனுக்குப் பாரிசவாதம் வந்து கால்கையெல்லாம் இழுத்துப்போட்டுது. வருத்தம் பார்க்க வந்த கடைசி மகன்காரன், தாயைத் தன்னோட கனடாக்குக் கூட்டிக்கொண்டு போனாத் தன்ரை பிள்ளைகள அவா பாப்பா எண்டிட்டு, இங்கை இவரைப் பாக்கிறதுக்கு நம்பிக்கையான ஆள் தேடித் திரிஞ்சவன். சரியான ஆக்கள் அம்பிடயில்லை. அம்பிட்ட ஆக்களும் கனக்கக் காசு கேட்டவை. அதுதான் யோசிச்சிற்று அவன் இப்பிடி ஒரு முடிவை எடுத்தவன். மனிசிக்காரிக்கும் இவரை விட்டிட்டு பிள்ளைகளோட போய்க் கனடாவில செற்றிலாக விருப்பம். இப்ப கலியாணம் எண்ட பெயரில ஓசில நம்பிக்கையான ஒரு வேலைக்காரி கிடைச்சிற்றுதெல்லோ”

எனக்குத் தலைசுற்றி மயக்கம் வருவது போல் இருந்தது.

மச்சாளைப் போல இன்னும் எத்தனை எத்தனை தேவதைகளின் வாழ்வுகளில் இந்தப் போர் இப்படி விளையாடியிருக்கும்?

********

நன்றி: தாய்வீடு செப்ரம்பர் 2021

Sunday, August 1, 2021

கனவில் நினையாத…(2)

 


2021 யூலை 03

நாமிருந்த அறைக்குள் நுழைந்த அந்த மருத்துவத் தாதியைக் கண்டதும் ஒரு நொடி எனக்குக் கீழே நிலம் வழுவுவதாய் உணர்ந்தேன். உடனேயே யாழவன் படுத்திருந்த கட்டிலில் கையூன்றி என்னை நிலைப்படுத்திக் கொண்டேன்.

அடித்துச் சொல்லலாம் அது ஊர்மிளா தான் என்று. அன்று பார்த்தது போல், இருபத்தாறு ஆண்டுகள் கழிந்துவிட்ட பின்பும் இன்றும் அப்படியே எவ்வித மாற்றமும் இன்றி இருக்கிறாள். தலைமுடிகள் கூட அன்று பார்த்த அதே மினுமினுப்புடன் கருங்கூந்தலாய்…

ச்சே என்னைப் பாரேன். தலைமயிர் தொடங்கி தாடிமுடி வரை எல்லா இடங்களிலும் நரைமுடிகள் எட்டிஎட்டித் தம் தலைகளைக் காட்டிக்கொண்டிருக்கின்றன. தொந்தியும் வேறு இப்போது தொங்கத் தொடங்கியிருந்தது.

அவளையே வைத்தகண் வாங்காமல் பார்க்கின்றேன். என்னைப் பார்த்துக் குறுநகையொன்றை உதிர்த்துவிட்டு யாழவனின் வெப்பநிலையைப் பரிசோதிக்கின்றாள்.

என்ன இது? இவளுக்கு என்னைத் துளிகூடத் தெரியவில்லையா? அல்லது தெரியாதது மாதிரி நடிக்கிறாளா?

யாழவனைப் பரிசோதித்துவிட்டு அவள் அறையைவிட்டு வெளியேற முயல,

”Excuse me, நீங்க. . . நீங்க, உங்கட பெயர் ஊர்மிளா தானே?”

”ஓ! நீங்க தமிழா? I’m sorry. நான் ஊர்மிளா இல்லை. எதுக்கு நீங்க ஊர்மிளாவா எண்டு கேக்கிறீங்க”?

”Sorry. நீங்க தப்பா நினைச்சுக் கொள்ளாதீங்க. உங்களைப் பார்க்க அப்பிடியே அச்சு அசலா ஊர்மிளா மாதிரி இருந்திச்சு. அதுதான் கேட்டனான். I’m sorry”

“It’s OK. No worries. நீங்க சொல்லுற ஊர்மிளாவுக்கு எத்தினை வயசிருக்கும்? ஏனெண்டா என்ரை அம்மாக்கும் ஊர்மிளாதான் பெயர். நானும் அவாவை மாதிரித்தான் இருக்கிறன் எண்டு எல்லோரும் சொல்லுறவை.”

கடவுளே! ஒருவேளை நான் தேடும் ஊர்மிளாதான் இவளின் தாயாக இருந்தால் ….

”ஓ!  Sorry, sorry. நான் உங்களிட்டைத் பிழையாக் கேட்டிட்டன். நான் சொன்ன ஊர்மிளாவுக்கு கொஞ்ச வயசு தான்.”

மனதைத் திடப்படுத்திக்கொண்டு பொய்யுரைத்தேன். ஊர்மிளாவிற்குத் திருமணமாகி இத்தனை வயதில் ஒரு பெம்பிளைப்பிள்ளை இருக்கும் போது இப்போது வந்து பழைய கதைகளைக் கிளறுவது அர்த்தமில்லாதது.

”ஓ! It’s really interesting. நானும் அப்பிடியே அம்மாவைப் போல இருக்கிறன் எண்டு மற்றாக்கள் சொல்லேக்குள்ள, ஓராளப் போல ஏழுபேர் இந்த உலகத்தில இருப்பினம் எண்டு அம்மா சொல்லுறவா. இப்ப நான் மூண்டாவது ஆளைப் பற்றிக் கேள்விப்படுகிறன். அதுசரி நீங்க சொல்லுற ஊர்மிளாவும், இங்க கனடாவிலதான் இருக்கிறாவோ?”

”எனக்கு அவா இப்ப எங்க இருக்கிறா எண்டு தெரியாது. முந்தி ஊரில இருக்கேக்குள்ளதான் தெரியும். அதுகும் கொஞ்சநாள்த்தான் பழக்கம்.”

”அவாவுக்கு கொஞ்ச வயசெண்டு சொல்லுறீங்கள். ஆனா ஊரில இருக்கேக்குள்ளதான் தெரியுமெண்டா, இப்ப அவாக்குமு் கன வயசாகிருக்குமே? ஒருவேளை நீங்க என்ரை அம்மாவைத்தான் சொல்லுறீங்களோ?”

எதற்குத் தேவையில்லாத வம்பு? உடனேயே அவளை மறுதலித்தேன்.

”இல்லையில்லை. அது உங்கட அம்மாவா இருக்கேலாது.”

என்னையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்ததவள்,

”என்னெண்டு அவ்வளவு உறுதியாகச் சொல்லுறீங்க?”

அவள் நான் உண்மையை மறைக்கின்றேனோ என்று சந்தேகப்படுகிறாள் என்பது புரிந்தது. கடவுளே! ஏற்கனவே எனது ஊர்மிளாவிற்கு நான் இழைத்த அநீதிக்கு, ஒருவேளை இவளது தாயாரும் அதே ஊர்மிளாவாய் இருந்துவிட்டால், கடவுளே! இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் அவள் வாழ்வில் ஒரு குழப்பத்தை நான் ஏற்படுத்திவிடக்கூடாது.

இதுவரை நேரமும் அவள் கண்பார்த்துப் பேசிய நான் இப்போது அவள் கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் எனது பார்வையினைத் தரை மேல் தவழவிட்டேன்.

”இல்ல. நான் முள்ளிவாய்க்கால் சண்டைக்குள்ளை அவாவைக் கண்டிருக்கிறேன். அப்ப அவா கல்யாணம் கட்டேல்லை. அதுக்குப் பிறகு அவா கல்யாணம் செய்திருந்தாலும் உங்கட வயசில அவாவுக்குப் பிள்ளை இருக்காதுதானே. அதாலதான் உறுதியாச் சொல்லுறன்.”

”ஓ! அப்ப நீங்க 2009 இற்குப் பிறகு தான் இஞ்சை வந்திருக்கிறீங்கள் என? அம்மாவை தொண்ணூற்றைஞ்சு யாழ்ப்பாண இடப்பெயர்வோட கொழும்புக்கு வந்து இஞ்சால வந்திற்றினம். அம்மா சொன்னவா, தான் தொண்ணூற்றைஞ்சில அருந் தப்பில உயிர் தப்பினதெண்டு. அம்மாவின்ரை பெரியம்மாவையோட அம்மாவும் நவாலிச் சேர்ச்சுக்குள்ள இருந்தவாவாம். பிறகு ஐடென்ரிக்கார்ட்டை வீட்டை விட்டிட்டு வந்திற்றா எண்டு திரும்பிப் போய்ற்று வாறதுக்குள்ளை பிளேன் வந்து குண்டு போட்டு அங்கையிருந்த ஆக்கள் எல்லாரும் சரியாம்”

என்ர கடவுளே! இவளது தாய்தான் நான் தேடிக்கொண்டிருக்கும் ஊர்மிளா. எப்பிடியெண்டாலும் அவள் நல்லாயிருந்தால் சரி. அவளது வாழ்க்கையில் இனி நான் வந்து பழைய நினைவுகளைக் கிளறுவது கேவலமானது. அவளது நினைவுகளை இனி நான் மூட்டைகட்டிவைத்துவிட வேண்டும்.

”ஓ! அப்பிடியா? சரி இனி நீங்க இதுகளைப் பற்றியெல்லாம் உங்கடை அம்மாவிட்டைப் போய்க் கேட்டு அவாவையும் குழப்பாதீங்க. என.”

”ஓமோம்! நீங்க சொல்லுறதும் சரிதான். By the by என்ரை பேர் சிந்து. உங்கடை பெயரைக் கேக்க மறந்திற்றன். சரி விடுங்கோ நான் அங்கை றெக்கோர்ட்டில பார்க்கிறன். கதையில கனநேரம் நிண்டிட்டன். உங்கடை மகனுக்கும் இப்ப ரெம்பரேச்சர் நோர்மலாத் தான் இருக்கு. நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை எண்டபடியால டொக்ரர் இனித் திங்கட்கிழமைதான் வருவேர். வந்து பார்த்திற்று அநேகமா நாளண்டைக்கு வீட்ட விட்டிருவினம் எண்டு. நினைக்கிறன். சரி நான் அப்ப, பிறகு வந்து பார்க்கிறன்.”

