Saturday, November 27, 2010

வேரென நீயிருந்தாய்...(21)

இரண்டாம் வருட முதல்நாள் சம்பவத்தின் பின்னர் நதிஷாவுடனான சந்திப்புக்களை இயலுமானவரை தவிர்க்கத் தொடங்கியிருந்தேன் ஏதோ ஒரு வேகத்தில் அப்போதைக்குப் பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்காய் பின்னர் விரிவாக உரையாடலாம் என்று கூறியிருந்தாலும் அவளது உணர்ச்சி வீச்சினைக் கண்டு அரண்டு போயிருந்தேன். அவளுக்கு விளக்கமளிக்கப்போய் அதிலே ஏற்படும் தர்க்கத்தில் கோபமாகி நான் ஏதாவது உளறப்போய் கடைசியில் என்னைச் சிறிலங்கா காவல்துறையிடம் மாட்டி விடுவாளோ என்கின்ற சந்தேகம் வேறு அரித்துக் கொண்டிருந்தது. ஆகையினால் ஆய்வுகூட வகுப்புகளுக்கு நேரம் பிந்திப் போகத் தொடங்கியிருந்தேன்.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை. 20 நவம்பர் 1998. அன்றைய காலை நேர ஆய்வுகூட வகுப்பு முடிவடைகையில்,

“ஜேந்தன்! இண்று நானு நீங்க கதைக்கிற. சரியா?”

நதிஷா அப்படிச் சொன்னது கட்டளையா அல்லது வேண்டுகோளா என்கின்ற சந்தேகம் எழுந்து என் ஈகோவைத் தாக்கியது.

“ஈவினிங் பிறக்ரிகல் இல்லத் தானே. கன்ரீனுக்குப் பின்ன ESU றூம் இருக்கிறது தானே. சாப்டு முடிஞ்சு நீங்க அங்க வாறது. நான் உங்களப் பாத்திக்கொண்டிருக்கிறது. சரியா?”

அவளது கொச்சைத் தமிழ் இப்பொழுது ஓரளவிற்கு விளங்கத் தொடங்கியிருந்தது. இவளிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்கின்ற எண்ணம் எழுந்தது. அவளை எதிர்கொள்ள அச்சமாயிருந்தது. குழம்பினேன். மனதுக்குள் பல்வேறு சிந்தனைகளும் ஓடிற்று. எவ்வளவு நாளைக்கென்று பிரச்சனைகளைக் கண்டு ஓடிஒளிவது? பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒளிவதால் எதுவும் ஆகிவிடப் போவதில்லை. தள்ளிப் போடுவதால் ஒரு தற்காலிக நிம்மதி மட்டுமே கிடைக்கிறது. ஆயினும் அதை எண்ணித் தினம்தினம் அஞ்சி நடுங்க வேண்டியிருக்கிறது. இப்படிப் பயந்து கொண்டே வாழ்வதை விட அவளை எதிர் கொள்வது மேலென்பது புரிந்தது. பெரும்பாலும் நாமெல்லாம் தேவையற்ற கற்பனைகளை எண்ணி சாதாரண விடயங்களையே சில வேளைகளில் பெரிய பிரச்சனைகளாக உருவகித்துக் கொள்கின்றோம். அதைக்கடந்து வந்த பின்னர், “அட! இதுக்குப் போயா இப்படிப் பயந்தேன்” என்கின்ற எண்ணமும் எழுவதுண்டு. ஆகவே மாலை நதீஷாவைச் சந்திப்பதாய்த் தீர்மானித்துக் கொண்டேன். மனதுக்குள் இருந்த குழப்பங்கள் தீர்ந்து தெளிவடைகையில் சந்தோஷமாக இருந்தது.

ESU அறையினுள் நுழைகையில் நதிஷா ஏற்கனவே காத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவளிற்கு முன்னால் இருந்த கதிரையில் அமர்ந்து அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தேன். அவளது மனநிலையை ஊகிக்க முடியாமல் இருந்தது. அவள் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி விட்டிருப்பது தெரிந்தது. அவளாகச் சொன்னாலொழிய அவள் மனத்தில் இருப்பதை அறிய முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். பொதுவாகவே பெண்களைப் புரிந்து கொள்ள முடியாது என்று அனுபவஸ்தர்களே சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். “ம்... என்னத்தைக் கதைக்கப் போறாளோ?” மனதுக்குள் அலுத்துக் கொண்டேன்.

“Thanks Jeyanthan for your coming!”

இவள் எப்போது தமிழில் கதைப்பாள் எப்போது ஆங்கிலத்தில் கதைப்பாள்? இப்போது இவளுடன் தமிழில் கதைப்பதா அல்லது ஆங்கிலத்தில் கதைப்பதா? அவள் ஆங்கிலத்தில் கதைத்ததால்

“You are welcome!”

வலிந்து புன்னகையை வருவித்துக் கொண்டேன்.

“பிரபாகரண் செய்யுறது சரியா? நீங்க தமிழ தானே. நீங்களே சொல்லுங்க!”

“I didn't understand your question clearly?”

“பரவால்ல. நீங்க தமிழ கதைக்கிறது. எனக்கு தமிழ் விளங்கும். நான் தமிழ் படிக்கிறது”

முதல்வருட நிறைவுவரை இவள் ஒரு தமிழ் வார்த்தை பேசி நான் கேட்டதில்லை. இந்த நாலரை மாத இடைவெளியில் அவள் கற்றிருக்கும் தமிழ் இந்த உரையாடலுக்குப் போதுமானதாயிருக்குமென நான் நம்பவில்லையாயினும் வேதாளம் மீண்டும் முருங்கையேறி விடுமோ என்கின்ற அச்சத்தில்,

“நீங்க எதைப்பற்றிக் கேக்கிறீங்க?”

“எல்ரீரீ சண்டை பிடிக்கிறது சரியா? அவங்க ஏன் சிங்களிசைக் கொல்லுறது? நாங்கெல்லாம் ஒருநாடு தானே”

“நான் சொல்லுறது இருக்கட்டும். நீங்க என்ன நிகை்கிறீங்க?”

“பிரபாகரன் தான் அதுக்கு றீசன். அவர் வேற ஆக்கள நல்லா brain wash பண்றது. அதால சும்மா சண்டை. அவங்க சூசைட் அற்றாக் எல்லாம் பண்றது. அவங்க பாவம் தானே”

“சரி ஏன் அப்பிடிச் செய்கிறேர் எண்டு நினைக்கிறீங்க?”

“அவருக்கு தான் ஆள வேணுமெண்டு ஹரி ஆசாவ (ஹரி ஆசாவ - சரியான ஆசை) அதுக்கு தெமிழ பெடியள சிங்கள ஆக்களோட சண்ட பிடிக்க வைக்கிறது.”

“அப்ப தமிழ் சிங்களப் பிரச்சனை பிரபாகரனால தான் வந்தது எண்டுறீங்களா?”

“ஆ!. eighty three-யில தா?னே பிரச்சன வந்தது. அவங்கதானே யாழ்ப்பாணத்தில thirteen ஆமியைச் சுட்டது. அதுக்கு முதல் பிரச்சனையே இல்லத் தானே.”

நான் எதிர்பார்திருந்ததை விட அவளுக்கு பல தகவல்கள் தெரிந்திருந்தது ஆச்சரியமாயிருந்தது. பெரும்பாலான சிங்களவர்களைப் போலவே இவளுக்கும் இந்தப் பிரச்சனையின் ஆணிவேர் பற்றிய அறிவில்லை. ஆனால் இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருக்கிறாள். அதனால் இந்தப் பிரச்சனையின் தாற்பரியங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமாயிருக்கிறாள். ஆகவே இவள் ஆபத்தானவளாக இருக்க முடியாது. இவளுடன் துணிந்து உரையாடலாம்.