அவள் அறையை விட்டு வெளியேற என்மனமும் வெறுமையாகிப் போனது. யாழவனைப் பார்க்கிறேன். ஆறு வயதுப் பிஞ்சு. ஆழ்ந்த உறக்கத்திலும் முகத்தில் முறுவலிப்புடன். அவன் முகத்தைப் பார்க்கையில்தான் என் மனக்கவலைகளை நான் மறப்பதுண்டு.


2021 யூலை 04
 

ஏனோ தெரியவில்லை. என் மனம் அமைதியிழந்து தவித்துக் கொண்டிருந்தது. ஒருவேளை சிந்து இதைப்பற்றி ஊர்மிளாவுடன் கதைத்திருப்பாளோ? அப்படிக் கதைத்திருந்தால் ஊர்மிளா என்ன சொல்லியிருப்பாள்?

காலையிலிருந்தே சிந்துவின் வரவை என் மனம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவளது கடமை நேரத்திலும் வேறொரு தாதியே வந்து யாழவனுக்கு மருந்துகளைக் கொடுத்துவிட்டுப் போயிருந்தாள்.

ஒருவேளை ஊர்மிளா என்னைப் பற்றிச் சொல்லி என் முகத்தில் விழிக்கவே விருப்பப்படாமல் சிந்து இருக்கின்றாளோ? ச்சே! நான் செய்தது எவ்வளவு பெரிய பிழை. பெண்பாவம் பொல்லாதது என்பார்கள். ஊர்மிளா என்னிடம் எவ்வளவு கெஞ்சினாள். எவ்வளவு தூரம் அழுதாள். நான்தான் அந்த நேரத்து உணர்ச்சியால்…இப்போதுகூட நான்  அப்படிச் செயற்பட்டது சரியா தவறா என்று தெரியவில்லை. ஆனாலும் ஈற்றில் அவளும் என் முடிவுக்குச் சம்மதம் தெரிவித்ததால் தானே இந்த நிலை ஏற்பட்டது. இன்னவென்று விபரிக்க முடியாத உணர்ச்சிகளின் சிக்கலுக்குள் நான் ஆழ்ந்து கொண்டிருந்தேன்.

மாலை 8.00 மணியளவில் சிந்து எங்கள் அறைக்குள் நுழைந்த போதுதான் மனது கொஞ்சம் இலேசாகியது. உள்ளே வந்தவள் சிறு புன்னகையை உதிர்த்து விட்டு யாழவனைப் பரிசோதித்தாள். பின் என்னிடம் திரும்பி,

”இண்டைக்கு அம்மாக்குத் திடீரெண்டு கொஞசம் ஏலாம வந்திற்றுது. அதுதான் காலமை அவாவை டொக்ரரிட்டைக் கூட்டிக்கொண்டுபோய்க் காட்டிற்று night shift இற்கு வந்தனான். நான் உங்களோடை கொஞ்சம் ஆறுதலாக் கதைக்க வேணும். இப்ப போய் மற்றப் பேஷன்ற்சையும் பார்த்திற்றுப் பிறகு வந்து கதைக்கிறன் என”

என்றாள்.

எனக்கு நெஞ்சுக்குள் திக்கென்றது. இவளது கதையைப் பர்த்தால் நிச்சயம் எமது நேற்றைய உரையாடலைப்பற்றித் தன் தாயிடம் கூறியிருப்பாள் என்றே தெரிகிறது. அதன் விளைவால்தான் ஊர்மிளாவிற்கு வருத்தம் வந்திருக்கவேண்டும். இதைப்பற்றி அவளது கணவனும் அறிந்திருப்பானோ? கடவுளே. ஒரு குருவிக்கூட்டைக் கல்லெறிந்து கலைத்து விட்டேனோ? மனதிற்குள் குற்றவுணர்ச்சிகள் வந்து குந்திக்கொண்டு என்னைப் பாடாய்ப்படுத்தின. அவள் காதலை ஏற்றுக்கொண்டுவிட்டுப், பின் மனதை மாற்றிக் கொண்டது எவ்வளவு பெரிய தப்பு.

ஆனாலும் இன்றுவரை நாமிருவரும் பெருமைப்படக்கூடிய ஒரேயொரு நல்ல விடயம், நாங்கள் அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் எமது பண்பாட்டை மீறாமல் நடந்துகொண்டதே.

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் சிந்து அறைக்குள் நுழைவதைக்கண்டு என்மனம் பதைபதைத்தது.

”நீங்க எனக்கு உண்மையைச் சொல்லவேணும். நீங்க கேட்டது என்ரை அம்மாவைத் தானே?”

அவள் இப்படி நேரிடையாக வந்து என்னிடம் கேட்பாள் என்று நான் கொஞ்சம் கூட நினைத்திருக்கவில்லை. 2001 இல தீச்சுவாலை முறியடிப்புச் சண்டையில நாங்க இருந்த காப்பரணுக்கு திடீரெண்டு வந்த ஐஞ்சு டாங்கிகள் சுத்தி நிண்டு பொழியேக்க கூட நான் இப்படித் திடுக்கிட்டதில்லை.

”Please, என்னைப் பிழையா விளங்காதீங்கோ! நான் உங்களோடை கதைச்சிற்று நேற்றுப் போய் அம்மாவிட்டை சும்மா கேட்டனான், அவாக்கு, ஜெயந்தன் எண்ட பேரில, அதுதானே உங்கட பெயர், ஆரையும் தெரியுமா எண்டு. அவா உடனேயே ரென்ஷனாகி, அவாக்குப் பிரஷர் எல்லாம் கூடித் தலைச்சுத்தும் வந்திற்றுது. அதுதான் அவாவை இண்டைக்கு family doctor-ட்டைக் கூட்டிக் கொண்டு போனனான். அவர் செக் பண்ணிப் பாத்திற்று, உடம்பில ஒரு பிரச்சினையும் இல்லை. மனசுக்குத்தான் ஏதோ அதிர்ச்சி நடந்திருக்கெண்டு சொன்னவர். அம்மா தனக்கு ஒரு மனப்பிரச்சினையும் இல்லை எண்டு மழுப்புறா. அதுதான் உங்களிட்டைக் கேக்கிறன்”

அவள் சொல்லச் சொல்ல எனக்குள் ஏதோவெல்லாம் செய்தது.

”இல்லையில்லை. நான்தான் நேற்றே எல்லாத்தையும் சொல்லீற்றனே. அம்மாக்கு ஏதும் பிரச்சினையெண்டா நீங்க உங்கட அப்பாட்டையோ அல்லது உங்கட மற்ற சகோதரங்களிட்டை ஏதும் கேட்டுப் பாத்திருக்கலாமே”

ஊர்மிளாவின் குடும்பத்தைப்பற்றியும் அவளின் கணவரைப்பற்றியும் அறியும் ஆவலில் கதையைப் போட்டுப்பார்த்தேன்.

அவள் கண்கள் கலங்கின.

”எனக்கு அப்பாவும் இல்லை, வேற சகோதரங்களும் இல்லை.”

அவள் குரல் கரகரத்தது.

”ஓ! I’m so sorry.”

”It’s OK. என்ரை அப்பா, அம்மா, அப்பம்மா எல்லாரும் நான் ஒரு வயதாயிருக்கேக்குள்ளையே கார் அக்சிடன்ற் ஒண்டில செத்துப்போய்ற்றினம்”

”ஓ! கேக்கவே கஷ்ரமாயிருக்கு. அப்ப நீங்க அம்மா எண்டிறது?”

”என்ரை அம்மாவைத்தான். Sorry. உண்மையில அவா என்ரை அத்தை. அப்பாவின்ரை தங்கச்சி. ஆனா நான் சின்னனிலயிருந்தே அவாவ அம்மா எண்டு கூப்பிட்டு அப்பிடியே பழகீற்றுது. அவா என்ரை அம்மா இல்லையெண்டிறதே என்ரை மனசுக்குத் தெரியிறேல்லை.”

”ஓ! நான் நினைச்சன். கனடாவில இருக்கிற ஆக்கள் எல்லாம் ஒரு கவலையுமில்லாம இருக்கினம் எண்டு. வீட்டுக்கு வீடு வாசல்படிதான்”

”ஓம். அம்மாவும் சரியான பாவம். இத்தன வருசத்தில ஒரு பங்ஷனுக்கு அவா போய், நான் பார்த்ததில்லை. நல்லநாள் பெருநாள் எண்டா கோயிலுக்கு மட்டும் போவா. பாவம் எனக்காக கல்யாணமும் செய்து கொள்ளாம இப்பிடிச் சாமியார் மாதிரி வாழுறாவே எண்டு நானும் எத்தினியோ தரம் அவாவ இடங்களைச் சுத்திப்பாக்கக் கூட்டிக்கொண்டு போறதுக்கு try பண்ணிப் பாத்திற்றன். அவா ஒண்டுக்கும் அசையமாட்டணெண்டுறா. அதே மாதிரி ஆரு அவாவைப்பற்றி என்ன சொன்னாலும் மனிசி கொஞ்சமும் கிறுங்காது. ஆனா நேற்று உங்கடை பேரைக் கேட்டாப்பிறகு அவாவில பெரிய ஒரு change-ஐ நான் பார்த்தன். அதுதான் please உண்மையைச் சொல்லுங்கோ”

”நீங்க இவ்வளவும் சொன்னாப்பிறகும் என்னால உண்மையைச் சொல்லாம இருக்கேலாது. எங்களுக்கு ஆளையாள் தெரியும்.”

”எப்பிடித் தெரியும்?”