“சரி பதின்மூன்று ஆமியைச் சுட்டதுக்கு எதற்காக சிங்கள இடங்களில் வாழ்ந்த எல்லாத் தமிழரையும் கொலை செய்தும் அடித்தும் கடைசியில் அங்கிருந்து கலைத்து வடக்கு கிழக்கிற்கு அனுப்பினீர்கள்”

“அது எல்ரீரீ செய்ததுக்குப் பழிக்குப்பழி”

“அவர்கள் எல்லோரும் எல்ரீரீஈ-யா?”

பதில் தெரியாமல் திணறுவதை உணரமுடிந்தது.

“இல்ல, ஆனா அவங்க எல்லாம் எல்ரீரீ சப்போட் தானே!”

“எண்பத்தி மூன்றாம் ஆண்டில எத்தின தமிழாக்களுக்கு எல்ரீரீஈ-யைத் தெரிஞ்சிருக்கும் எண்டு நினைக்கிறீங்க?”

“ம்ம்ம்... ஆ! ஆனா அப்பவும் many தமிழர நாங்க காப்பாத்தினது தானே”

“சரி! பிறகு எதுக்கு அவங்கள வடக்கு கிழக்குக்கு அனுப்பி வைச்சீங்க?”

“இங்க இருக்கிறது அவங்களுக்கு safe இல்லையெண்டு.”

“அப்ப வடக்கு கிழக்கு தமிழரின்ர இடம் எண்டது உங்களுக்கே தெரியுது தானே.”

“ம்ம்ம்.......ஆனா?”

“சொல்லுங்க. ”

“ஆனா எல்ரீரீ எங்கட leaders எல்லாம் கொல்லுறது தானே. ரஞ்சன் விஜேயரத்ன..”

“ரஞ்சன் விஜேரத்ன வந்து பாதுகாப்பு இணை அமைச்சரா இருந்தவர். ஆனா அவர் செத்ததை எத்தனை சிங்கள ஆக்கள் கொழும்பில வெடி கொழுத்திக் கொண்டாடினவை எண்டு தெரியுமா? 'ரயர்மாமா கியா' (tyre-மாமா போய்ற்றேர்) எண்டு எத்தனை சிங்கள ஆக்கள் சந்தோஷப்பட்டவை எண்டு தெரியுமா?”

“ம் தெரியும்! அது ஜேவிபி. அப்ப அவர் நிறைய சிங்கள ஆக்களையும் ஜேவிபி எண்டு ரயர் போட்டுக் கொழுத்தினது. சரி ஆனா பிறகு லலித் அத்துலத் முதலி, பிறகு பிரேமதாசா அவர்தான் எல்ரீரீக்கு இந்திய ஆமியோட சண்டைபிடிக்க ஆயுதமே குடுத்தது. அவங்களையெல்லாம் ஏன் செத்தச் செய்தது?”

83 இற்குப்பின்னர் நடந்த சம்பவங்கள் யாவுமே இவளுக்குத் தெரிந்திருக்கிறது என்பது புரிந்தது.

“சரி பண்டாரநாயக்காவை யாரு சுட்டது?”

அவள் முகத்தில் குழப்பம் பரவுவதை உணரமுடிந்தது.

“சரியாத் தெரியா. ஆனா ஒரு பிக்கு தான் சுட்டது எண்டு I heared"

“ஏன் சுட்டது?”

“தெரியா?”

“பண்டா-செல்வா memorandum, டட்லி-செல்வா memorandum பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறீங்களா?”

“இல்லை.”

“fifty-six-இல fifty-eight-இல seventy-seven-இல எல்லாம் தமிழருக்கு எதிரா நடந்த riots-அ பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கறீங்களா?

“அப்பிடியெல்லாம் நடந்ததா?”

“eighty-one-இல யாழ்ப்பாண லைபிரறியை எரிச்சதாவது தெரியுமா?”

“அது I heared”

“அப்ப எப்படி சொல்லுறீங்க eighty-three-இல எல்ரீரீ பதின்மூன்று ஆமியைச் சுட்டதாலதான் இந்தப் பிரச்சனை வந்தது எண்டு?”