”உங்கட அம்மா தொண்ணூற்றைஞ்சில அருந் தப்பில உயிர் தப்பினவா எண்டு சொன்னீங்களெல்லா? அதில அவாவோட சேர்ந்து தப்பினது நானுந்தான். நானும் உங்கட அம்மாவும்தான் அவாவின்ரை ஐடென்ரிக் கார்ட்டை எடுக்கிறதுக்காக அவான்ரை வீட்டை போனாங்க. நாங்க அங்கை நிக்கேக்குள்ள ஆமி வந்திற்றுது. ரெண்டு நாள் அங்கையே ஆமிக்குத் தெரியாமா ஒளிச்சிருந்திற்றுப் பிறகு ஒருமாதிரித் தப்பி வந்திற்றம். அதுக்குப் பிறகுதான் தெரிஞ்சுது நவாலிச் சேர்ச்சுக்குள்ளயிருந்த அவ்வளவு சனமும் புக்காரா போட்ட குண்டில செத்தும் காயப்பட்டும் போய்ற்றுதுகள் எண்டது. பிறகு 14ம் திகதி இயக்கம் புலிப்பாய்ச்சல் நடத்தி ஆமியைக் கலைச்சிற்றுது. அதோட நானும் இயக்கத்துக் போய்ற்றன். ஊர்மிளா அவாவின்ரை யாரையோ சொந்தக்காரர் வீட்டில நிண்டிட்டு பிறகு அவாவின்ரை அம்மாவோட கனடாக்குப் போறதுக்குக் கொழும்புக்குப் போய்ற்றா எண்டு கேள்விப்பட்டன்”

”ஓ! அப்பையேன் நேற்றுத் தெரியாதெண்டு சொன்னனீங்க?”

”நீங்க ஊர்மிளா உங்கடை அம்மா எண்டு சொன்னதும் நான் நினைச்சன் அவா கல்யாணம் கட்டிச் சந்தோஷமா இருக்கிறா, பிறகேன் நான் இடையில வந்து அவாவின்ரை சந்தோஷத்தைக் கெடுப்பான் எண்டு. அவா எனக்குச் சொன்ன மாதிரியே இன்னமும் ஒருத்தரையும் கல்யாணம் கட்டாமலே இருக்கிறா எண்டு எனக்குத் தெரியாது?”

”ஓ! அப்ப நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணின்னீங்களா?”

”நான் நினைக்கிறன் இப்பயும் ரெண்டுபேரும் மற்றாள் இருக்கினமா இல்லையா எண்டு தெரியாமலே லவ் பண்ணிக்கொண்டுதான் இருக்கிறம்.”

”அப்ப இவர்?”

கட்டிலில் உறக்கத்தில் கிடந்த யாழவனைச் சுட்டிக் காட்டினாள்.

”ஓ! யாழவன் என்ரை தங்கைச்சியின்ர மகன். தங்கச்சி, வீட்டில மற்றப் பிள்ளைகளைப் பார்க்க வேணும். மச்சானுக்கு வேலையில சரியான busy. கொரோனாவால எனக்கு இப்ப வேலையில்லை. அதுதான் நான் இவனோட வந்து நிக்கிறன்.”

”வாவ்! சூப்பர்! உங்கடை இந்தக் கதையக் கேக்க எனக்கே புல்லரிக்குது. இவ்வளவு நாளும் வீட்டில அம்மா என்னைக் கல்யாணம் பண்ணச் சொல்லி ஒரே நச்சரிப்பு. ஆனா இனிக் கெதியில எங்கட வீட்டில ஒரு கல்யாணம் நடந்திரும் எண்டு நினைக்கிறன். என்ன? அதுக்குள்ள புதுமாப்பிள்ளைக்கு வெக்கமும் வருகுது போல”

கனவில் நினையாத காலம் இடைவந்து பிரிப்பது மட்டுமல்ல இணைக்கவும் செய்யும்.

(முற்றும்)

நன்றி: தாய்வீடு ஓகஸ்ட் 2021

Wednesday, June 2, 2021

பேசாப்பொருள்



குறிப்பறிவுறுத்தல்:

”உங்களுக்கு வரவர வீட்டில அக்கறையே இல்லாமப் போய்ற்றுது. நான் ஒருத்தி கிடந்து எல்லாத்தையும் என்ரை தலையில அள்ளிப்போட்டுக்கொண்டு மாரடிக்க வேண்டிக்கிடக்கு, ஐயோ நான்படுற பாடிருக்கே நாய்படாப்பாடு”

”உமக்கென்னப்பா நடந்தது இப்ப. ஒரு மனுசன் வேலையால களைசு்சு விழுந்து வந்து நிம்மதியா கொஞ்சநேரம் big boss பார்ப்பமெண்டால். இப்ப உமக்கு என்னப்பா பிரச்சனை?”

“எனக்கென்ன பிரச்சனை? உவன் ஜெயந்தனுக்குத்தான் ஏதோ பிரச்சனை போலக்கிடக்கு”

”என்னப்பா சொல்லுறீர்? அவனுக்கென்ன பிரச்சனை? வாற செப்ரம்பருக்குத் தான் யூனிவேர்சிற்றிக்குப் போக இருக்கிறான். அதுக்குள்ளை அவனுக்கென்ன பிரச்சனை வந்தது?”

”நீங்க கொஞ்சம் ஜெயந்தனோட கதைக்கவேணும். ஆளின்ரை நடவடிக்கைகள் கொஞ்சநாளா ஒரு மாதிரிக் கிடக்கு. நானும் நாலைஞ்சுதாரம் கேட்டுப் பாத்திற்றன். ஒண்டுஞ் சொல்லுறானில்லை. எனக்கெண்டால் சரியான பயமாய்க்கிடக்கு”

”சரியப்பா விடும். நான் அவனைப் பாத்துக் கொள்ளுறன். இந்த விக்டோரியா லோங் வீக்கென்ட்டுக்கு அவனை எங்கையும் பார்க்கிற்குக் கூட்டிக்கொண்டு போய்க் கதைக்கிறன்.”

”ஓமப்பா. உங்களோடையெண்டால் அவன் மனம் விட்டுக் கதைப்பான். நான் வந்தா இடைஞ்சலாயிருக்கும். நீங்க மட்டும் அவனைக் கூட்டிக்கொண்டுபோய் வடிவா என்ன பிரச்சினை எண்டு கேளுங்கோ. ஒண்டுக்கும் அவனைப் பேசிக்கீசிப் போடாதேங்கோ. பிறகு ஒண்டு கிடக்க ஒண்டு நடந்துதெண்டால், குஞ்சாச்சி பேரனும் சூசைட் பண்ண முதல் உப்பிடித்தான் ஒருமாதிரித் திரிஞ்சவனொமெண்டு சனம் கதைச்சது.”

”நீர் சும்மா விசர்க்கதை கதை கதைக்கிறீர். நாங்க என்ன அவையைப் போல அவ்வளவு strict-ஆவா அவனை வளர்க்கிறம். இந்த லொக்டவுண் வந்து எல்லாரையும் வீட்டுக்குள்ள முடக்கினதால எல்லாச் சனமுமே இப்ப கொஞ்சம் டிப்றசனாத்தான் இருக்கு. இதுக்குப் போய் இப்படிக் கவலைப்படுறீர்”

”இல்லையப்பா. பெத்த மனசுக்கு ஏதோ நல்லதாப் படேல்ல. அதுதான் நீங்க ஒருக்கா அவனிட்ட ஓப்பினா மனம் விட்டு அவனுக்கு என்ன பிரச்சினை எண்டு கேட்டு அதைத் தீர்த்து வைச்சிற்றீங்க எண்டால் நானும் நிம்மதியா இருந்திருவன். எங்களுக்கு இருக்கிறதோ ஒண்டே ஒண்டு கண்ணே கண்ணெண்டு இந்த ஒரே ஒரு குருத்துத்தான். அதுக்கு ஒண்டெண்டால் பிறகு நானும் குஞ்சாச்சியின்ரை மோளைப் போல நானும் நடைப்பிணமாத்தான் திரிய வேண்டியிருக்கும்.

”சும்மா விசர்க்கதை கதைக்கிறத முதலில நிப்பாட்டும். உமக்கு இப்ப எங்களுக்கு ஒரேயொரு பிள்ளைதான் இருக்கெண்டுறது கவலையெண்டா வாரும் அப்ப இண்டைக்கே இன்னொண்டுக்கு ஆயத்தப்படுத்துவம்”.

”நாப்பது வயதிலதான் நாய்க்குணம் எண்டுவாங்கள் என்ர மனுசனுக்கு அது அம்பது வயசில வருகுது போல”

”ஐம்பதிலும் ஆசை வருமெண்டு பாட்டே இருக்கடியப்பா”

”இது போறபோக்குச் சரியில்லாமக் கிடக்கு. வயதுக்கு வந்த பிள்ளையை வீட்டில வைச்சுக்கொண்டு. எனக்குக் குசினிக்குள்ள நிறைய வேல கிடக்கு நான் போகவேணும. நீங்க ஜேனோட கதைக்க வேணுமெண்டிறத மறந்திடாதீங்க”

”சரி சரி. எல்லாம் விளங்குது. கெதியா குசினி வேலைகளை முடியும்”

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு – (குறள் 1271)

 

நாணுத் துறவுரைத்தல்:

”அம்மா! நான் உங்களிட்டை ஒண்டு சொல்ல வேணும் அம்மா. அது உங்களுக்குப் பிடிக்காது எண்டு தெரியும், But உங்களுக்குத் தெரியாம அதைச் செய்ய நான் விரும்பேல்லை”

எழில் வந்து என்னிடம் அப்படிச் சொன்னபோது நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்,

”அப்பிடி என்னடி பெரிசா எங்களுக்குப் பிடிக்காததைச் செய்யப் போறாய்? நீ கேட்டு இதுவரைக்கும் எதுக்கு நானோ அல்லது உன்ரை கொப்பரோ மாட்டனெண்டு சொல்லியிருக்கிறம்?”

”இல்லையம்மா இது கொஞ்சம் சீரியசான விசயம். அப்பாவோட இதைப்பற்றிக் கதைக்கேலாது. அதாலதான் உங்களிட்டைசை் சொல்லுறன்”

”அப்படி என்னடி இந்த வயதில உனக்கு சீரியான விசயம்?”

”We are planning to have sex”

“What the …? என்னடி உளறுறாய்?”

”ஓம் அம்மா, நேற்று whatsapp-இல இதைப்பற்றி நானும் ஜெயந்தனும் சீரியஸா டிஸ்கஸ் பண்ணீற்றுத்தான் உங்களிட்டச் சொல்லுறன்”

”உனக்கென்னடி விசர்கிசர் பிடிச்சிற்றுதா? சும்மா என்னோட வந்து விளையாடுறதுக்கு உனக்கு வேறை விசயம் ஒண்டும் கிடைக்கேல்லையா?

”அம்மா! I'm talking serious”

“நல்லா வேண்டப்போற என்னட்ட. முளைச்சு இன்னும் மூண்டு இலைகூட விடயில்ல. பார் அதுக்குள்ள கதைக்கிற கதையை. வரட்டும் இணை்டைக்கு கொப்பர். பொம்பிளைப்பிள்ளையெண்டு அளவுக்கு மீறிச் செல்லம் குடுத்து உன்னைக் குட்டிச் சுவராக்கிப் போட்டேர். எக்கணம் தெரிஞ்சவை ஆற்றையும் காதில இந்தக் கதை விழுந்துதெண்டா குடும்ப மானமே போச்சு. கண்டறியாத போன் ஒண்ட வாங்கிக் குடுத்து, முதலில உந்தப் போனைத்தான் அடிச்சு உடைக்க வேணும்.”

”அம்மா! Please இப்பை எதுக்கு இவ்வளவு ரென்ஷனாகிறீங்க?” இந்தக் கொரோணா lockdown-ஆல எங்கட prom-உம் நடக்காது போல இருக்கு. நாங்க மட்டுமில்லை எங்கட மற்ற பிரண்ட்ஸ் இதைப்பற்றிக் கதைச்சவை.”

”பிள்ளை! உன்ரை கதையைக் கேக்கக் கேக்க எனக்கு ரத்தமெல்லாம் கொதிச்சு உடம்பெல்லாம் பதறத் தொடங்குது. உந்தக் கனடாவுக்கு வந்து பிள்ளைகளை வளர்க்கிறதுக்கு மனிசர் படுறபாடு இருக்கே! கடவுளே!”

”இது இதுதான் அம்மா உங்கடை பிரச்சனை. நீங்க இன்னமும் உங்கட காலத்தில ஊரில இருந்த மாதிரியே இப்பையும் இஞ்சை இருக்கவேணும் எண்டு  நினைக்கிறீங்கள் அம்மா? ஊரிலயே இப்ப எவ்வளவு மாறிப்போய் இருக்கோ?”

”பிள்ளை நாங்க எங்க இருந்தாலும் தமிழர்தான். எங்களுக்கெண்டு ஒரு பண்பாடு இருக்கு. சும்மா மற்ற இன ஆக்கள் மாதிரி கண்டவங்களோடையும் படுத்தெழும்பிறது இல்லை எங்கட பண்பாடு. சின்னனில இருந்து உனக்குத் தமிழையும் எங்கடை பண்பாட்டையுமு் வடிவாச் சொல்லித் தந்து தானே வளர்த்தனான். பிறகென்னத்துக்கு இப்ப இப்பிடித் தறிகெட்டு அலையிற? இது உன்ரை பிழையில்லை. உனரை பிறண்ட்ஸ்தான் உன்னையும் நல்லாப் பழுதாக்கிப் போட்டுதுகள். பண்டியோட சேந்த கண்டும் பீ தின்னுமாம்”

”Please mind your words அம்மா! எதுக்கு இப்பை என்ரை பிறண்ட்ஸ்ஸைத் திட்டுறீங்கள். இது முழுக்க முழுக்க என்ரை முடிவதான். என்ரை பிறண்ட்ஸ் ஒண்டும் என்னை force பண்ணேல்லை. அதுசரி மற்ற இன ஆக்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியுமெண்டு இப்பிடிக் கதைக்கிறீங்கள்? அவையும் தங்கட partners-க்கு genuine-ஆத்தான் இருக்கினம். என்ன, ஒரு கொஞ்சப்பேர் செய்யிற பிழையளை வைச்சுக்கொண்டு முழு இனமும் அப்படியெண்டு நினைக்கிறது எவ்வளவு பிழை தெரியுமா?”

”ஓ! உனக்கு இப்ப இதுகள் எண்டா எல்லாம் நல்ல வடியாத் தெரியும் என? வருகுது நல்லா வாயில. அவள் லோறாவை இஞ்ச வீட்ட வந்து உன்னோட பழக விட்டது சரியான பிழையாப் போச்சு. அந்தப் பிரஞ்சுக்காரிதான் உன்ரை மனசையும் கெடுத்துப் போட்டாள்.”

”அம்மா லோறாவைப் பற்றிப் பிழையாக் கதைக்காதீங்கோ. அவளும் என்னைப் போலதான். அவளின்ரை அம்மாட்டை அவளும் இதைப்பற்றி இரண்டு கிழமைக்கு முதல் கதைச்சவளாம். லோறாவின்ரை அம்மா ஒரு நாள் முழுக்கச் சாப்பிடாமக் கிடந்தவாவாம். பிறகும் ஒரு கிழமையா சரியான அப்செற்றா இருந்தவாவாம். அதுக்குப் பிறகுதான் சரியெண்டு சொன்னவாவாம். அதுமட்டுமில்லாம பமிலி டொக்டரோட கதைச்சு birth control pills-உக்கும் priscription வேண்டிக் குடுத்தவாவாம்.”

”அதுகளுக்கென்ன? அதுகள் என்ன எங்களைப் போல கற்பு மானம் எண்டு பண்பாட்டோடையா வாழுதுகள்?  நான்தான் பெரிய பிழைவிட்டிட்டன். உன்னைத் தமிழ்ப் பெட்டையளோட மட்டும்தான் பழக விட்டிருந்திருக்க வேணும்”

”அம்மா! நீங்க கோபத்தில தேவையில்லாமா மற்றாக்களைப் பற்றி பிழைபிழையாக் கதைக்கிறீங்கள். தமிழாக்களோட மட்டும் நான் பழகியிருந்தா எனக்கு இந்த feelings  வந்திருக்காது எண்டு நினைக்கிறீங்களோ? உங்க. எங்கட ஸ்கூலில படிச்ச ஒரு அக்காவுக்கு என்ன நடந்தது எண்டு எனக்கும் தெரியும். அவாவின்ரை அம்மாவும் லோறாவின்ரை அம்மா போல இருந்திருந்தா. ப்ச். விடுங்கோ. எங்களுக்கேன் தேவையில்லாம மற்றாக்களின்ரை கதைகள்? நீங்க என்ரை வயசில இருக்கேக்குள்ள உங்களுக்கு இந்த feelings ஒண்டும் இருக்கேல்லையா?”

”உங்கடை வயசில நாங்க ஷெல்லுக்கும், ஹெலிக்கும், பொம்மருக்கும் பயந்து பயந்து உயிரைக் கையில பிடிச்சுக் கொண்டு வாழ்ந்தனாங்களே தவிர, உன்னை மாதிரி இப்பிடி ஒண்டும் அமரில திரியேல்ல. எங்கட பெடியளின்ரை காலத்தில பெம்பிளைப் பிள்ளைகள் எல்லாம் எவ்வளவு சுதந்திரமா வாழ்ந்தாலும் ஒருத்தரும் எங்கட பண்பாட்டை மீறினதில்லை”

”அப்ப அந்தக் காலத்தில ஊரில ஒருத்தரும் லவ் பண்ணவுமில்லை. ஒருத்தருக்கும் பிள்ளைகளும் பிறக்கவுமில்லை எண்டு சொல்லுறீங்களோ?”

”நிப்பாட்டடி! நீ கதைக்கிறதைக் கேக்க என்ரை காதெல்லாம் கூசுது. கடவுளே! நான் என்ன பாவம் செய்தனோ? எனக்கெண்டு இப்பிடி ஒண்டு வந்து பிறந்திருக்கே? இதிலும் விட நீ பிறக்காம இருந்திருந்தா நான் எவ்வளவு சந்தோஷமா இருந்திருப்பன். இந்த வயிறெரிஞ்சு சொல்லுறன். நீ நல்லாவே இருக்கமாட்ட.”

”அம்மா please இப்பிடிக் கதைக்காதீங்கோ. நான் என்ரை feelings-ஐ உங்களிட்டச் சொன்னனான். நீங்கள் என்னை understand பண்ணுவீங்கள் எண்டு நினைச்சன். யாமினி அப்பையும் திருப்பித்திருப்பிச் சொன்னவள் இதுகளைப் பற்றி வீட்டில கதைக்காதை. எங்கடை parents இதுகளைப் பெரிய பிரச்சினை ஆக்குவினம் எண்டு. ஆனா லோறா தான் சொன்னவள் எங்கட parents தான் எங்கட actual well-wishers எண்டும் அவையைத்தான் நாங்க கட்டாயம் respect பண்ண வேணுமெண்டும். அதாலதான் என்ரை லைப்ல நடக்க இருந்த ஒரு இம்போட்டனற் விசயத்தை, அது உங்களுக்குப் பிடிக்காதெண்டு தெரிஞ்சும் உங்களிட்டைச் சொன்னனான். யாமினி சரியாய்த்தான் சொல்லியிருக்கிறாள். சரி விடுங்கோம்மா. இப்பிடி உங்களிட்டைத் திட்டு வாங்கிறதிலும் விட நான் ஒண்டையும் அனுபவிக்காமலே சும்மா இருந்தே செத்துப் போகிறன்.”

”ஐயோ! என்ரை எழில்குஞ்சு, ஏனம்மா அம்மாவைப் போட்டு இப்பிடிக் கொல்லுறாய். நீ நல்லா இருக்கவேணும் எண்டுதானே நானும் உன்ரை அப்பாவும் இப்படிக் கஸ்ரப்படுகிறம். பார் அந்த மனுசன. இந்தக் கொரோனாக்குள்ளயும் இருக்க நிக்க நேரமில்லாமா ரெண்டு வேலைக்குப் போகுது. உன்ரை யூனிவர்சிற்றிப் படிப்புக்கு நீ லோன் எடுத்துக் கஷ்ரப்படக் கூடாதெண்டு ஏற்கனவே உனக்கு RESP-யில தேவையான அளவு காசு சேத்தாப்பிறகும், உனக்கெண்டு ஒரு வீடும் வேண்டிவிட்டு அந்த மோட்கேஜ் காசும் கட்டுறதுக்காக எவ்வளவு கஷ்ரப்படுகுது? நீ நல்லாப் படிச்சுப் பெரியாளா வரவேணும். உனக்குப் பிடிச்சமாதிரியே நல்ல மாப்பிள்ளை பார்த்துக் கட்டி வைக்கவேணுமெண்டு எவ்வளவு கனவுகள் எங்களிட்ட இருக்கு. ஏனம்மா நீ எங்களைப் புரிஞ்சுகொள்ள மாட்டன் எண்டுற? இந்த வயசில இதெல்லாம் கூடாதம்மா.”