இப்போது அவள் முகம் மிகவும் குழம்பிக் காணப்பட்டது.

“ஆனா பிரபாகரண் சூசைட் அற்றாக் எல்லாம் செய்யுறது. வைபோசா படிக்கிற பிள்ளைகளைப் பிடிக்கிறது. அவங்க பாவம் தானே!”

“சரி. உங்கட அண்ணா ஏன் ஆமிக்குப் போனவர்?”

“அது அவற்ற வேலை.”

“நீங்க ஏன் ஆமிக்குப் போகேல்ல?”

“நான் படிச்சு Engineering கிடைச்சது. அப்ப போற தேவை இல்ல தானே.”

“அப்ப உங்கட அண்ணாக்கு வேற நல்ல வேலை கிடைக்காததாலதான் ஆமிக்குப் போனவர்”

“ம்ம்ம்... இல்ல. சரி...”

“ஆமி என்ன செய்யுது? அவங்க ஆக்களை கொல்லுறதில்லையா?”

“அவங்க நாட்டைக் காக்கிறதுக்குத் தானே கொல்லுறது”

“தமிழர்களுக்கும் இந்த நாட்டில உரிமை இருக்குத்தானே”

“ஓ”

“அப்ப ஏன் அவங்கள eighty-three யில சிங்கள ஆக்கள் கொலை செய்யேக்குள்ள இந்த அரசாங்கம் அவையைக் காப்பாற்றவில்லை? ஒரு அமைச்சர் let them to taste it என்று சொல்லி police-காரர்களையெல்லாம் ஒரு நடவடிக்கையும் எடுக்க விடாமச் செய்தது தானே”

“ம்ம்ம... எனக்கு இது தெரியாது. ஆனா பிரபாகரண் இல்லையெண்டா இவ்வளவு பெரிய சண்டை வந்திருக்காது தானே?”

எல்ரீரீஈ மட்டுமா சண்டை பிடிச்சது? வேற இயக்கங்கள் சண்டை பிடிக்கேல்லையா?”

“ஆ.. ஆனா எல்ரீரீஈ அவங்க எல்லாரையும் சுட்டது தானே. அது எப்பிடி? அவங்க தமிழ் தானே?”

இதற்கு என்ன பதில் சொல்வது? சகோதர யுத்தத்தை என்னவென்று சொல்வது? பாரததேசம் தன் சுயநலனுக்காய் புற்றீசல்கள் போன்று ஏராளமான தலைமைகளையும் இயக்கங்களையும் உருவாக்கி விட்டிருந்தது. அது எப்போதுமே தனி தமிழ் தேசம் என்று ஒன்று உருவாகிவிடாமல் இருப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தது. இந்தியாவில் திராவிடம் என்கின்ற பெயரில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் தனித்தமிழ்நாடு என்கின்ற போராட்டத்திலும் தமிழகம் இருந்த காலம். இந்திய-சீன யுத்தத்தில் இந்தியா தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்த நேரம், தனித்தமிழ்நாட்டுக் கோரிக்கையை அடுத்து சிறை செய்ப்பட்டிருந்த அறிஞர் அண்ணா அவர்கள் விடுதலை செய்யப்பட்டு வெளியேவந்து தனது முதலாவது உரையில் “தனிநாட்டுக் கோரிக்கைக்கான அனைத்துக் காரணங்களும் இன்னமும் அப்படியே தான் இருக்கின்றன. ஆயினும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தற்காலிமாக அதைப் பின்போடுகின்றோம் என்றார்.”. அதன் பின்னர் அந்தக் கோரிக்கைக்கான காரணங்கள் பற்றிய விழிப்புணர்வு தமிழகத் தமிழர்களிடம் ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்வதில் மிகுந்த ஜாக்கிரதையாக அது இருக்கிறது என்பதே உண்மை.