”நீங்க எல்லாரும் உங்கட கனவுகளுக்கும் feelings-களுக்கும் தான் இம்போட்டன்ற் குடுக்கிறீங்களே ஒழிய என்ரை feelings-ஐ விளங்கிக் கொள்ளுறீங்களில்லை. சரி விடுங்கோ. நான் ஜெயந்தனிட்டைச் சொல்லுறன் அவனெண்டா என்னை நல்லா understand பண்ணுவான்.”

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில் – (குறள் 1137)

 

புணர்ச்சி விதும்பல்:

“ஜேன்! தோளுக்கு மூத்தாத் தோழன் எண்டு சொல்லுறது. அப்பா உன்னோட ஒரு பிரண்டாத்தானே பழகிறனான். பிள்ளை ஏன் இப்ப கொஞ்ச நாளா ஒரு மாதிரி இருக்கிறீங்கள்?”

”open-ஆச் சொல்லுறதெண்டால் எனக்கு இதைப்பற்றி உங்களோட கதைக்கக் கொஞ்சம் awkward இருக்கப்பா”

”ஏனப்பு அப்பிடி நினைக்கிறாய்? அப்பாவை உங்கட ஒரு நல்ல பிரண்டா நினைச்சு open-ஆக் கதையப்பு. அம்மாவும் உன்னைப் பற்றிச் சரியாக் கவலைப்படுகிறா.”

”என்ரை feelings உங்களுக்கு விளங்குமா எண்டுதான் எனக்கு doubt-ஆ இருக்கப்பா”

”நானும் உங்கட வயசெல்லாம் கடந்துதான் வந்தனான். என்ரை பிள்ளை ஆரையும் love பண்ணினாலும் பரவாயில்லை. அப்பா பேசமாட்டேர். நீங்க உங்கட பிரச்சினையைச் சொல்லுங்கோ. அத solve பண்ணுறதுக்கு அப்பாவும் உங்களுக்கு  help பண்ணுவேர்.”

”எழிலை எனக்கு நல்லாப் பிடிக்குமப்பா”

”ஓ! உங்கட பிரண்ட் எழிலைச் சொல்லுறீங்களோ? ஓம் அவா நல்ல பிள்ளை தானே. ஏன் அவாக்கு உங்களில விருப்பமில்லையாமா?”

”இல்லையப்பா. அவளுக்கும் என்னில சரியான விருப்பம். I think we are in love”

“It’s OK அப்பு. Love பண்ணுறது ஒண்டும் பிழையான விசயம் இல்லைத்தானே. அது உங்கட படிப்பைக் குழப்பாம இருந்தாச் சரி. உதுக்கா நீங்கள் இவ்வளவு யோசிச்சனீங்கள். நான் என்னவோ ஏதோ எண்டு பயந்து போனன். இதுக்கேன் நீங்க ஒருமாதிரி இருக்கிறீங்கள்? நல்ல happy-ஆ energetic-ஆ எல்லோ இருக்க வேணும்.”

இல்லையப்பா. எழிலின்ரை வீட்டில அது கொஞ்சம் பெரிய பிரச்சினை ஆகீற்றுது.”

”ஏனடா அவைக்கு என்ன பிரச்சினை? இந்த வயசில எதுக்கிந்த லவ் எண்டு பிரச்சினை பண்ணுகினமா?”

”அதில்லையப்பா. அதை என்னெண்டு உங்களிட்டைச் சொல்லிறது எண்டுதான் தெரியேல்லை அப்பா”

”எனக்குத் தெரிஞ்சு அவையும் எங்கட ஆக்கள்தான். பிறகு என்ன தான் அவைக்குப் பிரச்சினை? ஆரு எழிலின்ரை அப்பாவா பிரச்சினை பண்ணுறார்?”

”ஐயோ அப்பா! எழிலின்ரை அப்பாவுக்கு இதைப்பற்றி ஒண்டுமே தெரியாது. அவாவின்ரை அம்மாதான். அவா இப்ப எழிலோட பெரிசாக் கதைக்கிறதும் இல்லையாம்.”

”அவா கோபப்படுறதிலயும் ஒரு ஞாயம் இருக்குத்தானே. நீ அவாவின்ரை point-இல இருந்து யோசிச்சுப் பார். இந்த வயசிலையே லவ் எண்டா எந்தப்  parents தான் பயப்பிடமாட்டினம். அதிலையும் பொம்பிளைப் பிள்ளையை வைச்சிருக்கிறவை.  பயப்பிடுவினம் தானே.”

”ஓம் அப்பா. அது சரியெண்டு இப்ப எனக்கு விளங்குது. ஆனா அவா உங்கள, அம்மாவைப் பற்றியெல்லாம் கூடாமப் பேசினவாவாம். பிள்ளையை ஒழுங்கா வளக்கத் தெரியாமக் காவாலி போல வளத்திருக்கிறீங்களாம் எண்டும் சொன்னவாவாம். அதுதான் எனக்கு சரியான guilty-ஆ இருக்கு”

”இந்த வயசில கனபேருக்கும் ஒரு crush வாறது சகஜம். நீங்க இன்னும் கொஞ்சம் deep-ஆப்போய் லவ் பண்ணத் தொடங்கீற்றீங்க. சரி விடு. இதைப்பற்றியெல்லாம் கனக்கக் கவலைப்படாத”

”Love மட்டுமில்லையப்பா நாங்க அதுக்கும் கொஞ்சம் கூடவா  think பண்ணின்னாங்கள். அதை எழில் அவளின்ரை அம்மாட்டைச் சொல்லப்போய்த்தான் இவ்வளவு பிரச்சினையும்”

”அப்பிடி என்னடா love-க்கும் மேலால think பண்ணின்னீங்க?”

”அது வந்து, வந்து… Ezhil and me talked about having …”

“Having….?”

“அப்ப்ப்பா, அதை எப்பிடி என்ரை வாயால உங்களிடை்டைச் சொல்லுறது. நாங்க அவசரப்பட்டிருக்கக் கூடாதுதான். ஆனா..”

”You mean sex?”

“mmmm, yah, I’m so sorry அப்பா.”

”It’s OK ஜேன். We can talk openly. You are an adult now.”

“Thanks pa. So, we planned to have it after the pandemic. Some of our other friends talked about to have the first experience in our prom night, but due to the pandemic, maybe we won’t have it. That’s why…”

“I can understand it ஜேன். நீங்க ரெண்டு பேரும் அதை விரும்பினால் நாங்க அதைத் தடுக்க ஏலாது. உங்கட இந்த வயசக் கடந்துதான் நாங்களும் வந்தனாங்கள். அந்த உணர்ச்சிகளையும் கடந்துதான் வந்தனாங்கள். எண்டாலும் எங்களால ஒரு கட்டுப்பாட்டோட இருக்க, நாங்க இருந்த எங்கட நாட்டு சூழ்நிலையும் பெரிய உதவியா இருந்துது. 

”Thanks pa. எங்க நீங்க என்னைப் பேசப்போறீங்களோ எண்டு நான் சரியாப் பயந்துகொண்டிருந்தனான்”

”நீ இப்பிடி open-ஆ என்னோட கதைச்சது எனக்கும் நல்ல சந்தோஷம். ஒரு அப்பாவா இல்லாமா இதையெல்லாம் கடந்துவந்த உன்ரை ஒரு நல்ல பிரண்டா உனக்குச் சில விசயங்களைச் சொல்ல விரும்பிறன். அதையும் கேட்டிட்டு நீ என்ன முடிவெடுத்தாலும் சந்தோஷமா அப்பா அதை accept பண்ணுவார். அதை இப்பவே உனக்கு அப்பா promise பண்ணுறார். சரியா?”

”சரியப்பா”

”இந்த Teenage வயசிலதான் ஹோர்மன்கள் சுரக்கத்தொடங்கிறது. பாலியல் உந்துதல்கள் ஏற்படுகிறது எல்லாம் ஏற்கனவே நீங்கள் படிச்சிருப்பீங்கள். ஆனால் இன்னொண்டையும் நீங்க நினைவில வைச்சிருக்க வேணும். செக்ஸ் எண்டுறது எல்லா உயிர்களுக்குமே அளவில்லாத pleasure-ஐத் தருகிறது.

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள

எண்டு வள்ளுவரும் சொல்லியிருக்கிறார். எண்டாலும், அது அடிப்படையில இன்னொரு உயிரை உற்பத்தியாக்குகின்ற செயல். இன்னொரு உயிரியை உற்பத்தியாக்குவதற்கு எவ்வளவு சக்தி தேவைப்படும் என்று யோசிச்சுப் பார்த்திருக்கிறியா? இந்த சக்தியை விரயமாக்காமல் எங்கட கவனத்தைப் படிப்பிலயோ வியைாட்டிலயோ இல்லாட்டி எங்களுக்கு விருப்பமான ஒரு பொழுதுபோக்கிலயோ பயன்படுத்தினால் அதனால கிடைக்கிற பயன் எங்கட பிற்கால வாழ்க்கைக்கு நல்ல பிரயோசனமாயிருக்குமே. அதுக்காக செக்ஸே கூடாது எண்டு நான் சொல்ல வரேல்ல. ஆனா இந்தக் காலத்தில, இந்த வயசு வந்து எங்கட வருங்கால வாழ்க்கையை வளமாக்குவதற்குத் தேவையான விடயங்களைச் செய்ய வேண்டிய வயசு. அப்பிடிச் செய்தீங்களெண்டா பிற்காலத்தில கஷ்ரப்படாம வாழலாம்.”

”நீங்க சொல்லுறது சரிதான் அப்பா, ஆனா என்னால என்ரை mind-அக் control பண்ணேல்லாம இருக்கு. எப்ப பார்த்தாலும் அந்த ஞாபகவே வந்து படுத்துது. கனவில கூட”

”You mean wet dreams?”

தலையைக் குனிந்து கொண்டான்

“Don’t worry ஜேன். It’s normal, I too had it. So, you don’t need to feel guilty. இதுகளையெல்லாம் நீ பெரிசா எடுக்கத் தேவையில்லை. இது தொந்தரவா இருக்கெண்டு நீ நினைச்சியெண்டால் நீ தியானம் பழகலாம். அது உனக்கு நிறைய help பண்ணும் எண்டு நினைக்கிறன். அது மட்டுமில்ல இப்ப நாங்க எல்லாருமே முந்தி மாதிரி வெளியில போய்த் திரியாம வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கிறதாலயும் தனிய இருக்கிறதாலயும் தான் இப்பிடியான நினைவுகள் வாறது. அதால இதைப்பற்றி நீ guilty-ஆ feel பண்ணத் தேவையில்ல. Please feel relax”

“Thanks pa. I’m so relaxed now after talking to you”.

”நான் உன்னை எதுக்குமே force பண்ணேல்லை ஜேன். இது உன்ரை லைப். நீதான் முடிவெடுக்கவேணும். ஒருவேளை if you still feel you want to have sex, please consider the protection for both of you. உனக்கு நான் என்ன சொல்ல வாறன் எண்டு விளங்கும் எண்டு நினைக்கிறன்.

“Don’t worry அப்பா!. நான் இப்ப நல்ல தெளிவாயிற்றன். என்னால இனி இந்த situation-அ வடிவா handle பண்ணேலும். Thank you so much pa. உங்கட இந்த help-இற்கு.”

மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார் – (குறள் 1289)

நன்றி: தாய்வீடு - ஜூன் 2021

Monday, May 3, 2021

காலுங் காதலும் (2)

இம்முறை நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையில் நானிருந்தேன். நடக்கவே சிரமப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுவதென்பது நினைத்தே பார்க்கமுடியாத காரியம். இந்நிலையையிட்டு என்னிலும் அதிகம் வருந்தியது ராசலட்சுமிதான். அவளுடைய இராசிதான் என்னால் இம்முறை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது என்று ஞானவதி பகிடியாக ராசலெட்சுமியிடம் கூறப்போய் அது பெரிய பிரச்சினையில் போய் முடிந்தது.

ராசலட்சுமியைத் தவிர்த்து மேலும் ஐந்து ஜீவன்களும் என்னுடைய நிலையை எண்ணித் துக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அவர்கள் வேறுயாரும் அல்ல. அப்புவும் அம்மாவும் என் மூன்று தங்கைகளும் தான். அம்மாவின் வேண்டுதலோ அல்லது ராசலட்சுமியின் வேண்டுதலோ அல்லது ஒட்டகப்புலத்து முறிவு நெறிவு வைத்தியரின் திறமையாலோ தெரியாது அடுத்த சில மாதங்களில் நான் பூரணமாகக் குணமடைந்தேன்.

நான் பூரண குணமடைந்த சில மாதங்களில், துலா மிதித்துக் கொண்டிருந்த அப்பு தவறி விழுந்து தன் கைகளையும் கால்களையும் உடைத்துக் கொண்டார். குடும்ப வண்டிலை இழுக்க வேண்டிய பொறுப்பு எள் தோள்களில் வீழ்ந்தது. எஸ். எஸ். சி சோதனை எடுப்பதற்கு மூன்று மாதங்கள் இருப்பதற்குள் என் பாடசாலை வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும் அது எங்கள் காதலிற்கு வெறும் காற்புள்ளியாக மாத்திரமே அப்போது தெரிந்தது.

வீட்டில் வறுமையும் தன் தலையை விரித்துக் கொண்டு வந்து குடிகொண்டது. இம்முறை வெங்காயச் செய்கையும் பெரிதாய் வாய்க்கவில்லை. அப்பு ஓரளவிற்குத் தேறி நடக்கத் தொடங்கியிருந்தாலும் மண்வெட்டி பிடிக்குமளவிற்குத் தேறியிருக்கவில்லை. வீட்டில் எந்நேரமும் புறுபுறுத்துக் கொண்டேயிருந்தார். இடையிடையே கள்ளுத் தவறணையில் அவரைக் காணக்கிடைப்பதாய் நண்பர்கள் வந்து சொன்னார்கள். இவ்வாறே சில வருடங்கள் உருண்டோடின. வறுமையின் பிடியிலிருந்து எந்த விடியலும் தோன்றுவதாய்த் தெரியவில்லை.

என்ன வாழ்க்கையடா இது என்று எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில்தான்,

”நீயும் என்னோட வாவன் கிளிநொச்சிக்கு போவம். அங்க திருவையாத்துப் பக்கம் நிறையக் காணிகள் சும்மா கிடக்காம். நாங்க போய் அதுகளை வெட்டித் துப்பரவாக்கித் தோட்டம் செய்யலாமாம். காணியும் எங்களுக்கே வந்திரும் எண்டுறாங்கள்”

என்று ஒன்றுவிட்ட மாமா முறையிலான அயலவர் ஒருவர் அழைக்க நானும் அங்கு போகலாம் என முடிவெடுத்தேன். அதனை ராசலட்சுமியிடம் கூறிய போது அவள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து அடம்பிடித்தாள். அங்கு நான் சென்று விட்டால் தன்னை நான் மறந்து விடுவேன் என்று கூறி அழுதாள். நானும் எனது குடும்ப நிலையைினை அவளுக்கு விளங்கும் படி எத்தனையோ தடவைகள் எடுத்துக் கூறி, நிச்சயம் நான் அவளை மறக்க மாட்டேன் என்று அம்மா மேல் சத்தியமும் செய்தேன்.

”உந்தச் சத்தியத்தையெல்லாம் நான் நம்ப மாட்டன்.”

”இதுக்கும் மேல என்னண்டடியப்பா உன்னை நான் நம்ப வைக்கிறது?”

”ம்… ம்…ம்… அபபடியெண்டா உங்கட இந்தக் காலுகள் மேல சத்தியம் செய்யுங்கோ பாப்பம். அப்ப நான் உங்கள நம்பிறன்”

எனககுச் சிரிப்பாய் வந்தது.

”ஏனடியாத்தை! போயும் போயும் காலில போய்ச் சத்தியம் பண்ணச் சொல்லிக் கேக்கிற?”

”ஆ! ஏனெண்டா நீங்க ஓடேக்குள்ள உங்கட இந்தக் காலுகளைப் பாத்துத் தான் எனக்கு உங்களிலயே ஆசை வந்தது. உங்கட காலுகள் சரியான வடிவு தெரியுமா?”

எனக்கு நம்புவதா விடுவதா என்று தெரியவில்லை. ஆயினும் அவளைச் சமாதானம் செய்வதற்காக என் கால்களின் மேல் சத்தியம் செய்தேன்.

”நான் இன்னும் ஒண்டும் என்ர மனசில நினைச்சிருக்கிறன். அதுக்கு என்ர அப்பு மட்டும் ஓமெண்டிட்டார் எண்டால் நல்லாயிருக்கும். ஆனா அப்பூட்ட எப்பிடிக் கதைக்கிறதெண்டுதான் தெரியேல்ல.

என்று கூறிவிட்டு ராசலெட்சுமி சென்றுவிட்டாள். இப்படி என்னதான் வில்லங்கமாக அவள் யோசிக்கிறாளோ என்ற எண்ணத்துடன் நானும் வீட்டுக்குத் திரும்பினேன்.

மறுநாள் மாலை ராசலெட்சுமியின் தாயும் தந்தையும் எம் வீட்டிற்குத் திடீரென வருகை தந்தனர். இதை எங்கள் வீட்டில் யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்களை வரவேற்கக் கூடிய நிலையில் எங்கள் வீடும் இருக்கவில்லை. வீட்டின் முற்றத்தில் கிடந்த கோழிப் பீக்களை மணலைக் காலால் தட்டி மூடினேன். முற்றத்தில் சற்றுத் தள்ளிப் படுத்திருந்த மாட்டினை எழுப்பி தள்ளிப் போகச் செய்ய, அது சனியன் வாலைத் தூக்கிச் சாணியைப் போட்டது. எனக்கோ மானம் கப்பல் ஏறிக்கொண்டிருந்தது.

பின்வளவிற்குள் நின்றிருந்த அம்மாவைக் கூப்பிட்டேன். அம்மாவும் எனது காதல் பற்றி அரசல்புரசலாக அறிந்திருந்தார். இவர்களைக் கண்டதும் அம்மாவிற்கு காலும் ஓடவில்லை. கையும் ஓடவில்லை. அவர் போய்க், குடித்துவிட்டு வந்து படுத்துக் கிடந்த அப்புவைத் தட்டி எழுப்பினார்.

அதன் பின் நடந்தவை யாருடைய வாழ்க்கையிலுமே நடக்கக் கூடாதவை. விடுப்புப் பார்ப்பதற்காக அயலட்டங்கள் வீதியில் கூடிவிட்டிருந்தனர். அதன் பின்னர் ராசலட்சுமியின் முகத்தில் எப்படி என்னால் விழிக்க முடியும். அவளிடம் சொல்லாமலேயே நான் திருவையாறுக்குப் புறப்பட்டு விட்டேன்.

ஊரினதும் ராசலட்சுமியினதும் ஞாபகங்கள் என்னைப் பாடாய்ப் படுத்தின. ஞாபகங்களில் தொல்லையிலிருந்து என்னை விடுவிப்பதற்காய் அதிக நேரத்தினைத் தோட்ட வேலைகளில் செலவழித்தேன். காடுகள் வெட்டித் துப்பரவாக்கி எனக்கென்றொரு குடிலும் கட்டி முழு நேரமும் தோட்ட வேலைகளில் மூழ்கியதால் எதிர்பார்த்ததை விட அமோக அறுவடை.

ஏறத்தாழ ஆறு மாதங்களின் பின்னர் ஊருக்குத் திரும்பினேன். ஊரிலிருந்து புறப்படும் முன்னர் நடந்த நிகழ்வுகளால் மனம் சஞ்சலப்பட்டாலும், அதை இப்போது அனேகமானோர் மறந்துவிட்டிருப்பார்கள் என்ற ஒரு நப்பாசை மனதினுள்.