சகோதர யுத்தம் நடைபெற்ற காலத்தில் சிங்களப்படை ஏனைய இயக்க உறுப்பினர்களைத் தம்மிடம் வந்து சரணடையுமாறும். அவ்வாறு சரணடைபவர்களை அவர்கள் விரும்பிய நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும் அடிக்கடி அறிவித்துக் கொண்டிருந்தாலும் எந்தவொரு மாற்று இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் சிறிலங்காப் படைகளிடம் சென்று சரணடைந்திருக்கவில்லை. மாறாக அவர்கள் இந்தியாவிற்கும் ஏனைய நாடுகளுக்குமே தப்பியோடியிருந்தார்கள். அதன்பின் இந்தியப்படையின் துணையுடன் மீண்டும் வந்திருந்தனர். பின் இந்தியப் படைகள் வெளியேற்றப்படுகையில் அவர்கள் சிறிலங்காப் படைகளுடன் இணைந்துகொண்டனர்.

“honestly, எனக்கும் அது பற்றிப் போதிய தெளியவில்லை. ஆனா சிலவேளையில அவை தங்கடை கொள்கையிலயிருந்து விலகியிருக்கலாம். அதோட மற்ற இயக்கங்களுக்குள்ளை நிறைய உள்ப்பிரச்சனைகள் இருந்தது. ஆயுதத்தோட இருக்கிறவை தங்களுக்குள்ளயே அடிபட வெளிக்கிட்டினமெண்டால் ஒருத்தரும் மிஞசேலாது. அவை வந்து ஒரு தலைமைக்குக் கீழதான் இருக்க வேணும். அரசியல் கட்சிகளெண்டால் ஜனநாயக ரீதியில எத்தினை கட்சிகள் வேணுமெண்டாலும் இருக்கலாம். அதால பெரிசா பிரச்சனை வராது. அப்படி வந்தாலும் அதால பெரிய பாதிப்பு மக்களுக்கு வராது. ஆனா ஆயுதம் தூக்கினாக்களுக்குள்ள பிரச்சனை வந்தா அதால எத்தினை பேர் கொல்லப்படுவினம்? சிலவேளை இதுகளை நினைச்சுத்தான் பிரபாகரன் ஆரம்பத்திலையே இப்படிச் செய்திருக்கலாம் எண்டு நான் நினைக்கிறன்.”

”அப்ப அமிர்தலிங்கத்தை ஏன் சுட்டது? அவர் சும்மா ஆள்தானே?”

என்னடா இவள்? ஏதோ என்னைக் கேட்டிட்டுப் போய்ச் சுட்டது போல எல்லாத்தையும் என்னட்டைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்? யோசித்தேன்.

“honestly I too don't know.”

“I know you don't know. I'm just asking your openion.” - சிரித்தாள்.

உண்மையிலேயே எனக்கு நடந்து முடிந்த சம்பவங்களுக்கு விளக்கம்/விமர்சனம் சொல்லுபவர்களைக் கண்டாலே பிடிக்காது. அவர்கள் சொல்லுவதைப் பார்க்கும்போது ஏதோ தங்களைக்கேட்டுத்தான் எல்லாம் நடத்திமுடிக்கப்பட்டது போலவும். அதுதான் சரி என்பது போலவும் மேதாவித்தனமாகச் சொல்லுவார்கள். உண்மையிலேயே சரி தப்பு என்று எதுவும் கிடையாது. அவை அனைத்துமே நாங்கள் எங்களை அடையாளப் படுத்திக் கொள்பவற்றிற்குத் தகுந்தால்போலவே பார்க்கப்படுகின்றது. நான் என்னை ஒரு சிங்களவனாக அடையாளப்படுத்திக் கொண்டிருந்தால் பிரபாகரன் செய்வது தப்பாகவும் சந்திரிக்காவும் ரத்வத்தையும் செய்வது சரியாகவும் தோன்றியிருக்கும். நாவற்குழியில் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட கிருஷாந்தியோ அன்றி திருகோணமலையில் வன்புணர்ச்சியின் பின் பிறப்புறுப்பிற்குள் குண்டு வைத்துக் கொல்லப்பட்ட கோணேஸ்வரியோ என்னைப் பாதித்திருக்க மாட்டார்கள். மாறாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருக்கையில் நடந்த குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட யாழ் படைத்தளபதி பிரிகேடியர் சுசந்த மெண்டிசின் சாவிற்கு ஆத்திரப்பட்டிருந்திருப்பேன்.