ஆனால் நான் அறிந்த செய்தியோ என் இதயத்தைக் காரை முள்ளால் தேய்த்தது போலிருந்தது. என்ர ராசலட்சுமி என்னை விட்டிட்டு ஏன் இந்தக் கேவலமான உலகை விட்டிட்டே நிரந்தரமாகப் போய்விட்டாள். அரளி விதை அவளுக்குப் புதியதில்லைத்தான். ஆனாலும் என்ரை அல்லிராணியை அரளிராணி கொன்று விட்டாள். தான் போவதாய் இருந்தால் என்னையும் கொன்றுவிட்டுத்தான் போவேன் என்று சொல்லியிருந்தாள். அப்போது தெரிந்திருக்கவில்லை இப்படி என்னை உயிருடன் கொன்றுவிட்டுப் போவதைப் பற்றிச் சொல்லியிருக்கிறாள் என்று. என்னை நடைப்பிணமாக்கி விட்டு அவள் போயே போய்விட்டாள்.

என் சோகமெல்லாம் கோபமாய் மாறி என் அப்புவின் மேல் பாய்ந்தது. இதுவரை அப்புவை எதிர்த்து ஒருவார்த்தை பேசியறியாத நான், கண்டபாட்டுக்கு அவரை ஏசத் தொடங்கினேன். அதைக்கண்டு அம்மா தான் மாரிலடித்துக் கொண்டு அழத் தொடங்கினாள். அதைத் தொடர்ந்து மூன்று தங்கைகளும் அழத்தொடங்க எனக்கு வாழ்க்கை வெறுத்துப் போனது.

அண்டைக்கு மட்டும் அப்பு குடிக்காமலிருந்திருந்தால் வந்திருந்தவர்களையோ அல்லது ராசலட்சுமியைப் பற்றியோ கேவலமாக் கதைத்திருக்க மாட்டார் என்றே இப்போதும் தோன்றுகிறது. அவர்கள் திடீரென்று வந்து திருமணம் பற்றிக் கதைத்ததும், நான் கூடத்தான் திக்குமுக்காடிப் போயிருந்தேன். என் வயதொத்த ஒரு சிலர் அப்போது  திருமணம் முடித்திருந்தாலும், மூன்று தங்கைகளை அடுக்கடுக்காய் வீட்டினுள் வைத்துக்கொண்டு என் திருமணத்தைப் பற்றி எண்ணிப் பார்ப்பதென்பது அதிலும் எமது இந்த வறுமை நிலையில் இதுவெல்லாம் கொஞ்சம் கூடச் சாத்தியமேயில்லாத ஒன்று.

எனக்கு வீட்டில் யாருடனும் பேசப்பிடிக்கவில்லை. அம்மாதான் தங்கைகளைக் கரை சேர்க்க வேண்டியது என் பொறுப்பென்றும் அப்புவால் எதுவும் முடியாதென்றும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார். ஊரிலிருக்கப் பிடிக்காததால் நான் மீண்டும் திருவையாற்றுக்கே சென்று விட்டேன். ஓரளவு நிதிநிலை தேறியவுடன் மூத்த தங்கையின் திருமணத்தை நிறைவேற்றினேன். அது நடந்து சில வாரங்களிலேயே அப்புவும் போய்ச் சேர்ந்தார்.

இரண்டாவது தங்கையின் திருமணத்திற்காக ஊருக்கு வந்திருந்த போது ஊரில் நிலைமைகள் மாறியிருந்தன. ஊரில் பல இளைஞர்கள் தலைமறைவாகியிருந்தார்கள். அடிக்கடி இரவுகளில் இராணுவத்தினர் வந்து வீடுகளில் சோதனை நடத்திக் கொண்டிருந்தார்கள். அதனால் அம்மாவும் கடைசித் தங்கையும் ஊரில் தனித்திருக்கப் பயப்பட்டனர். எனவே நானும் அவர்களுடனேயே தங்கவேண்டியதாகிப் போனது.

சில மாதங்களில் திருநெல்வேலி தபாற்கட்டைச் சந்தியடியில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலை அடுத்து நாடு முழுதும் பீதியில் உறைந்து போயிருந்தது. அப்போதைய ஒரு இரவில் வீட்டிற்கு வந்த இராணுவத்தினர் என்னையும் அடித்து உதைத்துக் கைதுசெய்து தம்மோடு கொண்டு சென்றனர். சில மாதங்களில் நான் விடுவிக்கப்பட்டதும் கடைசித் தங்கையின் திருமணத்தை ஒருமாதிரி ஒப்பேற்றிவிட்டு ஊரிலிருக்கப் பிடிக்காமல் ஏஜென்சிக்காரன் ஒருவனைப் பிடித்து வெளிநாட்டிற்குக் கிளம்பினேன். முதலில் ஜேர்மனியில் தஞ்சமடைந்திருந்தேன். பின் அங்கிருந்து கப்பலேறிக் கனடாவை வந்தடைந்தேன்.

இப்போது அம்மா எனது திருமணத்தைப் பற்றி அதிகம் வற்புறுத்தத் தொடங்கினார். ராசலட்சுமியின் இடத்தில் வேறு யாரையும் வைத்துப் பார்ப்பதற்கு என்னால் முடியாமலிருந்தது. ஆயினும் வருடங்கள் சில செல்ல இங்கே வந்த ஏனையவர்களின் நடவடிக்கைகளைக் கண்ட பின்னர் எனது மனதிலும் சலனங்கள் ஏற்படலாயின. ஆயினும் திருமண பந்தத்தில் இணைவதைத் தவிர்த்துக் கொண்டேன். உறவு கொண்ட பெண்களின்றில்லை, வேறு எந்தப் பெண்ணுடனும் என்னால் மனதால் நெருங்க முடியாதிருந்தது. இடையில் அம்மாவும் இறந்துபோக எனக்கென்ற உறவுகள் இனியில்லை என்கின்ற எண்ணம் மனதில் ஆழமாக வேரூன்றியது.

அப்பாவின் குடிபோதையால் ராசலட்சுமியை இழந்த நான், இன்று எனது தனிமையைத் தவிர்ப்பதற்காய் குடிபோதையில் மூழ்கத் தொடங்கினேன். விளைவு தெரிந்தது தான். எனது தனிமையைக் கலைத்து சர்க்கரை வியாதியும் வந்து என்னுடன் ஒட்டிக் கொண்டது.

இன்சுலின் இன்றி வாழ்க்கை இனியில்லை என்கின்ற நிலையில் காலங்கள் உருண்டன.

திடீரென ஒருநாள்  எனது வலது உள்ளங்காலில் விறைப்புத் தன்மையை உணர்ந்தேன். அதனுடன் சேர்ந்து ஒருவித இனந்தெரியாத வலி அல்லது குறுகுறுப்பு என் உள்ளங்கால் முழுதும் பரவியது. எனது காலைத் தரையிலேயே குத்திக் குத்திப் பார்த்தேன். அந்த உபாதை போவதாய்த் தெரியவில்லை. எமர்ஜென்சிக்கு வந்து காட்டினேன். வைத்தியசாலையில் அனுமதித்தார்கள்.

எனது உள்ளங்காலின் உள்ளே புண்ணொன்று புரையோடிப் போயிருப்பதாய்ச் சொன்னார்கள். இன்னமும் ஏதேதோவெல்லாம் சொன்னார்கள். ஈற்றில் என் காலின் முழங்காலுக்குச் சற்றுக் கீழே உள்ள பகுதியிலிருந்து வெட்டியகற்ற வேண்டுமென்றார்கள்.

அப்போதுதான் ராசலட்சுமிக்குச் செய்துகொடுத்த சத்தியம் நினைவிற்கு வந்தது.

ராசாத்தி, நீ ஆசைப்பட்ட கால்! 

(முற்றும்)
நன்றி: தாய்வீடு - மே 2021

Monday, April 5, 2021

காலுங் காதலும் (1)



'மிஸ்ரர் லிங்கம் வேக் அப். வேக் அப் மிஸ்ரர் லிங்கம்' 

யாரோ என்னை உலுக்குவதை உணரமுடிந்தது. இமைகளைத் திறக்கமுடியாதவாறு பெருங்கனமொன்று வந்து அதன்மேல் குந்தியிருந்தது. உடலின் ஒருபகுதியையேனும் அசைக்கமுடியா இயலாமையில் தத்தளித்துக்கொண்டிருக்கையில் மீண்டும் அதேகுரல்

'ஆர் யூ ஓகே மிஸ்ரர் லிங்கம்? ற்றை ரு வேக் அப். யூ ஆர் ஓகே நௌ'

 மிகுந்த சிரமத்துடன் இமைகளைத் திறக்கிறேன். ராசலெட்சுமி!

 'வந்திற்றியா என்ரை ராசாத்தி!

 'மிஸ்ரர் லிங்கம்  மிஸ்ரர் லிங்கம். டொக்ரர் திஸ் பேஷன்ற் இஸ் லூசிங் ஹிஸ்....'

****** 

'என்ரை அல்லிராணி அரளிவிதைய அரச்சுக்குடிச்சிற்றுது எண்டு கேள்விப்பட்டோடண நான் துடிச்சுப் போய்ற்றன் தெரியுமா? ஏனடியாத்தை அப்பிடிச்செய்தனீ?'

'அதுக்காக இப்பிடியா மாட்டுவண்டிலக் கொண்டுபோய் பத்தைக்குள்ள விடுவீங்க? பாருங்க உடம்பெல்லாம் ஒரே கீறல் காயம். காலில வேற பத்துப்போட்டுக் கிடக்கு'

'நீ கதையை மாத்தாதையணை. ஏனெணை என்ரை குஞ்சு நஞ்சைக் குடிச்சது?'

'நஞ்சைக் குடிச்சதாலதானே இப்ப அப்பு உங்களைப் பாக்க விட்டவர்'

'தச்சலா(தற்செயலாகஒண்டு கிடக்க ஒண்டு நடந்திருந்தா?'

'நான் ஒரு எற்பன்தான் குடிச்சனான்'

'எண்டலுமெணை நஞ்சோடை ஆரும் விளையாடுறதே? தச்சலா உனக்கொண்டு நடந்திருந்தா?'

'அய்! அய்யான்ரை ஆசையைப்பாருங்கோவன். எனக்கொண்டு நடந்திருந்தா இன்னொருத்தியைப் பிடிக்கலாமெண்டு நினைச்சியளோ? நான் சாகிறதாயிருந்தா உங்களையும் கொண்டுபோட்டுத்தான் சாவன் தெரிஞ்சுகொள்ளுங்கோ?'

'ஏனடியாத்தை இப்ப இப்பிடியெல்லாம் கதைக்கிறாய்?'

'அப்ப சத்தம் போடாம படுங்க பாப்பம். இன்னும் ரெண்டுமாதத்தில பள்ளிக்கூட விளையாட்டுப்போட்டீல நீங்க வெல்லட்டா கூட்டாளிப் பெட்டையளிட்டை என்ரை மானம் போயிரும்'

'போனமுறை விளையாட்டுப் போட்டியிலதான் நீ என்னோட முதன்முதல் கதைச்சனீ ஞாபகமிருக்கோ?'

'அதுக்குப் பிறகு நீங்க எனக்குப் பின்னால வந்து பம்மினதும் ஞாபகமிருக்கு'

இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் அது. அஞ்சலோட்டத்தின் போது எமது இல்லத்தின் மூன்றாவது வீரர் தடக்கி விழவே மற்றைய இல்ல வீரர்களுக்கும் எங்களுக்கும் இடையே நீண்ட இடைவெளி உண்டாகிவிட, இறுதியாளாய்த், தோல்வி நிச்சயம் என்கின்ற உறுதியில் ஓடிக்கொண்டிருக்க. . .

'கமோன் லிங்கம் வேகமா ஓடுங்க! முன்னுக்குப் போற ஆக்களைப் பிடிச்சிரலாம். கமோன்'

குரல்கேட்டு இடப்புறமாய்த் திரும்ப, ராசலெட்சுமி! ஓட்ட வீரர்கள் குறுக்காகப் போகாமல் தடுப்பதற்காக இடையிடையே நிறுத்தப்பட்டிருந்த மாணவிகளில் ஒருத்தியாய். ஒருகணம் எனக்கே திகைப்பாகிப் போனது. ராசலெட்சுமிக்கு, எங்கள் பள்ளிக்கூடத் தேவதைக்கு, ஊரின் பேரழகிக்கு என்னை, எனது பெயரைத், தெரிந்திருக்கிறதா?

'கன்னியர் கடைக்கண் காட்டிவிட்டால் மண்ணில் காளையர்க்கு மாமலையும் ஓர்கடுகாம்'

உயிரைக் கொடுத்து ஓடுவது என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படியொரு ஓட்டம். மயிரிழையில் மூன்றாமவனை முந்தி மூன்றாமிடத்தைத் தட்டிப்பறித்தேன். யாருமே எதிர்பார்த்திராத வெற்றி அது.

திகைத்துப் போயிருந்த நண்பர்களிடம் உண்மையைச் சொன்னேன். நம்ப மறுத்தனர். தாங்கள் பார்க்க ராசலெட்சுமியுடன் நான் உரையாடினால் கள்ளும் கள்ளக்கோழியும் தருவதாய்ப் பந்தயம் கட்டினார்கள்.

கொஞ்சம் அழகிகளுக்கே திமிரிருக்கும் எங்கள் ஊரில், எழில் கொஞ்சும் ரதியாய், அழகிகளின் ராணியாய்த் திகழும் ராசலெட்சுமி மட்டும் அதற்கென்ன விதிவிலக்கா? படிப்பில் பெயரெடுத்த பல மாணவர்களையே எடுத்தெறிந்துபேசி செருப்பைக் கழற்றிக் காட்டுபவள் வெறும் ஓட்டக்காரனான என்னை ஊக்கப்படுத்தியதை நான்கூடத்தான் நம்பத் தயாராயிருக்கவில்லை.

வெள்ளி அல்லது சனி இரவுகளில் ஈரச்சாக்குப் போட்டுப் பிடிக்கும் கோழியை மறுநாள் மதியம் நண்பர்களுடன் தனியிடத்தில் நெருப்பில் வாட்டி கள்ளுடன் சேர்த்தடிக்கும்போது வரும் ஒருவித போதை தரும் சந்தோஷத்திலும், இதைச்சாட்டாய் வைத்து ராசலெட்சுமியுடன் ஒருமுறை உரையாடிவிடலாம் என்பதே மனதிற்கு மகிழ்ச்சியாயிருந்தது.

பந்தயப்படி மறுநாள் பள்ளிக்கூடம் முடிவடைந்தது வீடுசெல்லும்  போது அவளைப் பின்தொடர்ந்தோம். நண்பர்கள் விலகி நிற்க நான் அவளை நெருங்கினேன்.

காலடியோசை கேட்டு நின்று திரும்பி முறைத்தாள்.

'அம்மாணை செருப்பைக் கழட்டிப் போடாதையும் ஐசே! பெடியளோட பந்தயம் கட்டினபடியாலதான் உம்மோடை கதைக்க வந்தனான். நீர் என்னோடை கதைக்கத் தேவையில்லை. சும்மா கதைக்கிற மாதிரி நடிச்சாலே காணும். நான் பந்தயத்தில வெண்டிருவன்'

'ம். அவ்வளவு பயமிருந்தாக் காணும்'

'நான் ஓடேக்குள்ள நீர் எனக்கு கமோன் சொன்னீர் என்று சொல்ல ஒருத்தரும் நம்பயில்லை. நீர் சரியான திமிர் பிடிச்சனீராம். பெடியளோட கதைக்கமாட்டீராம் எண்டுசொல்லி என்னைப் பொய்யன் எண்டுறாங்கள்'

'ஏன் என்னைப்பார்த்தா திமிர்பிடிச்சவள் மாதிரயா இருக்கு?'

'ஐயையோ. அம்மாண நான் அப்பிடிச்சொல்லேல்ல. மற்றப் பெடியள்தான் அப்பிடிச் சொன்னவங்கள்'

'வேறென்ன சொன்னவங்கள்?'

'நீர் நல்ல வடிவெண்டு உமக்குப் பெரிய எண்ணமாம்.'

'ஏன் அப்ப நான் வடிவில்லையோ?'

'இஞ்ச பாரும் ஐசே! நான் ஒண்டுமே சொல்லேல்லை. அவங்கள்தான் எல்லாம் சொன்னவங்கள்?'

'அப்ப உமக்கு நான் வடிவான ஆளாத் தெரியேல்லை என?'

அவள் முறைப்பது தெரியவே நான் தடக்கியது உறைத்தது.

'இல்லையில்லை நீர் சரியான வடிவு. உம்மைப்போல இவ்வளவு வடிவான ஒரு பெட்டையை நான் பார்த்ததேயில்லை'

'அப்ப இதுவரைக்கும் எத்தனை பெட்டையளைப் பார்த்திருக்கிறீர்?'

'என்ன நீர்? நான் அப்பிடியான ஆளில்லை' முகத்தில் கோபத்தைக் காட்டினேன்.

'இதென்ன நீர்? லூசு மாதிரி. இதுக்கேன் கோவிக்கிறீர்?'

'ஓம் நான் லூசுதான். அவங்களோட பந்தயம் கட்டி உம்மோடை வந்து கதைச்சன்பாரும்'

'அப்ப அவங்களோட பந்தயம் கட்டியிருக்காட்டி என்னோட வந்து கதைச்சிருக்க மாட்டீரோ?'

'நான் ஏன் உம்மோடை வந்து கதைக்கிறன். நீரும் உம்மடை திமிரும் உம்மோடையே இருக்கட்டும் எண்டு விட்டிட்டிருந்திருப்பன்'

'அப்ப உங்களுக்கு உண்மையா என்னில விருப்பமில்லையா?'

அவள் குரல் கரகரத்திருந்தது. இவ்வளவு நேரமும் என்னை நீர் என்று அழைத்தவள் இப்போது நீங்கள் என்கிறாள். அப்படியானால் இவளுக்கும் என்னைப் பிடித்திருக்கிறதா? வயிற்றினுள் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கத் தொடங்கின.

'விருப்பம் இல்லாமலா உம்மோடை வந்து இவ்வளவு நேரமும் கதைச்சுக் கொண்டிருக்கிறன்?'

'இல்லை. நீங்க பொய் சொல்லுறீங்க. உங்களுக்கு என்னில விருப்பமில்ல. இனி என்னோடை கதைக்க வேண்டாம். நான் போறன்'

முகத்தைத் திருப்பிக்கொண்டு புறப்பட்டாள். அவள் நயனங்கள் இரண்டிலும் இரு கண்ணீர் முத்துக்களை நான் கண்டேன்.

காதலுக்கும் கண்ணில்லை. காதலில் வீழ்ந்திருப்பவர்கட்கும் கண்ணில்லை. ஆனால் மற்றவர்களுக்கு இருக்கிறதே

ஊருக்குள் காதலிப்பது அவ்வளவு இலகுவான விடயமல்ல. சிலமாதங்களிலேயே எங்கள் காதல் அவள் தந்தைக்குத் தெரியவர ராசலெட்சுமியின் பள்ளிப்படிப்பு நிறுத்தப்பட்டது.

சனி ஞாயிறு காலைகளில் சந்தைக்குச் சென்றுவிட்டு வரும் வழியினை ராசலெட்சுமியின் வீட்டினருகாக வருவதற்கும். வீட்டிற்கு அடுத்துள்ள பனங்காணியினுள் ஓய்வெடுப்பதற்கும் வண்டில்மாடுகள் பழகிவிட, அவள் தந்தை அவளை வீட்டின் முற்றத்திற்குக் கூட வரவிடாமல் சிறைவைக்க அவள் அரளிவிதையினை விழுங்கியிருந்தாள்.

ராசலெட்சுமி அரளி விதையை அரைச்சுக் குடிச்சிற்றாளாம் எண்டு  கேள்விப்பட்டவுடன் சந்தைக்குக் கொண்டு சென்றிருந்த வெங்காயத்தை அப்படியே விட்டுவிட்டு மாடுகளை அரையும் குறையுமாக வண்டிலில் இழுத்துக் கட்டிவிட்டு மாடுகளை அவளின் வீட்டை நோக்கி விரட்டிய போதுதான் நுகத்தடியிலிருந்து ஒரு மாடு விலக வண்டி முட்பற்றைக்குள் சாய்ந்தது.

நன்றி தாய்வீடு - ஏப்ரல் 2021

(தொடரும்)