அது 11 செப்ரம்பர் 1998. எங்கள் Engineering training period. site-இலிருந்து மதியம் நேரத்துடன் திரும்பியிருந்தோம். நண்பர்களுடன் சென்று நல்லூர் பின் வீதியில் உள்ள RIO-வில் மீகுளிர்களி (ஐஸ்கிறீம்) அருந்தி விட்டு அவர்கள் பருத்தித்துறைப் பேரூந்தில் ஏறிக்கொள்ள நாங்கள் மிதிவண்டியில் வீட்டிற்குத் திரும்பிய சற்று நேரத்தில் பாரிய குண்டுச் சத்தம். சில மணி நேரங்களிலேயே நல்லூர் மாநகரசபைக் கூட்டத்தினுள் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் விபரங்கள் வாய்வழியாகப் பரவிக்கொண்டிருந்தன.

“Hey! I asked your openion"

நதீஷா என்னை விடுவதாகத் தெரியவில்லை.

“ம்ம்ம்....Did you heared about lord Krishna?”

“ஓ. தெரியும். நீங்க தமிழில சொல்லுறது. எனக்கு விளங்கும்”

நான் விளங்கின மாதிரித்தான். இவளுக்கு இண்டைக்குத் தீத்துறதுதான். முடிவெடுத்தேன்.

விமர்சனங்களே ஒருவகைக் கருத்துத் திணிப்புத்தானே. நடந்து முடிந்த சம்பவங்களை எங்கள் விருப்புவெறுப்பிற்கேற்ப திரித்துச் சொல்வதுதானே. வாடி வா!

**“பாரதச்சண்டை தொடங்க இருக்கேக்குள்ள அருச்சுனனுக்கு கவலை வந்திற்றுது. எதிரில் நிற்பவர்கள் அவனுடைய குருவும் பிதாமகனும் மற்றும் பாசத்திற்கும் மதிப்பிற்குமுரிய பல பெரியோர்களுமே. அவர்களைக் கொல்ல வேண்டி வருமே என்கின்ற கவலையில் சண்டையைத் தவிர்த்து மீண்டும் காட்டுக்குப் போய்விடப் போவதாகச் சொல்கிறான். அப்போது கிருஷ்ணன் அவனைத் தடுத்து விளக்கமளித்து அவனை மீண்டும் ஆயுதம் ஏந்த வைக்கின்றான். அப்பிடிப் பார்த்தால் கிருஷ்ணனிலும் பார்க்க அருச்சுனன் தானே நல்லவன்?”

“Yes of course”

**“பிறகு எதுக்கு கிருஷ்ணனைக் கடவுளாகக் கொண்டாட வேண்டும்?”

தலையைச் சொறிந்தாள்.

**“அருச்சுனன் அவர்களைக் கொல்ல மறுத்ததால் நல்லவன் என்று ஆகிவிட முடியாது. அவனுக்குக் கொல்வது பிரச்சனையல்ல. அவனது பிரச்சனை எதிரில் நிற்கும் ஒரு சிலரே. பீஷ்மரையும், துரோணரையும் இன்னும் சிலரையும் அந்தக் களத்தில் இருந்து அகற்றிவிட்டால் மற்றவர்களைக் கொல்வதில் அவனுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் கிருஷ்ணனோ தான் கட்டிக்காத்த தன் முழுப்படையையுமே எதிர்த்தரப்பிற்காகக் கொடுத்து விட்டுத் தனது படையினரையும் சேர்த்து அளிப்பதற்கு அருச்சுனனுடன் சேர்ந்து நிற்கின்றான். இலக்கைத் தீர்மானித்த பின்னர் அதற்குத் தடையாக வருபவர்களைக் கொல்வதில் கிருஷ்ணனுக்கு எந்தப்பாரபட்சமும் கிடையாது. அதனால்தான் அவன் மேலானவனாகப் போற்றப்படுகின்றான். நான் என்ன சொல்ல வாறன் எண்டு விளங்குதா?”

தலையை ஆட்டினாள்.

“ஆனா பிரபாகரன் பிள்ளைகளைப் பிடிச்சு brain wash பண்ணித்தானே சண்டைக்கு அனுப்புறது தானே.”

“உங்கட அண்ணியின்ர அண்ணாவும் அங்கிளும் செத்ததைக் கேட்ட உடனே உங்களுக்கு எப்பிடி இருந்தது?”

“எல்ரீரீ எல்லாத்தையும் அடிச்சுக் கொல்ல வேணும் போல”

“சரி எல்ரீரீ உங்கட வீட்டவந்து உங்கட சொந்தக்காரரையெல்லாம் பிடிச்சு சுட்டா என்ன செய்வீங்கள்?”

“என்ன செய்வனா? கையில கிடைக்கிறதால எடுத்து அவங்களை அடிப்பன். என்னெட்டத் துவக்கு இருக்குமெண்டா அவங்கள் எல்லாரையும் சுட்டுத்தள்ளிப்போடுவன்”

“அப்ப உங்களுக்கொரு நியாயம் மற்றாக்களுக்கு ஒரு நியாயமா?”

“என்ன சொல்லுறீங்க?”

“இதைத் தானே உங்கட ஆமியும் எங்கட இடத்தில செய்யுது? அப்ப அதை நேர கண்ணுக்கு முன்னால பாக்கிறவங்கள் சும்மா இருப்பாங்களா?”

அவள் முகம் முற்றிலுமாய் மாறிப் போயிருந்தது.

======================
** மூலம் : சற்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் உரையிலிருந்து

5 comments:

  1. நதீஷா விடுவதாகத் தெரியவில்லை.

    ReplyDelete
  2. வாடி வா!!!!!!!!!

    ஓ! வலசு நீங்கள் ஆண் எழுத்தாளரா?????

    எல்லா விடயங்களையும் உயர் பார்வைக்கோணத்திலிருந்து அலசுவதாகப்பட்டது....
    ஆனால், “வாடி வா”......சந்தேகப்பட வைக்கிறது.

    ReplyDelete
  3. வன்னிக்கு வெளியிலிருந்த எங்கட ஆட்களுக்கே விளங்காத விடயங்களினை நதீஷவிற்கு சொல்லியவிதம் நன்றாக உள்ளது.இந்த பாகத்தை இடையிடையே மறு பதிப்பு போடவும். இனி வரும் காலங்களில் தேவைப்படும்

    ReplyDelete
  4. உண்மைக்கு உயர்பார்வை கோணம் இழிபார்வை கோ(வ)ணம் எல்லாம் கிடையாது, வலசு "வாடி வா" என்றால் அந்த பூ வாடி நிற்க வேண்டும் என்று அர்த்தமில்லை, என்னை கேட்டால் "வாடி வாடி நாட்டுக்கட்டை வசம்மா வந்து மாட்டிகிட்டே" என்று பிரபு தேவாவின் நர்த்தனத்தில் உண்டான பாடலை பாடினாலும் வலசுக்கும் எதிராக பெண்கள் அமைப்புக்கும் கருத்து வேறுபாடு வர காரணம் இல்லை(ஆனால் பிரபு தேவாவிற்கு பெண்கள் இப்போ போர் கொடி தூக்கி இருப்பது வேறு காரணம் அது பாமரனும் அறிந்த விடையம்....

    ReplyDelete
  5. உண்மைக்கு எந்த கோ(வ)ணமும் தேவையில்லை அது நிர்வாணமாகத்தான் நிற்கும் என்பதை ஒரு அனாமி தெளிவாக விளக்கி உள்ளார், பாரட்டாமல் இருக்க முடியவில்லை..!!! ஆனால் பெயர் தெரியவில்லையே....???

    ReplyDelete